Tuesday, March 5, 2019

திருக்குறள் - எண்ணித் துணிக

திருக்குறள் - எண்ணித் துணிக 


பாடல்

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

பொருள்

எண்ணித் = ஆராய்ந்த பின்

துணிக = முடிவு செய்க 

கருமம் = எந்த செயலையும்

துணிந்தபின்  = முடிவு எடுத்த பின் , செயல் தொடங்கிய பின்

எண்ணுவம் = ஆராய்ந்து கொள்ளலாம்

என்பது இழுக்கு. = என்பது குற்றம்

எப்போதும் போல, குறள் என்னவோ எளிமையான ஒன்றுதான். சிந்திக்க சிந்திக்க பொருள் விரிந்து கொண்டே போகும் தன்மை உடைய குறள்.

முதலாவது, "துணிக"


ஏன் துணிக என்ற சொல்லை போட்டு இருக்கிறார் வள்ளுவர். எண்ணிச் செய்க கருமம்  என்று சொல்லி இருக்கலாம் அல்லவா ? ஏன் சொல்லவில்லை?


எந்த செயலை தொடங்குவது ஆனாலும், அது பற்றிய முழு விவரமும் நமக்கு கிடைக்காது. கொஞ்சம் சந்தேகம் இருக்கத்தான் செய்யும். அது சரியா, தவறா  என்ற குழப்பம், தயக்கம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும்.

எதைப் படிப்பது, எங்கே படிப்பது, எதை வாங்குவது, எப்போது வாங்குவது, இன்னும் கொஞ்ச நாள் வைத்து இருக்கலாமா அல்லது இப்போதே விற்று விடலாமா,  திருமணம் செய்து கொள்வது,  குழந்தைகளுக்கு வரன் தேடுவது என்று  எந்த செயலை எடுத்தாலும், எவ்வளவு தான் ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்தாலும்  தெரியாதது கொஞ்சம் இருக்கத்தான் செய்யும்.

அப்போது என்ன செய்வது ? நல்லது கெட்டதுகளை ஆராய்ந்தபின், நல்லது அதிகமாக இருக்கும் என்றால்  துணிந்து காரியத்தில் இறங்க வேண்டியதுதான்.

வேலை செய்வதற்கு ஒரு தைரியம் , துணிவு வேண்டும். பயந்து கொண்டே இருந்தால்  ஒரு காரியமும் நடக்காது.

இரண்டாவது, "எண்ணி".

எதை என்ன வேண்டும் ?

ஒரு காரியத்தின் இலாப நட்டங்களை எண்ண வேண்டும். நல்லதை மட்டுமே நினைக்கக் கூடாது. அதில் உள்ள சிக்கலைகளையும் சிந்திக்க வேண்டும்.

அடுத்தது, காரியம் செய்ய எது சரியான தருணம் என்று சிந்திக்க வேண்டும்.

உருவத்தால் பருத்து உயர்ந்த மரங்களானாலும் பருவத்தால் அன்றி பழா .

அடுத்தது, ஒரு காரியம் செய்ய நமக்கு என்னவெல்லாம் வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். பணம், அறிவுரை, நண்பர்கள் உதவி, உறவினர்கள் உதவி, மற்ற உபகரணங்கள் என்று அனைத்தையும் சிந்திக்க வேண்டும்.

அடுத்தது, ஒரு செயலை செய்யும் போது அதில் வரும் சிக்கல்களை, எதிர்ப்புகளை  பற்றி சிந்திக்க வேண்டும். எல்லாமே நாம் நினைப்பது போல நடக்காது. அப்போது என்ன செய்வது என்று முதலிலேயே சிந்தித்து வைத்துக் கொள்ள வேண்டும்.


"துணிந்த பின் எண்ணுவம்"

வேலையை தொடங்கி  விடுவோம், போகப் போக பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பது தவறு.

ஏன் ? அப்படி செய்தால் என்ன தவறு ?

முதலாவது, ஒரு வேளை தவறான காரியமாக இருந்தால் அதில் இருந்து மீள வழி இல்லாமல் போகலாம்.

உதாரணமாக அது ஒரு சட்ட விரோதமான செயலாக இருக்கலாம். வாங்கிய இடம்  பொது இடமாக இருக்கலாம் அல்லது அரசாங்கத்துக்கு சொந்தமான இடமாக இருக்கலாம். அதில் போய் வீடு காட்டினால்? கட்டுவோம் , அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கக் கூடாது. பெரிய நட்டத்தில் கொண்டு போய் விட்டு விடும்.

இரண்டாவது, அரை குறையாக திட்டம் தீட்டினால், ஒரு வேலை நாம் நினைத்தை விட அதிக செலவு பிடிக்கும் செயலாக இருக்கலாம். செலவை ஈடு கட்ட கடன் வாங்க வேண்டி இருக்கலாம். அதுக்கு வட்டி கட்ட வேண்டும். இப்படி பலப் பல  சிக்கல்களில் கொண்டு போய் விட்டு விடும்.

மூன்றாவதாக, சரியாக திட்டம் தீட்டவில்லை என்றால், செயலை முடிப்பதில் கால தாமதம்  ஏற்படலாம். அலைச்சல், வீண் செலவு, குழப்பம் எல்லாம்  நிகழும்.

தொடங்கியபின் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கக் கூடாது.

"பின் எண்ணுவம் என்பது இழுக்கு"

சரி, ஒரு வேலையை நன்றாக திட்டமிட்டுத்தான் தொடங்கினோம். எதிர்பாராத  சிக்கல் வந்து விட்டது. இப்போது என்ன செய்வது? அந்த சிக்கலை விடுவிக்க மீண்டும் திட்டம் இட வேண்டாமா ?

ஆம், செயலை தொடங்கிய பின்னும் , பல புது பிரச்சனைகள் வரலாம். அவற்றை தீர்க்க மீண்டும் திட்டம் தீட்டத்தான் வேண்டும். வள்ளுவர், "துணிந்த பின்  எண்ணுவம் என்பது கூடாது " என்று சொல்லவில்லை.

"துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு" என்று சொன்னார்.

அது குறைதான். முதலிலேயே எண்ணி இருக்க வேண்டும். பின்னால் எண்ணுவது ஒரு  குறைதானே தவிர அதை அறவே செய்யக் கூடாது என்று சொல்லவில்லை.

"துணிந்த பின் எண்ணுவம் என்பது பிழை"

என்று சொல்லவில்லை. இழுக்கு என்று சொல்கிறார். இழுக்கு என்றால் அவ்வளவு சிறப்பானது அல்ல. இழிவானது.

ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஆழ்ந்த அர்த்தங்கள் உண்டு.

பொறுமையாக படித்தால் அந்த ஆழம் புலப்படும்.

ஒவ்வொரு குறளுக்குப் பின்னாலும் எவ்வளவு கொட்டிக் கிடக்கிறது!

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_5.html


1 comment: