Sunday, April 11, 2021

திருக்குறள் - நெறி நின்றார் நீடு வாழ்வார் - பாகம் 2

திருக்குறள் - நெறி நின்றார் நீடு வாழ்வார்  - பாகம் 2


பாடல் 


பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/2_11.html


(click the above link to continue reading)


பொறி = கண், மூக்கு, வாய், செவி, உடல் என்ற புலன்கள் 


வாயில் = வழியாக 


ஐந்தவித்தான் = ஐந்தையும் அவித்தான் 


பொய்தீர் = பொய் தீர்ந்த 


ஒழுக்க = ஒழுக்க 


நெறிநின்றார் = வழியில் நின்றார் 


 நீடுவாழ் வார் = நீண்ட நாள் வாழ்வார்கள் 


ஐந்தவித்தான் = ஐந்து + அவித்தான். 


யார் அந்த ஐந்தையும் அவித்தான்? முனிவர்களா ? துறவிகளா? ரிஷிகளா? 


எவ்வளவோ பெரிய முனிவர்கள், துறவிகள் எல்லாம் ஒரு நொடியில் கவிழ்ந்து இருக்கிறார்கள்.  ஒரு நொடியில் காமம் அவர்களை புரட்டிப் போட்டு இருக்கிறது. ஒரு நொடியில் கோபம் அவர்களை ஆட்கொண்டிருக்கிறது. 


பின் யார் அந்த "ஐந்தையும் அவித்தான்" என்ற கேள்விக்கு பரிமேலழகர் "இறைவன்" என்று பொருள் சொல்கிறார். 


அது எப்படி சொல்லலாம்? அவருக்குத்  தோன்றியதை அவர் சொல்லலாமா? அவருக்கு அந்த உரிமையை அவருக்கு கொடுத்தது யார்? 


பரிமேலழகர் மனம் போன படி உரை எழுதவில்லை. 


எப்படி என்று பார்ப்போம். 


"வெயிலில் போய் விட்டு, வியர்க்க விறு விறுக்க வந்தவுடன், குளிர்ந்த நீரைக்  குடித்தால் தொண்டை கட்டும்" என்று அம்மா சொல்கிறாள். 


பையன் அம்மா சொல்வதை கேட்காமல் குடிக்கிறான். தொண்டை கட்டிக் கொண்டது. 


ஏன், தொண்டை கட்டிக் கொண்டது ? அம்மா சொன்னதினாலா? அம்மா சொல்லாவிட்டாலும் தொண்டை கட்டி இருக்கும் அல்லவா? பின் அம்மா செய்தது என்ன? இந்த மாதிரி சூழ்நிலையில் நீர் குளிர்ந்த நீர் குடித்தால் தொண்டை கட்டும் என்ற உண்மையை எடுத்துச் சொன்னது தான். 


அந்த உண்மை எங்கிருந்து வந்தது? அது இயற்கையில் உள்ளது. 


யார் அதை உண்டாகியது? பல உண்மைகளை, அறங்களை, தர்மங்களை உண்டாக்கியது யார்?  


"ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க  நெறி" என்ற சொல் தொடருக்கு ஐந்தவித்தானது பொய் தீர் ஒழுக்க நெறி என்கிறார். 


"ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு' என்பது போல." என்பது உரை. 


இரண்டு சொற்களை இணைக்க சில சொற்கள் இருக்கின்றன. அவற்றிற்கு இடைச் சொற்கள் என்று பெயர். 


பல இடைச் சொற்கள் இருக்கின்றன. அதில் ஒன்று "வேற்றுமை உருபு" என்பது. 


ஐ, ஆல் , கு, இன், அது கண் என்பன. 


இது இரண்டாவது வேற்றுமை உருபில் இருந்து ஆரம்பிக்கும். 


ஐ - இரண்டாவது உருபு 

அது - ஆறாவது உருபு 

கண் - ஏழாவது உருபு 


"ஆண்டை ஆறனுருபு" என்றார்.  ஆறாவது உருபு "அது" என்பது. 


"ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க  நெறி" என்ற சொல் தொடருக்கு ஐந்தவித்தா"னது" பொய் தீர் ஒழுக்க நெறி என்கிறார்.


பொய் தீர்ந்த ஒழுக்க நெறி யாருடையதாக  இருக்கும்? உயர்ந்த நெறிகளை யார் உருவாக்கி இருக்க முடியும்?  அதற்கு உரியவர் யாராக இருக்க முடியும்?


இறைவன் என்பதே பதிலாக இருக்க முடியும். வேறு யார் பெயரையாவது சொல்ல முடியுமா ?


அது கூட உறுதியாக சொல்ல முடியுமா? வள்ளுவர் சொல்லி இருக்கிறார், கம்பர் சொல்லி இருக்கிறார், வியாசர் சொல்லி இருக்கிறார்....எப்படி இறைவன் சொன்னான் என்று சொல்ல முடியும் ? 


அதையும் பரிமேலழகர் விளக்குகிறார். 



Saturday, April 10, 2021

திருக்குறள் - நெறி நின்றார் நீடு வாழ்வார் - பாகம் 1

 திருக்குறள் - நெறி நின்றார் நீடு வாழ்வார்  - பாகம் 1 


பாடல் 


பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/1_10.html


(click the above link to continue reading)


பொறி = கண், மூக்கு, வாய், செவி, உடல் என்ற புலன்கள் 


வாயில் = வழியாக 


ஐந்தவித்தான் = ஐந்தையும் அவித்தான் 


பொய்தீர் = பொய் தீர்ந்த 


ஒழுக்க = ஒழுக்க 


நெறிநின்றார் = வழியில் நின்றார் 


 நீடுவாழ் வார் = நீண்ட நாள் வாழ்வார்கள் 


பொதுவாக உரை சொல்வது என்றால், ஐந்து புலன்களையும் அடக்கி, ஒழுக்கமாக வாழ்ந்தால், நீண்ட நாள் வாழலாம் என்று தான் சொல்ல முடியும். 


ஹை ஜாலி, ரொம்ப ஈசியான குறளாக இருக்கிறதே என்று நினைப்போம், பரிமேலழகரின் உரையை படிக்கும் வரை. 


"பொறி வாயில் ஐந்து அவித்தான் - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது; 


பொய் தீர் ஒழுக்க நெறி நின்றார்-மெய்யான ஒழுக்க நெறியின்கண் நின்றார்,

நீடு வாழ்வார் - பிறப்பு இன்றி எக்காலத்தும் ஒரு தன்மையராய் வாழ்வார்.

(புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று. ஒழுக்க நெறி ஐந்தவித்தானால் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு செய்யுட் கிழமைக்கண் வந்தது. 'கபிலரது பாட்டு' என்பது போல. இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது)


கொஞ்சம் புரிந்தும், கொஞ்சம் புரியாத மாதிரியும் இருக்கும்.  அதை விரித்து சிந்திக்கும் போது தான் பரிமேலழகரின் அறிவின் ஆழம் புலப்படும். 


நமக்கு இருக்கும் ஆசை ஒன்றா, அல்லது பலவா? 


அழகான பெண்ணைப் பார்த்தால், மீண்டும் பார்க்க வேண்டும் என்று ஆசை வருகிறது. நல்ல இடங்களை சினிமாவில் பார்த்தால், அந்த இடத்துக்குப் போய் நேரில் பார்க்க ஆசை வருகிறது.  இது கண் வழி வரும் ஆசை. 


அது போல, நல்ல சுவையான உணவை ருசிக்க ஆசை, வெயில் நேரத்தில் குளிர்ந்த பானம் குடிக்க ஆசை என்று நாக்கு சம்பந்தப் பட்ட ஆசை.


இப்படி ஒவ்வொரு புலனுக்கும் ஒரு ஆசை இருக்கிறது தானே. 


இப்போது சொல்லுங்கள், ஆசை ஒன்றா ? பலதா?


