Saturday, February 19, 2022

திருக்குறள் - வன்சொல்

திருக்குறள் - வன்சொல் 


நம்மிடம் யாராவது இனிமையாக, அன்பாக, ஆதரவாகப் பேசினால் நமக்கு எவ்வளவு இன்பமாக இருக்கிறது. அப்படி பேசுபவர்களிடம் நமக்கு ஒரு அன்பு பிறக்கிறது அல்லவா? அவர்களிடம் மேலும் மேலும் பேச வேண்டும் என்று தோன்றுகிறது அல்லவா? 


நம்மிடம் எரிந்து எரிந்து விழுபவர்களிடம், கோபம் கொள்பவர்களிடம், தவறான யோசனை சொல்பவர்களிடம் நமக்கு அன்பு பிறக்குமா? அப்படிப் பட்டவர்களை நாம் விரும்புவோமா? 


இது நம் அனுபவப் பாடம். யாரும் சொல்லித் தர வேண்டியது இல்லை. நம்மிடம் இனிமையாக பேசுபவர்களிடம் நாம் அன்போடு நட்போடு இருப்போம். மாறாக வேறு விதமாக பேசுபவர்களை விட்டு விலகி இருப்போம். 


அதுதானே யதார்த்தம். 


வள்ளுவர் அந்த யதார்த்தை அப்படியே திருப்பிப் போடுகிறார். 


உனக்கு ஒருவன் இன்சொல் சொன்னால் அது உனக்கு இனிமையாக இருக்கிறது அல்லவா? அப்படி இருக்க நீ எதற்கு மற்றவர்களுக்கு வன் சொல் சொல்கிறாய்? நீ அப்படி வன் சொல் சொன்னால், மற்றவர்கள் உன்னை வெறுப்பார்கள், உன்னை விட்டு விலகிப் போய் விடுவார்கள். வன் சொல் சொல்ல ஒரு காரணமும் இல்லை. அப்படி இருக்க, ஏன் வன் சொல்லை சொல்ல வேண்டும் என்று கேட்கிறார். 


பாடல் 


இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_19.html


(Please click the above link to continue reading)



இன்சொல்  = தன்னிடம் சொல்லப் பட்ட இனிய சொல் 


இனிதீன்றல் = தனக்கு இனிமை தருவதை 


காண்பான் = அறிந்து கொண்டவன் 


எவன்கொலோ = எவன்?


வன்சொல் வழங்கு வது. = மற்றவர்களுக்கு வன் சொல்லை வழங்குவது? சொல்லுவது? 


நம்மை மாதிரித் தானே மற்றவர்களும். 


இனிய சொல்லினால் ஆயிரம் பலன் இருக்கலாம். ஆனால், வன் சொல் சொல்லுவதால் ஒரு பலன் கூட இல்லை. பலன் இல்லாத ஒன்றைச் செய்வானேன்? 



இனியவை கூறல் என்ற அதிகாரத்தில், இனியவை கூறுவதை மட்டும் அல்ல. இனியவை அல்லாதவற்றையும் கூறக் கூடாது என்கிறார் வள்ளுவர். 


எப்போதும் இனியவை கூறுவேன், இடையிடையே கொஞ்சம் வன் சொல்லும் வரும் என்றால் அது கூடாது என்கிறார். 


எதிர்மறையானதையும் கூறி, அவற்றை விலக்கும் படியும் கூறுவார். 


கல்வி பற்றி கூறினால் போதாது என்று கல்லாமை பற்றியும் கூறுவார். 


ஈகை,ஒப்புரவு பற்றி கூறினால் மட்டும் போதாது என்று பொறாமை, சினம் பற்றியும் கூறுவார். 


இன் சொல் கூற வேண்டும். 


வன் சொல் கூறவே கூடாது. 


இதை விட எப்படி தெளிவாகச் சொல்வது?


இன்சொல் சொல்ல முடியவில்லையா, பேசாமல் இருந்து விட வேண்டும். வன் சொல் சொல்லக் கூடாது. 


ஒரு முறை திருப்பிப் பார்ப்போம்.


கடவுள் வாழ்த்து 

வான் சிறப்பு 

நீத்தார் பெருமை 

அறன் வலியுறுத்தல் 

இல்வாழ்க்கை 

வாழ்க்கைத் துணை நலம் 

புதல்வர்களைப் பெறுதல் 

அன்புடைமை

விருந்தோம்பல் 


வரை பார்த்தோம். இப்போது இனியைவை கூறல் பற்றி படித்துக் கொண்டு இருக்கிறோம். 


கல்யாணம் பண்ணி, மனைவி, குழந்தைகள் என்று குடும்பம் வந்த பின், அன்பு பெருகும். அது வீட்டைத் தாண்டி வெளியிலும் பெருகும். சுற்றமும் நட்பும் வீடு தேடி வரும். விருந்தை உபசரிக்க வேண்டும். 


