Sunday, March 24, 2019

கம்ப இராமாயணம் - ஓர் இறுதி ஈட்டுவாள்

கம்ப இராமாயணம்  - ஓர் இறுதி ஈட்டுவாள் 




சூர்ப்பனகை வருகிறாள். எண்ணெய் கண்டிராத செம்பட்டை முடி. கொதிக்கும் உடம்பு. நல்லவர்கள் எல்லோருக்கும் ஒரு முடிவு கட்டும் குணம் கொண்டவள்.


பாடல்

செம் பராகம் படச் 
     செறிந்த கூந்தலாள், 
வெம்பு அராகம் தனி 
     விளைந்த மெய்யினாள், 
உம்பர் ஆனவர்க்கும், ஒண் 
     தவர்க்கும், ஓத நீர் 
இம்பர் ஆனவர்க்கும், ஓர் 
     இறுதி ஈட்டுவாள்,

பொருள்

செம் பராகம்  = செம்பு என்ற உலோகம் போல

படச் செறிந்த கூந்தலாள்,  = சிவந்த அடர்ந்த கூந்தலை கொண்டவள்

வெம்பு அராகம் = வெப்பம்

தனி  விளைந்த மெய்யினாள், =  தோன்றிய உடலை உடையவள்

உம்பர் ஆனவர்க்கும், = தேவர்களுக்கும்

ஒண் தவர்க்கும், = உயர்ந்த தவ சீலர்களுக்கும்

ஓத நீர் இம்பர் ஆனவர்க்கும், = கடல் சூழ்ந்த இந்த உலகில் உள்ளவர்களுக்கும்


ஓர் இறுதி ஈட்டுவாள்,= ஒரு முடிவு கட்டுவாள்

பெண் என்பவள் உயிரை உருவாக்குபவள். உயிரை காப்பவள். அதற்கு நேர் எதிர்மறையாக  சூர்பனகையை காட்டுகிறான் கம்பன்.உயிரை எடுப்பவளாக.

அவள் உடலில் காமம் மிகுந்து இருக்கிறது. எனவே, உடல் சூடாக இருக்கிறது.

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_24.html

Saturday, March 23, 2019

கம்ப இராமாயணம் - உடன் உறை நோய்

கம்ப இராமாயணம் - உடன் உறை நோய்


ஒரு மனிதனின் வாழ்வில் பெண்ணின் பங்கு பெரும் பங்கு.

இராமாயணத்தை எடுத்துக் கொண்டால், பெண்கள்தான் காப்பியத்தை நடத்திக்
கொண்டு செல்கிறார்கள்.

கூனி தொடங்கி, கைகேயி, சூர்ப்பனகை என்று காப்பியத்தின் போக்கையே
திசை திருப்பியது பெண்கள்தான்.

கொஞ்ச நேரம் வந்து போகும் சபரி கூட தன் பங்கிற்கு இராமனை சுக்ரீவனிடம்
மடை மாற்றி விட்டுப் போகிறாள். காப்பியத்தின் போக்கு மாறிப் போகிறது.

சூர்ப்பனகை, இராவணனின் தங்கை. காட்டில், இராமன், இலக்குவன்,
மற்றும் சீதை இருக்கும் இடம் தேடி வருகிறாள்.

சூர்பனகையை அறிமுகம் செய்கிறான் கம்பன்.

ஒவ்வொரு மனிதனும் இறுதியில் இறப்பதற்கு ஒரு நோய் காரணமாக
இருக்கும். மாரடைப்பு, இரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி என்று
ஏதோ இரு நோய் காரணமாக இருக்கும். அந்த நோய்கள் அவன்
பிறந்த போதே அவன் உடம்பில் இருக்கும். அவன் தளரும் போது
நோய்கள் வலிமை பெற்று அவனை வீழ்த்தும்.

ஆனால், இராவணனின் உடல் வலிமை மிகப் பெரியது. நோய் கூட
அவன் கிட்ட வர அஞ்சுமாம். பின் நோயே இல்லாவிட்டால் ஒருவன்
எப்படித்தான் முடிவை அடைவது?

நோய் எப்படி கூடவே பிறந்து ஒருவனை அழிக்குமோ, அது போல
இராவணனின் உடன் பிறந்தாள் சூர்ப்பனகை. பிறந்து அவனை அடியோடு
அழித்தாள். உடன் பிறந்தே கொல்லும் நோய் போன்றவள் என்றான் கம்பன்.

