Wednesday, March 18, 2020

திருக்குறள் - அறம் என்பதே இல்வாழ்க்கை தான்

திருக்குறள் - அறம் என்பதே இல்வாழ்க்கை தான் 


மொத்த வாழ்க்கையை இரண்டாக பிரித்துக் கொண்டார்கள் நம் முன்னவர்கள்.

ஒன்று இல்லறம், இன்னொன்று துறவறம்.

இல் + அறம்

துறவு + அறம்

எந்த வழியில் போனாலும் அறம் சார்ந்தே வாழ்க்கை இருக்க வேண்டும் என்பது விதி.

இந்த இரண்டில் எது சிறந்த அறம் ? எது உயர்ந்தது என்ற கேள்வி வரும் அல்லவா?

அறம் என்றாலே அது இல்லறம்தான் என்று அடித்துச் சொல்கிறார் வள்ளுவர்.

பாடல்

அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று

பொருள்


அறன் = அரம்

எனப் பட்டதே = என்று சொல்லப் பட்டதே

இல்வாழ்க்கை = இல் வாழ்க்கைதான்

அஃதும் = துறவறம்

பிறன் = மற்றவர்கள்

பழிப்பது = பழித்துச் சொல்லாமல்

இல்லாயின் நன்று = இல்லாமல் இருந்தால் நல்லது


"அறன் எனப் பட்டது இல் வாழ்க்கை" என்று சொல்லி இருக்கலாம் தானே?  ஏன்

"அறன் எனப் பட்டதே" என்று என்று சொன்னார் ?

பட்டது, பட்டதே ...என்ன வேறுபாடு?

பட்டதே என்ற சொல்லில்  வரும் ஏகாரம் பிரிநிலை ஏகாரம். பிரிநிலை என்றால் ஒன்றில் இருந்து மற்றொன்றை பிரித்துக் காட்டுவது.

சில உதாரணங்கள் பார்ப்போம்

அனைத்து மாணவர்களிலும்  அவனே சிறந்த மாணவன்

இதில் , அந்த ஒரு மாணவனை பிரித்து காட்டுகிறது.

இராமாயணத்தில் உள்ள பாத்திரங்களில் பரதனே சிறந்த பாத்திரம்.

பரதனை பிரித்துக் காட்டுவதால், இது பிரிநிலை ஏகாரம்.

ஓடுவதே சிறந்த உடற் பயிற்சி

அறம்  பல உண்டு. அதில் இருந்து இல்லறத்தை பிரித்துக் காட்டுகிறார். ஏன் என்றால்,  மற்ற அறங்களை பற்றி பின்னால் சொல்லப் போகிறார்.

என்ன சொல்கிறார்

"அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று"

இங்கே வரும் "அஃதும்" என்பது துறவறத்தை குறித்தது.

துறவறம் பழிப்புக்கு உள்ளாவது இயற்கை. ஏன் என்றால், புலன்களை அடக்கி  வாழ்வது என்பது கடினமான செயல். புலன்களை அனுபவிக்க விடாமல் அவற்றை கட்டுப் படுத்துவது என்பது இயற்கைக்கு மாறான செயல். அதை எளிதில் யாரும் நம்ப மாட்டார்கள்.

பெண் ஆசையை துறந்து விட்டேன் என்று ஒருவன் சொன்னால், அவனை யார்   நம்புவார்கள்? "நமக்குத் தெரியாமல் ஏதாவது செய்து கொண்டிருப்பான்" என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்யும். ஒரு சின்ன தவறு நிகழ்ந்தால் கூட, "நான் சந்தேகப் பட்டது சரியாகப் போய் விட்டது" என்று உலகம்  இகழ தலைப் படும். அப்படி கொஞ்சம் கூட பழி சொல் வரமால் இருந்தால் , துறவறமும் சிறந்ததுதான் என்கிறார்.

இல்வாழ்க்கை புலன் இன்பங்களை அனுபவிக்க அனுமதி தருகிறது.

அளவோடு, மென்மையாக, தேவையான அளவு அனுபவித்துக் கொள்ள வழி செய்கிறது. எனவே, இல்லறத்தில் இருப்பது என்பது ஒரு இயற்கையான செயல். இல்லறத்தின் வழியே எளிதாக செல்ல முடியும். துறவறம் கடக்க கடினமான பாதை.  பாதை தவறிவிட நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு.

