Sunday, August 4, 2019

கம்ப இராமாயணம் - புலவியினும் வணங்காத

கம்ப இராமாயணம் - புலவியினும் வணங்காத 


கணவன் மனைவி உறவு என்பது சிக்கலானது. எதிர்பார்புகளும், ஏமாற்றங்களும், சலிப்புகளும், உரசல்களும் நிறைந்தது.

யார் சரி, யார் தவறு என்ற வாக்குவாதம் நிறைந்தது.

பெரும்பாலோனோர், வாக்குவாதம் என்று வரும்போது தாங்கள் அதில் வெற்றி பெற வேண்டும் என்று முனைந்து வாதாடுவார்கள். முடிவில் வெற்றியும் பெற்று விடுவார்கள். ஆனால், அதில் அவர்கள் இழப்பது தங்கள் துணையின் அன்பை, பாசத்தை, நேசத்தை. தோற்றவர் அதில் எளிதில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். தோல்வி வலி தரக் கூடியது. அந்த வலிக்கு அவர்கள் தேடும் மருந்து, தங்களை தோற்கடித்தவர்களை துன்பத்தில் ஆழ்த்த நினைப்பதுதான்.

"நான் சொன்னது தப்பு என்று சொன்னாய் அல்லவா, என் கூட பேசாதே" என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருக்கலாம்.

"...நான் இந்த வீட்டின் தலைவன், நான் செய்வதில் குறை சொன்னாய் அல்லவா, இரு, நான் யார் என்று காட்டுகிறேன்...இந்த வருடம் வெளி நாடு கூட்டிப் போவதாய் இருந்தேன், அதை cancel செய்து விடுகிறேன்...வலி என்றால் உனக்கும் அப்போதுதான் தெரியும்.."

இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் ஒரு மௌன போரில் ஈடுப் படுவார்கள்.

சரி, அதற்காக மற்றவர் சொல்வதை எல்லாம் அப்படியே கேட்டுக் கொண்டு அடிமை  மாதிரி இருக்க வேண்டுமா ? அதுக்கு வேற ஆளைப் பார்க்க வேண்டும் என்று   கோபம் கொள்ளலாம்.

இறுதியில் வாதத்தில் வென்று, உறவில் தோற்பதாகவே முடிகிறது வாழ்க்கை.

அப்ப என்னதான் வழி.

இப்படி செய் என்று சொன்னால், சொன்னவரோடு வம்புக்கு போவோம்.

எனவே, கம்பன் சொல்லாமல் ஒரு அறிவுரை சொல்கிறான்.

"இப்படி செய், அப்படி செய்யாதே என்று சொல்லாமல், அரக்கர்கள் இப்படி செய்வார்கள்" என்கிறான்.

சில சுவர்களில் எழுதி வைத்திருப்பார்கள் "முட்டாள்கள் இங்கே சிறு நீர் கழிப்பார்கள்" என்று.

கணவன், மனைவிக்கு இடையில் சச்சரவு வந்தால் யார் விட்டு கொடுக்க வேண்டும் ?

இராவணன், விட்டு கொடுக்க மாட்டான் என்கிறான் கம்பன்.

படுக்கை அறையிலும் தலை வணங்காதவன் அவன் என்கிறான் கம்பன்.

பாடல்

புலியின் அதள் உடையானும், பொன்னாடை
     புனைந்தானும், பூவினானும் 
நலியும் வலத்தார் அல்லர்; தேவரின் இங்கு 
     யாவர், இனி நாட்டல் ஆவார்? 
மெலியும் இடை, தடிக்கும் முலை, வேய் இளந் 
     தோள், சேயரிக் கண், வென்றி மாதர் 
வலிய நெடும் புலவியினும் வணங்காத 
     மகுட நிரை வயங்க மன்னோ.

பொருள்

புலியின் = புலியின்

அதள் = தோல்

உடையானும் = உடையவனுமான சிவனும்

பொன்னாடை = பொன் ஆடை

புனைந்தானும் = அணிந்தவனும், திருமாலும்

பூவினானும்  = தாமரை பூவில் இருக்கும் பிரமனும்

நலியும் = நலிவடையச் செய்யும்

வலத்தார் = வல்லமை பொருந்தியவர்

அல்லர் = அல்லர்

தேவரின்  = (அப்படி என்றால் மற்ற) தேவர்களில்

இங்கு = இங்கு

யாவர், = யார்

இனி நாட்டல் ஆவார்?  = இனி அதை நாட்ட (செய்ய) முடியும் ?

மெலியும் இடை = நாளும் மெலிந்து கொண்டே இருக்கும் இடை

தடிக்கும் முலை = அளவில் பெருத்த முலை

வேய் = மூங்கில்

இளந் = இளமையான

தோள், = தோள்கள்

சேயரிக் = சிவந்த வரி ஓடிய

கண் = கண்கள்

வென்றி மாதர்  = வெற்றி பெரும் பெண்கள்

வலிய = வலிமையான

நெடும் = நீண்ட

புலவியினும் = கலவியிலும்

வணங்காத  = வணங்காத

மகுட நிரை  = மகுடங்கள் நிறைந்த

வயங்க = ஒளிவீசும்

மன்னோ. = அசைச் சொற்கள்

படுக்கை அறையில், பெண்களிடம் கூட தலை வணங்காதவன் இராவணன் என்றால்  என்ன அர்த்தம்?

