Tuesday, October 15, 2024

கோவில் மூத்தத் திருபதிக்கம் - புறங்காட்டில் அப்பன் ஆடும் திருவாலங்காடு

 கோவில் மூத்தத் திருபதிக்கம் - புறங்காட்டில் அப்பன் ஆடும் திருவாலங்காடு 



இறைவனை வழிபடும் இடம் எப்படி இருக்க வேண்டும்?


சுத்தமாக, வெளிச்சமாக, பூ, சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம் போன்ற நறுமணம் வீசும் இடமாக, பார்த்தாலே மனதில் ஒரு பரவசம் வரும்படி இருக்க வேண்டும் அல்லவா?


மாறாக, இருண்டு, கரி பிடித்துப் போய், சாம்பலும், அழுக்கும் நிறைந்து கிடந்தால் பக்தி வருமா?


வர வேண்டும். 


இறைவன் படைப்பில் எல்லாம் ஒன்று என்ற எண்ணம் வர வேண்டும். 


இது சரி, இது தவறு என்று எப்படிச் சொல்ல முடியும். நமக்கு பிடித்தது, பிடிக்காதது என்று சொல்லலாம். அது ஒன்றும் பெரிய விடயம் அல்ல. நமக்குப் பிடித்தது இறைவனுக்குப் பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் இல்லை. 


சிவகோச்சாரியார் படைத்த பூவும், மாலையும், சந்தனமும் இறைவனுக்குப் பிடிக்கவில்லை. கண்ணப்ப நாயனார் படைத்த மாமிசம் பிடித்தது. 


அவன் உள்ளம் யாருக்குத் தெரியும்?


காரைக்கால் அம்மையார், இறைவனை சுடுகாட்டில் நடமாடும் வடிவில் கண்டு வணங்குகிறார். 


"அது ஒரு சுடுகாடு. அங்கங்கே பிணங்கள் எரித்து கொண்டிருக்கின்றன. பிணம் எரியும் போது அவற்றின் சதை உருகும். அது நெய் போல் வழியும். அந்த உருகிய சதையை எடுத்து வாயில் போட்டு தின்னுகின்றன அங்குள்ள பேய்கள். சுடுக்காட்டில் கிடக்கும் மண்டை ஓடுகளை ஒன்றாக சேர்த்துக் கட்டி பூ மாலை போல் போட்டுக் கொள்கின்றன. அப்படி அங்கே உள்ள ஒரு பேய்க்கு ஒரு குழந்தைப் இருக்கிறது. குட்டிப் பேய். அந்த குழந்தைக்கு அதன் தாய் "காளி" என்று பெயரிட்டு இருக்கிறாள். சுடுகாட்டில் பறக்கும் சாம்பல் அதன் உடல் முழுவதும் படிந்து கிடக்கிறது. காளிக்குப் பசிக்கும் போது, தன் முலையின் மேல் பதிந்த சாம்பலை சுத்தம் செய்து தாய்ப் பேய் காளிக்கு உணவு ஊட்டும். அப்படி ஊட்டும் தாய் எங்கோ போய் இருக்கிறாள். வர தாமதமாகிறது. பசியால் அழுத காளி அப்படியே சோர்ந்து உறங்கி விட்டது. அப்படிப்பட்ட பேய்கள் உலாவும் காட்டில் நடனம் புரிபவன் என் அப்பன் சிவ பெருமான்"


என்று இடுகாட்டில் நடம் புரியும் இறைவனை வணங்குகிறாள். 


பாடல் 


விழுது நிணத்தை விழுங்கி யிட்டு, வெண்தலை மாலை விரவப் பூட்டிக்

கழுதுதன் பிள்ளையைக் காளி யென்று பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப்

புழதி துடைத்து, முலைகொ டுத்துப்போயின தாயை வரவு காணா

தழுதுறங் கும்புறங் காட்டில் ஆடும் அப்ப னிடம்திரு ஆலங் கா டே


பொருள் 


விழுது நிணத்தை = நெய் பசை நிரம்பிய மாமிசம், தீயில் வெந்த உடல் 


விழுங்கி யிட்டு = வாயில் போட்டு விழுங்கி 


வெண்தலை = மண்டை ஓடுகளை 


மாலை விரவப் பூட்டிக் = மாலையாக பெரிதாக அணிந்து கொண்டு 


கழுது = பெண் பேய் 


தன் பிள்ளையைக் = அதன் பிள்ளையை 


காளி யென்று = "காளி" என்று 

 

பேரிட்டுச் = பெயர் இட்டு 


சீருடைத் = தன்னுடைய உடையை நீக்கி 


தாவளர்த்துப் = தாவளம் என்றால் உணவு பரிமாறும் இடம். தாய்ப்பால் தர பிள்ளையை எடுத்து 


புழதி துடைத்து = தன் மேல் படிந்து கிடக்கும் புழுதியை துடைத்து 


முலைகொ டுத்துப் = முலை கொடுத்து 


போயின = வெளியே சென்ற 


தாயை  = தாயின் 


வரவு காணா = வரவைக் காணாத 


தழுதுறங் கும் = அழுது உறங்கும் 


புறங் காட்டில் = சுடுகாட்டில் 


ஆடும் = திருநடனம் புரியும் 


அப்ப னிடம் = அப்பன் சிவ பெருமான் இருக்கும் இடம் 


திரு ஆலங் கா டே = திருவாலங்காடு என்ற திருத்தலம். 