எனவே, அறம் என்றாலே இல்லறம் தான் என்று சொல்கிறார் வள்ளுவர்.

அதுவே உயர்ந்த அறம்.

துறவி எல்லாம், இல்லறத்தானுக்கு ஒரு படி கீழே.  இல்லறத்தில் இருக்கும் நீங்கள்  துறவியைப் போய் பார்க்க வரிசையில் நிற்க வேண்டாம். துறவி என்றால் ஏதோ பெரிய ஆள்  என்று அவரை சென்று வணங்க வேண்டியது இல்லை. துறவறத்தை விட இல்லறம் சிறந்தது.

"அது என்ன அப்படி சொல்லி விட்டீர்கள்? அவர் பெரிய மகான். துறவி...சாமியார்...அவரை விட நான் எப்படி உயர்ந்தவனாக இருக்க முடியும்"

என்று நீங்கள் கேட்கலாம்.

வள்ளுவர் அதையும் விளக்குறார்.

நாளை?

https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_18.html

Tuesday, March 17, 2020

திருக்குறள் - ஆற்றின் ஒழுக்கி

திருக்குறள் -  ஆற்றின் ஒழுக்கி


தவம் செய்வது என்பது லேசான காரியம் இல்லை. வீடு, வாசல், மனைவி, மக்களை துறந்து மேலும் பசி, தாகம், வெயில், குளிர் இவற்றை எல்லாம் பொறுத்து தவம் செய்வது என்பது எளிதான காரியமா?

பிரம்மச்சரியம் என்பதும் எளிதான காரியம் இல்லை. உடம்பு படுத்தும். ஹார்மோன்கள் உந்தித் தள்ளும். அவற்றைக் கட்டுக்குள் வைத்து இருப்பது என்பதும் எளிதான காரியம் இல்லை.

இப்படி எல்லாம் தங்கள் வாழ்க்கை முறையில் கஷ்டப் படுபவர்களை விட, இல்லறத்தில் இருப்பவனின் வாழ்க்கை மேலானது என்கிறார் வள்ளுவர்.

வீட்டில் சந்தோஷமாக மனைவி, பிள்ளைகள், சுற்றம் என்று இருப்பது அப்படி என்ன கடினமான காரியமா ?

ஆம் என்கிறார் வள்ளுவர்.

பாடல்

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து

பொருள்

ஆற்றின் ஒழுக்கி = சரியான வழியில் செலுத்தப்பட்டு

அறனிழுக்கா = அறன் இழுக்கு இல்லா

இல்வாழ்க்கை = இல் வாழ்க்கை

நோற்பாரின் = தவம் மேற் கொள்வாரில்

நோன்மை உடைத்து = பெருமை உடைத்து

ஆற்றின் ஒழுக்கி = ஆறு என்றால் வழி. வழி என்றாலே நல்ல வழி தான். நல்ல வழியில்  சென்று. அல்லது செலுத்தப்பட்டு.



ஆற்றின் ஒழுகி என்று சொல்லி இருந்தால், அற வழியில் நடந்து என்று பொருள் கொள்ளலாம்.

ஒழுக்கி என்றால் செலுத்தி. அதாவது மற்றவர்கள் அற வழியில் செல்ல உதவி செய்து என்று அர்த்தம்.

இல்லற வாழ்க்கையில் இருந்து, அதை அற வழியில் நடத்தி, ஒரு குற்றமும் இல்லாமல்  செலுத்திக் கொண்டு போவது என்பது மற்ற அனைவரையும் விட சிறந்தது.

ஏன்?

ஒரு துறவி தனக்கு வரும் துன்பங்களை பொறுத்துக் கொள்கிறான்.

ஒரு பிரம்மச்சாரி தனக்கு வரும் துன்பங்களை பொறுத்துக் கொள்கிறான்.

ஆனால், இல்லறத்தில் இருப்பவனோ, இவர்களை துன்பத்தில் இருந்து காப்பது மட்டும் அல்ல,  தன் துன்பத்தையும், தன் உறவினர் துன்பத்தையும்  ஏற்று, அவற்றை போக்கும் வழி காண்கிறான்.

வீட்டுக்கு ஒரு துறவி வந்தால், அவன் பசியை போக்க வேண்டியது இல்லறத்தானின் கடமை.

