Wednesday, December 20, 2017

முத்தொள்ளாயிரம் - பெண்ணின் நாணம் கலந்த காதல்

முத்தொள்ளாயிரம் - பெண்ணின் நாணம் கலந்த காதல் 


பெண்கள் , தங்கள் உணர்ச்சிகளை அவ்வளவாக வெளிப் படுத்துவது இல்லை. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று ஆண்கள் மண்டையை பிய்த்துக் கொள்கிறார்கள்.

பெண்களுக்கு தங்கள் உணர்வுகளை வெளிக் காட்டக் கூடாது என்று இல்லை. ஏதோ ஒரு நாணம், வெட்கம் அவர்களை தடுக்கிறது. அதையும் மீறி அவர்கள் தங்கள் காதல் மற்றும் காமத்தை வெளிப் படுத்தும் போது அது மிக அழகாக இருக்கிறது.

வெட்கம் கலந்த காதல் ஒரு அழகு தான்.

ஆணைப் போல அவளும் முரட்டுத் தனமாய் இருந்தால் , நல்லாவா இருக்கும் ?

ஆணுக்கு எல்லாம் வெட்டு ஒன்றும் துண்டு இரண்டுதான். பெண்ணிடம் தயக்கம் இருக்கும், பயம் இருக்கும், கூச்சம் இருக்கும், நாணம் இருக்கும், வெட்கம் இருக்கும்....இவற்றிற்கு நடுவில் அவர்கள் தங்கள் காதலையும் சொல்லியாக வேண்டும்.

இந்த பிரச்சனை இன்று நேற்று அல்ல....தொன்று தொட்டு வருகிறது.

பாண்டிய மன்னன் விதி உலா போகிறான். அவள் ஒரு சாதாரண குடும்பப் பெண். பாண்டியன் மேல் காதல். சொல்லவா முடியும் ? அவனை கொஞ்சம் பார்கவாவது செய்யலாம் என்றால் அவனை சுமந்து வரும் அந்த பட்டத்து பெண்  யானை வேக வேகமாக நடந்து சென்று விடுகிறது.


யானையிடம் தலைவி சொல்கிறாள்..."ஏய் யானை, கொஞ்சம் மெதுவா தான் போயேன்...என்ன அவசரம் .." என்று சொல்ல வேண்டும்.  யானை கேட்குமே , "ஏன் என்னை மெதுவாக போகச் சொல்கிறாய் " என்று . பாண்டிய மன்னனை சைட் அடிக்கணும் என்று சொல்லவா முடியும் ?

அவள் அந்த பட்டத்து பெண் யானையிடம் சொல்கிறாள் " நீ இப்படி தங்கு தங்கு என்று வேகமாய் நடந்து போனால், ஊரில் உன்னைப் பற்றி என்ன சொல்வார்கள். இப்படி ஒரு அடக்கம் இல்லாமல் , ஒரு பெண் இருக்கலாமா என்று உன்னைப் பற்றி பழி பேசுவார்கள். எனவே , மெல்லமா போ " என்கிறாள். என்னவோ , அந்த யானை மேல் ரொம்ப கரிசனம் உள்ளவள் போல.

பாடல்

எலா அ மடப் பிடியே எங்கூடல்க் கோமான்
புலா அல் நெடு நல் வேல் மாறன் - உலாங்கால்
பைய நடக்கவும் தேற்றாயால் நின் பெண்மை
ஐயப் படுவது உடைத்து

பொருள்

எலா = ஏய் என்று அழைப்பதைப் போன்ற ஒரு விளிச் சொல்

அ = அந்த

மடப் பிடியே = பெண் யானையே

எங்கூடல்க் கோமான் = எங்கள் கூடல் நகரத்து கோமான்

புலா அல்  = எதிரிகளின் புலால் இருக்கும்

நெடு நல் வேல்  = நீண்ட நல்ல வேலைக் கொண்ட

மாறன் = பாண்டிய மன்னன்

உலாங்கால் = உலா வரும் போது

பைய நடக்கவும் = மெல்ல நடக்கவும்

தேற்றாயால் = தெளிந்து செய்யவில்லை என்றால்

நின் பெண்மை = உன்னுடைய பெண் தன்மை

ஐயப் படுவது உடைத்து = சந்தேகத்துக்கு இடமாகும்

பைய நடந்து போ என்று சொல்கிறாள். அவ்வளவு நேரம் அவனை பார்க்கலாமே என்ற ஏக்கம்.

பேருந்து நிலையத்திலும் , டீ கடையிலும் காதலிக்காக மணிக் கணக்கில் காத்து கிடைக்கும்  காதலர்களுக்குத் தெரியும்...அந்த வேதனை. அவள் வருவாள். வந்த நேரம் இருக்காது, நடந்து போய் விடுவாள்.

அது போல, இவள் வீட்டில், கதவுக்குப் பின்னே காத்து கிடக்கிறாள். அவன் வருகிறான். வந்த நேரம் இல்லை, போய் விட்டான்.

ஏய் , யானையே, கொஞ்சம் மெல்ல போனால் என்ன ?

எவ்வளவு நளினமாக, மென்மையாக, விரசம் கலக்காமல் தன் காதலை வெளிப் படுத்துகிறாள்.

நடுவே,இழையோடும் நகைச்சுவை வேறு....

http://interestingtamilpoems.blogspot.in/2017/12/blog-post_20.html

2 comments:

  1. இவளை காதல் படுத்தும் பாடு பெண் யானைக்கும் புரிந்து இருக்கும்.அவள் வீட்டு வாசலில் நின்று கூட செல்லலாம்! சுவையாக உள்ளது.

    ReplyDelete
  2. யானையின் பெண்மையைக் கேள்வி கேட்கும்போது , தான் எப்படிப் பெண் போலத் தயங்கி நிற்கிறாள் என்பதையும் எண்ணுகின்றாளோ?

    அருமையான சுவையான பாடல். நன்றி.

    ReplyDelete