பரிமேலழகர் சொல்கிறார், ஆசை ஒன்று தான்.  ஆனால், அது ஒவ்வொரு புலன் வழியாகவும் போகும் போது அது வேறு வேறு விதமான ஆசைகளாகத் தோன்றுகிறது என்கிறார். 


"புலன்கள் ஐந்து ஆகலான், அவற்றின்கண் செல்கின்ற அவாவும் ஐந்து ஆயிற்று"


அவா ஒன்றுதான். அது ஐந்து புலன்கள் வழியே செல்லும் போது, ஐந்தாகத் தோன்றுகிறது. 


சரி, இந்த ஐந்தவித்தான் (ஐந்து + அவித்தான்) என்பது யார்?  ஒழுக்க நெறி என்றால் என்ன? படித்து அதன் படி நடக்கலாம் என்றால், அது எங்கே எழுதி வைத்து இருக்கிறது?


அடுத்த ப்ளாகில் சிந்திப்போம். 




Friday, April 9, 2021

திருக்குறள் - இருவினையும் சேரா

திருக்குறள் - இருவினையும் சேரா 


பாடல் 

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு


பொருள் 


இருள்சேர்= மயக்கத்தைப் பற்றி வரும் 

இருவினையும்  = நல் வினை, தீ வினை என்ற இரண்டு வினைகளும் 

சேரா = சேராது 

இறைவன் = இறைவன் 

பொருள்சேர் புகழ்  = பொருள் சேர்ந்த புகழை 

புரிந்தார் மாட்டு = விரும்பியவர்களிடம் 


இது ஒரு சிக்கலான குறள். 

https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_9.html

click the above link to continue reading



மயக்கத்தை பற்றி வரும் இரு வினையும் சேராது என்கிறார். தீ வினை சேராது என்றால் சரி.  ஏன் நல் வினையும் சேராது என்கிறார்? அப்படி என்றால் இறைவன் அடியவர்கள், நல்லது ஒன்றும் செய்ய மாட்டார்களா? அல்லது நல்லது செய்தால் அதன் பலன் அவர்களுக்குக் கிடைக்காதா? 


"இருள் சேர் இருவினை" :நாம் பல காரியங்கள் செய்கிறோம். எது நல்லது, எது கெட்டது என்று நமக்கு உறுதியாகத் தெரியுமா ? 


இருள் இருக்கிறதே, அது பொருள்களை அறிய விடாது. வீட்டுக்குள் நுழைகிறோம். மின்சாரம் போய் விடுகிறது. எது எங்கே இருக்கிறது என்று தெர்யுமா? முட்டி மோதிக் கொள்வோம் அல்லவா? எது பாதை, எது தூண், எது நாற்காலி என்று தெரியாது. பாதை என்று நினைத்துப் போய் சுவற்றில் முட்டிக் கொள்வோம்.


அது போல, அறியாமை என்ற இருள் சேர்ந்து விட்டால்,எது நல்லது , எது கெட்டது என்று தெரியாது. 


இது ஒரு பொருள். 


கெட்டது செய்யக் கூடாது சரி. நல்லது செய்யலாம் தானே என்று கேட்டால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. 


கெட்டது செய்தால், பாவம் பெருகி அதை அனுபவிக்க மீண்டும் பிறந்து துன்பம் அனுபவிக்க வேண்டும். 


நல்லது செய்தால், புண்ணியம் சேர்ந்து அதை அனுபவிக்க மீண்டும் பிறந்து இன்பம் அனுபவிக்க வேண்டும். 


நல்லது செய்தாலும் பிறவி உண்டு. கெட்டது  செய்தாலும் பிறவி உண்டு. பிறவி என்று வந்து விட்டால், அதில் உள்ள பிறவித் துயர்கள் உண்டு. 


பிறவித் துயர்களாவன , தன்னால் வரும் துன்பம், இயற்கையால் வரும் துன்பம், இறைவனால் வரும் துன்பம் என்றுர் முன் சிந்தித்தோம். 


மீண்டும் மீண்டும் நம்மை பிறவித் துயரில் ஆழ்துவதால் அதை இருள் சேர் இருவினை என்றார். 


