Sunday, May 31, 2020

கம்ப இராமாயணம் - தகப்பன் பாசம்

கம்ப இராமாயணம் - தகப்பன் பாசம் 


பிள்ளைப் பாசம் என்று கேள்விப் பட்டு இருக்கிறோம். அது என்ன தகப்பன் பாசம்.

பிள்ளை, தந்தை மேல் வைத்த பாசம்.

பிள்ளைகளுக்கு அம்மா மேல் அன்பிருற்கும். அது இயற்கை. அப்பா எங்கேயுமே கொஞ்சம் கண்டிப்பானவர்தான். பிள்ளைகளுக்கு அப்பா மேல் மரியாதை இருக்கும். கொஞ்சம் பயமும் இருக்கும். பாசம்?

பாசம் இருக்கும், அது அவ்வளவாக வெளிப்படுவது இல்லை.

பாசத்தை வெளியே காட்டுவது என்பது என்னவோ பலவீனம் என்று ஆண்கள் நினைப்பதாலோ என்னவோ, அப்பா பிள்ளை பாசம் அவ்வளவாக பேசப்படுவது இல்லை. அப்பா மகள் பாசம் உலகறிந்தது. அப்பா மகன் பாசம் நீறு பூத்த நெருப்பாகவே இருக்கிறது.

இந்திரசித்து.

இராவணனின் மகன்.

தன்னுடைய தந்தை, அம்மாவை விட்டு விட்டு இன்னொரு பெண்ணை கள்ளத் தனமாக கொண்டு வந்து வைத்து இருக்கிறார் என்று தெரியும். அந்தப் பெண் மேல் அப்பாவுக்கு காதல் என்றும் தெரியும்.

இருந்தும், அப்பா மேல் உள்ள வாஞ்சை போகவில்லை. இராவணன் மேல் இந்திரசித்துக்கு அவ்வளவு  காதல்.

போரில் அடிபட்டு , உடல் எல்லாம் புண்ணாகி, இரத்தம் வழிய, உடல் நடுங்க வந்து   நிற்கிறான் இந்திரசித்து.

சாதாரணாமாக  எந்த தநதைக்கும் உடல் பதறுமா இல்லையா? தன் பிள்ளை  இரத்தம் சொட்ட சொட்ட  வந்து நிற்கிறான் என்றால் அதை காணும் தகப்பனின் மனம்  எப்படி இருக்கும்?

இராவணன் பதறவில்லை.  சீதை மேல் உள்ள மோகம்.

இந்திரசித்தனிடம் கேட்கிறான்

" நீ தொடங்கிய வேள்வி முற்றுப் பெறவில்லை என்பதை உன் தோள்களில் உள்ள அம்புகளே சொல்கின்றன. அழிவு இல்லாத உடம்பு தளர்ந்து நடுங்கிக் கொண்டு நிற்கிறாய். கருடனைக் கண்ட பாம்பு போல நடுங்குகிறாய். நடந்தைச் சொல் "

என்று.


பாடல்

தொடங்கிய வேள்வி முற்றுப் பெற்றிலாத் தொழில்,
                                  நின் தோள்மேல்
அடங்கிய அம்பே என்னை அறிவித்தது; அழிவு இல் 
                                         யாக்கை
நடுங்கினை போலச் சாலத் தளர்ந்தனை; கலுழன் நண்ணப்
படம் குறை அரவம் ஒத்தாய், உற்றது பகர்தி’ என்றான்.


பொருள்


தொடங்கிய வேள்வி = நீ தொடங்கிய வேள்வி

முற்றுப் பெற்றிலாத் தொழில்  = நல்லபடியாக நிறைநேரவில்லை என்பதை

நின் தோள்மேல் = உன்னுடைய தோள்களில்

அடங்கிய அம்பே = குத்தி இருக்கும் அம்புகளே

என்னை அறிவித்தது; = என்னிடம் சொல்கின்றன

அழிவு இல்  = அழிவு அற்ற

யாக்கை = உடம்பு

நடுங்கினை போலச்  = நடுக்கம் கொண்டு இருக்கிறாய்

சாலத் தளர்ந்தனை; = ரொம்பவும் தளர்ந்து போய் இருக்கிறாய்

கலுழன் நண்ணப் = கருடன் அருகில் வர

படம் குறை அரவம் ஒத்தாய், = தன்னுடைய படத்தை குறைத்துக் கொள்ளும் பாம்பினை போல இருக்கிறாய்

உற்றது பகர்தி’ என்றான். = நடந்தது என்ன என்று சொல் என்றான்


இதை வீரம் என்று சொல்வதா ?  சீதை மேல் கொண்ட காதல் என்று சொல்வதா?

பெற்ற பிள்ளையின் இரத்தம் கண்டும் துடிக்கவில்லை. அப்படி ஒரு காதலா?

