Thursday, December 28, 2023

கம்ப இராமாயணம் - சூர்பனகை - உறவினர்களை அழைத்தல்

 கம்ப இராமாயணம் - சூர்பனகை - உறவினர்களை அழைத்தல் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/12/blog-post_28.html


சூர்பனகை படலத்தில் சில பாடல்களை முன்பு சிந்தித்தோம். சூர்பனகையிடம் இராமனும் சரி, இலக்குவனும் சரி நடந்து கொண்ட முறை பற்றி ஆராய்ந்தோம். அது சரியா, தவறா என்ற முடிவை வாசகர்களிடம் விட்டுவிடுவோம்.


ஒரு பெண்ணிடம் அழகாகப் பேசி, அவள் ஆசையை தூண்டிவிட்டு, பின் அவளை ஏசி விரட்டி விட்டதுவரை இராமன் செய்தது. ஆசை கொண்டு வந்த பெண்ணின் மூக்கையும், காதையும், முலையையும் அறுத்து தண்டனை தந்தது இலக்குவன் செயல். 


இலக்குவனால் தண்டிக்கப்பட்ட சூர்பனகை, வலி ஒருபுறம், அவமானம் ஒரு புறம் தாங்காமல் அழுகிறாள். 


அந்தப் புலம்பலிலுமா தமிழை இவ்வளவு அழகாகச் சொல்லுவான் இந்தக் கம்பன். சூர்பனைகையின் சோகத்தில் பங்கெடுத்து அவளுக்காக இரக்கப்படுவதா அல்லது கம்பனின் தமிழில் தோய்ந்து அடடா என்ன ஒரு கவிதை என்று வியந்து மகிழ்வதா? என்று தெரியாமல் நாம் திக்கு முக்காடும் இடம். 


அழுவாதா,  மகிழ்வதா என்று தவிக்கும் இடம். 


முதலில் தன் அண்ணன் இராவணனை கூப்பிட்டு அழுகிறாள். 


"இராவணா, நீ எவ்வளவு பெரிய ஆள் !  சிவன் இருக்கும் அந்த கைலாய மலையையே தூக்கும் மலை போன்ற தோள்களை உடையவன் நீ. உன் முன்னால் தேவர்களும் நிமர்ந்து நடக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட நீ இருக்கும் போது, இந்த தவ வேடம் பூண்ட மானிடர்கள் கையில் வில்லைத் தூக்கிக் கொண்டு அலைவது சரியா"


என்று அண்ணனை நினைத்து புலம்புகிறாள். 


பாடல் 


நிலை எடுத்து, நெடு நிலத்து நீ இருக்க, தாபதர்கள்

சிலை எடுத்துத் திரியும் இது சிறிது அன்றோ? தேவர் எதிர்

தலையெடுத்து விழியாமைச் சமைப்பதே! தழல் எடுத்தான்

மலை எடுத்த தனி மலையே! இவை காண வாராயோ


பொருள்

'நிலை எடுத்து = நிலைத்து நிற்க

நெடு நிலத்து  = பெரிய நிலத்தில்

நீ இருக்க = நீ (இராவணன்) இருக்க.  நெடு நிலத்து நீ நிலை எடுத்து இருக்க என்று வாசிக்க வேண்டும்.

தாபதர்கள்  = தவக் கோலம் கொண்டவர்கள்

சிலை எடுத்துத் = கையில் வில்லை எடுத்து

திரியும் இது = திரிகின்ற இந்த நிலை

சிறிது அன்றோ?  = சிறுமை அல்லவா?

தேவர் = தேவர்கள்

எதிர் = (உன்) எதிரில்

தலையெடுத்து = தலை தூக்கி

விழியாமைச் = விழித்துப் பார்க்காமை

சமைப்பதே! = இருப்பதே

தழல் எடுத்தான்  = கையில் தீயைக் கொண்ட (சிவனின்)

மலை எடுத்த = கைலாய மலையை கையில் எடுத்த

தனி மலையே!  = ஒப்பற்ற மலை போல் வலிமை உடையவனே

இவை காண வாராயோ? = இந்த கொடுமையை காண வர மாட்டாயா ?


நிலை எடுத்து
சிலை எடுத்துத்
தலையெடுத்து
தழல் எடுத்து
மலை எடுத்து

தமிழ்  சொற்கள் கம்பனிடம் கை கட்டி சேவகம் செய்தன. என்னை எடுத்துக் கொள் , என்னை எடுத்துக் கொள் என்று அவன் முன் வரிசையில் நின்றன.

சூர்ப்பனகையின் புலம்பலில் இத்தனை தமிழ் சுவை.


மலை எடுத்த மலையே என்று இராவணனின் ஆற்றலைக்  கூறுகிறாள். 


ஒரு பக்கம் இராவணனின் தங்கை என்ற பெருமிதம், ஆணவம். 


இன்னொரு பக்கம் காமம்.


மறுபுறம் அந்த காமம் மறுக்கப்பட்ட அவலம்.


இன்னொரு புறம் மூக்கும், காதும், முலையும் அறுபட்ட சோகம், வலி. 


ஒரு பெண்ணால் எத்தனை உணர்சிகளை கையாள முடியும். 


காதல் நிராகரிக்கப்பட்டால் பரவாயில்லை. காதலிக்க நினைத்தவனே அவமானபடுத்தி, தண்டித்தால், அந்தத் துன்பத்தை யாரால் தாங்க முடியும்?



2 comments:

  1. அருமையான பதிவு....

    பள்ளியில் செய்யுள் படித்த போது...கம்பராமயண பாடல்களை மனப்பாடம் செய்வது எளிதாக இருந்தது....

    கம்பனின் சொல் அலங்காரம்... சபாஷ்....

    ReplyDelete
  2. கம்பன் ஒரு காவியம்👏

    ReplyDelete