Monday, June 8, 2020

திருக்குறள் - ஊறிய நீர்

திருக்குறள் - ஊறிய நீர் 


சோடியம் என்று ஒரு தனிமம் உண்டு. மிகவும் வீரியம் வாய்ந்தது. தண்ணீரில் பட்டால் வெடிக்கும் குணம் உடையது.

குளோரின் என்று ஒரு தனிமம் உண்டு. நச்சுத் தன்மை கொண்டது. லேசாக முகர்ந்து பார்த்தால் மயக்கம் வந்து விடும். அறுவை கிகிச்சை பண்ணுவதற்கு முன் குளிரோபோர்ம் தருவார்கள். அதை லேசாக முகர வைப்பார்கள். முகர்ந்த பின் பத்து எண்ணுவதற்குள் நினைவு தப்பிவிடும். மயக்கம் வந்து விடும்.

இப்படி இரண்டு ஆபத்தான தனிமங்களை சேர்த்தால் கிடைப்பது சோடியம் குளோரைட் என்ற சேர்மம். வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உப்பு.

அந்த உப்பு இல்லாவிட்டால் சாப்பாடு வாயில் வைக்க முடியாது. உணவின் சுவையை தருவது, கூட்டுவது இந்த சோடியம் குளோரைடு என்ற உப்பு.

இந்த இரண்டு பொருளும் கலந்தால், இப்படி ஒரு சுவையான பொருள் கிடைக்கும் என்று தெரியுமா? இந்த உப்பு நமக்கு இயற்கையாக கிடைக்கிறது. நாம் ஒன்றும் சோடியத்தையும் , குளோரினையும் சேர்க்க வேண்டியது இல்லை. மேலும், உப்பின் சுவை எப்போதும் ஒரே மாதிரி இருக்கும். கரிப்புச் சுவை.

பால் இருக்கிறது. சுவையாக இருக்கும். தேன் இருக்கிறது. அதுவும் சுவையானதுதான்.

இரண்டையும் கலந்தால் அதன் சுவை எப்படி இருக்கும்?

கலந்து பார்த்தால்தான் தெரியும். அப்படி ஒரு கலவை இயற்கையில் கிடையாது. ஒவ்வொரு முறையும் கலந்து எப்படி இருக்கும் என்று சுவைத்துப் பார்க்க வேண்டும். ஒரு நாள் பால் திடமாக இருக்கும், இன்னொரு நாள் பால் தண்ணியாக இருக்கும், ஒரு நாள் பால் கூடி தேன் குறைவாக இருக்கும், இன்னொரு  நாள் தேன் கூடி பால் குறைவாக இருக்கும். ஒவ்வொரு நாளும் அது மாறிக் கொண்டே இருக்கும். பாலை அதிகம் காய்ச்சினால் ஒரு சுவை, குறைவாக காய்ச்சினால் இன்னொரு சுவை .

வள்ளுவர் சொல்கிறார், "என் காதலியின் வாயில் ஊரும் நீர் இந்த தேனும் பாலும்  கலந்தது போன்ற சுவையாக இருக்கிறது" என்று.

பாடல்


பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்


பொருள்


பாலொடு = பாலுடன்

தேன்கலந் தற்றே  = தேன் கலந்த மாதிரி

பணிமொழி = மென்மையான மொழி பேசும்

வாலெயிறு = தூய்மையான வெண்மையான பல்லில்

ஊறிய நீர் = தோன்றிய நீர்


அவளுடைய முத்தம் அவ்வளவு சுவையாக இருக்கிறது என்று சொல்கிறார்.

சரி, அது எல்லாருக்கும் தெரிந்தது தானே. காதலியின் முத்தம் சுவையாக இருக்கிறது பாலும், தேனும் கலந்தது மாதிரி சுவையாக இருக்கிறது என்று சொல்லி விட்டுப் போக வேண்டியது தானே.

அப்படி சொல்லி விட்டுப் போயிருந்தால், அவர் வள்ளுவர் இல்லை.

என்னதான் காதலியாக இருந்தாலும், முரட்டுத் தனமாக பேசுவது, குரலை உயர்த்திப் பேசுவது,  கத்திப் பேசுவது என்று இருந்தால், அவளை போய் அன்புடன் முத்தம் குடுக்கத் தோன்றுமா?  எப்ப என்ன கத்துவாளோ என்ற பயம் இருக்கும் தானே?

முத்தம் என்பது உடல் சார்ந்த ஒன்று மட்டும் அல்ல. அது உணர்வு சார்ந்ததும்.

"பணி மொழி" என்கிறார்.

