Thursday, March 10, 2022

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - அறமும் வாழ்வும்

 கம்ப இராமாயணம்  - வீடணன் அடைக்கலம் - அறமும் வாழ்வும் 


"நீ என் கண் முன் நிற்காதே. ஓடிப் போய் விடு" என்று அறிவுரைகள் சொன்ன வீடணனை இராவணன் வெறுத்து, கோபம் கொண்டு விரட்டி விடுகிறான். 


இராவணனுக்கு சீதை மேல் காமம் ஒரு புறம். 


அவளை அடைய முடியவில்லையே என்ற கோபமும் வருத்தமும் மறு புறம். 


இதற்கிடையில், உடன் பிறந்த தம்பி தனக்கு உதவி செய்யாமல் அறம் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறானே என்ற வெறுப்பு. 


வார்த்தைகள் வெடிக்கிறது. 


ஆனால், வீடணன் கோபம் கொள்ளவில்லை. வெறுக்கவில்லை. 


மிக மிக நிதானமாக பேசுகிறான். 


இராவணன் உணர்ச்சியின் விளிம்பில் நிற்கிறான் என்றால், வீடணன் அறிவின் உச்சியில் நிற்கிறான். 


இதை ஏன் இராவணன், வீடணன் என்று பார்க்க வேண்டும். 


நம் வீடுகளில் எப்போதும் நிகழ்வதுதானே. 


ஒருவர் கோபம் கொண்டு பேசினால், மற்றவரும் அதற்குச் சரியாக உணர்ச்சியில் வார்த்தைகளை விடக் கூடாது. உணர்ச்சி வசப்பட்டவர் பேசட்டும். எது சரியோ அதை மென்மையாக மற்றவர் எடுத்துச் சொல்லலாம். 


இதற்கு முன்னும் அதற்கு ஒரு உதாரணம் உண்டு. 


கானகம் போ என்ற சொல்லக் கேட்ட இலக்குவன் உணர்ச்சியில், கோபத்தில் ஏதேதோ பேசுகிறான். இராமன் நிதானமாக இருக்கிறான். "மறை கூறிய வாயால்" இப்படி பேசலாமா என்று அவனை திருத்துகிறான். 


அந்த நிதானம் வேண்டும். 


பாடல் 



'வாழியாய் ! கேட்டியால்: வாழ்வு கைம்மிக


ஊழி காண்குறு நினது உயிரை ஓர்கிலாய்,


கீழ்மையோர் சொற்கொடு கெடுதல் நேர்தியோ ?


வாழ்மைதான், அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ?



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_10.html


(Please click the above link to continue reading)



'வாழியாய் ! = நீ (இராவணனாகிய நீ) வாழ்க 


கேட்டியால்: = நான் (வீடணன்) சொல்வதைக் கேள் 


வாழ்வு கைம்மிக = வாழ்வில் உயர்வு பெற 


ஊழி  = ஊழிக் காலத்தை 


காண்குறு = காணும் வரை உள்ள 


நினது உயிரை ஓர்கிலாய், = உன் நீண்ட வாழ்நாளைப் பற்றி நீ நினைக்கவில்லை 


கீழ்மையோர் = கீழானோர் 


சொற்கொடு = சொன்ன சொற்களைக் கேட்டு 


கெடுதல் நேர்தியோ ? = உனக்கு நீயே கெடுதலை தேடிக் கொள்வாயா ?


வாழ்மைதான் = வாழ்க்கைதான் 


அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ? = அறம் பிழைத்தவர்களுக்கு கிடைக்குமோ 


அறம் தவறி நடந்தால் வாழ்க்கை தொலைந்து போய் விடும். 


எவ்வளவு படித்து என்ன, எவ்வளவு தவம் செய்து என்ன, ,எத்தனை வரம் வாங்கி என்ன, அறம் இல்லை என்றால் அத்தனையும் பாழ். 


அவ்வளவு பெரிய இராவனனுக்கே அந்தக் கதி என்றால் மற்றவர் பாடு சொல்லவும் வேண்டுமோ?


நிறைய செல்வம் சேர்த்து விட்டால் போதும், அது நம்மை காக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். 


இராவணனுக்கு முன் எவ்வளவோ பெரிய பெரிய அரக்கர்கள் எல்லாம் இருந்தார்கள். அவனை விட பல மடங்கு வரம் பெற்று, பெரிய பலசாலிகளாக இருந்தார்கள். அறம் தவறி நடந்ததால், இருந்த இடம் தெரியாமல் போனார்கள். 


அரக்கர்கள்தான், தாங்கள் கட்டி வைத்த கோட்டை, ஆள், அம்பு, சேனை, வரம், எல்லாம் தங்களை காக்கும் என்று நினைப்பார்கள் என்கிறார் அபிராமி பட்டர்.