"அறம் பாவம் என்னும் அருங் கயிற்றால் கட்டி" என்பார் மணிவாசகர். 



சரி, இதில் இருந்து எப்படி விடுபடுவது?


இந்த இரண்டு வினைகளும் சேராது. யாரைச் சேராது என்றால் 


"பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு" 


பொருள் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்று ஒரு பொருளும் உண்டு. 


அந்தப் பாடல் வரிக்கு பொருள் என்ன என்று கேட்கலாம். 

அந்தப் பாடல் வரிக்கு அர்த்தம் என்ன என்றும் கேட்கலாம். 


உலகியலில், சில மனிதர்களை அர்த்தம் இல்லாமல் புகழ்ந்து கொண்டு இருப்பார்கள். "நீங்க தான் கடவுள், நீங்க தெய்வம், அறிஞர், புலவர், கவிஞர் " என்றெல்லாம் புகழ்வார்கள். அவை எல்லாம் பொருள் இல்லாத புகழ். அர்த்தம் இல்லாத வெறும் ஆராவாரச் சொற்கள். 


பொருள் உள்ள புகழ் என்றால் அது ஆண்டவனின் புகழ் ஒன்றையே குறிக்கும். 


அப்படி, அந்த ஆண்டவனின் புகழை விரும்புவார்க்கு, 


புரிதல் என்றால் இடை விடாது சொல்லுதல் என்று உரை செய்கிறார் பரிமேலழகர்.


முந்தைய இரண்டு குறள்களில் மனதால் வழிபாடு செய்வது பற்றிக் கூறினார். 


இங்கே, வாக்கால் வழிபடுவது பற்றிக் கூறுகிறார். 


"புகழ் புரிந்தார் மாட்டு" என்பதில் புரிந்தார் என்பதற்கு "இடைவிடாது சொல்லுதல்" என்று அர்த்தம் எழுதுகிறார்.


இறைவன் புகழை இடைவிடாமல் சொல்லிக் கொண்டு இருந்தால், மயக்கத்தை தரும் இரு வினைகளும் நம்மை அண்டாது.


பிறப்பு அறு பட்டால், வீடு பேறு தான். 









Thursday, April 8, 2021

கம்ப இராமாயணம் - பாலை வருணனை - பாகம் 3

கம்ப இராமாயணம் - பாலை வருணனை - பாகம் 3 


கடல் பார்த்து இருகிறீர்கள் தானே. எவ்வளவு தண்ணீர் இருக்கிறது அதில். யுகம் யுகமாக மழை பெய்கிறது. கடல் மேலும், நிலத்திலும் மழை பொழிகிறது. அந்த நீர் எல்லாம் கடலில் தான் போய் சேர்கிறது. இருந்தும், கடல் ஏன் நிரம்பி வழிவதில்ல? கடல் நிரம்பி ஊருக்குள் ஏன் வருவது இல்லை? இத்துனூண்டு கரையா அவ்வளவு பெரிய கடலை கட்டிக் காக்கிறது?


நம் புராணங்களில் இதற்கு ஒரு காரணம் சொல்கிறார்கள். சரி தவறு அப்புறம் யோசியுங்கள். 


கடலுக்கு நடுவில், குதிரை முக வடிவில் ஒரு தீ இருக்கிறதாம். அந்த தீ-க்கு வடவாக்கினி என்று பெயர். அந்தத்  தீ, கடல் நீர்  அளவுக்கு அதிகமாக சேர்ந்து விட்டால், நீரை சூடாக்கி, ஆவி ஆக்கி விடுமாம். 


(அது போல நம் வயிற்ருக்குள்ளும் ஒரு தீ இருக்கிறதாம். நாம் போடும் உணவை அது தான் எரிக்கிறது என்று சொல்வார்கள்). 