இன்னும் சிந்திக்க இருக்க இருக்கிறோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_31.html


Saturday, May 30, 2020

திருக்குறள் - காதல் சிறப்பு

திருக்குறள் - காதல் சிறப்பு 


காதலன் காதலிக்கு இடையே உள்ள உறவை எத்தனையோ கவிஞர்கள் பாடி இருக்கிறார்கள். .

காதலைப் பாடாத கவிஞன் யார்?


வள்ளுவரும் பாடுகிறார்.

இந்த பெண்ணோடு எனக்கு உள்ள உறவு என்பது உயிருக்கும் உடலுக்கும் உள்ள உறவைப் போன்றது என்கிறார்.

பாடல்

உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு

பொருள்

உடம்பொடு  = உடம்புக்கு

உயிரிடை = உயிரிடம்

என்ன = எப்படி உள்ளதோ

மற்று =  அசைச் சொல்

அன்ன = அது போல

மடந்தையொடு = இந்த பெண்ணோடு

எம்மிடை  = எனக்கு உள்ள

நட்பு = உறவு

இந்த உடம்பு, உயிர் உதாரணம் எல்லாம் நம்ம உள்ளூர் கவிஞர்கள் கூட  எழுதுவர்களே. எது என்ன அவ்வளவு பெரிய உதாரணமா? இதைச் சொல்ல ஒரு வள்ளுவர்  வேண்டுமா?

இருந்தாலும் இது கொஞ்சம் over build up என்று சிலர் நினைக்கலாம்.

ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

காதலன், காதலி உறவு என்றால் காதல் என்று சொல்லி விடலாம்.

கணவன், மனைவி உறவு என்றால் தம்பதிகள், அல்லது தாம்பத்தியம் என்று சொல்லி விடலாம்.

வள்ளுவர் ஆராய்ந்து எடுத்து ஒரு சொல்லைப் போடுகிறார்.

"நட்பு"

எனக்கு அந்த பெண்ணோடு உள்ள உறவு - ஒரு நட்பு

கணவன் மனைவி என்றால் ஏதோ கடமை என்ற உணர்வு வந்து விடும். பிடிக்குதோ இல்லையோ, சில பல நிர்பந்தங்களினால் ஒன்றாக இருந்து தீர வேண்டி இருக்கிறது.

நட்பு என்பது அப்படி அல்ல.  மிக மிக உயர்வானது.

உடுக்கை இழந்தவன் கை போல் அங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

ஒருவருக்கு ஒரு தேவை என்றால், கேட்காமலேயே ஓடிப் போய் உதவி செய்வது நட்பு.

அவளோடு எனக்கு உள்ள உறவு - நட்பு என்கிறான் அவன்.

எவ்வளவு இனிமையானது?

சரி, அடுத்தது உடலும், உயிரும் போல.

அதில் என்ன சிறப்பு?

உடலும் உயிரும் ஒன்றாக இருந்தால்தான் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கும்.

உயிர் போய் விட்டால், உடம்புக்கு பிணம் என்று பெயர். ஓரிரு நாட்களில் அது அழுகி  நாற்றம் எடுக்க ஆரம்பித்து விடும்.

உடல் இல்லாத உயிருக்கு பேய், ஆவி என்று பெயர். எல்லோரும் பயந்து ஓடிவிடுவார்கள்.

இரண்டும் சேர்ந்து இருந்தால், ஒன்றால் மற்றதற்கு பெருமை, சிறப்பு, அர்த்தம்.

இரண்டாவது,  உடல் வாடினால் உயிர் வாடும். உடலுக்கு வலித்தால்உயிருக்கு வலிக்கும். தலை வலி வந்தால், "தலை வலி உயிரே போற மாதிரி இருக்கு" என்கிறோம். தலைவலி வந்தால் உயிர் போய் விடுமா? இல்லை. உடம்பு படும் வேதனையை   கண்டு உயிர் சகிக்காமல் வரும் பேச்சு அது.

உயிர் வாடினால் உடலும் வாடும்.

அது போல, அவளுக்கு ஒன்று என்றால் நான் வாடிப் போவேன், எனக்கு ஒன்று என்றால் அவள் வாடிப் போவாள்.

மூன்றாவது, ஒரு உடலுக்குள் ஒரு உயிர் தான் இருக்க முடியும். அது போல, ஒரு உயிர் ஒரு உடலில் மட்டும்தான் இருக்க முடியும்.

அவளுக்கு நான் மட்டும் தான். எனக்கு அவள் மட்டும்தான்.