பாடல்


நீல மா மணி நிற
     நிருதர் வேந்தனை
மூல நாசம் பெற முடிக்கும்
     மொய்ம்பினாள்,
மேலைநாள் உயிரொடும்
     பிறந்து, தான் விளை
காலம் ஓர்ந்து, உடன் உறை கடிய
     நோய் அனாள்,


பொருள்

நீல மா மணி = நீல நிறம் கொண்ட பெரிய மணியைப் போல

நிற = நிறத்தைக் கொண்ட

நிருதர் வேந்தனை = இராவணனை

மூல நாசம் பெற முடிக்கும் = அடியோடு நாசம் செய்ய

மொய்ம்பினாள், = சூழ்ச்சியினால் அழிக்கும் ஆற்றல்  கொண்ட

மேலைநாள் = முன்பு

உயிரொடும் பிறந்து = உயிர் பிறக்கும் போதே உடன் பிறந்து

தான் விளை காலம் ஓர்ந்து, = தான் (நோய் ) விளையக் கூடிய காலம் எது
என்று அறிந்து


 உடன் உறை = கூடவே இருக்கும்

கடிய  = கொடுமையான, வலிமையான

நோய் அனாள், = நோய் போன்றவள்

இராவணன், நோயால் இறக்கவில்லை. உடன் பிறந்த சகோதரியால் இறந்தான்.

அப்படி, கதையாக அதை படித்து இரசித்து விட்டும் போகலாம்.

கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால் வாழ்க்கைக்கு தேவையான படிப்பினையும் கிடைக்கலாம்.

உடன் பிறந்தால் மட்டும், நெருங்கி இருந்தால் மட்டும் மற்றவர்கள் நமக்கு
நல்லது செய்வார்கள் என்று நினைக்க முடியாது.


கூடவே பிறந்து கொல்லும் நோயும் உண்டு. எங்கோ உள்ள மலையில் உள்ள மூலிகை நோய் தீர்த்து உடலுக்கு இன்பம் சேர்ப்பதும் உண்டு என்பாள் ஒளவை.



உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி-உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு.


நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள், உறவினர்கள் என்று யாரையும் பெரிதாக நினைக்க வேண்டாம். நமக்கு அறிமுகம் இல்லாதவர்கள், தெரியாதவர்கள் என்று  யாரையும் தள்ளவும் வேண்டாம்.

கூடவே இருந்தாலும், தீமை செய்பவர்களும் உண்டு. முன் பின் தெரியாதவர்களாக இருந்தாலும் நன்மை செய்பவர்களும் உண்டு.

ஏமாந்து போகக் கூடாது.


நன்மையும் தீமையும் எங்கிருந்து வரும் என்று தெரியாது.

அறிவை தீட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.



https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_23.html

Friday, March 22, 2019

கம்ப இராமாயணம் - உடன் உறை கடிய நோய்

கம்ப இராமாயணம் - உடன் உறை கடிய நோய் 


இராமாயணத்தில் கொஞ்சம் "அட" என்று நம்மை ஆச்சரியத்தோடு நிமிர்ந்து உட்கார வைக்கும் இடம் சூர்ப்பனகை படலம்.

இராமனின் முற்றிலுமாக ஒரு வித்தியாசமான முகத்தை இங்கு காண முடிகிறது.

இராமனா, இப்படி பேசினான் என்று நம்மை ஆச்சரியப் படவைக்கும் இடம்.

அவன் செய்கை நம் முகத்தில் புன்னகையை வரவழைக்கும்.

எங்கோ தூரத்தில் இருந்த அவனை, நம் அளவுக்கு கொண்டு வந்து காட்டும் இடம்.

கொஞ்சம் கிண்டல், நக்கல், நையாண்டி, சீண்டல் என்று இராமன் மானுடனாய், நம்மில் ஒருவனாய் காட்சி அளிக்கும் இடம் இது.

அவற்றை,இனி  வரும் நாட்களில் சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_99.html


திருக்குறள் - எண்ணியாங்கு எய்துப

திருக்குறள் - எண்ணியாங்கு எய்துப


ஆசைப்பட்டதெல்லாம் கிடைத்து விட்டால் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கும்.

அப்படி கிடைக்க என்ன வழி?

நாமும் தான் எவ்வளவோ ஆசைப்படுகிறோம். பணம், பொருள், செல்வம், புகழ், ஆரோக்கியம், அன்பு, நட்பு, உறவு என்று ஏதேதோ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். எங்கே கிடைக்கிறது?