எப்படி என்றால், இனிய சொல் வேண்டும். இனிமையாக பேசாவிட்டால் நம்மை நாடி ஒருவரும் வரமாட்டார்கள். விருந்து என்பது இல்லாமல் போகும். 


விருந்து தடைப்பட்டால் இல்லறம் என்ற தேர் மேலே செல்லாது. 


தன் மனைவி, குழந்தை என்று வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டியதுதான்.  


வீடு பேறு என்பதெல்லாம் மறந்து விட வேண்டும். 


நம்மை கை பிடித்து வீடு பேற்றுக்கு அழைத்துச் செல்கிறார் வள்ளுவர். இனியவை கூறல் என்பது ஒரு படி. அதைத் தாண்டி மேலே போக நிறைய இருக்கிறது. 


இவற்றை எல்லாம் பழகிக் கொள்ள வேண்டும். நடைமுறையில் கொண்டு வர வேண்டும். 


Friday, February 18, 2022

திருக்குறள் - சிறுமையுள் நீங்கிய இன்சொல்

 திருக்குறள் - சிறுமையுள் நீங்கிய இன்சொல் 


கிண்டல் செய்வது, நையாண்டி, நக்கல், இதெல்லாம் ஒரு சிறந்த பேச்சாற்றல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது தவறு. 


ஒருவரை கிண்டல் செய்கிறோம் என்றால் அந்த நேரத்தில் அவரும் சேர்ந்து சிரித்து விட்டுப் போவார். ஆனால், உள்ளே அவர் மனம் வாடும். வலி இருக்கும். வெளியே காட்டிக் கொள்ள மாட்டார். 


நக்கல், நையாண்டி எல்லாம் அதே மாதிரித்தான். 


சில சமயம், முன் இருந்த கோபம் காரணமாக நல்லதே சொன்னாலும், அதில் ஒரு குதர்க்கம் வந்து விடலாம். 


"நல்லா படிச்சா நல்லா இருக்கலாம்...நீ எங்க படிக்கப் போற ..." என்று சொல்லும் போது, முதலில் சொன்ன இனிய சொல் பின்னால் வந்த சொல்லால் அடி பட்டுப் போய் விடுகிறது. 


இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். 


என்ன ஆனாலும் சரி, ஒருவரை சிறுமைப் படுத்தும் சொல், இழிவான சொல், புண் படுத்தும் சொல் இவற்றை ஒரு போதும் சொல்லக் கூடாது. அப்படி சிறுமை நீங்கிய இன்சொல் கூறினால், அது இம்மைக்கும், மறுமைக்கும் நமக்கு நன்மை தரும் என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்

இம்மையும் இன்பம் தரும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_18.html


(Please click the above link to continue reading)



சிறுமையுள் = சிறியன, இழிந்தன, குற்றம் உள்ளன 


நீங்கிய = இல்லாத 


இன்சொல் = இனிய சொல் 


மறுமையும் = மறுமைக்கும் 


இம்மையும்  = இம்மைக்கும் 


இன்பம் தரும் = இன்பம் தரும் 


இனிய சொல் சொல்ல வேண்டும்.அதோடு சேர்ந்து மற்ற குற்றம் உள்ள சொல் சேர்ந்து விடக் கூடாது. 


"இன்னிக்கு காப்பி நல்லா இருக்கு. ஒரு வழியா நல்ல காப்பி போட படிசிட்ட" என்று சொல்லும் போது, இனிய சொல்லோடு சிறுமை கலந்து விடுகிறது. 


இழிவான சொற்களை, ஒருபோதும் சொல்லக் கூடாது. 


விளையாட்டுக்கு, "அதுக்கு கூட உரிமை இல்லையா?",  என்றெல்லாம் சப்பை கட்டு கட்டக் கூடாது. 


உரிமை இருக்கிறது, ஜாலி, விளையாட்டு என்பதற்காக சொல்லலாம். அப்படிச் சொன்னால், இந்தப் பிறவியிலும், மறு பிறவியிலும் நமக்கு இன்பம் வராது. 


இன்பம் வேண்டாம் என்றால் சொல்லலாம். 


பிறர் மனம் புண் படும்படியோ, அவர்களை சிறுமைப் படுத்தவோ, இழிவாக சொல்லவோ ஒரு போதும் சொற்களை பயன்படுத்தக் கூடாது. 


நாம், வேற்றாளிடம் அப்படி சொல்வதை விட, நெருங்கிய சொந்தம், நட்பில் அப்படி சொல்லிவிடுவோம். 


மனைவிதானே, பிள்ளைதானே, மருமகள் தானே, என்று உரிமையில் ஏதேதோ சொல்லி விடுவோம். அது தவறு.  


சிந்திப்போம். 



Thursday, February 17, 2022

திருவாசகம் - குயிற் பத்து - மணிவாசகர் பாடிய மண்டோதரி

 திருவாசகம் - குயிற் பத்து - மணிவாசகர் பாடிய மண்டோதரி 


இது என்ன புதுக் கதை. 


