Monday, December 3, 2018

பெரிய புராணம் - காதலும் கோபமும்

பெரிய புராணம் - காதலும் கோபமும் 


சுந்தரர் திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கிறார். எல்லோரும் திருமண மண்டபம் வந்து விட்டார்கள். அப்போது, சிவ பெருமான் ஒரு முதியவர் வேடத்தில் வந்து "இந்த சுந்தரன் என் அடிமை. இவன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது ...நான் இட்ட வேலைகளை செய்து கொண்டு எனக்கு அடிமையாக இருக்க வேண்டும் ..இவன் எனக்கு அடிமை என்று இவன் தாத்தா எழுதித் தந்த ஓலை என்னிடம் இருக்கிறது " என்றார்.

அது கேட்ட சுந்தரர் கோபம் கொண்டு "நீ என்ன பித்தனா ? எங்காவது ஒரு அந்தணன் இன்னொரு அந்தணனுக்கு அடிமை ஆவது உண்டா " என்று பேசினார்.

சிவன்: "அதெல்லாம் எனக்குத் தெரியாது. நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள். ஆனால் இப்போது புறப்படு. நிறைய வேலை இருக்கிறது "

சுந்தரர் பார்த்தார். இந்த ஆளைப் பார்த்தால் மனதில் ஏதோ ஒரு அன்பு பிறக்கிறது. இருந்தாலும் இவர் சொல்வதைக் கேட்டால் கோபம் வருகிறது. எதுக்கும் அந்த ஓலையில் என்ன தான் எழுதி இருக்கிறது என்று பார்த்து விடுவோம் என்று நினைத்து "சரி, நீ ஓலையைக் காட்டு"  என்றார்.


பாடல்


கண்டது ஓர் வடிவால் உள்ளம் காதல் செய்து உருகா நிற்கும்
கொண்டது ஓர் பித்த வார்த்தை கோபமும் உடனே ஆக்கும்
உண்டு ஓர்ஆள் ஓலை என்னும் அதன் உண்மை அறிவேன் என்று 
தொண்டனார் ‘ஓலை காட்டு’ என்றனர் துணைவனாரை.


பொருள்

கண்டது ஓர் வடிவால் = கண்டது ஒரு வடிவத்தை


உள்ளம் காதல் செய்து  = கண்டவுடன் உள்ளம் காதல் கொண்டு

உருகா நிற்கும் = உருகி நிற்கும்

கொண்டது ஓர் பித்த வார்த்தை  = ஆனால், இவர் பேசுவதோ பைத்தியகாரன் மாதிரி இருக்கிறது

கோபமும் உடனே ஆக்கும் = கேட்டவுடன் உடனே கோபம் வருகிறது

உண்டு ஓர்ஆள் ஓலை  = ஒரு ஓலை இருக்கிறது என்று சொல்கிறாரே

என்னும் அதன் உண்மை அறிவேன் = அதன் உண்மை என்ன என்று அறிவேன்

என்று  = என்று மனதில் நினைத்து

தொண்டனார் = சுந்தரர்

 ‘ஓலை காட்டு’ என்றனர் = சரி அந்த ஓலையை காட்டு என்றார்

 துணைவனாரை. = துணைவனான சிவனைப் பார்த்து

காதல் ஏன் வருகிறது, எப்படி வருகிறது என்று சொல்ல முடியாது. பார்த்த ஒரு கணத்தில் வந்து விடும்.

அது தான் அறிவுக்கும் உணர்வுக்கும் உள்ள வேறுபாடு.

மூளை எதை கொடுத்தாலும் ஆராய்ந்து கொண்டே இருக்கும். எதையும் அப்படியே ஏற்றுக் கொள்ளாது. ஏன் எதற்கு என்று ஆயிரம் கேள்வி கேட்கும்.

மனம் அப்படி அல்ல. காரணம் இல்லாமல் , அப்படியே முடிவு செய்து விடும்.

சிவனை கண்டவுடன் சுந்தரருக்கு உடனே மனதில் காதல் பிறந்தது.

இராமன் மிதிலைக்கு வருகிறான். சாலையில் நடந்து வருகிறான். மேலே மாளிகையில் இருந்து சீதை காண்கிறாள். முதல் தடவை இருவரும் பார்த்துக் கொள்கிறார்கள்.

பார்த்த அந்த கணத்திலேயே காதல் பிறக்கிறது. இருவர் இதயமும் இடம் மாறுகிறது.

இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார் என்பான் கவிச் சக்கரவர்த்தி கம்பன்.

பருகிய நோக்கு எனும்
    பாசத்தால் பிணித்து,
ஒருவரை ஒருவர் தம்
    உள்ளம் ஈர்த்தலால்,
வரி சிலை அண்ணலும்
    வாள் கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு
    இதயம் எய்தினார்.



பார்வையிலேயே பாசம் பிணைத்தது என்கிறான் கம்பன்.

இராமன் கானகம் போகிறான். தூரத்தில் அவன் வருவதை அனுமன் காண்கிறான்.

பார்த்தவுடன் காதல் பிறக்கிறது. "என் எலும்பு உருகுகிறது. அளவற்ற காதல் பிறக்கிறது. அன்புக்கோ அளவு இல்லை. இது எப்படி நிகழ்ந்தது என்று தெரியவில்லை " என்று தவிக்கிறான்.

துன்பினைத் துடைத்து, மாயத்
    தொல் வினை தன்னை நீக்கித்
தனெ்புலத்து அன்றி, மீளா
    நெறி உய்க்கும் தேவரோ தாம்?
என்பு நெக்கு உருகுகின்றது;
    இவர்கின்றது அளவு இல் காதல்;
அன்பினுக்கு அவதி இல்லை;
    அடைவு என்கொல்? அறிதல் தேற்றேன்.

