Thursday, September 8, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - நான்றில (3596)

  

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - நான்றில  (3596)


(வெற்றிப் பாசுரத்தின் முந்தைய பாசுரங்கள் பற்றிய பதிவுகள் இந்த பதிவின் முடிவில் இருக்கிறது. அதை வாசிக்க விரும்புபவர்கள் அந்த வலை தலங்களுக்கு சென்று அவற்றை வாசிக்கலாம்). 


எந்த வேலை செய்தாலும் ஏதாவது சப்தம் வரத்தானே செய்யும். நடந்தால் கூட கால் தரையில் பட்டு எழும் போது ஒரு சின்ன சப்தமாவது வரும். பெரிய வேலை என்றால் எவ்வளவு சத்தம் வரும்?


சின்ன பைக், ஸ்கூட்டர் ஓடுவதற்கும் ஒரு இரயில் வண்டி ஓடுவதற்கும் எவ்வளவு சத்தம், ஆட்டம், அதிர்வு எல்லாம் இருக்கிறது? 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


பிரளய காலத்தில், இந்த உலகம் அனைத்தும் நீரில் மூழ்கி விடுமாம். 


உங்களால் கற்பனை பண்ண முடிகிறதா என்று பாருங்கள். 


இந்த பூமியின் மேற் பரப்பு மட்டும் அல்ல,  மலைகள், கடல்கள் என்று அனைத்தும் நீரில் மூழ்கி விடுமாம். அப்படி மூழ்கிய இந்த பூமியை, திருமால் பன்றி உருவம் எடுத்து, தன் கோரைப் பற்களால் தூக்கி நிறுத்தினாராம். 


அவர் அப்படி தூக்கி நிறுத்தியது ஒன்றும் பெரிய காரியமாகப் படவில்லை நம்பாழ்வாருக்கு. 


அப்படி தூக்கி நிறுத்திய போது, மலைகளும், கடல்களும், இந்த பூமி பரப்பும் கொஞ்சம் கூட அசையவில்லையாம். அது மட்டும் அல்ல, ஒன்றும் கொஞ்சம் கூட இடம் மாறவில்லையாம். இருந்தது இருந்த படி, அப்படியே ஒரு மாற்றமும் இல்லாமல் கொண்டுவந்தாராம். 


எப்படி முடியும்?


உங்களை ஒரு சின்ன காகிதத்தை எடுத்து, பின் எடுத்த இடத்திலேயே வைக்கச் சொன்னால் எளிதாக செய்து விடுவீர்கள். ஒரு gas cylinder அல்லது grinder போன்ற கனமான சாமானை தூக்கி, பின் அதே இடத்தில் அப்படியே வைக்கச் சொன்னால் முடியுமா? முடியும் என்று ஒரு வாதத்துக்கு சொல்லலாம். எங்கே பீரோவை தூக்கி வையுங்கள், கட்டிலை தூக்கி வையுங்கள் என்றால் முடியுமா? 


சைக்கிளை தூக்கி வைக்க முடியும். காரை தூக்கி வைக்கச் சொன்னால் முடியுமா? 


இந்த பூமியை அப்படியே தூக்கி, கொஞ்சம் கூட ஒரு சின்ன அதிர்வு கூட இல்லாமல், ஆடாமல் அசையாமல் வைப்பது என்றால் எவ்வளவு பலம் வேண்டும்? சக்தி வேண்டும்?



பாடல் 


நான்றில வேழ்மண்ணும் தானத்த, வே,பின்னும்

நான்றில வேழ்மலை தானத்த வே,பின்னும்

நான்றில வேழ்கடல் தானத்த வே,அப்பன்

ஊன்றி யிடந்தெயிற் றில்கொண்ட நாளே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3596.html


(pl click the above link to continue reading)


நான்றில = நகரவில்லை 


வேழ்மண்ணும் = ஏழ் உலகும் 


தானத்தவே, = தாங்கள் இருந்த இடத்தில் அப்படியே இருந்தன 


பின்னும் = மேலும் 


நான்றில = நகரவில்லை 


வேழ்மலை  = ஏழு மலைகளும் 


தானத்தவே = தாங்கள் இருந்த இடத்தில் அப்படியே இருந்தன 


பின்னும் = மேலும் 


நான்றில = நகரவில்லை 


வேழ்கடல் = ஏழு கடலும் 


தானத்தவே  = தாங்கள் இருந்த இடத்தில் அப்படியே இருந்தன 


அப்பன் = என் அப்பன் திருமால் 


ஊன்றி = காலை ஊன்றி 


யிடந் = கிண்டி எடுத்து 


தெயிற் றில் = பற்கள் மேல் 


கொண்ட நாளே. = தூக்கி வந்த அந்த நாளில் 


நாம் ஒரு வேலையை செய்ய எப்போது தயங்குவோம்? 


அந்த வேலையை நம்மால் செய்து முடிக்க முடியுமா என்ற சந்தேகம் வரும் போது. அந்த வேலையை செய்து முடிக்கும் ஆற்றல் நம்மிடம் இருக்கிறதா என்ற சந்தேகம் வரும் போது. 