மூன்றாவது, இந்த உடலுக்கும் உயிருக்கும் உள்ள சொந்தம் இன்று நேற்று வந்தது அல்ல.  யாராவது வந்து, ஒரு உயிரையும் , உடலையும் சேர்த்து வைப்பது இல்ல. "ஏய் உயிரே, எங்க சும்மா சுத்திக்கிட்டு இருக்க...இங்க வா...இந்த உடம்போடு சேர்ந்து வாழ்" என்று யாரும் சேர்த்து வைப்பது இல்லை.  இரண்டும் வேறு வேறுதான். ஆனால், ஒன்றில்லாமல் ஒன்று இல்லை. அவை பிறக்கும் போதே ஒன்றாக பிறக்கின்றன.  ஒன்று பிரிந்தால் மற்றதும் அழிந்து போகிறது.

நான்காவது, பிரிவு என்பதே முடியாத ஒன்று. என்றாவது நம் உயிர் நம்மிடம், "ஒரு நாள்   வெளியூர் போயிட்டு வர்றேன்..." என்று சொல்லி விட்டு போவது உண்டா?  உடலை விட்டு உயிரும் பிரிய முடியாது, உயிரை விட்டு உடலும் பிரிய முடியாது.  பிரிந்தால், மீண்டும் சேர முடியாது.

ஐந்தாவது, உயிரை தக்க வைத்துக் கொள்ள உடல் கிடந்து போராடும். மருந்து, மாத்திரை, அறுவைச் சிகிச்சை என்று எவ்வளவு கஷ்டப்பட்டாலும்  உயிரை தக்கவைத்துக் கொள்ள  உடல் தவிக்கும். அப்படி ஒரு பிணைப்பு. எவ்வளவு வயதான ஆளாக இருக்கட்டுமே?  உயிரை விட யாருக்கு விருப்பம் இருக்கும்?  உடலுக்கு உயிர் மேல் அப்படி ஒரு ஆசை, பற்று.

எவ்வளவு ஒரு இனிமையான குறள்.

அன்யோன்யமான நட்பு.  சுகமானது. சுவையானது.

ஏழு வார்த்தைகளுக்குள் ஒரு இலக்கியம்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_30.html

Friday, May 29, 2020

வில்லி பாரதம் - இப்படியும் முடியும்

வில்லி பாரதம் - இப்படியும் முடியும் 


இன்பம் வரும்போது துள்ளிக் குதிக்கிறோம்.

துன்பம் வரும்போது துவண்டு போகிறோம்.

அதுதானே இயற்கை.

துன்பம், எவ்வளவு சின்னதாக இருந்தாலும், தாங்க முடியாததாக இருக்கிறது. சுண்டு விரலில் ஒரு சின்ன அடி பட்டுவிட்டால் கூட "வலி உயிரே போகிறது" என்கிறோம்.

வெயிலில் கொஞ்சம் நடந்து விட்டு வந்தால் "தலை வலி மண்டைய பிளக்கிறது" என்கிறோம்.  மண்டை என்ன பிளந்தா போய் விட்டது?

துன்பத்தை தாங்கும் குணம் இல்லை. துன்பமே வரக் கூடாது என்று நினைக்கிறோம். அப்படி தப்பித் தவறி வந்து விட்டால், உடனே போய் விட வேண்டும் என்று துடிக்கிறோம்.

கொஞ்சம் உடம்பு சரி இல்லை என்றாலும், மருந்தை வாங்கி ஊத்தி, மாத்திரையை போட்டு, இரண்டு ஊசி போட்டு, உடனே குணமாகி விட வேண்டும் என்று நினைக்கிறோம்.

வாழக்கை என்றால் துன்பம் வரும். வந்த துன்பம் உடனே போகாது. அதுதான் இயற்கை.  "வந்து விட்டாயா, சரி...உன்னோடு கொஞ்ச நாள் வாழ்கிறேன்" என்று   வாழ வேண்டுமே அல்லாமல், "ஐயோ வந்து விட்டதே, எப்ப போகுமோ" என்று ஒவ்வொரு நாளும்    துடித்துக் கொண்டு இருக்கக் கூடாது.

நம் இலக்கியங்கள் இதை பல இடங்களில் நமக்குக் காட்டுகின்றன.

இராமன் 14 வருடம் காட்டுக்குப் போனான். போகும் போது அழுது கொண்டேவா போனான்? போகிற வழியெல்லாம் தந்தையையும், கைகேயியையும் திட்டிக் கொண்டுவா போனான்? கூனியை கூட அவன் வசை பாடவில்லை.

வில்லிப் புத்தூரார் ஒரு காட்சியை காட்டுகிறார்..

நாடு, நகரம், செல்வம் அனைத்தும் இழந்து, மனைவியை சபையில் வைத்து அவமானம் செய்த செயல் முடிந்து, பதின்மூன்று வருடம் காட்டுக்குப் போ, அப்புறம் ஒரு வருடம் தலை மறைவு வாழ்க்கை என்று ஆன பின், தம்பிகளையும், மனைவியையும் கூட்டிக் கொண்டு தெருவில் நடந்து (பல்லக்கு இல்லை, இரதம் இல்லை) போகிறான்.