பணிவான மொழி. மென்மையாக பேசுபவள். சாந்தமாக பேசுபவள். அவளின் குரலை பற்றிக் கூறுகிறார். மேன்மை இல்லாத பெண்ணின் முத்தம் இனிக்குமா?

சரி, மென்மைதான் . காதலி தான். குளித்து நாலஞ்சு நாள் ஆச்சு. முடி எல்லாம் சிக்கல் பிடித்து இருக்கிறது. பல் விளக்கி இரண்டு நாள் ஆச்சு. கண்டதையும் சாப்பிட்டு சரியாக  வாய் கழுவாமல் கொஞ்சம் வாடை அடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம்....முத்தம் இனிக்குமா?

"வாலெயிறு ஊறிய நீர்" என்கிறார்.

வால் என்றால் தூய்மையான, வெண்மையான. எயிறு என்றால் பல்.

"இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை" , என்பது திருமந்திரம்.

வெண்மையான, தூய்மையான பல்.

பல்லில் இருந்து எப்படி நீர் சுரக்கும்? மலையில் இருந்து அருவி விழுகிறது. அது  அந்தப் பாறையில் இருந்து வருவது போலத்தான் இருக்கும். பல் வெண்மையாக சுத்தமாக இருந்தால், ஈறும் சுத்தமாக இருக்கும், முகமும் சுத்தமாக இருக்கும்,  உடலும் சுத்தமாக இருக்கும் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

அதாவது மனம் (மென்மையான மொழி) மற்றும் உடல் இரண்டும் இனிமையாக இருக்கும் காதலியின் முத்தம்  தேனும் பாலும் கலந்தது போல இருக்கும் என்கிறார்.

ஒவ்வொரு நாளும், இருவரின் உணர்ச்சிகளும் மாறுபடும். எப்போதும் ஒரே மாதிரியா இருக்கும்?

எப்படி தேன் மற்றும் பாலின் கலப்பு விகிதம் மாறும் போது அந்த கலவையின்  சுவை மாறுகிறதோ அது போல ஒவ்வொரு நாளும் அந்த முத்தத்தின் சுவை மாறிக் கொண்டே இருக்கும் என்கிறார்.

இது இன்ன சுவை என்று கூற முடியாது.

இதெல்லாம் சொல்லுவது - நான் அல்ல - வள்ளுவர். அதை மறந்து விடக் கூடாது.


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_8.html

Sunday, June 7, 2020

கம்ப இராமாயணம் - யாரை நம்பி நான் பொறந்தேன்

கம்ப இராமாயணம் - யாரை நம்பி நான் பொறந்தேன் 


எப்பவாவது நமக்கு ஒரு சிக்கல் வந்தால், துன்பம் வந்தால், உதவி நாடி நமக்கு நெருக்கமானவர்களிடம் சென்று உதவி கேட்போம்.

சில சமயம் ஏதோ சில பல காரணங்களால் நாம் நாடிச் சென்ற ஒருவருமே நமக்கு உதவி செய்ய இயலாமல் கை விரித்து இருப்பார்கள்.

அந்த சமயம் நமக்கு, ஒரு பக்கம் அவர்கள் மேல் கோபம் வரும். அவர்களுக்கு எவ்வளவு உதவி செய்தோம்...நமக்கு ஒரு உதவி வேண்டும் என்று கேட்டால் கையை விரித்து விட்டார்களே என்று. இன்னொரு பக்கம், ஒரு வைராக்கியம் வரும்.  யார் உதவி செய்யாவிட்டால் என்ன, இந்த பிரச்சனையை நானே சமாளிக்கிறேனா இல்லையா பார் என்று.

இராவணனும் அந்த நிலையில் நிற்கிறான்.

இந்திரசித்து எவ்வளவோ சொல்லிப் பார்த்தான்...இராவணன் கேட்பதாய் இல்லை. பின் சொல்வான்

"இந்திரசித்து, இதற்கு முன்னால் போருக்கு சென்று இறந்தவர்கள், அல்லது பின்னால் இன்னும் உயிரோடு இருப்பவர்கள் அல்லது நீ இந்த பகையை முடிப்பாய் என்று நான் இந்த பகையை தேடிக் கொள்ளவில்லை. என் மேல் உள்ள நம்பிக்கையில் நான் இந்த பகையை தேடிக் கொண்டேன்...நீங்கள் யார் இல்லாவிட்டாலு பரவாயில்லை...நானே இந்த பகையை முடிக்கிறேன்"

என்று.