என் தந்தை எவ்வளவு பெரிய பலசாலி. அவர் பிள்ளை நான், அதில் கொஞ்சம் பலமாவது என்னிடம் இருக்காதா? ஒரு வேளை என்னால் முடியாவிட்டால், அவர் உதவி செய்ய மாட்டாரா? பிள்ளைக்காக இந்த பெற்றோர் உதவி செய்யாமல் இருப்பார்கள்?


எனவே, எந்த வேலையைக் கண்டும் மயங்க வேண்டாம். உங்களால் கண்டிப்பாக செய்து வெற்றி பெற முடியும் என்று உற்சாகம் தருகிறார் நம்மாழ்வார். 




(முந்தைய பதிவுகள்

பாசுரம் 1 - ஆழி எழ 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


பாசுரம் 2 - ஒலிகள் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html



)


Wednesday, September 7, 2022

கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 1

 கந்தரனுபூதி - மெய்யியல் - பகுதி 1 


நவீன அறிவியல் எது அனைத்துக்கும் அடிப்படை என்று தேடத் தொடங்கியது. பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனது என்று கண்டு கொண்டது. அணுக்கள் எதனால் ஆனது என்று ஆராய்ந்தபோது அவை ப்ரோடான் , நியுட்ரான், எலெக்ட்ரான் போன்ற துகள்களால் ஆனது என்று அறிந்து கொண்டது. சரி, இந்த துகள்கள் எதனால் ஆனது என்று தேடிய போது பாசிட்றான், போசான், quark போன்ற துகள்களால் ஆனது என்று கண்டு கொண்டது. 


இப்போது நமக்கு இருக்கும் கருவிகளின் துணை கொண்டு இந்த அளவுக்குத்தான் போக முடிந்தது. இன்னும் பெரிய கருவிகள் வந்தால், இந்த தேடல் இன்னும் தொடரும். 


அறிவியல் எது அடிப்படை என்று ஆராய்ந்த போது, மெய்யியல் எது நிரந்தரமானது, அழிவற்றது என்று ஆராய முற்பட்டது. 



https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html

(pl click the above link to continue reading)



பொருள்கள், உயிர்கள் எல்லாம் தோன்றுகின்றன, இருக்கின்றன, பின் மறைந்து விடுகின்றன.இப்படி அல்லாமல்,ஏதாவது ஒன்று தோன்றாமலும், அழியாமலும் இருக்குமா என்று கேள்வி கேட்டுக் கொண்டு அதைக் காண புறப்பட்டது. 


தோன்றியது எல்லாம் அழியும். அப்படி என்றால்,ஒன்று அழியாமல் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்றால் அது தோன்றவும் கூடாது. தோற்றம் இருந்தால் அழிவு இருக்கும். தோன்றாமல் எப்போதும் இருப்பது எது என்று ஆராய்ச்சியை தொடங்கியது. 


அப்படி ஆராய்ந்ததில் தோற்றம் இல்லாத பொருள்கள் மூன்று என்று கண்டு சொன்னது. 


அவற்றிற்கு தோற்றம் இல்லாததால், அவற்றிற்கு அழிவும் இல்லை என்று தெரிந்து கொண்டது. 


அவை எவை?


பதி, பசு, பாசம்.


இந்த மூன்றும் ஆதி அற்றவை.அ-ஆதி= அநாதி.


என்றும் உள்ள பொருள்கள் இந்த மூன்றும்.


அது என்ன பதி, பசு, பாசம் ? 


அவற்றிற்கு உள்ள தொடர்பு என்ன? இவை எப்படி செயல் படுகின்றன என்பதை எல்லாம் ஆராய்ந்து மொத்தம் 36 தத்துவங்களில் அவற்றை தொகுத்தார்கள். 


இதில் சிலவற்றை நாம் சோதித்து அறிந்து கொள்ள முடியும்.  சில தத்துவங்கள் சிந்தனைக்கும், சோதனைக்கும் அப்பாற்பட்டவை. 


இவை எல்லாம் சரி என்று நான் சொல்ல வரவில்லை. 


சரியோ, தவறோ, உண்மையோ, பொய்யோ, நம்புவதோ அல்லது நம்பாமல் விடுவதோ உங்கள் விருப்பம். 


அவை என்ன என்று சொல்லி விடுகிறேன்.  பின் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 


மேலும் 


இந்த மெய்யியல் என்பது மிக பரந்துபட்டது. ஒரு சில பதிவுகளில் அனைத்தையும் சொல்லி விட முடியாது. ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் தேடலை தொடரலாம்.


மூன்றாவது, இவற்றைச் சொல்வதன் மூலம், ஏதோ எனக்கு இதெல்லாம் தெரியும் என்று நான் சொல்லவரவில்லை. படித்ததை, கேட்டதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இவை நான் கண்டு பிடித்தவை அல்ல. எனக்கு இவை முழுவதுமாக புரியவும் இல்லை. 


ஒவ்வொரு தத்துவத்தையும் நீங்கள் வலை தளங்களில் மேலும் விரிவாக ஆராயலாம். படிக்கப் படிக்க விரிந்து கொண்டே போகும். அவ்வளவு ஆழமும், அகலும், நுண்மையும் கொண்டவை. 


இனி இந்த மெய்யியலின் ஒரு பகுதியான 3 6 தத்துவங்களுள் நுழைவோம். 