அதே போல் விருந்து, உறவினர், என்று அனைவரின் துன்பத்தையும் ஏற்று அவற்றை களைவது  இல்லற தர்மம்.

அதுவும் அற வழியில் ஈட்டிய பொருளால் களைய வேண்டும்.

தான் அற வழியில் நின்றால் போதாது, மற்றவர்களும் அற வழியில் செல்ல உதவ வேண்டும்.

மனைவி, பிள்ளைகள், பெற்றோர், சுற்றம், நட்பு, விருந்து, துறவிகள், என்று எல்லோரின் பாரத்தையும் சுமக்க வேண்டியது  இல்லறத்தானின் கடமை.

'தனிக் குடித்தனம்' போய் தானும் தன்  மனைவி மக்கள் மட்டும் இன்பமாக இருப்போம் என்று நினைப்பது இல்லற தர்மம் இல்லை.

எவ்வளவு பெரிய சுமையை ஒரு இல்லறத்தானின் தலையில் வள்ளுவர் வைக்கிறார்.

நீ இதையெல்லாம் செய். இது உன் கடமை என்று சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு போய் விடவில்லை.

இதெல்லாம் செய்தால் என்ன கிடைக்கும் என்று பலன் சொல்கிறார்.

இவற்றை செய்ய யார் துணை செய்வார்கள் என்று வழி சொல்கிறார்.

அதையம் கேட்போமா?

https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_17.html

Friday, March 13, 2020

ஆத்திச் சூடி - பேச்சு

ஆத்திச் சூடி - பேச்சு 


மிக மிக கடினமான செயல் என்றால் அழகாக பேசுவதுதான். சரியாக பேசத் தெரியாமல், எவ்வளவு சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறோம்?

கணவன் - மனைவி
பெற்றோர் - பிள்ளைகள்
உயர் அதிகாரி - கீழே வேலை செய்பவர்கள்
உறவினர் கள் - நண்பர்கள்

என்று எங்கும் இனிமையாக பேசுவதால் உறவுகள் பலப்படும், வாழ்க்கை இனிமையாகும்.

ஆனால், எப்படி இனிமையாக பேசுவது?

அது பெரிய விஷயம். அங்கொன்றும் இங்கொன்றுமாக நமக்கு பல கருத்துகள் கிடைக்கின்றன.

ஒளவை சொல்கிறாள்

"வெட்டென பேசேல்"

அப்படினா என்ன?

மனைவி: ஏங்க , இன்னிக்கு சாயங்காலம் சினிமாவுக்குப் போகலாமா?

கணவன்: முடியாது.  மனுஷனுக்கு தலைக்கு மேல வேலை கிடக்கு, இதுல சினிமாவாம்  சினிமா...நல்ல நேரம் பாத்தியே சினிமா போக

இது வெட்டென பேசுவது.

மாறாக,

கணவன்: இன்னிக்கு கொஞ்சம் கஷ்ட்டமா இருக்கும்மா....நிறைய வேலை இருக்கு. நாளைக்கு போகலாமா? என்ன சொல்ற...

செய்தி ஒண்ணுதான், சொல்லுகிற விதம் வேற.

அதிகாரி:  இந்த வருஷம் கணக்கு முடிக்கும் போது , எப்படியாவது  10% இலாபம் வரணும்...இல்லைனா பங்குதார்களிடம் பதில் சொல்ல முடியாது...

கீழே வேலை செய்பவர்:  அது எப்படிங்க முடியும். முடியவே முடியாது. ஏற்கனவே ரொம்ப   நட்டத்தில் இருக்கு, இதுல 10% சதவீதம் இலாபமா...முடியவே முடியாது.

இது வெட்டென பேசுவது.

மாறாக

"10% சதவீதமா ? கொஞ்சம் கஷ்டம் தான்...இருந்தாலும் முயற்சி செஞ்சு பாக்குறேன்...ஒரு நாள் அவகாசம் கொடுங்க...பாத்துட்டு நாளைக்கு சொல்றேன்"

மறு நாள் வந்து

"நீங்க சொன்னதால ரொம்ப முயற்சி செஞ்சு பாத்தேன்...10% சதவீதம் வராது போல இருக்கு...அதிக பட்சம் 3% சதவீதம் வரலாம்...."

இப்படி மென்மையா எடுத்துச் சொன்னால் கேட்க இதமாக இருக்கும்.

முகத்தில் அடிப்பது மாதிரி பேசக் கூடாது.

முடியாது, நடக்காது, ஆகாது, என்று பேசக் கூடாது.

அதையே மென்மையாக பேசிப் பழக வேண்டும். மற்றவர் முகம் வாடும் படி  பேசக் கூடாது.

மரத்தில் கோடாலி போடுவது மாதிரி பேசக் கூடாது. பூ பறிப்பது போல மென்மையாக இருக்க வேண்டும் பேச்சு.

அழகாக பேச ஒளவை சொல்லும் வழி.

நல்லதுன்னு தெரிஞ்சா முயற்சி செஞ்சு பாக்காமலா இருக்கப் போறீங்க? கட்டாயம் பண்ணுவீங்க தான?



https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_13.html

Wednesday, March 11, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - 100 திவ்ய தேசம் - திருநீர் மலை

நாலாயிர திவ்ய பிரபந்தம் - 100 திவ்ய தேசம் - திருநீர் மலை 


இடமும் இலக்கியமும் பக்தியும் கலந்த ஒரு பிரமிப்பூட்டும் ஒரு இலக்கியம் நம் பக்தி இலக்கியம்.

ஒவ்வொரு இடத்திலும் ஒரு கோவில். அந்த கோவிலுக்குப் பின்னால் ஒரு கதை. அந்த ஊர்களுக்கு சென்ற சமய பெரியவர்கள். அவர்கள் அந்த ஊரையும், அந்த தலத்தில் உள்ள இறைவனையும் போற்றி பாடிய பக்திப் பாடல்கள்.

ஆச்சரியம் என்ன என்றால், அந்த ஊர்களும், அந்த கோவில்களும் இன்றும் அப்படியே இருக்கின்றன. இன்றும் அந்த ஊர்களுக்குப் போனால், அந்த கோவில், அந்த கதைகள், அந்த பாசுரங்கள் நம் முன்னால் நிழலாடுவதை நாம் உணர முடியும்..

பெருமாளை நின்ற கோலத்தில் சில திருத்தலங்களில் காணலாம்.

இருந்த கோலத்தில் சில தலங்களில்.

கிடந்த கோலத்தில் சில தலங்களில்.

நடந்த கோலம் கூட உண்டு.

ஆனால், நான்கு கோலத்திலும் இருக்கும் ஒரு தலம் உண்டு என்றால், அது திருநீர் மலை தான்.


திருநீர் மலை.

சென்னையில், பல்லாவரத்தில் இருந்து 5 கி மீ தொலைவில் உள்ளது. சிறிய கிராமம்.

அதற்கு ஏன் திருநீர் மலை என்று பெயர் வந்தது?

ஒரு முறை திருமங்கை ஆழ்வார், அந்த கோவிலில் உள்ள பெருமாளை தரிசனம் செய்ய வந்திருந்தார். பயங்கர மழை.  கோவில் இருப்பதோ மலை மேல். மலையைச் சுற்றி மழை.

நெருங்க முடியவில்லை. மழை நின்றால் நீர் வடியும். வடிந்த பின் பெருமாளை  தரிசனம் பண்ணலாம் என்று அங்கு தங்கி இருந்தார். மழை நின்றபாடில்லை.

இன்று நாளை என்று நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தன.

என்ன ஆனாலும் சரி, பெருமாளை தரிசனம் செய்யாமல் போவதில்லை என்ற முடிவோடு அங்கேயே தங்கி விட்டார் திருமங்கை.

ஆறு மாதம் ஆனது - மழை நின்று நீர் வடிய.

மழை நீர் சூழ்ந்த மலை என்பதால், திருநீர் மலை என்று அழைக்கப் பட்டது.