பாடல்


முன்னையோர், இறந்தார் எல்லாம், இப் பகை முடிப்பர்
                                        என்றும்,
பின்னையோர், நின்றோர் எல்லாம், வென்றனர் பெயர்வர் 
                                        என்றும்,
உன்னை, “நீ அவரை வென்று தருதி“ என்று உணர்ந்தும்,
                                       அன்றால்;
என்னையே நோக்கி, யான் இந் நெடும் பகை தேடிக் 
                                    கொண்டேன்.


பொருள்


‘முன்னையோர்,  = இதற்கு முன்னால் போருக்கு போனவர்கள்

இறந்தார் = போரில் இறந்தவர்கள்

எல்லாம் = அவர்கள் எல்லாம்

இப் பகை முடிப்பர் என்றும் = இந்தப் பகையை வெல்வார்கள் என்றும்

பின்னையோர் = பின்னும் இருப்பவர்கள்

 நின்றோர் எல்லாம் = உயிரோடு நின்றவர்கள் எல்லாம்

வென்றனர் பெயர்வர்  என்றும், = வெற்றி பெற்றுத் தருவார்கள் என்றும்

உன்னை, = உன்னை

“நீ அவரை வென்று தருதி“ என்று உணர்ந்தும், = நீ அவர்களை வெல்வாய் என்றும்

அன்றால்; = அல்ல

என்னையே நோக்கி,  = என்னை மட்டுமே நம்பி

யான் = நான்

இந் = இந்த

நெடும் பகை  = பெரிய பகையை

தேடிக்  கொண்டேன். = தேடிக் கொண்டேன்


இராவணனின் வீரமும் தன்னம்பிக்கையும் கொப்பளிக்கிறது.

உங்களை எல்லாம் நம்பியா நான் சீதையை தூக்கி வந்தேன். தள்ளுங்க, இதை நானே பார்த்துக் கொள்கிறேன்

என்றான்.

வீரத்தில், கம்பீரத்தில் ஒரு துளி கூட குறைவு இல்லாதவன் இராவணன்.

என்ன ஒரே ஒரு குறை,  சீதையை தூக்கி வந்து விட்டான். இல்லை என்றால், அவனில் ஒரு  குறை காண முடியுமா ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_7.html



Saturday, June 6, 2020

கம்ப இராமாயணம் - சயம் கொடு தருவென்

கம்ப இராமாயணம் - சயம் கொடு தருவென்


சீதையை விட்டு விடு என்று இராவணனிடம் இந்திரசித்து கூறினான்.

இராவணன் அதைக் கேட்கவில்லை.

இராவணன், இந்திரசித்திடம் கூறுகிறான்

"இனி போருக்கு போக வேண்டாம். உனக்கு பயம் வந்து விட்டது. தோற்று விடுவோமோ என்று அஞ்சுகிறாய். நீ ஒண்ணும் கவலைப் படாதே. என்னுடைய இந்த வில்லால் அந்த மனிதர்களை வென்று நான் வெற்றியைக் கொண்டு வருகிறேன்"

என்றான்.

பாடல்



இயம்பலும், இலங்கை வேந்தன், எயிற்று இள நிலவு 
                                         தோன்ற,
புயங்களும் குலுங்க நக்கு, ‘போர்க்கு இனி ஒழிதி போலாம்;
மயங்கினை; மனிசன்தன்னை அஞ்சினை; வருந்தல்; ஐய!
சயம் கொடு தருவென், இன்றே, மனிசரைத் தனு ஒன்றாலே.


பொருள்

இயம்பலும் = இந்திரசித்து அவ்வாறு சொன்னவுடன்

இலங்கை வேந்தன் = இலங்கை அரசன்

எயிற்று  = பற்கள்

இள நிலவு  = பிறை சந்திரனைப் போல

தோன்ற, = சற்றே வெளியே தோன்ற

புயங்களும் குலுங்க = தன்னுடைய தோள்கள் குலுங்க

நக்கு = சிரித்து

‘போர்க்கு இனி ஒழிதி போலாம்; = போருக்கு நீ இனி போக மாட்டாய் போல இருக்கிறது

மயங்கினை = அறிவு தெளிவு இல்லாமல் மயக்கம் கொண்டிருக்கிறாய்

மனிசன்தன்னை அஞ்சினை = மனிதர்களை கண்டு அச்சப் படுகிறாய்

வருந்தல்; ஐய! = கவலைப் படாதே

சயம் கொடு தருவென் = வெற்றியைக் கொண்டு வந்து தருவேன்


இன்றே = இன்றே

மனிசரைத் தனு ஒன்றாலே. - மனிதர்களை இந்த வில் ஒன்றினான்


இராவணனின் வீரம் வீறு கொண்டு எழுகிறது.