குகன் இராமனைக்  கண்டபோதும், விபீஷணன் இராமனைக் கண்ட போதும் இதே நிலை தான்.  பார்த்தவுடன் மனதில் ஒரு சிலிர்ப்பு வரும். நீண்ட நாள் பிரிந்த பின் கூடுவது போல ஒரு அன்பு பிறக்கும்.

முன்பே கூறியது போல, இறைவனை தேடி காண முடியாது. அவனை காணும் போது உள்ளம் அறியும். அறிவுக்குத் தெரியாது. அறிவு தேடிக் கொண்டே இருக்கும். அறிவின் வேலை அது.

சுந்தரருக்கு சிவன் மேல் காதல் பிறந்த அதே நேரம், சிவனின் சொற்களை கேட்டு கோபமும் பிறக்கிறது.

இருந்தும், இரண்டையும் ஒதுக்கி வைத்து விட்டு உண்மை என்ன என்று அறிய முற்படுகிறார்.

நாம் வாழ்வில் உணர்ச்சி மிகுதியில் பல தவறான முடிவுகளை எடுத்து விடுகிறோம்.

அது அன்பாக இருந்தாலும் சரி, கோபமாக இருந்தாலும் சரி

 நிதானமாக சிந்தித்து முடிவு எடுக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்  தெய்வப் புலவர் சேக்கிழார்.

பெரிய புராணத்தில் ஒவ்வொரு பாடலும் அவ்வளவு இனிமை. அவ்வளவு ஆழமான அர்த்தங்களைக் கொண்டது.

மூல நூலை தேடிப் படியுங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post_3.html

Sunday, December 2, 2018

பெரிய புராணம் - பணி செய்ய வேண்டும்

பெரிய புராணம் - பணி செய்ய வேண்டும் 


சுந்தரர் திருமணத்துக்கு தயாராக இருக்கிறார். அப்போது , சிவ பெருமான், ஒரு முதிய அந்தணன் வடிவில் வந்து , "நீ எனது அடிமை. திருமணம் செய்து கொள்ளக் கூடாது. என் பின்னே வா " என்று அழைக்கிறார். அதனால் கோபம் கொண்ட சுந்தரர் "ஒரு அந்தணன் இன்னொரு அந்தணனுக்கு அடிமை ஆகும் வழக்கம் உண்டா. நீ என்ன பித்தனா " என்று கேட்கிறார்.

அதுவரை முந்தைய ப்ளாகுகளில் பார்த்ததோம்.

சுந்தரர் , "நீ பித்தனா?" என்று கேட்டவுடன் சிவ பெருமான் சொல்கிறார்

"நான் பித்தனோ, பேயனோ ..நீ என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள். அதுக்கெல்லாம் நான் மசிய மாட்டேன். உனக்கு என்னைப் பற்றித் தெரியாது. சும்மா வள வள என்று பேசிக் கொண்டிருக்காதே. புறப்படு , நிறைய வேலை இருக்கிறது உனக்கு செய்ய " என்றார்.

பாடல்

‘பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக, நீ இன்று
எத்தனை தீங்கு சொன்னால் யாதும் மற்று அவற்றால் நாணேன்;
அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று
வித்தகம் பேச வேண்டாம்; பணி செய வேண்டும்’ என்றார்.


பொருள்

‘பித்தனும் ஆகப் = பித்தன் என்றாலும் சரி

பின்னும் பேயனும் ஆக, = பேயன் ஆகவும் இருந்து விட்டுப் போகிறேன்

நீ இன்று = நீ இன்று

எத்தனை தீங்கு சொன்னால்  = எத்தனை தீய வார்த்தைகளால் என்னை நிந்தித்தாலும்

யாதும் மற்று அவற்றால் நாணேன்; = அதுக்கெல்லாம் நாம் வெட்கப் பட மாட்டேன்

அத்தனைக்கு  = அனைத்துக்கும் மேலாக

என்னை  ஒன்றும் அறிந்திலை = நீ என்னை அறிய மாட்டாய்

ஆகில் = எனவே

நின்று = இங்கே வெட்டியாக நின்று கொண்டு

வித்தகம் பேச வேண்டாம்; = எல்லாம் தெரிந்தவர் போல பேச வேண்டாம்

பணி செய வேண்டும்’ = எனக்கு நீ பணி செய்ய வேண்டும்

என்றார். = என்று கூறினார்

எல்லோரும் இறைவனை அடைய வேண்டும், சுவர்க்கம் போக வேண்டும் என்று தான் சொல்கிறார்கள்.

"சரி, கிளம்புங்கள் போவோம் " என்று கூறினால், எத்தனை பேர் அப்படியே கிளம்பி வருவார்கள்.

"இப்ப எப்படி வர முடியும்...பிள்ளைகளை தனியா விட்டு விட்டு எப்படி வர முடியும் ? அதுகளுக்கு ஒரு வழி பண்ணிட்டு வர்றேன்" என்பார்கள்.

அப்புறம் கொஞ்ச நாள் கழித்து "சரி , இப்போது தான் பிள்ளைகள் எல்லாம் திருமணம் முடித்து வாழ்வில் வழி கண்டு விட்டார்களே, கிளம்பலாமா ?" என்று கேட்டால் ..."ஐயோ, வயதான பெற்றோரை எப்படி விட்டு விட்டு வர முடியும்? அது மட்டும் அல்ல, நான் இல்லா விட்டால் என் கணவன் / மனைவி தனியா என்ன செய்வார்/செய்வாள் ..." என்று தட்டிக் கழிப்பார்கள்.

