Sunday, December 31, 2023

திருக்குறள் - இதுவரை - பாகம் 4

 திருக்குறள் - இதுவரை - பாகம் 4 

https://interestingtamilpoems.blogspot.com/2023/12/4.html



1, அறன் வலியுறுத்தல்,

2.  இல்வாழ்க்கை, 

3. வாழ்க்கைத் துணைநலம், 

4. புதல்வர்களைப் பெறுதல், 

5. அன்புடைமை, மற்றும் 

6. விருந்தோம்பல் 

7. இனியவை கூறல்

8.செய்நன்றி அறிதல்

9. நடுவு நிலைமை

10. அடக்கமுடைமை 

11.     ஒழுக்கமுடைமை 


வரை முந்தைய பதிவுகளில் சிந்தித்தோம் 


பிறனில் விழையாமை 


இல்லறம் என்ற அறம் சிறக்க வேண்டும் என்றால், மாற்றான் மனைவியை நினைக்கக் கூடாது. வலிமை உள்ளவன், பணம் உள்ளவன், அழகு உள்ளவன், அதிக்காரம் உள்ளவன் தன்னிடம் உள்ள அந்த சிறப்புத் தன்மையை பயன்படுத்தி மாற்றான் மனைவியை தீண்ட நினைப்பது இயல்பு. அது அறமன்று. அப்படி நிகழ்ந்தால், இல்லறம் சிதையும், குடும்பம் என்ற கட்டமைப்பு குலையும், சமுதயாம் சீரழியும். எனவே, பிறனில் விழையாமை என்பதை ஒரு அறமாகக் கூறுகிறார். ஒழுக்கம் உடையவர்களுக்கே இது முடியும் என்பதால், இதை ஒழுக்கம் உடைமை என்ற அறத்தின் பின் கூறினார். 


பொறையுடைமை 


அதாவது பொறுமையை கடைபிடித்தல். இல்லறத்துக்கு மிக இன்றியமையாத பண்புகளில் இதுவும் ஒன்று. இல்லறத்தில் உள்ள ஒருவனுக்கு பலரால் பலவிதங்களில் இன்னல்கள் வரக் கூடும். தான் செய்த ஒன்றின் விளைவாக, மற்றவர்களின் தவறான புரிதல்களால், விதி வசம் என்று பலவித இன்னல்கள் வர நேரும். பொறுமையை கடைபிடிக்க வேண்டும். இல்லை என்றால் உறவுகள் சிதறிப் போகும். பொறுக்கவே முடியாத ஒரு குற்றம்என்றால்,தன் மனைவியை மாற்றான் கொள்ள நினைப்பது. அந்த சமயத்தில் கூட பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்பதால் இதை பிறனில் விழையாமையின் பின் கூறினார். மனைவியை கவர்ந்து சென்ற இராவணனுக்குக்   கூட இராமன் அருள் புரிந்தான்.


அழுக்காறாமை 


அதாவது பொறாமை கொள்ளாமல் இருத்தல். ஒவ்வொருத்தனுக்கும் ஒன்று வாய்க்கும், ஒன்று வாய்க்காது. வாய்த்ததைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழப் பழக வேண்டும். கிடைக்காததை நினைத்து, மற்றவனுக்கு கிடைத்ததே, எனக்கு கிடைக்கவில்லையே என்று பொறாமை கொள்ளக் கூடாது. பொறாமை, அது உள்ளவனை மட்டும் அல்ல, அவன் குடும்பத்தையே அழித்து விடும். இருப்பதைக் கொண்டு இன்பமாக வாழவேண்டும். பிறர் ஆக்கம் கண்டு துன்பம் கொள்ளக் கூடாது. 


வெஃகாமை


பிறர் பொருளை அறமற்ற முறையில் கொள்ளக் கருதுவது.பொறாமை வந்து விட்டால், நியாயம் அநியாயம் தெரியாது. எப்படியாவது மற்றவன் பெற்ற செல்வத்தை தானும் பெற வேண்டும் என்ற வெறி வரும். தவறான வழியில் செல்லத் தூண்டும். அப்படி அறமற்ற வழியில் பிறர் பொருளை அடைய நினையாமல் இருப்பது வெஃகாமை.


மேலும் சிந்திப்போம். 


