Tuesday, March 12, 2019

திருக்குறள் - புகழோடு தோன்றுக

திருக்குறள் - புகழோடு தோன்றுக 


பாடல்

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

பொருள்

தோன்றின் = தோன்றினால்

புகழொடு = புகழோடு

தோன்றுக = தோன்ற வேண்டும்

அஃதிலார் = அப்படி இல்லாவிட்டால்

தோன்றலின் = தோன்றுவதை விட

தோன்றாமை நன்று = தோன்றாமல் இருப்பதுவே நன்று

இந்தக் குறளும் அதன் பொருளும் யாருக்குத்தான் தெரியாது. மிக எளிமையான குறள். கடினமான வார்த்தை ஒன்று கூட இல்லை.

அப்படி நினைத்து, இந்த குறளை கடந்து போய் விடக் கூடாது.

வள்ளுவர் பொதுவாகவே சொற் சிக்கனம் உள்ளவர்.

இந்த ஒரு குறளில் "தோன்றின்" , "தோன்றுக", "தோன்றலின்", "தோன்றாமை" என  நாலு தடவை ஒரே வார்த்தையை கையாளுகிறார். இருக்கிற ஏழு வார்த்தைகளில் நாலு வார்த்தை  ஒரே சொல்லுக்குப் போய் விடுகிறது என்றால் அது எவ்வளவு முக்கியமான வார்த்தையாக இருக்க வேண்டும் ?

எந்த வேலையை செய்தாலும் அதில் புகழ் வரும்படி செய்ய வேண்டும். இல்லை என்றால் அதைச் செய்யாமல் இருப்பதே நல்லது.


ஒரு மாணவன் பள்ளிக்கு அல்லது கல்லூரிக்குச் செல்கிறான் என்றால், பள்ளியிலேயே அல்லது  கல்லூரியிலேயே முதலாவது வர வேண்டும். அதுதான் புகழ்.  நாலாவது, ஐந்தாவதாக வந்தால் யாருக்கும் தெரியாது.

ஓடினால் , ஒலிம்பிக்கில் தங்கம் வாங்க வேண்டும். அது தான் புகழ்.

பாடினால், grammy award வாங்க வேண்டும். அது புகழ்.

நானும் கல்லூரிக்குப் போனேன், நானும் பாட்டு கற்றுக் கொள்கிறேன், நானும் ஓடுகிறேன் என்று இருக்கக் கூடாது.

எந்த வேலையை செய்தாலும் அதில் புகழ் தோன்றும் படி செய்ய வேண்டும்.

"தோன்றுதல்"

நிறைய பேருக்கு திறமை இருக்கும். கடின உழைப்பு இருக்கும். அதை சரியான படி வெளிப்படுத்தத் தெரியாது.

உள்நாட்டில் வேலை செய்வதை விட, அயல் நாட்டில் சென்று வேலை செய்தால்  பல மடங்கு ஊதியம் கிடைக்கும். நல்ல பேர் கிடைக்கும். "ஐயோ, அயல் நாடா...? சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா " என்று குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்தால் புகழ் வெளிப்படாது. புகழ் "தோன்றாது".

இன்னும் சில பேர் மாங்கு மாங்கு என்று வேலை செய்வார்கள். ஆனால், ஒரு மதிப்பும், மரியாதையும், பதவி உயர்வும் இருக்காது. காரணம், தாங்கள் செய்ததை  சரியான படி வெளிச்சம் போட்டுக் காட்டத் தெரியாது.

தோன்றுதல் என்றால் வெளிப்படுதல் என்று பொருள்.  நம் திறமையை, அறிவை சரியான  படி வெளிப்படுத்தத் தெரிய வேண்டும். திறமை இருந்தால் மட்டும் போதாது. நல்ல இசை ஞானம் இருந்து என்ன பலன், குளியல் அரையைத் தவிர  வேறு எங்கும் பாட மாட்டேன் என்றால் ?

நாலு பேர் முன்னால் பாடிக் காட்ட வேண்டும்.

ஒரு வேலையை செய்யத் தொடங்கும்முன், அதில் இதுவரை சாதிக்கப்பட்டது என்ன, யார் சாதித்தார்கள், எப்போது சாதித்தார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும். அதை விட பெரிதாக என்ன செய்ய முடியும் என்று சிந்திக்க வேண்டும். அப்படி பெரிதாக செய்ய வேண்டும் என்றால் எப்படி செய்வது, அதற்கு என்ன பயிற்சி வேண்டும், யாருடைய உதவி தேவைப்படும் என்றெல்லாம் சிந்திக்க வேண்டும்.

இதுவரை சாதிக்காதவற்றை நாம் எவ்வாறு சாதிப்பது என்று சிந்தித்து செயல்பட வேண்டும்.