ஊரே கூடி வேடிக்கை பார்க்கிறது.

அவன் மன நிலை எப்படி இருக்கும்? ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். அவன் மனதில் என்னவெல்லாம் ஓடி இருக்கும் ?

அவன் மன நிலைக்கு ஒரு உதாரணம் சொல்கிறார் வில்லி புத்தூரார், வியக்க வைக்கும் உதாரணம். இப்படி கூட சிந்திக்க முடியுமா என்று ஆச்சரியப் படவைக்கும் உதாரணம்.

"...நாட்டின் எல்லை கடந்து, கால்கள் சிவக்க, காட்டுக்குள் நுழையும் போது, இந்த உலக வாழ்க்கையை விட்டு ஸ்வர்கம் போகும் போது மெய் ஞானிகள் எவ்வாறு மகிழ்வார்களோ, அப்படி மகிழ்ந்தான்"

என்கிறார்.

என்ன ஒரு உதாரணம்.

உதாரணம் ஒரு புறம் இருக்கட்டும்.

இத்தனையும் இழந்து, அவமானப்பட்டு, காட்டுக்குள் போது மகிழ்ச்சியாக சென்றான் என்கிறார் வில்லியார்.

முடியுமா?

வாங்கி வந்த கத்தரிக்காயில் ஒரு காய் நன்றாக இல்லை என்றால், "சே, அந்தக் கடைக்காரன் நம்மை ஏமாற்றி விட்டான் / நான் ஒரு சரியான லூசு, பாத்து வாங்கி இருக்க வேண்டாமா" என்று மனம் நோகிறது.

அனைத்தையும் இழந்து காடு செல்வதானால், எப்படி இருக்கும்.

பற்று இல்லை. இந்த நாடு என்னோடது என்று நினைத்ததால் தானே, அதை இழக்கும் போது துன்பம் வரும்.

பாடல்

நாட்டிடை யெல்லை பொற்றா ணறுமலர்சிவக்க வேகிக்
காட்டிடை புகுந்த போதுங்கலக்கமற் றுவகை கூர்ந்தான்
கூட்டிடை யின்ப துன்பக்கொழும்பயன் றுய்த்தி மாறி
வீட்டிடை புகுதும் போதுமெய்ம்மகிழ் விபுதர் போல்வான்.


பொருள்


நாட்டிடை யெல்லை  = நாட்டின் எல்லை

பொற்றா ணறுமலர்சிவக்க = பொன் + தாள் + நறுமலர் + சிவக்க. பொன் போன்ற, மென்மையான, மலர் போன்ற பாதங்கள் சிவக்க. முன்ன பின்ன நடந்தது இல்லை. பல்லக்கு, இரதம் அப்படி வாழ்ந்து பழகியவன். நடந்தால் கால் சிவக்கிறது.


வேகிக் = ஏகி, சென்று

காட்டிடை = காட்டின் உள்ளே

புகுந்த = செல்லும்

போதுங் = போதும்  , செல்லுகின்ற போதும்

கலக்கமற் று வகை  கூர்ந்தான் = கலக்கம் அற்று , உவகை கூர்ந்தான்
மனதில் கொஞ்சம் கூட கலக்கம் இல்லை. சந்தோஷம் இருந்தது.

கூட்டிடை  = இந்த உடம்பில்

யின்ப துன்பக் = இன்பம் துன்பம்

கொழும்பயன்  = பெரிய பயனை

றுய்த்தி = அனுபவித்து (உய்தி)

மாறி = அதை விட்டு மாறி

வீட்டிடை = வானுலகம்

புகுதும் போது = செல்லும் போது

மெய்ம்மகிழ் = உள்ளம் மகிழும்

விபுதர் = மெய் ஞானிகள்

போல்வான். = போல இருந்தான்.


இதெல்லாம் நடக்கிற காரியமா ? ஏதோ கதையில் வருகிறது. சரிதான் படிச்சிட்டு போறத விட்டுட்டு, அதை எல்லாம் உண்மை என்று எடுத்துக் கொண்டு வாழ்வில்  கடை பிடிக்க முடியுமா?

முடியுமா, முடியாதா என்பதல்ல கேள்வி.

துன்பத்தையும், இன்பத்தையும் நாம் எப்படி பார்க்கிறோம் என்பதுதான்.

இவ்வளவு பெரிய துன்பத்தைக் கூட, சந்தோஷாமாக ஒருத்தன் பார்த்தான்.

அவ்வளவுதான்.

நமக்கு ஒரு துன்பம் வரும் போது என்ன செய்ய வேண்டும் நாம் முடிவு செய்து கொள்ளலாம்.

தையா தக்கா என்று குதிக்கலாம்.

ஊரில் உள்ள எல்லோரையும் ஏசலாம்.

சரி வந்து விட்டது, விதியே என்று மனம் வாடி நிற்கலாம்.