Sunday, September 4, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - காட்டி விடும்

  திருக்குறள் - அழுக்காறாமை -  காட்டி விடும் 



நம் வீட்டுக்கு ஒரு விருந்தினர் வந்து இருக்கிறார். சில நாள் தங்கிப் போகலாம் என்று வந்திருக்கிறார். வந்த புதிதில் நாமும் அவரோடு இன்பமாகத்தான் இருந்தோம். பின், நாம் அவரைக் கண்டு கொள்வதே இல்லை. அவரை மதிப்பதும் இல்லை. அப்படிச் செய்தால் அவருக்கு கோபம் வருமா ? வராதா? அவர் மேற்கொண்டு நம் வீட்டில் தங்குவாரா? வீட்டை விட்டு போவது மட்டும் அல்ல, திரும்பி வரவும் மாட்டார் அல்லவா? 


ஒரு சாதாரண மனித விருந்தினருக்கே அப்படி என்றால், திருமகள் நம் வீட்டில் வந்து இருக்கிறாள் என்றால் நாம் அவளை எப்படிக் கொண்டாட வேண்டும்? தினமும் அவளை கவனிக்க வேண்டும், அவள் இருப்பதால் நாம் மகிழ்வோடு இருக்கிறோம் என்று அவளுக்கு காட்ட வேண்டாமா? 


மாறாக, என்ன வந்தாலும் பத்தாது என்று மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டிருந்தால்? நமக்கு இருப்பதைவிட மற்றவனுக்கு நிறைய இருக்கிறதே என்று பொறாமைப் பட்டுக் கொண்டு இருந்தால் அவளுக்கு எப்படி இருக்கும்?


நாம் இருப்பதில் இவனுக்கு சந்தோஷம் இல்லை போல என்று நினைத்துக் கொண்டு, சரி நம்மை எங்கே வரவேற்கிரார்களோ அங்கே போவோம் என்று கிளம்பி விடுவாளாம். அது மட்டும் அல்ல, தன் அக்காவானா மூதேவியை கூப்பிட்டு "அக்கா நீ இருக்க வேன்ன்டிய இடம் இது" என்று அவளுக்கு அந்த வீட்டை காட்டி விட்டுப் போவாளாம். 


பாடல் 


அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_24.html



(Pl click the above link to continue reading)



அவ்வித்து = வஞ்சனையால், சூழ்ச்சியால் 


அழுக்காறு = பொறாமை 


உடையானைச் = உடையவனை 


செய்யவள் = திருமகள் 


தவ்வையைக் = தமக்கையை (மூதேவியை) 


காட்டி விடும் = இடம் காட்டிவிட்டு, தான் விலகிப் போய் விடுவாள் 


எனவே,


எவ்வளவு செல்வம் இருக்கிறதோ, அதை எண்ணி மகிழ வேண்டும் அதைப் போற்ற வேண்டும். அதை மற்றவர்களோடு முடிந்தவரை பகிர்ந்து கொள்ள வேண்டும். 


மாறாக, பத்தவில்லை, போதவில்லை, இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும், அவனுக்கு கிடைத்துவிட்டது, எனக்கு கிடைக்கவில்லை என்று எந்நேரமும் கவலையும் பொறாமையும் இருந்தால், திருமகள் நாம் இருந்தும் ஒரு பயனும் இல்லை என்று கிளம்பி விடுவாள் 


என்கிறார் வள்ளுவர். 





(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:  அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை.  பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html


குறள்  எண் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html


குறள்  எண் 162:  (பாகம் 1)


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1.html


குறள்  எண் 162:  (பாகம் 2)

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்



குறள்  எண் 162:: அறனாக்கம்

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_16.html


குறள்  எண் 163: அல்லவை செய்யார்


அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_22.html


குறள்  எண் 164: அது சாலும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_26.html


குறள்  எண் 165: இன்றிக் கெடும்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_31.html



)


கந்தரனுபூதி - மெய்யியல்

        

 கந்தரனுபூதி -  மெய்யியல்


பக்தி இலக்கியம் என்றால் பொதுவாக இறை நம்பிக்கை, இறைவன் எப்படி இருப்பான், அவனுடைய தோற்றம் எப்படி இருக்கும், அவனுடைய ஆற்றல், அவன் செயல்பாடுகள், அவனை துதிப்பது, அவன் பக்தர்களோடு சேர்ந்து இருப்பது என்றுதான் பெரும்பாலும் அறியப் படுகிறது. 

இவற்றால் என்ன பயன்? கடவுள் என்ன மாதிரி உடை உடுப்பார், என்ன ஆயுதம் வைத்து இருப்பார், எதன் மேல் ஏறிப் போவார், அவரின் குடும்ப நிலை இதெல்லாம் தெரிந்து நமக்கு என்ன ஆகப் போகிறது? அவை எல்லாம் முதலில் உண்மையா என்றே கூடத் தெரியாது. 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


இதைத் தவிர சமயத்தில், பக்தி இலக்கியத்தில் வேறு ஏதாவது இருக்கிறதா என்று கேட்டால் இருக்கிறது. 



மெய்யியல் என்ற மிகப் பெரிய பிரிவு இருக்கிறது. 



நாம் இன்று படிக்கும் அறிவியலுக்கு முந்தைய நிலை அது. 



