Sunday, December 8, 2019

நன்னூல் - ஒரு புத்தகம் எப்படி இருக்க வேண்டும் ? - பாகம் 1

நன்னூல்  -  ஒரு புத்தகம் எப்படி இருக்க வேண்டும் ? - பாகம் 1

இப்போதெல்லாம் கோடிக் கணக்கில் புத்தகங்கள் வருகின்றன. நாள் இதழ், வார இதழ், மாத இதழ், நாவல்கள்,கவிதைகள், கட்டுரைகள், இலக்கியங்கள், அறிவியல், வரலாறு, விளையாட்டு, கணிதம், சமையல் என்று எல்லா துறைகளிலும் நூல்கள் வருகின்றன. 

எதைப் படிப்பது, எதை விடுவது? 

இருக்கும் நாட்களோ கொஞ்சம். அதில் ஆயிரம் வேலை இருக்கிறது. இதில், படிப்பதற்கு என்று உள்ள நேரம் மிக மிகக் குறைவு. அந்த நேரத்தில் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால், நாம் தேர்ந்து எடுக்கும் நூல்கள் சிறந்ததாக இருக்க வேண்டும் அல்லவா?

சிறந்த நூல் என்றால் என்ன? அதன் இலக்கணம் என்ன? எப்படி சிறந்த நூலை தேர்ந்து எடுப்பது?

ஒரு புத்தகத்தை எடுத்தால் இது நமக்கு உதவுமா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது? நாம் கண்டு பிடிக்க அந்த நூல் ஆசிரியர், அந்த நூலை பதிப்பித்தவர் எல்லாம் என்ன செய்ய வேண்டும்? 

இதை எல்லாம் யோசித்து அதற்கு முறை செய்து வைத்திருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக இல்லையா?

அது பற்றி சிந்திக்க இருக்கிறோம். 

நன்னூல் என்ற இலக்கண நூலில் இருக்கிறது.

படிக்கும் ஆர்வம் உண்டு என்றால், இந்த blog இந்த comment பகுதியில் "yes" அல்லது  "ஆமாம்" என்று  type செய்து "post it " பட்டனை அழுத்தவும்.

உங்கள் பேரைச் சொல்ல விருப்பம் இல்லை என்றால், you can post as Annonymous.

எத்தனை பேருக்கு தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கிறது என்று அறிந்து கொள்ளும் ஒரு சின்ன  முயற்சி இது. அவ்வளவுதான். 

Friday, December 6, 2019

திருக்குறள் - மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும்

திருக்குறள் - மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும்


சமீப காலத்தில் திருவள்ளுவர் பெரிய சர்ச்சைக்குரிய பொருளாக மாறி இருக்கிறார். இன்றைய அரசியல் வள்ளுவரையும் விடவில்லை.

வள்ளுவர் இந்துவா, இல்லை நாத்திகரா அல்லது பிற மதத்தைத் சார்தவரா என்பது விவாதத்தின் பொருள்.

இந்து என்றால், எந்தப் பிரிவைச் சேர்த்தவர் என்று அடுத்த பிரச்சனை வரும்.

அவரவர் தங்கள் பக்கத்துக்கு ஞாயம் சேர்க்க, திருக்குறளில் இருந்து ஓரிரு குறள்களை எடுத்து உதாரணம் சொல்கிறார்கள்.

அப்படி சொல்லப்படும் உதாரணங்களில், கீழே உள்ள குறளும் ஒன்று.

"மறந்தால் கூட பின், படித்துக் கொள்ளலலாம். ஆனால், பார்ப்பனர் தங்கள் ஒழுக்கத்தில் இருந்து தவறி விட்டால் பின் அதை சரி செய்ய முடியாது "

என்கிறார்.

பாடல்

மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்

பொருள்

மறப்பினும் = மறந்தால் கூட

ஒத்துக் கொளல்ஆகும் = மீண்டும் படித்துக் கொள்ளலாம். ஓதுதல் என்றால் மீண்டும் மீண்டும் படித்து, ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல் என்று பொருள். "ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்".

பார்ப்பான் = அந்தணர்

பிறப்பு ஒழுக்கம் = பிறவியில் வந்த ஒழுக்கம்

குன்றக் கெடும் = குறைந்தால், அது கெட்டுப் போகும்.

