Saturday, January 30, 2021

திருக்குறள் - இதுவும் மாசற்றார் கோள்

 திருக்குறள் - இதுவும் மாசற்றார் கோள் 


மூன்று விதத்தில் நாம் பிறருக்கு தீமை செய்கிறோம் என்று பார்த்தோம். அவை

- பலன் நோக்கிச் செய்தல்

- செற்றம் (பகை) பற்றிச் செய்தல் 

- சோர்வால் (மறதியால்) செய்தல் 

சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா செய்யாமை மாசற்றார் கோள் என்று பலன் கருதி இன்னா செய்யாமை பற்றி முதல் குறளில் சொன்னார். 


இப்போது, செற்றம் பற்றி இன்னா செய்வதைப் பற்றி கூறப் போகிறார். 


நம் மேல் பகை கொண்டு, பொறாமை கொண்டு, நமக்கு ஒருவன் கெடுதல் செய்தாலும், அதை மறுத்து அவனுக்கு கெடுதல் செய்யாமல் இருப்பது மாசற்றவர்களின் கொள்கை. 


பாடல் 

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா

செய்யாமை மாசற்றார் கோள்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_30.html

(click the above link to continue reading)

கறுத்து = பகைமை கொண்டு, கோபம் கொண்டு, 

இன்னா  = தீமை 

செய்தவக் கண்ணும் = செய்த அந்த போதும் 

 மறுத்து = அதை மறுத்து 

இன்னா = அவருக்கு தீமை 

செய்யாமை = செய்யாமல் இருப்பது 

மாசற்றார் கோள் = குற்றமற்றவர்களின் கொள்கை 


அதாவது பழிக்குப் பழி, பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் என்று போகக் கூடாது என்கிறார். 


மகாத்மா காந்தி கூறினார் "கண்ணுக்கு கண் என்று ஆரம்பித்தால் இந்த உலகமே வெகு சீக்கிரம் குருடாகி " விடும் என்று. 


மறுத்து என்ற சொல்லுக்கு பரிமேல் அழகர் மிக அழகான விளக்கம் தருகிறார். 


"உட்கொள்ளாது" என்று கூறுகிறார். 


யோசித்துப் பார்த்தால் தெரியும், ஒருவர் ஒன்று சொல்கிறார், உடனே அது நம்முள் ஒரு எதிர் விளைவை ஏற்படுத்துகிறது. 


"கடவுள் இருக்கிறார்" என்று சொன்னால், "யார் சொன்னா...எங்கே நிரூபி பார்போம்" என்று வாதம் செய்யத் தொடங்கி விடுகிரோறம். 


"அந்தத் தலைவர் நல்லவர்" என்றால், "ஹா அவர் இலட்சணம் எனகுத் தெரியாதா" அவர் செய்த தவறுகளை எடுத்துக் காட்ட ஆரம்பித்து விடுகிறோம். 


இதுதான் நமக்கு வேலையா? ஒவ்வொருவர் சொல்லுவதற்கும், செய்வதற்கும் எதிர் வினை செய்து கொண்டே இருந்தால் நாம் போய் சேர வேண்டிய இடத்தை எப்போது அடைவது. 


தெருவில் போகும் போது நாய் குரைக்கும். "என்னைப் பார்த்த குரைத்தாய்" என்று பதிலுக்கு நாமும் நின்று அதைப் பார்த்து குரைத்துக் கொண்டு இருக்க முடியுமா? அப்படிச் செய்தால் , இந்த உலகம் நம்மைப் பற்றி என்ன நினைக்கும்? 


அதை கண்டு கொள்ளாமல் மேலே போய் விட வேண்டும். முட்டாள்களுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டே இருந்தால், காலம்தான் விரயம் ஆகும். 


நாம் அவனை கண்டு கொள்ளாமல் போய் விட்டால், இவன் நம்மை சீண்டக் கூட மாட்டேன் என்கிறான் என்று வேறு இடம் போய் விடுவார்கள். மாறாக, அவனோடு சரிக்கு சரி நின்றால், நம் நிலை தான் தாழும். 


Don't fight with the pig in the mud, the pig will enjoy it என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. 


கீழ் மக்களுக்கு வம்புக்கு சண்டை பிடிப்பதும், முரண் படுவதும் இயற்கை. நாம் அவர்களுக்கு நிகராக நம் நிலைமையை தாழ்த்திக் கொள்ள கூடாது. 


சரி தானே?


கொஞ்சம் இலக்கணம் படிப்போமா? 


வீட்டுக்குள் அம்மா வருகிறாள்.  மதிய நேரம்..ஒரு இரண்டு மணி இருக்கும். மகனைப் பார்த்து கேட்கிறாள் "என்னடா ...மத்யானம் சாப்டியா" என்று. 


மகன் சொல்கிறான் "வேலை ரொம்ப இருக்கு...காலையிலும் சாப்பிடலை" அப்படின்னு. 


