Thursday, March 7, 2019

கம்ப இராமாயணம் - கண்டனர் கழுகின் வேந்தையே

கம்ப இராமாயணம் - கண்டனர் கழுகின் வேந்தையே 


சடாயுவும் தயரதனும் நெருங்கிய நண்பர்கள்.

இராமனும், இலக்குவனும், சீதையும் நாடு விட்டு காடு வருகிறார்கள்.

கம்பர் காட்டும் காட்டை பற்றி படித்ததால், நமக்கும் அங்கே ஒரு  நடை போய் வரலாம் போலத்  தோன்றும். அவ்வளவு அழகு.

காடு ஒரு புறம் இருக்கட்டும்.

நம்மால் ஒரு கிலோமீட்டர் செருப்பு இல்லாமல் நடக்க முடியுமா ? செருப்பு, ஷூ போட்டுக்கொண்டு ஒரு பத்து கிலோமீட்டர் நடக்க முடியுமா ?

இராமனும், இலக்குவனும் சக்கரவர்த்தி வீட்டுப் பிள்ளைகள். எவ்வளவு செல்லமாக வளர்ந்து இருப்பார்கள். அவர்கள் இருவரும் காட்டில், மர உரி உடுத்து நடந்தே வருகிறார்கள்.

சீதை, ஜனகனின் செல்லப் பெண். எப்படி எல்லாம் வளர்த்து இருப்பான் ஜனகன் தன் பெண்ணை. அவளும் நடக்கிறாள்.

நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா ?

பாடல்

நடந்தனர் காவதம் பலவும்;
     நல் நதி
கிடந்தன, நின்றன,
     கிரிகள் கேண்மையின் 
தொடர்ந்தன, துவன்றின;
     சூழல் யாவையும்
கடந்தனர்; கண்டனர்
     கழுகின் வேந்தையே.


பொருள்

நடந்தனர் = இராமன், இலக்குவன் மற்றும் சீதை மூவரும் நடந்தனர்

காவதம் பலவும்; = மைல் கணக்கில்

நல் நதி கிடந்தன = நல்ல நதிகள் பல கிடந்தன

நின்றன  கிரிகள் = மலைகள் உயர்ந்து நின்றன

கேண்மையின் தொடர்ந்தன = அவை தொடர்ந்து வந்தன

துவன்றின = ஒன்றை ஒன்று நெருங்கி இருந்தன

சூழல் யாவையும் கடந்தனர்;= அப்படிப்பட்ட இயற்கை சூழலை கடந்தனர்

கண்டனர் = கண்டனர்

கழுகின் வேந்தையே. = கழுகின் தலைவரான ஜடாயுவை


இந்த ஜடாயு சம்பந்தப் பட்ட காட்சிகள் இல்லாவிட்டால் காப்பியம் ஒன்றும் குறைந்து விடாது.

இருந்தும், வேலை மெனக்கெட்டு கம்பர் ஏன் இதைச் சொல்ல வருகிறார் ?

அதற்குப் பின் என்ன நோக்கம் இருக்கக் கூடும் ?

சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_7.html


2 comments:

  1. நன்றி ஐயா! தங்களின் பதிவுகளை படித்து மன மொழி மெய்களால் நன்றி கூறுகிறேன் _/\_ ​​

    ReplyDelete
  2. You are building up the story in an interesting manner sustaining readers’ interest to great effect

    ReplyDelete