அவன் அரக்கன். தலை வணங்க மாட்டான். நீ அரக்கனா என்று நம்மை கேட்காமல் கேட்கிறான் கம்பன்.

நாம் அரக்கர்கள் இல்லை என்பதால், தனிமையில் பெண்ணிடம் வணங்கு என்று சொல்லாமல் சொல்கிறான்.

"பாகு கனி மொழி, மாது குற மகள் பாதம் வருடிய மணவாளா" என்பார் அருணகிரிநாதர்.

பெண், பெண்ணாக இருக்கும் வரை, ஆண் அவளிடம் வணங்குவதை பெருமையாக  கருதுவான்.

என்று பெண்கள், நாங்கள் பெண்கள் மாதிரி இல்லை, நாங்களும் ஆண்கள் மாதிரித்தான் என்று  ஆரம்பித்தார்களோ, ஆண்களும், இந்த வணங்குவதை விட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன்.

மல்லிகைப் பூ மென்மையாக இருக்கும் வரை, அதை தலையில் வைத்து கொண்டாடுவார்கள்.

நான் ஏன் மென்மையாக இருக்க வேண்டும், நானும் பாறை போல கடினமாக இருப்பேன்  என்று மல்லிகை நினைக்கத் தலைப்பட்டால், யாரும் அதை குறை கூற முடியாது...ஆனால், பாறை போன்ற ஒரு பூவை, யார் தலையில் வைத்து கொண்டாடுவார்கள். வீடு கட்டவும், ரோடு போடவும் வேண்டுமானால் அதை  பயன் படுத்திக் கொள்ளலாம்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

ஆண் பெண் உறவு சிக்கலானதுதான். அதில் ஒரு பகுதியை தொட்டு காட்டி விட்டுப் போகிறான் கம்பன்.

படிப்பதும், படிக்காமல் இருப்பதும் நம் விருப்பம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/08/blog-post.html

Tuesday, July 30, 2019

திருவருட்பா - தயவு செயல் வேண்டும்

திருவருட்பா - தயவு செயல் வேண்டும் 


நம்மால் என்ன செய்ய முடியும்.

தலை முடி நரைக்கிறது. அதை நிறுத்த முடியுமா? நம் தலை முடி, நம் கட்டுப்பாட்டில் இல்லை.

நேற்று படித்தது இன்று மறந்து விடுகிறது.

இதில் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், சில பல புத்தகங்களை படித்து, தினம் சில பாடல்களை மனப்பாடமாக கிளிப் பிள்ளை போல் ஒப்பித்து, கற்பூரம், ஊதுவத்தி கொளுத்தி இது போன்ற சடங்குகளை செய்து நேரே ஸ்வர்கம் போய் விடலாம் என்று.

நம்முடைய ஆணவம்தான் எவ்வளவு பெரிதாக இருக்கிறது.

நினைத்த நேரம் தூங்க முடிவதில்லை, ஆசைப் பட்டதை சாப்பிட முடியவில்லை, சாப்பிட்டதை எல்லாம்  செரிக்க முடிவதில்லை, நம் கணவனோ, மனைவியோ, பிள்ளையோ நாம் சொல்வதை கேட்பதில்லை, இருந்தும் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் நாம் பெரிய ஆள் என்று.

நாம் விரும்பியதை நம்மால் செய்ய முடியுமா ? நினைத்ததை பேச முடியுமா ? மனதில் பட்டதை சொல்லவாவது முடியுமா ?

நம்மிடம் ஒரு சுதந்திரமும் இல்லை.

வள்ளலார் சொல்கிறார், இறைவனிடம்

"என்னால் ஒரு துரும்பைக் கூட அசைத்து எடுக்க முடியாது. எனக்கு ஒரு சுதந்திரமும் இல்லை. இறைவா, நீ தான் பெரிய ஆள். தயவு செய்து எனக்கு உதவி செய். உன் அருள் இல்லாமல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது"

பாடல்

“என்னாலோர் துரும்பும் அசைத்தெடுக்க முடியாதே
எல்லாஞ் செய் வல்லவன் என்றெல்லாரும் புகழும்
நின்னால் இவ்வுலகிடை நான் வாழ்கின்றேன் அரசே
நின்னருள் பெற்றழியாத நிலையை அடைந்திடவென்
தன்னாலோர் சுதந்தரமும் இல்லை கண்டாய் நினது
சகல சுதந்திரத்தை யென்பால் தயவு செயல் வேண்டும்”

பொருள்

“என்னாலோர் = என்னால் ஒரு

துரும்பும் அசைத்தெடுக்க முடியாதே = ஒரு சிறிய துரும்பைக் கூட அசைத்து எடுக்க முடியாதே