அப்படினா, மத்யானமும் சாப்பிடலைன்னு தெரியுதுல?  


காலையில் சாபிடல அப்படின்னு சொல்லி இருந்தால், சரி , மத்யானம் சாப்பிட்டு இருப்பான் என்று நினைக்க இடம் இருக்கு. 


காலையிலு"ம்" என்று ஒரு "ம்" போட்டதால காலையிலும் சாபிடல, மத்தியானமும் சாப்பிடலைன்னு தெரியுதுல.


அந்த "ம்" க்கு இறந்தது தழுவிய எச்ச உம்மை என்று பெயர். 


ஆங்கில பரீட்சை எப்படி செய்து இருக்கிறாய் என்று கேட்டாலும் "அதை ஏன் கேக்குற...தமிழும் சரியா செய்யல" என்றால் ஆங்கிலம், தமிழ் இரண்டும் சரியா செய்யல என்று நாம் புரிந்து கொள்கிறோம் அல்லவா. 


இங்கே, குறளில், 


கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா

செய்யாமை மாசற்றார் கோள்


என்றார். 


முந்தைய குறளில் 


சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் 

பிறர்க்கு இன்னா செய்யாமை மாசற்றார் கோள் 


என்றார். 


இங்கே இரண்டாவது குறளில் "செய்யாமையு'ம்' மாசற்றார் கோள் என்று இருந்திருக்க வேண்டும். 


அதுவும் மாசற்றார் கோள் , இதுவும் மாசற்றார் கோள் என்பதால், இரண்டாவதாக வந்த "செய்யாமை" என்பதை 'செய்யாமையும்"  என்று இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லை. 


எனவே, அது "இறந்தது தழுவிய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கி (மறைந்து) நின்றது " என்று உரைக் குறிப்பு எழுதுகிறார் பரிமேல் அழகர். 


எவ்வளவு தூரம் உன்னிப்பாக ஒரு நூலை படித்து இருக்கிறார்கள். 


அப்படி படிக்க வேண்டும். 




Friday, January 29, 2021

திருக்குறள் - மாசற்றார் கோள்

 திருக்குறள் - மாசற்றார் கோள் 

மூன்று விதத்தில் நாம் மற்றவர்களுக்கு தீமை செய்கிறோம் என்று முந்தைய ப்ளாகில் பார்த்தோம். 


அதில் முதலாவது, நமக்கு ஒரு பயன் வேண்டி மற்றவர்களுக்கு துன்பம் செய்தல். 

பிறரை ஏமாற்றுவது, பிறர் பொருளை களவு எடுப்பது, ஒருவருக்கு வர வேண்டிய உழைப்பின் பலனை தட்டிப் பறிப்பது, நம்மிடம் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக மற்றவர்களை உதாசீனப் படுத்தி மகிழ்வது, மற்ற உயிர்களை துன்புறத்தி அதில் இன்பம் காண்பது...என்று பல விதங்களில் நமக்கு ஒரு பலன் வேண்டி மற்றவர்களை துன்புறுத்துகிறோம். 

இதில் மற்றவர்கள் என்பது மனிதர்கள் மட்டும் அல்ல, விலங்குகளும் சேரும். 


அப்படி, நமக்கு ஒரு பலன் கிடைக்கும் என்றாலும், பிறருக்கு இன்னல் தரமால் இருப்பது பெரியவர்களின் கோட்பாடு என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா

செய்யாமை மாசற்றார் கோள்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_29.html

click the above link to continue reading


சிறப்புஈனும் = சிறப்பினைத் தரும் 

செல்வம் பெறினும் = செல்வத்தைப் பெற்றாலும் 

பிறர்க்கு = மற்றவர்களுக்கு 

இன்னா செய்யாமை = துன்பம் செய்யாமல் இருப்பது 

மாசற்றார் கோள். = குற்றமற்றவர்களின் கொள்கை, கோட்பாடு.


சரி, இது ஒரு எளிமையான குறள் போலத்தானே இருக்கிறது என்று நாம் நினைப்போம். 

இதற்கு பரிமேல் அழகர் தந்த உரையை படித்தால் தெரியும் எவ்வளவு நுட்பமாக, எவ்வளவு ஆழமாக படித்து உரை செய்து இருக்கிறார் என்று. 


ஒவ்வொரு வார்த்தையும் ஒரு தங்கச் சுரங்கம். 

"சிறப்புஈனும்" என்றால் என்ன அர்த்தம்? கன்றினை ஈனும் என்றால், எது கன்றினை ஈனும்? ஒரு பசு மாடு கன்றினை ஈனும். அது போல, இங்கே சிறப்பு ஈனும் எது சிறப்பு? பரிமேல் அழகர் யோசிக்கிறார்.  எது சிறந்தது? பக்தி, வீரம், காதல், அன்பு, அதிகாரம், ...எது சிறந்தது, சிறப்பு வாய்ந்தது என்று யோசித்து முடிவுக்கு வருகிறார். 


