Tuesday, October 20, 2020

திருக்குறள் - எல்லாம் மழை

 திருக்குறள் - எல்லாம் மழை 

வான் சிறப்பு என்ற அதிகாரத்தில் முதல் குறளில் மழையை அமுதம் என்று கூறினார். 

அடுத்த குறள். 

சரியான tongue twister 


பாடல் 

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை

 பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_20.html

(please click the above link to continue reading)


துப்பார்க்கு = துய்ப்பவர்களுக்கு, அதாவது அனுபவிப்பவர்களுக்கு.

துப்பாய = வலிமை, சத்து ஆகி. 

துப்பாக்கி = துப்பாக்கி என்றால் ஏதோ சுடுவதற்கு பயன்படும் AK 47 போன்ற பொருள் அல்ல. துப்பு + ஆக்கி. துய்க்கக் கூடிய உணவாகி 

துப்பார்க்கு = மீண்டும் துப்பார்க்கு என்கிறார். அதாவது, துய்ப்பவர்களுக்கு 

துப்பாய தூஉம் = துய்க்கும் படியாக இருப்பதும் 

மழை = மழை 

ஒண்ணும் புரியலைல?

ரொம்ப எளிமையானது. 


அதாவது, மழை உணவை உண்டாக்கவும் பயன்படுகிறது, உணவாகவும் இருக்கிறது. 


எப்படி என்று பார்ப்போம். 

அரிசி, கோதுமை, காய் கறிகள், கனிகள் எல்லாம் வளர வேண்டும் என்றால், மழை வேண்டும். 

மழை இல்லாவிட்டால் என்ன, நாங்க நிலத்தடி நீரை பயன் படுத்தி விவசாயம் செய்வோமே  என்று நினைக்கலாம். 

செய்யலாம். ஆனால், ரொம்ப நாளைக்கு செய்ய முடியாது. நிலத்தடி நீர் நாளுக்கு நாள் கீழே போய் கொண்டே இருக்கும்.  நாளடைவில் தீர்ந்து போகும். 

பயிர் இல்லாவிட்டால் என்ன, நாங்கள் அசைவ உணவு சாப்பிட்டுக் கொள்வோம் என்று நினைக்கலாம்.  அசைவ உணவு வேண்டும் என்றால் அதற்கு வேண்டிய விலங்குகள் உயிர் வாழ வேண்டும். அவை உயிர் வாழ காய் கறிகள், நெல், புல் எல்லாம் வேண்டும். மழை இல்லாவிட்டால், அந்த விலங்குகளும்  இறந்து போகும். 


நமக்கு உணவு வேண்டும் என்றால், உணவை செய்ய வேண்டும் என்றால் மழை வேண்டும். 

ஒரு கவளம் உணவை கையில் எடுக்கும் போது, எங்கோ, எப்போதோ பெய்த மழை  நினைவு வர வேண்டும். 

உண்பவர்களுக்கு உணவை உண்டாக்க பயன் படுகிறது. 

துப்பார்க்கு துப்பாய துப்பாக்கி.

உண்பவர்களுக்கு வலிமை தரும் உணவாக்கி. 


அடுத்தது, மழை உணவை உண்டாக்க மட்டும் அல்ல, தானே உணவாகவும் இருக்கிறது. 

அது எப்படி?

என்னதான் உயர்ந்த உணவாக இருந்தாலும், தண்ணி இல்லாமல் விருந்தை உண்ண முடியுமா?  

உடம்புக்கு உணவு எவ்வளவு முக்கியமோ, அதே போல் நீரும் முக்கியம். ரொம்ப தாகம் எடுக்கும் போது, இரண்டு இட்லி கொஞ்சம் கட்டி சட்னி வைத்து சாப்பிட்டால்  தாகம் அடங்குமா?

என்ன உணவு உண்டாலும், எவ்வளவு சிறப்பான, வலிமை மிக்க உணவு உண்டாலும், நீரும் வேண்டும். 

நீரும் ஒரு உணவு போன்றது.

நமது நாக்கு எப்போதும் ஈரமாக இருக்கும். நாக்கில் நீர் இல்லை என்றால் உணவை உண்ண முடியாது. சுவை தெரியாது.உமிழ் நீர் சுரக்காது. உணவு தொண்டை வழியே   உள்ளே போகாது. 

உணவை உண்ண , உண்ட உணவை ஜீரணம் செய்ய நீர் வேண்டும். 


