Wednesday, December 19, 2018

திருப்பாவை - நமக்கே பறை வருவான் - பாகம் 2

திருப்பாவை - நமக்கே பறை வருவான் - பாகம் 2



பாடல்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.

பொருள்

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_18.html



எப்படிப் போகிறாள், எப்போது போகிறாள், எதை நினைத்துக் கொண்டு போகிறாள்...

என்று போன பிளாகில் முடித்திருந்தோம்.

அதிகாலையில் நீராடி இறைவனைத் தொழப் போகிறாள். 

ஏன் அதிகாலை? ஒரு ஒன்பது பத்து மணிக்குப் போனால் என்ன? 

நமது மனம் மூன்று நிலைகளில் செயல் படுவதாக நமது இலக்கியங்கள் பேசுகின்றன. 

சாத்வீகம், தாமசம்,  ரஜோ குணம் என்ற மூன்று நிலைகளில் நம் மனம் இயங்குகின்றது. 

நான் உண்ணும் உணவு, பருகும் நீர், உடுத்தும் உடை, தட்ப வெப்ப நிலை, யாரோடு பழகுகிறோம், நம் சுவாசத்தின் வகை, என்று  இவற்றை எல்லாம் பொறுத்து நம் மனம் மாறிக் கொண்டே இருக்கும். 

நாம் கவனிப்பது இல்லை. உற்று கவனித்தால் தெரியும் நம் மனம் எந்த நிலையில் இருந்து செயல்படுகிறது என்று. 

நாம் இயந்திரம் போல் செயல்பட்டுக் கொண்டிருப்பதால் நம் மனதின் நிலையை நாம் அறிவதில்லை.

நம் உள் உணர்வை கூர்மை படுத்திக் கொண்டால், நம் மனதை நாம் அறிய முடியும். 


இந்த மூன்று மன நிலையும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். நாம் ஊன்றி கவனித்தால் அது தெரியும். 

இதில் சாத்வீகம் என்பது நல்ல காரியங்கள் செய்ய ஏற்ற மன நிலை. படிப்பது,  சிந்தனை செய்வது, தொழுவது, என்று நல்ல காரியங்கள் செய்ய ஏற்ற மன நிலை சாத்வீகம். 

அது அதிகாலையில் உச்சம் பெற்று இருக்கும். நாள் ஏற ஏற ரஜோ குணம் ஓங்கும்..பின் தாமச குணம் வரும்.

சாத்வீக நிலையில் மனம் இருக்கும் போது இறைவனை தொழ வேண்டும். 

நன்றாக கவனித்துப் பாருங்கள்...ஒரு  நாள் ...காலை ஐந்து மணிக்கு தொழுது பாருங்கள், இன்னொரு நாள் மதியம் ஒரு மணிக்கு தொழுது பாருங்கள். வித்தியாசம் தெரியும். மதியம் ஒரு மணிக்கு பிரார்த்தனை செய்தால் மனம் ஒருமுகப் படாது. 

அடுத்து,நீராடி இறைவனை தொழ செல்கிறாள் ஆண்டாள். 

சாத்வீக குணம் தூய்மையின் இருப்பிடம். வெண்மை, தூய்மை என்பன எல்லாம் அவற்றின் குணம். 

நாம் கோவிலுக்குப் போகும் போது நம் மனம் எப்படி இருக்கும்...? வீட்டுப் பிரச்சனை, பணப் பிரச்சனை, இப்போது போனால் parking கிடைக்குமா என்ற கவலை, எவ்வளவு சீக்கிரம் வர முடியும் என்ற கேள்வி, வந்து என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனை இவற்றோடு கோவிலுக்குப் போவோம். உடல் மட்டும் கோவிலுக்குப் போகிறது மனம் எங்கெங்கோ செல்லும். 

ஆண்டாளின் மனம் நாராயணன் மேல் குவிந்து நிற்கிறது. 

அவனுடைய தாயார் (ஏரார்ந்த இளம் கண்ணி), தந்தையார் (கூர்வேல் கொடுந்தொழிலன்),  அவன் முகம் (கதிர் மதியம் போல் முகத்தான்) என்று அவளுடைய சித்தனை எல்லாம் அவன் மேல் படிந்து நிற்கிறது. 

இப்படி ஒரு மனப் பட்டு சென்றால் "நாராயணனே நமக்கே பறை தருவான்" என்பதில் அவளுக்கு ஒரு சந்தேகமும் இல்லை. 

அடித்துச் சொல்கிறாள். 

பாடலைப் படிக்கும் போது அதில் உள்ள ஒவ்வொரு குறிப்பையும் உன்னிப்பாக கவனித்தால் பல உண்மைகள் புலப்படும். 

எந்த வேலையை செய்தாலும், அதில் மனம் இலயித்து, ஒரு முகப் பட்டு  செய்தால்  வெற்றிதான் என்று சொல்லாமல் சொல்கிறாள் ஆண்டாள். 


No comments:

Post a Comment