"அரணம் பொருள் என்று அருள் இல்லாத அசுரர்கள் தங்கள் முரண் அன்று அழிய"


என்பார். அரணம் என்றால் அரண், கோட்டை, காவல். அதெல்லாம் ஒரு பொருட்டு அல்ல. அது நம்மை காக்காது. 


அரணம் பொருள் என்று அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள்

முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே,

‘சரணம், சரணம்’ என நின்ற நாயகி தன் அடியார்,

மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந்த வையகத்தே.


அற வழியில் நட என்று நம் இலக்கியங்கள் முடிந்த இடத்தில் எல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. 


அறத்தை போதிப்பதும், அதை பாதுகாப்பதும், அதன் வழி மக்களை கொண்டு செல்வதும் தான் இலக்கியங்களின் நோக்கமாக இருந்திருக்கிறது. 


மேலும் சொல்வான் 




Wednesday, March 9, 2022

திருக்குறள் - செய்நன்றி அறிதல் - பயன்தூக்கார் செய்த உதவி

 திருக்குறள் - செய்நன்றி அறிதல் - பயன்தூக்கார் செய்த உதவி 


முதலில் செய்யாமல் செய்த உதவி பற்றிக் கூறினார். 


இரண்டாவது, காலத்தினால் செய்த உதவி பற்றிக் கூறினார். 


இப்போது, பதில் உதவி எதிர்பார்க்காமல் செய்யும் உதவி பற்றிக் கூறுகிறார். 


ஒருவருக்கு ஒரு உதவி செய்தால் அதனால் நமக்கு என்ன நன்மை விளையும் என்று எதிர் பார்க்காமல் செய்யும் உதவி. 


என் மேலதிகாரிக்கு என் வீட்டில் ஒரு விருந்து வைத்தேன் என்பது ஒரு உதவியா? அவரால் எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கிறது. பதவி உயர்வோ, சம்பள உயர்வோ ஏதோ ஒன்றை எதிர்பார்த்து செய்த உதவி அது. 


ஒரு உயிர் வாடுகிறது. தவிக்கிறது. அதன் மேல் உள்ள கருணையால், அன்பால் உதவி செய்ய வேண்டும். இதைச் செய்தால் எனக்கு என்ன பலன் கிடைக்கும் என்று எதிர்பார்த்து செய்வது உயர்ந்த உதவி அல்ல. 


அப்படி பயன் எதிர் பாராமல் செய்த உதவி இருக்கிறதே அது கடலை விடப் பெரியது என்கிறார். 


பாடல் 


பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலிற் பெரிது


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_9.html


(Please click the above link to continue reading)


பயன்தூக்கார் = மறு பலனை எதிர்பார்க்காமல் 


செய்த உதவி = மற்றவருக்கு செய்த உதவி, நன்மை 


நயன்தூக்கின் = அந்த கருணையை, அன்பை நோக்கின் 


நன்மை கடலிற் பெரிது = அதன் நன்மை கடலை விடப் பெரியது 


சொல்லுக்கு பொருள் புரிகிறது. பொதுவான அர்த்தமும் புரிகிறது. 


இதை யாருக்குச் சொல்கிறார்?  உதவி செய்தவருக்கா? உதவி பெற்றுக் கொண்டவருக்கா? 


இருவருக்கும் இதில் செய்தி இருக்கிறது. 


கல்யாண வீட்டில் மொய் எழுதுகிறோம், பரிசு தருகிறோம். திரும்பி வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இதெல்லாம் ஒரு உதவி கிடையாது என்பதை புரிந்து கொள் என்கிறார் உதவி செய்பவனை பார்த்து. பசி என்று வந்து நிற்கும் ஒரு ஏழைக்கு பத்து ரூபாய் தருகிறாயா, அது கடலை விடப் பெரியது.  சின்ன உதவிதானே என்று நினைக்காதே. பயன் எதிர்பாராமல் செய்த எந்த உதவியும் மிகப் பெரியது. எனவே, அவற்றைச் செய் என்கிறார். கொடுத்தால் பெரிதாக கொடுக்க வேண்டும். இல்லை என்றால் சும்மா இருந்து விடலாம் என்று இருந்து விடாதே. சின்ன உதவி கூட மிகப் பெரியதுதான், பலன் எதிர் பாராமல் செய்தால்.  


நிறைய செய்திதாள்களில், facebook போன்ற வற்றில் விளம்பரம் வரும். என் பிள்ளைக்கு உடம்புக்கு முடியவில்லை. மருத்துவ செலவு பெரிதாக ஆகும். பல இலட்சம் ஆகும். என்னிடம் வசதி இல்லை. உதவி செய்யுங்கள் என்று. ஒரு நூறு ரூபாய் அனுப்பினால் நாம் குறைந்து போய் விட மாட்டோம். இந்த நூறு ரூபாயில் என்ன வந்து விடப் போகிறது என்று நினைக்கக் கூடாது. பல நூறு ரூபாய்கள் சேர்ந்தால் அது பெரிய தொகையாகிவிடும். சின்ன உதவிதான். யாரோ ஒருவரின் கண்ணீரை துடைக்க பயன் படுகிறது அல்லவா? அது கடலை விடப் பெரியது. 


