Tuesday, May 31, 2022

திருக்குறள் - நன்றிக்கு வித்தாகும் - பாகம் 2

 

 திருக்குறள் - நன்றிக்கு வித்தாகும்  - பாகம் 2


(இதன் முதல் பாகத்தை கீழே உள்ள இணைய தளத்தில் காணலாம் 


பாடல் 


நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்


பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2_31.html


(pl click the above link to continue reading)


நன்றிக்கு  = நன்மைக்கு 


வித்தாகும் = விதையாகும் 


நல்லொழுக்கம் = நல்ல ஒழுக்கம் 


தீயொழுக்கம் = தீய ஒழுக்கம் 


என்றும் இடும்பை தரும் = எப்போதும் துன்பத்தைத் தரும். 


இதில், நன்றிக்கு வித்தாகும் என்ற தொடரில் வித்து (விதை) எப்படி பலவாக பிரிந்து பலன் தருமோ அது போல நல்ல ஒழுக்கமும் பலன் தரும் என்ற இடத்தில் முந்தைய பதிவை நிறுத்தி இருந்தோம். 


எப்படி என்று பார்ப்போம். 


வீட்டில் ஒரு பிள்ளை தினம் தோறும் காலை இரண்டு மணி நேரம், மாலை இரண்டு மணி நேரம் படிக்கிறான். அது அவனது ஒழுக்கம். அதனால் நல்ல மதிப்பெண்கள் பெற்று, நல்ல வேலை கிடைக்கிறது. 


அது அவனுக்கு கிடைத்த பலன். நல்ல வேலை, நல்ல சம்பளம் என்றால் அவன் பிள்ளைகளுக்கு அது உதவும் அல்லவா? அவன் பேரப் பிள்ளைகளுக்கு உதவும் அல்லவா? 


அவன் எந்த நிறுவனத்தில் வேலை செய்கிறானோ அது நன்றாக வளரும். அதில் முதலீடு செய்தவர்கள் பலன் பெறுவார்கள். 


அந்த நிறுவனம் வளரும் போது அங்கு வேலை செய்யும் மறவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். அவர்களும், அவர்கள் பிள்ளைகளும் பலன் பெறுவார்கள். 


மேலும், நிறுவனம் வளரும் போது மேலும் பலருக்கு வேலை கிடைக்கும். 


மேலும், அந்த நிறுவனம் ஈட்டும் இலாபத்தில் அரசுக்கு வருமான வரி, விற்பனை வரி கிடைக்கும். அந்தப் பணம் ஏழைகளுக்கு பல விதங்களில் பயன் படும் அல்லவா?


ஒரு ஒழுக்கம். ஒருவனிடம் இருந்தால் அதன் பலன் எப்படி பல்கி பெருகுகிறது என்று கவனிக்க வேண்டும். 


சரி, நல்ல ஒழுக்கம் இப்படி பெருகுகிறது என்றால் தீய ஒழுக்கமும் அப்படித் தான் பெருகும். ஒருவன் ஒரு தீமை செய்கிறான் என்றால் அது அவனை மட்டும் பாதிக்காது. அவன் குடும்பம், சுற்றம், நட்பு என்று எல்லோரையும் பாதிக்கும். 


ஒரு தவறுதானே என்று நாம் நினைக்கலாம். முதலில் அப்படித்தான் ஆரம்பிக்கும். பின் பழக்கமாகிவிடும். அதுவே ஒழுக்கமாகிவிடும். பின் தீராத துன்பத்தைத் தரும். 


இராவணன் செய்த ஒரு ஒழுக்கக் குறைவான செயல் அவன் மட்டிலுமா நின்றது? அரக்கர் குலத்தையே வேர் அறுத்தது அல்லவா? அதோடு போயிற்றா, இன்று வரை அவனை ஒழுக்கம் குறைந்தவனாகத் தான் நாம் நினைக்கிறோம். ஒரு நாளும் அந்தப் பழி போகாது. 


இதில் பரிமேலழகர் ஒரு நுட்பம் செய்கிறார். 


"என்றும் இடும்பைத் தரும்" என்பதில் உள்ள "என்றும்" என்ற சொல்லைப் பிடித்துக் கொள்கிறார். 


என்றும் என்றால் எதுவரையில் என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு, இந்த பிறவி மட்டும் அல்ல, இனி வரும் பிறவிகள் தோறும் தொடரும் என்கிறார். 


சற்றே விரித்துப் பார்ப்போம். 


ஒருமைக்கண் தான் கற்ற கல்வி எழுமைக்கும் ஏமாப்பு உடைத்து என்பது வள்ளுவம். .


ஒரு பிறவியில் கற்ற கல்வி, ஏழு பிறவிக்கு தொடரும் என்பது கருத்து. அது போல, ஒரு பிறவியில் கொண்ட தீய ஒழுக்கம், "எப்போதும்" துன்பத்தைத் தரும். 


நரகத்தில் கிடந்து அல்லல்  பட வேண்டி வரும். 


மறு பிறப்பில் துன்பம் வந்து சேரும். 


அது மட்டும் அல்ல, தீய ஒழுக்கம் உள்ளவனை அவன் காலத்துக்குப் பின்னும் மக்கள் ஏசிக் கொண்டே இருப்பார்கள். 


கட்டபொம்மனை காட்டிக் கொடுத்த எட்டப்பனை இன்றும் நாம் நிந்திக்கிறோம் அல்லவா?  என்றும் இடும்பை தந்து கொண்டு இருக்கிறது அல்லவா?