யாருக்கும் இதை விட்டு விட்டுப் போக மனம் இல்லை. சொல்வது என்னவோ இறைவன் திருவடி, சுவர்க்கம் என்று.

இறைவன் நேரில் வந்து, "கிளம்பு என்னோடு" என்று கூப்பிட்டார். சுந்தரர் போகாதது மட்டும் அல்ல...அப்படி கூப்பிட்ட இறைவனை ஏசவும் தலைப் படுகிறார்.


சரி, இந்த சுவர்க்கம், இறைவன் திருவடி என்று சொல்கிறார்களே, ஒரு வேளை அங்கு போய் சேர்ந்து விட்டால், அப்புறம் என்ன செய்வது ? எந்நேரமும் பாட்டு, பஜனை, இறைவனை பார்த்துக் கொண்டே இருப்பது ...இது தானா வேலை. சலித்துப் போகாதா. எவ்வளவுதான் சுவையாக இருந்தாலும் , எவ்வளவு சர்க்கரை பொங்கல் சாப்பிட முடியும், எவ்வளவு பாயசம் குடிக்க முடியும்.

சொர்க்கம் என்பது சோம்பேறிகளின் இருப்பிடமா ? ஒரு வேலையும் செய்யாமல், சும்மா சாப்பிட்டு சாப்பிட்டு , நடனமாடும் பெண்களை சைட் அடித்துக் கொண்டு இருப்பது தான் வேலையா?  சரி, ஆண்களுக்காவது சில பல அழகாகன பெண்களை பார்த்து இரசிக்கலாம்...பெண்கள் பாவம் என்ன செய்வார்கள் ?

சுவர்க்கம் என்பது அது அல்ல. இறைவன் திருவடி என்றால் சும்மா போய் உட்கார்ந்து இருப்பது அல்ல.

வேலை செய்வது. பணி செய்வது.

என்ன பணி, யாருக்குப் பணி?

நல்ல வேலை, நல்லவர்களுக்கு வேலை செய்வது.

வேலை செய்வது ஒன்று தான் சுவர்க்கம். அது தான் இறைவன் திருவடி.

சுந்தரரிடம் , சிவன் சொன்னது அது தான். "வா சொர்கத்துக்ப் போகலாம் " என்று சொல்ல வில்லை. "வா , வேலை இருக்கிறது " என்றார்.

மணிவாசகர் சொல்லுவார் " எது எமை பணி கொள்ளுமாறு, அது கேட்போம் " என்று.

அதாவது, "இறைவா, எங்களுக்கு ஏதாவது வேலை கொடு. நீ என்ன வேலை கொடுத்தாலும் அப்படியே செய்கிறோம்" என்கிறார்.

அதுபழச் சுவையென அமுதென அறிதற்
கரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவனவன் எனவே
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில்திரு வுத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளும் ஆறது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.


"அன்பர் பணி செய்ய எமை ஆளாக்கி விட்டு விட்டால் 
இன்ப நிலை தானே வந்தெய்தும் பராபரமே "

என்பார் தாயுமான சுவாமிகள்.

"என் கடன் பணி செய்து கிடப்பதே " என்பார் அப்பரடிகள்.


எங்களுக்கு எதாவது சின்ன சின்ன வேலைகள் கொடு என்று ஆண்டாள் , கண்ணனிடம் வேண்டுகிறாள் "குற்று ஏவல் எங்களை கொள்ளாமல் போகாது "

ஏவல் = ஏவுதல். அதைச் செய், இதைச் செய் என்று ஏவுதல்.

சிற்றம் சிறுகாலே வந்துஉன்னை சேவித்துஉன்
பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

சுவர்க்கம், இறைவன் திருவடி எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

பணி செய்து பழகுங்கள். அங்கே போனாலும் அது தான் செய்ய வேண்டி வரும்.

பணி செய்யுங்கள். பணிந்து செய்யுங்கள். அதுவே இறைவனை அடியும் வழி.

சுந்தரர் போனாரா ?

https://interestingtamilpoems.blogspot.com/2018/12/blog-post.html

Thursday, November 29, 2018

பெரிய புராணம் - பித்தனோ?

பெரிய புராணம் - பித்தனோ?



இதை படிக்கத் தொடங்கும் முன், முந்திய பிளாக்கை படித்து விடுங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_24.html

இறைவனை எப்படி வழி படலாம்?

பூக்கள் இட்டு, சந்தனம், குங்குமம் வைத்து, பட்டாடை சாத்தி, பன்னீர், நெய் போன்றவற்றால் அபிஷேகம் செய்து, துதிப் பாடல்களைப் பாடி வழி படலாம் என்று சொல்லுவீர்கள்.

இறைவனை எப்படியும் வழி படலாம் என்று சொல்ல வந்ததுதான் பெரிய புராணம். எனவே தான் அதற்கு பெரிய புராணம் என்று பெயர்.

இறைவனை இப்படித்தான் வழி பட வேண்டும் என்று அல்ல.

சுந்தரர் , இறைவனை பைத்தியக்காரன் என்று திட்டுகிறார். யோசித்துப் பாருங்கள், வேறு எந்த மதத்திலாவது, அந்த மதத்தின் மூலக் கடவுளை பைத்தியம் என்று சொல்ல முடியுமா ? சொன்னால் விட்டு விடுவார்களா?

சைவ சமயம் ஒன்றுதான் அந்த சுதந்திரத்தைத் தருகிறது.

நமக்கு கடவுளைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஒன்றும் தெரியாத கடவுளை எப்படி வழிபடுவது? எனவே தான் சைவம் நம் அறியாமையை ஏற்றுக் கொண்டு நீ எப்படி வேண்டுமானாலும் வழி படு என்று சுதந்திரம் தருகிறது.