எது கெட்டுப் போகும் ? பிறப்பினால் வந்த பெருமை, ஒழுக்கம் குறைந்தால்  அந்தப் பெருமை  குன்றி விடும் என்கிறார்.

படித்த வேதத்தை மறந்தால் கூட, மீண்டும் படித்துக் கொள்ளலாம். அதன் மூலம் இழந்த கௌரவத்தை மீண்டும் பெற்று விடலாம்.  ஆனால், ஒழுக்கம் குறைந்தால், பின் அதை மீண்டும் பெறவே முடியாது என்ற அர்த்தத்தில் கூறி இருக்கிறார்.

ஆஹா, வள்ளுவரே பார்ப்பனர்களின் குடி பெருமையை பற்றி கூறிவிட்டார். எனவே, அவரும் ஒரு பார்ப்பனர்தான், அல்லது இந்துதான் என்று சிலர் கூறத்  தலைப்பட்டு   இருக்கிறார்கள்.

திருக்குறள் போன்ற உயர்ந்த நூல்களை படிக்கும் போது நாம் முதலில் ஒன்றை மிக மிக  தெளிவாக மனதில் கொள்ள வேண்டும்.

நாம் அந்த நூல்களின் தரத்திற்கு நம்மை முன்னேற்றிக் கொள்ள வேண்டுமே அல்லாது, அந்த நூல்களை நம் நிலைக்கு கீழே கொண்டு வர முயலக் கூடாது. 

வள்ளுவருக்கு மத, சாதி வர்ணம் பூசுவது, அந்த நூலை நம் நிலைக்கு கீழே கொண்டு வரும் முயற்சி.

செய்யலாம். அதனால் அந்த நூலுக்கோ, வள்ளுவருக்கோ ஒரு துன்பமும் இல்லை. நாம் தான், முன்னேறும் ஒரு வாய்ப்பை இழந்து நிற்போம்.

இரண்டாவது, குறள் , கீதை போன்ற நூல்களை நாம் படிக்கும் முறையே தவறு. குறளைப் படித்து, அதில் உள்ள கடின சொற்களுக்கு அகராதியில் அர்த்தம் கண்டு பிடித்து பொருள் கொள்வது சிறந்த முறை அல்ல.

சொல்லில் இருந்து பொருளுக்கு போகும் முறை சரி அல்ல.

பரிமேலழகர் போன்ற அறிஞர்கள் பொருளில் இருந்து சொல்லுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு குறளின் பொருள் தெரியும். அந்த பொருளுக்கு குறளின் சொற்கள் எப்படி பொருந்துகின்றன   என்று சொல்லுவார்கள்.

இந்த குறளுக்கு பரிமேலழலகர் உரை எழுதி இருக்கிறார்.

நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

"சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்"

என்று கூறுகிறார்.

அதாவது, ஒரு வர்ணத்துக்கு கூறினால் அது மற்ற வர்ணத்துக்கும் பொருந்தும்  என்று கொள்ளவேண்டும் என்கிறார்.


ஒழுக்கம் என்பது எல்லா வர்ணத்துக்கும் பொது. அந்தந்த வர்ணத்துக்கு ஒரு சிறப்பு அம்சம் இருக்கிறது. அதை மறந்து விட்டால் கூட பரவாயில்லை. எவரும், தங்களுக்கு விதித்த ஒழுக்கத்தை மறந்து விடக் கூடாது என்கிறார்.


மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும்  வைசியன்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்


மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் சத்ரியன்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்


என்று சொல்லிக் கொண்டே போக வேண்டும். ஒன்றைச் சொன்னால், மற்றவற்றை புரிந்து கொள்ள வேண்டும்  என்று பரிமேலழகர் உரை எழுதுகிறார்.

இதில், வள்ளுவர் அந்தணர்களை மட்டும்  கூறினார் என்று சொல்வதற்கு எங்கே இடம் இருக்கிறது?

நான் முன்பே கூறியது போல, பெரிய நூல்களை படித்து நாம் நம் தரத்தை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும்.  அதை விடுத்து அந்த நூலை, அந்த நூலை எழுதிய  ஆசிரியரை நம் நிலைக்கு கீழே கொண்டு வர முயலக் கூடாது.

வள்ளுவர் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.

அவர் என்ன சொன்னார் என்பதுதான் முக்கியம்.

அரசியல் பேசி, வள்ளுவரை இழந்து விட்டால், நட்டம் அவருக்கு அல்ல.