கட்டபொம்மன் என்றோ இறந்து விட்டான். இன்றும் அவன் பெயரில் ஒரு பேருந்து நிலையம் இருக்கிறது. அவன் பெயரைச் சொல்லி, இறங்குங்கள் என்று தான் சொல்கிறார்கள். இன்றும் கருவுற்ற தாய்மார்கள் அவன் தூக்கில் இடப்பட்ட இடத்துக்குச் சென்று, அங்குள்ள மண்ணை ஒரு சிட்டிகை வாயில் போட்டுக் கொள்கிறார்கள். தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தை கட்டபொம்மன் மாதிரி வீரனாக பிறக்க வேண்டும் என்ற ஆசையில். 


இன்றும் புகழ் சேர்கிறது அல்லவா? 


என்றும் என்பதற்கு "இம்மைக்கும், மறுமைக்கும்" என்று பொருள் சொல்கிறார் பரிமேலழகர். 


தீயொழுக்கம் என்றும் இடும்பைத் தரும். .


நல்லொழுக்கம் என்றும் நன்மை தரும். 


வித்து, என்றும் என்ற இரண்டு வார்த்தைககளில் எவ்வளவு அர்த்தங்களை பொதித்து வைத்து இருக்கிறார் வள்ளுவர். 



Monday, May 30, 2022

யாப்பிலக்கணம் - எதுகை, மோனை

 யாப்பிலக்கணம் - எதுகை, மோனை 


ஒரு புலவருக்கு எது கை தவறினாலும் எதுகை தவறக் கூடாது என்பார்கள். 


எதுகை என்றால் என்ன?


ஒரு பாடலில் இரண்டாவது எழுத்து ஒரே மாதிரி வந்தால் அது எதுகை. 


சில உதாரணங்கள் பார்ப்போம்:


உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர்

மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை

துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்குமத் தோயமென்ன

விதிக்கின்ற மேனி அபிராமி எந்தன் விழுத்துணையே.


என்ற அபிராமி அந்தாதியில் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_30.html


(pl click the above link to continue  reading)


உதிக்கின்ற, மதிக்கின்ற, துதிக்கின்ற, விதிக்கின்ற 


என்று ஒவ்வொரு அடியிலும் முதல் சீரில் இரண்டாவது எழுத்து 'தி' என்று வருகிறது அல்லவா, அது எதுகை. 


ஒவ்வொரு அடியிலும் அது வருவதால், அது 'அடி எதுகை' எனப்படும். 


ஒவ்வொரு சீரிலும் வந்தால் அது சீர் எதுகை எனப்படும். அதில் பல வகை இருக்கிறது. 


முதல் சீர் மற்றும் இரண்டாம் சீர்

முதல் சீர் ம் மற்றும் மூன்றாம் சீர்

முதல் மற்றும் நான்கு 


என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. ஒவ்வொன்றுக்கும் ஒரு பேர் இருக்கிறது. 


ஒரு பாடலில் ஒவ்வொரு சீரிலும் எதுகை வந்தால் அது முற்றெதுகை எனப்படும். 


மாறாக, இரண்டாம் எழுத்து ஒன்றி வராமல், மற்ற எழுத்துகள் ஒன்றி வந்தால் அதற்கு மோனை என்று பெயர். அது முதல் எழுத்தாக இருக்கலாம், மூன்றாம் எழுத்தாக இருக்கலாம்...எந்த எழுத்தாக வேண்டுமானாலும் இருக்கலாம். 


உதாரணமாக 


கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக


இதில் கற்க, கசடற, கற்பவை, கற்றபின் என்ற சீர்களில் 'க' என்ற முதல் எழுத்து ஒன்றி வருகிறது. எனவே அது மோனை. 


எதுகையைப் போலவே இதிலும் அடி மோனை, சீர் மோனை என்று உண்டு. 


துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை


என்ற பாடலில் து என்ற முதல் எழுத்து ஒன்றி வருவதால் அது மோனை, 'ப்' என்ற இரண்டாவது எழுத்து ஒன்றி வருவதால் அது எதுகை. 


இரண்டாவது எழுத்து ஒன்றி வந்தாலும், முதல் எழுத்து அளவோடு இருக்க வேண்டும். 


உதாரணமாக


ஆட்டம் 

பாட்டம் 


என்று வந்தால் அது எதுகை. 


ஆட்டம்

பட்டம்

என்று வந்தால் அது எதுகை இல்லை. 


ஒலியின் இனிமை குறைகிறது அல்லவா?


கூட்டம்,  வாட்டம் - எதுகை

கூட்டம், வட்டம் - எதுகை இல்லை 



எதுகை மோனை வரும் போது பாடலுக்கு ஒரு இசை நயம் வரும். கீழே உள்ள பாடலை படித்துப் பாருங்கள். ஒரு தாள இலயம் தெரிகிறது அல்லவா?




பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,

செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி,

அஞ்சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்

வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்.



ஒரே எழுத்து தான் இருக்க வேண்டும் என்று இல்லை. 


ஒரு எழுத்துக்கு இன எழுத்தும் எதுகை மோனையாக வரலாம். 


அது என்ன இன எழுத்து என்று அடுத்த பதிவில் காணலாம். 


அதுவரை, நீங்கள் இரசித்த எதுகை மோனை உள்ள பாடல்களை பகிர்ந்து கொள்ளலாமே. சுவாரசியமாக இருக்கும். 


சேர்ந்து படிப்போமே....அதுவும் ஒரு சுகம்தான். 