பயன் பெற்றவன், "என்ன பெருசா செஞ்சிட்டார்...இதெல்லாம் ஒரு உதவியா" என்று பெற்ற உதவியை அலட்சியம் செய்யக் கூடாது. செய் நன்றி மறக்கக் கூடாது. அதிகாரம் அது தான். நம்மால் அவருக்கு பதிலுக்கு ஒன்றும் செய்ய முடியாது. அவருக்கு அது தேவையும் இல்லை. அப்படி இருந்தும் செய்தார் அல்லவா, அது மிகப் பெரிய விடயம் என்று மனதில் நினைக்க வேண்டும். 


நாம் பெற்றுக் கொண்ட ஒவ்வொரு உதவியையும் மிகப் பெரிதாக நினைக்க வேண்டும். ஏன்? சின்னது என்று நினைத்தால் மறந்து போவோம். 


"அந்தக் காலத்துல ஏதோ ஒரு வருஷம் எனக்கு பள்ளிகூடத்துக்குபீஸ் அடிச்சார், கொஞ்சம் நோட்டு புத்தகம் வாங்கித் தந்தார் ...அதெல்லாம் ஒரு பெரிய விடயமா ?" என்று கேட்கக் கூடாது. 


அது எல்லாம் விட, பெற்றோர் பிள்ளைகளுக்கு செய்யும் உதவி. பெற்றோர் பதில் உதவி எதிர் பார்த்து செய்வதில்லை. "நீ என் படிப்புக்கும் சாப்பாடுக்கும் எவ்வளவு செலவழித்து இருப்பாய் சொல். ஒரே செக்கில் செட்டில் பண்ணி விடுகிறேன்" என்று கூறினால் அந்த செலவின் மதிப்பு கடல் போல் பெரியது. அவ்வளவு பெரிய தொகைக்கு எங்கே போவது? 


எந்தப் பிள்ளையாலும் அந்தக் கடனை அடைக்க முடியாது. 


பயன் தூக்கா உதவி செய்ய வேண்டும். அப்படி பெற்ற உதவிகளை கடலைப் போல் பெரிதாக நினைக்க வேண்டும். 


இந்த மூன்று குறள்கள் மூலம் செய்யாமல் உதவி, காலத்தினால் செய்த உதவி, பலன் எதிர்பாராமல் செய்த உதவி என்று உதவியின் பெருமை கூறப்பட்டது என்கிறார் பரிமேலழகர். 


சரி, உதவியின் பெருமை கூறியாகிவிட்டது. 


அடுத்து என்னவாக இருக்கும்?





Sunday, March 6, 2022

திருக்குறள் - செய் நன்றி அறிதல் - காலத்தினால் செய்த உதவி

 திருக்குறள் - செய் நன்றி அறிதல் - காலத்தினால் செய்த உதவி 


முந்தைய குறளில் செய்யாமல் செஎய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது என்றார். .


அடுத்து இந்தக் குறளில் காலத்தினால் செய்த உதவி பற்றிக் கூறுகிறார். 


பாடல் 


காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_6.html


(Pl click the above link to continue reading)


காலத்தி னால் = உரிய காலத்தில் 


செய்த நன்றி  = செய்த உதவி 


சிறிதுஎனினும் = சிறிது என்றாலும் 


ஞாலத்தின் = இந்த உலகை விட 


மாணப் பெரிது = மிகப் பெரிது 


எல்லா வார்த்தைக்கும் அர்த்தம் தெரியும். ஆனால், பொருள் விளங்காது. 


அது என்ன காலத்தினால் செய்த உதவி? 


பரிமேலழகர் இல்லாவிட்டால் நமக்கு இது புரியவே புரியாது. 


ஒரு குவளை தண்ணீர் நமக்கு ஒருவர் தருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அது என்ன பெரிய உதவியா?  சரி, ரொம்ப தாகமாக இருக்கும் போது தருகிறார் என்றே வைத்துக் கொள்வோம்...அப்போதும் அது என்ன பெரிய உதவியா? அவர் தராவிட்டால் வேறு ஒருவரிடம் வாங்கிக் கொள்கிறோம். அல்லது ஏதாவது கடையில் ஒரு பாட்டில் நீர் வாங்கிக் குடித்துக் கொள்கிறோம்.  இது என்ன பெரிய உதவி?


எங்கோ ஒரு பாலைவனத்தில் சிக்கிக் கொண்டோம், அல்லது உக்ரைன் போன்ற ஒரு யுத்தம் நடக்கும் ஊரில் சிக்கிக் கொண்டோம். தப்பிச் செல்கிறோம். வண்டி இல்லை. ரொம்ப தூரம் நடக்க வேண்டி இருக்கிறது. நாக்கு வரள்கிறது. அக்கம் பக்கம் கடை ஒண்ணும் இல்லை. அத்துவானக் காடு. தாகம் உயிர் போகிறது. கண் இருண்டு வருகிறது. அப்போது ஒருவர் ஒரு பாட்டில் நீர் தருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த நீரின் மதிப்பு எவ்வளவு இருக்கும்? 