நீ பயந்தாங்கொள்ளி. விலகிப் போ.  அந்த மனிதர்களை நான் வெல்கிறேன்


என்று கூறுகிறான்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_6.html


Friday, June 5, 2020

கந்தர் அநுபூதி - பேசா அநுபூதி

கந்தர் அநுபூதி - பேசா அநுபூதி 


நாம் ஒன்று நினைத்து சொல்கிறோம். எழுதுகிறோம்.

ஆனால் கேட்பவர்கள், படிப்பவர்கள் அவர்களுக்கு தோன்றிய விதத்தில் அதை எடுத்துக் கொள்கிறார்கள்.  நாம் சொன்னது ஒன்றாகவும், அவர்கள் அதில் இருந்து அறிந்து கொண்டது வேறாகவும் இருக்கும்.

இது ஏதோ, எப்போதோ நிகழ்வது அல்ல. எப்பவுமே அப்படித்தான் நிகழ்கிறது.

ஒன்று சரியாக கேட்பதில்லை. அப்படியே கேட்டாலும், சரியாக புரிந்து கொள்வதில்லை. மாறாக தவறாக புரிந்து கொள்கிறார்கள். அல்லது, ஏதாவது வாதம் பண்ணுகிறார்கள், தங்கள் மேதா விலாசத்தைக் காட்ட. அப்படியே சரியாக  புரிந்து கொண்டாலும், அதன் படி நடப்பதும் இல்லை.

ஏன் இத்தனை முயற்சி? நாம் சொல்லி ஒன்றும் நடக்கப் போவது இல்லை என்ற உணர்வு வரும் போது, மெளனமாக இருந்து விடுவதே நல்லது என்று தோன்றும் - ஞானியர்களுக்கு.

அதைத்தான் அநுபூதி என்கிறார்கள்.

அந்த பேசா நிலை எப்போதும் நிகழும்?

ஆசைகள் விட்டு விட்டால், மௌனம் வரும் என்கிறார் அருணகிரிநாதர்.

ஆசைகள் எப்படி வருகின்றன?

ஆசைகள் சங்கிலித் தொடர் போல், ஒன்றைப் பற்றிக் கொண்டு இன்னொன்று வரும்  என்கிறார்.

பெண்ணாசை - அதில் இருந்து திருமணம் - அதில் இருந்து பிள்ளைகள் - இந்த அவர்களின்  தேவைகள் ஆசைகள் - அவற்றை பூர்த்தி செய்ய ஆசை - எனவே மேலும் பணம் சம்பாதிக்க ஆசை ...இப்படி ஒன்றில் இருந்து மற்றொன்று.

வீடு வாங்க ஆசை - பின் அதில் நல்ல பீரோ, கட்டில்,  மின் விளக்கு, குளிர் சாதனை பெட்டி,  தொலைக் காட்சி, கார் என்று ஒன்றில் இருந்து ஒன்றாக ஆசைகள்  முளைத்து எழுகின்றன.

இந்த சங்கிலித் தொடரை வெட்ட வேண்டும். அப்போது தான் அது வளர்வது நிற்கும்.

ஏதோ ஒரு ஆசை வரும் போது, "போதும், அது வேண்டாம்" என்று நிறுத்தினால், அந்த ஒரு ஆசை மட்டும் அல்ல, அதைத் தொடர்ந்து வரும் அத்தனை  ஆசைகளும்  அற்றுப் போய் விடும்.

ஆசை குறையும் போது, மனம் அடங்கும். அலை பாயாது.

சலனம் இல்லாத மனதில் மௌனம் பிறக்கும். அலை அடித்தால் அல்லவா சத்தம் வரும்.

பாடல்

தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகளாயின பின்
பேசா அநுபூதி பிறந்ததுவே.


பொருள்

தூசா மணியும் = தூய்மையான மணியும்

துகிலும் = நல்ல உடைகளும்

புனைவாள் = புனைபவள். வள்ளியோ, தெய்வ யானையோ

நேசா = அவள் மேல் நேசம் கொண்ட

முருகா =முருகா

நினது = உன்னுடைய

அன்பு = அன்பு

அருளால் = அருளால்

ஆசா  = ஆசை என்ற

நிகளம் = சங்கிலி

துகளாயின பின் = தூள் தூளான பின்

பேசா  = பேசாமல் இருக்கும், மெளனமாக இருக்கும்

அநுபூதி பிறந்ததுவே. = அநுபூதி நிலை தோன்றியது

சிறு வயதில் என் தாத்தா, பாட்டி ஆகியோர் இந்தப் பாடலை மனப்பாடமாக  ஒப்பிப்பதை  கேட்டு இருக்கிறேன்.