திருக்குறள் - நன்றிக்கு வித்தாகும் - பாகம் 1

 திருக்குறள் - நன்றிக்கு வித்தாகும்  - பாகம் 1 


ஒரு சொல்லில் ஓராயிரம் அர்த்தம் கொண்டு வரும் கலை வள்ளுவருக்கே உரியது.  எப்படித்தான் அந்த சொல் வந்து விழுகிறதோ அந்த இடத்தில் என்று பிரமிப்பை ஏற்படுத்தும். 


அப்படி ஒரு சொல்லைக் கொண்ட குறள் தான் நாம் இன்று பார்க்கப் போவது. 


"நன்மைக்கு வித்தாகும் நல்ல ஒழுக்கம். தீய ஒழுக்கம் என்றும் துன்பத்தைத் தரும்."


இது தான் மேலோட்டமான கருத்து. ஆழமான பல செய்திகள் உண்டு. 


பாடல் 


நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்

என்றும் இடும்பை தரும்


பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1_30.html



(pl click the above link to continue reading)


நன்றிக்கு  = நன்மைக்கு 


வித்தாகும் = விதையாகும் 


நல்லொழுக்கம் = நல்ல ஒழுக்கம் 


தீயொழுக்கம் = தீய ஒழுக்கம் 


என்றும் இடும்பை தரும் = எப்போதும் துன்பத்தைத் தரும். 


படிக்க படிக்க பிரமிப்பாக இருக்கிறது. எதை எழுதுவது, எப்படி எழுதுவது என்று. 


முயற்சிக்கிறேன். 


முதலில், அது என்ன தீய ஒழுக்கம்? ஒழுக்கத்தில் நல்ல ஒழுக்கம் , தீய ஒழுக்கம் என்று இருக்கிறதா? அப்படி என்றால் என்ன?  


ஒழுக்கம் என்றால் ஒழுகுவது. எதையும் முறையாக கடைபிடிப்பது ஒழுக்கம். அது நல்ல விடயமா அல்லது தீய விடயமா என்பது வேறு செய்தி. உதாரணமாக, காலையில் எழுந்தவுடன் பல் துலக்கி முகம் , கை கால் கழுவி பின் தான் காப்பி குடிப்பேன் என்பது ஒரு ஒழுக்கம். இல்லை, படுக்கையிலேயே காப்பி குடிப்பேன். அப்புறம் தான் பல் துலக்குவேன் என்பது இன்னொரு ஒழுக்கம். என்ன ஆனாலும் சரி, காப்பி குடிக்காமல் படுக்கையை விட்டு எழுந்திரிப்பது இல்லை என்று இருந்தால் அதுவும் ஒரு ஒழுக்கம் தான். முறையாக, தவறாமல் செய்வதால் அதுவும் ஒரு ஒழுக்கம் தான். 


நல்ல ஒழுக்கமா, தீய ஒழுக்கமா என்பது வேறு விடயம். 


காப்பி குடிப்பதே ஒரு தீமை என்று சொல்பவர்களுக்கும் இருக்கிறார்கள். அதில் என்ன குளித்துவிட்டு குடிப்பது, குளிக்கும் முன் குடிப்பது  என்று வாதம் செய்யலாம் அல்லவா? 


எனவே முறையாகச் செய்யும் எதுவும் ஒழுக்கம் தான். 


இரண்டாவது, நன்மைக்கு வித்தாகும் நல்லொழுக்கம். அப்படி என்றால் என்ன அர்த்தம்? நல்ல ஒழுக்கம் இல்லாவிட்டால் நன்மை விளையாது. நன்மை விளையாவிட்டால்? தீமை விளையும் என்று அர்த்தம். 


மூன்றாவது, நான் முன் சொன்ன ஒரு வார்த்தை. ஒரு சொல். அது "வித்து" என்ற சொல். வித்து என்றால் விதை. 


நன்மைக்கு விதை நல்ல ஒழுக்கம். 


விதை என்று ஏன் சொல்ல வேண்டும்? 


விதையில் இருந்து செடி வரும், மரமாக வளரும், கிளை பரப்பி, நிழல் தந்து, காய், கனி என்று மிகுந்த பலன்களைத் தரும்.  அதுவும் எப்படி? ஏதோ ஒருவருடம் நிழல், காய், கனி எல்லாம் தந்துவிட்டு நின்று விடாது. ஒவ்வொரு வருடமும் தரும் அல்லவா? அதன் ஆயுள் உள்ள வரை அதில் இருந்து நமக்கு நன்மை கிடைத்துக் கொண்டே இருக்கும். 


சற்று பொறுங்கள், ஆயுள் உள்ள வரை மட்டுமா? 


அந்த மரத்தில் இருந்து வரும் கனியின் உள்ளே விதை இருக்கும். அந்த விதை முளைத்து இன்னும் பல மரங்கள் வரும். அந்த மரங்களில் இருந்து எவ்வளவு பலன்கள் கிடைக்கும். 


என்றோ போட்ட ஒரு விதை எவ்வளவு காலத்துக்கு எவ்வளவு பலன் தருகிறது. 


அது மட்டுமா?


ஒரு விதை, ஒரு மரமாக ஆகிறது. 


ஒரு மரம், பல்லாயிரக் கணக்கான பழங்களை தருகிறது. அவற்றில் இருந்து எவ்வளவு விதைகள் வருகின்றன? அவை அனைத்தும் மரமானால் எவ்வளவு பலன் கிடைக்கும்? 


அது மட்டும் அல்ல. விதை வளர்ந்து விதை நட்டவனுக்கு மட்டுமா பலன் தருகிறது?


மரத்தில் எத்தனையோ பறவைகள் கூடு கட்டுகின்றன. தேனீக்கள் கூட கூடு கட்டலாம். 