"அந்தப் பாலைவனத்தில் கொடுமையான வெப்பம் தான் ஆட்சி செய்து கொண்டு இருந்தது. அந்த வெப்பத்தின் சூடு தாங்காமல் காகங்களும், யானைகளும் கரிந்து சாம்பலாகிப் போய் கிடந்தன. அது எப்படி இருக்கிறது என்றால், மேகம் எல்லாம் வெயிலில் கரிந்து எரிந்து சம்பாலகிப் போய் கிடப்பதை போல இருந்தது. அந்த வெப்பம் எங்கிருந்து வந்தது என்றால், கடல் நடுவே இருந்த வடவாக்கினியில் இருந்து வந்தது" 


என்கிறார் கம்பர். 


பாடல் 


ஏக வெங் கனல் அரசிருந்த. காட்டினில்

காகமும் கரிகளும் கரிந்து சாம்பின;-

மாக வெங்கதிர் எனும் வடவைத் தீச் சுட.

மேகமும் கரிந்து இடை வீழ்ந்த போலுமே.



பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/3_8.html


(click the above link to continue reading)



ஏக = வேறு எங்கும் காணமுடியாத, தனித் தன்மை கொண்ட 


வெங் கனல் = கொடுமையான கனல் , வெப்பம் 


அரசிருந்த. காட்டினில் = அரசு செய்து வரும் காட்டில் 


காகமும் = காகமும் 


கரிகளும் = யானைகளும் 


கரிந்து சாம்பின;- = கரிந்து சாம்பாலாகிப் போயின 


மாக வெங்கதிர்  எனும்  =  பபெரிய வெம்மையான கதிர் என்று சொல்லப் படக் கூடிய 


வடவைத் தீச் சுட. வடவை என்ற தீச் சுட 


மேகமும் கரிந்து = மேகல எல்லாம் கரிந்து 


 இடை வீழ்ந்த போலுமே. = இடையில் இங்கே கீழே விழுந்து கிடப்பதைப் போல இருக்கிறது 


காகம், யானை என்று சொன்னதன் மூலம் எல்லா பறவைகளும், எல்லா மிருகங்களும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். 


தமிழ் இலக்கணத்தில் சாதி ஒருமை என்று ஒன்று உண்டு. 


பசு பால் தரும் என்றால் ஒரே ஒரு பசுதான் பால் தருமா? ஒரு பசுவைப் பற்றிச் சொன்னதால் அது எல்லா பசுக்களுக்கும் பொருந்தும் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். 


மாம்பழம் இனிக்கும் என்றால் எல்லா மாம்பழமும் இனிக்கும் என்று அர்த்தம். 


இதற்கு சாதி ஒருமை என்று பெயர். 


காகம் இறந்தது என்றால் காகம் போன்ற அனைத்து பறவைகளும் இறந்தது என்று பொருள் கொள்ள வேண்டும். 


பாலை நிலத்தையும் இரசித்து பாடல் எழுதி இருக்கிறான் கம்பன். இரசிக்கிற மனம் வந்து விட்டால் எதைத்தான் இரசிக்க முடியாது. 


நாம் நல்லவற்றைக் கூட இரசிப்பது இல்லை அல்லது குறைவு. 


இரசிக்க, அனுபவிக்க எவ்வளவு இருக்கிறது. 



Wednesday, April 7, 2021

கம்ப இராமாயணம் - பாலை வருணனை - பாகம் 2

 கம்ப இராமாயணம் - பாலை வருணனை - பாகம் 2 


நம்மை யாராவது ஏமாற்றி விட்டால் நமக்கு எப்படி கோபமும், எரிச்சலும் வரும். நம்பி வந்த நம்மை கழுத்தறுத்தால் நம் மனம் எப்படி பொங்கி எழும். "எவ்வளவோ நம்பி இருந்தேன்...அவன் இப்படி செய்து விட்டானே என்று மனம் பொருமும் அல்லவா? அது எத்தனை நாள் ஆனாலும் ஆறாது. அதை நினைக்கும் போதெல்லாம் உடம்பு சூடாகும் அல்லவா. 


நேரடியாக மோதினால் பரவாயில்லை. நம்மிடம் பேசி, நம் வாயில் இருந்து வார்த்தைகளை வரவழைத்து பின் அதைக் கொண்டு போய் சொல்லக் கூடாத இடத்தில் சொல்லி நம்மை மாட்டி விட்டால் நமக்கு எப்படி இருக்கும். 


