Saturday, March 23, 2019

கம்ப இராமாயணம் - உடன் உறை நோய்

கம்ப இராமாயணம் - உடன் உறை நோய்


ஒரு மனிதனின் வாழ்வில் பெண்ணின் பங்கு பெரும் பங்கு.

இராமாயணத்தை எடுத்துக் கொண்டால், பெண்கள்தான் காப்பியத்தை நடத்திக்
கொண்டு செல்கிறார்கள்.

கூனி தொடங்கி, கைகேயி, சூர்ப்பனகை என்று காப்பியத்தின் போக்கையே
திசை திருப்பியது பெண்கள்தான்.

கொஞ்ச நேரம் வந்து போகும் சபரி கூட தன் பங்கிற்கு இராமனை சுக்ரீவனிடம்
மடை மாற்றி விட்டுப் போகிறாள். காப்பியத்தின் போக்கு மாறிப் போகிறது.

சூர்ப்பனகை, இராவணனின் தங்கை. காட்டில், இராமன், இலக்குவன்,
மற்றும் சீதை இருக்கும் இடம் தேடி வருகிறாள்.

சூர்பனகையை அறிமுகம் செய்கிறான் கம்பன்.

ஒவ்வொரு மனிதனும் இறுதியில் இறப்பதற்கு ஒரு நோய் காரணமாக
இருக்கும். மாரடைப்பு, இரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி என்று
ஏதோ இரு நோய் காரணமாக இருக்கும். அந்த நோய்கள் அவன்
பிறந்த போதே அவன் உடம்பில் இருக்கும். அவன் தளரும் போது
நோய்கள் வலிமை பெற்று அவனை வீழ்த்தும்.

ஆனால், இராவணனின் உடல் வலிமை மிகப் பெரியது. நோய் கூட
அவன் கிட்ட வர அஞ்சுமாம். பின் நோயே இல்லாவிட்டால் ஒருவன்
எப்படித்தான் முடிவை அடைவது?

நோய் எப்படி கூடவே பிறந்து ஒருவனை அழிக்குமோ, அது போல
இராவணனின் உடன் பிறந்தாள் சூர்ப்பனகை. பிறந்து அவனை அடியோடு
அழித்தாள். உடன் பிறந்தே கொல்லும் நோய் போன்றவள் என்றான் கம்பன்.

பாடல்


நீல மா மணி நிற
     நிருதர் வேந்தனை
மூல நாசம் பெற முடிக்கும்
     மொய்ம்பினாள்,
மேலைநாள் உயிரொடும்
     பிறந்து, தான் விளை
காலம் ஓர்ந்து, உடன் உறை கடிய
     நோய் அனாள்,


பொருள்

நீல மா மணி = நீல நிறம் கொண்ட பெரிய மணியைப் போல

நிற = நிறத்தைக் கொண்ட

நிருதர் வேந்தனை = இராவணனை

மூல நாசம் பெற முடிக்கும் = அடியோடு நாசம் செய்ய

மொய்ம்பினாள், = சூழ்ச்சியினால் அழிக்கும் ஆற்றல்  கொண்ட

மேலைநாள் = முன்பு

உயிரொடும் பிறந்து = உயிர் பிறக்கும் போதே உடன் பிறந்து

தான் விளை காலம் ஓர்ந்து, = தான் (நோய் ) விளையக் கூடிய காலம் எது
என்று அறிந்து


 உடன் உறை = கூடவே இருக்கும்

கடிய  = கொடுமையான, வலிமையான

நோய் அனாள், = நோய் போன்றவள்

இராவணன், நோயால் இறக்கவில்லை. உடன் பிறந்த சகோதரியால் இறந்தான்.

அப்படி, கதையாக அதை படித்து இரசித்து விட்டும் போகலாம்.

கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால் வாழ்க்கைக்கு தேவையான படிப்பினையும் கிடைக்கலாம்.

உடன் பிறந்தால் மட்டும், நெருங்கி இருந்தால் மட்டும் மற்றவர்கள் நமக்கு
நல்லது செய்வார்கள் என்று நினைக்க முடியாது.


கூடவே பிறந்து கொல்லும் நோயும் உண்டு. எங்கோ உள்ள மலையில் உள்ள மூலிகை நோய் தீர்த்து உடலுக்கு இன்பம் சேர்ப்பதும் உண்டு என்பாள் ஒளவை.



உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி-உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு.


நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள், உறவினர்கள் என்று யாரையும் பெரிதாக நினைக்க வேண்டாம். நமக்கு அறிமுகம் இல்லாதவர்கள், தெரியாதவர்கள் என்று  யாரையும் தள்ளவும் வேண்டாம்.

கூடவே இருந்தாலும், தீமை செய்பவர்களும் உண்டு. முன் பின் தெரியாதவர்களாக இருந்தாலும் நன்மை செய்பவர்களும் உண்டு.

ஏமாந்து போகக் கூடாது.


நன்மையும் தீமையும் எங்கிருந்து வரும் என்று தெரியாது.

அறிவை தீட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.



https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_23.html

1 comment:

  1. மிக அருமையான விளக்கம். நன்றி

    ReplyDelete