Saturday, December 30, 2023

திருக்குறள் - இதுவரை - பாகம் 3

 திருக்குறள் - இதுவரை - பாகம் 3 

https://interestingtamilpoems.blogspot.com/2023/12/3.html


1, அறன் வலியுறுத்தல்,

2.  இல்வாழ்க்கை, 

3. வாழ்க்கைத் துணைநலம், 

4. புதல்வர்களைப் பெறுதல், 

5. அன்புடைமை, மற்றும் 

6. விருந்தோம்பல் 


வரை முந்தைய பதிவில் சிந்தித்தோம். 


மேலும் தொடர்வோம். 


இனியவை கூறல்: விருந்தினரை உபசரிக்க மிக முக்கியமான ஒன்று இனியவை கூறல். இனிமையாக பேசாதவன் வீட்டுக்கு யார் போவார்கள். இல்லறம் சிறக்க வேண்டும் என்றால் இனிமையாக பேசிப் பழக வேண்டும். இனிமையாக பேச பயிற்சி வேண்டும். உடனே வந்து விடாது. முயற்சி செய்ய வேண்டும். இனிமையாக பேசுவது என்றால் என்ன, அதை எப்படி பழக வேண்டும் என்று இந்த அதிகாரத்தில் சொல்லித் தருகிறார். 


செய்நன்றி அறிதல்:  இனியவை பேசி, விருந்தினர் வந்தால், அவர்களால் ஒருவனுக்கு சில நன்மைகள், உதவிகள் கிடைக்கும். அப்படி உதவி கிடைத்தால், அந்த உதவியை மறக்கக் கூடாது. பாவங்களில் பெரிய பாவமாக செய்த உதவியை மறக்கும் பாவத்தைக் கூறுகிறார் வள்ளுவர். செய்நன்றி மறந்த ஒருவனை யாரும் மதிக்க மாட்டார்கள். அவன் தனித்து விடப்படுவான். இல்லறம் சிறக்காது என்பதால், அதை பெரிய அறமாகக் கூறினார். 


நடுவு நிலைமை: 


விருந்தினர்கள், நண்பர்கள் வருவார்கள். அவர்கள் சில பல உதவிகளை செய்யக் கூடும். அதற்காக அவர் செய்யும் தீமைகளை கண்டும் காணமல் இருக்கக் கூடாது. எப்போதும் நீதியின் பால் நடுவு நிலையோடு இருக்க வேண்டும். அம்மா மற்றும் மனைவிக்கு இடையில் வரும் சிக்கல்கள், பிள்ளைகளுக்கு இடையில் வரும் சிக்கல்கள், உறவினர்களுக்கு இடையே வரும் மனத்தாபங்கள் இவற்றை நடுவு நிலையோடு அணுகவேண்டும். வேண்டப்பட்டவர் என்பதற்காக தவறான ஒன்றை சரி என்று சொல்லக் கூடாது. 


அடக்கமுடைமை 


நடுவு நிலைமை என்றால் மற்றவர் செய்யும் குறை நிறைகளை ஆராய்ந்து நேர்மையான ஒன்றைச் சொல்வது. அதே அளவு கோலை நமக்கும் வைக்க வேண்டும். நாம் செய்வது எல்லாம் சரியா? உண்பது, பேசுவது, இன்பம் அனுபவிப்பது, வரம்பு மீறி சிலவற்றை செய்ய நினைப்பது சரியா என்று சிந்தித்து மனம், மொழி, மெய் இவை தீய வழியில் செல்லாமல் அவற்றை அடக்கி வைத்தல். 


ஒழுக்கமுடைமை 


புலன்கள் அடங்கினால்தான் ஒழுக்கம் வரும். புலன்கள் போன போக்கில் போனால் ஒழுக்கம் கெடும். எனவே அடக்கமுடைக்கு அடுத்து ஒழுக்கம் பற்றி கூறினார். ஒழுக்கம் என்றால் செய்ய வேண்டிய கடமைளை முறையே செய்வது. தனி மனிதக் கடமைகள், சமுதாயக் கடமைகள் என்று இரண்டையும் சரிவரச் செய்வது. 



மேலும் சிந்திப்போம். 





Friday, December 29, 2023

கம்ப இராமாயணம் - வலியானே, வலி காண வாராயோ

கம்ப இராமாயணம் - வலியானே, வலி காண வாராயோ 



உடல் உறுப்புகள் அறுபட்ட சூர்பனகை புலம்புகிறாள். தன் உறவினர்கள் ஒவ்வொருவராக அழைக்கிறாள். 


