Sunday, June 20, 2021

திருக்குறள் - செய்வதும், ஒழிவதும்

 திருக்குறள் - செய்வதும், ஒழிவதும் 


அறம் செய்கிறேன், கூடவே கொஞ்சம் அறம் அல்லாததையும் செய்கிறேன். என்ன செய்வது? வாழ்க்கை நடைமுறை அப்படி இருக்கிறது. கொஞ்சம் கூட பாவம் செய்யாமல் வாழ முடியாது போல் இருக்கிறது. 


முழுக்க முழுக்க அறமே செய்து வாழ முடியுமா?  நடை முறை வாழ்க்கைக்கு அது ஒரு நல்ல வழிகாட்டியா? 


கொஞ்சம் செம்பு கலந்தல்தானே தங்கத்தில் ஆபரணம் செய்ய முடியும். 


இது ஒரு நடைமுறை சிக்கல். 


அதற்கும் பதில் சொல்ல வேண்டும். வள்ளுவர் சொல்கிறார். 


"ஏதாவது செய்வதாய் இருந்தால், அறம் செய். முடியாவிட்டால் பழிச் செயல்களை செய்யாமல் இரு" என்கிறார். 


பாடல் 


செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி


பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_20.html


(please click the above link to continue reading)



செயற்பால = செய்யத் தகுந்தது 


தோரும் = ஓரும் என்பது அசைச் சொல். அர்த்தம் கிடையாது. 


அறனே ஒருவற்கு = அறம்தான் ஒருவருக்கு 


உயற்பால = விலக்க வேண்டியது 


தோரும் = ஓரும் என்பது அசைச் சொல். அர்த்தம் கிடையாது. 


பழி = பழிதரும் செயல்கள் 



செல்வதானால் அற வழியில் செல். இல்லையா, பழி வரும் பாதையில் போகாமளாவது இரு. 


"அறனே ஒருவற்கு" என்பதில் உள்ள ஏகாரம் தேற்ற ஏகாரம். அதைத் தவிர வேறு எதையும் செய்யக் கூடாது.  அறத்தைத் தவிர வேறு எதையும் செய்யக் கூடாது.


இந்தக் குறளோடு அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரம் முடிவடைகிறது. 


இந்த அதிகாரத்தோடு பாயிரவியல் முடிவடைகிறது. 


கடவுள் வாழ்த்து 

வான் சிறப்பு 

நீத்தார் பெருமை 

அறன் வலியுறுத்தல் 


என்ற இந்த நான்கு அதிகாரங்களும் பாயிரவியலில் அடங்கும். 


பாயிரம் என்பது நூலுக்கு முன்னுரை போன்றது. 


கடவுள் - அவர் கருணையால் பொழியும் மழை, அதில் இருந்து பிறக்கும் இயற்கை, இயற்கையின் ஊடே பொதிந்து கிடக்கும் அற இரகசியங்கள், அந்த இரகசியங்களை கண்டு சொல்லும் நீத்தார், அந்த நீத்தாரது பெருமை, அவர் சொல்லும் அறத்தின் முக்கியத்வம். 


இவற்றை இது வரை பார்த்தோம். 



நேரம் இருப்பின், இதுவரை வாசித்தவற்றை ஒரு மறுவாசிப்பு செய்து பாருங்கள். மனதில் ஆழப் பதியும். 


இனி, இந்த அறம் எவ்வாறு இல்லறம், துறவறம் எனப்  பிரிகிறது, அவற்றின் கூறுகள், முறைகள் என்ன என்பன பற்றி சிந்திக்க இருக்கிறோம். 




Saturday, June 19, 2021

திருக்குறள் - அறத்தால் வருவதே இன்பம்

 திருக்குறள் - அறத்தால் வருவதே இன்பம் 


உயிர்கள் ஒன்றில் இருந்து மற்றது பல விதங்களில் மாறுபாடு கொண்டுள்ளன. ஒரே வீட்டில் பிறந்த பிள்ளகைளிடம் கூட பல வேற்றுமைகள் இருக்கின்றன. 


இருந்தும், உலகம் முழுவதிலும், அனைத்து உயிர்களிடத்தும் ஒரு ஒற்றுமை உண்டு. உயிர் என்று சொல்லும் போது இங்கே மனிதர்களை மட்டும் அல்ல, விலங்குகள், பறவைகள், செடி, போன்றவையும் தான். 


அது என்ன என்றால் "இன்பத்தை நாடுவது".


இன்பம் வேண்டாம் என்று சொல்லும் ஒரு உயிர் இருக்கிறதா? அனைத்து உயிர்களும் இன்பம் நோக்கியே வாழ்கையை நடத்துகின்றன. 


இன்பம் எப்படி வரும் ? 


பணத்தால்,பதவியால், படிப்பால், அதிகாரத்தால் வருமா?


இல்லை.  இன்பம் வர ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. 


அறத்தான் வருவதே இன்பம் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்

புறத்த புகழு மில


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_19.html


(click the above link to continue reading)



அறத்தான் வருவதே இன்பம் = அறத்தால் வருவதே இன்பம் 


மற் றெல்லாம் = மற்றவை எல்லாம் 


புறத்த = துன்பம் 


புகழு மில  = புகழும் இல்லாதான 


மேலோட்டமான பொருள் இது. 


இனி, பரிமேலழர் கூறும் ஆழ்ந்த நுண்ணிய பொருளை காண்போம்.