மெய்யியல் என்பது உண்மைகள் கண்டு அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும்படி விளக்கி , அதை நிரூபணம் செய்வது. 



இறைவன் யார், உயிர்கள் எப்படி வந்தன, இறைவனுக்கும் உயிர்களுக்கும் என்ன சம்பந்தம், இந்த உலகம் எப்படி வந்தது, அது எதனால் ஆனது, அதை யார் உருவாக்கினார்கள், எப்படி உருவாக்கினார்கள், ஏன் இத்தனை கடவுள்கள், இதில் யார் உயர்ந்தவர், வாழ்வின் நோக்கம் என்ன, அறிவு என்றால் என்ன, நாம் எப்படி சிந்திக்கிறோம், நான் என்றால் என்ன, என்பது பற்றி மிக மிக ஆழமாக விவரிக்கும் இயல், மெய்யியல்.



(Pl click the above link to continue reading) 





மெய்யியலின் வெளிப்பாடு தத்துவங்கள் எனப்படும். தத்துவங்கள்  எல்லோருக்கும் பொதுவானவை. எல்லா காலத்துக்கும் பொதுவானது. 


நம் பக்தி இலக்கியத்தின் அடிப்படை இந்த மெய்யியல். மெய்யியலைப் படித்தால் அதன் வெளிப்பாடு நம் பக்தி இலக்கியத்தில் இருப்பதைக் காணலாம். 


பாவம், புண்ணியம், மறு பிறவி, வீடு பேறு, முக்தி என்பதெல்லாம் இந்த மெய்யியலில் இருந்து வருபவை. 


சரி, அதற்கும், கந்தரனுபூதிக்கும் என்ன சம்பந்தம்? 


இருக்கிறதே. 


அடுத்த பாடலில், அருணகிரிநாதர் போகிற போக்கில் இரண்டு வார்த்தைகளை சொல்லி விட்டுப் போய் விட்டார். அது புரிய வேண்டும் என்றால், அடிப்படை மெய்யியல் தெரிந்து கொள்ள வேண்டும். 


இனி வரும் பாடல்களிலும் இந்த மெய்யியல் தத்துவங்கள் அடிக்கடி வரும். 


எனவே, இந்த இடத்தில் நிறுத்தி அதைப் புரிந்து கொள்வோம். 


மொத்தம் 36 தத்துவங்கள் இருக்கின்றன. 


எனக்கு என்ன சங்கடம் என்றால், இதை சொல்ல நினைத்தால் மிக நீண்டு விடுமோ என்ற பயம். யாரும் படிக்க மாட்டார்களோ என்ற  ஐயம் உண்டு. 


சும்மா, அப்படியே மேலோட்டமாக சொல்லுக்கு அர்த்தம் சொல்லிவிட்டுப் போய் விடலாமா என்றும் தோன்றுகிறது. 


இன்னொரு பக்கம், மெய்யியல் பற்றி ஒரு முன்னுரை தந்தால் ஆர்வம் உள்ளவர்கள் மேலும் தேடி படித்து பயன் பெறுவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. 


என்ன செய்யலாம்?



(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்: 


முன்னுரை: 

https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_30.html


1. பணியாய் அருள்வாய் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_5.html


2. எல்லாமற என்னை இழந்த நலம் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_10.html


)


 

3. எனை ஆண்ட இடம் தானோ? பாகம் 1 & 2


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1_14.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_17.html


4. வளை பட்ட கை - பாகம் 1, 2, & 3

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_23.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/2_24.html

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/3.html



)


Saturday, September 3, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஒலிகள்

 

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஒலிகள் 


(வெற்றிப் பாசுரத்தின் முந்தைய பாசுரங்கள் பற்றிய பதிவுகள் இந்த பதிவின் முடிவில் இருக்கிறது. அதை வாசிக்க விரும்புபவர்கள் அந்த வலை தலங்களுக்கு சென்று அவற்றை வாசிக்கலாம்). 


தமிழிலே ஓதம் என்று ஒரு சொல் இருக்கிறது. கடற்கரை ஓரம் உள்ளவர்கள் இந்த வார்த்தையை அடிக்கடி கேட்டு இருப்பார்கள். 


மழை நீர் ஆற்றின் வழியாக ஓடி கடலில் சேரும். அம்மாவாசை, பௌர்ணமி போன்ற தினங்களில் கடல் நீர் பொங்கும். நீர் மட்டம் உயரும். அப்போது, கடல் நீர் ஆற்று நீரை எதிர்த்துச் செல்லும். அதாவது கடல் நீர் மலை நோக்கிச் செல்லும். 


ஒரு பக்கம் மலையில் இருந்து வரும் நீர் கடல் நோக்கி வரும். இன்னொரு புறம் அதை எதிர்த்து கடல் நீர் மலை நோக்கிச் செல்லும். இரண்டு நீரும் ஆற்றில் கலந்து, சுழித்துக் கொண்டு பெரும் ஓசை எழும். 


இதை மனதில் பதித்துக் கொள்ளுங்கள். 


இப்போதஅடுத்த பாசுரதுக்குள் போவோம். 