அப்படி சாதிக்க முடியும் என்றால், அந்த வேலையில் இறங்க வேண்டும். இல்லை என்றால்  அந்த வேலையைத் தொடக் கூடாது.

நானும் வேலைக்குப் போகிறேன், நானும் கல்லூரிக்குப் போகிறேன், என்று இருக்கக் கூடாது.

நாம், எப்போதும் நம் திறமையை அதிகமாக எண்ணிக் கொள்வோம். என்னைப் போல் யார் உண்டு என்று நினைப்போம்.

நம் திறமை வெளிப்பட்டால்தான் தெரியும் அது எவ்வளவு உயர்வானது அல்லது சாதாரணமானது என்று.  திறமை வெளிப்படும் போது பாராட்டும் கிடைக்கும், விமர்சனங்களும் எழும். குறை சொல்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்கள் சொல்லும் குறைகள் என்ன என்று ஆராய்ந்து, நம்மை மேலும் முன்னேற்றிக் கொள்ள வேண்டும்.

குடத்தில் இட்ட விளக்காய் இருந்தால், ஒன்றும் தெரியாது.

குன்றில் இட்ட விளக்காய் இருக்க வேண்டும்.

தோன்றுங்கள். உங்கள் திறமை வெளிப்படும்படி தோன்றுங்கள்.

புகழ் உங்களை வந்து சேரும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_12.html


Monday, March 11, 2019

கம்ப இராமாயணம் - கூற்றினுக்கு ஊட்டி

கம்ப இராமாயணம் - கூற்றினுக்கு ஊட்டி 


சிறு பிள்ளைகளுக்கு தாய்மார்கள் ஊட்டி விடுவார்கள். அன்பு மிகுதியால் சில சமயம் கணவன்/மனைவி, காதலன்/காதலிக்கு ஊட்டி விடுவதும் உண்டு.

ஊட்டி விடுவது ஒரு சுகம். பிள்ளைகள் சந்தோஷமாய் உண்பதை காண்பதும் ஒரு சுகம்தான்.  சில சமயம், கொஞ்சம் சாப்பிட்டபின் , குழந்தை போதும் என்று தலையை திருப்பிக் கொள்ளும், என்ன முயன்றாலும் சாப்பிடாது என்ன செய்ய. கிண்ணத்தில் உணவு கொஞ்சம் மிச்சம் இருக்கும்.  நெய்யும், பருப்பும், கீரையும் போட்டு குழைய செய்த உணவு. தூரவா போட முடியும் என்று அதை உருட்டி தாய்மார்கள் தாங்கள் உண்டு விட்டு, பாத்திரத்தை கழுவப் போடுவார்கள்.


கம்பன் ஒரு ஊட்டுதலை காட்டுகிறான். நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

எமனுக்கு ஊட்டி விட்டால் எப்படி இருக்கும் ?

ஜடாயு, அரக்கர்களை கொன்று யமனுக்கு ஊட்டி விடுவானாம். ஊட்டிய பின், மிச்சம் இருப்பதை தான் தின்று விடுவானாம்.

பாடலைப் பாருங்கள்

பாடல்

வீட்டி வாள் அவுணரை, 
     விருந்து கூற்றினை 
ஊட்டி, வீழ் மிச்சில் தான் 
     உண்டு, நாள்தொறும் 
தீட்டி, மேல் இந்திரன் சிறு 
     கண் யானையின் 
தோட்டிபோல் தேய்ந்து 
     ஒளிர் துண்டத்தான்தனை


பொருள்

வீட்டி வாள் = வீசும் வாளை (கத்தி) கொண்ட

அவுணரை = அரக்கர்களை

விருந்து = விருந்தாக

கூற்றினை ஊட்டி = எமனுக்கு ஊட்டி

வீழ் மிச்சில் = வீழ்ந்த மிச்சத்தை

தான் உண்டு = தான் (ஜடாயு) உண்டு

நாள்தொறும் = தினமும்

தீட்டி = கூர் செய்து

மேல் இந்திரன் = இந்திரன் அமரும்

சிறு கண் யானையின்  = சிறிய கண்களை கொண்ட யானையின்

தோட்டிபோல்  = அங்குசம் போல

தேய்ந்து = தேய்ந்து (கூர் மழுங்கி)

ஒளிர் = ஒளி வீசும்

துண்டத்தான்தனை = அலகைக் கொண்ட ஜாடாயுவை (இராமனும் இலக்குவனும் கண்டார்கள் )


பிள்ளைக்கு ஊட்டிய பின் மிச்சத்தை தாய் உண்பது போல, எமனுக்கு ஊட்டிய பின்   மிச்சத்தை தான் உண்பானாம்.