நேரில் வந்த சிவ பெருமானை, சுந்தரர் "நீ என்னை உன் அடிமை என்கிறாய். எங்காவது ஒரு அந்தணன் இன்னொரு அந்தணனுக்கு அடிமை ஆவது உண்டா. இப்படிச் சொல்கிறாயே நீ என்ன பைத்தியமா " என்று கேட்டார்.

பாடல்


மாசு இலா மரபில் வந்த வள்ளல் வேதியனை நோக்கி
நேசம் முன் கிடந்த சிந்தை நெகிழ்ச்சி யால் சிரிப்பு நீங்கி
‘ஆசு இல் அந்தணர்கள் வேறு ஓர் அந்தணர்க்கு அடிமை ஆதல்
பேச இன்று உன்னைக் கேட்டோம் பித்தனோ மறையோய்?” என்றார்.


பொருள்

மாசு இலா = குற்றம் இல்லாத

மரபில் வந்த = வழியில் வந்த

வள்ளல் = வள்ளல் குணம் கொண்ட சுந்தரர்

வேதியனை நோக்கி = அங்கு வந்த வயதான வேதியனை நோக்கி

நேசம் முன் கிடந்த = முன்பு இருந்த நேசம் நீங்கி

சிந்தை நெகிழ்ச்சி யால்  = சிந்தை நெகிழ்ந்து

சிரிப்பு நீங்கி = முகத்தில் இருந்த சிரிப்பு நீங்கி

‘ஆசு இல் = குற்றம் அற்ற

அந்தணர்கள் = அந்தணர்கள்

வேறு ஓர் அந்தணர்க்கு = வேறு ஒரு அந்தணர்க்கு

அடிமை ஆதல் = அடிமை ஆவது

பேச = பேசும்படி

இன்று உன்னைக் கேட்டோம் = இன்று நீ சொல்லக் கேட்டோம்

பித்தனோ = நீ என்ன பித்தனா ?

மறையோய்?” = மறை ஓதியவனே

என்றார். = என்று கூறினார்.

இறைவன் நேரில் வந்திருக்கிறான். அடையாளம் தெரியவில்லை. நீ என்ன பைத்தியமா  என்று கேட்டார் சுந்தரர். கேட்டது போகட்டும், அப்படி சைவ சமயத்தின் முழு முதற் கடவுளான சிவனை பித்தன் என்று இகழ்ந்து கூறிய சுந்தரரை நாயன்மார்களில் சிறந்த நால்வரில் ஒருவராக சைவ சமயம் போற்றுகிறது.

தோத்திரம் தந்த நால்வரில் சுந்தரர் ஒருவர்.

என்னடா இது, நாம் பெரிதாக நினைத்து வழிபடும் கடவுளை திட்டுகிறானே என்று அவரை ஒதுக்கி வைக்கவில்லை. தலையில் வைத்து கொண்டாடுகிறது சைவ சமயம்.


சைவ சமயத்தின் நீளமும் ஆழமும் புரிகிறதா?

சரி, நாம் கொண்டாடுவது இருக்கட்டும். தன்னை நிந்தனை செய்த சுந்தரரை சிவன் என்ன செய்தார் தெரியுமா ?

நாளை சிந்திப்போமா?

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_29.html

Saturday, November 24, 2018

பெரிய புராணம் - என் அடியான்

பெரிய புராணம் - என் அடியான் 


பக்தி செலுத்துபவர்களைக் கேட்டால் "இறைவனை வாழ் நாள் எல்லாம் தேடுவதுதான் வாழ்வின் குறிக்கோள்" என்பார்கள். "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்" என்பார்கள்.

இறைவனை எப்படித் தேடுவது?

விலாசம் இருந்தால் தேடி கண்டு பிடிக்கலாம். இறைவன் இருக்கும் இடத்தின் விலாசம் தெரியுமா ?

புகைப் படம் இருந்தால் விசாரித்து அறியலாம்? புகைப் படம் இருக்கிறதா ?

ஆள் இப்படி இருப்பார் என்று தெரிந்தலாவது, அக்கம் பக்கம் கேட்டு அறியலாம். இறைவன் இப்படித்தான் இருப்பான் என்று தெரியுமா ?

எதை வைத்துக் கொண்டு தேடுவது?

சரி, எப்படியோ அவன்/அவள்/அது இருக்கும் இடத்துக்கு வந்து விட்டோம். ஆளையும் நேரில் பார்த்தாகி விட்டது. அவர்தான் இறைவன் என்று எப்படி அறிந்து கொள்வது. ஒரு வேளை நாலு கை, நெற்றியில் ஒரு கண், நாலு தலை என்று ஏதாவது இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். வேறு மாதிரி இருந்தால்?


இறைவன் இப்படி இருப்பான் என்று சொல்ல முடியாது என்கிறார் திரு நாவுக்கரசர்.

"இப்படியன், இந்நிறத்தன், இவ் வண்ணத்தன், இவன் இறைவன் என்று எழுதி காட்ட ஒண்ணாதே "

என்கிறார்.




மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
    மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
    ஓரூர னல்லன் ஓருவம னில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
    அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
    இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே



இறைவனே நேரில் வந்தால் கூட நம்மால் கண்டு பிடிக்க முடியாது. இந்த இலட்சணத்தில் தேடுவது என்பது எவ்வளவு நகைப்பு உரிய ஒரு செயல் என்று புரிகிறது அல்லவா ?

இறைவன் நேரில் வந்தால் நம்மால் அடையாளம் காண முடியாதா என்று நீங்கள் கேட்கலாம்.

உங்களாலும் என்னாலும் மட்டும் அல்ல, சுந்தரராலும், மாணிக்கவாசகராலும் நேரில் வந்த இறைவனை அறிந்து கொள்ள முடியவில்லை என்றால் நம்மால் முடியுமா?