மணிவாசகர் எதற்காக மண்டோதரியைப் பற்றி பாட வேண்டும்? 


ஒரு முறை மண்டோதரி சிவ பெருமானை நோக்கி தவம் இருந்தாள். சிவனும் அவளுக்கு காட்சி தந்தார். "என்ன வரம் வேண்டும்" என்று கேட்ட போது, "பெருமானே நீ குழந்தையாக வேண்டும். நான் உன்னை எடுத்து பிள்ளை போல் கொஞ்ச வேண்டும்" என்று வரம் கேட்டாள்.  அவளின் தாய்மை அப்படி. இறைவனையே குழந்தையாக பார்த்தது.


சிவனும், அவளுக்கு அந்த வரத்தைத் தந்தார். அவள் குழந்தை வடிவான சிவ பெருமானை எடுத்து கொஞ்சி மகிழ்ந்தாள் என்பது ஒரு கதை. 


அதை மணிவாசகர் குறிப்பிடுகிறார். 


"இந்த அழகிய உலகம் போற்றும் படி, நினைத்த உருவத்தை எடுக்கும் கடல் சூழ்ந்த இலங்கை வேந்தன் மனைவி மண்டோதரிக்கு பேரருள் இன்பம் அளித்த திருபெருந்துறை என்ற தலத்தில் எழுந்து அருளி இருக்கும் சிவனை, குயிலே நீ அவன் பெயரைச் சொல்லிக் கூவுவாய்" என்கிறார். 



பாடல் 


ஏர்தரும் ஏழுல கேத்த எவ்வுரு வுந்தன் னுருவாம்

ஆர்கலி சூழ்தென் னிலங்கை அழகமர் வண்டோ தரிக்குப்

பேரரு ளின்ப மளித்த பெருந்துறை மேய பிரானைச்

சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி நாடனைக் கூவாய். 



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_17.html


(please click the above link to continue reading)


ஏர்தரும் = அழகிய 


ஏழுல கேத்த = ஏழு உலகும் போற்ற 


எவ்வுரு வுந்தன் னுருவாம் = எந்த உருவும் தன் உருவமாய் ஆக்கிக் கொள்ளும் 


ஆர்கலி  = கடல் 


சூழ் = சூழ்ந்த 


தென் னிலங்கை  = தென் புறம் உள்ள இலங்கை 


அழகமர் வண்டோ தரிக்குப் = அழகு குடி கொண்டிருக்கும் மண்டோதரிக்கு 


பேரரு ளின்ப மளித்த = பேரருள் இன்பம் அளித்த 


பெருந்துறை மேய = திருப்பெருந்துறையில் உள்ள சிவனை 


பிரானைச் = என்னைப் பிரியாதவனை 


சீரிய வாயாற் = உன் சிறந்த வாயால் 


குயிலே = குயிலே 


தென்பாண்டி நாடனைக் கூவாய்.  = தென் பாண்டி நாட்டானை (வரக்) கூவுவாய் 


நாமெல்லாம் இறைவனிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்போம். 


மண்டோதரி, இறைவனை பிள்ளை போல் கொஞ்ச வேண்டும் என்று ஆசைப் பட்டாள். இறைவனை அப்படியே கொஞ்ச முடியுமா? எனவே அவனை பிள்ளையாக்கி கொஞ்சி மகிழ்ந்தாள். 


காரைக்கால் அம்மையாரை சிவ பெருமான் "அம்மை" என்று அழைத்தார். 


இங்கே, மண்டோதரி தாயாகி சிவனை கொஞ்சினாள்.


தாய்மைக்கு இணை ஏது? 


Wednesday, February 16, 2022

திருவாசகம் - யாத்திரைப் பத்து - விளையாட்டை விடுமின்

 திருவாசகம் - யாத்திரைப் பத்து - விளையாட்டை விடுமின் 


நாம் சிறு பிள்ளைகளாக இருக்கும் போது, மாலையில் விளையாடப் போவோம். விளையாட்டு மும்முரத்தில் நேரம் போவது தெரியாது. அப்போது, அம்மா வந்து "விளையாடினது போதும், விளக்கு வைக்கும் நேரம், வந்து கை கால் முகம் கழுவி படிக்க உக்காரு" என்று கூப்பிடுவாள். 


நாமும், இந்த உலகில் ஏதோ விளையாட்டாகத் தொடங்கினோம். ஒன்றில் இருந்து மற்றொன்றாக விளையாட்டு போய்க் கொண்டே இருக்கிறது. நேரம் போவது தெரியாமல் விளையாடிக் கொண்டு இருக்கிறோம். இரவு நெருங்குகிறது. விளையாட்டை நிறுத்திவிட்டு வேலையைப் பார்க்க வேண்டாமா? 