முதலாவது, அறத்தான் என்றால் இல்லறத்தால் வருவதே இன்பம் என்கிறார். இல்லறம் என்று குறளில் இல்லை. இல்லறம் என்று எப்படி உரை எழுதலாம். ஏன் துரவறத்தால் இன்பம் வராதா? வள்ளுவர் இல்லறம் என்று சொல்லவில்லையே என்று கேட்டால், அதற்கு விளக்கம். 


வள்ளுவர் தன் நூலை அறம், பொருள், இன்பம் என்று மூன்றாகப் பிரித்து இருக்கிறார். அதில் இன்பம் என்பது தலைவனும் தலைவியும் தம்முள் இரண்டற கலந்து அனுபவிக்கும் இன்பத்தையே சொல்கிறார். அது பின்னால் வரப் போகிறது. 


அந்த இன்பம் இல்லறத்தில் தான் கிடைக்கும். எனவே, இங்கே அறம் என்று சொன்னது "இல்லறம்" தான் என்று பொருள் கொள்கிறார். 


இரண்டாவது, ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து இன்பம் அனுபவிக்க இல்லறம் தேவை இல்லையே. அதற்கு வேறு எவ்வளவோ வழிகள் இருக்கின்றனவே என்று விதண்டாவாதம் பேசினாலும், அதற்கும் வள்ளுவர் விடை தருகிறார். 


அப்படி வரும் இன்பங்கள், முதலில் இன்பம் போல் தோன்றினாலும், அவை இன்பம் அல்ல. துன்பமே என்கிறார். 


துன்பம் என்ற சொல்லே குறளில் இல்லையே? என்றால். 


ஆம், துன்பம் என்ற சொல் குறளில் இல்லை, ஆனால் "புறத்த" என்ற சொல் இருக்கிறது. 


இன்பத்திற்கு புறத்த என்றால் இன்பத்தில் சேராத, தள்ளி நிற்கும், விலகி நிற்கும், சம்பந்தமில்லாத என்று அர்த்தம். இன்பத்தில் இல்லை என்றால் அது துன்பம் தானே.


மேலும், "புகழும் இல" என்கிறார். 


இல்லறத்துக்கு வெளியே ஒருவன் இன்பம் காண்பானாகில் அது துன்பத்தில் முடிவது மட்டும் அல்ல, அவனுக்கு அது புகழும் சேர்க்காது.


பரத்தையரிடம் போவது, மாற்றான் மனைவியை அடைவது என்பதெல்லாம் முதலில் இன்பம் போல் தோன்றினாலும் பின் துன்பத்தைத் தந்து, அவன் புகழையும் அழிக்கும். 


பெரிய பதவிகளில் இருப்பவர்கள், கண நேரம் சபலப்பட்டு எவ்வளவு பெரிய துன்பத்தில் விழுந்து விடுகிறார்கள், அவர்கள் சேர்த்த பேரும் புகழும் அழிந்து போகிறதை நாம் எவ்வளவோ முறை கண் கூடாக பார்க்கிறோம். 




பின்னால் வரும் "இன்பம்" என்ற சொல்லுக்கு "காம நுகர்ச்சி" என்று பொருள் எடுக்கிறார். 


மூன்றாவது , "அறத்தான்" என்று ஏன் கூறினார்? அறத்தால் என்று தானே சொல்லி இருக்க வேண்டும். "ஆன்' என்ற உருபு "உடனிகழ்ச்சிகண்" வந்தது என்கிறார். 


உடன் நிகழ்வது என்றால் இரண்டும் ஒன்றாக நிகழ்வது. 


இராமனோடு இலக்குவன் வந்தான் என்று கூறும் போது எப்படி ஓடு ஒருபு எவ்வாறு இருவரும் ஒன்றாக வந்தார்கள் என்று சொல்கிறதோ அது போல 'ஆன்' உருபும் ஒன்றாக நிகழ்வதை குறிக்கும். 


இல்லறத்தில் இருப்பதும், இன்பம் அனுபவிப்பதும் ஒன்றாக நிகழும். அறம் செய்வது இப்போது. இன்பம் வருவது பின்னொரு நாளில் என்று அல்ல. கூடவே நிகழும். நிகழ வேண்டும். 


நான்காவது, பலர் நினைக்கலாம், அறம் அல்லாத வழியில் செல்பவர்கள் இன்பமாகத்தானே இருக்கிறார்கள். நாமும் அந்த வழியில் சென்றால் என்ன என்று. வள்ளுவர் தெளிவாக சொல்கிறார். அறத்தான் வருவதே இன்பம். மற்றவை எல்லாம் இன்பம் போலத் தோன்றினாலும் அவை இன்பம் அல்ல.


இலஞ்சம் வாங்குவது...அந்த நேரத்துக்கு அது இன்பம் போலத் தோன்றும். மாட்டிக் கொண்டால்? வேலை போகும். மானம் போகும். சிறைக்குச் செல்ல வேண்டும். புகழ் போய் விடும். 


அதிகாரத்தைப் பயன் படுத்தி தனக்கு கீழே பணி புரியும் பெண்களை தன் வசப்படுத்தலாம். அதிகாரம் போன பின் அவை வெளிவரும்.  வரும் போது எவ்வளவு அவப் பெயரை கொண்டு வரும் ? தினம் செய்திகளில் பார்கிறோமே.


அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்

புறத்த புகழு மில


யார் சொல்லித் தருவார்கள்?