மனதில் பக்தி வந்து விட்டால், எல்லாம் சிவமயம்தான். 


நோக்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்து இருப்பவன்.


மனிதனின் ஆட்டம் எல்லாம் அடங்கும் இடம் சுடுகாடு. அங்கே ஆடிக் கொண்டிருக்கிறான் அவன். 


வாழ்க்கையில் பயப்பட ஒன்றும் இல்லை. அது அப்படி ஆகி விடுமோ, இது இப்படி ஆகி விடுமோ, அது நடக்காவிட்டால் எனன் செய்வது, இது நடந்து விட்டால் என்ன செய்வது என்ற பயமே வேண்டாம். 


இடுக்காட்டில், பேய்களுக்கு மத்தியில் அமர்ந்து இருக்கும் காரைக்கால் அம்மையாருக்கு பயம் இல்லை. காரணம், சிவன் அங்கே இருக்கிறான் என்று அவள் நம்பினாள். 


கடவுள் நம்பிக்கை இருந்தால் பயம் ஏன் வருகிறது. கடவுளால் நம் துன்பத்தைப் போக்க முடியாதா? அல்லது போக்க மாட்டான் என்று நினைப்பு இருக்குமோ?


பயம் இருந்தால், இறை நம்பிக்கை இல்லை என்று அர்த்தம். 


அவன் பார்த்துக் கொள்வான் என்றால் பயம் ஏன் வருகிறது?




Thursday, October 10, 2024

திருவிளையாடற் புராணம் - மண் சுமந்த கதை

 திருவிளையாடற் புராணம் - மண் சுமந்த கதை 


மக்களுக்கும், கடவுளுக்கும் உள்ள தொடர்பு எப்படி இருக்க வேண்டும்?


ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும்.


கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்?  கணவன் வீட்டை நடத்துபவனாகவும், மனைவி அவனுக்கு உதவி செய்பவளாகவும் இருக்கலாம். இருவரும் சேர்ந்து நடத்தலாம். இருவரும் ஒரு நல்ல நண்பர்கள் போல் இருக்கலாம், மனைவி எல்லாவற்றையும் எடுத்துச் செய்யலாம், கணவன் எனக்கு என்ன என்று பொறுப்பு இல்லாமல் இருக்கலாம். 


இப்படி எத்தனையோ வகைகள் இருக்கின்றன. 


அப்பா மகன் உறவு, அப்பா மகள் உறவு? அம்மா மகன்/மகள் உறவு?  


ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.


அது போல பக்தனுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவை ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதத்தில் அணுகுகின்றன. 


நம் இந்து மதம் அணுகும் முறையே அலாதி. 


நம் கடவுள்கள் மிகுந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். விளையாட்டு புத்தி உள்ளவர்கள். நம்மோடு வந்து விளையாடுவார்கள். அடி வாங்குவார்கள். விறகு சுமப்பார்கள். பெண் வேடம் போட்டு வருவார்கள். காதல் கடிதம் கொண்டு போய் கொடுப்பார்கள். பன்றியாக வருவார்கள். இப்படி பல விதங்களில் நம்மோடு, நம் வீட்டில் ஒரு ஆள் போல் இருப்பார்கள். 


அல்லது அப்படித்தான் நாம் நினைக்கிறோம். 


கடவுள் என்றால் ஏதோ மலை மேல் அமர்ந்து கொண்டு, கடு கடு வென்று, கோபமாக, தவறுகளை கண்டு பிடித்து தண்டனை தரும் ஒரு போலீஸ் மாதிரி இல்லாமல், ரொம்பவும் நட்பாக நாம் சித்தரிக்கிறோம். 


"அலகிலா விளையாட்டு உடையார் அவர்" என்பார் கம்பர். 


எந்நேரமும் விளையாட்டுத்தான். 


கடவுளின் விளையாட்டை லீலை என்கிறோம். 


உலகைப் படைத்த கடவுளே அதை பெரிதாக, சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளவில்லை. நாம் ஏன் வாழ்கையை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது?


ஏன் இவ்வளவு சண்டை, கோபம்,  சச்சரவு, எரிச்சல், பொறாமை...வெற்றி கண்டு களியாட்டம், தோல்வியில் துவண்டு விடுவது...எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்துக் கொண்டு போ என்கிறது நம் சமய இலக்கியம்.


திருவிளையாடல் புராணம் முழுக்க முழுக்க சிவனின் விளையாடல்கள் தான். 


அந்த புராணத்தில் இருந்து சில பாடல்களை பற்றி சிந்திப்போம். 


முதலில் மண் சுமந்த விளையாடல். 


சிந்தித்துப் பாருங்கள், 


இந்த அண்ட சராசரங்களைப் படைத்த இறைவன், கூடை மண் சுமந்து, புட்டு தின்று, அடி வாங்கி...எவ்வளவு இனிமையான விடயம்.


வாருங்கள் கதையோடு, கவிதையையும், அந்தக் கால வாழ்க்கை நடைமுறைகைளையும் சேர்த்து அனுபவிப்போம்.