ஒரு நூறு ரூபாய் எவ்வளவு பெரிய உதவி? பெரிய உதவி ஒன்றும் இல்லை. 


அதி காலை. உடற் பயிற்சி என்று நடை போகிறோம். இருட்டில், ஒரு கார் நம் மேல் இடித்து விடுகிறது. அடிபட்டு இரத்தம் போய் கொண்டிருக்கிறது.  அக்கம் பக்கம் யாரும் இல்லை. செல் போன் எங்கே என்று தெரியவில்லை. அப்போது ஒருவர், நம்மை தூக்கி எடுத்து ஒரு ஆட்டோவில் போட்டு, ஆட்டோ ஓட்டுபவருக்கு நூறு ரூபாய் கொடுத்து, நம்மை அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல அனுப்புகிறார். "நீ முன்னால போப்பா...நான் பின்னால என் வண்டியில வர்றேன்" என்று நம்மை சரியான நேரத்தில் மருத்துவ மனையில் சேர்த்து உயிர் காக்கிறார். அவருக்கு செலவு என்னவோ நூறு ரூபாய் தான். 


இப்படி எவ்வளவோ உதாரணம் சொல்லலாம். 


பரிமேலழகர் சொல்கிறார் 


"ஒருவனுக்கு இறுதிவந்த எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம்"


காலம் என்றால் இறுதி வந்த காலம். அல்லது மிகப் பெரிய இக்கட்டு. சிக்கல். அந்த நேரத்தில் செய்த உதவி. அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், உலகை விடப்  பெரியது. 


நான் இதை இன்னொரு விதமாக சிந்தித்தேன். சரியா தவறா என்று தெரியவில்லை. 


ஒருவருக்கு உதவியை எவ்வளவோ வகையில் செய்யலாம்...பணம் கொடுக்கலாம், வேலை வாங்கித் தரலாம், சம்பந்தம் பேசி முடிக்கலாம், இப்படி ஆயிரம் வழியில் உதவி செய்யலாம். 


ஒருவருக்கு நம் நேரத்தை செலவழித்து செய்யும் உதவி மிகப் பெரியது. "காலத்தினால்" என்றால் நேரத்தின் மூலம் செய்யும் உதவி. 


ஏன் அது பெரியது?


பணம், பொருள் எல்லாம் பின் சம்பாதித்துக் கொள்ளலாம். உதவி பெற்றவர் கூட திருப்பித் தந்து விடலாம். ஆனால், நாம் நம் நேரத்தை செலவிட்டு உதவி செய்தால், அது திரும்பி வரவே வராது. யாரும் நமக்கு ஒரு மணி நேரம் அதிகம் தந்து விட முடியாது. திருப்பி தர முடியாத உதவி என்பதால் அது காலத்தால் செய்த உதவி. 


பொருளால் செய்த உதவி 

அறிவால் செய்த உதவி 

பணத்தால் செய்த உதவி 

அதிகாரத்தால் செய்த உதவி 


என்பது போல


காலத்தால் செய்த உதவி. 


அது மட்டும் அல்ல, ஒருவன் துன்பத்தில் இருக்கும் போது, அவன் அருகில் இருந்து, அவனுக்கு ஆறுதல் சொல்லி அவனை தேற்றுவது என்பது பெரிய விடயம். ஆயிரம் ரூபாய் பணம் யார் வேண்டுமானாலும் கொடுத்துவிட முடியும். இரண்டு நாள் அவன் கூட இருந்து அவனுக்கு ஆறுதலாக இருக்க முடியுமா ?


பணம் எல்லா துன்பத்துக்கும் விடை இல்லை. மனித நேயம், ஒருவருக்கு ஒருவர் கூட இருந்து, கை பிடித்து, முதுகை தடவிக் கொடுத்து, அழுவதற்கு தோள் தந்து பக்கத்தில் இருப்பது பெரிய விடயம். எனவே, ,அதை "காலத்தால்" செய்த உதவி என்று கூறி இருப்பாரோ?


இது யார் சொன்ன உரையும் இல்லை. இது இலக்கணப்படி தவறாகக் கூட இருக்கலாம். 


தோன்றியது. அவ்வளவுதான். 








Saturday, March 5, 2022

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான்

கம்ப இராமாயணம் - வீடணன் அடைக்கலம் - அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான் 


சீதையை விட்டுவிடு என்று வீடணன் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். இராவணன் கேட்பதாக இல்லை. சீதை மேல் கொண்ட காமம் ஒரு புறம். தம்பி இப்படிச் சொல்கிறானே என்று அவன் மேல் கோபம் மறுபுறம். காமமும், கோபமும் சேர்ந்தால் கேட்க வேண்டுமா அழிவுக்கு. அறிவு நீங்கி விடும்.