மரம், மண் அரிப்பை தடுக்கிறது. அதனால பல நன்மைகள். 


மரம், மழையை கொண்டு வருகிறது. அதனால் எவ்வளவு நன்மைகள். 


இப்படி கணக்கு சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு விதையில் இருந்து எவ்வளவு நன்மை? எவ்வளவு காலத்துக்கு நன்மை.


மரத்தின் கிளையை அறுத்து பெட்டி செய்யலாம், பீரோ செய்யலாம். அது எத்தனை காலம் வரும். மரம் இறந்த பின்னும், அதன் பலன் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 


அது போல ஒரு நல்ல ஒழுக்கம் இருந்தால், அது ஒரு விதை போல இருந்து பல நன்மைகள் செய்யும். 


உதாரணமாக .....



(பதிவு சற்றே நீண்டு விட்டதால், இதை அடுத்த பாகத்தில் தொடர்வோம்)


Sunday, May 29, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 4

  

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 4


(இதன் முந்தைய பதிவுகளை கீழ் காணும் இணைய தளத்தில் காணலாம் . 

பாகம் 1  : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html

பாகம் 2 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html

பாகம் 3 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/3_27.html


)


அசோகவனத்தை அடைந்த அனுமன் சீதையிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேசுவதை நாம் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். 


அனுமன் தன்னைப் பற்றி  மேலே சொன்ன மூன்று பாடல்களில் சீதையிடம் சொல்லி முடிக்கிறான். 


இப்போது சீதை அனுமன் சொன்னதை எல்லாம் கேட்டு மனதில் நினைக்கிறாள். இன்னும் வாய் திறந்து பேசவில்லை. 


என்ன நினைக்கிறாள் ?


"இவனைப் பார்த்தால் அரக்கன் மாதிரி இல்லை. தன் ஐந்து புலன்களையும் வென்று நல் நெறியில் நிற்கும் ஒரு யோகி போல இருக்கிறது. அப்படி இல்லை என்றால் ஒருவேளை ஏதோ ஒரு தேவனாக இருக்க வேண்டும். அவன் உணர்வுகள் நல்லவையாக இருக்கின்றன. அவன் பேச்சில் ஒரு தூய்மை இருக்கிறது. குற்றம் அற்றவனாகத் தெரிகிறான்...." என்று. 



பாடல் 


என்று அவன் இறைஞ்ச நோக்கி,

    இரக்கமும் முனிவும் எய்தி,

‘நின்றவன் நிருதன் அல்லன் :

    நெறி நின்று பொறிகள் ஐந்தும்

வென்றவன் : அல்லன் ஆகில்,

    விண்ணவன் ஆதல் வேண்டும் :

நன்று உணர்வு : உரையும் தூயன் :

    நவை இலன்போலும்! ‘என்னா.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/4.html


(pl click the above link to continue reading) 


என்று அவன் இறைஞ்ச = அவ்வாறு எல்லாம் அவன் (அனுமன்) பணிவோடு சொல்லி நிற்க 


நோக்கி = அவனை நோக்கி 


இரக்கமும் = கருணையும் 


முனிவும் = கோபமும் (ஏன் என்று கீழே விரிவாக காண்போம்) 


எய்தி = அடைந்து 


நின்றவன் = இங்கே நிற்பவன் 


நிருதன் அல்லன்  = அரக்கன் அல்லன் 


நெறி நின்று = நல்ல வழிகளில் நின்று 


பொறிகள் ஐந்தும் = ஐந்து புலன்களையும் 


வென்றவன் = வென்றவன் 


அல்லன் ஆகில், = அப்படி இல்லாவிட்டால் 


விண்ணவன் ஆதல் வேண்டும் : = வானில் உள்ள தேவனாக வேண்டும் 


நன்று உணர்வு  = அவன் உணர்வுகள் நல்லவையாக இருக்கின்றன 


உரையும் தூயன்  = அவன் பேச்சும் தூய்மையாக இருக்கிறது 


நவை இலன்போலும்! ‘என்னா. = குற்றமற்றவன் போலத் தெரிகிறான் என்று எண்ணினாள் 


"இரக்கமும், முனிவும் எய்தினள்"...இரக்கம் சரி. கோபம் ஏன் வர வேண்டும்?


சில சமயம் நமக்கு வேண்டியவர்கள் ஏதேனும் ஒரு துன்பத்தில் மாட்டிக் கொண்டால் நமக்கு அவர்கள் மேல் இரக்கம் வரும், அதே சமயத்தில் கோபமும் வரும்..."என்னத்துக்குப் போய் அந்த வேலையை செஞ்சு இப்படி சிக்கலில் மாட்ட வேண்டும். ...இதெல்லாம் தேவையா...சொன்னா கேக்குறது இல்லை" என்று அவர்கள் மேல் கோபப் பட்டு இருக்கிறோமா இல்லையா? 


வீட்டில் ஏதோ ஒரு பொருள் உயரத்தில் இருக்கிறது.  'அதை கொஞ்சம் எடுத்துத் தாங்க' என்று மனைவி கணவனிடம் சொல்கிறாள். அவன் ஏதோ வேலை மும்முரத்தில் இருக்கிறான். "வர்றேன்" அப்படின்னு பதில் மட்டும் வருது. மனைவிக்கு அவசரம். அவளே ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு மேலே உள்ள பொருளை எடுக்க முயல்கிறாள். பொருள் கொஞ்சம் பளுவானது. நிலை தடுமாறி கீழே விழுந்து மண்டையில் அடிபட்டு லேசாக வீங்கிக் கொள்கிறது. 