அமுதம் வேண்டி அசுரர்களும், தேவர்களும் பாற்கடலை கடைந்தார்கள். மேரு மலையை நட்டு, வாசுகி என்ற பாம்பை கயிறாகக் கொண்டு, ஒரு புறம் தேவர்கள், மறு புறம் அசுரர்கள். 


கடல் நீர் கலங்கும் அல்லவா? கடலைக் கடைந்தால் எவ்வளவு சத்தம் வரும். நம் வீட்டில் ஒரு சிறு பாத்திரத்தில் தயிரைக் கடைந்தாலே எத்தனை சப்தம் வருகிறது. ஒரு mixie , grinder போட்டால் எவ்வளவு சத்தம் வருகிறது. கடலைக் கடைந்தால் எவ்வளவு சத்தம் வரும்.  அது ஒரு சத்தம். 


அந்த கடல் நீர் சுழித்துக் கொண்டு ஆறுகளில் எதிர்த்து ஓடி மலை நோக்கிச் செல்லும் அல்லவா. இரண்டு நீரும் ஒன்றோடு ஒன்று மோதி அதனால் உண்டாகும் ஒலி. அது இரண்டாவது ஒலி. 


மலையை கடலுக்குள் நிறுத்தி கடைந்தால், அந்த மலையும் நீரும் உரசும் ஒலி. அது மூன்றாவது ஒலி. 


அப்படி கடையும் போது கடல் நீர் வலம் இடமாக சுழலும் போது உண்டாகும் ஒலி. இது நான்காவது ஒலி. 


இத்தனை ஒலியும் ஒரு சேர எழுந்ததாம்....எப்போது தெரியுமா?


"என் அப்பன் தேவர்கள் மகிழ அமுதத்தை அவர்களுக்கு வழங்கிய போது" என்கிறார் நம்மாழ்வார். 



பாடல் 


ஆறு மலைக்கெதிர்ந் தோடு மொலி,அர


வூறு சுலாய்மலை தேய்க்கு மொலி,கடல்


மாறு சுழன்றழைக் கின்ற வொலி, அப்பன்


சாறு படவமு தங்கொண்ட நான்றே.



கொஞ்சம் சீர் பிரிப்போம் 


ஆறு மலைக்கு எதிர்த்து ஓடும் ஒலி 


அர ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி 


கடல் மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி 


அப்பன் சாறுபட அமுதம் கொண்ட நான்றே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post.html

(pl click the above link to continue reading)



ஆறு = ஆற்று நீர் 


மலைக்கு = மலையை நோக்கி 


எதிர்த்து ஓடும் ஒலி  = எதிர்த்து ஓடும் ஒலி 


அர = அரவு என்றால் பாம்பு. வாசுகி என்ற பாம்பு 


ஊறு = துன்பம், வலியால் 


சுலாய் = சுழன்று 


மலை தேய்க்கும் ஒலி = மலை (மேரு மலை) தேயும் ஒலி 


கடல் மாறு சுழன்று  = கடல் (பாற்கடல்) மாறி மாறி சுழன்று 


அழைக்கின்ற ஒலி  = எழுப்புகின்ற ஒலி 


அப்பன் = எனது தந்தை (திருமால்) 


சாறுபட = (தேவர்கள்) மகிழும்படி


 அமுதம் கொண்ட நான்றே. = அமுதத்தை வழங்கிய நாளில் 


பாற்கடல் என்று ஒன்று உள்ளதா? வாசுகி, மேரு மலை இதெல்லாம் உண்மையா? கடலை கடைய முடியுமா ? அமுதம் என்பது உண்மையா ?


என்ற கேள்விகள் ஒரு புறம் இருக்கட்டும். 


கற்பனை செய்து பார்க்கலாமே?


எவ்வளவு பிரமாண்டம்.  இத்தனையையும் ஒருவன் மேற் பார்வை செய்து, அமுதத்தை எடுத்து கொடுப்பது என்றால் எவ்வளவு பெரிய வேலை? அதை வெற்றிகரமாக ஒருவன் செய்து முடித்தான் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். 


இப்போது உங்கள் வாழ்வில் உள்ள சவால்களை, பிரச்சனகைளை, சிக்கல்களை பாருங்கள். "ஹா...இதெல்லாம் ஒரு பெரிய வேலையா..." என்று தோன்றும். செய்து முடித்து விடலாம் என்று தோன்றும். நம் பிரச்னை ஒன்று பெரிது அல்ல என்று தோன்றும். 


இல்லை என்றால் நாம் ஒரு சின்ன பிரச்சனையை எடுத்து வைத்துக் கொண்டு, "ஐயோ, எனக்கு இப்படி ஒரு பிரச்னை வந்து விட்டதே, என்ன செய்வேன்" என்று களைத்துப் போவோம். கற்பனை விரிய விரிய, மனம் விரியும். மனம் விரியும் போது, அறிவு விரியும். 


பிரச்சனைகளின் பெரிது, சிறிது தன்மை புரியும். அவற்றைக் கையாளும் மனப் பக்குவம் வரும். தெம்பும் உற்சாகமும் வரும்.  வெற்றி தானே வரும். 


இது போன்ற பாசுரங்களை மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். ஒரு முறை படித்துவிட்டு, "நல்லா இருக்கு" என்று சொல்லிவிட்டு "அடுத்த பாசுரம் எப்போது வரும்" என்று கேட்க்கக் கூடாது. 