வள்ளுவர் சொல்கிறார், "நீ ஆசைப்பட்டது எல்லாம் உனக்குக் கிடைக்க ஒரு வழி இருக்கிறது.  நீ எண்ணியதை , எண்ணியபடியே அடைவாய், நீ உறுதியானவனாய் இருந்தால் "

பாடல்


எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்


பொருள்

எண்ணிய = எண்ணியவற்றை

எண்ணியாங்கு = எண்ணியபடியே

எய்துப  = அடைவார்

எண்ணியார் = எண்ணியவர்கள்

திண்ணியர் = உறுதியானவர்களாய்

ஆகப் பெறின் = இருக்கப் பெற்றால்

சும்மா, இதெல்லாம் கதை. ஏதேதோ வேண்டும் என்று எவ்வளவு உறுதியாக ஆசைப் பட்டோம். எங்கே கிடைத்தது? வள்ளுவர் ஏதோ சும்மா சொல்லிவிட்டுப் போகிறார். இதெல்லாம் நடக்கிற காரியமா என்ற சந்தேகம் எழலாம்.

கொஞ்சம் விரித்துப் பார்ப்போம்.  வள்ளுவர் சொல்லுவது சரியா இல்லையா என்ற முடிவை, இறுதியில், உங்களிடமே விட்டு விடுகிறேன். என்ன சரியா ?


முதலாவது, வள்ளுவர் ஏன் தேவை இல்லாமல் ஒரு வார்த்தையை போடுகிறார்? 

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்

என்பதில் "எண்ணியாங்கு" என்ற வார்த்தை எதற்கு? 

எண்ணிய  எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்

என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே. எண்ணியவர்கள் உறுதி உள்ளவர்களாக இருந்தால், அவர்கள் எண்ணியது கிடைக்கும் என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே ? எதற்கு அந்த "எண்ணியாங்கு" என்ற வார்த்தை?

அதில்தான் இருக்கிறது இரகசியம்.

"எண்ணிய படியே" அடைவர்.

அப்படி என்றால் நம் எண்ணம் தெளிவாக இருக்க வேண்டும்.

உதாரணமாக, "நிறைய பணம் வேண்டும், பெரிய செல்வந்தனாக வேண்டும்" என்று நினைத்தால் நடக்காது. ஏன் ? நிறைய பணம், பெரிய செல்வந்தன் என்றால் என்ன ? எவ்வளவு பணம் இருந்தால் "நிறைய" பணம்?  ஒரு பத்து ரூபாய், நூறு ரூபாய், இலட்ச ரூபாய், கோடி ரூபாய்?

ஒரு வீடு, நாலு காரு, ஒரு தோட்டம், இவ்வளவு fxied டெபாசிட் என்று ஒரு தெளிவான எண்ணம் வேண்டும்.

"சிறந்த கல்விமானாக வேண்டும்" என்று நினைத்தால் நடக்காது. பட்டப் படிப்பு, உயர்நிலை, முனைவர் (doctorate ) என்று ஒரு தெளிவான குறிக்கோள் வேண்டும். 

"நல்ல பாடகனாக வேண்டும்" என்று நினைத்தால் போதாதது. கர்நாடக சங்கீதத்தில், இந்தியா அளவில் பல ஊர்களில் பாடி, இன்ன இன்ன பரிசில்களை பெற வேண்டும், இன்ன இன்ன பட்டங்களை பெற வேண்டும் என்ற  தெளிவான குறிக்கோள் வேண்டும். 

ஏன் அப்படி ஒரு குறிக்கோள் வேண்டும் என்று பின்னே சொல்லுகிறேன். 

முதலில் வரையறுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள். பொத்தாம் பொதுவாக சொல்லக் கூடாது. 

ஒரு காகிதத்தில் எழுதுங்கள். 

"என் கணவன்/மனைவி என்னிடம் அன்பாக இருக்க வேண்டும்" என்று நினைத்தால் போதாது. 

உங்களுக்கு வேண்டிய அன்பு என்றால் என்ன என்று தெளிவாக சொல்லுங்கள். 