இவை அன்றி, நீர் உணவாகவும் இருக்கும். 

துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை

துய்ப்பவர்களுக்கு உணவு ஆவதும் மழை. 

துய்ப்பவர்களுக்கு உணவை உண்டாக்குவது, உணவாகவே இருப்பதும் , எல்லாம் மழை. 

உணவு இல்லாமல் ஒரு வாரம் கூட இருந்து விடலாம். நீர் இல்லாமல் இருக்க முடியுமா? 

துப்பார்க்கு, துப்பு ஆய துப்பு ஆக்கி 

துப்பார்க்கு, துப்பு ஆவதும் மழை. 

என்று வாசித்தால் எளிதாக புரியும். 

நல்லா இருக்குல ?






Monday, October 19, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - இடர் யார் படுவார் ?

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - இடர் யார் படுவார் ?


துன்பத்தை சுமக்க யார் தான் விரும்பவார்கள். ஒருவரும் விரும்ப மாட்டார்கள். அப்படியென்றால், துன்பம் வந்தால் என்ன செய்வது? அதை தூக்கி சுமக்கத்தானே வேண்டி இருக்கிறது. வேண்டாம் என்றால் அது நம்மை விட்டு விட்டு ஓடி விடுமா? 

ஒரு வேளை, அந்தத் துன்பத்தில் இருந்து விடுபட வழி இருந்தால்? 

உடனே அதைச் செய்து, துன்பத்தில் இருந்து விடுபட முயல்வோம் அல்லவா?

அப்படி ஒரு வழி இருக்கிறது என்கிறார் பொய்கை ஆழ்வார். 

முன்பு ஒரு முறை, ஒரு யானையை ஒரு முதலை பிடித்துக் கொண்டது. அந்தத் துன்பத்தில் இருந்து விடுபட, அந்த யானை திருமாலை கூப்பிட்டது. அவரும் வந்து அதன் இடர் களைந்தார். யானைக்கே உதவி செய்தார் என்றால் நமக்கு செய்யமாட்டாரா?


பாடல் 


இடரார் படுவார்? எழுநெஞ்சே, வேழம்

தொடர்வான் கொடுமுதலை சூழ்ந்த, - படமுடை

பைந்நாகப் பள்ளியான் பாதமே கைதொழுதும்,

கொய்ந்நாகப் பூம்போது கொண்டு.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_53.html

click the above link to continue reading


இடரார் படுவார்? = இடர் (துன்பம்) யார் படுவார் ?

எழு நெஞ்சே = விழித்து எழு என் நெஞ்சே 

வேழம் = யானை 

தொடர்வான் = தொடர்ந்து வந்து 

கொடுமுதலை = கொடுமையான முத்தலையை 

சூழ்ந்த = நெருங்கி வந்து  கொன்ற 

 படமுடை = பெரிய படம் உடைய 

பைந்நாகப் பள்ளியான் = நாகத்தை படுக்கையாக கொண்டவன் 

பாதமே கைதொழுதும், = பாதத்தை கை தொழுது 

கொய்ந் = கொய்த 

நாகப் பூம் = நாகலிங்க பூவின் 

போது  = மொட்டை 

கொண்டு = கொண்டு 


இடர் யார் படுவார்? வேற வேலை இல்லை?




கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - பிறப்பு மாறினை

 கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - பிறப்பு மாறினை 

பெரிய காவியங்களை படிக்கப் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒரு முக்கிய காரணம், அதில் உள்ள முக்கிய கதா பாத்திரங்கள் எப்படி மாறுகின்றன என்று அறிந்து  கொள்வது. எது அந்த கதா பாத்திரங்களை நடத்துகிறது, எது அவர்களை மாற்றுகிறது, அவர்கள் எப்படி மாறுகிறார்கள் என்று கவனிக்க வேண்டும். 

சில கதா பாத்திரங்கள், மாறவே மாறாது. உதாரணமாக, இராவணன். யார் என்ன சொன்னாலும், நான் பிடித்த முயலுக்கு மூணே கால் என்று ஒரு பிடிவாதம். 

இராமனைப் பார்த்தால், வசிட்டர் சொன்னார் பெண்ணைக் கொல்லக் கூடாது என்று . விஸ்வாமித்ரர் கூறினார் தாடகை என்ற பெண்ணைக் கொல் என்று. இராமன் பிடிவாதம் பிடிக்கவில்லை. விச்வாமிதரன் கூறினால் அது சரியாக இருக்கும் என்று நினைத்து தான் கொண்ட கொள்கையை மாற்றுகிறான். 