அப்படி இருந்தது பாலை நிலத்தின் வெம்மை என்கிறார் கம்பர். 


"போர்க் களத்தில் அம்பும், வேலும் மழை போல் பொழிந்து போர் செய்யும் திறன் இல்லா எதிரிகள் வஞ்சனையால் ஒரு வீரனை தோற்கடித்து அவனுடைய மானத்துக்கு பங்கம் வரும்படி செய்தால், அவன் மனம் எப்படி வேதனையில் துடித்து, பொங்கி எழுமோ, எப்படி காலம் காலமாக அந்த நம்பிக்கை துரோகம் மனதில் நெருப்பை கிளப்பிக் கொண்டு இருக்குமோ, அது போல காலம் எல்லாம் ஆறாமல் சூடாக இருந்தது பாலை நிலம்" 


என்று பாலையை வர்ணிக்கிறார். 


பாடல் 


விஞ்சுவான் மழையின்மேல் அம்பும்

    வேலும் படச்

செஞ்சவே செரு முகத்து அமர்

    செயும் திறன் இலா

வஞ்சர் தீ வினையினால் மான

    மா மணி இழந்து

அஞ்சினார் நெஞ்சுபோல் என்றும்

    ஆறாது அரோ,


பொருள் 


(click the above link to continue reading)

விஞ்சு  = விரிந்த 


வான்  மழையின்மேல் = வானத்தில் இருந்து விழும் மழை போல 


அம்பும்  வேலும் படச்= அம்பும் வேலும் மேனியில் பட 


செஞ்சவே = சிவந்த அல்லது செம்மையான 


செரு முகத்து = போர்க் களத்தில் 


அமர் செயும்  = போர் செய்யும் 


திறன் இலா = திறமை இல்லாத 


வஞ்சர் = வஞ்சகர்கள் 


தீ வினையினால் = சூழ்ச்சியால் 


மான மா மணி இழந்து = மானம் என்ற பெருமை மிகுந்த மணியை இழந்து நிற்கும் வீர்கள் 


அஞ்சினார் = அஞ்சி நிற்கும்  அவர்களின் 


நெஞ்சுபோல் =மனம் போல 



என்றும்= என்றும் 


ஆறாது அரோ, = குறையாமல் இருந்தது (சூடு)




Tuesday, April 6, 2021

நாலடியார் - விடுக்கும் வினை உலந்தக் கால்

 நாலடியார் - விடுக்கும் வினை உலந்தக் கால் 


பிறர் துன்பம் கண்டு நாம் வருந்துகிறோம். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் நினைப்போம். ஆனால் செய்ய மாட்டோம். என்ன காரணம்? 


இப்படி எல்லோருக்கும் உதவி செய்து , உதவி செய்து நமக்கு பிற்காலத்தில் செல்வம் இல்லாமல் போய் விட்டால் என்ன செய்வது? நமக்கு ஒரு தேவை என்றால் யார் வந்து உதவி செய்வார்கள்? என்ற பயத்தில், மனதில் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், செய்யாமல் விட்டு விடுகிறோம். 


"தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும்" என்று பேசாமல் இருந்து விடுகிறோம். 


அதாவது போகட்டும். சிலர், நிறைய செல்வம் இருந்தாலும், அதை அனுபவிக்க மாட்டார்கள். இப்பவே எல்லாவற்றையும் செலவழித்து விட்டால் என்ன பிற்காலத்தில் என்ன செய்யவது என்று மேலும் மேலும் சேமித்து வைத்துக் கொண்டே இருப்பார்கள். 


பிறருக்கும் கொடுக்க மாட்டார்கள்.  தானும் அனுபவிக்க மாட்டார்கள். செல்வத்தை எப்படியாவது சேமித்து வைத்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். 


செல்வத்தை இறுகிப் பற்றிக் கொண்டால் அது நம்மிடம் நிற்குமா?