பாடல்

அன்றாயர் குலக்கொடி யோடனிமா
          மலர் மங்கை யொடன்பளாவி, அவுணர்க்
     கென்றானு மிரக்க மில்லாதவனுக்
          குறையு மிடமாவது, இரும்பொழில் சூழ்
     நன்றாய புனல் நறையூர் திருவா
          லிகுடந்தை தடந்திகழ் கோவல் நகர்
     நின்றானிருந்தான் கிடந்தான் நடந்தாற்
          கிடம் மாமலையாவது நீர்மலையே (1078)

பொருள்

அன்றாயர் = அன்று ஆயர்

குலக் கொடியோடு  = குலத்தில் பிறந்த கொடி போன்ற பெண்ணோடு

அணி மாமலர் மங்கையோடு  =  சிறந்த தாமரை மலரில் உள்ள திருமகளோடு

அன்பளாவி = அன்புடன் பேசி

அவுணர்க் கென்றானு மிரக்க மில்லாதவனுக் = அவுணர்க்கு ஒன்றானும் இரக்கம் இல்லாதவனுக்கு  (பக்தர்கள் மேல் இரக்கம். இராக்கதர்கள் மேல் இரக்கம் இல்லை)

குறையு மிடமாவது = உறையும் (இருக்கும்) இடம் எது என்றால்

இரும்பொழில் சூழ் = பெரிய சோலைகள் சூழ்ந்த

நன்றாய புனல் = நன்று ஆராய்ந்து செம்மையாக்கப்பட்ட தீர்த்தங்கள் உள்ள

 நறையூர் = நறையூர்

திருவாலி  = திருவாலி

குடந்தை = குடந்தை என்ற கும்பகோணம்

தடந்திகழ் கோவல் நகர்  = பெருமை கொண்ட கோவல் நகர்

நின்றானிருந்தான் கிடந்தான் நடந்தாற் = நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான்

கிடம் = இடம்

மாமலையாவது  = மாமலை ஆவது

நீர்மலையே  = திருநீர் மலையே

கொஞ்சம் சீர் சேர்க்க வேண்டும்.

நான்கு திருத்தலங்கள். - நறையூர், திருவாலி, குடந்தை, கோவல் நகர்

நான்கு கோலங்கள் - நின்றது, இருந்தது, கிடந்தது, நடந்தது

இப்போது ஒன்றோடு ஒன்றை பொருத்திப் பார்க்க வேண்டும்.

நின்றது, நறையூரில்
இருந்தது, திருவாலியிலே
கிடந்தது, குடந்தையிலே
நடந்தது, கோவல் நகரிலே

இந்த நான்கு கோலங்களிலும் இருப்பது திருநீர் மலையிலே.

இந்தா இருக்கு சென்னை. சென்னைக்குப் பக்கத்தில் பல்லாவரம். பல்லாவரத்தில்  ஒரு எட்டு எடுத்து வைத்தால் திருநீர் மலை.

நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் அருள் தரும் பெருமாளை ஒரு நடை போய் பார்த்துவிட்டு வாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/03/100.html



Monday, March 9, 2020

திருக்குறள் - இயல்பான இல்வாழ்க்கை

திருக்குறள் - இயல்பான இல்வாழ்க்கை 


புலன்கள் எதற்கு இருக்கின்றன? இன்பங்களை அனுபவிக்கத்தானே? இயற்கை அதற்க்காகத்தானே புலன்களை தந்து இருக்கிறது.

சுவையான உணவை இரசித்து உண்பது, இனிய இசையை கேட்பது, நல்ல நறுமணத்தை நுகர்வது, இயற்கையை, அழகை பார்த்து இரசிப்பது என்று இதற்கெல்லாம் தானே புலன்கள் இருக்கிறது.

அதை விட்டு விட்டு, சாப்பிடாதே, தூங்காதே, இசை கேட்காதே, பாட்டு பாடாதே என்று எப்பப் பார்த்தாலும் புலன்களை கட்டுப் படுத்து என்று கட்டளை போட்டுக் கொண்டே இருந்தால் வெறுப்பு வருமா வராதா?

"என்னய்யா இது, மனுஷனை சந்தோஷமா இருக்கவே விட மாட்டேன் என்கிறார்களே..." என்று ஒரு சலிப்பு வரும்.

வள்ளுவர் சொல்கிறார், "இல்வாழ்க்கையை அனுபவி. அந்த இல் வாழ்க்கைக்கு ஒத்த இயல்போடு அதை அனுபவி" என்கிறார்.  அப்படி செய்பவன், மற்ற அனைத்து முயற்சி செய்பவர்களை விட உயர்ந்தவன் என்கிறார்.