அதற்கு என்ன அர்த்தம் என்று தேடும் ஆவல் இருந்தது இல்லை.

இப்போது தோன்றுகிறது.


என் அனுபவத்தில் இன்னொன்றும் தோன்றுகிறது. சரியா தவறா என்று தெரியவில்லை.

ஆசை சங்கிலி அறுந்து போனால் மௌனம் பிறக்கும் என்கிறார் அருணகிரி.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், மௌனம் பிறந்தால் ஆசை அடங்கும் என்று.

மௌன விரதம் இருந்தால் ஆசை அடங்கும் என்று தோன்றுகிறது.

பேசுவதால், மற்றவர்களிடம் மட்டும் அல்ல, நமக்கு நாமே பேசிக் கொள்வதால், நாம் ஆசைக்கு தீனி போடுகிறோம்.

"அந்த கார் இருந்தால்   எப்படி இருக்கும், அது எவ்வளவு விலை இருக்கும், அதை விட   மற்ற கார் நல்லதா, வாங்கினால் நம்ம வீட்டில் நிறுத்தி வைக்க முடியுமா "

என்றெல்லாம் நாம் நமக்குள்ளேயே பேசிக் கொண்டிருக்கிறோம்.

பேச்சை நிறுத்தினால், ஆசை அறும்.

எப்படி உண்ணா விரதம் இருந்தால் உடல் சலனம் அடங்குகிறதோ, அது போல  பேசா விரதம் இருந்தால் மனச் சலனம் அடங்கும் என்று நினைக்கிறேன்.

பேசா அனுபூதி

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_5.html


Thursday, June 4, 2020

கம்ப இராமாயணம் - கொடும் பகை தேடிக் கொண்டாய்

கம்ப இராமாயணம் - கொடும் பகை தேடிக் கொண்டாய்


இராவணனிடம் இந்திரசித்து கூறுகிறான்..."அப்பா, சீதையை விட்டுவிடு. அப்படி விட்டுவிட்டால் இராம இலக்குவனர்கள் அமைதி அடைவார்கள். நம் மீது உள்ள கோபத்தை விடுவார்கள். பயத்தினால் அல்ல உன் மேல் உள்ள காதலினால் கூறுகிறேன் அவளை விட்டு விடு" என்றான்.

மேலும்,

"நான் (இந்திரசித்து) இலக்குவன் மேல் திருமாலின் அஸ்திரங்களை விடுத்தேன். அது மேல் உலகம்,  நில உலகம் எல்லாம் கலக்கி பின் இலக்குவனிடம் வந்து, அவனை வலம் வந்து பின் சென்று விட்டது. அதை விட வலிமையான படைகள் நம்மிடம் இல்லை. நம் குலம் செய்த பாவத்தால் பெரிய பழியை தேடிக் கொண்டாய். கோபம் வந்தால், அந்த இலக்குவன் ஒருவனே இந்த மூன்று உலகத்தையம் அழித்து விடுவான்"

என்று.

பாடல்

'நிலம் செய்து, விசும்பும் செய்து, நெடிய மால் படை, நின்றானை
வலம் செய்து போயிற்றுஎன்றால், மற்று இனி வலியது உண்டோ?
குலம் செய்த பாவத்தாலே கொடும் பகை தேடிக் கொண்டாய்;
சலம் செயின், உலகம் மூன்றும் இலக்குவன் முடிப்பன், தானே 

பொருள்


'நிலம் செய்து = இந்த உலகம் பூராவும் சுற்றி

விசும்பும் செய்து = விண்ணுலகையும் சுற்றி

நெடிய மால் படை = உயர்ந்த திருமாலின் படை (ஆயுதங்கள்)

நின்றானை = (எதிரில்) நின்றவனை (இலக்குவனை)

வலம் செய்து போயிற்று என்றால் = சுற்றி வந்து வணங்கி விட்டு போயிற்று என்றால்

மற்று இனி வலியது உண்டோ? = அதை விட வலிய படை நம்மிடம் உண்டோ ? (இல்லை)

குலம் செய்த பாவத்தாலே = நம் குலம் செய்த பாவத்தால்

கொடும் பகை தேடிக் கொண்டாய்; = கொடிய பகையை தேடிக்  கொண்டாய்

சலம் செயின் = கோபம் வந்தால்

உலகம் மூன்றும் = மூன்று உலகங்களையும்

இலக்குவன் முடிப்பன், தானே  = தனி ஒருவனே அழித்து விடுவான்

எதிரியை துல்லியமாக எடை போட்டு இருக்கிறான் இந்திரசித்து.