எமனுக்கு வேண்டியது உயிர் தான். அவனுக்கு அதை ஊட்டிய பின், மிச்சமிருக்கும் உடலை தான் தின்பானாம்.

என்ன ஒரு கற்பனை.

இப்படி அரக்கர்களோடு சண்டை போட்டு, சண்டை போட்டு, ஜடாயுவின் அலகு தேய்ந்து போய் விட்டதாம். இந்திரனின் யானையை அடக்கும் அங்குசம் போல.

தேய்ந்து போனாலும், எப்போதும் வேலை செய்து கொண்டே இருந்ததால் அது ஒளி வீசிக் கொண்டிருத்ததாம்.

கவிதை. கற்பனை.

நம் வீட்டில் தங்க வைர நகைகள் இருக்கும். அதை ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்து பூட்டி வைப்போம்.

குப்பை இருக்கும். அதை அலமாரியில் வைத்தா பூட்டி வைப்போம் ?

உயர்த்த கருத்துகளை நம் மூளையில் சேர்த்து வைக்க வேண்டும்.

பெரும்பாலும் என்ன செய்கிறோம் ? குப்பைகளை சேர்த்து வைக்கிறோம்.

குப்பை வைக்கும் இடமா நம் மூளை? ஒவ்வொரு நாளும் லாக்கரை திறந்து கொஞ்சம் குப்பையை அதில் திணித்து பின் மூடி வைக்கிறோம்.

என்ன பலன் ?

டிவி, செய்தித் தாள்கள், தொடர் சீரியல்கள், வாட்சப் செய்திகள், facebook படங்கள், செய்திகள், youtube, அரட்டைகள், என்று குப்பைகளாக சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறோம்.

முதலில் உங்கள் பெட்டகத்தைத் திறந்து அதில் உள்ள குப்பைகளை அள்ளி வெளியே போடுங்கள். பெட்டகத்தை சுத்தம் செய்யுங்கள்.

நல்லவற்றை மட்டும் உள்ளே வையுங்கள்.

இனிமேல், குப்பைகளை உள்ளே வைப்பது இல்லை என்று முடிவு செய்யுங்கள்.

இராமாயணம், அறிவியல், திருக்குறள், போன்ற உயர்ந்த நூல்களில் உள்ள சிறந்த கருத்துகளை மட்டுமே உங்கள் மூளைக்குள்  வைப்பது என்று முடிவு செய்யுங்கள்.

ஒன்றும் இல்லாவிட்டால் பரவாயில்லை. பெட்டகம் காலியாகத்தானே இருக்கிறது என்று  கொஞ்சம் குப்பையை உள்ளே வைக்காதீர்கள்.

உங்களை, உங்கள் அறிவை, உங்கள் நேரத்தை மதிக்கப் பழகினால், எதை படிக்கலாம், எதை கேட்கலாம் என்ற தன்னுணர்வு தானே வரும்.

எப்போது சுத்தம் செய்யப் போகிறீர்கள்?

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_11.html



Sunday, March 10, 2019

கம்ப இராமாயணம் - சிறை விரித்து இருந்தனன்

கம்ப இராமாயணம் - சிறை விரித்து இருந்தனன்


எந்த விஷயத்திலும் நாம் சிறந்து விளங்க வேண்டும் என்றால், அதில் நல்ல பயிற்சி வேண்டும். அது படிப்பாக இருக்கட்டும், விளையாட்டு, சமையல், ஆடல், பாடல், நடிப்பு, வேலை, எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். தொடர்ந்த பயிற்சியின் மூலம் நாம் எந்தத் துறையிலும் சிறந்து விளங்க முடியும்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

வாழ்வில் நாம் உயர வேண்டும், சிறப்பாக விளங்க வேண்டும், பேரும் , புகழும், பணமும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பாதவர் யார். எப்படி வாழ்வில் உயர்ந்து உன்னத நிலையை அடைவது ?

வள்ளுவர் சொல்கிறார்

வெள்ளத்து அனையது மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளது அனையது உயர்வு

நாம் எந்த அளவு உயர முடியும் என்றால், நம் மனம் எந்த அளவு உயர்கிறதோ அந்த அளவு உயர முடியும்.

எனக்கென்று ஒரு தனி விமானம் வேண்டும், ஒரு கப்பல் வேண்டும், ஒரு தீவு வேண்டும் என்று எப்போதாவது நினைத்து இருக்கிறோமா ?

நோபல் பரிசு வேண்டும்,  ஒலிம்பிக்கில் தங்கம் வாங்க வேண்டும் என்று ஆசை பட்டு இருக்கிறோமா ?