எல்லாஞ் = எல்லாவற்றையும்

செய் வல்லவன் = செய்யத்தக்க வல்லவன்

என்றெல்லாரும் = என்று எல்லாரும்

புகழும் = புகழும்

நின்னால் = உன்னால்

இவ்வுலகிடை = இந்த உலகத்தில்

நான் வாழ்கின்றேன் அரசே = நான் வாழ்கின்றேன் அரசே

நின்னருள் = உன்னுடைய அருளை

பெற்றழியாத = பெற்று , அழியாத

நிலையை அடைந்திடவென் = நிலையை அடைந்திட என்

தன்னாலோர் = தன்னால் ஓர்

சுதந்தரமும் = சுதந்திரமும்

இல்லை = இல்லை

கண்டாய் = கண்டு கொள்வாய்

நினது = உன்

சகல சுதந்திரத்தை = அனைத்து சுதந்திரத்தையும்

யென்பால் = என் பால்

தயவு செயல் வேண்டும்” = தயவு செயல் வேண்டும்

அதாவது, வள்ளலார் சொல்கிறார், எனக்குத்தான் சுதந்திரம் எதுவும் இல்லை. உனக்குத்தான்  எல்லா சுதந்திரமும் இருக்கிறதே. எனக்கு உதவி செய்ய உனக்கு என்ன  தடை. யார் உன்னை என்ன சொல்ல முடியும். கவலைப் படாமல், தயவுசெய்து எனக்கு உதவி செய் என்கிறார்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பார் மணிவாசகர்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_30.html

Sunday, July 28, 2019

நள வெண்பா - எரிகின்ற தென்னோ இரா

நள வெண்பா - எரிகின்ற தென்னோ இரா


நடைமுறை வாழ்கை ஒரு நேரம் இல்லையென்றால் மற்றொரு நேரம் சலிப்பு தருவதாய் அமைந்து விடுகிறது. துன்பமும், குறையும், வருத்தமும் , வலியும் அவ்வப்போது வந்து போகாமால் இருக்காது.

அப்படி அலுப்பும், சலிப்பும் வரும்போது, இலக்கியத்துக்குள் புகுந்து விட வேண்டும்.

அது ஒரு தனி உலகம்.

எப்படி அந்த உலகத்துக்குள் போவது?

மனோ இரதம் என்று ஒன்று இருக்கிறது. அதில் ஏறினால் உடனே போய் விடலாம்.

"அட இப்படியும் கூட இருக்குமா" என்று ஆச்சரியப்பட வைக்கும்.

"அடடா , நமக்கு இப்படி தோன்றவில்லையே" என்று  நம் அறிவின் எல்லைகளை விரிவாக்கும்.

"ஹ்ம்ம்...எனக்கு எப்படி ஒரு எண்ணம் , உணர்ச்சி தோன்றி இருக்கிறது " என்று நம் வாழ்வை உரசி விட்டுச் செல்லும்.

பிரிவு.

காதலன்/காதலி பிரிவு. கணவன்/மனைவி பிரிவு, பெற்றோர் பிள்ளைகள் பிரிவு,  நண்பர்கள் பிரிவு ...என்று பிரிவு என்பது நம் வாழ்வின் நிகழும் அடிக்கடி நிகழும் சம்பவம்.

பிரிவு துன்பம் தரும்.

அதிலும் காதலன் காதலி பிரிவு ஒரு ஏக்கம், காமம், காதல், பாசம் என்று எல்லாம் கலந்து ரொம்பவும் படுத்தும் .

நளனை பிரிந்த தமயந்தி தனிமையில் வருந்துகிறாள்.

இரவுப் பொழுது. குளிர்ந்த நிலா. இருந்தும் அவளுக்கு அது சூடாக இருக்கிறது. காமம்.

"இந்த இரவு ஏன் இவ்வளவு சூடாக இருக்கிறது? ஒரு வேளை இந்த நிலவு சூரியனை விழுங்கி விட்டதா? அதனால் தான் இவ்வளவு சூடாக இருக்கிறதா? இல்லை, என் மார்பகத்தில் இருந்து எழுந்த சூட்டால் இந்த உலகம் இவ்வளவு சூடாகி விட்டதா? அல்லது இந்த நிலவின் கதிர் வெப்பத்தை பரப்புகிறதா ? ஒன்றும் தெரியவில்லையே " என்று பிரிவில் தவிக்கிறாள்.

பாடல்


வெங்கதிரோன் தன்னை விழுங்கிப் புழுங்கியோ
கொங்கை அனலில் கொளுந்தியோ - திங்கள்
விரிகின்ற வெண்ணிலவால் வேகின்ற தேயோ
எரிகின்ற தென்னோ இரா.

பொருள்


வெங்கதிரோன் = வெம்மையான கதிர்களை உடைய சூரியன்

தன்னை = அவனை

விழுங்கிப் புழுங்கியோ = விழுங்கியதால் இந்த இரவு இப்படி புழுங்குகிறதா ?

கொங்கை = என் மார்பகத்தின்

அனலில் = சூட்டில்

கொளுந்தியோ = கொளுத்தப்பட்டா ?

திங்கள் = நிலவு

விரிகின்ற = பரந்து

வெண்ணிலவால் = வெண்மையான இந்த நிலவால்

வேகின்ற தேயோ = வேகின்றதோ

எரிகின்ற தென்னோ இரா. = ஏன் இந்த  இரவு எரிகிறது

நாமும்தான் தினமும் இரவையும் பகலையும் பார்க்கிறோம்.

நமக்கு என்றாவது தோன்றியது உண்டா, இரவு சூரியனை விழுங்கி இருக்கும் என்று.

கற்பனை விரிய விரிய மனம் விரியும்.