தனக்கு அறிவுரை சொன்ன வீடணன் மேல் கோபம் கொண்டு இராவணன் சொல்கிறான் 


"உன்னை கொன்றால் எனக்கு பழி வரும் என்பதால் உன்னைக் கொல்லாமல் விடுகிறேன். எனக்கு அறிவுரை சொல்வதை நிறுத்திக்கொள். என் கண் முன் நில்லாதே. ஓடி விடு" 


என்று அவனை விரட்டுகிறான் இராவணன். .


பாடல் 



‘பழியினை உணர்ந்து யான் படுக்கிலேன் உனை;

ஒழி சில புகலுதல் : ஒல்லை நீங்குதி;

விழி எதிர் நிற்றியேல் விளிதி “ என்றனன்

அழிவினை எய்துவான் அறிவு நீங்கினான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_5.html


((please click the above link to continue reading))


‘பழியினை = என் மேல் பழி வரும் என்று 


உணர்ந்து = உணர்ந்து 


யான் படுக்கிலேன் உனை; = உன்னை நான் கொல்லாமல் விடுகிறேன் 


ஒழி = விட்டு விடு 


சில புகலுதல் = இந்த மாதிரி சில்லறைத் தனமாக எனக்கு அறிவுரை கூறுவதை 


ஒல்லை நீங்குதி; = உடனடியாக ஓடிப் போய் விடு 


விழி எதிர் நிற்றியேல் = என் கண் முன் நின்றால் 


விளிதி “ என்றனன் = இறந்து போவாய் என்றான் 


காமம் மிகுந்தால் அறிவு மங்கும். யார் சொன்னாலும் மண்டையில் ஏறாது. 


கோபம் மிகுந்தாலும், அறிவு மங்கும். கோபம் கண்ணை மறைக்கும். 


தனக்குள்ள அறிவு மங்குவது மட்டும் அல்ல, பிறர் நல்லவை சொன்னாலும் அறிவு அதைப் பற்றாது. 


அது ஒரு புறம் இருக்கட்டும்.


நம்மிடம் யாராவது கோபித்து பேசினால் நமக்கு எப்படி இருக்கும்? நமக்கு பதிலுக்கு கோபம் வருமா வராதா? அது யாராகவும் இருந்துவிட்டு போகட்டும்....பெற்றோர், ஆசிரியர், கணவன், மனைவி, நட்பு, சுற்றம் என்று யார் நம் மேல் கோபம் கொண்டு பேசினாலும், பதிலுக்கு கோபப் படுவது இயற்கைதானே. 


நாம் வார்த்தைகளை அள்ளி வீசாவிட்டாலும், உள்ளுக்குள் கோபம் இருக்கும் தானே. 


இராவணன் இவ்வளவு சொன்ன பின், வீடணன் என்ன செய்தான்? எப்படிச் செய்தான்?


மேலும், சிந்திப்போம். 



Thursday, March 3, 2022

அபிராமி அந்தாதி - ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை

 அபிராமி அந்தாதி - ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை


ஒரு பெண்ணைப் பார்க்கிறோம். அவள் மேல் காதல் வருகிறது. அன்பு பிறக்கிறது. ஏன் அவள் மேல் மட்டும் அன்பு, காதல்? மற்ற பெண்கள் எல்லாம் பெண்கள் இல்லையா? 


மற்றவர்களும் பெண்கள் தான். ஆனால், இந்த ஒரு பெண் அவள் மேல் அன்பு செலுத்த என்னைத் தூண்டுகிறாள். நான் என்ன செய்வது? அவளின் அருகாமை அவள் மேல் அன்பு சுரக்கச் செய்கிறது. அவள் எனக்கு காதல் என்றால் என்ன என்று கற்றுக் கொடுத்தாள். 


அந்த ஒரு பார்வை, அந்தச் சின்ன புன்னகை, எல்லாம் அவள் மேல் காதலை மேலும் மேலும் தூண்டி விடுகிறது. 


என்று அவள் மேல் காதல் வந்ததோ, வேறு ஒரு சிந்தனையும் இல்லை. எந்நேரமும் அவள் நினைப்பு தான். 


உலகில் ஏதேதோ நடக்கிறது. எனக்கு அதைப் பற்றியெல்லாம் ஒரு கவலையும் இல்லை. 


அவள் அன்பு ஒன்று போதும். ஜன்ம சாபல்யம் அடைந்து விடும். இனி ஒரு பிறவி இல்லை. செய்த அத்தனை பாவங்களும் அவள் அன்பில் கரைந்து போய் விட்டது. இனி பாவம் செய்யவே முடியாது. அவள் அன்பு இருக்கும் போது வேறு என்ன வேண்டும்? ஒரு ஆசையும் இல்லை. ஒரு தேடலும் இல்லை. கடவுளும், மதங்களும், சொர்கமும், வீடு பேறும் எல்லாம் அவளுள் அடக்கம். 