இல்லை. ஏன் என்றால், அதெல்லாம் நடக்கிற காரியம் இல்லை, நம்மால் முடியாது, அதுக்கெல்லாம் ரொம்ப நாளைக்கு முன்பிருந்தே முயற்சி தொடங்கி இருக்க வேண்டும், இப்ப ரொம்ப வயசாகி விட்டது என்று நமக்கு நாமே முட்டுக் கட்டை போட்டுக் கொள்கிறோம்.

உள்ளம் குறுகி இருக்கிறது. முடியாது, நடக்காது, நடை முறைக்கு ஒத்து வராது என்று பெரிய விஷயங்களை எல்லாம் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம். அல்லது தள்ளி வைத்து விடுகிறோம்.

அப்படி அல்லாமல், எப்படி பெரிதாக சிந்திப்பது ?

அதாவது, மனம் பெரிதாக சிந்திக்க வேண்டும் என்றால், அதற்கு பயிற்சி வேண்டும் அல்லவா ?    பெரிய பளுவை தூக்க உடலுக்கு பயிற்சி வேண்டுவது போல, பெரிதாக சிந்திக்க மனதுக்கு பயிற்சி வேண்டும்.

மனதை எப்படி பயிற்றுவிப்பது ? அதுக்கு ஏதாவது கோர்ஸ் இருக்கா ? மனப் பயிற்சி என்று எங்காவது சொல்லித் தருகிறார்களா ? எவ்வளவு செலவு ஆகும்?

ஒன்றுமே வேண்டாம். மிக மிக எளிய வழி இருக்கிறது.

இலக்கியம்.

இலக்கியங்களை படிக்க படிக்க மனம் விரியும். கற்பனையின் எல்லைகள் பரந்து படும். நடை முறையில் சாத்தியம் இல்லாதவற்றை எல்லாம் கூட மனதால் சிந்திக்க முடியும். இதுவரை காணாதது, கேட்டிராதது போன்றவற்றைக் கூட  மனதால்   கற்பனை செய்ய முடியும்.

அது ஒரு வித மனப் பயிற்சி.

கம்பன் அந்தப் பயிற்சியை நமக்குத் தருகிறான்.



இராமன், இலக்குவன் மற்றும் சீதை மூவரும் நாடு விட்டு காடு வந்து சேர்ந்தனர். காட்டில் ஜடாயுவை சந்தித்தனர்.

கழுகைப் பார்த்தார்கள் என்று சொல்லிவிட்டுப் போகலாம்.

கம்பன் மெனக்கிடுகிறான்.

ஜடாயு ஒரு மலை மேல் தன் சிறகுகளை விரித்தபடி அமர்ந்து இருக்கிறான். அது எப்படி இருக்கிறது என்றால், மலையின் மேல் சூரியன் வரும் போது அதன் கதிர்கள் எப்படி பிரகாசிக்குமோ அப்படி இருக்கிறது .....


பாடல்

உருக்கிய சுவணம் ஒத்து, உதயத்து
     உச்சி சேர்
அருக்கன் இவ் அகல் இடத்து
     அலங்கு திக்கு எல்லாம்
தெரிப்புறு செறி சுடர்ச்
     சிகையினால் சிறை
விரித்து இருந்தனன் என,
     விளங்குவான் தனை,


பொருள்


உருக்கிய = உருக்கப்பட்ட

சுவணம் = தங்கம்

ஒத்து = ஒன்றாக தோன்றும் படி இருந்து

உதயத்து = உதிக்கும் போது

உச்சி சேர் = உச்சியில் வரும் போது

அருக்கன் = சூரியன்

இவ் அகல் இடத்து = இந்த அகன்ற இடத்தில்

அலங்கு திக்கு எல்லாம் = பொருந்திய அனைத்து திசைகளிலும்

தெரிப்புறு = தெறித்து விழும்படி

செறி சுடர்ச் =  சக்தி வாய்ந்த சுடர்

சிகையினால் = ஒளி கீற்றுகளால்

சிறை விரித்து இருந்தனன் = சிறகை விரித்து இருந்தான்

 என விளங்குவான் தனை, = என்று இருந்த அவனை

மலை , உலகம்
சூரியன், ஜடாயு
சூரிய கதிர்கள் - ஜடாயுவின் சிறகுகள்


பொன்னிறமான கழுகு. மலை மேல் தக தக என்று ஜொலிக்கிறது. சிறகை விரித்து உலகுக்கு எல்லாம் ஒளி தருகிறது.

இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.

இருந்தாலும், நம் கற்பனை விரிகிறது அல்லவா ? அப்படி மலை மேலே உள்ள ஒரு பெரிய கழுகை நம்மால் சிந்திக்க முடிகிறது அல்லவா ?

அது தான் மனப் பயிற்சி.

மனம் விரிய விரிய நமது வாழ்வின் எல்லைகள் விரியும்.

நினையாததெல்லாம் நிறைவேற காண்போம்.