மனம் விரியும் போது, வானம் வசப்படும்.

பலவித வேலைகளுக்கு நடுவில், நல்ல இலக்கியத்துக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.

அது உங்கள் மன வளர்சிக்கு வித்திடும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_43.html

திருக்கடை காப்பு - வேதியற்கு விளம்பாயே

திருக்கடை காப்பு - வேதியற்கு விளம்பாயே


சில பாடல்கள் ஏன் பிடித்திருக்கிறது என்று கேட்டால், எனக்குச் சொல்லத் தெரியாது. என்னவோ ஒன்று அந்தப் பாட்டில் இருக்கிறது. என்ன என்று சுட்டி கூற முடிவதில்லை.

என்னவோ பிடித்திருக்கிறது. அவ்வளவுதான்.

என் நண்பர்கள் கேப்டது உண்டு..."என்ன எப்பப் பார்த்தாலும் சாமி, பூதம் என்று அதையே திருப்பி திருப்பி எழுதிக் கொண்டிருக்கிறாய் ...மனித உணர்வுகள், உறவுகள், அதில் எழும் சிக்கல்கள் பற்றி நம் தமிழ் இலக்கியம் என்ன கூறுகிறது என்று எழுதக் கூடாதா " என்று.

அவர்கள் சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. இருந்தாலும், பக்திப் பாடல்களில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது.

அபிராமி அந்தாதி, நாலாயிர திவ்விய பிரபந்தம் படிக்கும் போது இப்பவும் மனம் நிறைந்து கண்ணில் நீர் தழும்புவது நிகழாமல் இல்லை.

தெளிந்த குளத்தில் சிறு கல் விழுந்தால், வட்ட வட்டமாக அலை பரவுவதைப் போல, சில பாடல்கள் படித்து முடித்து பல மணி நேரம் கழிந்தும் மனதுக்குள் அலை அடித்துக் கொண்டிருக்கும்.

அப்படிப் பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று.

திருஞான சம்பந்தர் பாடிய திருக்கடை காப்பில் உள்ளது இந்தப் பாடல்.

ஆன்மீகம், இறை உணர்வு, சமய உணர்வு, உண்மைத் தேடல், நான் என்று அறியும் வேட்கை இவற்றிற்கு நாமே தேடி விடை கண்டு கொள்ள முடியுமா? சிலரால் அது முடியுமாக இருக்கும். எல்லோராலும் அது முடியாத காரியம்.

பின் என்ன செய்வது?

கண்டு தெளிந்தவர்களை பிடித்து, அவர்கள் மூலம் தெரிந்து கொள்வது எளிய வழி.

ஞான சம்பந்தர் சொல்கிறார்


"குருகே (நீர் பறவை) , என் பசலை நோய் அவனுக்குத் தெரியாமல் போனது என் வினைப் பயனே. நீ போய் சொல்லு, இப்படி நான் அவன் நினைவாகவே இருக்கிறேன் என்று". என்று குருகை தூது விடுகிறார்.

இறைவன் இருக்கும் இடம் எனக்குத் தெரியாது. உனக்குத் (ஆச்சாரியனுக்கு) தெரியும். எனவே, எங்கள் இரண்டு பேரையும் சேர்த்து வைக்க மாட்டாயா என்று வேண்டுகிறார்.


பாடல்

எறிசுறவங் கழிக்கான லிளங்குருகே யென்பயலை
அறிவுறா தொழிவதுவு மருவினையேன் பயனன்றே
செறிசிறார் பதமோதுந் திருத்தோணி புரத்துறையும்
வெறிநிறார் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே.


பொருள்

எறிசுறவங்  = எதிரில் வரும் மற்ற கடல் வாழ் விலங்குகளை தூக்கி எறியும் சுறாமீன்

கழிக்கான லிளங்குருகே = இருக்கும் கடலுக்கு பக்கத்தில் உள்ள கானகத்தில் உள்ள இளம் குருகே

யென்பயலை = என் பசலை

அறிவுறா தொழிவதுவு மருவினையேன் = அறிவு உறாது ஒழிவதும்  அரு வினையேன்

பயனன்றே = பயனால் அன்றோ

செறிசிறார் = நெருங்கியசிறுவர்கள்

 பதமோதுந் = பதம் ஓதும் (வேத பதங்களை ஓதும்)

திருத்தோணி புரத்துறையும் = திருத் தோணி புரத்து உறையும்

வெறிநிறார் = சிறந்த நிறங்களைக் கொண்ட

மலர்க்கண்ணி = மலர்மாலையை அணிகலனாக அணிந்த

வேதியர்க்கு = வேதியற்கு, சிவனுக்கு

விளம்பாயே. =  சொல்வாயாக

ஒரு புறம் கலங்கும் கடல். அதில், கோபம் கொண்டு திரியும் சுறா மீன். மறுபக்கம் காடு. காட்டில், ஒரு குருகு. தூரத்தில், திருத்தோணிபுர கோவில்.

கண்மூடி கற்பனை பண்ணிப் பாருங்கள்.

பாட்டின் பல பரிணாமங்கள் தெரியும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_28.html



Thursday, July 25, 2019

குறுந்தொகை - குருகும் உண்டு

குறுந்தொகை - குருகும் உண்டு 



காதலில் பெண் மிக எச்சரியாகவே இருக்க வேண்டி இருக்கிறது. ஒரு இழை கோடு தாண்டினாலும், பெண் தான் அந்த பளுவை தூக்கிச் சுமக்க வேண்டி இருக்கிறது.