நம் தமிழில் உள்ள அற நூல்கள் அனைத்தும் செல்வத்தின் நிலையாமை பற்றி கூறுகின்றன. 


"நீ என்னத்தான் இறுக்கிப் பிடித்தாலும், போகிற காலத்தில் செல்வம் உன்னை விட்டுப் போய் விடும்"  


என்று அனைத்து அற நூல்களும் கூறுகின்றன.


எனவே, செல்வம் கையில் இருக்கும் போது அனுபவியுங்கள், அல்லது பிறர் துன்பம் துடைக்க பயன்படுத்துங்கள் என்கிறது கீழ் கண்ட நாலாடியார்:


பாடல் 



நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார்;

கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;

இடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்

விடுக்கும் வினையுலந்தக் கால்.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_46.html


(click the above link to continue reading)



நடுக்குற்றுத் = நடுக்கம் அடைந்து 


தற்சேர்ந்தார் = தன்னைச் சேர்ந்தவர்கள் (உறவினர், நண்பர்) 


துன்பந் துடையார்; = துன்பத்தை துடைக்க மாட்டார்கள் 


கொடுத்துத் = பிறருக்கு கொடுத்து 


தான் துய்ப்பினும் = தான் அனுபவித்தாலும் (செலவழித்தாலும்) 


ஈண்டுங்கால் ஈண்டும்; = வரும் போது வரும் 


இடுக்குற்றுப் =  இறுக்கிப் 


பற்றினும் = பிடித்தாலும் 


நில்லாது செல்வம் = செல்வம் நிலைத்து நிற்காது 


விடுக்கும் = விட்டுப்  போய் விடும் 


வினையுலந்தக் கால். = நல் வினை தீர்ந்த பின் 


எவ்வளவுதான் தான தர்மம் செய்தாலும், செலவழித்தாலும் வரும் காலத்தில் வந்து கொண்டே இருக்கும்.  எவ்வளவுதான் இறுக்கிப் பிடித்தாலும், போகிற காலத்தில் செல்வம் போய் விடும். 



திருக்குறள் - வேண்டுதல் வேண்டாமை இலான்

 திருக்குறள் - வேண்டுதல் வேண்டாமை இலான் 


பாடல் 

வேண்டுதல்வேண் டாமை யிலானடி சேர்ந்தார்க்

கியாண்டு மிடும்பை யில (04)


சீர் பிரித்த பின் 


வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல. 


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_6.html

(click the above link to continue reading)



வேண்டுதல் = விரும்புதலும் 


வேண்டாமை  = வெறுப்பும் 


இலான் = இல்லாதவன் 


அடி = அடியை 


சேர்ந்தார்க்கு = இடை விடாது நினைப்பவர்களுக்கு 


யாண்டும் = எப்போதும் 


இடும்பை இல.  = துன்பம் இல்லை 


விருப்பும் வெறுப்பும் இல்லாதவன் திருவடியை அடைந்தவர்க்கு ஒரு போதும் துன்பம் இருக்காது. 


பரிமேலழகர் கை பிடித்துக் கொண்டு அவர் சொல்லும் உரையை அறிவோம். 


நமக்கு ஏன் துன்பம் வருகிறது? 


நமக்குத் துன்பம் இரண்டு காரணங்களால் வருகிறது. 


ஒன்று எதன் மீதாவது பற்று இருந்தால் அதனால் துன்பம் வரும். 


அல்லது

எதன் மீதாவது வெறுப்பு இருந்தால், அதனால் துன்பம் வரும். 


உலகில் உள்ள அத்தனை துன்பங்களுக்கும் இந்த பற்றும், வெறுப்பும் தான் காரணம். 


இந்த இரண்டும் இல்லாவிட்டால்? ஒரு துன்பமும் இல்லை. 


ஆனால், அவற்றை நம்மால் எளிதில் விட முடியாது. அதற்கு ஒரே வழி, அந்த இரண்டும் இல்லாத ஒருவனை பற்றிக் கொள்ள வேண்டியது. 


இறைவனிடம் பற்றும் இல்லை; வெறுப்பும் இல்லை. 