வந்தா என்ன, வந்து விட்டு போகட்டும். போராடி வெற்றி பெறலாம் என்று  துணிவோடு  களம் இறங்கலாம்.

இந்த துன்பத்திலும் என்ன செய்யலாம், என்ன பாடம் படிக்கலாம், எப்படி நம்மை முன்னேற்றிக் கொள்ளலாம் என்றும் சிந்திக்கலாம்.

வந்த துன்பத்துக்கு ஒரே ஒரு வழியில் தான் நாம் சிந்திக்க செயல்பட வேண்டும் என்று இல்லை.

நமக்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன.

இப்படியும் இருக்க முடியும் என்று இலக்கியங்கள் கோடு போட்டு காட்டுகின்றன.

எதை எடுப்பது என்பது நம் கையில்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_29.html

Wednesday, May 27, 2020

திருக்குறள் - கேளிர் பிரிப்பர்

திருக்குறள் - கேளிர் பிரிப்பர்


மனதால், வாக்கால், உடலால் நாம் காரியம் செய்கிறோம்.

காரியம் செய்யும் போது சில தவறுகள் நிகழ்ந்து விடலாம்.  அப்படி தவறு நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா?

வாக்கால் என்னென்ன தவறுகள், குற்றங்கள் நிகழலாம்?

நான்கு விதமான குற்றங்களை கூறுகிறார் வள்ளுவர்.

- பொய் சொல்லுதல்
- புறங் கூறுதல்
- கடுஞ் சொல் கூறுதல்
- பயனில சொல் கூறுதல்

இவை நான்கும், வாக்கால் நிகழும் குற்றங்கள். பேசும் போது இந்த குற்றங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த நாலுக்கும் , நாலு அதிகாரம் எழுதி இருக்கிறார் வள்ளுவர். 40 குறள். அதை மட்டும் படித்து, புரிந்து  அதன் படி நடந்தால் நம் பேச்சில் வரும் குற்றங்கள் பெரிதும் தவிர்க்கப்படும்.

இந்த குற்றங்களில் தலையாய குற்றம் பொய் சொல்லுவது.

அடுத்த இடம் புறம் கூறுதலுக்கு.

புறம் கூறுதல் என்றால் என்ன?







பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச் சொல்லி
நட்பு ஆடல் தேற்றாதவர்

Saturday, May 23, 2020

திருக்குறள் - பெரியார், சிறியார்

திருக்குறள் - பெரியார், சிறியார் 


தமிழ் இலக்கியம் மிகப் பழமை வாய்ந்தது. எவ்வளவு பழமை என்பதில் சில குழப்பங்கள் இருக்கின்றன.

பழைய இலக்கியங்களை படிப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன.  சிலவற்றை நாம் இங்கே பார்ப்போம்.

இடைச் செருகல்கள்.  கம்ப இராமாயணத்தை கம்பர் எழுதினார். கம்பரிடம் தமிழ் புலமை இருந்தது. அவர் பாடல்கள் ஒவ்வொன்றும் மிக இனிமையானவை, ஆழமானவை, பொருள் செறிந்தவை.

அவருக்கு பின்னால் வந்தவர்கள், அவரைப் போலவே எழுதி, கம்ப இராமாயணத்துக்குள் சேர்த்து விட்ட அவலங்கள் நடந்து இருக்கின்றன.  இதில் எந்தப் பாடல் யார் எழுதியது என்று தெரியாமல் நாம் தவிக்கிறோம். மேலோட்டாமாகப் படித்தால் புரியாது. மொழி இயல் அறிஞர்கள் இனம் கண்டு சொல்வார்கள். இப்படிப் பட்ட சொற் பிரயோகம் கம்பர் காலத்தில் இல்லை, அல்லது இப்படி ஒரு தொடரை அவர் வேறு எங்கும் எழுதியது இல்லை. எனவே, இந்த ஒரு குறிப்பிட்ட பாடல் கம்பர் எழுதி இருக்க முடியாது என்று நிரூபணம் செய்வார்கள். இது ஒரு சிக்கல்.

இது நிகழ காரணம் தனி மனித மன வக்கிரங்கள்.

தனியே எழுதினால் புகழ் கிடைக்காது என்று தெரிந்து, பெரிய இலக்கியத்துக்குள் தன் பாடலை சேர்த்து விடும் வக்கிரம்.

இரண்டாவது, பின்னால் வந்தவர்கள் தங்கள் ஜாதி , மதம் இவற்றை உயர்த்திப் பிடிக்க, பல உயர்ந்த நூல்களுள் சில வார்த்தைகளை மாற்றிப் போட்டு, தங்களுக்கு தாங்கள் சார்ந்த குழுவுக்கும் நன்மை தேடிக் கொள்ளும் வக்கிரம்.