"யோகம்" தான் உள்ளதிற்குகுள் சிறந்தது. ஏன் என்றால், அது இம்மைக்கும், மறுமைக்கும் பலன் தர வல்லது. எனவே, சிறப்பு என்றால் அது யோகம் தான். அதைவிட சிறந்து ஒன்றும் இல்லை. 

அந்த யோகம் ஈனும் என்றால், யோகத்தில் ஈடுபட்டால் கிடைக்கும் என்று அர்த்தம். என்ன கிடைக்கும் ? அட்டமா சித்திகள் கிடைக்கும். ஞானம் கிடைக்கும். வீடு பேறு கிடைக்கும். 


எனவே, அந்தப் பலன்களை சிறப்பு ஈனும் செல்வம் என்றார். செல்வமாவது அந்த யோகம் தரும் பலன்கள்.


அப்படி, அவ்வளவு சிறப்பான யோகம் தரும் பலன்கள் கிடைத்தால் கூட, மற்றவர்களுக்கு  துன்பம் செய்ய மாட்டார்கள் "மாசற்றவர்கள்" என்கிறார். 


"மாசற்றவர்கள்" என்றால் யார்?  முற்றும் துறந்த துறவிகள், மயக்கம், குழப்பம், ஐயம், திரிபு போன்றவை இல்லாதவர்கள். அவர்களிடம் ஒரு குற்றமும் இருக்காது. 


எவ்வளவுதான் சிறந்த நன்மை கிடைக்கும் என்றாலும், மற்றவர்களுக்கு துன்பம் செய்யக் கூடாது. அல்லது பிறருக்கு துன்பம் தந்து அதன் மூலம் கிடைக்கும் நன்மை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதை வேண்டாம் என்று ஒதுக்கி விட வேண்டும். 


நாம் அவ்வாறு செய்கிறோமா? பெரிய நன்மை என்ன பெரிய நன்மை, ஒரு சின்ன நன்மை கிடைத்தால் கூட போதும், பிறருக்கு தீமை செய்ய நாம் தயங்குவதே இல்லை. 


ஓட்டுக்கு பணம் வாங்குவதில் இருந்து, இலஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பதில் இருந்து, பில் போடாமல் சாமான்கள் வாங்குவதில் இருந்து சின்ன சின்ன நன்மைகளுக்காக எவ்வளவு பெரிய தீமைகளையும் நாம் செய்யத் தயாராக இருக்கிறோம். 


அப்படி செய்யக் கூடாது என்று நன்மை நோக்கி பிறருக்கு தீமை செய்வதை விலக்குவதைப் பற்றி கூறுகிறார். 


நமக்கு ஒரு நன்மை வருகிறது என்பதற்காக பிறருக்கு துன்பம் செய்யலாமா?




 


 செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா

செய்யாமை மாசற்றார் கோள்.





Thursday, January 28, 2021

திருக்குறள் - இன்னா செய்யாமை

திருக்குறள் - இன்னா செய்யாமை

இன்னா என்றால் துன்பம். இனிய என்பதன் எதிர்பதம். 

நாம் பிறருக்கு எப்போது துன்பம் செய்வோம்? அவர்கள் மேல் கோபம் வந்தால் துன்பம் செய்வோம். 


அது மட்டும் தானா? கோபம் இல்லாமல் துன்பம் செய்ய முடியாதா? செய்யாமல் இருக்கிறோமா?

இந்தக் கேள்வி வள்ளுவருக்கு வந்து இருக்கிறது. யோசித்து எழுதி இருக்கிறார். 


வெகுளாமை என்று ஒரு அதிகாரம். அதாவது கோபம் கொள்ளாமை. அதற்கு அடுத்த அதிகாரமாய் இன்னா செய்யாமை என்ற அதிகாரத்தை வைக்கிறார் வள்ளுவர். 


அதாவது கோபம் இல்லாமலும் பிறருக்கு தீங்கு செய்ய முடியும் என்று சொல்கிறார். 


அவை என்னென்ன காரணங்கள் என்று பரிமேல் அழகர் விளக்குகிறார். 


"அஃதாவது, தனக்கு ஒரு பயன் நோக்கியாதல் ,செற்றம் பற்றியாதல். சோர்வானாதல் ஓர் உயிர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை. இன்னா செய்தல் வெகுளி ஒழியவும் நிகழும் என்பது அறிவித்தற்கு , இது வெகுளாமையின்பின் வைக்கப்பட்டது"


என்பது அவர் உரை. 


உரைக்கு உரை காண வேண்டி இருக்கிறது. 

click the following link to continue reading 

https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_28.html


"அஃதாவது" என்றால் எஃதாவது? இன்னா செய்வது, தீங்கு செய்வது என்பது. 