கோழிக் குஞ்சை பருந்து தூக்க வந்தால், தாய்க் கோழி தன் சிறகால் மூடி குஞ்சுகளை பாதுக்காக்கும். குட்டி போட்ட நாய், தன் குட்டியின் பக்கத்தில் யாராவது அன்பாக வந்தால் கூட எங்கே குட்டிக்கு ஆபத்து வந்து விடுமோ என்று அப்படி நெருங்கி வருபவர்கள் மேல் பாய்ந்து, குரைத்து, விரட்டி விடும். 


அப்படி சாதாரண விலங்குகளே தன் குட்டியை பாதுக்காக்கும் போது, புலிக் குட்டிக்கு ஏதாவது ஆபத்து வர தாய்ப் புலி விடுமா?  அப்படி, இராவணா, நீ இருக்கும் போது, எனக்கு இப்படி ஒரு துன்பம் வந்து விட்டதே என்று சூர்பனகை புலம்புகிறாள். 


ஊழிக் காலத்தில் எல்லாம் அழிந்தாலும், தாங்கள் அழியாத மும்மூர்த்திகளுக்கும், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அஞ்சாத வலிமை கொண்ட இராவணனே, என் வலியைப் பார்க்க வரமாட்டாயா என்று அழுகிறாள். 


பாடல் 


"தாய்ப் புலி அருகில் இருக்கும் போது  "புலிதானே புறத்து ஆக, குட்டி

 கோட்படாது" என்ன, ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை      பொய்யோ? ஊழியினும்

சலி யாத மூவர்க்கும்,      தானவர்க்கும், வானவர்க்கும்,

வலியானே! யான் பட்ட வலி      காண வாராயோ?


பொருள் 


"புலிதானே புறத்து ஆக = தாய்ப் புலி அருகில் இருக்கும் போது 


குட்டி கோட்படாது = புலிக் குட்டியை யாரும் பிடிக்க முடியாது 


என்ன = என்ற 


ஒலி  = ஆர்பரித்து சப்தம் உண்டாக்கும்  


ஆழி = கடல் சூழ்ந்த 


உலகு = உலகம் 


உரைக்கும் உரை = சொல்லும் உண்மை 


பொய்யோ? = பொய்யா? 


ஊழியினும் = ஊழிக் காலத்திலும் 


சலி யாத மூவர்க்கும் = அழியாத மும்மூர்த்திகளுக்கும் 

,

தானவர்க்கும் = அசுரர்களுக்கும் 


வானவர்க்கும் = தேவர்களுக்கும் 


வலியானே!  = மிக்க வலிமை உடையவனே 


யான் பட்ட வலி = நான் கொண்ட வலியை 


காண வாராயோ? = காண வரமாட்டாயா ?


நமக்கு உடல் நிலை அல்லது மன நிலை சரி இல்லை என்றால் யாராவது நம்மை வந்து பார்த்து, பேசி, ஆறுதலாக நாலு வார்த்தை சொன்னால் கவலை கொஞ்சம் குறைந்தது மாதிரி இருக்கும் அல்லவா?




Thursday, December 28, 2023

திருக்குறள் - இதுவரை - பாகம் 2

 திருக்குறள் - இதுவரை - பாகம் 2 



அறம், பொருள், இன்பம் என்பதில் முதலில் அறம் அதில் இல்லறம் பற்றி முதலில் விளக்குகிறார். 


அறம் என்றால் ஏதோ காவி கட்டி சன்யாசம் போவது இல்லை. மிக மிக மகிழ்ச்சியாக, இனிமையாக வாழும் இல்லறத்தை காட்டுகிறார் வள்ளுவர். அதை பின்பற்றுவதில் நமக்கு ஒரு சங்கடமும் இருக்காது. அப்படி ஒரு எளிய வழியைக் காட்டுகிறார். 


கை பிடித்து, ஒவ்வொரு படியாக நம்மை நடத்திச் செல்கிறார். 


அதில் முதல் அதிகாரம் - இல்வாழ்க்கை. 


