Friday, December 1, 2023

தேவாரம் - பார்த்தா சிரிப்பா வருது

 தேவாரம் - பார்த்தா  சிரிப்பா வருது 


பக்தி என்பது ஏதோ எந்நேரம் பார்த்தாலும் பஜனை, பூஜை, புனஸ்காரம் செய்து கொண்டு, வாழ்கையை முழுவதுமாக நிராகரிப்பது அல்ல. வாழ்க்கையை இரசிப்பதும், அனுபவிப்பதும் பக்தியோடு சேருமா?


ஐயையோ, புலன் இன்பமா? அபச்சாரம், அபச்சாரம் என்று கன்னத்தில் போட்டுக் கொள்வதுதானா பக்தி. 


வாழ்வின் ஒவ்வொரு இன்பத்தையும் மறுதலித்துக் கொண்டே போனால், எப்படி இருக்கும்? புலன்கள் ஒரு புறம் இழுக்கும். மறு புறம் போகாதே என்று பக்தி தடுக்கும். இந்தச் சண்டையில் யார் வென்றாலும் தோற்பது நீங்கள்தான். 


பக்தி வென்று, புலன் இன்பங்களை எல்லாம் துறந்தால், அத்தனையும் இழந்து விட்டோமே என்ற ஏக்கம் மனதின் ஓரத்தில் இருந்து கொண்டே இருக்கும். 


மாறாக, புலன் இன்பங்கள் வென்று, பக்தி தோற்றால், இப்படி சிற்றின்பங்களுக்கு ஆட்பட்டு, பேரின்பத்தை இழந்துவிட்டேனே என்று தோன்றும். 


நம் பக்தி இயற்கையை, வாழ்வை, ஆன்மீகப் பாதையில் இருந்து பிரித்து வைப்பது இல்லை. இயற்கையை மீறி, இயற்கைக்கு எதிராக செல்வது அல்ல நம் ஆன்மிகம். இயற்கையோடு ஒன்றிப் போவது. 


அது ஒரு குளம். அந்த குளத்தின் அருகில் முடத்தாழை மரம் இருக்கிறது. அந்த மரத்தின் கிளை அந்தக் குளம் நோக்கி தாழ்ந்து இருக்கிறது. அந்தக் கிளையில் உள்ள மலரின் நிழல் குளத்தில் விழுகிறது. அந்த நிழலை குருகு என்று எண்ணி அந்தக் குளத்தில் இல்ல மீன்கள் பயந்து, தாமரை இலையின் பின்னே ஒளிந்து கொள்கிறது. அதைப் பார்த்த, அருகில் இருந்த கடலில் இருந்த முத்துக்கள் சிரித்ததாம். 


அது சரி, இந்தப் பாடலுக்கும், இதற்கு முன் சொன்ன முகவுரைக்கும் என்ன சம்பந்தம் ?


இந்த அர்த்தம் தொனிக்கும் கவிதையை எழுதியவர் திருஞான சம்பந்தர். சிவ பெருமான் மேல் எழுதிய கவிதை. 


 பாடல் 


விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின்  தண்புறவில்,

மடல் விண்ட முடத்தாழைமலர் நிழலைக் குருகு என்று,

தடம் மண்டு துறைக் கெண்டை, தாமரையின்பூ மறைய,

கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/12/blog-post.html


(Please click the above link to continue reading)


விடம் = விஷம் 


உண்ட = சாப்பிட்ட 


மிடற்று = கழுத்தை, தொண்டையை உடைய 


அண்ணல் = பெரியவன் 


வெண்காட்டின் = திரு வெண்காடு என்ற தலத்தில் 


 தண்புறவில் = குளிர்ந்த வெளியில் 


மடல் = பூவிதழ் 


விண்ட  = விரித்த 


முடத்தாழை = முடத்தாழை என்ற மரத்தின் 


மலர் = மலரின் 

 


 நிழலைக் = நீரில் விழுந்த நிழலை 


குருகு என்று = குருகு என்ற சிறு பறவை என்று எண்ணி 

,

தடம் = குளத்தில் உள்ள 


மண்டு = வாழும் 


துறைக் கெண்டை = கெண்டை மீன் 


தாமரையின்பூ மறைய = தாமரை பூ கொடியின் இலையின் கீழே சென்று மறைய 


கடல் விண்ட = கடலில் வாழும் 


கதிர் முத்தம் = ஒளிக் கதிர் வீசும் முத்துக்கள் 


நகை காட்டும் = அதைப் பார்த்து சிரிக்கும் 


காட்சியதே = காட்சியதே 


சமயக் குரவர்களில் நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தர், குளத்தில் வாழும் மீன் நீந்திப் போவதைப் பார்த்து , இரசித்து, அது மலரின் நிழலுக்கு பயந்து இலையின் அடியில் சென்று ஒளிந்து கொள்வதாக கற்பனை பண்ணி, அதை கண்டு முத்து சிரிப்பதாக கவிதை வரைகிறார். 


இதில் பக்தி எங்கே வந்தது? 


அது தான் பக்தி, இயற்கையோடு ஒன்றிப் போவது, உலகை உள்ளபடி இரசிப்பது, அதில் தன்னை மறந்து ஒன்றிப் போவது...அதுதான் பக்தி. 


ஒவ்வொரு படைப்பும், ஆகச் சிறந்த ஒன்றுதான். உலகம் ஆனந்த மயமானது. அதை இரசிப்பது, அந்த ஆனந்தத்தோடு ஒன்றுவது பக்தி. 


வாழ்கையை இரசியுங்கள். எப்போது பார்த்தாலும் இல்லாத ஒன்றை நினைத்து கனவு கண்டு கொண்டு இருக்காமல், உண்மையில் இருப்பதை கண்டு மகிழுங்கள். 


இந்த ஒரு நொடி மாத்திரமே உண்மை. நேற்றும், நாளையும் பொய்த் தோற்றங்கள். 


மரம், குளம், மீன், குருகு, தாமரை இலை...இதுதான் உண்மை. இதில் மனதை வையுங்கள். நாளைய பற்றிய கனவையும், நேற்றைய பற்றிய கவலைகளையும் விட்டு ஒழியுங்கள்.


அது என்ன விடம் உண்ட கண்டர்?


விஷத்தை எதற்கு உண்டார்? அது விஷம் என்று சிவனுக்குத் தெரியும்தானே. பின் அதை ஏன் உண்ண வேண்டும்? பின் அதை தொண்டைக் குழியிலேயே நிறுத்த வேண்டும்? 


மேலும் சிந்திப்போம்....


No comments:

Post a Comment