"தனக்கு ஒரு பயன் நோக்கியாதல்" = நமக்கு ஒரு பலன் வேண்டி பிறருக்கு தீங்கு செய்து விடலாம். பணம் கொடுத்து பிள்ளைக்கு கல்லூரியில் இடம் வாங்கி விடலாம். அதனால், படித்த ஒருவனுக்கு இடம் கிடைக்காத தீங்கு நேர்ந்து விடும். 

அடுத்தது,


செற்றம் பற்றியாதல் = செற்றம் என்றால் பகை. ஒருவர் மேல் பகை கொண்டு அவருக்கு தீங்கு செய்து விடலாம். 


மூன்றாவதாக, 

"சோர்வானாதல்" - மறந்து போய், தெரியாமல் தீமை செய்து விடலாம்.  காலையில் எழுந்து சுடச் சுட காப்பி குடிக்கிறோம். அந்த காப்பியில் உள்ள பாலுக்கு அந்த மாடு எவ்வளவு துன்பப் பட்டிருக்கும். நீங்கள் அந்த தீங்கை செய்யவில்லை. ஆனால், உங்களால், அந்த தீங்கு நிகழ்கிறது. தெரியாமல் மற்றொருவர் காலை மிதித்து விடுகிறோம். நடக்கும் போது தெரியாமல் எறும்பு, போன்ற சின்ன உயிர்கள் மிதிபட்டு சாகின்றன. வேண்டும் என்றா செய்தோம். தெரியாமல் நிகழ்வது. 


இப்படி மூன்று விதமாக இன்னை செய்தல் நிகழ்கிறது. 


அது பற்றி மேலும் மிக விரிவாக சிந்திக்க இருக்கிறோம். 




Monday, January 25, 2021

கம்ப இராமாயணம் - அறிவை நோக்கினான்

 கம்ப இராமாயணம் - அறிவை நோக்கினான் 


எங்கு சென்று எல்லாம் அடங்க வேண்டும் ? 

புலன்களை அடக்கு அடக்கு என்கிறார்களே,  அடக்கி எங்கே வைப்பது? ஆசையை அடக்கு என்றால் எதில் அடக்கி வைப்பது. புலியை அடக்கு என்றால் அடக்கி ஏதோ ஒரு கூண்டில் தானே போட்டு வைக்க வேண்டும். 


சித்திரகூட பர்வத மலை பக்கம். அந்தி நேரம். இராமனும் சீதையும் தங்க இலக்குவன் குடிசை அமைத்து முடித்து விட்டான். 

இருள் கவியும் நேரம். 


ஆண் குரங்கும், பெண் குரங்கும், பகல் எல்லாம் ஆடி ஓடி களைத்துப் போய், எந்த மரப் பொந்தில் சென்று இரவில் தூங்கலாம் என்று பார்த்துக் கொண்டு இருக்கின்றன. 

ஆண் யானையும், பெண் யானையும் தாங்கள் சென்று ஓய்வு எடுக்கும் இடத்தை நோக்கிச் சென்றன. 

பகலில் இரை தேடச் சென்ற பறவைகள் நீண்ட தொலைவில் உள்ள தங்கள் கூட்டை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தன. 

இராமன் இவற்றை எல்லாம் பார்க்கிறான். தன் புலன்களை ஒடுக்கி அறிவில் நிறுத்துவதைப் பற்றி எண்ணிக் கொண்டு இருக்கிறான். 


பாடல் 

மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின;

தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின;

நிந்தை இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின;

அந்தியை நோக்கினான், அறிவை நோக்கினான்.


பொருள் 

(please click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_25.html


மந்தியும் கடுவனும்  = ஆண் மற்றும் பெண் குரங்குகள் 

மரங்கள் நோக்கின; = ஓய்வு எடுக்கும் மரத்தை நோக்கின 

தந்தியும் பிடிகளும் = ஆண் யானையும் பெண் யானையும் 

தடங்கள் நோக்கின; = தாங்கள் செல்ல வேண்டிய பாதையை நோக்கின 

நிந்தை இல் = குற்றமற்ற  

சகுந்தங்கள் = பறவைகள்

நீளம் நோக்கின; = தாங்கள் செல்ல வேண்டிய தூரத்தை நோக்கின 

அந்தியை நோக்கினான் = மாலைப் பொழுதை நோக்கினான் 

அறிவை நோக்கினான். = அறிவை நோக்கினான் 


எப்படி விலங்குகள் எல்லாம் தங்கள் கூட்டை அடைவதைப் பற்றி சிந்திதனவோ, அது போல, அலை பாய்ந்த மனதை அறிவில் அடக்கும் வழி பார்த்து நின்றான் இராமன். 


முதல் தரம் படிக்கும் போது சற்று தவறுதலாக படித்து விட்டேன். 