திருக்குறளை அறிய வேண்டும் என்றால், படிக்க வேண்டியது பரிமேலழகரை. உள்ளூர் பேச்சாளர்களை அல்ல.


https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_6.html


Wednesday, December 4, 2019

கவிதையின் இலக்கணம் - நன்னூல்

கவிதையின் இலக்கணம் - நன்னூல் 


கவிதை  என்றால் எப்படி இருக்க வேண்டும்? எது  கவிதை?

இன்று புதுக்கவிதை, மரபுக் கவிதை என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்கள். வார்த்தைகளை மடக்கிப் போட்டு, இது தான் கவிதை என்கிறார்கள்.

யாப்பு இலக்கணத்தில் அமைந்து விட்டால் மட்டும் கவிதை என்று சொல்ல முடியுமா?

நன்னூல் சொல்கிறது கவிதை எப்படி இருக்க வேண்டும் என்று.

"சில சொற்களில், பலவிதமான பொருள்களை, சிறப்பான ஒரு கண்ணாடியில், துல்லியமாக காட்டுவது போல திடமாக, நுட்பமாக சிறப்பாக சொல்வது கவிதை"

பாடல்

சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளைச்
செவ்வன் ஆடியிற் செறித்தினிது விளக்கித்
திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம்

பொருள்

சில்வகை எழுத்தில் = சில எழுத்துகளில் (சொல் கூட இல்லை, எழுத்தில்)

பல்வகைப் பொருளைச் = பல விதமான பொருளை

செவ்வன் = சிறப்பான

ஆடியிற் = கண்ணாடியில்

செறித்தினிது = நுணுக்கமாக அழகாக

விளக்கித் = விளக்கித்

திட்ப = திடமாக

நுட்பஞ் = நுட்பமாக

சிறந்தன = சிறந்த வழியில் சொல்வது

சூத்திரம் = சூத்திரம் அல்லது கவிதை


அது என்ன கண்ணாடி?

ஒரு பெரிய மரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை சற்று தூரத்தில் நின்று ஒரு சின்ன கண்ணாடியில் முழுவதும் பார்க்க முடியும். அந்தக் கண்ணாடி தெளிவாக இருந்தால், மரத்தின் அத்தனை நுணுக்கங்களையும் அதில் காண முடியும். கண்ணாடி என்னவோ சின்னதுதான். ஆனால், பெரிய மரத்தை அது தன்னுள் அடக்கிக் காட்டுகிறது.

சுருக்கி மட்டும் அல்ல, நுணுக்கங்களையும் தெளிவாக காட்டும்.

அது போல, கவிதை பெரிய விஷயங்களை சில சொற்களில் தெளிவாக சொல்ல வேண்டும்.

அது மட்டும் அல்ல, கவிதை எதைச் சொல்ல வருகிறதோ, அதை உறுதியாக சொல்ல வேண்டும் . குழப்பக் கூடாது.

நுட்பமாகச் சொல்ல வேண்டும். உணர்வுகளை, அறத்தை நுட்பமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

இவ்வளவும் இருந்தால் மட்டும் போதாது, கேட்கவும் இனிமையாக இருக்க வேண்டும்.

பொதுவாக, அது சிறப்பாக இருக்க வேண்டும்.

கவிதை என்றால் அப்படி இருக்க வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_4.html

Tuesday, December 3, 2019

திருக்குறள் - வாய்ச் சொல்

திருக்குறள் - வாய்ச் சொல்


எது சரி,  எது தவறு என்று நாம் குழம்பும் நேரம் வரும்.

"அவளுக்கு என்னதான் வேணும்னே தெரியல. என்ன செஞ்சாலும் ஏதாவது குத்தம் சொல்லிகிட்டே இருக்கா .."

"அவருக்கு என் மேல் அன்பே இல்ல...என்னமோ வாழ்க்கை ஓடுது...என்ன செய்றதுன்னே தெரியல ... "

"இந்த பிள்ளைகள் இப்படி நன்றி இல்லாமல், தவிக்க விட்டு விட்டு போய் விட்டார்களே "

இப்ப என்ன செய்வது என்ற குழப்பம் வரும் நேரங்கள் உண்டு. சிக்கலான சமயத்தில்  எப்படி முடிவு எடுப்பது? யாரைக் கேட்பது ? நமக்கு நாமே சிந்தித்துக் கொண்டிருந்தால் குழப்பம் மேலும் அதிகம் ஆகுமே அன்றி குறையாது.