காதலும், ஊடலும், கூடலும் ஒரு அந்தரங்க அனுபவம். சாட்சிக்கு யாரையும் வைத்துக் கொண்டா காதலிக்கு முத்தம் கொடுக்க முடியும்?

ஆண் துண்டை உதறி தோளில் போட்டுகொண்டு கிளம்பி விடலாம். இயற்கை, பெண்ணுக்கு அதிகம் சுமையை தந்திருக்கிறது.


"கர்ப்பம் ஆனால் என்ன? வேண்டாம் என்றால் கலைத்து விட்டு போவது. இன்று மருத்துவம் எவ்வளவோ முன்னேறி விட்டது. கற்பு கத்திரிக்காய் எல்லாம் அந்தக் காலம்" என்று சொல்லுபவர்களும் இருக்கலாம். அவர்கள் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை.

அறிவியலும், மருத்துவமும் எவ்வளவு வேகமாக முன்னேறினாலும், பண்பாடு, கலாச்சாரம் என்பவை அவ்வளவு சீக்கிரம் மாறிவிடுவது இல்லை.

எது நமது பண்பாடு, கலாச்சாரம் என்றால் நம் இலக்கியங்களை புரட்டி பார்த்தால் தெரியும். எப்படி நம் முன்னவர்கள் வாழ்ந்தார்கள்? எது அவர்களுக்கு முக்கியம் என்று பட்டது? எதை முதன்மை படுத்தி அவர்கள் வாழ்ந்தார்கள்  என்று நாம் அறியலாம்.

இலக்கியம் ஒரு காலக் கண்ணாடி.

"அவள் எவ்வளவோ மறுத்தால். அவன் எங்கே கேட்கிறான். அவளை வற்புறுத்தி சம்மதிக்க வைத்துவிட்டான். காரியம் முடிந்த பின், இப்போது அவளை அவ்வளவாக அவன் கவனிப்பது இல்லை. அல்லது, அவளுக்கு அப்படி ஒரு பயம் வந்திருக்கிறது. யோசிக்கிறாள்.அன்று நடந்த அந்த கூடலுக்கு, சாட்சி யாரும் இல்லை. அவன் அப்படி எல்லாம் எங்களுக்குள் ஒன்றும் இல்லை என்று பொய் சொன்னால், நான் என்ன செய்ய முடியும்?

யாரும் இல்லை என்று சொல்ல முடியாது. அந்த ஓடைக்கு பக்கத்தில், செடிகளுக்கு பின்னால் ஒரு குருகு (பறவை) ஒன்று அங்கு நடந்ததை பார்த்துக் கொண்டிருந்தது"

என்று சொல்கிறாள் தலைவி.

எவ்வளவு வெகுளி (innocent)


பாடல்

“யாரும் இல்லை; தானே கள்வன்;
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே!”

பொருள்

“யாரும் இல்லை;  = யாரும் இல்லை

தானே கள்வன்; = அவன் தான் களவாணிப் பயல்

தான் அது பொய்ப்பின் = அவன் (அன்று அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று) பொய் சொன்னால்

யான் எவன் செய்கோ? = நான் என்ன செய்ய முடியும் ?

தினைத்தாள் அன்ன = திணையின் ஓலை போல

சிறுபசுங் கால = பசுமையான கால்களை கொண்ட

ஒழுகுநீர் = நீர் ஒழுகும்

ஆரல் = ஆரல் என்று ஒரு வகை மீனைப்

பார்க்கும் = பிடிக்க பார்த்து இருக்கும்

குருகும் உண்டு = குருகு (ஒரு வித நீர் பறவை). நாங்கள் மட்டும் தனித்து இருந்தோம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இல்லை, ஒரு குருகும்  இருந்தது. குருகு"ம்".

தான் மணந்த ஞான்றே!” = அவன் என்னை சேர்ந்த நாளில்

பாடலில் பல நுண்ணிய உணர்ச்சிகள் பொதிந்து கிடக்கிறது.

அவனுக்கோ, அவளைக் கூடுவதில் ஆசை, ஆர்வம், பதற்றம். வேறு ஒன்றைப் பற்றியும் கவலை இல்லை. ஆனால், அவளோ பயப் படுகிறாள். யாரவது  வந்து விடுவார்களோ,  பார்த்து விடுவார்களோ என்று சுத்தி முத்தும் பார்த்துக் கொண்டே இருக்கிறாள். அப்படி பார்க்கும் போது , செடி மறைவில் உள்ள குருகு அவள் கண்ணில் படுகிறது. "சீ, இந்த குருகு நம்மையே பார்க்கிறதே" என்று  நாணுகிறாள்.

அப்புறம் நினைக்கிறாள். குருகுக்கு என்ன தெரியும். அது நம்மை ஒன்றும் பார்க்கவில்லை,  அது ஆரல் மீனை பிடிக்க காத்திருக்கிறது. என்னை ஒன்றும் இந்தக் கோலத்தில் அது பார்க்கவில்லை என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொள்கிறாள்.