"என் கணவன் என்னை மாதம் ஒரு முறை சினிமாவுக்கு கூட்டிப் போக வேண்டும், வருடத்துக்கு நாலு பட்டுச் சேலை வாங்கித் தர வேண்டும், வாரம் ஒரு நாள் சமயலில் இருந்து விடுதலை வேண்டும் ...." இப்படி ஒரு தெளிவான பட்டியலை போட்டுக் கொள்ளுங்கள்.  அன்பாய் இல்லை, அன்பாய் இல்லை என்று  அனத்தக் கூடாது. அன்பு என்றால் உங்கள் அகராதியில் என்ன என்று எழுதுங்கள். 

"பிள்ளை சரியாக படிக்க மாட்டேன் என்கிறான்" என்று சொன்னால், நீங்கள் வேண்டுவது என்ன என்பது தெளிவாக இல்லை. குறை சொல்லிக் கொண்டே இருந்தால்  அது தான் கிடைக்கும். கணவன்/மனைவி அன்பு செய்யவில்லை என்று குறை சொன்னால், நீங்கள் குறை சொல்லுவதியிலேயே குறியாக இருக்கிறீர்கள். உங்கள் மனம் எல்லாம் குறையை சுற்றியே வருகிறது. குறையே சொல்லிக் கொண்டு இருந்தால் அது தான் கிடைக்கும். மாறாக, "என் பிள்ளை வகுப்பில் முதலாவதாக வர வேண்டும் " என்று நினையுங்கள். 

நினைத்தால் நடந்து விடுமா ? சும்மா நினைத்தால் போதுமா ?

இல்லை, அடுத்தது சொல்லுகிறார் வள்ளுவர். 


"திண்ணியர் ஆகப் பெறின் "

அது என்ன திண்ணியர்? நிறைய தின்னச் சொல்லுகிறாரா ?

திண்ணியர் என்றால் உறுதியானவராக இருக்க வேண்டும்.

உறுதி என்றால் மன உறுதி, செயலில் உறுதி, உடலில் உறுதி. 

சும்மா கனவு கண்டுகொண்டு, சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கினால் எண்ணிய படி ஒன்றும்  நடக்காது.

எதை அடைய வேண்டுமோ, அதில் மன உறுதி வேண்டும். 

அதை செயல் படுத்துவதில், செயலில் உறுதி வேண்டும். 

செய்யும் உடலுக்கு உறுதி வேண்டும். 

சில பேர், உடல் எடை குறைய வேண்டும் என்று உடற் பயிற்சி தொடங்குவார்கள், உணவு கட்டுப்பாடு கொள்ள வேண்டும் நினைப்பார்கள். அப்படி  நினைத்த சில நாட்களில், ஏதாவது கல்யாணம், பிறந்த நாள் என்று ஒரு  விஷேசம் வரும். இனிப்பு, ஐஸ் கிரீம் என்று ஒரு கட்டு கட்டிவிடுவார்கள். மனதில் உறுதி  இல்லை.

இன்னும் சிலர் செயலில் இறங்குவார்கள். எதிர்ப்பு வரும், தோல்வி வரும்...இது நமக்கு  சரி வராது என்று விட்டு விடுவார்கள். விடா முயற்சி இல்லை. 

எந்த செயலுக்கும் கடின உழைப்பு வேண்டும். உழைக்காமல், வேலை செய்யாமல்  ஒன்றும் கிடைக்காது. அதைச் செய்ய சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும். அதற்கு உறுதியான உடல் வேண்டும். 

மனமும், உடலும், செயலும் உறுதியாகச் செயல்பட்டால், எண்ணியதை எண்ணியபடியே அடையலாம்.

"எண்ணியாங்கு" என்பதற்கு பின்னால் விளக்கம் சொல்லுகிறேன் என்று சொல்லி இருந்தேன்..

நம் எண்ணங்கள் மிக மக தெளிவாக இருந்தால் தான் திட்டம் இட முடியும். 

"என் மனைவி என் மேல் அன்பாக இருக்க வேண்டும்" என்று நினைத்தால் அதில் நாம்   செயல் பட ஒன்றும் இல்லை. 

மாறாக "என் மனைவி என் வேலைப் பளுவை புரிந்து கொள்ள வேண்டும்,  என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும், எனக்கு பிடித்த  பண்டங்கள் செய்து தர வேண்டும்,  எப்போது நை நை என்று அரிக்கக் கூடாது " என்று தெளிவான தேவைகள் இருந்தால் அதை செயல்படுத்த முடியும். 