Friday, June 18, 2021

பெரிய புராணம் - சிந்தையில் நின்ற இருள்

 பெரிய புராணம் - சிந்தையில் நின்ற இருள் 


நம் வீடாகவே இருந்தாலும், இருட்டில் மாட்டிக் கொண்டால் எது எங்கு இருக்கிறது என்று தெரியாமல் முட்டி மோதிக் கொள்வோம்.  கண் இருக்கிறது. பார்வை இருக்கிறது. அறிவு இருக்கிறது. தெரிந்த இடம்தான். இருந்தும், இருட்டில் ஒன்றும் தெரியாது அல்லவா. 


அது போல, உலகம் இருக்கிறது. நமக்கு அறிவு இருக்கிறது.  தெரிந்த இடம்தான். பழகிய இடம்தான். இருந்தும், அறியாமை என்ற இருள் இருந்தால் என்ன செய்கிறோம், எப்படி செய்கிறோம் என்று தெரியாமல் தப்புத் தவறாக செய்து காயப் பட்டுக் கொள்வோம். 

  

புற இருளை நீக்க சூரியன் இருக்கிறது. அக இருளை நீக்க ?


அறியாமையை நீக்க இந்த பெரிய புராணம் என்ற நூலை எழுதுகிறேன் என்று நூல் காரணம் சொல்கிறார். 


பாடல் 


இங்கு இதன் நாமம் கூறின், இவ் உலகத்து முன்னாள்

தங்கு இருள் இரண்டில், மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற

பொங்கிய இருளை, ஏனைப் புற இருள் போக்கு கின்ற

செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_18.html


(Please click the above link to continue reading)


இங்கு = இங்கு 


இதன் = இதன் 


நாமம் கூறின் = இந்த நூலின் பெயரை கூறினால் 


இவ் உலகத்து = இந்த உலகில் 


முன்னாள் = முன்பு 


தங்கு இருள் = தங்கிய இருள் 


இரண்டில் = இரண்டில் 


மாக்கள் = சிந்திக்கும் திறம் அற்றவர்களின் 


சிந்தையுள் சார்ந்து நின்ற = சிந்தையுள் சார்ந்து நின்ற 


பொங்கிய இருளை = பொங்கிய இருளை 


ஏனைப் = மற்ற 


புற இருள் போக்கு கின்ற = புறத்தில், வெளியில் உள்ள இருளை போக்குகின்ற 


செங் கதிரவன் போல் = சிவந்த சூரியனைப் போல 


நீக்கும்= நீக்கும் 


திருத் தொண்டர் புராணம் = திருத் தொண்டர் புராணம் 


என்பாம் = என்று கூறுவோம் 



புற இருளை நீக்குகின்ற சூரியனைப் போல அக இருளை நீக்குகின்ற நூல் இது. இதன் பெயர் திரு தொண்டர் புராணம். 


இது தொண்டர்களைப் பற்றியது. இறைவனைப் பற்றியது அல்ல. 


"சிந்தையுள் சார்ந்து நின்ற பொங்கிய இருள்"  என்று நான்கு அடை மொழி போடுகிறார் சேக்கிழார். 


மனதில் உள்ள இருள் 


மனதை சார்ந்து நிற்கும் இருள். பற்றிக் கொண்டு இருக்கும் இருள். 


நிற்கும் இருள். ஏதோ வந்தோம், போனோம் என்று இருக்காது. நிற்கும் இருள். 


பொங்கும் இருள். நின்றால் மட்டும் போதாது. பொங்கும் இருள். நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கும். 


யோசித்துப் பாருங்கள். ஒரு ஊருக்குப் போக வேண்டும். தவறான பாதையில் போகத் தொடங்கி விட்டீர்கள். எவ்வளவு வேகமாக போனாலும், போய்ச் சேர வேண்டிய இடம் வராது. என்னடா இது இன்னும் வரலியே என்று இன்னும் வேகமாக வண்டியை ஓட்டினால் என்ன ஆகும். சேர வேண்டிய இடத்தை விட்டு மேலும் விரைவாக விலகிச் செல்வோம் அல்லவா?


அது போல, தவறு செய்ய ஆரம்பித்து விட்டால், அது தவறு என்று தெரியாவிட்டால், தொடர்ந்து மேலும் மேலும் அதை செய்து கொண்டே இருப்போம். பழக பழக அது இலகுவாகி விடும். அதிகமகாச் செய்வோம். 


பொங்கிய இருள். 


அப்புறம், அங்கு ஒருவர் வந்து நாம் செல்ல வேண்டிய ஊருக்கு போகும் வழி உள்ள map ஐ நம்மிடம் தருகிறார். அடடா, இப்படி போகனுமா? தெரியாம இந்த வழியில் வந்து விட்டேனே என்று நாம் நம் பாதையை திருத்திக் கொள்வோம் அல்லவா. அது போல, வழிகாட்டி இந்த நூல் என்கிறார். 


அது உண்மையும் கூட. எப்படி என்றால், செல்லும் ஊருக்கு ஒரு வழி அல்ல   64 வழிகளை காட்டுகிறார்.  


நடந்து போனால் இப்படி, இரண்டு சக்கர வாகனம் என்றால் இப்படி, நாலு சக்கர வாகனம் என்றால் இப்படி, பறந்து போவது என்றால் இப்படி என்று 64 வழிகளை காட்டுகிறார். 


நீங்கள் உங்களுக்கு வேண்டிய வழியை தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். 


அது மட்டும் அல்ல, 


வழி தவறி பல பேர் பல இடங்களில் அலைந்து கொண்டு இருப்பார்கள். 