கணவனும், மனைவியும் சேர்ந்து நடத்தும் இல்வாழ்க்கை பற்றி முதல் அதிகாரத்தில் பேசுகிறார். இல்வாழ்வின் நோக்கம் என்ன?  ஏதோ ஆணும் பெண்ணும் சேர்ந்து இன்பம் அனுபவிக்க சமுதாயம் தந்த ஒரு அனுமதி (license) என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. வள்ளுவர் காட்டும் இல்வாழ்க்கை சமுதாயம் நோக்கியது. இல்லறத்தில் ஈடுபட வேண்டும் என்றால் அதற்கு பதினொரு கடமைகளைச் சொல்கிறார். அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதாக இருந்தால் திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கையைத் தொடங்கு என்கிறார். நான் பெரியவனா, நீ பெரியவனா, விட்டுக் கொடுத்துப் போவது, சகித்துப் போவது, சம உரிமை, முழு உரிமை, முக்கால் உரிமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து செய்யும் வேலைகள்தான் இருக்கிறது. வள்ளுவர் காட்டும் இல்லறத்தைக் கடைபிடித்தால் இல்லறத்தில் ஒரு சிக்கலும் இருக்காது. 


அடுத்தது - வாழ்க்கைத் துணைநலம் 


வள்ளுவர் காட்டும் இல்லறக் கடமைகள் அனைத்தும் ஆணின் மேல்தான். ஆனால், ஒரு ஆணால் அந்தக் கடமைகளை தனியே செய்யவே முடியாது. அவனுக்கு ஒரு பெண்ணின் துணை அவசியம் தேவை.   ஏன் பெண்ணுக்கு கடமை  கிடையாதா? ஏன் ஆண் அந்த கடமைகளுக்கு துணை போகக் கூடாதா என்று வாதம் செய்யலாம். அப்படி ஒரு இல்லறக் கோட்பாட்டை யாராவது வகுத்து, அது சரி என்று எல்லோரும் ஏற்றுக் கொண்டால் அது நடைமுறைக்கு வரும். வாதம் செய்பவர்கள் முயற்சி செய்யலாம். இல்லறக் கடமைகளை சரிவர ஆற்ற ஒரு பெண்ணின் துணை தேவை என்பதால் அவளை வாழ்க்கை துணை நலம் என்கிறார். வாழ்வில் நல்லது செய்ய ஒரு துணையாக வந்தவள். 


மூன்றாவது - புதல்வர்களைப் பெறுதல் 


இல்லறம் நடத்துவது என்பது ஏதோ உடல் இன்பத்துக்காக மட்டும் அல்ல. குழந்தைகள் அவசியம் என்கிறார். இன்று ஒரே பாலினத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள் எவ்வாறு பிள்ளை பெறுவார்கள் ?  அதை எல்லாம் நம் கலாச்சாரம் அங்கீகரிக்கவில்லை என்பதைத்தான் இந்த அதிகாரம் காட்டுகிறது. அது மட்டும் அல்ல, பிள்ளகைள் வரும் போது கணவன், மனைவி இருவரின் அன்பு எல்லைகள் விரியும். தனக்கு என்று இருந்ததை எல்லாம் பிள்ளைக்கு என்று கொடுக்கத் தோன்றும். தனக்கு துன்பம் என்றாலும் பரவாயில்லை, பிள்ளை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று இருவரும் நினைப்பார்கள். அது அன்பின் வெளிப்பாடு. 


நான்காவது - அன்புடைமை 


மனைவி, பிள்ளைகள் என்று வந்துவிட்டால் அங்கே அன்புக்கு எங்கே பஞ்சம்?  மனைவிக்கு பிடிக்கும், கணவனுக்கு பிடிக்கும், பிள்ளை விரும்புவான், மகள் இதை ஆசைப் படுவாள் என்று ஒருவருக்கு ஒருவர் கொடுத்து மகிழும் இடமாக இல்லறம் மலரும். குடும்பம் என்பது அன்புப்  பள்ளி. ஒவ்வொரு நாளும் அன்புப் பயிற்சி நிகழும் இடம். 


ஐந்தாவது - விருந்தோம்பல் 


குடும்பம் என்று வந்து விட்டால் விருந்தினர் வருவர். திருமணம் ஆகாத் ஒரு இளைஞனின் வீட்டுக்கு யார் விருந்துக்குப் போவார்கள். அவனே வெளியில் எங்காவது சாப்பிடுவான். மனைவி, பிள்ளைகள் இருக்கும் இடத்துக்கு விருந்தினர் வருவர். அப்படி வரும் விருந்தினரை எப்படி உபசரிப்பது என்று அடுத்துக் கூறுகிறார். விருந்தோம்பலை ஒரு அறமாகக் கொண்டது நம் பண்பாடு. 