அவளிடம் பேசலாம். வேலைப் பளுவை பற்றி விளக்கலாம். என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்று   விளக்கிச் சொல்லலாம். இவற்றை எல்லாம் அவள் செய்ய  வேண்டும் என்றால், அவளுக்கென்று சில தேவைகள் இருக்கும். அவள் அவற்றை உங்களிடம்  சொல்லலாம். பரஸ்பரம் , நீ இதைச் செய், நான் அதைச் செய்கிறேன்  என்று புரிந்து கொண்டு பகிர்ந்து வாழலாம். 

இப்படி எந்த ஒரு துறையிலும், எது தேவை என்று தெளிவாக வரையறுத்தால், அதை அடைய என்ன   செய்ய வேண்டும் அறிந்து கொண்டு செய்யலாம்.

இன்னொரு உதாரணம்.

எனக்கு 1000 கோடி ரூபாய் சொத்து வேண்டும் என்று நினைத்தால் அதையும் அடையலாம். 

இப்போது எவ்வளவு இருக்கிறது. 1000 கோடி ரூபாய் எப்போது வேண்டும். அப்படி என்றால்  இந்த இடைப்பட்ட நேரத்தில் வருடத்துக்கு எவ்வளவு சம்பாதிக்க வேண்டும். அப்படி யாராவது சம்பாதிக்கிறார்களா ? அவர்கள் எப்படி   அப்படி சம்பாதிக்கிறார்கள். நாம் அவ்வாறு சம்பாதிக்க என்ன செய்ய வேண்டும்   என்றெல்லாம் சிந்திக்கலாம். அப்போது, அந்த இலக்கை அடைய எவ்வளவு  உழைப்பு தேவைப் படும் என்று கணக்கு போடலாம். நம்மால்  அந்த அளவு உழைக்க முடியுமா என்று சிந்திக்க வேண்டும். முடியாது என்றால், 1000 கோடி என்பதை 100 கோடியாக்கி , அதன் பின் 300 கோடி, 500 கோடி, 1000 கோடி என்று படிப்படியாக முன்னேறலாம். 

பள்ளியில் முதலாவதாக வர வேண்டுமா, ஒரு நாளைக்கு 5 மணி நேரம் படிக்க வேண்டும். முடியுமா ? உறுதியாக (திண்ணியர்) செய்ய முடியுமா ? 

இலக்கு தெளிவானால், அதை அடையும் வழி தெரியும். வழி தெரிந்தால், பின் என்ன  நடக்க வேண்டியதுதானே. இன்றில்லாவிட்டால், நாளை இலக்கை அடைந்தே தீருவீர்கள்.

இப்போது சொல்லுங்கள், வள்ளுவர் சொன்னது சரிதானா என்று. 

(வாசகர்கள் மன்னிக்க. blog சற்று நீண்டு விட்டது)

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_22.html

Wednesday, March 20, 2019

குறுந்தொகை - செம்புலப் பெயனீர் போல

குறுந்தொகை - செம்புலப் பெயனீர் போல 


எங்கேயோ பிறந்து, வளர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்கிறார்கள். முன்ன பின்ன தெரியாது. காதலித்து திருமணம் செய்தாலும் அதே நிலை தான். என்ன திருமணத்துக்கு முன் சில காலம் காதலித்து இருக்கலாம். அதற்க்கு முன் அவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்ததே இல்லை.

இப்படி இந்த உறவு சாத்தியமாகிறது ?

கணவனுக்காக, மனைவி உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறாள். மனைவியை காப்பாற்ற கணவன் வாழ்நாள் எல்லாம் பாடு படுகிறான். எப்படி இது முடிகிறது?

திருமணம் ஆனவுடன் எங்கிருந்து இந்த அன்பும், கற்பும், அக்கறையும், கரிசனமும் வந்து விடுகிறது?

ஆச்சரியமாக இல்லை?

அவர்களுக்குள் காதல். ஒருவர் மேல் மற்றொருவர் உயிரையே வைத்து இருந்தனர். இருந்தாலும், அவன் அடிக்கடி வெளியூர் போக வேண்டிய நிர்பந்தம். அவளை விட்டு விட்டுப் போய் வருகிறான். அவன் பிரிவு ஒரு பக்கம். இன்னொரு பக்கம், ஒரு வேளை அவனுக்கு நம்மை பிடிக்கவில்லையோ, நம்மை மறந்து விடுவானோ, வேறு யார் மேலும் அவனுக்கு அன்பு இருக்கிறதோ என்ற பெண்மைக்கே உண்டான சந்தேகம் அவளுக்குள் எழுகிறது.