செல்ல வேண்டிய இடம் ஊருக்கு நடுவில் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்.  நீங்கள் அந்த இடத்துக்கு வடக்கில் இருகிறீர்கள் என்றால், உங்களுக்கு வழி சொல்லும் போது தெற்கே போக வேண்டும் என்று சொல்ல வேண்டும். 


அது போல, தெற்கில் ஒருவர் இருந்தால் அவரை வடக்கு நோக்கி போகச் சொல்ல வேண்டும். மேற்கில் இருந்தால் கிழக்கு நோக்கியும், கிழக்கில் இருந்தால் மேற்கு நோக்கியும் போகச் சொல்ல வேண்டும். 


எல்லோருக்கும் ஒரு வழி காட்ட முடியுமா? எல்லோரும் தெற்கே போங்கள் என்றால் சரியாக இருக்குமா. இருக்கும் இடத்ததை வைத்துக் கொண்டு , போகும் இடத்துக்கு வழி சொல்ல வேண்டும். 


எனவே, பல வழிகள் தேவைப் படுகிறது. 


எனவே தான் இது பெரிய புராணம்.  அத்தனை வழிகள். 


மேலும் சிந்திப்போம். 



Thursday, June 17, 2021

திருக்குறள் - வழி அடைக்கும் கல் - பாகம் 2

 

திருக்குறள் - வழி அடைக்கும் கல்  - பாகம் 2 


(இதன் முதல் பகுதியை கீழே உள்ள பதிவில் காணலாம்)

https://interestingtamilpoems.blogspot.com/2021/06/1.html



பாடல் 



வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/2.html


(Please click the above link to continue reading)


வீழ்நாள் = செய்யாது கழியும் நாள் 


படாஅமை  = உளவாகாமல் 


நன்றாற்றின் = நல்லது செய்தால், அறத்தை செய்தால் 


அஃதொருவன் = அந்த செயல் 


வாழ்நாள் = மீண்டும் மீண்டும் வந்து வாழும் நாட்களை 


வழியடைக்கும் கல் = வழி அடைக்கும் கல் 



ஐந்து விதமான குற்றங்களால் வரும் இரண்டு விதமான வினைகளால் உயிர் இந்த உடம்போடு கூடி அந்த அந்த வினைகளது பயனை அனுபவிக்கும். எனவே, அந்தக் காலம் முழுவதும் வாழ் நாள் எனப்பட்டது. 


அது என்ன ஐந்து வித குற்றம், இரண்டு வினை,  வினைப் பயன் ....?


நாளை சிந்திப்போமா?


என்று முந்தைய ப்ளாகில் சிந்தித்த்தோம். 


ஐந்து விதமான குற்றங்கள் என்பன 


அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, மேலும்  வெறுப்பு  என்பவை. 


அவிச்சை என்றால் மயக்கம். நல்லதை தீயவை என்றும் தீயதை நல்லது என்றும் நினைப்பது.  மக்கள் நல்லது எது கெட்டது எது என்று மயங்குகிறார்கள். ரொம்ப போக வேண்டாம், எந்த உணவு நல்லது என்று தேடப் போனால், ஆளாளுக்கு ஒன்று சொல்கிரார்கள். காப்பி குடிப்பது நல்லது என்று கொஞ்ச பேர். இல்லை கெடுதல் என்று கொஞ்சம் பேர். மிதமான அளவு மது குடித்தால் உடம்புக்கு நல்லது என்று சிலர். குடிக்கவே கூடாது என்று சிலர். எது நல்லது, எது தீயது என்று தெரியாமல் குழம்புவது அவிச்சை. 


அகங்காரம் - தான் என்ற செருக்கு. நான் தான் எல்லாம், என்னை விட்டால் ஒன்றும் இல்லை, என்னால் முடியாதது எதுவும் இல்லை என்ற மமதை. 


அவா - அவா என்றால் ஆசை இல்லை. ஒரு பொருளை அடைய நினைக்கும் முயற்சிக்கு அவா என்று பெயர். 


விழைவு அல்லது ஆசை - பெற்ற ஒரு பொருளை பிரிய மனம் இல்லாமல் பற்றிக் கொண்டு இருப்பது. ஆசை ஆசையாக கட்டிய வீடு என்று சொல்லும் போது அதை விட முடியாத பற்று. 


இராமன் காடு போன போது கௌசலை உயிரை விடவில்லை, தசரதன் விட்டான். கோசலை கொண்டது அன்பு. தசரதன் கொண்டது ஆசை. இராமனை பிரிய முடியவில்லை. அது ஆசை.  ஆசை கொல்லும். அன்பு கொல்லாது.


வெறுப்பு - பகைமை பற்றி தோன்றும் உணர்வு. 


இந்த ஐந்து குற்றங்களால் நல்வினை, தீவினை செய்கிறோம். 


நல்வினை செய்தால் புண்ணியம் கிடைக்கிறது. 


தீவினை செய்தால் பாவம் வந்து சேர்கிறது. 


புண்ணியம் சேர்ந்தால்  அதை அனுபவிக்க மறு பிறவியில் இன்பம் கிட்டுகிறது. 

பாவம் சேர்ந்தால் அதை அனுபவிக்க மறு பிறவியில் துன்பம் நிகழ்கிறது. 


எனவே

ஐந்து வித குற்றங்கள். அதில் இருந்து 


இரண்டு வித வினைகள் - நல்வினை, தீவினை. அதில் இருந்து 


இரண்டு விளைவுகள் - புண்ணியம், பாவம். அதில் இருந்து 


இரண்டு அனுபவங்கள் - இன்பம், துன்பம்

நல்வினை - புண்ணியம் - இன்பம் 

தீவினை - பாவம் - துன்பம். 


