Sunday, June 8, 2014

இராமாயணம் - அமுதில் நனைந்த சொற்கள்

இராமாயணம் - அமுதில் நனைந்த சொற்கள் 


சீதையின் அழகை வர்ணிக்கிறாள் சூர்பனகை.

ஒரு பெண்ணை இன்னொரு பெண் அழகி என்று ஒத்துக் கொள்வது என்பது நடவாத காரியம்.  சூர்பனகை என்ற ஒரு பெண், சீதை என்ற இன்னொரு பெண்ணின் அழகை வர்ணிக்கிறாள் என்றால் சீதையின் அழகு அப்படி இருந்திருக்க வேண்டும்.


"மேகம் போல இருக்கும் அவளின் பின்னிய கூந்தல். அந்த கூந்தலை பிரித்து விட்டாலோ மழை போல இருக்கும். அவளுடைய பாதம் பஞ்சு போல இருக்கும். பவளம் போல இருக்கும் அவளின் விரல்கள். அமுதில் தோய்ந்து வந்தது போல இருக்கும் அவளின் பேச்சு. குறை இல்லாத தாமரை போல தாமரை போல இருக்கும் அவள் முகம். அவளின் கண்கள் கடல் போல இருக்கும் "

பாடல்

“மஞ்சு ஒக்கும் அளக ஓதி;
    மழை ஒக்கும் வடித்த கூந்தல்;
பஞ்சு ஒக்கும் அடிகள், செய்ய
    பவளத்தை விரல்கள் ஒக்கும்;
அம் சொற்கள் அமுதில் அள்ளிக்
    கொண்டவள் வதனம், ஐய!
கஞ்சத்தின் அளவிற்றேனும்,
    கடலினும் பெரிய கண்கள்.‘‘

பொருள்

“மஞ்சு ஒக்கும் அளக ஓதி = முடிந்த கூந்தல் மேகத்தைப் போல இருக்கும்

மழை ஒக்கும் வடித்த கூந்தல்; = மழை போல இருக்கும் விரித்த கூந்தல்

பஞ்சு ஒக்கும் அடிகள் = அவளுடைய பாதங்கள் பஞ்சு போல இருக்கும்

செய்ய பவளத்தை விரல்கள் ஒக்கும் = சிறந்த பவளத்தைப் போன்ற விரல்கள்

அம் சொற்கள் = அவளின் சொற்கள்

அமுதில் அள்ளிக் = அமுதில் தோய்ந்து வந்தவை

கொண்டவள் வதனம், ஐய! = அவள் முகம் இருக்கிறதே

கஞ்சத்தின் அளவிற்றேனும் = தாமரை போன்றது

கடலினும் பெரிய கண்கள்.  = கடலை விட பெரிய கண்கள். கடலின் ஆழம் அறிந்தவர் யார். அதற்குள் என்னென்ன இருக்கிறது என்று யார்க்குத் தெரியும் ? அனைத்தையும் தனக்குள் அடக்கிக் கொண்டு கரையோரம் லேசாக அலை அடிக்கும். அந்த சலனமா கடல் ? கடலுக்குள் மலை உண்டு, எரிமலை உண்டு, பெரிய பெரிய திமிங்கலங்கள் உண்டு, முத்து பவளம் போன்ற உயர்ந்த கற்கள் உண்டு...மர்மம் நிறைந்தது கடல். பெண்களின் கண்களும் அப்படித்தான். கம்பர் ஒரு படி மேலே போய் கடலை விட பெரிய கண்கள் என்கிறார்.


சீதையின் அழகை சொல்ல வந்த சூர்பனகை , சீதையின் பேச்சில் வந்து விழும் சொற்கள் அமுதில் தோய்ந்து வந்ததைப் போல இருக்குமாம். அவ்வளவு இனிமை. சொற்களின் இனிமையில் இருந்து கம்பன் விடு படவே இல்லை. கவிச் சக்கரவர்த்தி அல்லவா ?

அழகாகப் பேசுங்கள். அழகாவும் இருப்பீர்கள். 


2 comments:

  1. "கடலினும் பெரிய கண்கள்" என்பது மிக இனிமை.

    ReplyDelete
  2. அருமை... அருமை..! கடலினும் பெரிய கண்கள்...!!

    ReplyDelete