Friday, March 1, 2019

கலித்தொகை - எனக்கு ஒண்ணும் தெரியாதுப்பா

கலித்தொகை - எனக்கு ஒண்ணும் தெரியாதுப்பா


மனித உணர்ச்சிகள் நுண்மையானவை. அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்த மிகுந்த திறமை வேண்டும். மனதில் நினைப்பதை சரியாகச் சொல்லத் தெரியாமல், ஒண்ணு கிடக்க ஒண்ணு சொல்லி, எவ்வளவு சிக்கலில் மாட்டிக் கொள்கிறோம்.

ஆண் பெண் உணர்வு என்பது மிக நுட்பமானது. மிகவும் அந்தரங்கமானது. பெண்ணுக்குள்ளும் ஆயிரம் ஆசைகள் இருந்தாலும், ஒரு நாணம், ஒரு பயம், ஒரு தயக்கம் அவளை எப்போதும் பின்னுக்கு இழுத்துக் கொண்டே இருக்கிறது. எனவே, அவள் சொல்வதில் பாதி உண்மை, மீதியை நாம் ஆண்  தேடி புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. தவறாக புரிந்து கொண்டால், அதுவும் சிக்கல். என்ன

கலித்தொகை. பாலைக் கலி.

அற்புதமான பாடல்.

தலைவி, தன் தோழியிடம் சொல்கிறாள். காதல், காமம் எல்லாம் ஒன்று சேர்ந்தது. அதை எவ்வளவு நளினமாக, நாசூக்காக, ஒண்ணுமே தெரியாத மாதிரி சொல்கிறாள் என்று பாருங்கள்.

"பல்லு கொஞ்சம் கூர்மையானது தான். முள்ளு போல இருக்கும். இருந்தாலும் குத்தாது. குத்தினாலும் வலிக்காது. அந்த பற்கள் நிறைந்த வாயில் இருந்து ஊறும் நீர், கள்ளை விட இன்பம் தரும் என்று சொல்லும் அவர், அதோடு நிற்காமல், என் உடையையும் திருத்துவார். ஏன் அப்படி செய்கிறார் என்று எனக்கு ஒண்ணும் தெரியல" என்கிறாள் பாவம் போல.

பாடல்

முள்ளுறழ்  முளை  யெயிற் றமிழ்தூறுந் தீநீரைக்
கள்ளினு மகிழ்செயு மெனவுரைத்து மமையாரென்
னொள்ளிழை திருத்துவர் காதலர் மற்றவ
ருள்ளுவ தெவன்கொ லறியே னென்னும்

கொஞ்சம் சீர் பிரிக்கலாம்

முள்ளு உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரை 
கள்ளினும் மகிழ் செய்யும் என உரைத்து அமையார் என் 
ஒன் ஒள்  இழை திருத்துவார் காதலர் மற்று 
அவர் உள்ளுவதென் கொல் அறியேன் என்னும் 

பொருள்


முள்ளு = முள்

உறழ் = மாறிய, மாறுபட்ட. முள்ளு மாதிரி இருக்கும், ஆனா முள்ளு இல்லை

முளை = முனை ,

எயிற்று = எயிறு என்றால் பல்

அமிழ்து ஊறும் = அமிழ்து ஊறும்

தீ நீரை  = தீ நீரை

கள்ளினும் = கள்ளை விட

மகிழ் செய்யும் = மகிழ்ச்சி தரும்

என உரைத்து = என்று சொன்னதோடு

அமையார் = சும்மா இருக்க மாட்டார்

என் = என்னுடை

ஒன் ஒள்  இழை = ஒள் என்றால் ஒளி பொருந்திய, shining.  இழை என்றால் ஆடை. சிறந்த பள பளப்பான ஆடை

திருத்துவார் = சரி செய்வார்

காதலர் = காதலர்

மற்று  = மேலும்

அவர் = அவர்

உள்ளுவதென் = மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாரோ

கொல் = அசைச் சொல்

அறியேன் = எனக்கு ஒண்ணும் தெரியாதுப்பா

என்னும் = என்று சொல்லுவாள்



"முளை எயிற்று அமிழ்து ஊறும்"

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

என்பது திருமதிரம்.

இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை

இந்து என்றால் சந்திரன்

சந்திரனின் இளம் பிறையை போன்ற பல்லை (தந்தத்தை) உடைய விநாயகரை போற்றுகிறேன் என்கிறார் திருமூலர்.



"தீ நீர்"

சூடான நீர்.  குளிர்ச்சிதான். இருந்தாலும் கொஞ்சம் சூடும்தான். என்ன ஒரு வார்த்தை பிரயோகம்.

அவனை பார்ப்பதற்கு என்றே நல்லா உடை உடுத்திக் கொண்டு போய் இருக்கிறாள்.

அவன் அந்த ஆடையை "திருத்தினானாம்". எதுனால அப்படி செய்தான்னு எனக்குத் தெரியலை என்கிறாள். பாவம் போல.

ஏன் என்று சொல்லி இருந்தால், அது மூன்றாம் தர காம பத்திரிக்கையாகி இருக்கும். தெரியாது என்று சொன்னதில் அந்த இலக்கியம் உயர்ந்து நிற்கிறது.

காமத்தை எவ்வளவு நளினமாக, மென்மையாக வெளிப்படுத்துகிறது இந்த இலக்கியங்கள்.

மற்றதை எல்லாம் விட்டு விடுவோம்.

உணர்ச்சிகளை மென்மையாக, முழுமையாக எப்படி வெளிப்படுத்துவது என்று  இதில் இருந்து பாடம் படிப்போம். அது எவ்வளவு முக்கியம் தெரியுமா?

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post.html

2 comments:

  1. காம விவகாரங்களை பட்டென்று உளறி கொட்ட எல்லாராலும் முடியும்.ஆனால் சிறந்த கவிகளால்தான் உணர்ச்சிகளை இலை மறைவு காய் மறைவாக வார்த்தைகளால் ஜாலம் செய்ய முடியும்

    ReplyDelete
  2. காதலும் காமமும் நிறைந்த எண்ணத்தை, எவ்வளவு நளினமாகச் சொல்கிறாள்!

    அப்படி எழுதிய கவிஞரின் திறன் என்னே!

    ReplyDelete