மணிவாசகர் அழைக்கிறார். "போதும் விளையாடியது. அடியவர்களாகிய நீங்கள், இந்த உலக விளையாட்டை விட்டுவிட்டு, இறைவன் திருவடியை அடைந்து, அவன் உளக் குறிப்பை அறிந்து அதன் படி நடவுங்கள். துன்பத்துக்கு இடமான இந்த உடலை விடுத்து, நம்மை சிவலோகம் கொண்டு செல்லும், அந்த பாம்பை அணிந்தவனது திருவடிகளை சரண் அடையுங்கள்" என்கிறார். 



பாடல் 




அடியார் ஆனீர் எல்லீரும், அகலவிடுமின் விளையாட்டை;

கடி சேர் அடியே வந்து அடைந்து, கடைக்கொண்டு இருமின் திருக் குறிப்பை;

செடி சேர் உடலைச் செல நீக்கி, சிவலோகத்தே நமை வைப்பான்

பொடி சேர் மேனிப் புயங்கன் தன், பூ ஆர் கழற்கே புகவிடுமே



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_16.html


(Please click the above link to continue reading)


அடியார் ஆனீர் எல்லீரும் = அடியவர்களான நீங்கள் எல்லோரும் 


அகலவிடுமின் = தூர தள்ளிப் போடுங்கள் 


விளையாட்டை = விளையாட்டை 


கடி சேர் அடியே = சிறந்த திருவடிகளை 


வந்து அடைந்து = வந்து அடைந்து 


கடைக்கொண்டு இருமின் = கடைசி வரை பற்றிக் கொண்டு இருங்கள் 


திருக் குறிப்பை = எதை? அவன் உள்ளக் குறிப்பை 


செடி சேர்  உடலைச் = துன்பத்துக்கு இடமான இந்த உடலை 


செல நீக்கி = விட்டு நீங்கி 


சிவலோகத்தே நமை வைப்பான் = நம்மை சிவலோகத்தில் வைக்கும் 


பொடி சேர் மேனிப்  = சாம்பலை உடலில் பூசிக் கொண்ட 


புயங்கன் = பாம்பை அணிந்தவன் 


தன், பூ ஆர் கழற்கே = அவனுடைய பூக்கள் அணிந்த திருவடிகளில் 


புகவிடுமே = புக விடுவான் 


சிறு பிள்ளைகள் கடற்கரையில் விளையாட்டும் போது அங்குள்ள சிப்பி, சங்கு இவற்றை எடுத்து வைத்துக் கொண்டு ஏதோ பெரிய பொக்கிஷம் கிடைத்த மாதிரி மகிழ்வார்கள். கொஞ்சம் வயது ஆகும் போது தெரியும் அது ஒண்ணும் அவ்வளவு பெரிய செல்வம் அல்ல என்று. அதை தூக்கிப் போட்டு விடுவார்கள். 


அது போலத்தான், சிகரெட் பெட்டி, குளிர்பானங்களின் மூடிகள், பேனா, கை கடிகாரம், என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதோ ஒன்றை சேர்ப்பதும்,  பின் அது ஒன்றும் இல்லை என்று அதை தூக்கி போட்டுவிட்டு மற்றதின் போவதும் இயற்கையாக இருக்கிறது. 


அப்படி என்றால், இன்று நாம் சிறந்தது, உயர்ந்தது, முக்கியமானது என்று எதைக் கருதிக் கொண்டு இருக்கிறோமோ அது இன்னும் கொஞ்சக் காலத்தில் அர்த்தம் இல்லாதது என்று நாமே தூக்கி எறிவோம்.


பிள்ளையிடம் கேட்டால் சங்கும், சிப்பியும் விலை மதிக்க முடியாத ஒன்று என்று தான் சொல்லும். அதே பின்னொரு நாளில் அதை தூக்கி குப்பையில் போடும்.  அறிவு வளர்ச்சி.  அறிவு வளராமல் இருந்தால் நாற்பது வயதிலும் சங்கையும், சிப்பியையும் சேர்த்துக் கொண்டு இருக்கும். 


உறவுகள், பணம், பதவி, புகழ் என்று நாம் இன்று இன்றியமையாதது என்று நினைப்பவற்றை நாளை நாமே வேண்டாம் என்று தள்ளி வைப்போம்.  


அப்படி வேண்டாம் என்று தூக்கி போடுவதை இன்று ஏன் இவ்வளவு மெனக்கெட்டு தேடி பாதுகாப்பனேன்? அதை விட்டு விட்டு என்றும் மதிப்பு குறையாத ஒன்றை தேடலாம் அல்லவா?


அது, இறைவன் திருவடி என்கிறார் மணிவாசகர். இந்த பணம், புகழ், பதவி என்று தேடும் விளையாட்டு விளையாடினது போதும். நல்லதை தேடுவோம் என்கிறார். 


இல்லை, இறைவன் திருவடி ஒன்றும் உயர்ந்தது அல்ல, பணமும், பதவியும், புகழும் தான் உயர்ந்தது, நிரந்தரமானது என்றால், நம் பிள்ளை பருவத்தை நாம் நினைக்க வேண்டும். அப்போது எது நிரந்தரம் என்று நினைத்தோம்? பின் ஏன் அதை விட்டுவிட்டோம் என்று. 