வாலியை மறைந்து இருந்து கொன்றான். இராவணனிடம், இன்று போய் போருக்கு நாளை வா என்றான். 

ஆயிரம் படித்து இருந்தாலும், மனைவியை மகிழ்விக்க, பொய் என்று தெரிந்தும் பொன் மான் பின் போனான். 

அறம் பிறழ்வதை கண்ட வீடணன் மாறுகிறான். கும்ப கர்ணன் மாறவில்லை. 

விதிக்கும் விதி காணும் என் விற் தொழில் காண்டி என்று புறப்பட்ட இலக்குவன், "யாரே விதியை வெல்ல வல்லார்" என்று மண்டியிடுகிறான். 


காலம், அதன் ஓட்டத்தில் எல்லோரையும் ஒரு புரட்டு புரட்டிவிட்டுப் போகிறது. 

என்று சரி என்று தோன்றுவது நாளை தவறென்று தோன்றும். இன்று தவறு என்று தோன்றுவது நாளை சரி என்று தோன்றினாலும் தோன்றலாம். 

யார் அறிவார்? 

இதுதான் சரி என்று அடம் பிடிப்பது எவ்வளவு சரி? 

நான் எது சரி, எது தவறு என்று சொல்ல வரவில்லை.  நாம் கவனிக்க வேண்டும். எது மக்களை மாற்றுகிறது என்று. எவ்வளவு தூரம் மக்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள் என்று. 

சீதையை விட்டு விடு என்று கூறிய வீடணன் மேல் கோபம் கொண்டு இராவணன் வசை மாறி பொழிகிறான். 


"நீ ஒரு சரியான பயந்தாங்கொள்ளி . உன்னால் யுத்தம் செய்ய முடியாது. அதுக்கு நீ ஆள் இல்லை.  மனிதர்களை தஞ்சம் அடைந்து விட்டாய். அவர்களை சார்ந்து வாழ நினைக்கிறாய். அரக்க குலத்தில் பிறந்த நீ குலம் மாறிவிட்டாய். உன்னுடன் வாழ்வது நஞ்சு நிறைந்த பாம்புடன் வாழ்வது போலாகும்" என்று கோபத்தில் குமுறுகிறான் இராவணன்.


பாடல் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_19.html

(please click the link above to continue reading)


அஞ்சினை ஆதலின் அமர்க்கும் ஆள் அலை 

தஞ்சு என மனிதர் பால் வைத்த சார்பினை; 

வஞ்சனை மனத்தினை; பிறப்பு மாற்றினை 

நஞ்சினை உடன் கொடு வாழ்தல் நன்மையோ?


பொருள் 


அஞ்சினை = அச்சம் கொண்டு இருக்கிறாய் 

ஆதலின் = எனவே 

அமர்க்கும் ஆள் அலை  = போர்க்களத்தில் சென்று போரிடும் வீரம் உன்னிடம் இல்லை. 

தஞ்சு என = தஞ்சம் என்று 

 மனிதர் பால் வைத்த சார்பினை;  = மனிதர்களை சார்ந்து நிற்கிறாய் 

வஞ்சனை மனத்தினை = வஞ்ச மனம் கொண்டவன் நீ 

பிறப்பு மாற்றினை  = உன் குலத்துக்கு ஏற்ற குணம் உன்னிடம் இல்லை 

நஞ்சினை  = நஞ்சு உள்ள பாம்பினை 

உடன் கொடு வாழ்தல் நன்மையோ?  = உடன் வைத்துக் கொண்டு வாழ்வது என்ன நன்மை தரும்? ஒரு நாள் அல்லது மற்றொரு நாள் அது கட்டாயம் விஷத்தை கக்கியே தீரும். அது போலத்தான் நீயும் 

வீடணன் அனைத்தையம் கேட்டுக் கொண்டு இருக்கிறான். 

அவனுள் மாற்றம் நிகழ்ந்தது. 

அறிவு வேலை செய்யும் போது மாற்றம் நிகழும். அறிவு உறங்கப் போய் விட்டால், ஒரு மாற்றமும் இல்லை. 

