Friday, December 8, 2023

திருக்குறள் - வாழ்க்கை என்றால் என்ன ?

 திருக்குறள் -  வாழ்க்கை என்றால் என்ன ?


வாழ்க்கை என்றால் என்ன? 


எப்படி வாழ வேண்டும்?  


பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று போவது ஒரு வாழ்க்கையா?  ஒருவன் வாழ்ந்தான் என்று சொல்ல வைப்பது எது?  எத்தனையோ பேர் பிறந்து, உண்டு, உறங்கி, பின் வந்தது தெரியாமல் இறந்து போகிறார்கள். அது ஒரு வாழ்க்கையா?


வாழ்கின்ற காலத்தில் ஏதாவது செய்திருப்பானே? ஒன்றுமே செய்யாமல் ஒருவன் எப்படி இருக்க முடியும்?  அப்படி என்னதான் செய்தான் என்ற கேள்வி வரும் அல்லவா?


செய்யும் வேலையை சிறப்பாக செய்து இருந்தால் அவனுக்கு ஒரு பேர் கிடைத்திருக்கும். அதனால் ஒரு புகழ் உண்டாகி இருக்கும். அவனுக்குப் பின்னும், அவன் பேரை மக்கள் சொல்லிக் கொண்டு இருப்பார்கள். அப்படி வாழ்வது ஒரு நல்ல வாழ்க்கை. 


அவனா, அப்படி ஒருவன் இருந்தானா? என்று ஒரு அடையாளமே இல்லாமல் புழு பூச்சி போல் தோன்றி மறைவது ஒரு நல்ல வாழ்க்கையா?


வள்ளுவர் சொல்கிறார், 


"மற்றவர்கள் இகழாதபடி வாழ்பவர்களே வாழ்ந்தவர்கள் என்று  கருதப்படுவார்கள். புகழ் இல்லாமல் வாழ்பவர்கள் , வாழாதவர்களே"


என்று


பாடல் 



வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய

வாழ்வாரே வாழா தவர்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/12/blog-post_8.html


(please click the above link to continue reading)



வசையொழிய = பிறர் இகழாதபடி 


வாழ்வாரே  = வாழ்பவரே 


வாழ்வார் = வாழ்கின்றவர் ஆவார் 


இசைஒழிய = புகழ் இல்லாமல் 


வாழ்வாரே = வாழ்பவர்கள் 


வாழா தவர் = வாழாதவர்களாகவே கொள்ளப்படுவர். 


அதாவது புகழ் இல்லாவிட்டால் இகழ்.


எனவே, புகழோடு வாழ்ந்தால், வாழ்ந்ததாகக் கருதப்படுவர்.


இகழோடு வாழ்ந்தால், அவர்கள் வாழாதவர்களாகவே கருதப்படுவர். 


புகழ் அடையும்படி வாழவேண்டும். இல்லை என்றால் நடைபிணம் தான். 


புகழ் அடைவது என்றால் சாதாரண காரியமா?


என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், இதில் யார் எவ்வளவு சிறப்பாக செய்து புகழ் அடைந்து இருக்கிறார்கள், அவர்களை விட நாம் எப்படி சிறப்பாக செய்வது என்று எண்ணி, திட்டம் போட்டு,  காரியம் செய்ய வேண்டும். 


ஒரு நாட்டில், ஒவ்வொரு குடிமகனும் இப்படி முயற்சி செய்தால், அந்த நாடு எந்த அளவுக்கு முன்னேறும்?


ஒவ்வொரு தனிமனிதனும், தான் எடுத்துக் கொண்ட முயற்சியில் புகழ் பெற முயல வேண்டும். 




No comments:

Post a Comment