மேலும் அவள் மனதில் ஓடுகிறது, ஒருவேளை அந்த ஆரல் மீனின் கதிதானோ தனக்கும் என்று.

எல்லாம் முடிந்து விட்டது.

நாட்கள் கொஞ்சம் நகர்ந்து விட்டன.

"ஐயோ, அன்று நடந்ததற்கு ஒரு சாட்சியும் இல்லையே. அவன் மறுத்து விட்டால் நான்  என்ன செய்வேன்"

என்று ஒரு பெண்ணாக பரிதவிக்கிறாள்.  அவன் கள்வன், பொய் சொல்லிவிட்டால் நான் என்ன செய்வேன்  என்று மறுகுகிறாள்.

உதடு துடிக்க, சொல்லவும் முடியாமல், மனதுக்குள் வைத்துக்கொள்ளவும் முடியாமல், கண்ணில் நீர் தளும்ப "நான் என்ன செய்வேன்" என்று சொல்லி நிற்கும்  ஒரு இளம் பெண் நம் கண் முன்னே வருகிறது அல்லவா?

"பார்த்த சாட்சி யாரும் இல்லை, ஒரே ஒரு குருகுதான் இருந்தது அந்த இடத்தில்"  என்று சொல்லும் போது "ஐயோ, இந்த வெள்ளை மனம் கொண்ட பெண்ணை, அவன் கை விட்டு விடுவானோ" என்று நம் மனம் பதறுகிறது.

"கவலை படாதடா, அப்படி எல்லாம் ஒண்ணும் நடக்காது. அவன் வருவான்" என்று அடி வயிறு கலங்க அவளுக்கு ஆறுதல் சொல்லக் தோன்றுகிறது.

சம்மதிக்காவிட்டால், அவன் அன்பை இழக்க நேரிடலாம். அவனுக்கு கோபம் வரும். "என் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா...இவ்வளவுதானா உன் காதலின் வலிமை "  என்று அவன் அவளுடைய காதலை பந்தயம் வைக்கலாம்.

சம்மதித்து விட்டால், பின்னால் கை விட்டு விட்டால், எதிர் காலமே ஒரு கேள்விக் குறியாகிவிடும்.

பெண்ணுக்கு இரண்டு புறமும் சிக்கல்தான்.

பெண்ணின் நிலைமையை தெளிவாக படம் பிடிக்கும் அதே நேரத்தில் , மற்ற பெண்களுக்கும்   "எச்சரிக்கை ...இந்த நிலை உனக்கு வரலாம் " என்று பாடமும் சொல்கிறது இந்தப் பாடல்.

பாடலை ரசிப்போம். பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_25.html

Wednesday, July 24, 2019

தேவாரம் - மனம் எனும் தோணி பற்றி

தேவாரம் - மனம் எனும் தோணி பற்றி 


கோபம் மற்றும் காமம்.

இவை பற்றி நமது இலக்கியங்கள் மிக மிக ஆழமாக பேசி இருக்கின்றன.

கோபமும் காமமும் உயிர்க் குணங்கள் என்று சொல்கிறார்கள். ஏனென்றால் மற்றைய குணங்கள் வெளியில் இருந்து உள்ளே வந்து நம்மைத் தூண்டுபவை. காமமும், கோபமும் நமக்குள்ளேயே இருந்து உள்ளிருந்து வெளியே செல்வன என்கிறார்கள்.

இராமாயணத்தில், விஸ்வாமித்ரன் , தயரதனிடம் தன்னுடைய வேள்வியை காக்க இராம இலக்குவனர்களை துணையாக அனுப்பு என்று கேட்கிறான். வேள்வியை யாரிடம் இருந்து காக்க வேண்டும் என்று கேட்கிறான் தெரியுமா ?

"அடை காம வெகுளி என நிருதர் இடை விலக்காவண்ணம்"

வெகுளி என்றால் கோபம். காமம் மற்றும் வெகுளி என்ற அரக்கர்களிடம் இருந்து என் வேள்வியை காப்பாற்ற இராம இலக்குவனர்களை தா என்று வேண்டுகிறான்.

வேள்விக்கு இடையூறு செய்பவர்கள் ஏதோ கருப்பா, குண்டா, கோரை பற்களோடு வரும் அரக்கர்கள் அல்ல. அது எல்லாம் ஒரு உவமை. உண்மையான இடையூறு எது தெரியுமா , நமக்குள் இருக்கும் காமமும் கோபமும் தான்.

“தரு வனத்துள் யான் இயற்றும்
    தவ வேள்விக்கு இடையூறாத் தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம
    வெகுளி என நிருதர் இடை விலக்காவண்ணம்
செரு முகத்து காத்தி என நின்
    சிறுவர் நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி‘‘ என உயிர்
    இரக்கும் கொடுங் கூற்றின் உளையச் சொன்னான்



எனக்கு காமம் பற்றி புரிகிறது. கோபம் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக  புரிய ஆரம்பித்து இருக்கிறது.

கோபம் என்றால் ஏதோ கத்துவது, சாமான்களை தூக்கி எறிவது , சுடு சொல் கூறுவது , பிறர் மனம் புண் படும்படி பேசுவது என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தேன்.

கோபம் என்பது மிக ஆழமான ஒன்று என்று அறியத் தொடங்கி இருக்கிறேன்.