சிலர் இருக்கிறார்கள். எவ்வளவு சொன்னாலும், எவ்வளவு படித்தாலும், அறிவில் ஒரு மாற்றமும் இருக்காது. பத்து வயதில் இருந்த அறிவு தான், ஐம்பது வயதிலும். 



Saturday, October 17, 2020

திருக்குறள் - வான் சிறப்பு - அமிழ்தம்

 திருக்குறள் - வான் சிறப்பு - அமிழ்தம் 

மழை பற்றி ஒரு கட்டுரை எழுதச் சொன்னால் நாம் என்ன எழுதுவோம்?

மழை எப்படி உருவாகிறது, நீர் ஆவியாவது, அது மேகமாக மாறுவது, பின் அது குளிர்ந்து மழையாகப் பெய்வது பற்றி எழுதுவோம். எங்கே எவ்வளவு பெய்கிறது போன்ற குறிப்புகளை சேர்க்கலாம்.

மழை பற்றி வள்ளுவர் 10 குறள் எழுதி இருக்கிறார். 

நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. 


முதல் குறள் , "வானத்தில் இருந்து உலகுக்கு வழங்கி வருவதால், மழை அமுதம் என்று உணரப் படும்" 


பாடல் 

வானின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_17.html


(please click the link above to continue reading)


வானின்று = வானத்தில் இருந்து 

உலகம் = உலகிற்கு 

வழங்கி வருதலால் = கொடுத்து வருவதால் 

தான் = அது 

அமிழ்தம் = அமிழ்தம் 

என்றுணரற் பாற்று = என்று உணரப் படுகிறது. 


சரி. இதில் என்ன இருக்கிறது? மழை நல்லது தான், அதை அமிழ்தம் என்கிறார். இதில் என்ன பெரிய  விஷயம் இருக்கிறது ?


அர்த்தத்துக்கு அப்புறம் வருவோம். 

மொத்தம் 133 அதிகாரங்கள் இருக்கின்றன. இதில் வான் சிறப்பு என்ற மழை பற்றிய அதிகாரத்தை எங்கே வைக்கலாம்?


எங்க வச்சா என்ன என்று நினைக்கக் கூடாது. ஒரு முறை வேண்டும் அல்லவா? 

காமத்துப் பாலில் கொண்டு போய் வான் சிறப்பு வைக்க முடியுமா?

இரண்டாவது அதிகாரமாக இதை வைக்கிறார். 

கடவுள் வாழ்த்து முடிந்த பின் அடுத்ததாக இதை வைக்கிறார். 

என்ன அர்த்தம்?

கடவுளுக்கு அடுத்த இடத்தில் இருப்பது மழை என்று அதன் முக்கியத்துவத்தை  காட்ட வேண்டி, இந்த அதிகாரத்தை அங்கு கொண்டு போய் வைக்கிறார். 

அடுத்ததது, 

"உலகுக்கு"...உலகம் என்றால் என்ன? உலகம் என்றால் இங்கு உயிரினங்களை குறிப்பது. மனிதர்களுக்கு மட்டும் அல்ல, விலங்குகள்,பறைவைகள், தாவரங்கள்  என்று அனைத்து உயிர்களுக்கும் மழை வேண்டும். எனவே "உலகுக்கு"  துன்று கூறுகிறார். 


"அமிழ்து"...அமிழ்தம் என்றால் உயிரையும், உடலையும் ஒன்றாக வைத்த்து இருப்பது.  அதாவது அமிழ்தம் உண்டவர்கள் சாக மாட்டார்கள். அவர்களின் உடலும், உயிரும் ஒன்றாகவே இருக்கும். 


ஆஹா , மாட்டுனார் வள்ளுவர். மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது. மக்கள் சாகமலா இருக்கிறார்கள். பின்ன எப்படி மழையை அமிழ்தம் அப்படினு  சொல்ல முடியும்? தப்பு தான?  

வள்ளுவர் பிழை செய்வாரா?

ஒரு தனி மனிதன் இறந்து போகலாம். ஆனால், மனித குலம் சாகாமல் உயிரோடு இருக்கிறதே. அதனால் அதை அமுதம் என்றார் . மனித குலம் மட்டும் அல்ல, தாவரங்கள், விலங்குகள், பறவைகள் எல்லாம் நிலைத்து அவற்றின் உடலும் உயிருமாக இருக்கிறது அல்லவா? மழை இல்லாவிட்டால், எல்லாம் அழிந்து போகும். எனவே அதை அமுதம் என்றார். 