பெரிய முன்னேற்றங்கள் நிகழும்.

பெரிதினும் பெரிது கேள் என்றாள் ஒளவை.  (பாட்டி பெரிய ஆள் தான்).

இலக்கியங்களை ஆழ்ந்து அனுப்பவித்துப் படிப்பதால் வாழ்வில் மிகப் பெரிய விஷயங்களை சாதிக்கலாம். பெரிய உண்மைகளை கண்டறியலாம்.

மனம் விரியட்டும். குறுகிய எண்ணங்கள் தொலையட்டும். வானம் வசப்படட்டும்.



https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_10.html



Thursday, March 7, 2019

கம்ப இராமாயணம் - கண்டனர் கழுகின் வேந்தையே

கம்ப இராமாயணம் - கண்டனர் கழுகின் வேந்தையே 


சடாயுவும் தயரதனும் நெருங்கிய நண்பர்கள்.

இராமனும், இலக்குவனும், சீதையும் நாடு விட்டு காடு வருகிறார்கள்.

கம்பர் காட்டும் காட்டை பற்றி படித்ததால், நமக்கும் அங்கே ஒரு  நடை போய் வரலாம் போலத்  தோன்றும். அவ்வளவு அழகு.

காடு ஒரு புறம் இருக்கட்டும்.

நம்மால் ஒரு கிலோமீட்டர் செருப்பு இல்லாமல் நடக்க முடியுமா ? செருப்பு, ஷூ போட்டுக்கொண்டு ஒரு பத்து கிலோமீட்டர் நடக்க முடியுமா ?

இராமனும், இலக்குவனும் சக்கரவர்த்தி வீட்டுப் பிள்ளைகள். எவ்வளவு செல்லமாக வளர்ந்து இருப்பார்கள். அவர்கள் இருவரும் காட்டில், மர உரி உடுத்து நடந்தே வருகிறார்கள்.

சீதை, ஜனகனின் செல்லப் பெண். எப்படி எல்லாம் வளர்த்து இருப்பான் ஜனகன் தன் பெண்ணை. அவளும் நடக்கிறாள்.

நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா ?

பாடல்

நடந்தனர் காவதம் பலவும்;
     நல் நதி
கிடந்தன, நின்றன,
     கிரிகள் கேண்மையின் 
தொடர்ந்தன, துவன்றின;
     சூழல் யாவையும்
கடந்தனர்; கண்டனர்
     கழுகின் வேந்தையே.


பொருள்

நடந்தனர் = இராமன், இலக்குவன் மற்றும் சீதை மூவரும் நடந்தனர்

காவதம் பலவும்; = மைல் கணக்கில்

நல் நதி கிடந்தன = நல்ல நதிகள் பல கிடந்தன

நின்றன  கிரிகள் = மலைகள் உயர்ந்து நின்றன

கேண்மையின் தொடர்ந்தன = அவை தொடர்ந்து வந்தன

துவன்றின = ஒன்றை ஒன்று நெருங்கி இருந்தன

சூழல் யாவையும் கடந்தனர்;= அப்படிப்பட்ட இயற்கை சூழலை கடந்தனர்

கண்டனர் = கண்டனர்

கழுகின் வேந்தையே. = கழுகின் தலைவரான ஜடாயுவை


இந்த ஜடாயு சம்பந்தப் பட்ட காட்சிகள் இல்லாவிட்டால் காப்பியம் ஒன்றும் குறைந்து விடாது.

இருந்தும், வேலை மெனக்கெட்டு கம்பர் ஏன் இதைச் சொல்ல வருகிறார் ?

அதற்குப் பின் என்ன நோக்கம் இருக்கக் கூடும் ?

சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_7.html


Wednesday, March 6, 2019

கம்ப இராமாயணம் - சடாயு, இராமன், இலக்குவன்

கம்ப இராமாயணம் - சடாயு, இராமன், இலக்குவன் 


இரண்டு பையன்களோ, அல்லது இரண்டு பெண்களோ இள வயது முதல் நட்பாக பழகி வந்திருப்பார்கள். அவர்களுக்கு இடையே மிக ஆழ்ந்த நட்பு இருக்கலாம்.  வளர்ந்த பின், அவரவர்கள் திருமணம் முடித்து அவர்கள் வழியில் போய் இருக்கலாம். அவர்களில் ஒருவரின் பிள்ளை தங்களுடைய தாய் அல்லது தந்தையின் நண்பரை பார்த்தால் எப்படி பழகுவார்கள் ?

எனது நண்பனின் மகன் என்னிடம் எப்படி பழகுவான் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

எனக்கும் அந்த நன்பனின் மகனுக்கும் பெரிய பாசப் பிணைப்பு இருக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை தன் தந்தையின் அல்லது தாயின் நண்பர் அல்லது நண்பி என்று மரியாதை இருக்கலாம். சின்ன ஆச்சரியம் இருக்கலாம்.