இனி இன்னொரு பெண்ணை பார்க்கும் ஆசை கூட இல்லை. அவளுக்கு மேலா இன்னொரு பெண் இருந்து விடப் போகிறாள்? 


அபிராமி அந்தாதி படிக்கும் போது மனம் கரைந்துதான் போகிறது. 



பாடல் 


உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து இங்கு

எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் இனி எண்ணுதற்குச்

சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை

அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_51.html


(Please click the above link to continue reading)


உமையும்  = அபிராமியும் 


உமையொரு பாகனும் = அவளை தன் உடலில் பாதியாகக் கொண்ட அவனும் 


 ஏக உருவில் வந்து = ஒரே உருவில் வந்து 


இங்கு = இங்கு 


எமையும் = என்னை 


தமக்கு அன்பு செய்ய வைத்தார் = அவர்கள் மேல் அன்பு செய்ய வைத்தார்கள் 


இனி எண்ணுதற்குச் = இனி சிந்தித்து குழம்ப 


சமையங்களும் இல்லை = நேரம் இல்லை, மற்ற கொள்கைகள், மதங்கள் இல்லை 


 ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை = மீண்டும் என்னை பெற்று எடுக்க ஒரு தாயும் இல்லை 



அமையும் = அமைதியுறும் 


அமையுறு தோளியர் = அழகிய தோள்களைக் கொண்ட பெண்கள் 


மேல் வைத்த ஆசையுமே = மேல் வைத்த ஆசையுமே 


புரிந்தால், நல்லது. 


புரியாவிட்டாலும், நல்லது தான். 



திருக்குறள் - செய்நன்றி அறிதல்

 திருக்குறள் - செய்நன்றி அறிதல் 


ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம். செய்நன்றி அறிதலில் என்ன சொல்ல முடியும்? 


செய்த நன்றியை மறக்காதே என்று சொல்லலாம். மறந்தால் வரும் தீமை பற்றி சொல்லலாம். மறவாமல் இருந்தால் வரும் நன்மை பற்றிச் சொல்லலாம். மூணு குறள் போதும். இதில் வேறு என்ன இருக்கிறது என்று நாம் யோசிப்போம். 


வள்ளுவரின் சிந்தனையின் விரிவு இந்த அதிகாரத்தை படிக்கும் போது தெரியும். இப்படி கூட சிந்திக்க முடியுமா என்று நாம் வியப்போம். 


முதல் குறளில் செய்யாமல் செய்த உதவி பற்றி கூறுகிறார். 


அது என்ன செய்யாமல் செய்த உதவி?


நாம் ஒரு சிக்கலில், இக்கட்டில் இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். மற்றவர்களிடம் போய் உதவி கேட்கவும் தயக்கமாக இருக்கிறது. கூச்சமாகவும் இருக்கிறது. கேட்டு தரவில்லை என்றால் அவமானமாக இருக்கும். அப்புறம் எப்படி அவர்கள் முகத்தில் விழிப்பது என்ற சங்கடம்  வரும். 


அப்படி இருக்கும் போது, ஒருவர் தானே வந்து நமக்கு ஒரு உதவி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நமக்கு எப்படி இருக்கும். அவருக்கு நாம் முன்ன பின்ன உதவி செய்தது கிடையாது. அவரே வந்தார், செய்தார், போய் விட்டார் என்றால் எப்படி இருக்கும் 


அப்படிப் பட்ட உதவிக்கு இந்த உலகையும், வானத்தையும் தந்தாலும் போதாது என்கிறார். அதாவது அது அவ்வளவு உயர்ந்ததாம். 


பாடல் 


செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_3.html


(pl click the above link to continue reading)


செய்யாமல் = இது வரை நாம் ஒருவருக்கு ஒரு வித உதவியும் செய்யாமல் இருக்கும் போது 


செய்த உதவிக்கு = அவர் நமக்கு செய்த உதவி 


வையகமும் = இந்த மண்ணுலகும் 


வானகமும் = அந்த வானுலகும் 


ஆற்றல் அரிது. = கொடுத்தாலும் போதாது 


நமக்கு வேண்டிய ஒருவர், கணவனோ/மனைவியோ, பிள்ளையோ, பெற்றோரோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டு இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். மருத்துவர் சொல்கிறார் இரண்டு பாட்டில் இரத்தம் அவசரமாக தேவைப் படுகிறது என்கிறார். அப்போது அங்கு வந்த ஒருவர், "என் இரத்தமும் அதே குரூப் தான், எடுத்துக் கொள்ளுங்கள்" என்று தருகிறார் என்று வைத்துக் கொள்வோம். நமக்கு வேண்டியவரின் உயிர் காப்பாற்றப் படுகிறது. அந்த உதவிக்கு எவ்வளவு கைம்மாறு செய்யலாம்?