ஆண் குரங்கு பெண் குரங்கைப் பார்த்தது...மரத்தில் சென்று இரவை கழிக்கலாம் என்று. 

ஆண் யானைகள் தங்கள் இணையான பெண் யானைகளை அழைத்துக் கொண்டு சென்றன.


பறவைகளும் கூடு நோக்கிச் சென்றன. 


இராமன் மாலை நேரத்தைப் பார்த்தான், சீதையைப் பார்த்தான் என்று நினைத்து, "அறிவை நோக்கினான்" என்பதை "அரிவையை நோக்கினான்" என்று வாசித்து விட்டேன். 


ஒரு வேளை அது தான் சரியோ என்று பல பதிப்புகளை சரி பார்த்தேன். நான் வாசித்தது தவறு தான். 


ஏனோ, அந்த கவி ஓட்டம் சரியாக இருப்பதாக எனக்குப் படுகிறது. 


"அந்தி நோக்கினான் அரிவை நோக்கினான்" அரிவை என்றால் பெண். 


என்று தான் இருக்க வேண்டும் என்று என் மனம் சொல்கிறது. 


உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ, அதை எடுத்துக் கொள்ளுங்களேன்.


Saturday, January 23, 2021

ஆசாரக் கோவை - தானறிந்த வழியில் தெய்வம் தொழு

ஆசாரக் கோவை - தானறிந்த வழியில் தெய்வம் தொழு 


நம் மனம் கால நிலை வேறுபாட்டால் மாறும் இயல்பு உடையது. நீங்கள் உன்னிப்பாக கவனித்தால் தெரியும். காலையில் உங்கள் மனம் எப்படி இருக்கிறது, மதியம் எப்படி இருக்கிறது, மாலை மற்றும் இரவில் எப்படி இருக்கிறது என்று. நேரம் மாற மாற மனம் மாறும். அது கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதால் நாம் அந்த மாற்றத்தை உணர்வது இல்லை. 


சில காரியங்களை,சில நேரத்தில் தான் செய்ய முடியும். மாற்றிச் செய்தால் என்ன என்று கேட்கலாம். செய்யலாம். அவ்வளவு சிறப்பாக இருக்காது. 


நீங்கள் இதை சோதித்துப் பார்க்கலாம். ஒரு நாள் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து , குளித்து, நல்ல உடை உடுத்துப் பாருங்கள். உங்கள் மனம் எப்படி இருக்கிறது என்று. இன்னொரு நாள் காலை பத்து பதினொரு மணிவரை தூங்கி விட்டு எழுந்து, குளிக்காமல் உணவு உண்டு, இருந்து பாருங்கள். உங்கள் மனம் எப்படி வேலை செய்கிறது என்று. வித்தியாசம் தெரியும். 


சரி, இப்படி காலத்தோடு சேர்ந்து மனம் மாறுகிறது என்றால், அது சட்டென்று மாறாது. ௮ மணிக்கு மேல் இந்த மன நிலை என்று மாறாது. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்குப் போகும். 


அப்படி போகும் போது, இந்த இடைப்பட்ட நேரத்தில் கொஞ்சம் குழப்பம் வரும்.  அந்த இடைப்பட்ட நேரங்களை சந்தி நேரம் என்பார்கள். இரண்டு கால நேரங்கள் சந்திக்கும் இடம். அந்த நேரத்தில் மனதில் சற்று குழப்பம் வரும். அந்தக் குழப்பத்தை போக்க, இறை வழிபாடு செய்யச் சொன்னார்கள். 


சந்தி நேரத்தில் செய்யும் வழிபாட்டுக்கு "சந்தியா வந்தனம்" என்று பெயர். 


மனதை ஒரு நிலைப் படுத்தி, ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு அதை மென்மையாக கொண்டு செல்லும் வழி. 


இருள் விலகி பகல் வரும் ஒரு சந்தி - அதிகாலை. 

பகல் விலகி இருள் வரும் நேரம் - மாலைச் சந்தி 

இந்த இரண்டு நேரங்களும் சற்று அழுத்தம் வாய்ந்தவை. எனவே இந்த நேரங்களில் வழிபாடு செய்யச் சொன்னார்கள். 


பாடல் 


நாளந்தி கோறின்று கண்கழீஇத் தெய்வத்தைத்

தானறியு மாற்றாற் றொழுதெழுக அல்கந்தி

நின்று தொழுதல் பழி.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_23.html


(pl click the above link to continue reading)


நாளந்தி = நாள் அந்தி = அதி காலையில் 

கோறின்று = கோல் தின்று  என்றால் குச்சியால் பல் துலக்கி 

கண்கழீஇத் = முகம் கழுவி 

தெய்வத்தைத் = தெய்வத்தை 

தானறியு மாற்றாற் றொழுதெழுக = தான் அறியும் ஆற்றான் தொழுது எழுக. இது மிக முக்கியமானது. உனக்கு தெரிந்த மாதிரி தெய்வத்தை தொழு. அந்த புத்தகத்தில் சொல்லி இருக்கிறது, அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று செய்யாமல். உன் மனதுக்கு பிடித்த மாதிரி, உன் அறிவுக்கு எட்டிய வரை தெய்வத்தைத் தொழு. 