(தொடரும்)

 


 

கம்ப இராமாயணம் - சூர்பனகை - உறவினர்களை அழைத்தல்

 கம்ப இராமாயணம் - சூர்பனகை - உறவினர்களை அழைத்தல் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/12/blog-post_28.html


சூர்பனகை படலத்தில் சில பாடல்களை முன்பு சிந்தித்தோம். சூர்பனகையிடம் இராமனும் சரி, இலக்குவனும் சரி நடந்து கொண்ட முறை பற்றி ஆராய்ந்தோம். அது சரியா, தவறா என்ற முடிவை வாசகர்களிடம் விட்டுவிடுவோம்.


ஒரு பெண்ணிடம் அழகாகப் பேசி, அவள் ஆசையை தூண்டிவிட்டு, பின் அவளை ஏசி விரட்டி விட்டதுவரை இராமன் செய்தது. ஆசை கொண்டு வந்த பெண்ணின் மூக்கையும், காதையும், முலையையும் அறுத்து தண்டனை தந்தது இலக்குவன் செயல். 


இலக்குவனால் தண்டிக்கப்பட்ட சூர்பனகை, வலி ஒருபுறம், அவமானம் ஒரு புறம் தாங்காமல் அழுகிறாள். 


அந்தப் புலம்பலிலுமா தமிழை இவ்வளவு அழகாகச் சொல்லுவான் இந்தக் கம்பன். சூர்பனைகையின் சோகத்தில் பங்கெடுத்து அவளுக்காக இரக்கப்படுவதா அல்லது கம்பனின் தமிழில் தோய்ந்து அடடா என்ன ஒரு கவிதை என்று வியந்து மகிழ்வதா? என்று தெரியாமல் நாம் திக்கு முக்காடும் இடம். 


அழுவாதா,  மகிழ்வதா என்று தவிக்கும் இடம். 


முதலில் தன் அண்ணன் இராவணனை கூப்பிட்டு அழுகிறாள். 


"இராவணா, நீ எவ்வளவு பெரிய ஆள் !  சிவன் இருக்கும் அந்த கைலாய மலையையே தூக்கும் மலை போன்ற தோள்களை உடையவன் நீ. உன் முன்னால் தேவர்களும் நிமர்ந்து நடக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட நீ இருக்கும் போது, இந்த தவ வேடம் பூண்ட மானிடர்கள் கையில் வில்லைத் தூக்கிக் கொண்டு அலைவது சரியா"


என்று அண்ணனை நினைத்து புலம்புகிறாள். 


பாடல் 


நிலை எடுத்து, நெடு நிலத்து நீ இருக்க, தாபதர்கள்

சிலை எடுத்துத் திரியும் இது சிறிது அன்றோ? தேவர் எதிர்

தலையெடுத்து விழியாமைச் சமைப்பதே! தழல் எடுத்தான்

மலை எடுத்த தனி மலையே! இவை காண வாராயோ


பொருள்

'நிலை எடுத்து = நிலைத்து நிற்க

நெடு நிலத்து  = பெரிய நிலத்தில்

நீ இருக்க = நீ (இராவணன்) இருக்க.  நெடு நிலத்து நீ நிலை எடுத்து இருக்க என்று வாசிக்க வேண்டும்.

தாபதர்கள்  = தவக் கோலம் கொண்டவர்கள்

சிலை எடுத்துத் = கையில் வில்லை எடுத்து

திரியும் இது = திரிகின்ற இந்த நிலை

சிறிது அன்றோ?  = சிறுமை அல்லவா?

தேவர் = தேவர்கள்

எதிர் = (உன்) எதிரில்

தலையெடுத்து = தலை தூக்கி

விழியாமைச் = விழித்துப் பார்க்காமை

சமைப்பதே! = இருப்பதே

தழல் எடுத்தான்  = கையில் தீயைக் கொண்ட (சிவனின்)

மலை எடுத்த = கைலாய மலையை கையில் எடுத்த

தனி மலையே!  = ஒப்பற்ற மலை போல் வலிமை உடையவனே

இவை காண வாராயோ? = இந்த கொடுமையை காண வர மாட்டாயா ?


நிலை எடுத்து
சிலை எடுத்துத்
தலையெடுத்து
தழல் எடுத்து
மலை எடுத்து

தமிழ்  சொற்கள் கம்பனிடம் கை கட்டி சேவகம் செய்தன. என்னை எடுத்துக் கொள் , என்னை எடுத்துக் கொள் என்று அவன் முன் வரிசையில் நின்றன.