நல்லது செய்தாலும் பிறவி வரும், தீயது செய்தாலும் பிறவி வரும். 


"அறம் பாவம் எனும் அருங்கயிற்றால் கட்டி" என்பார் மணிவாசகர். இரண்டும் கயிறு தான். இரண்டும் நம்மை இந்த பிறவியோடு கட்டிப் போடும். இதில் இருந்து விடுதலை தராது. 


சரி, அதுக்கு என்னதான் செய்வது? இதில் இருந்து எப்படி மீழ்வது என்றால், அதற்கு ஒரே வழி தொடர்ந்து அறம் செய்வதுதான். 


அந்த அறம் இந்த பிறவி என்ற வழியை அடைக்கும் கல். இதற்கு மேல் போக முடியாது என்று அடைக் கல் வழியை அடைப்பது போல, இனிமேல் பிறக்க முடியாது என்று அறம் உங்கள் பிறவிப் பாதையை அடைக்கும் கல் என்கிறார் வள்ளுவர். 


"வாழ்நாள்" என்ற ஒரு வார்த்தையை எடுத்து வைத்துக் கொண்டு எவ்வளவு விரிவாக உரை செய்கிறார் பரிமேலழகர். 


நம்மால் இதை எல்லாம் சிந்திக்கவாவது முடியுமா? 


அவர் உரை இல்லை என்றால் குறள் நமக்கு புரிந்தே இருக்காது. 


யார் செய்த புண்ணியமோ, இதை எல்லாம் படிக்க, இரசிக்க கொடுத்து வைத்து இருக்கிறோம்.





என்பன. இவற்றை வடநூலார் 'பஞ்சக்கிலேசம்' என்பர். வினை இரண்டு ஆவன : நல்வினை தீவினை என்பன. பயன் இரண்டு ஆவன: இன்பம் துன்பம் என்பன. இதனால் அறம் வீடு பயக்கும் என்பது கூறப்பட்டது.

Wednesday, June 16, 2021

திருக்குறள் - வழி அடைக்கும் கல் - பாகம் 1

 திருக்குறள் - வழி அடைக்கும் கல்  - பாகம் 1 


நாம் ஏதாவது ஒரு நெடுஞ் சாலையில் போய் கொண்டிருக்கும் போது, சில இடங்களில் பழைய பாலம் ஒன்று மிக பழுது பட்டு இருக்கும். அதில் செல்வது ஆபத்து என்பதால் அதன் அருகிலேயே புது பாலம் கட்டி இருப்பார்கள். தவறி யாராவது பழைய பாலத்தின் வழியில் சென்று விடக் கூடாது என்பதற்காக அதன் வழியில் பெரிய பாறைகளை போட்டு அந்த வழியை மூடி இருப்பார்கள். 


அது தான் வழி அடைக்கும் கல். 

அந்த வழியாக போக முடியாது. மாற்றுப் பாதையில் சென்று புதிய பாலத்தை  அடைந்து மேற் கொண்டு செல்ல வேண்டும். 


சில மலைப்பாங்கான இடங்களில், பாறைகள் உருண்டு வந்து பாதையில் விழுந்து விடும். பாதை அடைத்து விடும். மாற்று வழியும் இருக்காது. பின்னாலும் போக முடியாது. 


இது இன்னொரு வகையான வழி அடைக்கும் கல். 


நாம் பிறந்து, வாழ்ந்து, இறந்து, மீண்டும் பிறந்து என்று இந்தப் பாதையில் போய்க் கொண்டே இருக்கிறோம். இந்தப் பாதையை அடைக்கும் கல் ஏதாவது இருக்கிறதா. மீண்டும் பிறவி என்ற ஊருக்குப் போகாமல் தடுக்க ஏதாவது கல்லைப் போட்டு அடைக்க முடியுமா என்றால் முடியும் என்கிறார் வள்ளுவர். 


இடைவிடாமல் செய்யும் அறமே அந்த வழி அடைக்கும் கல் என்கிறார். 


பாடல் 



வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/1.html


(Please click the above link to continue reading)


வீழ்நாள் = செய்யாது கழியும் நாள் 


படாஅமை  = உளவாகாமல் 


நன்றாற்றின் = நல்லது செய்தால், அறத்தை செய்தால் 


அஃதொருவன் = அந்த செயல் 


வாழ்நாள் = மீண்டும் மீண்டும் வந்து வாழும் நாட்களை 


வழியடைக்கும் கல் = வழி அடைக்கும் கல் 


பரிமேலழகர் இல்லாவிட்டால், வாழ்நாள் அடைக்கும் கல் என்பதற்கு வாழ்கையை முடித்து விடும் கல் என்று தவறாக பொருள் கொண்டிருப்போம். 


அதாவது, அறத்தை செய்யாத நாள் என்று ஒன்றே இருக்கக் கூடாதாம். எல்லா நாளும் செய்ய வேண்டும். ஏதோ ஒரு சில நாள், பிறந்த நாள், திருமண நாள், நினைவு நாள் என்று செய்தால் போதாது. அறம் செய்யாத நாள் என்றே ஒரு நாள் இருக்கக் கூடாதாம். 


இந்தப் பாடலுக்கு பரிமேலழகர் தரும் உரை பிரமிப்பைத் தரும். 


ஒருகணம் யோசித்துப் பாருங்கள். இந்தக் குறளில் இதற்கு மேல் என்ன உரை கண்டு விட முடியும் ?