கோபம் பிறர் மேல் மட்டும் வருவது அல்ல. நம் மேலேயே நமக்கு கோபம் வரலாம்.

நான் அழகாக இல்லை, நிறைய படிக்கவில்லை, நிறைய சம்பாதிக்க வில்லை, பேரும் புகழும் சேர்க்கவில்லை , நான் எல்லாம் எதுக்கு இலாயக்கு என்று  நம் மேலேயே நமக்கு கோபம் வரலாம். அந்த கோபம் மன அழுத்தம் (anxiety  ), மன பதட்டம் (nevousness ),  மனச் சோர்வு (depression ) என்று கொண்டு விடலாம்.

இவை நமக்கு எளிதில் புரிவதில்லை.


திருநாவுக்கரசர் சொல்கிறார் ....

"நம் வாழ்க்கை என்பது நம் மனம் போன படி போகிறது. மனம் எங்கே இழுத்துக் கொண்டு போகிறதோ   நாம் அங்கெல்லாம் போகிறோம். சில சமயம்  மனம் செய்ய நினைப்பது தவறாக இருக்கலாம். அப்போது அதை அறிவு கொண்டு  சற்றே வழி மாற்றுகிறோம். அறிவு எவ்வளவுதான் திசை மாற்ற நினைத்தாலும், மனம் போன படி தான் வாழ்க்கை பெரும்பாலும் நகரும். மனம் என்ற தோனியைப் பற்றி, அறிவு என்ற துடுப்பைக் கொண்டு வாழ்க்கையை இந்த  சம்சார சாகரத்தில் செலுத்திக் கொண்டு இருக்கிறோம். அந்த தோணியில் என்ன சரக்கை ஏற்றுக் கொண்டு போகிறோம் தெரியுமா ? கோபம் என்ற சரக்கை ஏற்றிக் கொண்டு செல்கிறோம். அப்படி இந்த பிறவி என்ற பெரிய கடலில் நம் வாழ்க்கைப் படகு  செல்லும்போது , காமம் என்ற பெரிய பாறையில் அந்த படகு முட்டி தலை கீழாக  கவிழ்ந்து விடுகிறது. அந்த சமயத்தில், நடு கடலில், இருட்டில், எலும்பு  உறையும் குளிர்ந்த நீரில், உடைத்த படகோடு தத்தளிக்கும் போது, இறைவா, உன்னை நினைக்கும் உணர்வைத் தருவாய் , ஒற்றியூர் உடைய கோவே "


பாடல்




மனமெனும் தோணி பற்றி மதியெனுங் கோலை ஊன்றிச்
சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே.

பொருள்

மனமெனும் தோணி பற்றி  = மனம் என்ற படகைப் பற்றிக் கொண்டு

மதியெனுங் கோலை ஊன்றிச் = அறிவு என்ற துடுப்பை ஊன்றி

சினமெனும் சரக்கை யேற்றிச் = சினம் என்ற சரக்கை ஏற்றி கொண்டு

செறிகட லோடும் போது = அடர்ந்த கடலில் போகும் போது  (பிறவிப் பெருங்கடல்)

மனனெனும் பாறை தாக்கி  = மன்மதன், காமம் என்ற பாறை தாக்கி

மறியும்போது = தலைகீழாக கவிழும் போது

அறிய  வொண்ணா = அறிந்து கொள்ள முடியாத

துனையுனு முணர்வை நல்கா = உனை உன்னும் உணர்வை நல்காய்

யொற்றியூ ருடைய கோவே. = ஒற்றியூர் உடைய கோவே

இறைவன் அறிவுக்கு அப்பாற்பட்டவன்.

அவனை அறிய முடியாது. உணர முடியும்.

"அறிய முடியாத உன்னை, உணர்வைத் தருவாய்" என்று வேண்டுகிறார்.

"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் , செல்வர் சிவ புரம் " என்பார் மணிவாசகர்.

"உலகெல்லாம் உணர்ந்து, ஓதற்கு அறியவன் " என்பார் தெய்வப் புலவர் சேக்கிழார்.


நாம் அறிவைப் பற்றிக் கொண்டு, உணர்ச்சிகளை விட்டு விட்டோமோ என்று தோன்றுகிறது.

உணர்ச்சிகளை விட்டு வெகு தூரம் வந்து விட்டது போன்ற ஒரு உணர்வு தோன்றுகிறது.

எதையும், அறிவுக் கண் கொண்டு பார்க்கத் தோன்றுகிறது.

உணர்வுகளை கண்டு நாம் பயப்படுகிறோமோ என்று தோன்றுகிறது.

உளவியல் அறிஞர்கள் "emotional intelligence" பற்றி நிறைய பேசுகிறார்கள்.

நாவுக்கரசர் சொல்கிறார், அறிவின் துணையோடு செல்லும் போது காமம் என்ற  பாறையில் முட்டிக் கொள்கிறோம் என்று.

அறிவு ஏன் அந்த விபத்தை தடுக்கவில்லை?

அந்த சமயத்தில் கூட 'உனை அறியும் அறிவை நல்காய்" என்று அவர் கேட்கவில்லை.

"உனை உன்னும் உணர்வை நல்காய்" என்று வேண்டுகிறார்.