என்ன செய்வது. மனித மனம்  அப்படி சிக்கலான ஒன்றாக இருக்கிறது.


இன்னொன்று,  பழந்தமிழ் இலக்கியங்கள் ஓலைச் சுவடியில் எழுதப்பட்டன. ஓலையில்,  ஆணி கொண்டு எழுதப்பட்டன.  கரையான் அரித்து, ஓலை சிதிலம் அடைந்து என்ன எழுதி இருப்பார் என்று தெரியாமல், பின்னால் வந்தவர்கள்  ஓலையில் இருந்து காகிதத்துக்கு மாற்றிய போது , ஓரிரண்டு எழுத்தோ அல்லது வார்த்தையோ சரியாகத் தெரியாவிட்டால், இதுவாகத்தான் இருக்கும் என்று  அவர்களே யோசித்து ஒரு எழுத்தையோ, வார்த்தையோ  போட்டு விடுவார்கள்.  அர்த்தமே தலைகீழாக மாறிப் போய் விடும்.

வள்ளுவர் இப்படி சொல்லி இருப்பாரா, கம்பர் இப்படி சொல்லி இருப்பாரா என்று நாம்  மண்டையை போட்டு உடைத்துக் கொள்வோம்.

தமிழ் அறிஞர்கள் அந்த மாதிரி சமயத்தில், மாற்றப்பட்ட எழுத்து என்னவாக இருக்கும்  என்று யோசித்து இன்னது என்று சொல்வார்கள்.

ஏற்பதா, அல்லது விடுவதா என்று நாம் தயங்கிக் கொண்டு இருப்போம்.

இங்கே ஒரு குறளைப் பார்ப்போம்.


பாடல்

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்

பொருள்

செயற்கரிய = செய்வதற்கு அரிய (கடினமான)  செயல்களை

செய்வார்  = செய்வார்கள்

பெரியர் = பெரியவர்கள்

சிறியர் = சிறியவர்கள்

செயற்கரிய = செய்வதற்கு அறிய செயல்களை

செய்கலா தார் = செய்ய மாட்டார்கள்


உரை எழுதிய அனைவருமே, பரிமேல் அழகர் உட்பட, இந்த அர்த்தத்தில் தான் உரை  எழுதி இருக்கிறார்கள்.

அரிய செயல் என்றால் என்ன  என்று கேள்வியை எழுப்பி, பரிமேல் அழகர் யோகம்  செய்வது அரிய செயல் என்று கூறுகிறார்.

பெரியவர்கள் யோகம் செய்வார்கள். சிறியவர்கள் யோகம் செய்ய மாட்டார்கள்   என்று அவர் விளக்கிக் கொண்டு போகிறார்.


அதுதான் அர்த்தம் என்றால் இரண்டாவது முறை ஏன் செயற்கரிய என்ற சொல்லப் போட வேண்டும்?

மேலும், ஒரு காலத்தில் அரிய செயல் பின்னாளில் எளிதாக மாறிவிடும். எதைக் கொண்டு அரிய செயலை அளப்பது?

யானையோடு போராடுவது கடினமான செயல் தான். அதற்காக  எல்லோரும் யானையோடு  போராட முடியுமா?

பெரிய மலையில் ஏறுவது அரிய செயல் தான். அதற்காக மலை ஏறுபவர்கள் எல்லோரும்  பெரியவர்கள் என்று கொள்ள முடியுமா?

தெரு பெருக்குவது, குப்பை அள்ளுவது என்பது போன்றவை பெரிய செயல் இல்லைதான். அதற்காக அந்தத் தொழிலை செய்பவர்களை சிறியர் என்று சொல்ல முடியுமா?

பின் என்ன அர்த்தம்?

உரை எழுதிய தமிழ் அறிஞர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால்,

கு என்ற எழுத்து எப்படியோ மாறி க என்று ஆகிவிட்டது. ஓலை பழுதாக இருந்து இருக்கலாம், ஓலையில் ஆணி கீறிய விதம் சற்று மாறி இருக்கலாம்.

க வை கு வாக மாற்றிப் போட்டு குறளை பார்ப்போம்.


செயற் 'கு' (க) ரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற் 'கு' (க) ரிய செய்கலா தார்

அதாவது

செயற்கு அரிய என்பதை

செயற்கு உரிய  என்று மாற்றினால் அர்த்தம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

என்ன செய்ய வேண்டுமோ, அதை பெரியவர்கள் செய்வார்கள்.

செய்ய வேண்டியதை சிறியவர்கள் செய்ய மாட்டார்கள்.

இன்னிக்கு ஒரு மணி நேரம் உடற் பயிற்சி செய்ய வேண்டும், இன்னிக்கு இந்த பாடத்தை  முடிக்க வேண்டும், இன்னிக்கு அந்த பணத்தை இதில் முதலீடு செய்ய வேண்டும்  என்று எதெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறதோ, அதை  செய்வார்கள்.