நமக்கு ஒரு விலைமதிப்பற்ற பொருள் கிடைத்தால் அதை என்ன செய்வோம். அதை எப்படி போற்றி பாதுகாப்போம்? மழை அமுதம் என்றதனால், அது எவ்வளவு உயர்ந்தது என்று அறிந்து கொள்ள வேண்டும். அதை போற்றி பாதுகாக்க வேண்டும். 

ஆற்றில் மணல் அள்ளுவது, ஏரியில் பிளாட் போட்டு குடி இருப்பது, கழிவு நீரை குடி நீர் தரும் நீர் நிலைகளில் கொண்டு போய் சேர்ப்பது, வீணாக மழை நீரை கடலில் போய் சேர விடுவது என்பதெல்லாம் மழைக்கு நாம் தரும் மரியாதைகள் அல்ல. அமுதத்தில் அழுக்கு தண்ணீரை விடுவோமா? 

உயிர் காக்கும் அமுதம் போல அதை பாதுகாக்க வேண்டும். 

"வான் நின்று". நின்று என்றால் நிலையாக, உறுதியாக என்று பொருள். எப்போதும் பெய்வதால். ஏதோ அஞ்சு வருடத்துக்கு ஒரு முறை, பத்து வருடத்துக்கு ஒரு முறை என்று இல்லாமல், எல்லா வருடமும் பெய்யும். கொஞ்சம் முன்ன பின்ன இருக்கலாம். ஆனால், வரும்.

"உணரப் படும்" என்றார். சொல்லிப் புரியாது. பார்த்து, அனுபவித்து, உணர வேண்டும். தண்ணீரின் மகத்துவம் அது இல்லாத போது தான் உணர முடியும். தாகத்தில் நாக்கு வரளும் போதுதான் ஒரு குவளை நீரின் அருமை தெரியும். 


ஒரு குறள் இது. இன்னும் ஒன்பது இருக்கிறது. 


சிலிர்கிறது அல்லவா?






Friday, October 16, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - பிறர் செறுநர் வேண்டுமோ?

 கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - பிறர் செறுநர் வேண்டுமோ?

சாகப் போகிறவனுக்கு மருந்து கசக்கும் என்பார்கள். அதாவது இனிப்பு மருந்து கூட கசக்குமாம். 

தீயவர்களுக்கு, நல்லது சொன்னால் கூட, அது அவர்களுக்கு துன்பம் நிறைந்ததாகவே தெரியும். அப்படி தங்களுக்கு துன்பம் தந்தவர்களை அவர்கள் பதிலுக்கு துன்பம் செய்யத் தயங்க மாட்டார்கள். 

எனவே, தீயவர்களிடம் அறிவுரை சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. 

அதனால் தான், ஒளவை சொன்னாள், "மற்றவர் தம் கண்ணில் படாது தூரத்து நீங்குவதே நல்ல நெறி" என்று. 


சீதையை விட்டு விடு என்று வீடணன் சொன்னது இராவணன் காதில் ஏறவில்லை. மாறாக அவன் வீடணனின் நல்ல எண்ணத்தை சந்தேகப் படுகிறான். 


"எங்கு வந்த மனிதர்களை நீ விரும்புகிறாய். அவர்களோடு நட்பு பாராட்டுகிறாய். என்னை வெற்றி அடைய நினைக்கிறாய். என்னை வென்று இந்த இலங்கைக்கு அரசனாக நினைக்கிறாய். உன் செயல்கள் எல்லாம் மிக வன்மை உள்ளது. உன்னை போல் ஒருவர் இருந்தால் எனக்கு வேறு ஒரு பகைவர் வேண்டாம். நீ ஒருவனே போதும்"


என்று சுடு சொற்கள் கூறுகிறான். 

பாடல் 

நண்ணின மனிதர்பால் நண்பு பூண்டனை;

எண்ணினை செய்வினை; என்னை வெல்லுமாறு

உன்னினை; அரசின்மேல் ஆசை ஊன்றினை;

திண்ணிது உன் செயல்; பிறர் செறுநர் வேண்டுமோ ?