இறைவனே நேரில் வந்து அவனை அறியும் அறிவை நமக்குத் தந்தால் தான் உண்டு.

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி"

என்பார் மணிவாசகர். அவன் அருள் இல்லாமல் அவனை அறியமுடியாது.

நீங்களும் நானும் தேடுவது வியர்த்தம்.


சுந்தரரின் flashback.

சுந்தரர், கைலாயத்தில், சிவ பெருமானுக்கு அணுக்கத் தொண்டராக இருந்தவர். சிவனுக்கு மிக மிக அருகில் இருந்து தொண்டு செய்தவர். ஒரு நாள் அங்கிருந்த இரண்டு பெண்களின் மேல் ஒரு கணம் புத்தி தடுமாறினார். அதை அறிந்த சிவன், "நீ பூ லோகத்தில் போய் பிறந்து, அந்த இரண்டு பெண்களையும் மணந்து, இல்லறத்தில் இருந்து பின் எம்மை அடைவாய் " என்று சபித்து விட்டார்.

பதறிப் போனார் சுந்தரர். "ஐயனே, பூலோகத்தில் பிறப்பது இருக்கட்டும். நீ தான் வந்து என்னை தடுத்து ஆட்கொள்ள வேண்டும்" என்று வேண்டினார்.

இறைவனும் சரி என்று ஒத்துக் கொண்டார்.

இப்போது கதைக்கு வருவோம்.

சுந்தரர் பிறந்து விட்டார். திருமணம் ஆகப் போகிறது. சொல்லியபடி சிவன் அங்கே வந்து, திருமணத்தை நிறுத்தும்படி  கூறினார். அந்தகிருந்த   மக்கள் எல்லாம் திகைத்துப் போனார்கள். "யார்ரா இந்த கிழவன்...இப்படி நடுவில் புகுந்து திருமணத்தை நிறுத்தும் படி கூறுகிறானே " என்று நினைத்தார்கள்.

"ஏன் இந்த திருமணத்தை நிறுத்தும்படி கூறுகிறீர்கள் " என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த முதியவர் "இந்த சுந்தரன் எனக்கு அடிமை" என்று கூறினார்.


பாடல்

‘ஆவது இது கேண் மின் மறையோர்! என் அடியான் இந்
நாவல் நகர் ஊரன்; இது நான் மொழிவது’ என்றான்
தேவரையும் மால் அயன் முதல் திருவின் மிக்கோர்
யாவரையும் வேறு அடிமை யாஉடைய எம்மான்.

பொருள்

‘ஆவது இது = நடக்கப் போவது இது

கேண் மின் =கேளுங்கள்

மறையோர்! = மறையவர்களே

என் அடியான் = என்னுடைய அடிமை

இந் நாவல் நகர் ஊரன்; = இந்த நாவல் நகர் ஊரில் பிறந்த இவன்


இது நான் மொழிவது’  = இது நான் சொல்வது

என்றான் = என்றான்

தேவரையும் = தேவர்களையும்

மால் = திருமால்

அயன் = பிரம்மா

முதல் = முதலிய

திருவின் மிக்கோர் = சிறப்பு மிகுந்த

யாவரையும் = அனைவரையும்

வேறு அடிமை யா = வேறு விதங்களில் அடிமையாக

உடைய எம்மான். = உடைய எம் பெருமான்



தன்னை தடுத்து ஆட் கொள்ளும்படி சுந்தரர்தான் வேண்டினார். இறைவன் நேரில்  வந்திருக்கிறான். அவரால் அடையாளம் காண முடியவில்லை.

மாறாக என்ன செய்தார் தெரியுமா ?

அடுத்த ப்ளாகில் பார்ப்போமா ....

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_24.html


Wednesday, November 21, 2018

தேவாரம் - உற்றலால் கயவர் தேறார்

தேவாரம் - உற்றலால் கயவர் தேறார் 


நாளும் அலைந்து திரிகிறோம். கடுமையாக உழைக்கிறோம். அதைச் செய், இதைச் செய் என்று ஆலாய் பறக்கிறோம்.

கடைசியில் கண்டது என்ன?

வீட்டு மனைப் பத்திரங்களும் , பங்கு சந்தை certificate களும், வாங்கிக் கணக்குமே. வாழ் நாள் எல்லாம் இதற்கே போய் விட்டது. இதனால் ஏதாவது பலன் உண்டா என்றால் இல்லை. எப்போவாது அனுபவித்துக் கொள்ளலாம் என்று இருந்தோம்...அந்த நாள் வரவே இல்லை.

பிள்ளைகளுக்காக சேர்த்து வைத்தோம்...அவர்களோ, "இதெல்லாம் ஒரு பெரிய சொத்தா..." என்று எள்ளி நகையாடுகிறார்கள். என்ன செய்வது?


இவ்வளவு முயற்சியும் வீணே போய் விட்டதா ? "நமக்கு" ஒரு பலனும் இல்லையா ?

சுந்தரர் திகைக்கிறார். பணம் எல்லாம் சேர்த்து வைத்து விட்டு வாழ்க்கையை அர்த்தத்தோடு வாழலாம் என்று இருந்தேனே...இப்போது ஒன்றுக்கும் இல்லாமல் தனித்து நிற்கிறேனே என்று திகைக்கிறார்.

நல்ல நிலத்தில் நீர் பாய்ச்சினால் அதனால் பலன் கிடைக்கும். பாலைவனத்தில் நீர் பாய்ச்சினால்?


