நாலாயிர திவ்ய பிரபந்தம் - தீதில் நன்னெறி
உலகமே மின் அணு இயலால் சூழப் பட்டு இருக்கிறது. நம்மை அறியாமலேயே இந்த மின் வலை நம்மை சுற்றி பின்னப் பட்டு இருக்கிறது.
நல்லாரோடு சேர வேண்டும், தீயவர்களை காண்பதும் தீது, தீயவர்களோடு பழகுவதும் தீது, அவர்களைப் பற்றி சிந்திப்பது கூட தீது என்று சொல்லப் பட்டது.
இப்போதெல்லாம் நாம் தீயவர்களைத் தேடிப் போக வேண்டாம். அவர்கள் நம் வீட்டுக்குள், நாம் அழையாமலேயே வந்து விடுகிறார்கள். தீயவற்றை நம் மனதில், நம் மூளையில் விதைத்து விட்டுச் செல்கிறார்கள்.
டிவி. எங்கோ நடக்கும் தீய செயல்கள் எல்லாம் நம் வீட்டில் கொண்டு வந்து கொட்டுகிறது. விலாவாரியாக, நொடிக்கு நொடி அந்த தீய செயல்களை நம் வீட்டில் அரங்கேற்றிக் காட்டுகிறது. எங்கோ வெடித்த வெடி, நம் வீட்டு ஹாலில் நடக்கிறது. எங்கோ நடந்த கொலை, நம் கண் முன் அரங்கேறுகிறது. அத்தனை குப்பைகளையும் வாரிக் கொண்டு வந்து நம் வீட்டில் கொட்டி விட்டுப் போகிறது. நம்மை அறியாமலேயே அவற்றை நாம் உள் வாங்குகிறோம்.
whatsapp. எத்தனையோ குழுக்களில் நாம் உறுப்பினராக இருப்போம். அறிவிலிகள், எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள், அறிவியல் கண்ணோட்டம் இல்லாதவர்கள், மூட நம்பிக்கை மலிந்தவர்கள், மற்றவர்கள் மேல் பொறாமையும், வெறுப்பும் கொண்டவர்கள் இருப்பார்கள். அவர்கள் நாளும் தங்கள் எண்ணங்களை இந்த குழுக்களில் பகிர்ந்து கொண்டே இருப்பார்கள். அவற்றை படித்து படித்து நம் மனத்திலும் அந்த களங்கத்தின் சுவடுகள் படியத் தொடங்கும்.
கணணி (computer), மடிக் கணணி (laptop) இவற்றின் மூலம் நம்மிடம் வந்து சேரும் வக்கிரங்கள் கணக்கில் அடங்காதவை.
தீயவர்களின் எண்ணங்கள், நாம் கேட்காமலேயே வந்து கொட்டிக் கொண்டிருக்கிறது நம் வீட்டில், நம் உள்ளங் கையில், நம் மடியில். சுவாசிக்கும் காற்று தூய்மையாக இல்லாவிட்டால், நாம் அந்த நச்சுக் காற்றை சுவாசிப்போம். நாம் விருபுகிறோமோ இல்லையோ, அந்த நசுக் காற்று நம் உடலை பாதிக்கும். அது போல இந்த நஞ்சுகள் நம் மனதை பாதிக்கும்.
இவர்களை விட்டு விலகி நிற்கிறேன். உன் பற்றே பற்று என்கிறார் ஆண்டவனிடம் குலசேகர ஆழ்வார்.
பாடல்
தீதில் நன்னெறி நிற்கஅல் லாதுசெய்
நீதி யாரொடும் கூடுவ தில்லையான்
ஆதி ஆய னரங்கன்அந் தாமரைப்
பேதை மாமண வாளன்றன் பித்தனே
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/05/blog-post_6.html
(please click the above link to continue reading)
தீதில் = தீமை இல்லாத
நன்னெறி = நல்ல வழிகளில்
நிற்க அல்லாது = நிற்க முடியாமல்
செய் நீதி யாரொடும் = நல்ல வழியில் நிற்க முடியாமல் தீய வழியில் செல்கின்ற அவர்களோடு
கூடுவ தில்லையான் = சேர்வது இல்லை யான்
ஆதி = முதல், தொடக்கம்
ஆய = ஆன
அரங்கன் = திருவரங்கன்
அந் தாமரைப் = தாமரை மலரில் வசிக்கும்
பேதை = பெண் (திருமகள்)
மாமண வாளன்றன் = பெரிய, சிறந்த மணவாளன் (திருமால்)
பித்தனே = அவனுக்கு நான் பித்தனே. அவன் மேல் பைத்தியமாக இருக்கிறேன்
தீயவற்றை விட்டால்தான் நல்லவற்றைப் பற்ற முடியும்.
நாளும் தீமைகளோடு பழகி, அதில் ஒரு ஆர்வமும், உருசியும் வந்து விடுகிறது. பின், அது தீமை என்று கூட நமக்குத் தெரிவதில்லை.
தேவையல்லாத குழுக்களில் இருந்து விலகுங்கள்.
தேவை இல்லாத குப்பைகளை டிவியில் பார்க்காதீர்கள்.
கணனியில் நல்லவற்றை பாருங்கள். கேளுங்கள்.
தீயவை விலக, நல்லவை தானே வந்து சேரும்.
வாழ்த்துக்கள்.