 அல்கந்தி = மாலையில் 

நின்று தொழுதல் பழி. = நின்று தொழக் கூடாது. அமர்ந்து இறை வழிபாடு செய்ய வேண்டும். நாள் எல்லாம் வேலை செய்த பின் உடல் களைத்துப் போய் இருக்கும். நின்று செய்தால், மேலும் சோர்வு வரும். மனம் சலிக்கும். எப்படா இந்த வழிபாடு முடியும் என்று. எனவே, நன்றாக அமர்ந்து, நிதானமாக வழிபாடு செய்ய வேண்டும். 


உள் உணர்வை கூர்மையாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். நம் மனம் எப்படி வேலை செய்கிறது என்று அவ்வப்போது கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி உள் உணர்வு கூர்மையானால், வழிபாடு செய்யும் போது என்ன நிகழ்கிறது என்று தெரியும். இல்லை என்றால், ஏதோ எல்லோரும் செய்கிறார்கள் நானும் செய்கிறேன் என்று வாய் ஏதோ முணுமுணுக்கும், கை ஒரு வேலை செய்யும், கண் ஒரு பக்கம் போகும், காது வேறு எதையோ கேட்டுக் கொண்டிருக்கும். அது அல்ல வழிபாடு. 


வழிபாட்டுக்கு முன்னும் பின்னும் உள்ள மன நிலையின் வேறுபாடு தெரியாவிட்டால், பின் எதற்கு வழிபாடு செய்வது? செஞ்சாலும் ஒண்ணு தான், செய்யாவிட்டாலும் அதே தான் என்றால், எதற்கு நேரத்தை விரயம் பண்ண வேண்டும்? 


கூர்ந்து கவனியுங்கள். 


உணவு உண்ட பின் உங்கள் மனம் எப்படி இருக்கிறது என்று கவனியுங்கள். 


காப்பி குடித்தவுடன் மனம் மாறும். 


எண்ணையில் பொறித்த இனிப்பு பலகாரம் சாப்பிட்டால் மனம் மாறும். 


பழைய சோற்றில் எருமை தயிர் விட்டு சாப்பிட்டால் மனம் மாறும். 


அந்த மாற்றத்தை கவனிக்கத் தெரிய வேண்டும். 


தெரிந்தால், இந்த ஆசாரங்களின் தேவை மற்றும் அர்த்தம் புரியும். இல்லை என்றால்....என்ன சொல்ல..ஏதோ ஒரு பொழுது போக்கு என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான். 



Friday, January 22, 2021

திருக்குறள் - வலியார் முன் தன்னை நினைக்க

 திருக்குறள் - வலியார் முன் தன்னை நினைக்க 


பாடல்களுக்கு உரை எழுதுவது, விளக்கம் சொல்லுவது என்பது பெரிய கலை. அதற்கு மிக விரிந்த நூல் அறிவு வேண்டும். எந்த நூலுக்கு உரை சொல்கிறோமோ அந்த நூல் எழுதப்பட்ட கால கட்டத்தின் பழக்க வழக்கங்கள், நெறி முறைகள், மொழி பயன்பாடு இவை எல்லாம் தெரிந்து இருக்க வேண்டும். 


அவை எல்லாவற்றையும் விட முக்கியம், மூல நூல் எழுதிய ஆசிரியனின் நோக்கம் புரிந்து எழுத வேண்டும். 

திருக்குறள் போன்ற நூல்களுக்கு உரை சொல்லுவது என்றால், திருவள்ளுவர் என்ன நினைத்தார், அவர் நோக்கம் என்ன என்று அறிந்து உரை சொல்ல வேண்டும். இல்லை என்றால், அது உரை சொல்பவனின் நோக்கமாகத்தான் இருக்குமே அல்லாமல், வள்ளுவர் சொல்ல வந்ததாக இருக்காது. 


திருவள்ளுவர் என்ன நினைத்தார் என்று அறிந்து கொள்ள வேண்டுமானால், அவர் அளவு படித்து இருக்க வேண்டும். நடக்கிற காரியமா அது? 

எனவே, நான் முதலிலேயே சொல்லி விடுகிறேன். நான் சொல்லுவது என் கருத்துக்களே அன்றி வள்ளுவரின் கருத்து அல்ல. வள்ளுவரின் கருத்துகளை  அறிய வேண்டும் என்றால், பரிமேல் அழகர் போன்ற அறிஞர்களின் உரைகளை படிக்க வேண்டும். 