கணவன் சத்தம் கேட்டு ஓடி வருகிறான். 


"அடி பட்டு கிடக்கும் அவளை தூக்கி விடுகிறான். அடி பட்ட இடத்தை தேய்த்து விடுகிறான். "வலிக்குதா, இரத்தம் வருதா" என்று  விசாரிக்கிறான். அதுவரை அன்பு. "நான் தான் வர்றேன்னு சொல்றேன்ல...அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு" என்று அவளை கோபிக்கவும் செய்கிறான். 


இது நடப்பது தானே? 


அன்பும், கோபமும் ஒன்றாக வரும். மனித மனம் விசித்திரமானது. ஏன் என்று காரணம் கேட்கக் கூடாது. ஒரே சமயத்தில் பல்வேறு உணர்சிகள்எழுவது இயற்கை. 


பெருமையும், பொறாமையும் ஒன்றாக வருவது இல்லையா? 


சரி, அது ஒருபுறம் இருக்கட்டும். 


சீதை அனுமனைப் பற்றி என்னவெல்லாம் நினைக்கிறாள்?


- அரக்கன் இல்லை 

- தேவன் 

- புலன்களை வென்றவன் 

- நல் வழியில் நிற்பவன் 

- நல்ல உணர்வுகளை உடையவன் 

- தூய சொற்களை உடையவன் 


இதெல்லாம் அவளுக்கு எப்படித் தெரிந்தது?  அவள் அனுமனை முன்ன பின்ன பார்த்தது கூட கிடையாது. பின் எப்படி முடிவு செய்தல் ?


அவன் பேச்சின் மூலம். அனுமனின் மூன்றே மூன்று பாடல்கள் மூலம் அவனின் உயர்வை அவள் அறிந்து கொள்கிறாள். 


இது சீதையிடம் மட்டும் அல்ல. அனுமனை முதன் முதலில் கண்டு சிறிது பேசிய பின் இராமனும் சொல்வான் "யார் கொல்லோ இச் சொல்வின் செல்வன்" என்று. 



பேச்சு ஒருவனை எந்த அளவுக்கு உயர்த்தும் என்று நாம் புரிந்து கொள்ள உதவும் பாடல்கள். 


நாம் பேசும் பேச்சு நம் மதிப்பை பல மடங்கு உயர்த்தும். 


பேச்சு சும்மா வந்து விடாது. பேச்சு என்பது ஏதோ அடுக்கு மொழியில் பேசுவது அல்ல. 


தூய்மையான பேச்சு. அது  எப்படி வரும் ?  


புலன்களை வென்று, நல் வழியில் நடந்தால், உள்ளம் தூய்மையாகி, உயர்ந்த சொற்கள் வெளி வரும். அது நம்மை தேவர்களாக உயரச் செய்யும் 


நல்ல சொற்கள் வரவில்லை என்றால், உள்ளம் தூய்மையாக இல்லை என்று அர்த்தம்.  உள்ளம் தூய்மையாக இல்லை என்றால் புலன்கள் நல்ல வழியில் செல்லவில்லை என்று அர்த்தம். அவை நல்ல வழியில் செல்லாமல் இருக்கக் காரணம், அவற்றை நாம் வென்று அடக்கவில்லை என்று காரணம். 


எவ்வளவு பெரிய உயர்ந்த விடயத்தை கம்பன் எவ்வளவு தெளிவாக சொல்கிறான். 



இலக்கியம் படிப்பதால் வரும் இன்னொரு நன்மை. நம்மை உயர்த்த இலக்கியங்கள் துணை செய்யும். 


நல்ல கதை. இனிமையான பாடல்கள். அதோடு கூட உயர்ந்த கருத்துக்கள். 


இலக்கியம் சுகமானது. 


"நீ இப்படிச் செய் என்றால் யார்க்கும் பிடிக்காது". இப்படி எல்லாம் செய்ததால் அனுமன் உயர்ந்தான் என்று சொல்லி, அப்படியே விட்டு விட்டால், நாமும் அப்படிச் செய்தால் என்ன என்ற எண்ணம் வரும்.. நம்மை அறியாமலேயே அது நம்மை அந்த இடத்துக்கு நகர்த்திச் செல்லும். 

Saturday, May 28, 2022

திருக்குறள் - எய்தாப் பழி

திருக்குறள் - எய்தாப் பழி


பணம் சேர்த்தால் பணம் இருக்கும். சேர்க்காவிட்டால் இருக்காது. அவ்வளவுதானே?


நிறைய படித்தால் கல்வி அறிவு வளரும். படிக்காவிட்டால் வளராது. அதற்கு மேல் அதில் ஒரு சிக்கலும் இல்லை. 


உழைத்தால் உயரலாம். உழைக்காவிட்டால் உயர முடியாது. 


ஆனால்ஒழுக்கம் அப்படிப் பட்டது அல்ல. ஒழுக்கமாக இருந்தால் உயர்வு வரும். ஒழுக்கமாக இல்லாவிட்டால் உயர்வு வராது. அப்படித்தானே நினைப்போம். 


அது தவறு என்கிறார். 


எனக்கு உயர்வு வேண்டாம் என்றால் ஒழுக்கத்தைக் கடைபிடிக்காமல் இருந்து விடலாமா? உயர்வு வராது. அவ்வளவுதானே என்றால் இல்லை. அதற்கும் மேலே இருக்கிறது என்கிறார் வள்ளுவர். 


அது என்ன? 