இதைப் படிக்கும் வாசகர்கள் பல பேர் பொருளாதார நிலைமையில் ஒரு நல்ல இடத்தில் இருக்கலாம். நல்ல வசதி இல்லாத ஒருவர் பெண்ணுக்கு கல்யாணம், பையனுக்கு கல்லூரியில் அனுமதி, வீடு ஏலத்துக்கு வருகிறது அதை தடுத்து நிறுத்த கொஞ்சம் பணம் வேண்டும் என்று கையை பிசைந்து கொண்டு இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் 


நாம் போய், 'கவலைப் படாதீங்க, நான் இருக்கேன். பொண்ணு கல்யாணத்தை நடத்திறலாம் , பையனை அனுப்புங்க செக் கொடுத்து அனுப்புகிறேன், வீட்டு மேல எவ்வளவு கடன் இருக்கு...சொல்லுங்க வட்டியும் முதலும் கட்டி வீட்டை எடுத்துருவோம்...மத்தது எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்" என்று உதவி செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்...அது அவருக்கு எப்படி இருக்கும்?


இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன என்றால், செய்யாமல் செய்த உதவி மிகப் பெரியது என்றால், அதை நாம் ஏன் செய்யக் கூடாது? வாழ்க்கையில் ஒரு இக்கட்டான இடத்தில் உள்ள ஒருவருக்கு நாம் செய்யும் உதவி மிகப் பெரியது. நமக்கு உதவி செய்யாதவர்களுக்கு நாம் உதவி செய்து பழக வேண்டும். 


முன்ன பின்ன தெரியாத ஒருவருக்கு நாம் உதவி செய்வதால் நமக்கு என்ன நன்மை என்று கேட்டால், அருணகிரிநாதர் சொல்கிறார் "எங்காயினும் வரும் ஏற்பவருக்கு இட்டது" என்று. .




பொங்கார வேலையில் வேலைவிட் டோனருள் போலுதவ

"எங்கா யினும்வரு மேற்பவர்க் கிட்ட(து)" திடாமல்வைத்த

வங்கா ரமுமுங்கள் சிங்கார வீடு மடந்தையருஞ்

சங்காத மோகெடு வீருயிர் போமத் தனிவழிக்கே.


அருணகிரி ஒரு படி மேலே போகிறார். சரி, வேண்டியவர்களுக்கு கொடுக்காமல் வைத்து என்ன செய்யப் போகிறாய்? 


உங்கள் சிங்கார வீடும், பெண்களும் நிரந்தரமாக உங்களுடன் இருக்குமா? என்கிறார். 


உதவி என்று ஒருவர் கேட்டால், அவர் நமக்கு முன் என்ன உதவி செய்திருக்கிறார் என்று எண்ணாமல் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்கிறார். 


நமக்கு உதவி செய்யாத ஒருவருக்கு நாம் உதவி செய்ய வேண்டும் என்றால், நமக்கு உதவி செய்தவர்களுக்கு கட்டாயம் மறு உதவி, கைம்மாறு செய்ய வேண்டும் என்று சொல்லாமல் பெறப்படும். 


உனக்கு உதவி செய்தவனுக்கு நீ மறு உதவி செய் என்று சொல்லுவது பெரிய விடயம் இல்லை. 


உனக்கு உதவி செய்யாதவனுக்கு நீ செய்யும் உதவி மண்ணை விட, விண்ணை விடப் பெரியது என்று சொல்லும் போது, உனக்கு உதவி செய்தவனுக்கு நீ செய்யும் உதவி அவ்வளவு பெரியதில்லை, எனவே, யோசிக்காமல் அதையும் செய் என்று கூறுகிறார். 


உதவி பற்றி இப்படி சிந்தித்து இருப்போமா?


அடுத்த முறை பூஜை செய்யும் போது, வள்ளுவருக்கு ஒரு பூ எடுத்துப் போடுங்கள். 


அது அவர் செய்த உதவிக்கு நாம் செய்யும் கைம்மாறு.






Tuesday, March 1, 2022

திருக்குறள் - செய்நன்றி மறவாமை

 திருக்குறள் - செய்நன்றி மறவாமை 


உலகில் எத்தனையோ கொடிய பாவங்கள் இருக்கின்றன.  நம்மால் மனதால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு கொடுமைகள் நடக்கின்றன. சொல்லவும், படிக்கவும், ,கேட்கவுமே மனம் நடுங்கும். இப்படியுமா மிருக குணம் மனிதர்களிடம் இருக்கும் என்று மனம் பதைக்கும்.


அவற்றைப் பற்றி எல்லாம் நாளும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவற்றை சொல்லாமல் விடுவதே நலம்.


அப்படிப்பட்ட கொடுமைகளில் மிகப் பெரிய கொடுமை எது தெரியுமா?  