"இடும்பை இல" :  துன்பம் இல்லை. துன்பம் என்றால் என்ன?என்ன மாதிரி துன்பம்? தலைவலி, காய்ச்சல், உடம்பு வலி, பணம் இல்லாத குறை, வேலை கிடைக்காமல் இருப்பது போன்ற துன்பங்களா?  இந்த மாதிரி துன்பங்களை துடைக்க  இறைவன் வர வேண்டுமா? 


துன்பம் என்பதற்கு பிறவித் துன்பங்கள் என்று பொருள் கொள்கிறார்.  அது எப்படி பிறவித் துன்பங்கள் என்று சொல்ல முடியும்? பரிமேலழகர் அவர் இஷ்டப்படி பொருள் சொல்லலாமா ?


அவர் மேலும் விளக்குகிறார். 


"யாண்டும்" = எப்போதும். எப்போதுமே துன்பம் இருக்காது என்றால் இந்தப் பிறவியில் மட்டும் அல்ல. எந்தப் பிறவியிலும் துன்பம் இருக்காது என்பதால் துன்பம் என்பது பிறவித் துன்பம் என்று பொருள் கொள்கிறார்.


"பிறவித் துன்பம்" என்றால் என்ன?  சும்மா பிறந்து இறப்பது துன்பமா? இல்லை. பிறவித் துன்பம் என்பது மூன்று விதங்களில் நிகழ்வது. 


" பிறவித்துன்பங்களாவன: தன்னைப்பற்றி வருவனவும், பிற உயிர்களைப்பற்றி வருவனவும், தெய்வத்தைப்பற்றி வருவனவும் என மூவகையான் வருந்துன்பங்கள்."


இவற்றை வட மொழியாளர்கள், 

தன்னைப்பற்றி வரும் துன்பங்களை ஆத்யாத்மிகம்  என்றும், ; 

பிற உயிர்களைப்பற்றி வரும் துன்பங்களை  ஆதிபௌதிகம் என்றும்;

தெய்வத்தைப் பற்றி வரும் துன்பங்களை  ஆதிதைவிகம் என்றும் 

கூறுவர்.


இதில், ஆத்யாத்மிகம் என்பது இரண்டு வகைப்படும். ஒன்று உடலைப் பற்றியது - காய்ச்சல், தலைவலி, போன்ற உடல் சம்பத்தப்பட்ட துன்பங்கள். வேறு யாரும் வந்து ஒன்றும் செய்வதில்லை. நம் தலை வலித்து நமக்குத் துன்பம் தரும். பின்னது, மனம் சம்பந்தப் பட்டது. காமம், கோபம், பொறாமை போன்ற தீய குணங்களால் வருவது. 


சீதை மேல் ஆசைப்படு , அவளை தூக்கிக் கொண்டு வா என்று இராவவணனிடம் சொன்னது யார். அவள் அழகாக இருக்கிறாள் என்று சூர்பனகை சொன்னாள். இருந்து விட்டுப் போகட்டுமே என்று இவன் சும்மா இருக்க வேண்டியது தானே. மனதால் வரும் துன்பம். 


ஆதி பௌதிகம் என்பது தீய மனிதர்கள், விலங்குகள் போன்றவற்றால் வருவது. 


ஆதி தைவிகம் என்பது புயல், மழை, காற்று போன்றவற்றால் வருவது. 


 முந்தைய ப்ளாகில் கூறியது போல் "சேர்ந்தார்" என்று இங்கு குறிப்பிடுகிறார். 


இலானடி சேர்ந்தார். 


சேர்ந்தார் என்றால் இடைவிடாமல் மனதில் நினைப்பவர். 


யார் ஒருவர் வேண்டுதலும், வெறுத்தலும் இல்லாத இறைவனின் திருவடிகளை இடைவிடாது நினைக்கிறார்களோ அவர்களுக்கு பிறவித் துன்பம் வராது. 


மனதால் வழிபடுவதால் வரும் நன்மைகளை மேற்கூறிய இரண்டு குறள்களில் கூறிவிட்டார். 


அடுத்தது....