இப்போது பரிமேலழகர் சொல்லும் உரையைக் காண்போம். 



வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்


வாழ்நாள் என்றால் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறார்.  வாழ்நாள் என்றால் இந்தப் பிறவியில் நாம் வாழும் நாள் என்று கொண்டால் அர்த்தம் அனர்த்தமாகப் போய் விடும். இப்பிறவியில் உள்ள வாழ் நாளை அடைக்கும் கல் என்று பொருள் வந்து விடும். 


இருப்பதே கொஞ்ச நாள் தான். அதையும் அடைக்கும் என்றால் எதற்கு அறம் செய்ய வேண்டும்?


வாழ்நாள் என்றால் இந்த உயிர் எத்தனை நாள் வாழுமோ அத்தனை நாள். 


புல்லாகி, புழுவாகி, மரமாகி, பல் மிருகமாகி...எத்தனை எத்தனை பிறவி இருக்கிறதோ அத்தனையும் வாழ்நாள் தான். 


அறம் இந்த வாழ் நாட்கள் மேலும் மேலும் செல்லாமல் அடைக்கும் கல். 


சரி. அப்ப இந்த வாழ்நாளை நீட்டும் கருவி எது. யார் அல்லது எது இந்த வாழ் நாளை நீட்டுகிறது?


அதை செய்யாமல் இருந்தாலே போதுமே? எதுக்கு அனாவசியமாக அறம் எல்லாம் செய்து துன்பப் பட வேண்டும்?


"ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை வினையும் உள்ள துணையும், உயிர் யாக்கையோடும் கூடி நின்று, அவ்வினைகளது இருவகைப் பயனையும் நுகரும் ஆகலான், அந்நாள் முழுவதும் வாழ்நாள் எனப்பட்டது. " என்கிறார். 


ஐந்து விதமான குற்றங்களால் வரும் இரண்டு விதமான வினைகளால் உயிர் இந்த உடம்போடு கூடி அந்த அந்த வினைகளது பயனை அனுபவிக்கும். எனவே, அந்தக் காலம் முழுவதும் வாழ் நாள் எனப்பட்டது. 


அது என்ன ஐந்து வித குற்றம், இரண்டு வினை,  வினைப் பயன் ....?


நாளை சிந்திப்போமா?



Tuesday, June 15, 2021

பெரிய புராணம் - மேன்மையால் கொள்வர்

 பெரிய புராணம் - மேன்மையால் கொள்வர் 


உயர்ந்த நூல்களைப்  படிக்கும் போது நாம், நம் தரத்தை உயர்த்திக் கொள்ள பழக வேண்டும். 


சிலர் பெரிய நூல்களை, உயர்ந்த கருத்துகளை உள்ள நூல்களை எடுத்து வைத்துக் கொண்டு, இதை எழுதியவர் என்ன ஜாதி, என்ன குலம், அதனால்தான் இப்படி எழுதி இருக்கிறார் என்று தங்கள் சிறுமையை நூல்களின் மேல் ஏற்றத் தலைப் படுகிறார்கள். 


மேலும் சிலரோ, இது என்ன எதுகை, என்ன மோனை என்று இலக்கணம் படிக்க இறங்கி விடுகிறார்கள். நூலின் கருத்தை விட்டு விடுகிறார்கள். 


இன்னும் சிலர், தங்களுக்கு பிடிக்காத கருத்துகள் இருந்தால், அந்தப் பகுதி இடைச் செருகலாக இருக்கும் என்று அதை புறம் தள்ளி விடுகிறார்கள்.  புதிதாக ஒரு அறிவும் உள்ளே வரக் கூடாது என்பதில் அப்படி ஒரு பிடிவாதம். 


சேக்கிழார் சொல்கிறார், 


"நான் சொல்லப் போகும் பொருளின் சிறப்புக்  கருதி, நான் சொல்லும் சொல்லின் பொருளைக் கொள்வார்கள் மெய் பொருளை நாடுபவர்கள். என்னுடைய உரை சிறிதாக இருந்தாலும், பொருளின் பெருமை நோக்கி அதைப் பெரிதாக கொள்வார்கள்" 

என்கிறார். 


யாரோ கொஞ்சம் நாயன்மார்கள், ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்தார்கள், பக்தி செய்தார்கள், முக்தி அடைந்தார்கள். அதை தெரிந்து கொண்டு நமக்கு என்ன ஆகப் போகிறது. நமக்கு இருக்கு ஆயிரம் கவலை.  ஞானசம்பந்தர் அழுதால் என்ன, பார்வதி வந்து பால் தந்தால் என்ன என்று நினைக்கலாம். 


கோவிலுக்குப் போகிற கூட்டம் போலத்தான். 


சிலர் பக்தியோடு போவார்கள், சிலர் அன்பினால், நன்றியால் போவார்கள், சிலர் தங்கள் துக்கத்தை சொல்லி முறையிட போவார்கள், சிலர் அங்கே தரும் சுண்டல், பொங்கல் வாங்கப் போவார்கள். 


சுண்டல் வாங்கப் போனாலும், நாளடைவில் அவர்களும் பக்தி நோக்கி நகர வாய்ப்பு இருக்கிறது. 


பக்தி, இறைவன், முக்தி போன்றவற்றில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், தமிழின் இனிமை கருதி படியுங்கள். 


சொல்லின் ஆழம், கருத்தின் செறிவு, சொல்லும் அழகு...இவற்றை கருதி கூட வாசிக்கலாம். 


யாருக்குத் தெரியும், எந்த பாதை எங்கே பிரியும் என்று. 


