Thursday, December 7, 2023

அறநெறிச்சாரம் - அறவுரைக்கு தேவையான நான்கு

 அறநெறிச்சாரம் - அறவுரைக்கு தேவையான நான்கு 


எந்த ஒன்றையும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அது எதனால் ஆக்கப்பட்டது என்று அறிய வேண்டும். ஒரு பொருள் என்றால் அது பல சிறிய பொருள்களின் தொகுப்பு. அந்த சிறிய பொருள்கள் அதனினும் சிறிய பொருள்களின் தொகுப்பு. இப்படி பகுத்துக் கொண்டே போனால், உலகில் உள்ள அத்தனை பொருள்களும் அடிப்படையில் சில மிக நுண்ணிய துகள்களின் தொகுப்பு என்று அறிய முடியும். அந்தத் துகள்களின் தொகுப்புதான் உலகம். 


பிரித்தால்தான் ஆராய முடியும். 


தமிழர்கள் எதையும் சரியான படி பிரித்து, அந்தப் பிரிவுகளின் தன்மைகளை ஆராய்ந்து இருக்கிறார்கள். 


வாழ்வின் நோக்கம் - அறம், பொருள், இன்பம், வீடு என்ற பிரிவுகளை உடையது. 


தமிழ் - இயல், இசை, நாடகம் என்ற பிரிவுகளை உடையது. 


வாழ்க்கை - அகம், புறம் 


அறம் - இல்லறம், துறவறம் 


சுவை - ஆறு சுவை


இசை - ஏழு ஸ்வரங்கள் 


நிலம் - ஐந்து பிரிவு 



இப்படி சரியான படி பிரித்தால், எதையும் நன்றாக புரிந்து கொள்ள முடியும் 


அறத்தின் பிரிவுகள் என்ன ?


அறத்திற்கு நான்கு கூறுகள் என்கிறது அறநெறிச்சாரம். 


அறத்தை சொல்பவன், அதைக் கேட்பவன், சொல்லப்படும் உரை, அதனால் வரும் பயன். 


இந்த நான்கும் அறத்தின் கூறுகள். 


இந்த நான்கிலும், நல்லது, கெட்டது இருக்கும். நல்லவற்றை எடுத்துக் கொண்டு, மற்றவற்றை தள்ளிவிட வேண்டும். 


பாடல் 



உரைப்பவன் கேட்பான் உரைக்கப் படுவ

  துரைத்தனா லாய பயனும் - புரைப்பின்றி

  நான்மையும் போலியை நீக்கி அவைநாட்டல்

  வான்மையின் மிக்கார் வழக்கு.


பொருள் 




(please click the above link to continue reading)


உரைப்பவன் = அறத்தை போதிப்பவன் 


கேட்பான் = அதைக் கேட்கும் மாணவன் 


உரைக்கப் படுவது = சொல்லப்பட்ட அறம் 

 

உரைத்தனா லாய பயனும் = அந்த அறத்தினால் உண்டாகும் பயன் 


புரைப்பின்றி = குற்றம் இன்றி 


நான்மையும் = இந்த நான்கிலும் 


போலியை நீக்கி = நல்லன அல்லாதவற்றை நீக்கி 


அவைநாட்டல் = நல்லதை நிலை நிறுத்துதல் 


வான்மையின் மிக்கார் வழக்கு = ஒழுக்கத்தில் சிறந்தோரது இயல்பு 


அறம் என்பது பயன் நோக்கியது என்று புரிந்து கொள்ள வேண்டும். பலன் இல்லாமல் அறம் செய்வதில் அர்த்தம் இல்லை. 


அறம் சில சமயம் காலத்தோடு ஒன்றாமல் போகலாம். என்றோ சொன்ன அறத்தை காலகாலத்துக்கும் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டிய அவசியம் இல்லை. 


சொல்பவன், கேட்பவன், சொல்லப்படும் அறம், பலன்  - இந்த நான்கிலும் குற்றம் வரலாம் என்கிறது. 


அறத்தில் எப்படி குற்றம் வர முடியும் ?


குறை என்றால், காலத்தோடு ஒவ்வாத அறங்கள். பெண்ணைக் கொல்வது என்பது அறம் அற்ற செயல். இராமன், தாடகை என்ற பெண்ணைக் கொன்றான். அது அறம் வழுவிய செயலா?  தாடகை என்பவள் பெண் உருவில் இருந்தாளே அன்றி பெண்ணின் குணங்கள் இல்லாதவள். அங்கே அறத்தை கொஞ்சம் விரித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது. 


குழந்தைத் திருமணம், உடன் கட்டை ஏறுதல் போன்றவை ஒரு காலத்தில் அறம் எனக் கருதப்பட்டது. அதை இப்போது கடைபிடித்தால் அது குற்றம். காலத்தோடு மாற வேண்டும். 


இந்த சொல்பவன், கேட்பவன் இவற்றில் என்ன குற்றம் வந்து விடும்?


பின்னால் அவற்றை விளக்குகிறது இந்த நூல். 


மேலும் சிந்திப்போம். 


 


No comments:

Post a Comment