"இறைவன் மேல், உண்மையின் மேல் பற்று இல்லாமல் வாழ்ந்து, பாழ் நிலத்துக்கே நீர் பாய்ச்சினேன். பெரியவர்கள் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. பட்டால் தான் அறிவு வரும் கயவர்களுக்கு என்று சொல்லுவது போல நான் இருக்கிறேன். இப்படி இருக்கிறேன். என் செய்வேன்? உலக வாழ்க்கைச் சிக்கலில் சிக்கி ஞானம் தரும் நூல் ஒன்றையும் கற்கவிலை. இந்தப் பிறவி என்ற பந்தத்தில் இருந்து விடுபட ஒரு வழியும் தெரியவில்லையே " என்று திகைக்கிறார்....

பாடல்

பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீரி றைத்தேன்
உற்றலாற் கயவர் தேறா ரென்னுங்கட் டுரையோ டொத்தேன்
எற்றுளே னென்செய்கேனா னிடும்பையால் ஞானமேதும்
கற்றிலேன் களைகண்காணேன் கடவூர்வீ ரட்டனீரே.

பொருள்


பற்றிலா = பற்று இல்லா (இறைவன் மேல் பற்று இல்லாத)

வாழ்க்கை வாழ்ந்து  = வாழ்க்கை வாழ்ந்து

பாழுக்கே = பாழ் நிலத்துக்கே

நீரி றைத்தேன் = நீர் இறைத்தேன்

உற்றலாற் = உற்று + அல்லால் = பட்டால் ஒழிய

கயவர் = கெட்டவர்கள்

தேறா ரென்னுங்  = தேறார் எனும். தேற மாட்டார்கள் என்னும்

கட் டுரையோ டொத்தேன் = கட்டுரையோடு ஒத்தேன். பழமொழிக்கு பொருள் ஆனேன்

எற்றுளேன் = எதற்காக இருக்கிறேன்

என் செய்கேன் நான்  = என்ன செய்வேன்  நான்

இடும்பையால் = துன்பத்தால்

ஞானமேதும் = ஞானம் எதுவும்

கற்றிலேன் = கற்றுக் கொள்ள வில்லை

களைகண்காணேன் =  இந்த   சிக்கலில் இருந்து  விடுபடும் வழியும் அரிய மாட்டேன்

கடவூர்வீ ரட்டனீரே. = திருக்கடவூரில் உள்ள வீரட்டனாரே

பட்டுத் தெளிவதை விட, கற்றுத் தெரிவது நல்லது.

செய்யும் செயல்களின் விளைவுகளை அறிந்து செய்ய வேண்டும். சும்மா  கண்ணை மூடிக் கொண்டு குருட்டுத் தனமாக எதையாவது செய்யக் கூடாது.

இருக்கும் நாள் குறைவு. அதை சிறப்பாக செலவழிக்க வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_53.html


கம்ப இராமாயணம் - ஒத்தது

கம்ப இராமாயணம் - ஒத்தது


வெற்றி பெற்று விட்டால், "என்னைப் போல் யார் உண்டு. நான் எவ்வளவு திறமைசாலி தெரியுமா " என்று நினைப்பதும், தோல்வி அடைந்து விட்டால் ஏதோ இந்த உலகமே தனக்கு எதிராக சதி செய்வது போலவும் நினைப்பது மனித இயல்பு.

வெற்றிக்கும் தோல்விக்கும் நாம் ஒருவர் மட்டுமே காரணம் ஆகி விட முடியாது. வெற்றியோ தோல்வியோ அதற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். சரியான நேரத்தில் அல்லது பிழையான நேரத்தில் எடுத்த முடிவுகள், ஒவ்வொரு முடிவுக்குப் பின்னாலும் நாம் செய்யும் ஆராய்ச்சி, துணை, நட்பு, இப்படி பல விஷயங்கள் ஒன்று சேர்ந்து நம் வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றன.

எப்படி வெற்றிக்கு நாம் முழு காரணம் இல்லையோ, தோல்விக்கும் நாம் முழு காரணம் இல்லை.

ஆனால் இது வெற்றி வரும் போது புரிவது இல்லை. வெற்றி வரும் போது தலை கால் தெரியாமல் ஆடுவது. அப்படி என்றால் தோல்வி வரும் போது துவண்டு போவது என்பது கட்டாயம்.

முதல் நாள் போரில் இராவணன் தோல்வி அடைந்து அரண்மனைக்கு வருகிறான்.

அவன் எப்பேர்பட்டவன் ? நமது வாழ்க்கையை கோள்கள் தீர்மானிக்கின்றன. கோள்களின் வாழ்க்கையை தீர்மானம் செய்தவன் இராவணன். ஒன்பது கோள்களையும் பிடித்து வந்து தனது அரியணை படியில் படுக்க வைத்து அவற்றின் மேல் ஏறி நடந்து செல்வான் அவன். அவ்வளவு ஆற்றல்.

அந்த வெற்றிக்குக் காரணம் யார் ?

அவன் செய்த தவத்தால் கொற்றவை என்ற ஒரு பெண் தெய்வம் அவனை நோக்கிக் கொண்டே இருந்தாள். அவள் பார்வை அவன் மேல் படும் வரை அவனுக்கு வெற்றி வந்து கொண்டு இருந்தது. அவள் பார்வையை திருப்பினாள். அவன் வெற்றி போய் விட்டது.

துவண்டு போய் வருகிறான். வருகிற வழியில் அழகான பெண்கள் அவனைப் பார்க்கிறார்கள். அவர்கள் பார்வை எல்லாம் கூரிய வாளைப் போல இருக்கிறது. பிள்ளைகள் பேசுவது கூட இராமனின் அம்பு போல குத்துகிறது. வாடுகிறான்.