ஆனால், எனக்கு அந்தப் பிள்ளையை பார்க்கும் போது என் பிள்ளையை பார்ப்பது போன்ற ஒரு வாஞ்சை, அன்பு வரத்தான் செய்யும்.

இது ஒரு சிக்கலான இடம். அன்போடு அந்தப் பிள்ளையை அரவணைத்தால், அந்தப் பிள்ளை சங்கடத்தில் நெளியக் கூடும்.

இராமாயணத்தில் அப்படி ஒரு இடத்தை கம்பர் காட்டுகிறார்.

தயரதனும் , சடாயுவும் நெருங்கிய நண்பர்கள். தயரதன் இறந்த பின், இராம இலக்குவர்கள்  காட்டுக்குப் போகிறார்கள். காட்டில் ஜடாயுவை சந்திக்கிறார்கள். தங்கள் தந்தையின் நண்பர்.

என்ன நிகழ்கிறது, அவர்களுக்குள் என்ன பேசிக் கொண்டார்கள். எப்படி அறிமுகம் செய்து கொண்டார்கள். சடாயு தயரதனைப் பற்றி என்ன சொன்னார்....இராம இலக்குவன்கள் அவரோடு எப்படி பழகினார்கள் ?

சிந்தித்துப் பாருங்கள்....

இராமாயணம் காட்டும் அந்த உறவு கோலத்தை நாம் காண இருக்கிறோம் வரும் நாட்களில்...

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_6.html


Tuesday, March 5, 2019

திருக்குறள் - எண்ணித் துணிக

திருக்குறள் - எண்ணித் துணிக 


பாடல்

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

பொருள்

எண்ணித் = ஆராய்ந்த பின்

துணிக = முடிவு செய்க 

கருமம் = எந்த செயலையும்

துணிந்தபின்  = முடிவு எடுத்த பின் , செயல் தொடங்கிய பின்

எண்ணுவம் = ஆராய்ந்து கொள்ளலாம்

என்பது இழுக்கு. = என்பது குற்றம்

எப்போதும் போல, குறள் என்னவோ எளிமையான ஒன்றுதான். சிந்திக்க சிந்திக்க பொருள் விரிந்து கொண்டே போகும் தன்மை உடைய குறள்.

முதலாவது, "துணிக"


ஏன் துணிக என்ற சொல்லை போட்டு இருக்கிறார் வள்ளுவர். எண்ணிச் செய்க கருமம்  என்று சொல்லி இருக்கலாம் அல்லவா ? ஏன் சொல்லவில்லை?


எந்த செயலை தொடங்குவது ஆனாலும், அது பற்றிய முழு விவரமும் நமக்கு கிடைக்காது. கொஞ்சம் சந்தேகம் இருக்கத்தான் செய்யும். அது சரியா, தவறா  என்ற குழப்பம், தயக்கம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும்.

எதைப் படிப்பது, எங்கே படிப்பது, எதை வாங்குவது, எப்போது வாங்குவது, இன்னும் கொஞ்ச நாள் வைத்து இருக்கலாமா அல்லது இப்போதே விற்று விடலாமா,  திருமணம் செய்து கொள்வது,  குழந்தைகளுக்கு வரன் தேடுவது என்று  எந்த செயலை எடுத்தாலும், எவ்வளவு தான் ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்தாலும்  தெரியாதது கொஞ்சம் இருக்கத்தான் செய்யும்.

அப்போது என்ன செய்வது ? நல்லது கெட்டதுகளை ஆராய்ந்தபின், நல்லது அதிகமாக இருக்கும் என்றால்  துணிந்து காரியத்தில் இறங்க வேண்டியதுதான்.

வேலை செய்வதற்கு ஒரு தைரியம் , துணிவு வேண்டும். பயந்து கொண்டே இருந்தால்  ஒரு காரியமும் நடக்காது.

இரண்டாவது, "எண்ணி".

எதை என்ன வேண்டும் ?

ஒரு காரியத்தின் இலாப நட்டங்களை எண்ண வேண்டும். நல்லதை மட்டுமே நினைக்கக் கூடாது. அதில் உள்ள சிக்கலைகளையும் சிந்திக்க வேண்டும்.

அடுத்தது, காரியம் செய்ய எது சரியான தருணம் என்று சிந்திக்க வேண்டும்.

உருவத்தால் பருத்து உயர்ந்த மரங்களானாலும் பருவத்தால் அன்றி பழா .

அடுத்தது, ஒரு காரியம் செய்ய நமக்கு என்னவெல்லாம் வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். பணம், அறிவுரை, நண்பர்கள் உதவி, உறவினர்கள் உதவி, மற்ற உபகரணங்கள் என்று அனைத்தையும் சிந்திக்க வேண்டும்.