பாடல் 


ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

எய்துவர் எய்தாப் பழி


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_28.html


(Please click the above link to continue reading)


ஒழுக்கத்தின் = ஒழுக்கமாய் இருப்பதால் 


எய்துவர் = அடைவர் 


மேன்மை = உயர்வு 


இழுக்கத்தின் = ஒழுக்கம் இன்றி இருப்பதால் 


எய்துவர் = அடைவர் 


எய்தாப் பழி = அடைய முடியாத அடையக் கூடாத பழிகளை 


மிக அற்புதமான குறள்.


ஒருவன் எப்படி உயர்வு அடைய முடியும்? நிறைய படித்து, பட்டங்கள் பெற்று, நிறைய பணம் சம்பாதித்து, சாதனைகள் செய்து, புகழ் அடைந்து உயர்வு அடைய முடியுமா என்றால் இல்லை என்கிறார். 


ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை. ஒழுக்கம் தான் உயர்வைத் தரும். 


சரி, ஒழுக்கம் இல்லாவிட்டால் மேன்மை அடைய முடியாது. அவ்வளவுதானே என்றால் இல்லை. 


'இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி' என்கிறார். 


அது என்ன எய்தாப் பழி?


ஒரு ஊரிலே ஒரு திருடன் இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். இரண்டு மூன்று முறை திருடி சிறை சென்று வந்தவன். அவனுக்கு திருடன் என்ற பெயர் வந்து விட்டது. புகழ் இல்லை. மேன்மை இல்லை. 


பின்னொரு நாள், அந்த ஊரில் ஒரு திருட்டு நடந்து விட்டது. இந்தத் திருடன் திருடவில்லை. வேறு யாரோ செய்த திருட்டு. ஊர் மக்கள் இந்தத் திருடனை பிடித்து விசாரிக்கிறார்கள். அவன் தான் திருடவில்லை என்று சத்யம் செய்கிறான். யார் நம்புவார்கள்..."நீ திருட்டுப் பயதாண்டா...இதுக்கு முன்னாடி திருடிட்டு சிறைக்கு சென்றவன் தான...இத மட்டும் நீ செய்யலேன்னுசொன்னா நாங்க நம்பிருவோமா?...இவனை எல்லாம் இப்படி விசாரிக்கக் கூடாது, கட்டி வச்சு நல்லா அடி குடுத்தா உண்மை தான வெளிய வரும்" என்று ஊர் அவனை கட்டி வைத்து துன்புறுத்தும். அல்லது காவலர்கள் செய்வார்கள். 


ஒரு முறை ஒருவன் ஒழுக்கம் தவறினால், பின்னால் அவன் செய்யாத பழியை எல்லாம் ஏற்க வேண்டி வரும். 


எய்தாப் பழி - செய்யாத பழி, ஏற்க வேண்டியில்லாத பழி. ஒழுக்கம் தவறினால் செய்யாத குற்றத்துக்கு எல்லாம் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும்.


இந்த எய்தாப் பழி இருக்கிறதே, அது ஒரு மிகப் பெரிய பழி. 


ஒருவன் ஒரு பெரிய தவறை செய்துவிட்டு சிறை சென்று விடுதலையாகி வருகிறான் என்று வைத்துக் கொள்வோம். 


உலகம் அவனை நல்லவன் என்று ஏற்றுக் கொள்ளுமா?  தண்டனைதான் முடிந்து விட்டதே. குற்றத்துக்கும் தண்டனைக்கும் சரியாப் போச்சு என்று யாரும் நினைப்பது இல்லை. வாழ் நாள் எல்லாம் அந்தப் பழியை அவன் சுமந்து திரிய வேண்டும். "..அதோ போகிறானே அவன் பெரிய கொலைகாரன்,fraud, அயோக்கியன் ...அவன் கிட்ட கொஞ்சம் எச்சரிகையாக இரு" என்று தான் உலகம் அவனை தள்ளி வைத்து தண்டிக்கும். அவன் இப்போது ஒரு குற்றமும் செய்யவில்லை. இருந்தும், பழி ஏற்று தண்டனை அனுபவிக்கிறான். 


ஒரு கொலை செய்து தண்டனை பெற்று மீண்டு வந்தவனுக்கு யாராவது வேலை கொடுப்பார்களா? வாழ்நாள் பூராவும் அவன் தன் குற்றத்தை மறைத்து, மறைந்து திரிய வேண்டி வரும். எப்போதாவது உண்மை வெளியே வந்தால், அவன் வெறுத்து ஒதுக்கப்படுவான். 


ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை

இழுக்கத்தின் எய்தார் அது 


என்று குறள் சொல்லி இருக்கலாம். சொல்லவில்லை.  


எய்தாப் பழி என்று சொல்லி இருக்கிறார். 


எவ்வளவு ஆழமான ஒரு சொல். எவ்வளவு ஆபாத்தான ஒன்று. 


ஒழுக்கக் குறைவால் மேன்மை அடையாதது மட்டும் அல்ல, செய்யாத பழி எல்லாம் வந்து சேரும்.


எனவே,ஒழுங்கா ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துச் சொல்கிறார். 


நாம் இதை கடை பிடிப்பதோடு நின்று விடாமல், நம்மைச் சார்தவர்களுக்கும் எடுத்துச் சொல்லுவோம். அவர்களும் பயன் பெறட்டுமே.






Friday, May 27, 2022

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 3

  

கம்ப இராமாயணம் - அருள் தூதன் - பாகம் 3


(இதன் முந்தைய பதிவுகளை கீழ் காணும் இணைய தளத்தில் காணலாம் . 

பாகம் 1  : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/1.html

பாகம் 2 : https://interestingtamilpoems.blogspot.com/2022/05/2.html


)


அசோகவனத்தை அடைந்த அனுமன் சீதையிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேசுவதை நாம் கேட்டுக் கொண்டு இருக்கிறோம். 