சூர்ப்பனகையின் புலம்பலில் இத்தனை தமிழ் சுவை.


மலை எடுத்த மலையே என்று இராவணனின் ஆற்றலைக்  கூறுகிறாள். 


ஒரு பக்கம் இராவணனின் தங்கை என்ற பெருமிதம், ஆணவம். 


இன்னொரு பக்கம் காமம்.


மறுபுறம் அந்த காமம் மறுக்கப்பட்ட அவலம்.


இன்னொரு புறம் மூக்கும், காதும், முலையும் அறுபட்ட சோகம், வலி. 


ஒரு பெண்ணால் எத்தனை உணர்சிகளை கையாள முடியும். 


காதல் நிராகரிக்கப்பட்டால் பரவாயில்லை. காதலிக்க நினைத்தவனே அவமானபடுத்தி, தண்டித்தால், அந்தத் துன்பத்தை யாரால் தாங்க முடியும்?



Monday, December 18, 2023

திருக்குறள் - இதுவரை - பாகம் 1

 திருக்குறள் - இதுவரை - பாகம் 1 


இதுவரை 24 அதிகாரங்கள் படித்தோம். புகழ் என்ற அதிகாரத்தோடு இல்லறம் முற்றுப் பெறுகிறது. இதுவரை படித்ததை ஒருமுறை மீண்டும் சிந்தித்துப் பார்ப்போம். 


வாழ்க்கை என்பதை நான்கு கூறாக பிரித்துக் கொள்ளலாம். 


அறம், பொருள், இன்பம், வீடு என்று. 


வீடு என்றால் மோட்சம், இறைவனடி, தன்னை உணர்தல் என்று கொள்ளலாம். 


திருக்குறள் வீடு பற்றி பேசவில்லை. அறம், பொருள், இன்பம் பற்றி மட்டுமே பேசுகிறது. ஏன் என்றால் வீட் பற்றி சொல்லி விளக்க முடியாது. அறிவால் உணர முடியாத ஒன்று. அறம், பொருள், இன்பம் இவற்றைச் சரியாக செய்தால், வீடு தானே வரும் என்பது பொருள். 


ஒருவன் ஒரு இடத்துக்குப் போக வழி கேட்கிறான். போகும் வழி சொல்கிறோம். இப்படிச் சென்றால் நீங்கள் தேடும் இடத்தை அடைவீர்கள் என்கிறோம். அந்த இடத்தைப் பற்றி நாம் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், போகும் வழி பற்றி கூறுகிறோம். அதே போல், வள்ளுவர், போகும் வழி கூறுகிறார். இந்த வழியில் போனால், "வீடு" வந்து சேரும். நீ செல், வரும், கட்டாயம் வரும் என்கிறார். 


எனவே, வீடு பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. 


https://interestingtamilpoems.blogspot.com/2023/12/1.html


(please click the above link to contiure reading)


மீதி உள்ள அறம், பொருள், இன்பம் என்ற மூன்றில் அறம் பற்றி முதலில் எடுத்துக் கொள்கிறார். 


அறம் என்றால் என்ன?


அதற்கு பரிமேலழகர் மிக எளிமையான, தெளிவான விளக்கம் செய்கிறார். 


அறம் என்பது "விதித்தன செய்தாலும், விலக்கியன ஒழித்தலும்" என்கிறார். 


அதாவது, உயர்ந்த நூல்களில் சொல்லப்பட்டவற்றை செய்வதும், அந்த நூல்கள் எதை செய்யக் கூடாது என்று சொல்கிறதோ அவற்றை செய்யாமல் இருப்பதும். 


இந்த அறம் என்பது ஒழுக்கம், வழக்கு, தண்டனை என்று மூன்று பிரிவுகளைக் கொண்டது. 


இதில் வழக்கு, தண்டனை என்பதை மன்னர்களிடம் விட்டு விட்டார்கள். ஒருவன் ஒழுக்கம் தவறினால் என்ன செய்வது என்ற கேள்வியை மன்னனுக்கு விட்டு விட்டார்கள். மன்னிப்பதும், தண்டிப்பதும், திருத்துவதும் அவன் கடமை. அது எல்லோருக்கும் உரிய செயல் அல்ல என்பதால் அதைத் தவிர்த்து, ஒழுக்கம் என்று சொல்லப் படும் அறம் பற்றி சொல்ல முதலில் ஆரம்பிக்கிறார். 