ஆனால், சிறியரோ , நாளைக்கு செய்யலாம், இன்னும் நாள் இருக்கே, அதுக்கு இப்ப என்ன அவசரம்  என்று செய்ய வேண்டியதை செய்யாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே போவார்கள்.

உரிமை என்றால் உரிமையானது, கடமை. நான் தான் அதை செய்ய வேண்டும் .

யோசித்துப் பாருங்கள். நாம் செய்ய வேண்டிய வேலை அனைத்தையும் நாம் செய்து முடித்து  இருந்தால் நாம் பெரியவர்களாக ஆகி இருப்போமா மாட்டோமா?

இன்னொரு விதமாகவும் இதை சிந்திக்கலாம்.

அதாவது, பெரியவர்கள் செயற்கு அரிய செயலை செய்வார்கள்.

சிறியர், செயற்கு உரிய செயலைக் கூட செய்ய மாட்டார்கள்.

அப்படியும் சிந்தித்துப் பார்க்கலாம்.

ஒரு எழுத்து, குறளின் அர்த்தத்தை எப்படி மாற்றி போடுகிறது பார்த்தீர்களா?

இதில் எது சரி என்று நமக்குத் தெரியாது. (= எனக்குத் தெரியாது). உங்கள் மனதுக்கு எது சரி என்று படுகிறதோ, எது உங்கள் வாழ்க்கைக்கு நலம் சேர்க்குமோ, அதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_23.html

Friday, May 22, 2020

சித்தர் பாடல் - நந்தவனத்தில் ஓர் ஆண்டி

சித்தர் பாடல் - நந்தவனத்தில் ஓர் ஆண்டி


நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்ற தலைப்பில் திரு. ஜெயகாந்தன் ஒரு சிறுகதை எழுதி இருக்கிறார். அது நான் படிக்கும் போது 12 வகுப்பு, பாட திட்டத்தில் இருந்தது.

பாடல் என்னமோ எளிய பாடல் தான்.

பாடல்

நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி

பொருள்

தோண்டி என்றால் மண் அல்லது தண்ணீர் கொண்டு வரும் ஒரு சிறு மண் பாத்திரம். பொதுவாக அதில் தண்ணீர் கொண்டு வருவார்கள்.

கஷ்ட்டப்பட்டு ஒரு மண் கலயத்தை பெற்று, அதை சரியாக கையாளாமல் கீழே போட்டு உடைத்து விட்டான் அந்த ஆண்டி.

கடுவெளி சித்தரின் பாடல்.

ஆண்டி என்பது நம் உயிர். ஆன்மா.

குயவன், இறைவன்.

தோண்டி, இந்த உடம்பு.

இந்த உடம்பை பெற்று என்ன செய்து கொண்டு இருக்கிறோம்?

சாப்பிடுகிறோம். தூங்குகிறோம். பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறோம். அவர்களை வளர்க்கிறோம். டிவி பார்க்கிறோம். என்று ஒரே ஆட்டமும், பாட்டமுமாக இ இருக்கிறது.

இப்படி கொஞ்ச நாள் போனால், இந்த உடம்பு விழுந்து விடும். அதாவது, மண் பாண்டம் உடைந்து விடும்.

இந்த உடம்பை பெற்றதன் நோக்கம் என்ன என்று அறிந்தோமா?

அல்லது, அப்படி எல்லாம் ஒரு நோக்கமும் இல்லை. இருக்குற வரை ஆண்டு அனுபவித்துவிட்டு போவதுதான்  அதன் நோக்கமா?

இந்த பிளாக் வாசிப்பது, whatsapp படிப்பது, அதை அப்படியே forward செய்வது, டிவி,  போன்றவற்றிற்கு மேலாக ஏதாவது உருப்படியாக செய்ய முடியுமா?

இந்த உடம்பை இன்னும் கொஞ்ச உயர்ந்த வழியில் ஈடுபடுத்த முடியுமா? அல்லது இவ்வளவுதானா?

கடைசியில் போட்டு உடைத்துவிட்டுப் போக வேண்டியதுதானா?

போட்டு உடைத்தால் கூட பரவாயில்லை ..கூத்தாடும் போது கை தவறி விழுந்து  உடைந்து விட்டால்?

அகாலத்தில் உடைந்து போனால்?

யோசிப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_22.html

Thursday, May 21, 2020

சிவ ஞான போதம் - உலகின் தன்மை

சிவ ஞான போதம் - உலகின் தன்மை 


மெய்கண்ட தேவர் அருளியது சிவஞான போதம் என்ற நூல். பன்னிரண்டே சூத்திரங்கள். சைவ சித்தாந்தத்தின் சாரம் அனைத்தும் உள்ளடக்கியது.