அவனிடம் கேட்டேவிட்டாள். "என் மேல் உனக்கு உண்மையிலேயே அன்பு இருக்கிறாதா? என்னை கை விட்டு விடுவாயா ? " என்று கேட்டாள்.

அவன் பதறிப் போனான்.

அவளுக்கு ஆறுதல் கூறுகிறான்

"உன் தாயும், என் தாயும் யாரோ எவரோ. உன் தந்தையும் என் தந்தையும் எந்த விதத்தில் உறவு? ஒரு உறவும் இல்லை. சரி அதாவது போகட்டும், நீயும் நானும் எந்த விதத்தில் ஒன்று பட்டவர்கள். ஒன்றும் இல்லை. இருந்தும் செம்மண் நிலத்தில் பெய்த மழை நீரும், அந்த செம்மண்ணும் எப்படி ஒன்றோடு ஒன்று கலந்து விடுகிறதோ அது போல கலந்து விட்டோம். இனிமேல் நமக்குள் பிரிவு என்பதே இல்லை "

பாடல்




யாயு ஞாயும் யாரா கியரோ 
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே. 


பொருள்


யாயு ஞாயும் = உன் தாயும், என் தாயும்

யாரா கியரோ  = யாரோ எவரோ

எந்தையு = என் தந்தையும்

நுந்தையு  = நுன் (=உன்) தந்தையும்

மெம்முறைக் = எந்த முறையில்

கேளிர் = உறவு ?

யானு = நானும்

நீயு = நீயும்

மெவ்வழி யறிதும் = எந்த வழியில் ஒன்று பட்டவர்கள் ? நான் அறிய மாட்டேன்

செம்புலப் = சிவந்த மண்ணில்

பெயனீர் = பெய்த நீர் (மழை)

போல = போல

அன்புடை  = அன்புள்ள

நெஞ்சந்  தாங் = நெஞ்சம் தான்

கலந் தனவே. = கலந்தனவே

கேள் என்றால் உறவினர்.

இராமயணத்தில், கங்கை ஆற்றை கடந்து செல்ல வேண்டும். இராமனும், இலக்குவனும், சீதையும் தயாராகி விட்டார்கள். குகனுக்கு அவர்களை விட்டு பிரிய மனம் இல்லை. "நானும் உங்களுடனேயே வருகிறேன்" என்று அடம் பிடிக்கிறான்.

அவனை சமாதனம் சொல்லி இருக்கப் பண்ணுகிறான் இராமன்.

"நீ இந்த கடற் கரைக்கு அரசன். நீ தான் இந்த குடி மக்களை பாதுக்காக வேண்டும். இந்த சீதை இருக்கிறாளே அவள் உன் உறவினள். நான் உன் அரசுக்கு கட்டுப் பட்டு இருக்கிறேன்.


அன்னவன் உரை கேளா,
    அமலனும் உரை நேர்வான்,
என் உயிர் அனையாய் நீ;
    இளவல் உன் இளையான்; இந்
நல் நுதலவள் நின் கேள்;
    நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது; நான் உன்
    தொழில் உரிமையின் உள்ளேன் 

"நல் நுதல் அவள் நின் கேள்"....அழகிய நெற்றியை உடைய சீதை உன் உறவினள் என்கிறான் இராமன். 

கேள் என்றால் உறவு.

மீண்டும் குறுந்தொகைக்குப் போவோம். 

"என்னை விட்டு பிரிந்து விடுவாயா " என்று கேட்ட அவளுக்கு அவன் சொன்ன பதில், நாம் ஒருவரோடு ஒருவர் கலந்து விட்டோம். இனி பிரிவென்பது ஏது என்பதுதான்.

பெண்ணின் ஏக்கம், பயம், சந்தேகம், காதல், கவலை என்று அனைத்தையும் ஒன்றாக கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் பாடல். அவள் சொல்வதாக ஒன்றுமே இல்லை இந்தப் பாடலில். இருந்தும், நீர் ததும்பும் அவள் விழிகளை, துடிக்கும் அவள் இதழ்களை, விம்மும் அவள் நெஞ்சை நாம் உணர முடிகிறது அல்லவா.