சரி, யாரிடமாவது என்று யோசனை கேட்கலாம் என்றால், யாரைக் கேட்பது? யார் நமக்கு சரியான வழிக்காட்டுதலை தருவார்கள் என்று நினைப்போம்.

வாழ்வில் சிக்கல் வரும்போது யாரிடம் அறிவுரை கேட்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்லித் தருகிறார்.

நடந்து செல்லும் நிலம் வழுக்கினால், கையில் உள்ள ஊன்று கோல் எப்படி நமக்கு உதவி செய்யுமோ, அது போல ஒழுக்கமுடையார் வாய் சொல் இருக்கும் என்கிறார்.


பாடல்

இழுக்கல் உடையுழி ஊற்றுகோல் அற்றேஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்



பொருள்


இழுக்கல் = வழுக்கும் தன்மையுடைய நிலத்தில்

உடையுழி = செல்லும் போது

ஊற்றுகோல் = ஊன்று கோல் போல்

அற்றே = உள்ளது போன்றது

ஒழுக்கம் உடையார் = ஒழுக்கம் உடையவர்

வாய்ச் சொல் = வாயில் இருந்து பிறக்கும் சொற்கள்

"அறிவுடையவர் வாய் சொல்", "படித்தவர் வாய்ச் சொல் " என்று சொல்லவில்லை. ஒழுக்கம் உடையார் என்று சொல்லை தேர்ந்து எடுத்துப் போடுகிறார்  வள்ளுவர்.  படிப்பறிவு சில சமயம் குறுக்கு வழியில் கூட போகும். அதனால்தான் ஒழுக்கம் உடையவர் வாய்ச் சொல்லை கேட்க்கச் சொன்னார்.

யாரும் வேண்டும் என்றே வழுக்கும் இடத்துக்குப் போக மாட்டார்கள். போகிற இடத்தில்  தரை வழுக்கினால் என்ன செய்வது? எப்படி விறைப்பாக நின்றாலும் வழுக்கும், கீழே விழ நேரிடும். என்ன செய்வது? ஊன்று கோல் இருந்தால் கீழே விழுந்து அடி படாமல் தப்பித்துக் கொள்ளலாம். ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல் அப்படிப்பட்டது. நாம் தவறி விழுவதில் இருந்து நம்மை காக்க உதவும்.

"வாய்ச் சொல்" என்று ஏன் கூறுகிறார்? அவர்களிடம் இருந்து நேரே கேட்க வேண்டும். அவர் சொல்லி, மற்றவர் கேட்டு, அவர் இன்னொருவரிடம் சொல்லி  , இப்படி பல பேரை தாண்டி வந்தால் ஒழுக்கம் உடையவர் சொன்னது  கடைசியில் மாறிப் போய் இருக்கும்.

இன்று உள்ள பல சமயங்களைப் பார்த்தால் தெரியும். யாரோ,எப்போதோ சொன்னதை, அவர்களுடைய சீடர்கள் கேட்டு, அந்த சீடர்கள் அடுத்த தலைமுறை சீடர்களுக்குச் சொல்லி, பின் அவர்கள் மற்றவர்களிடம் சொல்லி , பலப் பல தலை முறைகள் கடந்து அவர்கள் சொன்னது இன்றைய தலைமுறையை வந்து அடைகிறது. முதலில் சொன்னது அப்படியே வந்து சேர்ந்து இருக்குமா?

"ஒழுக்கம் உடையார்". சொல்பவன் எப்படி இருந்தால் என்ன? என்ன சொல்கிறான் என்பது தானே முக்கியம் என்று கேட்கலாம். இல்லை, சொல்பவன் ஒழுக்கமாக  இருந்தால் தான் அவன் சொல்வதை கேட்க வேண்டும் என்கிறார்.  ஒழுக்கம் இல்லாதவன் சொல்வதை கேட்பது பலன் தராது  என்பது பொருள்.

நீங்கள் யார் பேச்சை கேட்கிறீர்கள் என்று ஆராய்ச்சி செய்யுங்கள். நீங்கள்  யார் பேச்சை கேட்கிறீர்களோ , அவர்கள் ஒழுக்கம் உள்ளவர்கள்தானா என்று உங்களுக்குத் தெரியுமா ?