சரியா?








(முந்தைய பதிவுகள்

பாசுரம் 1 - ஆழி எழ 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


)


Wednesday, August 31, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - இன்றிக் கெடும்

 திருக்குறள் - அழுக்காறாமை -  இன்றிக் கெடும்


பொறாமை கொள்வதே தவறு. அதனினும் பெரிய தவறு ஒன்று இருக்கிறது என்றால் ஒருவன் மற்றவனுக்கு செய்யும் உதவி கண்டு பொறாமை படுவது. 



ஒரு பணக்காரன் ஏழைகளுக்கு உதவி செய்கிறான். உணவு தருகிறான். அந்த ஏழைகளின் பிள்ளைகள் படிக்க பண உதவி செய்கிறான், அந்த வீட்டுப் பெண்கள் திருமணம் செய்து கொள்ள தங்கம், பணம் என்று உதவி செய்கிறான். அதைக் கண்டு பொறாமை கொள்பவர்கள் இருக்கிறார்கள். இப்படி எல்லாம் உதவி பெற்று அந்த ஏழை மக்கள் உயர்ந்து விடுவார்களோ என்று பொறாமை. எவ்வளவு கேவலமான ஒன்று. 



ரொம்ப தூரம் போவானேன்? காரில் வெளியில் போகும் போது, போக்கு வரத்து நெரிசலில் நிற்கும் போது, ஒரு ஏழை அல்லது வயதானவர், அல்லது ஒரு சின்னப் பிள்ளை பிச்சை கேட்டு கார் கண்ணாடியை தட்டும். கணவனோ மனைவியோ, கண்ணாடியை இறக்கி பணம் தருவார். நூறு ரூபாய் தருகிறார் என்று வைத்துக் கொள்வோம். மற்றவர் சொல்லுவார் ..."பிச்சைகாரனுக்கு நூறு ரூபாய் போடனுமாக்கும்...ஏதோ அஞ்சு பத்து கொடுத்தால் போதாதா...பெரிய கர்ண பரம்பரை..." என்று வசனம் பிறக்கும். 


கொடுத்தது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும், சொல்லுவது யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். 


இது நிகழும் சாத்தியம் இருக்கிறது அல்லவா? 


ஒருவர் கொடுப்பதை மற்றவர் தடுக்க நினைப்பது, அதைக் கண்டு பொறாமை படுவது. 


இப்படிப் பட்டவர்களுக்கு ஒரு தண்டனை தர வேண்டும் என்று நினைக்கிறார் வள்ளுவர். 


வள்ளுவர் போல் மிகக் கடுமையான தண்டனை தர யாராலும் முடியாது. எவ்வளவு கோபம் வந்தால் அப்படி ஒரு தண்டனையை தந்திருப்பார் என்று நாம் யோசிக்க முடிகிறது. 


"உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு" என்றார். 


அதைவிட கொடுமையான தண்டனையை இங்கே சொல்கிறார். 


நாம் ஓரிரு வேளை உணவு உண்ணாமல் இருந்து விடலாம். சில நாட்கள் கூட உணவு உண்ணாமல் இருந்து விட முடியும். சாப்பிடாமல் போனால் யாருக்கும் தெரியாது. நாம பாட்டுக்கு போய் வரலாம். 


கையில் காசு இல்லை. உணவுக்கு வழி இல்லை. பசி உயிர் போகிறது. கஷடம்தான். பொறுத்துக் கொள்ள முடியும். சகித்து விடலாம். 


ஆனால், ,கையில் காசு இல்லை, உடை வாங்க வழி இல்லை என்று உடை இல்லாமல் தெருவில் போக முடியுமா? 


எவ்வளவு கேவலம் ? அதை விட உயரை விட்டு விடலாம் அல்லவா? 


தான் உடை இல்லாமல் போனால் பரவாயில்லை, ஒருவனின் தாய், தந்தை, உடன் பிறப்பு, மனைவி, ,கணவன், பிள்ளைகள் என்று எல்லோரும் உடை வாங்க வழி இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்? சகிக்க முடியுமா? 


நாம் உடை இல்லாமல் இருப்பதே சகிக்க முடியாது. மற்றவர்களும் அப்படி என்றால் பொறுக்க முடியுமா? 


"கொடுப்பது கண்டு பொறாமை படுபவனது சுற்றம் உடுக்க உடை இல்லாமலும், உண்ண உணவு இல்லாமலும் கெடும்"  என்கிறார். 


மிகக் கடுமையான தண்டனை. 


பாடல் 


கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉம் இன்றிக் கெடும்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_31.html

(Pl click the above link to continue reading)



கொடுப்பது = ஒருவன் மற்றவனுக்கு கொடுப்பதைக் கண்டு 


அழுக்கறுப்பான் = பொறாமை படுபவனது 


சுற்றம் = உறவினர்கள் 


உடுப்பதூஉம் = உடுக்க உடையும் 


உண்பதூஉம் = உண்ண உணவும் 


இன்றிக் = இல்லாமல் 


கெடும் = கேட்டினை அடைவார்கள் 


உறவினர்கள் தானே உணவும், உடையும் இல்லாமல் துன்பப் படுவார்கள், நமக்கு இல்லையே என்று யாராவது நினைத்து விடக் கூடாது என்று பரிமேலழகர் கூறுவார் "உறவு கெடும் என்றால் தான் கெடுவது சொல்லாமலேயே பெறப் படும்" என்று. 