அடுத்தது, ஒரு செயலை செய்யும் போது அதில் வரும் சிக்கல்களை, எதிர்ப்புகளை  பற்றி சிந்திக்க வேண்டும். எல்லாமே நாம் நினைப்பது போல நடக்காது. அப்போது என்ன செய்வது என்று முதலிலேயே சிந்தித்து வைத்துக் கொள்ள வேண்டும்.


"துணிந்த பின் எண்ணுவம்"

வேலையை தொடங்கி  விடுவோம், போகப் போக பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பது தவறு.

ஏன் ? அப்படி செய்தால் என்ன தவறு ?

முதலாவது, ஒரு வேளை தவறான காரியமாக இருந்தால் அதில் இருந்து மீள வழி இல்லாமல் போகலாம்.

உதாரணமாக அது ஒரு சட்ட விரோதமான செயலாக இருக்கலாம். வாங்கிய இடம்  பொது இடமாக இருக்கலாம் அல்லது அரசாங்கத்துக்கு சொந்தமான இடமாக இருக்கலாம். அதில் போய் வீடு காட்டினால்? கட்டுவோம் , அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கக் கூடாது. பெரிய நட்டத்தில் கொண்டு போய் விட்டு விடும்.

இரண்டாவது, அரை குறையாக திட்டம் தீட்டினால், ஒரு வேலை நாம் நினைத்தை விட அதிக செலவு பிடிக்கும் செயலாக இருக்கலாம். செலவை ஈடு கட்ட கடன் வாங்க வேண்டி இருக்கலாம். அதுக்கு வட்டி கட்ட வேண்டும். இப்படி பலப் பல  சிக்கல்களில் கொண்டு போய் விட்டு விடும்.

மூன்றாவதாக, சரியாக திட்டம் தீட்டவில்லை என்றால், செயலை முடிப்பதில் கால தாமதம்  ஏற்படலாம். அலைச்சல், வீண் செலவு, குழப்பம் எல்லாம்  நிகழும்.

தொடங்கியபின் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கக் கூடாது.

"பின் எண்ணுவம் என்பது இழுக்கு"

சரி, ஒரு வேலையை நன்றாக திட்டமிட்டுத்தான் தொடங்கினோம். எதிர்பாராத  சிக்கல் வந்து விட்டது. இப்போது என்ன செய்வது? அந்த சிக்கலை விடுவிக்க மீண்டும் திட்டம் இட வேண்டாமா ?

ஆம், செயலை தொடங்கிய பின்னும் , பல புது பிரச்சனைகள் வரலாம். அவற்றை தீர்க்க மீண்டும் திட்டம் தீட்டத்தான் வேண்டும். வள்ளுவர், "துணிந்த பின்  எண்ணுவம் என்பது கூடாது " என்று சொல்லவில்லை.

"துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு" என்று சொன்னார்.

அது குறைதான். முதலிலேயே எண்ணி இருக்க வேண்டும். பின்னால் எண்ணுவது ஒரு  குறைதானே தவிர அதை அறவே செய்யக் கூடாது என்று சொல்லவில்லை.

"துணிந்த பின் எண்ணுவம் என்பது பிழை"

என்று சொல்லவில்லை. இழுக்கு என்று சொல்கிறார். இழுக்கு என்றால் அவ்வளவு சிறப்பானது அல்ல. இழிவானது.

ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஆழ்ந்த அர்த்தங்கள் உண்டு.

பொறுமையாக படித்தால் அந்த ஆழம் புலப்படும்.

ஒவ்வொரு குறளுக்குப் பின்னாலும் எவ்வளவு கொட்டிக் கிடக்கிறது!

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_5.html


Friday, March 1, 2019

கலித்தொகை - எனக்கு ஒண்ணும் தெரியாதுப்பா

கலித்தொகை - எனக்கு ஒண்ணும் தெரியாதுப்பா


மனித உணர்ச்சிகள் நுண்மையானவை. அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்த மிகுந்த திறமை வேண்டும். மனதில் நினைப்பதை சரியாகச் சொல்லத் தெரியாமல், ஒண்ணு கிடக்க ஒண்ணு சொல்லி, எவ்வளவு சிக்கலில் மாட்டிக் கொள்கிறோம்.

ஆண் பெண் உணர்வு என்பது மிக நுட்பமானது. மிகவும் அந்தரங்கமானது. பெண்ணுக்குள்ளும் ஆயிரம் ஆசைகள் இருந்தாலும், ஒரு நாணம், ஒரு பயம், ஒரு தயக்கம் அவளை எப்போதும் பின்னுக்கு இழுத்துக் கொண்டே இருக்கிறது. எனவே, அவள் சொல்வதில் பாதி உண்மை, மீதியை நாம் ஆண்  தேடி புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. தவறாக புரிந்து கொண்டால், அதுவும் சிக்கல். என்ன

கலித்தொகை. பாலைக் கலி.