Tuesday, March 19, 2019

திருவானைக்கா அகிலாண்ட நாயகி - பித்தன் என்று ஒரு பெயர் பெற்றான்

திருவானைக்கா அகிலாண்ட நாயகி - பித்தன் என்று ஒரு பெயர் பெற்றான் 


நமக்கு யாரை எங்கே வைப்பது என்று தெரியவில்லை. முன் பின் தெரியாத பேருக்கு விழுந்து விழுந்து உதவி செய்வோம். கட்டிய கணவன் / மனைவிக்கு ஒன்றும் செய்ய மாட்டோம். அறிமுகம் இல்லாதவர்கள் செய்த சின்ன உதவிக்குக் கூட நன்றி செல்வோம். பெற்றோருக்கு, ஆசிரியருக்கு, உயிர் காத்த மருத்துவருக்கு எல்லாம் ஒன்றும் நன்றி சொல்ல மாட்டோம்.

இந்த சிக்கல் நமக்கு மட்டும் அல்ல. சிவபெருமானுக்கே இருந்திருக்கிறது.

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் , திருவானைக்கா அகிலாண்ட நாயகி மேல் பாடிய பாடல் ஒன்று.

"நாம் தண்ணீரில் விழுந்து விட்டால், நீச்சல் தெரியாவிட்டால், மூன்று முறை மேலே வருவோம், அதற்குள் எப்படியாவது கரை ஏற முடியவில்லை என்றால், மூழ்கிவிடுவோம். நீர் மூன்று முறை தான் பிழை பொறுக்கும் என்று சொல்லுவார்கள்.

ஒரு தாய் தன் பிள்ளை எத்தனை முறை தவறு செய்தாலும் பொறுப்பாள்.

அகிலாண்ட நாயகியே, அளவற்ற பிழைகள் பொறுக்கும் உன்னை உடம்பில் பாதியில் வைத்தான். மூன்றே பிழைகள் பொறுக்கும் கங்கையை தலையில் வைத்துக் கொண்டு ஆடுகிறான். அவனை பித்தன் என்று சொல்லியது ஒன்றும் பிழை இல்லை "

என்று பாடுகிறார்.

தேன் சிந்தும் அந்தப் பாடல்


பாடல்


அளவறு பிழைகள் பொறுத்திடும் நின்னை
அணிஉருப் பாதியில் வைத்துத்
தளர்பிழை மூன்றே பொறுப்பவள் தன்னைச்
சடைமுடி வைத்தனன்; அதனால்
பிளவியல் மதியம் சூடிய பெருமான்
‘பித்தன்’ என்று ஒரு பெயர் பெற்றான்!
களமர் மொய் கழனி சூழ் திரு ஆனைக்கா
அகிலாண்ட நாயகியே!

பொருள்

அளவறு = அளவற்ற

பிழைகள் = தவறுகளை

பொறுத்திடும் நின்னை = பொறுத்துக் கொள்ளும் உன்னை (உமா தேவி)

அணி = அழகிய

உருப் = உருவத்தில்

 பாதியில் வைத்துத் = பாதியில் வைத்து

தளர் பிழை = தளரும் பிழைகள்

மூன்றே பொறுப்பவள் தன்னைச் = மூன்று முறை மட்டும் பொறுப்பவளை

சடைமுடி வைத்தனன்;  = சடை முடியின் மேல் வைத்துக் கொள்கிறான்

அதனால் = அதனால்

பிளவியல் = பிளந்தது போல உள்ள

மதியம் சூடிய பெருமான் = நிலவை சூடிய பெருமான்

‘பித்தன்’ என்று ஒரு பெயர் பெற்றான்! = பித்தன் என்று ஒரு பெயரைப் பெற்றான்

களமர் = களத்தில் வாழ்பவர்கள் (விவசாயிகள்)

மொய் = மொய்க்கும்

கழனி சூழ் = கழனிகள் சூழ்ந்திருக்கும்

திரு ஆனைக்கா = திருவானைக்காவில் இருக்கும்

அகிலாண்ட நாயகியே! = அகிலாண்ட நாயகியே


பிழை பொறுப்பது என்பது நல்ல குணம். அகிலாண்ட நாயகி அளவற்ற பிழைகளை பொறுப்பாளாம்.

நாம், நமக்கு வேண்டியவர்கள் செய்த சிறு பிழையையாவது பொறுப்போமே.


https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_19.html

Wednesday, March 13, 2019

திருக்கோவையார் - நீ வைத்த அன்பினுக்கே

திருக்கோவையார்  - நீ வைத்த அன்பினுக்கே 



முதலிலேயே சொல்லி விடுகிறேன்...திருக்கோவையார் மாணிக்க வாசகர் அருளிச் செய்தது.