ஒருவனிடம் உணவும், உடையும் இல்லை என்றால் வேறு என்னதான் இருக்க முடியும்?


எனவே, யாரோ யாருக்கோ நல்லது செய்து விட்டுப் போகிறார்கள். இருவரும் நல்லா இருக்கட்டும் என்று வாழ்த்திவிட்டு நம் வேலையை பார்க்க போய்விட வேண்டும். 


யோசித்துப் பார்த்தால், அரசாங்கம் நலிவடைந்த பிரிவினருக்கு சில உதவிகள் செய்கிறது. இட ஒதுக்கீடு, வேலையில் முன்னுரிமை, நிலப் பட்டா, ஓய்வூதியம், என்று எத்தனையோ நல திட்டங்களை அறிவிக்கிறது. 


அது கண்டு பலர் பொறுப்பது இல்லை.  எதற்கு அவர்களுக்கு இந்தச் சலுகைகள் எல்லாம், எத்தனை நாளுக்குத்தான் இப்படி தந்து கொண்டே இருப்பது, அவர்களுக்கு என்ன குறை, படித்து, உழைத்து வர வேண்டியதுதானே...என்று அவர்களுக்கு அரசாங்கம் செய்யும் சலுகைகளைக் கண்டு பொறாமை கொள்கிறார்கள். 


அதுவும் இதில் வருமோ? 











(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:  அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை.  பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html


குறள்  எண் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html


குறள்  எண் 162:  (பாகம் 1)


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1.html


குறள்  எண் 162:  (பாகம் 2)

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்



குறள்  எண் 162:: அறனாக்கம்

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_16.html


குறள்  எண் 163: அல்லவை செய்யார்


அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து


)


Tuesday, August 30, 2022

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வெற்றிப் பாசுரம்

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - வெற்றிப் பாசுரம் 


நாம் எதைப் பற்றி அதிகம் நினைத்துக் கொண்டு இருக்கிறோமோ, அதை அடைவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கும். 


எதை நினைக்கிறோமோ, அதைச் செய்வோம். எதைச் செய்கிறோமோ, அதில் பலன் கிடைக்கும். எவ்வளவு பலன் என்பது எவ்வளவு முயற்சி, காலம், இடம் அவற்றைப் பொறுத்தது.


வெற்றி அடைய வேண்டுமா?  வெற்றி பற்றி சிந்திக்க வேண்டும். வெற்றி அடைந்தவர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும். அவர்கள் எப்படி வென்றார்கள் என்று ஆராய வேண்டும். அவர்களின் வெற்றி நமக்கு ஒரு தூண்டு கோல், அது ஒரு ஊக்கம் தரும். 


உள்ளதிற்குள் பெரிய வெற்றி யாருடைய வெற்றியாக இருக்கும்? மிகப் பெரிய காரியத்தை யார் செய்திருப்பார்கள்? 


மிகப் பெரியவன் கடவுள் என்று கொண்டால், அவனுடைய வெற்றிதானே மிகப் பெரிய வெற்றியாக இருக்க முடியும். 


பிரமாண்டமான வெற்றி. நினைத்துக் கூட பார்க்க முடியாத வெற்றி அதுவாகத் தானே இருக்க முடியும்? 


இறைவன் அடைந்த வெற்றிகளைப் பற்றி சிந்திக்கிறார் நம்மாழ்வார். 


பிரமிப்பு ஊட்டுகிறது. சிலிர்த்துப் போய் விடுகிறது. 


நாம் எத்தனையோ ஆங்கிலப் படங்கள் பார்த்து வியந்திருப்போம். அதன் பிரமாண்டம், மித மிஞ்சிய கற்பனை, அதை எப்படி திரையில் கொண்டு வந்தார்கள் என்று வியந்திருப்போம்.


வேற்றுக் கிரகங்கள், இராட்சச திமிங்கலம், டினோசர், இயந்திர மனிதன், பறக்கும் மனிதன், என்று பெரிய கற்பனைகளை நாம் கண்டு வியந்து இருக்கிறோம். 


நம்மாழ்வார் பாடல்களைப் படித்துப் பாருங்கள். அவர் காட்டும் பிரமாண்டம், அவர் அதை ஒரு பாட்டுக்குள் கொண்டு வரும் திறமை, படிக்க படிக்க புல்லரிக்கும். படித்த பின் அவற்றை நம்மால் சரியாக கற்பனை கூட பண்ண முடியாது. 


முயன்று பாருங்கள். 


வாமன அவதாரமாக திருமால் வந்து மூன்றடி தானம் கேட்கிறார். மாவலியும் தருகிறேன் என்று ஒத்துக் கொள்கிறார். அதுவரை நம்மால் கற்பனை பண்ண முடியும். 


அடுத்தது என்ன நிகழ்ந்தது என்பதை நாம் கற்பனை பண்ணவும் முடியாது. .


திருமாலின் உருவம் எங்கோ பாதாளம் வரை போயிற்று. அங்கிருந்து வளர்ந்து கொண்டே வருகிறது. 


நீங்கள் ஒரு கடற்கரையில் நிற்பதாக கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள். கடலின் நீண்ட பெரும் பரப்பை பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள். 


தூரத்தில் ஒரு சக்கரமும், சங்கும் கடலின் பரப்பின் மேல் எழுகிறது. என்ன இது என்று பார்கிறீர்கள். அது மிக பிரமண்டாமாக வளர்ந்து கொண்டே போகிறது. நீங்கள் பயந்து சற்று பின் வாங்கி என்ன அது என்று பார்கிறீர்கள். சங்கு, சக்கரத்தைத் தொடர்ந்து ஒரு வில் வருகிறது. எல்லோரும் அலறுகிறார்கள். பயத்தில் ஓடுகிறார்கள். அது மேலே போய்க் கொண்டே இருக்கிறது. அதைத் தொடர்ந்து, ஒரு பெரிய வாள் வருகிறது. இவற்றை தாங்கி இருந்த உருவத்தின் தலை இந்த  அண்ட சராசரத்தின் உச்சியை முட்டுகிறது. முட்டியது மட்டும் அல்ல, அதன் கூரையை கிழிக்கிறது. 


இந்த பிரபஞ்சம் நீரால் சூழப்பட்டு இருக்கிறது என்கிறார்கள். பிரபஞ்சத்தின் கூரையில் ஓட்டை போட்டால், அந்த தண்ணீர் கொட்டும் என்கிறார். அதற்கு ஆவரண ஜலம் என்று பெயர். 


இதுவரை கண்டது திருமாலின் ஒரு அடி. அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டும். அந்தத் திருவடியை உயர்த்துகிறார், அது அவர் தலை வரை போகிறது. 


கற்பனை செய்து பாருங்கள். ஓர் காலை ஊன்றிக் கொண்டு, இன்னொரு காலை தலைவரை உயர்த்தி. உயர்த்திய காலை ஊன்றி, கீழே உள்ள காலை அடுத்து தலைவரை உயர்த்த வேண்டும். அது ஒரு அடி என்ற கணக்கு. 


இந்த உலகம் அனைத்தையும் இரண்டே அடியில் அளக்க வேண்டும் என்றால் அந்தப் பாதம் எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும், அவ்வளவு பெரிய பாதம் என்றால் கால் எப்படி இருக்கும், மொத்த உருவமும் எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ண முடிகிறதா? 


இவ்வளவு பெரிய உருவம், இரண்டு அடியில் அத்தனை உலகையும் அளக்க வேண்டும் அதுவும் மிகக் குறைந்த நேரத்தில். மாவலி நின்று கொண்டிருக்கிறான். மூன்றாவது அடி எங்கே என்று கேட்க வேண்டும். அப்படி என்றால் அந்த உருவம் இந்த உலகை எவ்வளவு வேகமாக அளந்திருக்கும் ?


பாடல் 



ஆழி யெழச்சங்கும் வில்லு மெழ,திசை

வாழி யெழத்தண்டும் வாளு மெழ,அண்டம்

மோழை யெழமுடி பாத மெழ,அப்பன்

ஊழி யெழவுல கங்கொண்ட வாறே. (3594)




பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_30.html


(pl click the above link to continue reading)




ஆழி யெழச் = சக்கரம் எழ 


சங்கும் = சங்கும் 


வில்லு மெழ = வில்லும் எழ 


திசை வாழி யெழத் = திசைகள் தோறும் உள்ள மக்கள் அதைக் கண்டு ஒரு புறம் பயந்து, மறுபுறம் பிரமித்தது, வாழ்க வாழ்க என்று கோஷம் இடுகிறார்கள். பிரமாண்டமான சப்த்தம். உலகமே நடுங்குகிறது. 



தண்டும் = கதை ஆயுதமும் 


வாளு மெழ, = வாளும் எழ 


அண்டம் மோழை யெழ = அண்டத்தின் உச்சி பிளந்து, ஆவரண நீர் பொங்கி எழ 


முடி = திருமுடி, தலை 


பாத மெழ = பாதம் அதுவரை செல்ல 


அப்பன் = திருமால் 


ஊழி யெழவுல கங்கொண்ட வாறே. = மாவலியால் (விதியின் காரணமாக) பட்ட துன்பங்கள் நீங்கி உலகம் நன்மை அடைய 


இது உண்மையா, இல்லையா என்ற தர்க்கம் ஒரு புறம் இருக்கட்டும். 


எவ்வளவு பெரிய பிரமாண்டம் என்று மனமும், சிந்தனையும் விரிகிறது அல்லவா? 


அதை நினைக்கும் போது நாம் செய்ய நினைக்கும் காரியங்கள் ஒரு தூசு என்று தெரிகிறது அல்லவா? இதைச் செய்யவா இந்தப் பாடு படுகிறேன்...இப்ப செய்து முடிக்கிறேன் என்று நமக்குள் ஒரு உத்வேகம் வருகிறது அல்லவா. அந்த முயற்சி, ஊக்கம், உந்து சக்தி வெற்றியைத் தேடித் தரும். 


இப்படி பத்துப் பாடல்களை அருளிச் செய்து இருக்கிறார் நம்மாழ்வார். 


இதரப் பாசுரங்களும் இதே மாதிரித்தான்.