சீதைக்கு சந்தேகம் தீர்ந்து இருக்காது.  இது உண்மையிலயே இராம தூதனா அல்லது அரக்கர்களின் மாயையா என்ற சந்தேகம் அவளுக்குள் இருக்கத்தான் செய்யும். 


திடீரென்று அசொகவனதுக்குள் ஒரு குரங்கு வந்து குதித்து 'நான் இராம தூதன்' என்றால் சந்தேகம் வருமா வராதா? 


இதை அறிந்த அனுமன் மேலும் சொல்கிறான் 


" சந்தேகம் வேண்டாம். என்னிடம் நான் இராம தூதன் என்று நிரூபணம் செய்ய அடையாளங்கள் உள்ளது. மேலும், உண்மை உணர்த்த வேண்டி இராமன் சொன்ன செய்திகளும் என்னிடம் இருக்கிறது. அவற்றை உங்களுக்கு உள்ளங் கை நெல்லிக் கனி போல் காட்டுகிறேன். நெய் விளக்கு போல புனிதமானவளே, வேறு எதையும் நினைக்க வேண்டாம்"என்கிறான்.


பாடல் 


‘ஐயுறல்! உளது அடையாளம் : ஆரியன்

மெய்யுற உணர்த்திய உரையும் வேறு உள;

கை உறு நெல்லி அம் கனியில் காண்டியால்!

நெயுறு விளக்கு அனாய்! நினையல் வேறு! ‘என்றான்.


பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/3_27.html


(pl click the above link to continue reading) 


‘ஐயுறல்! = சந்தேகம் வேண்டாம் 


உளது அடையாளம் = நான் இராம தூதன் என்று அடையாளம் காட்ட என்னிடம் சில நிரூபணங்கள் உள்ளன 


ஆரியன் = இராமன் 


மெய்யுற உணர்த்திய = உண்மையை அறிந்து கொள்ள 


உரையும் வேறு உள = செய்திகளும் இருக்கிறது 


கை உறு = உள்ளங் கையில் உள்ள 


நெல்லி அம் கனியில்  = நெல்லிக் கனி போல 


காண்டியால்! = நீ கண்டு கொள்ளலாம் 


நெயுறு விளக்கு அனாய்! = நெய் விளக்கு போல புனிதமானவளே 


 நினையல் வேறு! ‘என்றான். = வேறு எதையும் நினைக்க வேண்டாம் என்றான் 



அவளுக்கு சந்தேகம் இருக்கும் என்று அனுமன் கணிக்கிறான். 


அந்த சந்தேகம் போக என்ன சொல்ல வேண்டுமோ அதை அறிந்து சொல்கிறான். 


இராமன் அனுப்பிய அடையாளப் பொருள்கள் இருக்கிறது என்கிறான். 


ஒரு வேளை இராமனுக்குத் தெரியாமல் இவன் அந்தப் பொருள்களை களவாடி வந்திருப்பானோ என்ற சந்தேகம் சீதைக்கு வரலாம் என்று எண்ணி அடுத்ததாக ஒன்றைச் சொல்கிறான். 


"இராமன் சொல்லி அனுப்பிய செய்தியும் இருக்கிறது" என்கிறான். இராமன் சொன்ன செய்திகளை வைத்து இவன் இராம தூதன் என்று முடிவு செய்து கொள்ள முடியும் அல்லவா? அந்தச் செய்திகளை இராமன் மற்றும் சீதை தவிர வேறு யாருக்கும் தெரியாது. அதை சொல்லி அனுப்புகிறான் இராமன். 


இந்த இடத்தில் கொஞ்சம் நிறுத்துவோம். 


அந்தக் காலத்தில் புகைப் படம் இல்லை. தொலைபேசி இல்லை. 


எனவே, இராமன் தனக்கும் சீதைக்கும் மட்டும் தெரிந்த சில விடயங்களை சொல்லி அனுப்புகிறான்.  அந்தரங்கமான விடயங்கள். வேறு வழி இல்லை. இதை படித்த சில பேர், "ஆஹா பார்த்தீர்களா இராமன் எவ்வளவு காம வயப் பட்டவன், நாகரீகம் இல்லாமல் அந்தரங்க விடயங்களை, இன்னொரு ஆண் மகனிடம் சொல்லி அனுப்புகிறானே...இதுவா பண்பாடு" என்று இராமனையும், கம்பனையும் விமர்சினம் செய்ய முற்படுகிறார்கள். 


கம்பனுக்கு, இராமன் பிள்ளை மாதிரி. அவ்வளவு பாசம் அவன் மேல். கம்பன் ஒருகாலும் இராமனின் பெருமையை குறைக்கும் செயலை செய்யமாட்டான் என்று நம்பலாம். 


மீண்டும் பாடலுக்கு வருவோம். 


சீதை இன்னும் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். 


எல்லாம் அனுமனே ஊகம் செய்து அவள் மனதில் நம்பிக்கையும், ஒரு தெம்பும், அமைதியும்  வரும் வகையில் பேசுகிறான். 


இப்படிப் பேசிப் பழகினால் எவ்வளவு நன்றாக இருக்கும். 


பயனுள்ள பேச்சு. நம்பிக்கை தரும் பேச்சு. ஆதரவும், அமைதியும் தரும் பேச்சு. உற்சாகம் ஊட்டும் பேச்சு. 


இவற்றை எல்லாம் ஊன்றிப் படித்ததால் நம்மை அறியாமலேயே நம் பேச்சுத் திறன் வளரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. 