பாடல் 


செப்ப லுற்றா பொருளின் சிறப்பினால்

அப்பொ ருட்குரை யாவரும் கொள்வரால்

இப்பொ ருட்கென் னுரைசிறி தாயினும்

மெய்ப்பொ ருட்குரி யார்கொள்வர் மேன்மையால்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_15.html


(please click the above link to continue reading)


செப்ப லுற்றா  = கூறிய 


பொருளின் = பொருளின் 


சிறப்பினால் = உயர்வால் 


அப்பொ ருட்குரை = அந்த பொருளுக்கு உரை 


யாவரும் கொள்வரால் = எல்லோரும் கொள்வார்கள் 


இப்பொ ருட்கு = இந்தப் பொருளுக்கு 


என் னுரை = என்னுடைய உரை 


சிறி தாயினும் = அவ்வளவு சிறப்பாக இல்லாவிட்டாலும் 


மெய்ப் பொருட்குரி யார்  = மெய் பொருளை அறிந்து உணரும் பெரியவர்கள் 


கொள்வர் மேன்மையால். = உயர்ந்த கருத்துகளை தங்களுடைய உயர்வால் கொள்வார்கள். 


சிறியார், தங்கள் உயர்வுக்கு ஏற்ப கொள்வார்கள் என்பது உணரக் கிடைப்பது. 


"சரியா படிக்கலேனா மாடு மேய்க்கத் தான் போற" என்று அப்பா கடிந்து சொன்னால், அதன் அர்த்தம், அப்பா என்னை மாடு மேய்க்கத் தான் லாயக்கு என்று கூறுகிறார், அவருக்கு என் மேல் அன்பு இல்லை என்று நினைத்தால் அந்தப் பிள்ளையை போல மடையன் உலகில் யார் இருப்பார்கள். 


என் மேல் உள்ள அன்பால், அக்கறையால்,  என் தந்தை இப்படி கூறுகிறார் என்று எடுக்கத் தெரிய வேண்டும். 


சொல் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். பொருள்தான் முக்கியம். 


சேக்கிழார் சைவ சமயத்தை சார்ந்தவர், நான் அந்த சமயம் அல்ல, நான் எதற்கு அதை படிக்க வேண்டும் என்று தள்ளக் கூடாது. 


நல்லது எங்கிருந்தால் என்ன? 


பொருளைப் பிடித்துக் கொள்வோம். 


என்ன, சரியா? 

Monday, June 14, 2021

திருக்குறள் - அறத்தின் பயன்

 திருக்குறள் - அறத்தின் பயன் 


அறம் எப்படிச் செய்ய வேண்டும், யார் செய்ய வேண்டும், எந்த அளவு செய்ய வேண்டும், அதனால் என்னென்ன பலன் என்றெல்லாம் சொல்லினார்.


அதெல்லாம் சரிங்க, நீங்க சொன்னா நாங்க நம்பிறனுமா...இதுகெல்லாம் என்ன ஆதாரம் இருக்கு ? நாங்க பாட்டுக்கு அறம் செய்து கொண்டே இருப்போம்....பலன் கிடைக்கும் என்பதற்கு என்ன உறுதி? என்று சிலர் கேட்கலாம். கேட்டால் தவறு இல்லை. 


அதற்கும் விடை தருகிறார் வள்ளுவர். 


நாம் எவ்வளவோ பேரை பார்க்கிறோம். சில பேர் நல்லா வசதியாக வாழ்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறார்கள். சில பேர் வறுமையில் வாடுகிறார்கள். துன்பப் படுகிறார்கள். சில பேர் சுகமாக காரில் போகிறார்கள், சில பேர் வண்டி இழுத்துச்  சிரமப் படுகிறார்கள். 


இரண்டையும் பார். துன்பப் படுபவன் ஒன்றும் முட்டாள் இல்லை. அவன் முயற்சிக்கும் ஒரு குறைவும் இல்லை.  இன்பம் அனுபவிப்பவன் எல்லாம் பெரிய புத்திசாலி என்றும் சொல்ல முடியாது. ரொம்ப ஒன்றும் உழைப்பது மாதிரியும் தெரியவில்லை. 


பின் ஏன் இந்த வேறுபாடு? 


அறத்தினால் வந்த விளைவு என்கிறார். 


அறத்தின் விளைவு இன்னது என்று அறிய வேண்டுமா, பல்லக்கின் மேல் அமர்ந்து செல்பவனையும், பல்லக்கு தூக்குபவனையும் பார் , உனக்கே புரியும் என்கிறார். 


பாடல் 


அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/06/blog-post_14.html


Please click the above link to continue reading



அறத்தாறு = அறத்தின் பயன் 

இது வென = இன்னது என்று 

வேண்டா = படித்து அறிய வேண்டாம் 

சிவிகை = பல்லக்கு 

பொறுத்தானோடு =  தூக்கிக் கொண்டு அதன் வலியை பொறுத்துக் கொண்டவன்  

 ஊர்ந்தான்  = அதன் மேல் அமர்ந்து செல்பவன் 

இடை = இடையே உள்ள வேறுபாடு


நாம் ஒரு உண்மையை  அறிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கு மூன்று வழிகள் இருக்கிறது. அவற்றை பிரமாணம் என்று கூறுவார்கள். 


காட்சிப் பிரமாணம் 

அனுமானப் பிரமாணம் 

ஆகமப் பிரமாணம் 


என்பவை. 


ஒன்றை புலன்களால் உணர்ந்து உண்மையை அறிந்து கொள்வது காட்சிப் பிரமாணம். 