பொருள் 

(click the link below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_16.html


நண்ணின = நெருங்கி இங்கு வந்த 

மனிதர்பால் = மனிதர்கள் பால் 

நண்பு பூண்டனை; = நட்பு கொண்டாய் 

எண்ணினை செய்வினை = அதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றை சிந்தித்து வைத்து இருக்கிறாய் 

 என்னை வெல்லுமாறு = என்னை வெற்றி கொள்ள 

உன்னினை = நினைக்கிறாய் 


அரசின்மேல் ஆசை ஊன்றினை; = இந்த இலங்கை அரசின் மேல் ஆசை வைத்து இருக்கிறாய் 


திண்ணிது உன் செயல் = உறுதியானது உன் செயல் 

பிறர் செறுநர் வேண்டுமோ ? = வேறு பகைவர்களும் வேண்டுமோ? (வேண்டாம் நீ ஒருவனே போதும்) 


எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்

என்பார் வள்ளுவப் பேராசான். திண்ணியர் என்ற சொல் எப்படி கையாளப் படுகிறது  என்பதற்கு ஒரு உதாரணம்.  

"நீ என்னை வென்று, இந்த அரசை அடையும் முயற்சியில் திண்ணமாக இருக்கிறாய் " என்று சொல்கிறான்  இராவணன். 



Thursday, October 15, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - உன் புகல் அவர்

 கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - உன் புகல் அவர் 

சீதையை சிறை பிடித்தது அறம் அன்று, அவளை விட்டு விடு என்று இராவணனுக்கு எவ்வளவோ அறிவுரைகள் கூறினான் வீடணன். அத்தனையும் வீணாகப் போயிற்று. 

கோபத்தில் இராவணன், வீடணனை தகாத வார்த்தைகள் பேசுகிறான். 


"முன்பே அவர்கள் (இராம இலக்குவனர்கள்) மேல் உனக்கு அன்பு உண்டு. அந்த பகை கொண்ட மனிதர்கள் மேல் உள்ள அன்பினால் உனக்கு எலும்பு உருகுகிறது. அவர்களை போற்றுகிறாய். உனக்கு புகல் இடம் அவர்கள்தான். நான் வேற என்ன சொல்ல" 


பாடல் 

முன்புற அனையர்பால் அன்பு முற்றினை;

வன் பகை மனிதரின், வைத்த அன்பினை;

என்பு உற உருகுதி; அழுதி; ஏத்துதி;

உன் புகல் அவர்; பிறிது உரைக்க வேண்டுமோ ?

பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_15.html


(pl click the above link to continue reading)

முன்புற = முன்பே 

அனையர்பால் = அவர்களிடம் 

அன்பு முற்றினை; = உனக்கு நிறைய அன்பு உண்டு 

வன் பகை  = கொடுமையான பகை 

மனிதரின் = மனிதர்கள் மேல் 

 வைத்த அன்பினை = வைத்த அன்பினால் 

என்பு உற உருகுதி = எலும்பு வரை உருகுகிறாய் 

அழுதி = அன்பின் மிகுதியால் அழுகிறாய் 

ஏத்துதி; = அவர்களைப் போற்றுகிறாய் 

உன் புகல் அவர் = அவர்கள்தான் நீ சென்று புகல் அடைய சிறந்த இடம் 

பிறிது உரைக்க வேண்டுமோ ? = வேறு என்ன சொல்ல?


வீடணன் சொன்னது, "சீதையை விட்டு விடு" என்று. 


பதிலுக்கு இராவணன் சொல்லுவது "இராமனிடம் சரண் அடைந்து விடு"  என்று. 


கண் முன்னே நின்ற பாரா பொருள் வீடணனுக்கு கடவுளாகத் தெரிந்தது. இராவணனுக்கு மனிதனாகத் தெரிந்தது. 


பார்க்கும் பார்வையில் இருக்கிறது எல்லாம். 


கண்ணனை இடையனாக பார்த்தான் துரியோதனன் என்ற மடையன். 

இராமனை மனிதனாகப் பார்த்தான் இராவணன் என்ற ஒரு அரக்கன். 

முருகனை குழதையாகப் பார்த்தான், சூரபத்மன். 

அழிந்தார்கள் என்பது வரலாறு. 


வீடணன், இராமனிடம் அடைக்கலம் போக வேண்டும் என்ற முடிவை முதலில் எடுத்தது  இராவணன். "உனக்கு அவர்கள்தான் புகலிடம்" என்று வீடணனிடம் முதலில் கூறியது இராவணன். 

                               

காப்பிய நீரோட்டம் எப்படி போகிறது பாருங்கள். 

உன்னிப்பாக கவனித்தால் இந்த இடத்தில் காப்பிய ஆறு சற்று வழி மாறுவது  தெரியும். 