செய் நன்றி மறப்பது தான் என்கிறது வள்ளுவம். 


ஆச்சரியமாக இருக்கும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, காட்டிக் கொடுத்தல், உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தல், அடுத்து கெடுதல் என்று ஆயிரம் பாவங்கள் இருக்க, செய் நன்றி மறப்பதை மிகப் பெரிய பாவமாக ஏன் சொல்ல வேண்டும்?


இந்த பாவத்துக்கும் ஒரு பிரயாசித்தம் உண்டு. கழுவாய் உண்டு. பாவ விமோசனம் உண்டு. ஆனால், செய் நன்றி மறந்த பாவத்துக்கு பிரயாசித்தமே கிடையாது என்கிறார் வள்ளுவர். 


எந்த கங்கையில் மூழ்கினாலும், எந்த கோவிலுக்குப் போனாலும், என்ன தான தர்மம் செய்தாலும், செய் நன்றி கொன்ற பாவம் மட்டும் போகவே போகாது என்கிறார்.


அப்படி என்ன பெரிய பாவம் அது?


யோசித்துப் பார்ப்போம். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post.html


(Pl click the above link to continue reading)



செய்நன்றி முதலில் பெற்றோரிடம் ஆரம்பிக்கிறது. நல்ல பெற்றோர்.  அப்படிப்பட்ட பெற்றோர் செய்த உதவியை மறப்பது. 


அடுத்தது, ஆசிரியர். அறிவுக் கண்ணை திறந்து வைத்த ஆசான். அவர் செய்த நன்றியை மறப்பது. 


அடுத்தது, உடன் பிறப்பு, நட்பு, உறவு ...அவர்கள் செய்த உதவியை மறப்பது.


அடுத்து, நோய் தீர்த்த மருத்துவன், உணவு செய்து கொடுத்த விவசாயி, உயிரை பணயம் வைத்து நம்மை காக்கும் படை வீரன், அவர்கள் செய்த நன்றியை மறப்பது. 


அடுத்து, வீட்டு வேலைக்காரன், வண்டி ஓட்டுபவன், வீட்டு காவல் காரன்....


சொல்லிக் கொண்டே போகலாம். எவ்வளவு பேர் நமக்கு நன்மை செய்கிறார்கள்?


swtich ஐ தட்டினால் காற்று வருகிறது, தொலைக் காட்சி வருகிறது, குளிர்ந்த காற்று வருகிறது, குளிக்க சூடான நீர் வருகிறது. எப்படி? எவ்வளவு பேரின் உழைப்பு அதன் பின்னால் இருக்கிறது. 


நான் எழுதுவதை நீங்கள் படிக்க எவ்வளவு பேரின் உதவி வேண்டும். 


நன்றியோடு இருப்பது என்றால் இருபத்தி நான்கு மணி நேரமும் நன்றியோடு தான் இருக்க வேண்டும். ஒரு கணம் கூட நன்றி மறக்க முடியாது. 


இவ்வளவு நன்மையை பெற்ற ஒருவன், அவற்றை மறப்பான் என்றால், அவன் மனம் எவ்வளவு வறண்டு இருக்கும். அவன் வேறு என்ன கொடுமை செய்ய மாட்டான் ? 


ஏனைய குற்றங்கள் ஒருவன் மற்றவருக்கு செய்வது என்ற அளவில் நிற்கும். 


நன்றி மறப்பது என்பது ஒருவன் ஒரு சமுதாயத்துக்கு செய்யும் குற்றம், ஒரு நாட்டுக்கு செய்யும் குற்றம், மனித குலத்துக்கே செய்யும் குற்றம். 


எப்படி எப்படியோ சிதறிக் கிடந்த புராணங்களை, வேத பாடங்களை தொகுத்துத் தந்தார் வியாசர். நன்றி வேண்டாமா?


பிரபந்தத்தை, தேவார திருவாசகத்தை தொகுத்தவர்கள் பால் நன்றி வேண்டாமா?


தடுப்பூசி கண்டு பிடித்தவர்கள், நோய் தீர்க்கும் மருந்தை கண்டு பிடித்தவர்கள் என்று எவ்வளவு பேருக்கு நாம் நன்றியோடு இருக்க வேண்டும். 


ஒவ்வொருவரின் இதயம் முழுவதும் நன்றியால் நிறைந்தால், உலகம் எவ்வளவு இனிமையாக இருக்கும். தவறுகள் நடக்குமா? தவறு செய்யும் எண்ணம் கூட வராது. 


தனி மனிதன் சிறக்க, குடும்பம் சிறக்க, சமுதாயம், நாடு சிறக்க நன்றி மறவாமை வேண்டும். 


பெரிய அறம். 


இந்த அதிகாரத்தில் வள்ளுவர் சொல்லும் விடயங்கள் நம் கற்பனைக்கும் எட்டாதவை. 


அவற்றை நாளை முதல் சிந்திக்க இருக்கிறோம்.