காமம் என்ற உணர்வால் தான், மனம் என்ற தோணி முட்டி உடைந்தது. பின் எதற்கு  "உனை உன்னும் உணர்வை நல்காய்" என்று மீண்டும் உணர்ச்சியை தா  என்று  கேட்கிறார்?

விளக்கம் கேட்கலாம் என்றால், அவர் இல்லை.

நாம் தான் தேடி கண்டு பிடிக்க வேண்டும் போல் இருக்கிறது.

தேவாரத்தில், ஒரு பாடலுக்குள் இவ்வளவு இருக்கும் என்றால், முழுவதிலும் எவ்வளவு இருக்கும்?

நேரம் கிடைக்கும் போது, மூல நூலை படித்துப் பாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_24.html

Monday, July 22, 2019

அபிராமி அந்தாதி - அறிந்தேன் எவரும் அறியா மறையை

அபிராமி அந்தாதி - அறிந்தேன் எவரும் அறியா மறையை 


நாம் எதையாவது சாதிக்க வேண்டும் என்றால் என்ன செய்வோம்?

அதை சாதித்தவர்களை கண்டு, அவர்களிடம் அறிவுரை பெறுவோம். அல்லது அவர்கள் என்ன செய்கிறார்கள் , எப்படி செய்கிறார்கள் என்று அறிந்து கொண்டு அது போல செய்ய முயற்சி செய்வோம்.

நமக்கு ஆயிரம் சந்தேகங்கள் இருக்கிறது. இந்த கடவுள், வேதம், சுவர்க்கம், நரகம், என்றெல்லாம் பல விஷயங்கள் மேல் சந்தேகம் இருக்கிறது.

யாரிடமாவது போய் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றால் யாரை நம்புவது, யாரை நம்பாமல் இருப்பது என்ற குழப்பம் வருகிறது

பட்டர் சொல்கிறார் ....

"நான் அறிந்து கொண்டேன். எதைத் தெரியுமா ? யாருமே அறிந்திராத மறைப் பொருளை. அறிந்த பின் என்ன செய்தேன் தெரியுமா ? அபிராமி உனது திருவடிகளை பற்றிக் கொண்டேன். அது மட்டும் அல்ல பயம் கொண்டு பிரிந்தேன். யாரைப் பிரிந்தேன் தெரியுமா ? உன்னுடைய அன்பர்களின் பெருமையை அறியாத, நரகத்தில் விழ இருக்கும் மனிதர்களை"

பாடல்


அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.


பொருள்

அறிந்தேன், = அறிந்து கொண்டேன். துணிவாகச் சொல்கிறார். எனக்குத் தெரியும். நான் அறிவேன் என்கிறார்.

எவரும் = வேறு யாரும்

அறியா மறையை = அறியாத மறை பொருளை

அறிந்துகொண்டு = அறிந்து கொண்டு

செறிந்தேன் = நெருங்கினேன்

நினது திருவடிக்கே = உனது திருவடிகளுக்கே

திருவே. = சிறந்தவளே

வெருவிப் = பயந்து

பிறிந்தேன் =  பிறிந்தேன்

நின் = உன்

அன்பர் = அன்பர்கள்

பெருமை எண்ணாத  = பெருமையை நினைக்காத

கரும நெஞ்சால் = கர்மம் செய்யும் நெஞ்சால்

மறிந்தே = தலைகீழாக

 விழும் = விழும்

நரகுக்கு  = நரகத்துக்கு

உறவாய = உறவான

மனிதரையே. = மனிதர்களையே


தீயவர்களைக் கண்டால் பயந்து ஓடி விட வேண்டும் என்கிறார்.

படித்தவர்தான், அறிவாளிதான், அம்பாளின் அருள் பெற்றவர்தான், இருந்தும், தீயவர்களைக் கண்டால் "வெருவிப் பிறிந்தேன்" என்கிறார்.

பயந்து விலகி விட வேண்டும்.

தீயவர்கள் என்றால் ஏதோ, பெரிய கடா மீசை வைத்துக் கொண்டு, கன்னத்தில் ஒரு வெட்டுத் தழும்போடு, கையில் துப்பாக்கி வைத்து இருப்பார்கள் என்று நினைக்கக் கூடாது.

நேரத்தை வீணே செலவழிப்பவர்கள், பொய் பேசி திரிபவர்கள், கோபம், காமம், ஆணவம் , பொறாமை போன்ற தீய குணங்கள் கொண்டவர்கள், வெட்டி அரட்டை பேசுபவர்கள் , ஒழுக்கம் தவறி நடப்பவர்கள் எல்லோருமே தீயவர்கள்தான்.

நல்லவர்களோடு சேர்ந்தேன்

தீயவர்களை விட்டு விலகினேன் என்கிறார்.

நல்லவர்களைத் தேடி கண்டு பிடித்து அவர்களோடு சேர்வது என்பது கடினமான காரியமாக  இருக்கலாம்.

தீயவர்களை விட்டு விலகி விடுவது அப்படி ஒன்றும் கடினமான காரியம் இல்லையே?

பட்டியல் போடுங்கள். உங்கள் வட்டத்தில் உள்ள தீயவர்களை. களை எடுங்கள்.




https://interestingtamilpoems.blogspot.com/2019/07/blog-post_31.html