அது மட்டும் அல்ல,  "இராவணா , நீ செய்கின்ற இந்த பழியால் நீ மட்டும் அல்ல, உன் குலமே  அழியப் போகிறது" என்றான்.

நாம் செய்யும் பாவங்கள் நம்மை மட்டும் அல்ல, நம் குடும்பத்தையே, குலத்தையே அழிக்கும்.

"ஐயோ, நான் ஒரு பாவமும் செய்ய வில்லையே...யாருக்கும் மனசு அறிந்து ஒரு  துன்பமும் செய்ய வில்லையே, எனக்கு ஏன் இந்தத் துன்பம்" என்று புலம்பும் போது , நினைக்க வேண்டும்....பெற்றோர் செய்த பாவம், குல முன்னோர் செய்த  பாவம், நம்மை வந்து  தாக்கும்.

இட ஒதுக்கீட்டினால் பாதிக்கப்பட்ட பலர் புலம்புகிறார்கள்.  முன்னோர் செய்த  வினை. இங்கு வந்து, இன்று வந்து மூள்கிறது.

தெய்வம் நின்று கொல்லும். அவசரப் படாது.

தவறு செய்யும் போது நினைக்க வேண்டும்.   நாம் இன்று தப்பி விடலாம். பணம் இருக்கிறது, செல்வாக்கு இருக்கிறது. அதிகாரம் இருக்கிறது. எங்கு வந்து யாரைப் பிடிக்குமோ  தெரியாது.

என்றோ யாரோ செய்த வினை, பட்டினத்தாரை கழு மரத்தில் ஏற்றியது.

"முன்பு செய்த வினைதான் இங்கு வந்து மூண்டதுவே" என்பார் பட்டினத்தார்.

யார் செய்த பிழையோ, இராமனை பதினான்கு ஆண்டு காட்டுக்கு அனுப்பியது.

"மைந்த, விதி செய்த பிழை" என்பான் இராமன்.


வருங்கால சந்ததிக்கு நல்லது செய்ய வேண்டுமா? இன்று நல்லது செய்யுங்கள்.

இன்று மாங்கன்றை நட்டால் இருபது வருடம் கழித்து பழம் தரும், பலன் தரும்.

வினை மட்டும் விட்டு விட்டா போய்விடும்?

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_4.html


Wednesday, June 3, 2020

கம்ப இராமாயணம் - காதலால் உரைத்தேன்

 கம்ப இராமாயணம் - காதலால் உரைத்தேன் 


நம்மிடம் உள்ள ஒரு குறை, உணர்ச்சிகளை பொதுவாக வெளிப்படுத்தாமல் இருப்பது.

ஒருவர் மேல் அன்பு, நன்றி, காதல், அருள் என்று இருந்தால் அதை வெளிப்படையாக சொல்வது கிடையாது. கோபம் வந்தால் காட்டி விடுகிறோம். வெறுப்பு வந்தால் பேசாமல் இருந்து அதையும் காட்டுகிறோம். எதிர்மறை உணர்வுகளை காட்டும் அளவுக்கு நேர்மறை உணர்வுகளை காட்டுவதில்லை.

எத்தனை மனைவி அல்லது கணவனுக்கு நன்றி சொல்லி இருக்கிறோம். மனதுக்குள் இருக்கும். வெளியே சொல்வது இல்லை.

"எனக்கும் இந்த குடும்பத்துக்கும் நீ எவ்வளவு பாடு படுகிறாய்...நீ இல்லாமல் நான் என்ன செய்து விட முடியும்..."

என்று சொல்லி இருக்கிறோமா?



எத்தனை பேர் பெற்றோருக்கு நன்றி சொல்லி இருக்கிறோம்? மனதில் நன்றி உணர்வு இல்லாவிட்டால் அது வேறு விடயம். மனம் முழுவதும் அன்பும் நன்றியும் இருக்கும். இருந்தும் சொல்வது கிடையாது.


எவ்வளவோ செய்யும் அம்மா, கடினமான உழைப்பைத் தரும் அப்பா...ஒரு நாளாவது  அவர்களுக்கு நன்றி சொல்லி இருக்கிறோமா?

அலுவலகத்தில், நமது கை குட்டை கீழே விழுந்து விட்டால் அதை செல்பவருக்கு  நன்றி சொல்கிறோம். நம் கை குட்டை, அது கீழே விழுந்து விட்டது. அதை எடுத்துக்  கூட தரவில்லை....கீழே விழுந்து கிடக்கிறது என்று சுட்டி காட்டியவருக்கு  நன்றி சொல்கிறோம்.