அனுமானப் பிரமாணம் என்றால் ஊகித்து அறிவது. காலையில் எழுந்து பார்த்தால் சாலை எல்லாம் ஈரமாக இருக்கிறது. மரத்தில் இருந்து நீர் சொட்டுகிறது. இரவு மழை பெய்து இருக்கிறது என்று ஊகிக்கிறோம். கண்ணால் காணவில்லை ஆனால் அறிந்து கொள்கிறோம். 


இப்படி புலன்களாலும் அறியமுடியாமல், மனதால் ஊகித்தும் அறிய முடியாத போது, ஆகமங்கள் சொல்வதை வைத்து நாம் உண்மையை அறிகிறோம். பெரியவர்கள், உயர்ந்தவர்கள் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்வது. 


வெளியூருக்கு காரில் போகிறோம். இதற்கு முன்னால் அந்த வழியில் சென்றது இல்லை. போகிற வழியில் ஒரு தகவல் பலகை இருக்கிறது. நாம் போகிற ஊரின் பேர் எழுதி, இன்னும் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது, அதற்கு எந்தப் பக்கம் போக வேண்டும் என்று அம்புக் குறியும் போட்டு இருக்கிறது. 


நாம் பார்கவில்லை. நம்மால் அனுமானம் செய்ய முடியாது. அந்த பலகை சொல்வதை நாம் நம்புகிறோம். மாறாக, இதை எல்லாம் நான் நம்ப மாட்டேன், இதை எனக்கு நிரூபணம் செய்தால் தான் நான் மேற்கொண்டு நகர்வேன் என்று இருந்தால் இருக்க வேண்டியது தான். போகும் இடத்திற்கு போய் சேர முடியாது. 


இங்கே, இரண்டு நிரூபணங்கள் இருக்கிறது என்கிறார் பரிமேலழகர். 


நமக்கு ஒன்றும் தெரியவில்லை. அவர் கண்ணுக்குத் தெரிகிறது. 


ஒருவன் பல்லகில் அமர்ந்து செல்கிறான், ஒருவன் அதை தூக்கிச் சுமக்கிறான். இதை நாம் பார்க்க முடியும். அது காட்சிப் பிரமாணம் என்கிறார். பார்த்து தெரிந்து கொள். 


" இதுவென வேண்டா" என்று கூறும் போது இது எப்படி என்று நூல்களில் சென்று ஆராயாதே. நீ எவ்வளவு தோண்டினாலும் கிடைக்காது. நீயே நேரில் பார்த்து தெரிந்து கொள் என்கிறார். 


"'என' என்னும் எச்சத்தால் சொல் ஆகிய ஆகம அளவையும், 'பொறுத்தானோடு ஊர்ந்தானிடை' என்றதனால் காட்சியளவையும் பெற்றாம். "


ஆகமங்களில் (புத்தகங்களில்) இன்ன அறத்துக்கு இன்ன பலன் என்று இருக்காது. நீயே நேரில் பார் என்கிறார். 


இலக்கணம் பற்றி அறிய விரும்புபவர்களுக்கு ஒரு சில செய்திகளை சொல்கிறார் பரிமேலழகர். 


அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை


என்ற குறளில். 


அறத்தின் பயன் இன்னது என்று தேட வேண்டாம் 

பல்லக்கின் மேல் ஏறியவன் , அதை தூக்கியவன் இடையில் உள்ள வேறுபாடு


இப்படி ஒன்றோடு ஒன்று சம்பந்தம் இல்லாத இரண்டு வரிகள் இருக்கின்றன. இரண்டு வரிக்கும் ஒரு தொடர்பும் இல்லை. 


"உணரப்படும் என்பது சொல்லெச்சம்." என்கிறார். 


அதாவது, இரண்டு பேருக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை உணர்ந்தால் அறத்தின் பயன் இன்னது என்று புரியும் என்கிறார்.  இதில் "உணரப்படும்" என்ற சொல் குறளில் இல்லை. அது எச்சம், அதாவது மீதியாக இருக்கிறது. நீ புரிந்து கொள் என்கிறார். 


அதெல்லாம் சரிங்க, அவன் இராஜாவாக பிறந்தான், பணக்கார வீட்டில் பிறந்தான், காரில் போகிறான், பல்லக்கில் போகிறான். மற்றவன் ஏழை வீட்டில் பிறந்தான், துன்பப் படுகிறான். இதுக்கும் அறத்துக்கும் என்ன சம்பந்தம் என்றால், பணக்கார வீட்டில் பிறக்க அவன் இந்தப் பிறவியில் ஒன்றும் செய்யவில்லை. ஏழை வீட்டில் பிறக்க மற்றவனும் ஒன்றும் செய்ய வில்லை இந்தப் பிறவியில். 


பின் ஏன் என்றால், முந்தைய குறளில் சொன்னார் "பொன்றுங்கால் பொன்றாத் துணை". ஒருவன் செய்த அறம் அவனை விட்டு விலகாமல் எல்லா பிறவியிலும் தொடரும் என்றாரே அதற்கு நிரூபணம் இது.


குப்பத்தில் பிறந்து துன்பப் படுவதற்கும், கோடீஸ்வரன் வீட்டில் பிறந்து இன்பம் அனுபவிப்பதற்கும் முன் செய்த அறச் செயல்களே காரணம் என்றார். 


இனி வரும் பிறவிகளில் இன்பமாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?


(தினம் தினம் திருக்குறள் தானா என்று சலிப்பு வருகிறதா ?)