அருளுடைமை பற்றி சொல்ல வந்த வள்ளுவர், எப்படி இன்னொரு உயிரின் மேல் அருள் செலுத்துவது என்று சொல்லித் தருகிறார்.


அருள் செய்ய வழி முறை, வேறு எங்காவது கேட்டது உண்டா?  


பாடல் 


வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியார்மேல் செல்லும் இடத்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_93.html

(click the above link to continue reading)


வலியார்முன் = நம்மை விட வலியவர்கள் முன் 

தன்னை நினைக்க  = நம்மை நினைத்துக் கொள்ள வேண்டும் 

தான் தன்னின் = நாம் நம்மை விட 

மெலியார்மேல்  = மெலிந்தார் மேல் 

செல்லும் இடத்து = செல்கின்ற போது 


மெலிந்தவர்கள் என்றால் எடை குறைந்தவர்கள் என்று அர்த்தம் அல்ல. வலிமை குன்றியவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். 

இந்தக் குறள் பற்றி பல முறை யோசித்துப் பார்த்து இருக்கிறேன். நாம் யாரை வருத்தி இருக்கிறோம். நாம் யாரை மிரட்டி, பணிய வைத்து இருக்கிறோம். ஒரு உயிரைக் கூட கொன்று தின்றதில்லை. அப்படியானால், நான் மிக அருள் உடையவனா? அப்படி ஒன்றும் தெரியவில்லை. பின் இந்தக் குறளை எப்படி புரிந்து கொள்ளுவது?


பல தரம் காரில் போகும் போது, சில பிச்சைகாரர்கள் பிச்சை கேட்டு நிற்பார்கள். கண்டும் காணாத மாதிரி போய் விடுவேன். அவர்கள் மேல் ஒரு பக்கம் பரிதாப உணர்வு ஏற்பட்டாலும், ஏதோ ஒரு வெறுப்பும் இருக்கிறது. வேலை செய்து பிழைத்தால் என்ன?  இந்தப் பணத்தை வைத்து குடிப்பான், இப்படி பிள்ளைகளை பழக்கி பிச்சை எடுக்க வைக்கிறார்கள், இதை எல்லாம் நாம் ஊக்கு விக்கக் கூடாது என்றெல்லாம் மனம் நினைக்கும். 


நான் ஒன்றை வேண்டி ஒருவரிடம் நின்று, அவர் என்னை இப்படி உதாசீனம் செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்கிறேன். அவர் மனதில் ஆயிரம் சிந்தனைகள் ஓடலாம். கடைசியில் நான் நிராகரிக்கப் பட்டேன் என்பது தான் என்னைப் பொறுத்தவரை நிகழ்ந்த உண்மை. வலிக்கும் தானே. 

எனக்கு வேண்டியது பணமோ பொருளோ இல்லாமல் இருக்கலாம். ஒரு அன்பு, ஒரு கனிவான சொல், ஒரு ஆறுதல் வார்த்தை, ஒரு அரவணைப்பு என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

நான் வேண்டி நின்ற அவர் என்னை பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டால், எவ்வளவு வலிக்கும். அதை நினைத்துப் பார்த்தால், இந்த போக்குவரத்து நிறுத்தங்களில்  பிச்சை எடுப்பவர்களை பார்த்து முகம் திருப்பிக் கொண்டு செல்லத் தோன்றுமா? 


நமக்கும் ஒரு தேவை வரும். நாமும் யாரிடமாவது சென்று நிற்போம். அப்போது நம் நிலைமை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தால் , நமக்கு மற்றவர்கள் மேல் அருள் தானே பிறக்கும். 


வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மேல்,   காவல்காரன் மேல், வண்டி ஓட்டுபவர் மேல், என்று அனைத்து மக்கள் மீது அருள் சுரக்கும்.


நமக்கு அப்படி ஒரு காலம் வராது என்று நினைக்கக் கூடாது. 


சிவ பெருமானை மண்டை ஓட்டில் பிச்சை எடுக்க வைத்தது காலம். 

உலகளந்த பெருமாளை, கூனி குறுகி வாமன உருவில் மூன்று அடி நிலம் பிச்சை எடுக்க வைத்தது காலம். 


மும்மூர்த்திகளின் கதி இதுவென்றால், நாம் எம்மாத்திரம். 


நினைத்துப் பாருங்கள். 


அருள் தானே சுரக்கும். யார் மேலும் ஒரு அன்பும், அருளும் பிறக்கும். 

வள்ளுவர் இதை நினைத்துச் சொன்னாரா என்று தெரியாது. என் மனதில் பட்டதைச் சொல்லுகிறேன். 






இராமானுசர் நூற்றந்தாதி - பின்னையும் பார்க்கில் நலமுளதே ?

 இராமானுசர் நூற்றந்தாதி - பின்னையும் பார்க்கில் நலமுளதே ?