சிந்தியுங்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post.html

Friday, November 29, 2019

திருக்குறள் - பல சொல்லக் காமுறுவர்

திருக்குறள் - பல சொல்லக் காமுறுவர் 


சிலருக்கு வள வள  என்று எதையாவது பேசிக் கொண்டே இருக்க வேண்டும். "எதுக்கு போன் பண்ணினே?" என்று கேட்டால் "ஒண்ணும் இல்லை, சும்மாதான் போன் பண்ணினேன்" என்பார்கள்.

சின்ன விஷயத்தைக் கூட பெரிதாக நீட்டி முழக்கி சொல்லுவார்கள். "என்ன ஆச்சு தெரியுமா நேத்து" என்று ஏதோ மூன்றாம் உலகம் யுத்தம் வந்தது போல கதை சொல்லுவார்கள். ஒன்றும் இருக்காது.

ஏன் அப்படிச் சொல்கிறார்கள்?

சிந்திக்காமல் பேசுவது. என்ன பேசப் போகிறோம், எப்படி பேசுவது. எப்படி சுருக்கமாக பேசுவது என்று சிந்தித்துப் பின் பேச வேண்டும்.

அப்படி சிந்தித்தாலே, பேச வேண்டிய அவசியமே இருக்காது. "இதில் என்ன இருக்கிறது போய் சொல்ல " என்று பேசாமல் இருந்து விடுவார்கள்.

வள்ளுவர் சொல்கிறார்,

"பெரிதாக நீட்டி பேச ஆசைப் படுவார்கள் யார் என்றால் எதையும் சுருக்கமாக சொல்லத் தெரியாதவர்கள்" என்று

பாடல்

பலசொல்லக் காமுறுவர் மன்றமாசு அற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்


பொருள்

பலசொல்லக் = பல சொற்களை சொல்ல

காமுறுவர் = ஆசைப் படுவார்கள்

மன்ற = உறுதியாக

மாசு அற்ற = குற்றம் அற்ற

சிலசொல்லல் =சில சொற்களை சொல்லத்

தேற்றா தவர் = தெரியாதவர்கள்



தேறாதவர் என்றால் தெரியாதவர் என்று அர்த்தம். அது என்ன "தேற்றாதவர்"?


மற்றவர்களுக்கு சொல்லி அவர்களை தெளிய வைக்க, அறிய வைக்க முடியாதவர்  என்று பொருள் கொள்ளலாம்.

சில சொற்கள் கூறுகிறேன் பேர்வழி என்று புரியாமல், தவறாக பேசவும் கூடாது.

அதனால் தான் "மாசு அற்ற" என்று கூறுகிறார்.

குற்றமற்ற சில சொற்களில் சொல்லி புரிய வைக்க முடியாதவர்கள் தான் பல சொல் பேச ஆசைப் படுவார்கள்.

அடுத்த முறை பேச ஆரம்பிக்கும் முன், யோசியுங்கள். எப்படி சொல்ல வந்ததை சுருக்கமாக அழகாக சொல்லலாம் என்று.

சொல் வன்மை என்ற அதிகாரத்தில் வரும் குறள் இது.

அதில் உள்ள மற்ற குறள்களையும் படித்துப் பாருங்கள். எப்படி பேச வேண்டும் என்று வள்ளுவர் சொல்லித் தருகிறார்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_29.html

Wednesday, November 27, 2019

பட்டினத்தார் பாடல்கள் - எது எப்படி போனால் என்ன ?

பட்டினத்தார் பாடல்கள் -  எது எப்படி போனால் என்ன ?



சிலர், இந்த உலகமே தங்களால் தான் சுழல்கிறது என்று நினைத்துக் கொண்டு செயல் படுவார்கள். இந்த வீடு, பிள்ளைகள், கணவன்/மனைவி, அலுவலகம், மகன்/மருமகள், மகள்/மருமகன் என்று எல்லாம் தன்னையே சார்ந்து இருப்பதாய் நினைத்துக் கொள்வார்கள்.

"நான் மட்டும் இல்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா" என்று நினைத்துக் கொண்டு எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்கள்.

பின், "என்ன செய்து என்ன பலன்...என் அருமை யாருக்குத் தெரியுது " என்று அலுத்துக் கொள்ளவும் செய்வார்கள்.