ஊர் போக நேரம் ஆகிவிட்டது. வில்லையாட்டை விட்டுவிட்டு, பெட்டி படுக்கையை எடுத்துக் கொண்டு கிளம்புங்கள் யாத்திரைக்கு என்று அழைக்கிறார். 


Sunday, February 13, 2022

திருக்குறள் - இன் சொல் சொல்வதால் என்ன பயன் ?

 திருக்குறள் - இன் சொல் சொல்வதால் என்ன பயன் ?


திருவள்ளுவர் இன்சொல் சொல் என்கிறார். அப்படி சொல்வதால் என்ன பயன். எதுக்காக அவ்வளவு முயன்று இன்சொல் சொல்ல வேண்டும்? 


அல்லவை தேய அறம் பெருகும் என்று முந்தைய குறளில் கூறினார். 


அறம் பெருகிட்டு போகட்டும். அதனால் என்ன பயன் என்ற கேள்வி வரும் அல்லவா? அதற்கும் பதில் சொல்கிறார் வள்ளுவர்.


"பிறருக்கு பயன் தரும் இனிய சொல்லைச் சொன்னால், விரும்பபட்டதைத் தந்து ஒருவனுக்கு நன்மை தரும்"


என்கிறார். 


பாடல் 


நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_13.html


(pl click the above link to continue reading)


நயன் ஈன்று = விரும்பியதை தந்து 


நன்றி பயக்கும் = நலன் விளைவிக்கும் 


பயன்ஈன்று = பயன் தரக்கூடிய 


பண்பின் = இனிய சொல்லை 


தலைப்பிரியாச் சொல் = சேர்த்துச் சொன்னால் 



தெரிந்த சொற்கள் என்றாலும் புரியாத மாதிரி இருக்கும். 


நயன், நன்றி, பயன், தலைப்பிரியா என்ற சொற்கள் புரிந்த மாதிரி இருந்தாலும் கொஞ்சம் குழப்பமாகவும் இருக்கிறது. 


சொல்லுக்குப் பொருள் தெரிந்தாலும், குறளுக்கு பொருள் தெரிய வேண்டும் என்றால் பரிமேலழகரைத்தான் பிடிக்க வேண்டும். 


முதலாவது, "பண்பின்" என்ற சொல்லுக்கு இனிய சொற்களை கூறும் பண்பு என்று பொருள் சொல்கிறார். அது எப்படி, பண்பு என்றால் இனிய சொல் என்று கூறலாம்? பண்பு என்றால் எந்த பண்பாக வேண்டுமானாலும் இருக்கலாம் அல்லவா? "அதிகார முறைமையால் பெறப் பட்டது" என்கிறார். அதாவது, இந்த அதிகாரம் "இனியவை கூறல்" என்ற அதிகாரம். எனவே, இங்கே பண்பு என்பது இனிய சொற்களை கூறும் பண்பு என்று கொள்ள வேண்டும் என்கிறார். 


இலையில் இட்லி, சட்னி, சாம்பார், கேசரி இருக்கிறது. "இனிப்பு கொஞ்சம் கூட" என்றால் எதில் என்று கேட்க மாட்டோம் அல்லவா? கேசரியில் இனிப்பு கூட என்று அறிந்து கொள்கிறோம் அல்லவா? 


இரண்டாவது, "தலைப்பிரியா" என்றால் ஒரு வார்த்தை என்கிறார். தலை + பிரியா என்று பிரிக்கக் கூடாது. தலைப்பிரியா என்றால் சேர்ந்தே இருத்தல் என்று பொருள். 


எது சேர்ந்து இருக்க வேண்டும் ?


மூன்றாவது "பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியா". நாம் சொல்லும் சொல்லினால் பயனும் இருக்க வேண்டும். அதை இனிமையாகவும் சொல்ல வேண்டும். பயனும், இனிமையும் சேர்ந்தே இருக்க வேண்டும். 


நான்காவது, "பயன் ஈன்று" என்றால் என்ன? பயன் என்றால் பலன். புரிகிறது. என்ன பலன்? புரியவில்லை. பரிமேலழகர் கூறுகிறார் "கேட்பவனுக்கு இம்மை, மறுமை பயன் தந்து" என்கிறார். யாருக்குச் சொல்கிறோமா, அவனுக்கு இம்மைப் பயன் இருக்க வேண்டும் அல்லது மறுமைப் பயன் இருக்க வேண்டும். இரண்டும் இல்லாத சொல்லை சொல்லவே கூடாது. 


நாம் என்ன சொல்லப் போகிறோம். அதனால் கேட்பவருக்கு இம்மை, மறுமைப் பயன் ஏதாவது விளையுமா என்று யோசிக்க வேண்டும். எனக்குத் ஏதோ தெரியும் என்பதை காட்டுவதற்காக எதையும் சொல்லக் கூடாது. கேட்பவருக்கு பலன் விளைய வேண்டும். 