பாடல்


நாள் ஒத்த நளினம் அன்ன முகத்தியர் நயனம் எல்லாம

வாள் ஒத்த; மைந்தர் வார்த்தை இராகவன் வாளி ஒத்த;--

கோள் ஒத்த சிறை வைத்து ஆண்ட கொற்றவற்கு, அற்றைநாள், தன்

தோள் ஒத்த துணை மென் கொங்கை நோக்கு அங்குத் தொடர்கிலாமை.


பொருள்

நாள் ஒத்த = நாளில் மலர்ந்த தாமரை மலரைப் போன்ற

நளினம் அன்ன = அழகான

முகத்தியர் = முகத்தைக் கொண்ட பெண்களின்

நயனம் எல்லாம் = கண்கள் எல்லாம்


வாள் ஒத்த; = கூர்மையான வாளைப் போல இருந்தன (இராவணனுக்கு)

மைந்தர் வார்த்தை = பிள்ளைகளின் பேச்சு

இராகவன் வாளி ஒத்த = இராமனின் அம்பை போல துன்பம் செய்தன

கோள் ஒத்த = ஒன்பது கோள்களையும்

சிறை வைத்து = சிறை வைத்த்து

ஆண்ட = ஆட்சி செய்த

கொற்றவற்கு = மன்னனுக்கு

அற்றைநாள் = அந்த நாள்

தன் = தன்னுடைய

தோள் ஒத்த = தோள்களை போல (மதர்த்து நின்ற)

துணை = துணையான இரண்டு

மென் = மென்மையான

கொங்கை = மார்பகங்களைக் கொண்ட (கொற்றவையின்)

நோக்கு = பார்வை

அங்குத் தொடர்கிலாமை = அங்கு தொடர்ந்து வராமையால்

சில பாடங்கள்

முதலாவது, வாழ்வில் வெற்றி தோல்வி வரும் போகும். கிரகங்களை கட்டி ஆண்ட  இராவணனுக்கு தோல்வி வரும் என்றால் நாம் எம்மாத்திரம். ஏதோ நாம் தான் உலகிலேயே பெரிய பலசாலி, புத்திசாலி என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.

இரண்டாவது, வெற்றியில் ஆடினால், தோல்வியில் மனைவியின் அன்பு பார்வை கூட  சுட்டெரிப்பது போல  இருக்கும்.பிள்ளைகளின் மழலை கூட துன்பம் தரும். நிதானம் வேண்டும்.

மூன்றாவது, வெற்றியும் தோல்வியும் நம் கையில் இல்லை. அதிர்ஷட தேவதையின் பார்வை திரும்பினால் ஆனானப் பட்டவனும் தோல்வியை ருசிக்கத்தான் வேண்டி இருக்கும்.

நான்காவது, நாம் நம்மையும் நம்மை சுற்றி இருப்பவர்களையும் நமது மற்றும் அவர்களின் வெற்றி தோல்வியை வைத்ததே எடை போடுகிறோம். பிள்ளைகள் நல்ல மார்க் வாங்க வேண்டும், கணவன் நிறைய சம்பாதிக்க வேண்டும்,  மனைவி சினிமாவில் வரும் நடிகை மாதிரி அழகாக இருக்க வேண்டும்...இதில் எதுவும் குறைந்தால் நமக்கு வருத்தம் வருகிறது. பிள்ளைகள், மார்க் குறைந்தால் பெற்றோரின் அன்பை இழந்து விடுவோமோ என்று கவலைப் படுகிறார்கள்.  வேலை போய் விட்டால் மனைவி நம்மை மதிப்பாளோ மாட்டாளோ என்று கணவன்  பயப்படுகிறான். வேலையில் சம்பள உயர்வு வரவில்லை என்றால் நம்மை நாமே குறைத்து மதிப்பிடுகிறோம். இது மாற வேண்டும். வெற்றியோ தோல்வியோ, மனிதர்களை மனிதர்களாக மதிக்க, நேசிக்க கற்க வேண்டும். முதலில் நம்மை நாம் மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். வெற்றி தோல்வி எது வந்தாலும் நீங்கள் நல்லவர், அன்பானவர், இனிமையானவர் என்ற எண்ணம் வேண்டும்.

இல்லை என்றால் , தோல்வி வந்தால் மனைவி முகமும் கத்தி போல அறுக்கும், பிள்ளைகள் குரலும் அம்பு போல குத்தும்.  அது

அது அரக்க குணம். நாம் அரக்கர்கள் இல்லையே. அந்த குணம் நமக்கு எதுக்கு.

வெற்றி தோல்விகளை தள்ளி வைத்து விட்டு வாழ்வை நேசிக்க கற்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_21.html






Tuesday, November 20, 2018

திருக்குறள் - சொல்லும் வலிக்கும்

திருக்குறள் - சொல்லும் வலிக்கும் 


ஒரு சொல் இதம் தரும்.

ஒரு சொல் வலி தரும்.

தெரியும்தானே?

சிலர் பேசுவது மென்மையாக, அழகாக, இதமாக இருக்கும். சிலர் எப்போது வாயைத் திறந்தாலும் சுருக் சுருக் என்று குத்துவார்கள். ஏதாவது மனம் சங்கடப் படும் படி பேசுவார்கள். அபசகுனமாக ஏதாவது சொல்லி வைப்பார்கள். அது நம் மனதில் கிடந்து நம்மை குழப்பிக் கொண்டே இருக்கும்.

சொற்களை , யோசித்து, அவற்றின் அர்த்தம் தெரிந்து , தெளிவாக பேச வேண்டும்.

அவனுடைய காதலி மிக மிக மென்மையானவள். அவள் குரல், அவள் பேசும் விதம் எல்லாமே மென்மையாக இருக்கும். இவ்வளவு மென்மையாக பேசுபவள் உடலும் மென்மையாகத்தான் இருக்கும் என்று கருதுகிறான் அவன். மென்மை என்றால் எவ்வளவு மென்மை ? அதை எப்படிச் சொல்வது?