உண்மையில், அவர்களை நம்பி யாரும் இல்லை. எதுவும் இல்லை. அவர்கள் இல்லாவிட்டால் ஒன்றும் ஆகி விடாது. "ஆ..அப்படியெல்லாம் இல்லை...யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள் " என்று அவர்கள் குதிக்கலாம். என்ன சொன்னாலும், அவர்கள் இல்லை என்றால் ஒன்றும் நடந்து விடாது.

உலகம் மிகப் பெரியது. நம்மை நம்பி எதுவும் இல்லை. நமது தேவைகள் மிகக் குறைவு. என்னமோ நாம் தான் என்று பிரமித்து போக வேண்டாம்.

பட்டினத்தார், பெரிய பணக்காரர். அரசருக்கு கடன் கொடுக்கும் அளவுக்கு அவரிடம் பணம் இருந்தது. எத்தனை வேலைக் காரர்கள் இருந்திருப்பார்கள்? கொடுக்கல், வாங்கல், வரவு, செலவு, போட்டி, என்று எவ்வளவு இருந்திருக்கும் அவர் வாழ்வில்?

எல்லாவற்றையும் ஒரே நாளில் தூக்கி எறிந்து விட்டு, கட்டிய கோவணத்துடன்  இறங்கி விட்டார்.

நான் இந்த செல்வத்தைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும். அதை பாது காக்க வேண்டும்,  முதலீடு செய்ய வேண்டும், எவனாவது கொள்ளை அடித்துக் கொண்டு போய் விடுவானோ என்று பயப்பட வேண்டும்...இதுதான் எனக்கு வேலையா  என்று நடையை கட்டிவிட்டார்.

அவர் சொல்கிறார்,  நிலவின் பிறை வடக்கு பக்கம் உயர்ந்தால் என்ன, தெற்கு பக்கம் உயர்ந்தால் நமக்கு என்ன...என்று ஜாலியாக இருந்தார்.

அவர் சொல்வதைக் கேட்போம்....


பாடல்


உடைகோவணமுண்டுறங்கப்புறந்திண்ணையுண்டுணவிங்கடைகாயிலையுண்டருந்தத்தண்ணீருண்டருந்துணைக்கேவிடையேறுமீசர்திருநாமமுண்டிந்தமேதினியில்வடகோடுயர்ந்தென்னதென்கோடுசாய்ந்தென்னவான்பிறைக்கே.



பொருள்


உடைகோவணமுண்டு  = உடை, கோவணம் உண்டு

உறங்கப் புறந் திண்ணை யுண்டு = உறங்குவதற்கு யார் வீட்டு திண்ணையாவது இருக்கும்

உணவிங் = உணவு இங்கு

கடைகாயிலையுண் = கடைக் காய் இல்லை உண்டு

அருந்தத் தண்ணீருண்டு = அருந்த தண்ணீர் உண்டு

அருந்துணைக்கே = அருமையான துணைக்கு

விடையேறுமீசர்திருநாமமுண்டு = எருதின் மேல் ஏறும் ஈசர் திரு நாமம் உண்டு


இந்த மேதினியில் = இந்த உலகில்

வட கோடுயர்ந்தென்ன = வட கோடு உயர்ந்து என்ன ?

தென் கோடு சாய்ந்தென்ன = தென் கோடு சாய்ந்து என்ன ?

வான்பிறைக்கே. = வான் பிறைக்கே

அவரைப் போல் நம்மால் இருக்கிறதை எல்லாம் உதறிவிட்டு தெருவில் இறங்க முடியாது என்பது  வாஸ்தவம்தான்.

ஆனாலும், எல்லாம் நான் தான், என்னை வைத்துத்தான் எல்லாம் நடக்கிறது, நான்  இல்லாவிட்டால் இந்த உலகம் நின்று விடும் அல்லது என் குடும்பம் நின்று விடும்  என்று நினைப்பதை குறைக்கலாம்.

அந்த எண்ணம் வரும்போது மனம் லேசாகும். படபடப்பு குறையும். வாழ்க்கை  மென்மையாக இருக்கும். ஓட்டம் குறையும். நிதானம் வரும். அழுகை குறையும். ஆதங்கம் குறையும்.