அவனுக்கு அவள் மேல் அப்படி ஒரு காதல். ஆனால் அதை அவளிடம் சொல்ல முடியவில்லை. ஏதேதோ காரணம். சாதி ஒரு காரணமாக இருக்கலாம். சமுதாய அந்தஸ்து ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது அவள் மிக மிக அழகாகவும், அவன் ரொம்ப சுமாராகவும் இருக்கலாம்.

இருந்தும், அவனால் அவள் மேல் கொண்ட காதலை விட முடியவில்லை.  சொல்லவும் முடியவில்லை. தொண்டையில் சிக்கிய முள்ளாக மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ஒரு சங்கடம்.

முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்டது போல என்று சொல்லுவார்களே அது போல. முடியாது என்று தெரிந்தும் ,ஆசை விடவில்லை.

தன் வேதனையை யாரிடம் சொல்லுவான்? தன் நெஞ்சிடம் சொல்லுகிறான்..."ஏய் நெஞ்சே, அவளை காதலித்தது நீ. அவளை விட்டு உன்னால் எப்படித்தான் பிரிந்து இருக்க முடிகிறதோ தெரியவில்லை. என்னால் முடியவில்லை. நீ வேணும்னா இந்த துக்கத்தை பொறுத்துக் கொண்டு இரு. என்னால் முடியாது...செத்து போயிருவேன் போல இருக்கு " என்று புலம்புகிறான்.

பாடல்

மாற்றே னெனவந்த காலனை
யோல மிடஅடர்த்த
கோற்றேன் குளிர்தில்லைக் கூத்தன்
கொடுங்குன்றின் நீள்குடுமி
மேற்றேன் விரும்பு முடவனைப்
போல மெலியுநெஞ்சே
ஆற்றே னரிய அரிவைக்கு
நீவைத்த அன்பினுக்கே. 

பொருள்


மாற்றே னென = மாற்றேன் என

வந்த காலனை = வந்த காலனை (எமனை)

யோல மிட  = ஓலம் இட (அலறிட)

அடர்த்த = சண்டை போட்ட

கோற்றேன் = கோ என் , என் தலைவன்

குளிர்தில்லைக் கூத்தன் = குளிர்ந்த தில்லையம்பதியில் ஆடும் கூத்தன்

கொடுங்குன்றின் = பெரிய மலையின்

நீள்குடுமி = நீண்ட உச்சியில்

மேற்றேன் = மேல் தேன் , மேலே உள்ள தேனை. மலை உச்சியில் உள்ள தேனை

விரும்பு முடவனைப் = விரும்பும் முடவனைப்

போல  = போல

மெலியுநெஞ்சே = வருந்தும் என் நெஞ்சே

ஆற்றே னரிய = ஆற்றேன், (பொறுத்துக் கொள்ள மாட்டேன்) அரிய (சிறந்த)

அரிவைக்கு = பெண்ணுக்கு

நீவைத்த அன்பினுக்கே = நீ வைத்த அன்பினுக்கே


" மாற்றேன் என வந்த காலனை "....முடிவு காலம் வந்து விட்டால், என்ன கதறி அழுது புரண்டாலும்   அதை மாற்ற மாட்டான் அந்த காலன் . காலம் முடிந்து விட்டால்  உயிரை கொண்டு போய் விடுவான்.

"மேல் தேன் விரும்பும் முடவனை "....முடவனுக்கு மலை உச்சியில் உள்ள தேன் மீது ஆசை.  கையும் இல்லை, காலும் இல்லை. எப்படி அடைவது. பார்த்து ஏங்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

ஆற்றேன் ...என்னால் பொறுக்க முடியவில்லை. நெஞ்சே என்னால் பொறுக்க முடியவில்லை. நீ வேண்டுமானால் பொறுத்துக் கொண்டிரு. என்னால் முடியாது  என்பது பொருள்.

"நீ வைத்த அன்பினுக்கே" ...அவள் மேல் நானா அன்பு வைத்தேன். நெஞ்சே, நீ தானே  அன்பு வைத்தாய்.

காதலின் வேதனையை வெளிப்படுத்தும் பாடல்.

திருக்கோவையார் ...மீண்டும் ஒரு முறை சொல்லுகிறேன்...எழுதியவர் மாணிக்க வாசக ஸ்வாமிகள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_13.html