நான் பல பேரிடம் தேவை இல்லாமல் வாதம் செய்து இருக்கிறேன். அதனால் என்ன விளைந்தது என்று யோசிக்கிறேன். கேட்பவருக்கு ஒரு பலனும் இல்லை. அத்தனையும் வீண். இனிமேலாவது பயன் தராத சொற்களை பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று முயற்சி செய்வேன். 


நான்காவது, பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியா சொல்லை சொன்னால் என்ன ஆகும்? "நயன் ஈன்று நன்மை பயக்கும்" என்கிறார். பரிமேலழகர் சொல்கிறார் "ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்" என்று. 


நீதி என்றால் உலகுடன் ஒத்து வாழ்தல். பயனுள்ள சொல்லை இனிமையாக கூறினால் உலகில் எல்லோரும் நம்மிடம் அன்பாக இருப்பார்கள். எனவே அதை "நீதி" என்றார். நீதி என்றால் ஏதோ சட்டம், நீதி, ஒழுங்கு என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. ஊருடன் ஒத்துப் போகாததுதான் அநீதி. மறுமைக்கு அறத்தைத் தரும் என்கிறார். அதவாது இம்மைக்கும், மறுமைக்கும் பயன் தரும் என்கிறார். 


இப்போது குறளை மீண்டும் வாசிப்போம், கொஞ்சம் சொற்களை மாத்திப் போட்டு. 


பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச்  சொல் 

நயன் ஈன்று நன்மை பயக்கும் 


முயற்சி செய்வோம். 





Wednesday, February 9, 2022

திருக்குறள் - நல்லதையும் எப்படிச் சொல்ல வேண்டும்

திருக்குறள் -  நல்லதையும் எப்படிச் சொல்ல வேண்டும் 


பேசுவதில்தான் எவ்வளவு இருக்கிறது !


நல்லதை பேசுவதற்கும் ஒரு முறை இருக்கிறது. 


"நீ நல்லா படிக்கேலேனா மாடு மேய்க்கத்தான் போற" என்று பல வீடுகளில் பெற்றோர்கள் பிள்ளைகளை கடிந்து கொள்வார்கள். அவர்கள் நினைவு நல்லதுதான். பிள்ளை நல்லா படித்து பெரியவனாக வேண்டும் என்பதுதான் எண்ணம். சொன்னதும் நல்லது நடக்க வேண்டும் என்றுதான். ஆனால், சொல்லிய முறை சரி அல்ல. 


இது ஒரு உதாரணம். இப்படி பல சொல்லிக் கொண்டே போகலாம். 


மனைவிக்கு ஏதோ விடயத்தில் செலவழிக்க வேண்டும் என்று ஆசை - ஒரு வெளிநாடு சுற்றுலா, ஒரு வீடு, நல்ல கார் என்று ஏதோ ஒன்று வாங்க வேண்டும். கணவனுக்கோ பணத்தை சேர்த்து வைக்க வேண்டும். பிள்ளைகளின் எதிர்காலம் என்று. ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் செய்து மனக் கசப்பு ஏற்படலாம். இருவரும் நல்லதுக்குத்தான் பாடு படுகிறார்கள். ஆனால், அதை இனிமையாக பேசுவது இல்லை. 


வேலை பார்க்கும் இடத்தில், உறவில், நட்பில் என்று அனைத்து இடங்களிலும், நல்லதுதானே சொல்கிறேன் என்று அதை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைக்கக் கூடாது. அதையும் இனிமையாக கூற வேண்டும். 


அது மட்டும் அல்ல, நாம் இன்று பார்க்க இருக்கும் குறள் பல ஆழ்ந்த அர்த்தங்களை உள்ளடக்கியது. விரிவாக பார்ப்போம்.


பாடல் 

 

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_9.html


(Please click the above link to continue reading)


அல்லவை தேய = பாவம் தொலைய 


அறம்பெருகும் = அறம் பெருகும் 


நல்லவை = நல்லவற்றை 


நாடி = விரும்பி 


இனிய சொலின் = இனிமையாக சொன்னால் 


மேலோட்டமான பொருள் இவ்வளவுதான். 


இதில் எவ்வளவு இருக்கிறது தெரியுமா? ப்ளாகின் முடிவில் உங்களுக்கே ஒரு பிரமிப்பு வரும். 


முதலாவது, "அல்லவை தேய". அல்லவை என்றால் மற்றவை என்று அர்த்தம். அது என்ன மற்றது? அது புரிய வேண்டும் என்றால் அடுத்த சொல்லைப் பார்க்க வேண்டும். "அறம் பெருகும்" என்கிறார். அப்படி என்றால் அறத்துக்கு எதிரான பாவம் தேயும் என்று அர்த்தம். பெருகுதல். அதன் எதிர்பதம் தேய்தல். அறம் பெருகும் என்றதால் அதன் எதிர்பதமான பாவம் தேயும். 