மனம் உள்நோக்கித் திரும்பும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_30.html

நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஏடுநிலத்தில் இடுவதன்முன்னம்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஏடுநிலத்தில் இடுவதன்முன்னம்



இறைவன் ஒருவனே. அவன் தான் உலகைப் படைத்தான். காக்கிறான்...என்று ஏறக்குறைய எல்லா மதமும் சொல்கிறது. அனைத்து பக்தர்களும் ஏற்றுக் கொள்ளகிறார்கள். இருந்தாலும், அந்தக் கடவுள் யார் என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் வணங்கும் கடவுள் தான் அந்தக் கடவுள். நீ வணங்கும் கடவுள் உண்மையான கடவுள் அல்ல என்று.

கடவுள் ஒருவர் தான் என்றால் எப்படி பல கடவுள்கள் இருக்க முடியும். உன் கடவுள், என் கடவுள் என்ற பேதம் எப்படி வரும்?

மனிதனின் அகங்காரம். "நான்" வணங்கும் கடவுள்தான் உண்மையான கடவுள் என்பது மனிதனின் பயம் கலந்த அகங்காரம் அன்றி வேறு என்னவாக இருக்கும்.

உன் கடவுள், என் கடவுள், உன் ஆச்சாரம், என் ஆச்சாரம்,   ,ஜாதி, மதம், குலம் , கோத்திரம் என்று மனிதர்கள்  கடவுளின் பெயரால் வரம்பு கட்டிக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டு  இருக்கிறார்கள். சண்டை என்றால் கத்தி , துப்பாக்கி ஏந்தி இரத்தம் சிந்தி சண்டை போட வேண்டும் என்று இல்லை. வெறுப்பு, உயர்ந்தவன்/தாழ்ந்தவன் என்ற எண்ணம், துவேஷம்,  கோபம், இவையும் சண்டை போல் வன்முறையை சார்ந்தவைதான்.

நம்மாழ்வார் கூறுகிறார் ,

"இந்த உடல் நிலத்தில் விழுவதற்கு முன், உங்கள் வேற்றுமைகளை மறந்து எங்களோடு வந்து சேர்ந்து, நாடும் நகரமும் நன்றாக அறிய உரத்த குரலில் "நமோ நாராயணா"  கூறி அவனுக்கு  பல்லாண்டு கூறுங்கள் " என்று.


பாடல்


ஏடுநிலத்தில் இடுவதன்முன்னம் வந்து எங்கள் குழாம்புகுந்துகூடுமனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோநாடுநகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்றுபாடுமனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே.



பொருள்


ஏடு = இந்த உடல் (அல்லது எமன் ஓலை)

நிலத்தில் இடுவதன்முன்னம் = நிலத்தில் விழுவதன் முன்

வந்து = வந்து

எங்கள் = எங்கள்

குழாம்புகுந்து = எங்கள் குழுவில் சேர்ந்து

கூடுமனமுடையீர்கள் = கூடுகின்ற மனம் உள்ளவர்களே

வரம்பொழி வந் = வரம்பு ஒழிந்து வந்து

ஒல்லைக் கூடுமினோ = சீக்கிரமாக வாருங்கள்

நாடு = நாடும்

நகரமும் = நகரமும்

நன்கறி ய = நன்கு அறிய

நமோ நாராய ணாயவென்று = நமோ நாராயனா என்று

பாடு = பாடும்

மனமுடைப்  = மனம் உடைய

பத்தருள் ளீர் = பக்தர்களுக்குள்

வந்து பல்லாண்டு கூறுமினே. = வந்து பல்லாண்டு கூறுகள்

எல்லோரும் வாருங்கள். நமக்குள் ஒரு பேதமும் இல்லை.  நாம் மட்டும் இரகசியமாக வைத்துக் கொள்வோம். நாம் மட்டும் சுவர்க்கம் போவோம் மற்றவன் எப்படியும் போகட்டும் என்று இல்லாமல்,  "எல்லோரும் வாருங்கள்" என்று அழைக்கிறார்.

"சேர வாரும்  ஜெகத்தீரே " என்று தாயுமானவர் அழைத்தது போல.

ஜாதி மத வரம்புகளைத் தாண்டி, எல்லோரும் வாருங்கள்.

பிரபந்தம், தேவாரம் போன்ற பாடல்களுக்குக் கூட சாதி, சமய சாயம் பூசி  விலக்கி வைத்து  விடுகிறார்கள்.

யார் சொல்வதையும் கேட்காதீர்கள். நீங்களே படித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

இந்தப் பாடல்கள் உங்கள் மனதை விரிவடையச் செய்யும். குறுகிய வட்டத்தில் இருந்து வெளி வரச் செய்யும்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_27.html