இந்த அறத்தை இரண்டாக பிரித்துக் கொள்கிறார் வள்ளுவர். 


இல்லறம்

துறவறம் 


இங்கே இல்லறமும், துறவறமும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டது அல்ல. இல்லறத்தின் முதிர்ச்சி துறவறம். ஒரு சிறப்பான இல்லறம், ஒருவனை, இயல்பாக துறவறத்துக்கு இட்டுச் செல்லும். பரந்துபட்ட இல்லறமே துறவறம். துறவறம் என்று தனித்து ஒன்றும் இல்லை. இல்லறம் விரிந்தால் துறவறம். சுருங்கி, ஒரு வட்டத்துக்குள் நின்றால் அது இல்லறம். 


ஆரம்பம் இல்லறம் என்பதால், அதை முதலில் எடுத்துக் கொண்டு அது பற்றி சொல்லத் தொடங்குகிறார். 


தொடரும் 


Monday, December 11, 2023

இனியவை நாற்பது - அலையாமை இனிது

 இனியவை நாற்பது - அலையாமை இனிது 


நாம் ஒரு இக்கட்டில் இருக்கிறோம். நமக்கு ஒரு உதவி தேவைப் படுகிறது. அதை செய்யும் நிலையில் ஒரு நட்போ உறவோ இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவர்களாகவே முன் வந்து செய்திருக்கலாம். செய்யவில்லை. நாம் கேட்கிறோம். அப்போதும் செய்யவில்லை. ஒன்றுக்கு பல முறை கேட்டபின் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். 


அப்படி, செய்யமாட்டேன் என்று இருப்பவரை, மீண்டும் மீண்டும் சென்று கேட்பதை விட கேட்காமலே இருப்பது இனிமையானது.


அடுத்ததாக,


இந்த உடல் நிலையானது அல்ல. மரணம் என்றோ ஒரு நாள் கட்டாயம் வரும். அது என்று என்று தெரியாது. அப்புறம் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமால் நல்ல காரியங்களை உடனடியாக செய்து விடுவது நல்லது. 


அடுத்தது, 


எவ்வளவு துன்பம் வந்தாலும், அறம் அற்ற செய்யலகளை செய்யாமல் இருப்பது நல்லது. 


பாடல் 


ஆற்றானை யாற்றென் றலையாமை முன்இனிதே

கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே

ஆக்க மழியினும் அல்லவை கூறாத

தேர்ச்சியின் தேர்வினியது இல்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/12/blog-post_11.html


(please click the above link to continue reading)


ஆற்றானை = செய்யாதவனை (ஆற்றுதல் = செயல் ஆற்றுதல் ) 


யாற்றென் றலையாமை = செய் என்று அவன் பின்னே அலையாமை (ஆற்று என்று அலையாமை என்று சீர் பிரித்துக் கொள்ள வேண்டும்) 


முன்இனிதே = மிக இனிதானது 


கூற்றம் = காலன், எமன் 


வரவுண்மை = வருகின்ற உண்மை 


சிந்தித்து = அறிந்து கொண்டு 


வாழ்வினிதே = வாழ்வது இனிது 


ஆக்க மழியினும் = சேர்த்து வைத்த அனைத்தும் அழிந்து போகும் என்றாலும் 


அல்லவை = அறம் அல்லாதவற்றை 


கூறாத = சொல்லாத 


தேர்ச்சியின் தேர்வினியது இல் = தெளிந்த தேர்வு செய்வது போன்றது ஒன்று இல்லை 


என்ன ஒழுக்கமாக இருந்து கண்ட பலன் என்ன?  அயோக்கியத்தனம் செய்கிறவன் எல்லாம் மேலே மேலே போய்க் கொண்டு இருக்கிறான். இந்த நீதி, நேர்மை என்று இவற்றைக் கட்டிக் கொண்டு கண்ட பலன் என்ன என்று மனம் தடுமாறாமல், அற வழியில் நிற்கும் நேர்மை நல்லது. இதுதான் சரி என்று தெளிவான சிந்தனையோடு, குழப்பம் இல்லாமல் அற வழியை தேர்ந்து எடுப்பது நல்லது. 


இனியவை நாற்பது என்ற நூலில் இருந்து இந்தப் பாடல். இப்படி நாற்பது பாடல்கள் இருக்கின்றன.