விளையாட்டாக சொல்லுவார்கள், அது சிவஞான போதம் அல்ல சிவஞான பூதம் என்று.

சிந்திக்க சிந்திக்க விரிந்து கொண்டே போகும். இந்த நூலுக்கு பலர் உரை எழுதி இருக்கிறார்கள்.

சூத்திரம் என்னவோ மூன்று வரிகள் தான். உரைகள் விரிந்து கொண்டே போகும். உரைகளை படிப்பதற்கு முன்னால், சைவ சித்தாந்தத்தில் கொஞ்சம் பரிச்சயம் வேண்டும். இல்லை என்றால் தலையும் புரியாது காலும் புரியாது.

என்னால் முடிந்தவரை எளிய தமிழில் தர முயற்சிக்கிறேன்.

இந்த உலகில் உள்ள அனைத்தையும் மூன்றே மூன்று தொகுப்பில் அடக்கி விடலாம்.

மக்கள், கார், பஸ், மின்சாரம், கணனி, வீடு, மாடு, புகைவண்டி, பணம், தாவரங்கள், மலை, மேகம், காடு, கடல், கரை, நண்பன், மனைவி, உணவு..இப்படி உலகில் என்னென்ன இருக்கிறது இவை அனைத்தும் மூன்று தொகுதியில் அடங்கிவிடும். அதற்கு வெளியே ஒன்றும் இல்லை.

அவை என்ன மூன்று தொகுதி? எப்படி இந்த பிரபஞ்சம் அனைத்தையும் மூன்று சொற்களுக்குள் அடக்க முடியும்?

முடியும். அந்த சொற்கள்.

"அவன், அவள், அது"

அவ்வளவுதான் இந்த உலகம். எதை எடுத்தாலும் இந்த மூன்றுக்குள் இருந்தாக வேண்டும்.

சரி.  உலகம் அனைத்தையும் மூன்று சொற்களுக்குள் அடக்கியாகி விட்டது.

அதனால் என்ன இப்ப?

அடுத்தது, இந்த உலகம் எப்படி இயங்குகிறது என்று பார்ப்போம்.

எந்த ஒன்றாக இருந்தாலும், அவற்றிற்கு மொத்தம் மூன்று வேலை தான் உண்டு.

அது கொரான வைரஸ் ஆக இருந்தாலும் சரி, சூரியன், சந்திரன், விண்மீன், நம்ம வீட்டு  டிவி, குளிர்சாதனப் பெட்டி , அடுப்பு, காய் கறி என்று எதுவாக இருந்தாலும், அனைத்துக்கும் மூன்றே தொழில் தான் உண்டு.

அவை

தோன்றுதல், நிலைத்தல் , அழிதல்

உலகில் உள்ள எந்த ஒன்றும் இந்த மூன்று நிலைகளை அடைந்தே தீர வேண்டும்.

நான் தோன்றுகிறேன், இருக்கிறேன் ஆனால் அழிய விரும்பவில்லை என்று  யாரும், எதுவும் கூற முடியாது.   தோன்றியது, இருந்தே ஆக வேண்டும். இருந்தது அழிந்தே  ஆக வேண்டும். யாராலும் மாற்ற முடியாத விதி.

நான் பிறக்க மாட்டேன், ஆனால் இறக்கிறேன் என்று யாரும் சொல்ல முடியாது.

சரி, இறக்கிறேன், ஆனால் பிறக்க மாட்டேன் என்று யாரும் சொல்ல முடியாது.

தோன்றிய ஒன்று அழிந்தே ஆக வேண்டும்.

பிறப்பு இருந்தால் இறப்பு இருந்தே ஆக வேண்டும்.

இறப்பு வேண்டாம் என்றால், பிறக்காமல் இருக்க வேண்டும்.

இறைவன் பிறப்பது இல்லை. எனவே அவன் இறப்பதும் இல்லை.

செம்மான் மகளை திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்

என்பார் அருணகிரி.

உயிர்களும், பொருள்களும் தோன்றி, இருந்து பின் மறைகின்றன.

ஒரு பொருள் தன்னைத்தானே தோற்றிக் கொள்ள முடியுமா?

என் பிள்ளைகள் தோன்ற நான்  ஒரு காரணம்.

என்னை நானே தோற்றிக் கொள்ள முடியுமா?

நான் தோன்ற என் பெற்றோர் வேண்டும் அல்லவா?

நான் இருக்கிறேன் என்றால், எனக்கு ஒரு பெற்றோர் இருக்க வேண்டும் என்று எப்படி கண்டு பிடித்தீர்கள்?

என்ன இப்போதே கொஞ்சம் தலை சுற்றுகிறதா?

யோசித்துக் கொண்டு இருங்கள்.  இது எல்லாம் முதல் சூத்திரத்துக்கு விரிவுரை.

மேலும் சிந்திக்க இருக்கிறோம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/05/blog-post_72.html