இரண்டாவது, நம்மால் புண்ணியத்தை தேட முடியும். நல்ல காரியங்கள் செய்தால் புண்ணியம் வளரும். ஆனால், முன் செய்த பாவம் எப்படி போகும்? ஒரு புண்ணியத்துக்கு ஒரு பாவம் என்று கணக்கை நேர் செய்ய முடியாது. அது வேறு கணக்கு, இது வேறு கணக்கு. நாம் முன் செய்த பாவம் நம்மை தேடி வரும். ஆனால், புண்ணியம் செய்தால் அந்த பாவம் நம்மை பற்ற எண்ணி, முயன்று முயன்று தேய்ந்து போகும். அதன் வலிமை குன்றும் என்கிறார். நேற்றைய ப்ளாகில் "தவத்தின் முன் நில்லா பாவம்" என்ற நாலடியார் பற்றி சிந்தித்தோம்.  அறம் வளர பாவம் தேயும். 


நமக்கு இரட்டிப்பு பலன். ஒரு புறம் அறம் வளர்கிறது. இன்னொரு புறம் பாவம் தேய்கிறது. 


மூன்றாவது, "நல்லவை நாடி". ஒருவரிடம் பேசப் போகிறோம் என்றால் அவருக்கு அதனால் ஏதாவது ஒரு நன்மை கிடைக்க வேண்டும். மற்றவருக்கு நல்லது கிடைக்கும் என்றால் மட்டும் தான் பேச வேண்டும். அடுத்தவருக்கு இம்மை, மறுமை பலன் கிடைப்பதாக இருந்தால் மட்டுமே பேச வேண்டும். இதைச் சொன்னால் அவருக்கு இன்ன நன்மை கிடைக்கும் என்று அறிந்து, சொல்ல வேண்டும். சும்மா வெட்டிப் பேச்சு பேசக் கூடாது. மற்றவருக்கு நன்மை தரும் அளவுக்கு பேச நம் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். 


நான்காவது, "நாடி". நல்லது மட்ட்டும் இருந்தால் போதாது. அவர் அந்த நன்மை அடைய வேண்டும் என்ற விருப்பம் நம்மிடம் இருக்க வேண்டும். கடமைக்கு சொன்னது மாதிரி இருக்கக் கூடாது. "படி" நு சொல்ல வேண்டியது என் கடமை. சொல்லியாச்சு. அப்புறம் உன் விருப்பம் என்றால் அவன் படித்து பெரிய ஆளாக வேண்டும் என்ற விருப்பம் இல்லை. ஏதோ கடமை இருக்கிறது. அது அல்ல வள்ளுவர் சொல்ல வந்தது. ஒரு ஆசை, விருப்பம், நாட்டம் இருக்க வேண்டும். 


ஐந்தாவது, "இனிய சொலின்". நல்லது தான், நாட்டம் இருக்கிறதுதான் என்றாலும், அதையும் இனிமையாக சொல்ல வேண்டும். வார்த்தையில் மென்மை, அன்பு, உண்மை, வஞ்சனை இல்லாமை எல்லாம் இருக்க வேண்டும். எப்படிச் சொன்னால் என்ன?  என்ன சொல்றோம் என்பதுதானே முக்கியம். எப்படி சொல்கிறோம் என்பது முக்கியம் இல்லை என்று வாதம் செய்யக் கூடாது. நல்லதையும், இனிமையாக சொல்ல வேண்டும். 


அப்படிச் சொன்னால் என்ன ஆகும், 


வள்ளுவர் சொல்கிறார் அறம் வளரும், பாவம் தேயும் என்று. 


நாம் நடைமுறையில் சிந்தித்துப் பார்ப்போம். 


ஆறாவது, மற்றவர்களுக்கு நல்லது செய்யக் கூடிய ஆற்றலை நாம் வளர்த்துக் கொள்வோம்.  


ஏழாவது, நாம் மற்றவர்களுக்கு உண்மையிலேயே நன்மை செய்வதால் மற்றவர்கள் நம்மை விரும்புவார்கள். நமக்கு நல்லது செய்ய நினைப்பார்கள். நமக்கு ஒரு துன்பம் வந்தால் ஓடி வந்து காப்பாற்றுவார்கள். கை கொடுப்பார்கள். நாம் செய்த பாவம் நம்மை துரத்தி வந்து துன்பம் செய்தாலும், மற்றவர்கள் நமக்கு உதவி செய்து அந்த துன்பத்தில் இருந்து நம்மை காப்பார்கள். 


எட்டாவது, நமக்கு மட்டும் அல்ல. நம் சந்ததிக்கும், உறவுக்கும் பலன் தரும். "அந்தக் காலத்ல உங்க அண்ணன்/ அப்பா/தாத்தா/ அம்மா எங்க குடும்பத்துக்கு எவ்வளவோ செய்து இருக்கிறார்கள்..." என்று நாம் இன்று  மற்றவர்களுக்கு செய்யும் உதவி அடுத்த தலைமுறைக்கும் வரும். என் அனுபவத்தில் இதை நான் பல முறை கேட்டு இருக்கிறேன்.  நாம் போன பிறகும், நாம் செய்த நன்மைகள் நம் குடும்பத்தை எப்படியோ காத்து நிற்கும். 