சில் பள்ளிக்கூடங்கள், அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களை மட்டுமே தங்கள் பள்ளியில் சேர்த்துக் கொள்வார்கள். படிக்கிற பிள்ளை எங்கும் படிக்கும். பின், பரீட்சை எல்லாம் முடிந்த பின், தங்கள் பள்ளி நூறு சதவீதம் வெற்றி பெற்று விட்டதாக விளம்பரம் செய்வார்கள். இதில் அவர்கள் பெருமை என்ன இருக்கிறது? ஒன்றும் இல்லை. 


அது போல, 


ஆரவமுதனார் சொல்கிறார், 


"இராமானுசரே, நான் ஒன்றுக்கும் உதவாதவன். என்னிடம் ஒரு நல்ல குணமும் இல்லை. இனி மேலும் நல்லது செய்ய வாய்ப்பு இல்லை. ஆனால், அதற்காக நீர் எனக்கு அருள் செய்யாமல் போனால், மற்றவர்கள் உம்மை பற்றி என்ன நினைப்பார்கள்? நல்லவர்களுக்கு மட்டும் தான் நீர் அருள் செய்வீர். எம்மை போன்ற கதி அற்றவர்களை நீர் கண்டு கொள்ள மாட்டீர் என்று உம்மைத்தான் பரிகாசம் செய்வார்கள். எனவே, நீர் எனக்கு அருள் செய்வதுதான் உமக்கு நல்லது"


என்று நகைச்சுவைப் பட இராமானுசரின் பெருமையை எடுத்துக் கூறுகிறார். 


அதாவது, சரண் என்று அடைந்து விட்டால், அது யாராக இருந்தாலும், அவர்களுக்கு அருள் செய்வது இராமனுசரின் இயல்பு என்று எளிமையாக கூறுகிறார். 


பாடல் 


என்னையும் பார்த்தென் இயல்வையும் பார்த்து,எண்ணில் பல்குணத்த

உன்னையும் பார்க்கில் அருள்செய்வ தேநலம் அன்றியென்பால்

பின்னையும் பார்க்கில் நலமுள தே?உன் பெருங்கருணை

தன்னையென் பார்ப்பர் இராமா னுச! உன்னைச் சார்ந்தவரே?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_22.html

Click the above link to continue reading


என்னையும் பார்த்தென் = என்னையும் பார்த்து என் 

இயல்வையும் பார்த்து = என் குணத்தையும் பார்த்து 

எண்ணில் = எண்ண முடியாத 

பல்குணத்த = பல குணங்களை கொண்ட 

உன்னையும் = உன்னையும் (இராமானுசரையும்) 

பார்க்கில் = பார்த்தால் 

அருள் செய்வதே நலம் = நீர் எனக்கு அருள் செய்வதே நல்லது 

அன்றியென்பால் = மாறாக, என் பால் 

பின்னையும் பார்க்கில் = மேலும் பார்த்துக் கொண்டே இருந்தால் 

நலமுள தே? = நல்லாவா இருக்கு 

உன் பெருங்கருணை = உன்னுடைய பெரும் கருணை 

தன்னையென் பார்ப்பர் = தன்னை என்ன என்று நினைத்துப் பார்ப்பார்கள்? 

இராமா னுச! = இராமானுசரே 

உன்னைச் சார்ந்தவரே? = உன்னுடைய அடியவர்கள் 


பணக்காரனுக்குத் தான் உதவி செய்வேன் என்றால், அது உதவியா? அவனுக்கு தேவை இல்லை. பிச்சை காரனுக்குத்தான் பசிக்கும், உணவு வேண்டும். சீ சீ , நீ பிச்சைகாரன், உனக்கு எல்லாம் உதவி செய்ய முடியாது என்றால் நம்மைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? 


ஆரவமுதனார் சொல்கிறார்,


என்னைப் பார்த்து

என் இயல்பைப் பார்த்து 

பின்னும் பார்த்து 


என்று. 


அதாவது, நான் இப்போது மோசம். இனிமேல் ஏதாவது நல்லது செய்யக் கூடிய வாய்ப்புள்ள குணம் ஏதாவது இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. சரி, இப்ப இல்லை, பின்னாளில் வருமா என்றால் வராது. 


எனவே, இராமானுசரே, பேசாமல் யோசிப்பதை விட்டு விட்டு எனக்கு நீர் அருள் செய்யும்.இல்லை என்றால், எனக்கு ஒன்றும் இல்லை. உம் அடியவர்கள் உம்மைப் பற்றி வேறுவிதமாக நினைப்பார்கள் என்கிறார். 


அருமையான பாடல். எவ்வளவு மோசமான ஆளுக்கும் அருள் செய்வார் என்பது பொருள். 


மூல நூலை தேடித் பிடித்துப் படியுங்கள். தேன் சொட்டும் பாடல்கள்.