Thursday, May 26, 2022

திருக்குறள் - ஒழுக்கத்தின் ஒல்கார்

 திருக்குறள் -  ஒழுக்கத்தின் ஒல்கார்


ஏன் நிறைய பேர் ஒழுக்கத்தை கடை பிடிப்பது இல்லை?


அதற்கு முன், ஒழுக்கம் என்றால் ஏதோ பூஜை செய்வது, ஒழுங்காக கடைமைகளை செய்வது, பிற பெண்களை ஏறெடுத்து பார்க்காமல் இருப்பது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. 


தினமும் காலையில் எழுந்தவுடன் பல் துலக்குகிரீர்களா ? அதுவும் ஒரு ஒழுக்கம் தான். நேரம் தவறாமல் எதையும் செய்வீர்களா? அதுவும் ஒழுக்கம் தான். வேளா வேளைக்கு சாப்பிடுகிறீர்களா? அதுவும் ஒரு ஒழுக்கம் தான். 


எதையும் முறையாகச் செய்தால், அது ஒழுக்கம். எதையும் என்பதை உயர்ந்தவர்களிடம் இருந்து பெற்றதை என்று கொள்ள வேண்டும். 


இருந்தும், ஏன் பெரும்பாலோனோர் ஒழுக்கத்தை கடை பிடிப்பது இல்லை? 


ஏன் என்றால் அது கடினமாக இருக்கிறது என்பதால். 


சுலபமாக இருந்தால் எல்லோரும் செய்து விட மாட்டார்களா?


தினம்தோறும் ஒரு மணி நேரம் உடற் பயிற்சி செய்வது என்பது ஒரு ஒழுக்கம்.  


எவ்வளவு கடினமான வேலை. எனவே செய்வது இல்லை. 


அப்புறம் எப்படி ஒழுக்கத்தை கடை பிடிப்பது. வள்ளுவர் மிக எளிமையான வழி ஒன்றைச் சொல்லித் தருகிறார். 


கடினமாக இருக்கிறது என்று தானே ஒழுக்கத்தை கை விடுகிறாய். கடினமான எதையும் செய்ய உனக்கு விருப்பம் இல்லை. அப்படித்தானே. நல்லது, ஒழுக்கத்தை கடைபிடிக்காமல் இருப்பது என்பது ஒழுக்கத்தை கடைப் பிடிப்பதை விட கடினமானது. 


இப்போது என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்கிறார். .


பாடல் 


ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்

ஏதம் படுபாக்கு அறிந்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/05/blog-post_26.html


(pl click the above link to continue reading)


ஒழுக்கத்தின் = ஒழுக்கத்தை கடை பிடிப்பதில் இருந்து 


ஒல்கார்  = விலக மாட்டார், தளர மாட்டார் 


உரவோர் = உறுதி உள்ளவர்கள் 


இழுக்கத்தின் = ஒழுக்கம் தவறுவதால் வரும்


ஏதம் = குற்றம் 


படுபாக்கு = உண்டாவதை 


அறிந்து = தெரிந்து 


சாலையில் ஒரு ஒழுக்கம் இல்லாமல் கண்டபடி வண்டி ஓட்டினால் சிறிது நேரம் இன்பமாக இருக்கும். ஆனால், விபத்து நேர்ந்து விட்டால் எவ்வளவு பெரிய துன்பம்? அதை அறிந்து, நாம் ஒழுங்காக வண்டி ஓட்டுக்கிறோம் அல்லவா? 


இங்கே ஒழுக்கம் தவறுவதால் வரும் தீமை தெரிகிறது. 


இன்னொருவன் மனைவியை கொண்டு வந்து அவளை அடையலாம் என்ற இன்ப நாட்ட்டத்தால் , பின்னால் வரப் போகும் தீமையை இராவணன் அறிந்தான் இல்லை. தெரிந்து இருந்தால் ஒழுக்கம் தவறி இருப்பானா? பெற்ற பிள்ளையை பறி கொடுத்து, தலை இல்லாத அவன் உடலை கட்டிக் கொண்டு அழ வேண்டி இருக்கும் என்று உணராததால், அவன் அந்தத் தவறைச் செய்தான். 


ஒழுக்கமாக இருப்பது கடினம் என்றால், ஒழுக்கம் இல்லாமல் இருப்பது அதை விட கடினம். அப்படி என்றால் எதைத் தேர்ந்து எடுப்பது? 


காலையில் ஐந்து மணிக்கு எழுந்து வேர்க்க விறுவிறுக்க நடக்கும் ஒழுக்கம் கடினம்தான். பின்னாளில் முட்டி வலி வந்து நடக்க முடியாமல், எழுந்திருக்க முடியாமல், படுத்த படுக்கையாக இருக்கும் துன்பம் எவ்வளவு பெரியது?  கழிவறைக்கு செல்லக் கூட ஒருவர் துணை வேண்டும் என்ற அவலம் தேவையா? அதை நினைக்கும் போது இப்போது "ஒழுங்காக"  உடற் பயிற்சி செய்யத் தோன்றும் அல்லவா.


புகை பிடிக்காமல் இருப்பது கடினம்தான். புகை பிடித்து புற்று நோய் வந்தால்? 


ஒழுக்கத்தின் மேன்மை மட்டும் சொல்லவில்லை வள்ளுவர். அதை எப்படி கடைபிடிப்பது என்றும் சொல்லித் தருகிறார். 


யார் எவ்வளவு அக்கறையாக நமக்குச் சொல்லித் தருவார்கள்?


இப்படி ஒரு பாட்டன் நமக்கு கிடைக்க நாம் எவ்வளவு புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும். ?