அற்புதமான பாடல்.

தலைவி, தன் தோழியிடம் சொல்கிறாள். காதல், காமம் எல்லாம் ஒன்று சேர்ந்தது. அதை எவ்வளவு நளினமாக, நாசூக்காக, ஒண்ணுமே தெரியாத மாதிரி சொல்கிறாள் என்று பாருங்கள்.

"பல்லு கொஞ்சம் கூர்மையானது தான். முள்ளு போல இருக்கும். இருந்தாலும் குத்தாது. குத்தினாலும் வலிக்காது. அந்த பற்கள் நிறைந்த வாயில் இருந்து ஊறும் நீர், கள்ளை விட இன்பம் தரும் என்று சொல்லும் அவர், அதோடு நிற்காமல், என் உடையையும் திருத்துவார். ஏன் அப்படி செய்கிறார் என்று எனக்கு ஒண்ணும் தெரியல" என்கிறாள் பாவம் போல.

பாடல்

முள்ளுறழ்  முளை  யெயிற் றமிழ்தூறுந் தீநீரைக்
கள்ளினு மகிழ்செயு மெனவுரைத்து மமையாரென்
னொள்ளிழை திருத்துவர் காதலர் மற்றவ
ருள்ளுவ தெவன்கொ லறியே னென்னும்

கொஞ்சம் சீர் பிரிக்கலாம்

முள்ளு உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரை 
கள்ளினும் மகிழ் செய்யும் என உரைத்து அமையார் என் 
ஒன் ஒள்  இழை திருத்துவார் காதலர் மற்று 
அவர் உள்ளுவதென் கொல் அறியேன் என்னும் 

பொருள்


முள்ளு = முள்

உறழ் = மாறிய, மாறுபட்ட. முள்ளு மாதிரி இருக்கும், ஆனா முள்ளு இல்லை

முளை = முனை ,

எயிற்று = எயிறு என்றால் பல்

அமிழ்து ஊறும் = அமிழ்து ஊறும்

தீ நீரை  = தீ நீரை

கள்ளினும் = கள்ளை விட

மகிழ் செய்யும் = மகிழ்ச்சி தரும்

என உரைத்து = என்று சொன்னதோடு

அமையார் = சும்மா இருக்க மாட்டார்

என் = என்னுடை

ஒன் ஒள்  இழை = ஒள் என்றால் ஒளி பொருந்திய, shining.  இழை என்றால் ஆடை. சிறந்த பள பளப்பான ஆடை

திருத்துவார் = சரி செய்வார்

காதலர் = காதலர்

மற்று  = மேலும்

அவர் = அவர்

உள்ளுவதென் = மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாரோ

கொல் = அசைச் சொல்

அறியேன் = எனக்கு ஒண்ணும் தெரியாதுப்பா

என்னும் = என்று சொல்லுவாள்



"முளை எயிற்று அமிழ்து ஊறும்"

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

என்பது திருமதிரம்.

இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை

இந்து என்றால் சந்திரன்

சந்திரனின் இளம் பிறையை போன்ற பல்லை (தந்தத்தை) உடைய விநாயகரை போற்றுகிறேன் என்கிறார் திருமூலர்.



"தீ நீர்"

சூடான நீர்.  குளிர்ச்சிதான். இருந்தாலும் கொஞ்சம் சூடும்தான். என்ன ஒரு வார்த்தை பிரயோகம்.

அவனை பார்ப்பதற்கு என்றே நல்லா உடை உடுத்திக் கொண்டு போய் இருக்கிறாள்.

அவன் அந்த ஆடையை "திருத்தினானாம்". எதுனால அப்படி செய்தான்னு எனக்குத் தெரியலை என்கிறாள். பாவம் போல.

ஏன் என்று சொல்லி இருந்தால், அது மூன்றாம் தர காம பத்திரிக்கையாகி இருக்கும். தெரியாது என்று சொன்னதில் அந்த இலக்கியம் உயர்ந்து நிற்கிறது.

காமத்தை எவ்வளவு நளினமாக, மென்மையாக வெளிப்படுத்துகிறது இந்த இலக்கியங்கள்.

மற்றதை எல்லாம் விட்டு விடுவோம்.

உணர்ச்சிகளை மென்மையாக, முழுமையாக எப்படி வெளிப்படுத்துவது என்று  இதில் இருந்து பாடம் படிப்போம். அது எவ்வளவு முக்கியம் தெரியுமா?

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post.html