வீடணனை, இராமனை நோக்கி நகர்த்துகிறான் இராவணன்.

மேலும் எப்படி போகிறது என்று சிந்திப்போம். 







Wednesday, October 14, 2020

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - வாழவோ கருத்து ?

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - வாழவோ கருத்து ?


சீதையை விட்டு விடும்படி வீடணன் இராவணனுக்கு எவ்வளவோ சொன்னான். இரணியன் கதையைக் கூறினான். 

இராவணன் ஏற்கவில்லை. 

இரணியன் கதையை அப்படியே தலை கீழாக புரிந்து கொள்கிறான் இராவணன்.


இராவணன் கூறுகிறான் 


"எப்படி தந்தை இறந்த பின் பிரகலாதன் அரசை ஏற்று அனுபவித்தானோ, அது போல நான் தோற்று இறந்த பின் இந்த அரசை நீ அனுபவிக்கலாம் என்று நினைக்கிறாய். அது நடக்காது" என்று 


என்ன செய்வது. நல்லது கூறினாலும், அதை அப்படியே தலை கீழாக மாற்றி தவறாக புரிந்து கொள்வது இன்றும் நடக்கிறது. 


உயந்த கருத்துகளை படிக்கும் போது, நம்மை அந்த அளவுக்கு நாம் உயர்த்திக்கொள்ள முயல வேண்டுமே அன்று அவற்றை நம் நிலைக்கு கீழே இரக்கக் கூடாது. 


பெரிய நூல்களை இப்படி ஜனரஞ்சகமாக எழுதுவது சில சமயம் தவறோ என்று தோன்றும். இவற்றைப் படிக்கும் சிலர் என்னிடமே கேட்டு இருக்கிறார்கள், "வள்ளுவர்  அப்படி சொன்னது தவறு இல்லையா?" என்று.  அதாவது, வள்ளுவரை விட  அவர்களுக்கு அறிவு அதிகம் என்று சொல்ல வருகிறார்கள். 

அரக்க குணம். என்ன செய்வது?


பாடல் 


பாழி சால் இரணியன் புதல்வன் பண்பு என,

சூழ்வினை முற்றி, யான் அவர்க்குத் தோற்றபின்,

ஏழை நீ என் பெருஞ் செல்வம் எய்தி, பின்

வாழவோ கருத்து ? அது வர வற்று ஆகுமோ ?


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2020/10/blog-post_14.html


(pl click the above link to continue reading)

பாழி சால் = வலிமை மிகக் கொண்ட 

இரணியன் = இரணியனின் 

புதல்வன் = புதல்வன், பிரகலாதன் 

பண்பு என = குணத்தைப் போல 

சூழ்வினை முற்றி = சூழ்ச்சி செய்து 

யான் அவர்க்குத் தோற்றபின் = நான் அந்த இராம இலக்குவனர்களிடம் தோற்ற பின் 

ஏழை = கோழை, ஏழையான நீ 

நீ என் பெருஞ் செல்வம் எய்தி = என்னுடைய அளவவற்ற செல்வத்தை பெற்று 

பின் வாழவோ கருத்து ? = அதன் பின் வாழவா கருதி இருக்கிறாய் 

அது வர வற்று ஆகுமோ ? = அது நடக்க முடியுமா ? (முடியாது என்று கருத்து)


வரம் கேட்டது இரணியன் 

தன்னை வணங்கும்படி எல்லோரையும் இம்சை செய்தது இரணியன் 

இந்தத் தூணில் இருக்கிறானா உன் ஹரி என்று கேட்டவன் இரணியன் 

தூணை பிளந்தவவன் இரணியன் 

நரசிம்மத்தால் கொல்லப்பட்டவன் இரணியன்.


இதில் பிரகலாதனின் பங்கு என்ன? பிரகலாதன் என்ன தவறு செய்தான்?


அதே போல், சீதை மேல் காமம் கொண்டது இராவணன், அவளைத் தூக்கி வந்தது இராவணன்,  அவளை விட மறுத்தது இராவணன். 


இதில் வீடணன் பங்கு என்ன?


தாங்கள் செய்யும் தவறுகளுக்கு மற்றவர்கள் மேல் பழி போடுவது ஒரு அரக்க குணம் போலும். 


நம்மிடம் அந்தக் குணம் இருந்தால், அது பற்றி சிந்திக்க வேண்டும்.