வீட்டில், அடுப்பில் வெந்து சமைக்கும் அம்மாவுக்கு, மனைவிக்கு ஒரு நன்றி கிடையாது.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

இந்திரசித்து செய்த இருந்த யாகத்தை இலக்குவன் அழிதது விட்டான். அடி பட்டு இராவணனிடம் வந்த இந்திரா சித்து சொல்கிறான்


"சீதை மேல் உள்ள ஆசையை விட்டு விடு. அப்படி ஆசையை விட்டு, சீதையை நீ விடுதலை செய்தால், இராம இலக்குவனர்களுக்கு உன் மேல்  உள்ள கோபம் தணியும். போர் செய்யும் எண்ணத்தை கை விடுவார்கள்.  இலக்குவன் ஆற்றல் மேல் உள்ள பயத்தால் இதை நான் கூறவில்லை. உன் மேல் உள்ள காதலால் கூறுகிறேன் " என்றான்.

தந்தையின் மேல் "காதல்".

பெண்ணின் மேல் காதல் வரும். கடவுள் மேல் கூட காதல் வரும்.

"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி" என்பார் ஞானசம்பந்தர்.

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்கு உயிப்பது
வேதம் நான்கிலும் மெய் பொருளாவது
நாதன் நாமம் நமசிவாயவே

ஆனால், தந்தை மேல் காதல்?

எவ்வளவு இனிமையான விஷயம்?

"அப்பா , உன் மேல் உள்ள காதலால் சொல்கிறேன், சீதையை விட்டு விடு"

பாடல்

ஆதலால், “அஞ்சினேன்“ என்று அருளலை; ஆசைதான் 
                                           அச்
சீதைபால் விடுதிஆயின், அனையவர் சீற்றம் தீர்வர்; 
போதலும் புரிவர்; செய்த தீமையும் பொறுப்பர்; உன்மேல்
காதலால் உரைத்தேன்’ என்றான்-உலகு எலாம் கலக்கி 
                                      வென்றான்.


பொருள்


‘ஆதலால்,  = எனவே

“அஞ்சினேன்“ என்று அருளலை = அச்சத்தினால் சொல்லவில்லை


ஆசைதான்  = நீ கொண்ட அந்த ஆசை

அச் சீதைபால்  = அந்த சீதையின் மேல்

விடுதிஆயின்  = விட்டு விடுவாய் என்றால்

அனையவர் = அவர்கள், இராம இலக்குவனர்கள்

சீற்றம் தீர்வர் = கோபம் இல்லாமல் மாறுவார்கள்

போதலும் புரிவர் = உன்னை விட்டு விட்டு போய் விடுவார்கள்

செய்த தீமையும் பொறுப்பர் = நீ செய்த தீமைகளையும் பொறுத்துக் கொள்வார்கள்

உன்மேல் = உன்மேல்

காதலால் உரைத்தேன் = உள்ள காதலால் சொல்லுகின்றேன்

என்றான்- = எண்டான்

உலகு எலாம் கலக்கி  = உலகம் அனைத்தையும் கலக்கி

வென்றான். = வெற்றி பெற்ற இந்திரசித்து

உணர்ச்சிகளை மென்மையாக, அழகாக வெளிப்படுத்திப் பாருங்கள்.

வாழ்க்கை அவ்வளவு அழகாக, இனிமையாக இருக்கும்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_3.html


Tuesday, June 2, 2020

கம்ப இராமாயணம் - தொடுத்தனென்; தடுத்து விட்டான்

கம்ப இராமாயணம் - தொடுத்தனென்; தடுத்து விட்டான்


நிகும்பலை என்று ஒரு யாகம் செய்து, சக்தி வாய்ந்த ஆயுதங்களை பெற்று விட்டால் இந்திரசித்தை யாராலும் வெல்ல முடியாது.

அந்த யாகத்தை அவன் தொடங்கியவுடன், அதைப் பற்றி வீடணன், இலக்குவனிடம் சொல்லி விடுகிறான். இலக்குவன் அந்த யாகம் நடக்கும் இடத்துக்கு வந்து, அந்த யாகத்தை அழித்து விடுகிறான். அங்கு நடந்தப் போரில், இந்திரசித்து அடிபட்டு இராவணனனை காண வருகிறான்.