அனிச்ச மலரும், அன்னத்தின் சிறக்கும் அவளுடைய பிஞ்சு பாதங்களுக்கு நெருஞ்சி முள் போல குத்துமாம். அப்படி என்றால் அவளுடைய பாதங்கள் எவ்வளவு மென்மையாக இருக்க வேண்டும் ?


பாடல்


அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்அடிக்கு நெருஞ்சிப் பழம்

பொருள்

அனிச்சமும் = அனிச்ச மலரும்

அன்னத்தின் தூவியும் = அன்னத்தின் சிறக்கும்

மாதர் = அவளின்

அடிக்கு = பாதங்களுக்கு

நெருஞ்சிப் பழம் = நெருஞ்சிப் பழம்

பாடல் என்னவோ ஏழு வார்த்தைதான். அதில் வள்ளுவர் வைக்கும் நுட்பம் இருக்கிறதே..அடடா ....

நெருஞ்சி என்பது ஒரு சின்ன முள் செடி. அதில் பூ பூத்து, காய் காய்க்கும். அந்த  காயில் முள் இருக்கும். அந்த முள் கூராக இருக்காது. வளையும். நாளடைவில் அந்த காய்  முற்றி கனியாக மாறும். அந்த முள்ளும் கெட்டிப் படும். அந்த சமயத்தில் அந்த முள் நன்றாக குத்தும். வலிக்கும்.

வள்ளுவர் என்ன சொல்லி இருக்க வேண்டும் ?

மாதர் அடிக்கு நெருஞ்சி முள்

என்று சொல்லி இருக்க வேண்டும். அப்படிச் சொல்லவில்லை. நெருஞ்சிப் பழம்  என்கிறார்.

ஏன்?

முள் என்றால், அந்த சொல் கூட குத்துமாம். அவளுக்கு வலிக்குமாம். எனவே  நெருஞ்சிப் பழம்  என்கிறார். பழம் என்றால் மென்மை என்று சொல்லமாலே தெரியும் அல்லவா.

சொல் கூட குத்தி விடக் கூடாது என்று கவனமாக இருக்கிறார் வள்ளுவர்.

பெண் என்பவள் மென்மையானவள்.  இன்னொருத்தர் வீட்டுக்குப் போகிறவள்.  நம் வீட்டில் இருக்கும் வரை சந்தோஷமாக இருக்கட்டும் என்று பெண்ணை  பூ போல பெற்றோர்கள் வளர்ப்பார்கள். அந்த மென்மை அவளிடம் தங்கி விடும்.

அப்படி மென்மையாக இருக்கும் அந்தப் கணவனுக்காக, காதலனுக்காக  எவ்வளவோ  துன்பங்களையும் வலிகளையும் பொறுத்துக் கொள்கிறாள்.

நமக்காக எவ்வளவு துன்பங்களை அவள் தாங்கிக் கொள்கிறாள் என்று நினைக்கும் போது, அவள் மேல் இன்னும் அன்பு பிறக்கிறது.

பெண்ணின் மென்மையை போற்றாத இலக்கியம் இல்லை.

நாளெல்லாம் வேலை செய்கிறாள். நின்று நின்று பாவம் கால் கடுக்குமே என்று  வள்ளியின் பாதங்களை முருகன் வருடினானாம்.

"பாகு கனி மொழி மாது குற மகள்  பாதம் வருடிய மணவாளா "

என்பார் அருணகிரி நாதர்.

செல்வத்தையெல்லாம் இழந்து விட்டு வந்து நிற்கிறான் கோவலன். காலில் ஒரு சிலம்பு மட்டும் இருக்கிறது கண்ணகியிடம். சரி அதை வைத்து தொழில் தொடங்கலாம்  என்று இருவரும் மதுரை நோக்கி புறப்படுகிறார்கள்.

கோவலன் மனதில் பச்சாதாபம் ஏற்படுகிறது. பாவம் இந்தப் பெண். என்னால் தானே அவளுக்கு இவ்வளவு சிரமம் என்று வருந்துகிறான்.


வீட்டை விட்டு வெளியே போனதே இல்லை. பாவம் இப்போது காடு மேடெல்லாம் நடக்கிறாள்.

அவள் பாதம் எவ்வளவு சிரமப் படும் என்று நினைத்து வருந்துகிறான். இந்த பூமிக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை. அவள் பாதங்களை இவ்வளவு குத்தி வருந்த வைக்கிறதே என்று கல்லும் முள்ளும் நிறைந்த பூமியை பார்த்து நினைக்கிறான்.

"வண்ணச் சீறடி மண் மகள் அறிந்திலள்"

மண் மகள் இதற்கு முன்பு இது போன்ற மென்மையான பாதங்களை அவள் பார்த்தது இல்லை. அதனால் தான் இப்படி குத்தி வருத்தம் தருகிறாள் போலும் என்று நினைக்கிறான்.

மீண்டும் தொடங்கிய இடத்துக்கு வருகிறேன்.

சொற்களை தேர்ந்து எடுங்கள். நல்ல சொற்களை மீண்டும் மீண்டும் சொல்லிப் பழகுங்கள். கடிய சொற்களை, மற்றவர்களை காயப் படுத்தும் சொற்களை, உங்கள் அகராதியில் இருந்து எடுத்து தூர வீசிவிடுங்கள்.

அது மற்றவர்களை மட்டும் அல்ல, உங்களையும் இன்பத்தில் ஆழ்த்தும்.

சரிதானே ?

https://interestingtamilpoems.blogspot.com/2018/11/blog-post_20.html