ஏழே ஏழு சொல். ஒண்ணே முக்கால் அடி. எவ்வளவு கருத்துச் செறிவு. 


இன்னும் கூட இருக்கலாம். நான் படித்தவரை, எனக்கு தெரிந்தவரை இவ்வளவு. இன்னும் எவ்வளவு இருக்கிறதோ. 


ஒவ்வொரு குறளும் நம் வாழ்கையை நல்ல முறையில் திசை திருப்பி செம்மையாக வாழ வழி செய்யும். 


ஒரு குறளை நடை முறை படுத்தினால் போதும். 


"நல்லாத்தான் இருக்கு....அடுத்து என்ன குறள் " என்று தொடர்கதை வாசிப்பது போல வாசிக்காமல், குறளை வாழ்வில் நடைமுறைப் படுத்த முயற்சி செய்ய வேண்டும். 




Wednesday, February 2, 2022

நாலடியார் - தவமும் பாவமும்

நாலடியார் - தவமும் பாவமும் 


இருள் இருந்தால் அதை எப்படி போக்குவது? 


அதை அடித்து விரட்ட முடியுமா? ஒரு பெட்டியில் போட்டு அடைத்து தூக்கி எறிந்து விட முடியுமா? இருளை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், நம்மால் ஒளியை கொண்டு வர முடியும். இருள் அது பாட்டுக்கு ஒரு புறம் இருக்கட்டும். நாம் ஒரு விளக்கை கொண்டுவந்து ஏற்றினால், இருள் தானே ஓடி விடும். இருளை பிடித்து தள்ள முடியாது. ஒளியைக் கொண்டு வந்தால் அது தானே ஓடிவிடும்.


அது போல,


நாம் முன் செய்த பாவத்தை ஒன்றும் செய்ய முடியாது. செய்த நல்வினையும், தீ வினையும் பாவ புண்ணியமாக மாறி இந்தப் பிறவியில் இன்ப துன்பங்களைத் தரும். 


முன் செய்த நல் வினை, தீவினை 

பாவ புண்ணியம் 

இப்பிறவியில் இன்பம் துன்பம் 


வந்து நிற்கும் பாவத்தை என்ன செய்வது? பிடித்துத் தள்ள முடியுமா? வேண்டாம் என்று பயந்து ஓட முடியுமா? முடியாது. 


நாலடியார் சொல்கிறது 


"எப்படி விளக்கின் முன்னால் இருள் நிற்காதோ அது போல தவத்தின் முன்னால் பாவம் நிற்காது"


என்று. 


நம்மால் பாவத்தை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், தவம் செய்ய முடியும். தவம் செய்தால், பாவம் ஓடி விடும். 


சரி, இருள் விலகி விட்டதே என்று விளக்கை அணைத்தால் என்ன ஆகும்? ஓடிய இருள் உடனே வந்து விடும். அது போல, தவம் செய்வதை நிறுத்தினால் பாவம் மீண்டும் வந்துவிடும். 


விளக்கில் ஒளி குறைந்தால் இருள் வருவது போல, தவம் குறைந்தால் பாவம் வரும். 


பாடல் 


 விளக்குப் புகஇருள் மாய்ந்தாங் கொருவன்

தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்

தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை

தீர்விடத்து நிற்குமாம் தீது.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post.html


(pl click the above link to continue reading)



விளக்குப் = ஒளி பொருந்திய விளக்கு 


புக = வந்தவுடன் 


இருள் மாய்ந்தாங் = இருள் மாய்ந்து ஆங்கு 


கொருவன் = ஒருவன் 


தவத்தின்முன் = தவத்தின் முன் 


நில்லாதாம் பாவம் = பாவம் நிற்காது 


விளக்குநெய் = விளக்கின் நெய் 


தேய்விடத்துச் = குறைந்த போது 


சென்றிருள் = சென்ற இருள் 


பாய்ந்தாங்கு = பாய்ந்து அங்கு 


நல்வினை = நல்லவினை 


தீர்விடத்து = தீரும் இடத்தில் 


நிற்குமாம் தீது. = நிற்குமாம் தீது 


அதாவது, தவம் என்ற நல்வினை தீரும் இடத்தில், மீண்டும் பாவம் என்ற தீவினை வந்து நிற்கும். 


தவம் செய்வதை ஒருகாலும் நிறுத்தக் கூடாது என்பது கருத்து. 


நல்ல காரியங்களை எப்போதோ ஒரு தரம், நம் வசதிக்கு செய்வதும், நிறுத்துவதும் கூடாது. 


தமிழில் "கடைபிடிக்க வேண்டும்" என்று ஒரு சொல் வழக்கம் உண்டு. 


கடைபிடித்தல் என்றால் கடைசிவரை பிடிக்க வேண்டும். விட்டுவிடக் கூடாது.