வந்தவன் சொல்கிறான்

"நாம் செய்த மாயம் எல்லாவற்றையும் உன் தம்பி வீடணன் காட்டிக் கொடுத்து விட்டான். அதனால் இலக்குவன் வந்து என்னோடு போர் புரிந்தான். யாராலும் வெல்ல முடியாத மூன்று படைகளை அவன் மேல் செலுத்தினேன். அவற்றை அவன் தடுத்து விட்டான்"

பாடல்

‘சூழ் வினை மாயம் எல்லாம் உம்பியே துடைக்க, சுற்றி,
வேள்வியைச் சிதைய நூறி, வெகுளியால் எழுந்து வீங்கி,
ஆள்வினை ஆற்றல்தன்னால் அமர்த் தொழில்  தொடங்கி
                                       யார்க்கும்
தாழ்வு இலாப் படைகள் மூன்றும் தொடுத்தனென்; தடுத்து
                                       விட்டான்.


பொருள்


‘சூழ் வினை  = சூழ்கின்ற வினை

மாயம் = மாயம்

எல்லாம் = அனைத்தையும்

உம்பியே  = உன் தம்பியாகிய  வீடணனே

துடைக்க = சொல்லிக் கொடுக்க

சுற்றி = சுற்றி சூழ்ந்து


வேள்வியைச் சிதைய நூறி = வேள்வியை முற்றுகையிட்டு  சிதைத்து ,

வெகுளியால் = கோபத்தால்

எழுந்து வீங்கி = வெகுண்டு எழுந்து, ஆரவாரம் இட்டு

ஆள்வினை ஆற்றல்தன்னால்  = என்னுடைய முயற்சியால் ஆற்றலால்

அமர்த் தொழில்  தொடங்கி = போரைத் தொடங்கி

யார்க்கும் = யாராலும்

தாழ்வு இலாப் = வெல்ல முடியாத

படைகள் மூன்றும் தொடுத்தனென் = மூன்று படைகளை தொடுத்தேன்

தடுத்து விட்டான். = (இலக்குவன்) தடுத்து விட்டான்

அதர்ம வழியில் போகிறவனுக்கு, அழிவு வெளியில் இருந்து வர வேண்டியது இல்லை.  அவனிடம் இருந்தே அவன் அழிவு பிறகும்.

இராவணனை அழிக்கவா இராமன் கானகம் வந்தான் ?

அவன் வீட்டில் என்னவோ குடும்பப் பிரச்சனை. மாற்றான் தாய் வரம் வேண்டி, அவனை காட்டுக்கு அனுப்பினாள். இராவணன் யார் என்றே தெரியாது.

இராவணன் செய்த அதர்மங்கள்...சூர்ப்பனகை, வீடணன் என்று கூட இருந்தே  அழித்தது.

அறம் அல்லாத வழியில் போகிறவன் எல்லோரும் என்ன நினைக்கிறான் ? என்ன  மிஞ்சி மிஞ்சி போனால் சில வருடம் சிறை தண்டனை, அதுவும் காசு இருந்தால்  நல்ல வக்கீலைப் பிடித்து, சட்டத்தில் உள்ள ஓட்டைகளில் புகுந்து  வெளியே   வந்து விடலாம் என்று நினைக்கிறான்.

அவன் செய்த தவறு அவனை மட்டும் பாதித்தால் அவன் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

அவன் மனைவியை, பிள்ளைகளை, பேரன் பேத்திகளை, உடன் பிறப்புகளை  வாட்டும்.

கும்ப கர்ணன் மாண்டான், இந்திர சித்து மாண்டான், மண்டோதரி இறந்தாள்...அரக்கர் குலம் அனைத்தையும் வேரறுத்தது.

சினம் எனும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் எனும் ஏமப் புணையை சுடும்

என்பார் வள்ளுவர்.

சினம் மட்டும் அல்ல, காமமும் அப்படித்தான்.

அறம் அல்லாத செயல் அனைத்துமே குலத்தையே வேரறுக்கும்.

ஒருவன் செய்த தவறுக்கு அவனுக்கு அடி விழுந்தால் வலி அவ்வளவாக இருக்காது.

அவன் பிள்ளை, அவன் கண் முன்னாடியே,  அடி படும் போது தெரியும் வலி.

இந்திர சித்ததன் இறந்த பின், இராவணன் புலம்புவான். கல்லும் கரையும் அந்த புலம்பலைக் கேட்டால்.

இராவணனை அடித்து இருந்தால், அந்த வலி தெரியாது.

அவன் கண் முன், அவன் பிள்ளை, தலை இல்லாமல் கிடந்தான்.

அதுதான் விதி. அதுதான் அறம்.

மேலும் சிந்திப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post.html