பாடல்


இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை

பொருள்


இயல்பினான்  = இயல்பாக

இல்வாழ்க்கை = குடும்ப வாழ்க்கை

வாழ்பவன் என்பான் = வாழ்பவன் என்பவன்

முயல்வாருள் = துறவறம் , வீடு பேறு போன்றவற்றிற்கு முயல்வாருள்

எல்லாம் தலை = தலையானவன் , முதன்மையானவன்

இயல்பினான் ...இயல்பாக இருக்க வேண்டும். இயற்கைக்கு புறம்பாக செல்லக் கூடாது. எவ்வளவு தேவையோ அவ்வளவுதான் இருக்க வேண்டும்.அது தான்  இயல்பு. மூக்கு முட்ட உண்பது, அளவுக்கு அதிகமாக தூங்குவது..என்பதெல்லாம் இயல்பான செயல் அல்ல. அனைத்து  இன்பங்களையும்  அப்படியே நினைத்துக் கொள்ளுங்கள். அற வழியில் செல்வது இயல்பான வாழ்க்கை.  அறம் அல்லாத வழியில் செல்வது (திருட்டு, கொள்ளை முதலியன)  இயல்பு அல்லாத வாழ்க்கை.

இல்லறத்தில் ஈடுபட்டு, ஒரு இன்பமயமான குடும்ப வாழ்க்கையை அனுபவிப்பவன்,  துறவி, சாது, சாமியார், போன்ற ஸ்வர்கம், வீடு பேறு போன்றவற்றை  அடைய "முயல்வாரை" விட உயர்ந்தவன்.

காரணம் என்ன?

புலன்களை அடக்குவது இயல்பான செயல் அல்ல.

மூக்கு எதற்கு இருக்கிறது? மூச்சு விட. நான் மூச்சு விட மாட்டேன், மூக்கை அடைத்துக் கொள்வேன் , மூச்சை அடக்கி, பிராணாயாமம் செய்து சுவர்க்கம் போகிறேன்  என்று முயல்பவரை விட, இல்லறத்தான் தலையானவன்.

அது மட்டும் அல்ல,

சுவர்க்கம் போகிறேன், வீடு பேறு அடையப் போகிறேன், இறைவனை அடையப் போகிறேன் என்று  எல்லோரும் ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த பந்தயத்தில் முதலாவது  வருபவன் இல் வாழ்வான்.

"எல்லாம் தலை" என்றார். எல்லாரையும் விட அவனே முந்தி நிற்பான்.

அப்ப , எந்த வழி சிறந்த வழி? இல்லறமா? துறவறமா?

வள்ளுவர், போட்டு குழப்புறாரே...பற்றை விடு என்கிறார், பற்றுக பற்றற்றான் பற்றினை என்கிறார்....அப்புறம் அனுபவி இராஜா அனுபவி னு பாட்டு பாடுறார்...கொஞ்சம் குழப்பமாக இல்லை?

இல்லை. ஒரு குழப்பமும் இல்லை.

எப்படி என்று பார்க்க, நீங்கள் தயாரா?

https://interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_9.html

Sunday, March 8, 2020

ஆத்திச் சூடி - முன்னேறும் வழி

ஆத்திச் சூடி - முன்னேறும் வழி

ஒவ்வொரு துறையிலும் நாம் முன்னேற முடியும். 

குடும்ப உறவில், உடல் ஆரோக்கியத்தில், செல்வம் சேர்ப்பதில், புகழ் அடைவதில், அறிவை பெருக்குவதில் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் நாம் அதில் பெரிய முன்னேற்றம் காண முடியும். 

இருந்தும், நாம் அப்படி ஒன்றும் பெரிதாக சாதித்த மாதிரி தெரியவில்லையே. 

ஏன்? 

நம்மிடம் போதுமான அறிவு இருக்கிறது. நம்மை விட அறிவு குறைந்தவர்கள் எல்லாம் எப்படியெல்லாமோ உயர்ந்து இருக்கிறார்கள். 

நல்ல உடல் வலிமை இருக்கிறது. கை , கால், கண், மூக்கு, மூளை எல்லாம் சரியாக செயல்படுகிறது. 

இருந்தும் ஏன் சாதிக்க முடியவில்லை?

காரணம், ஒரு வேலையை செய்வதால் வரும் துன்பத்தை சகித்து கொள்ள முடியாமல் அதை தொடங்குவது இல்லை அல்லது தொடங்கினால் முடிவு வரை தொடர்வது இல்லை. 

ஏதாவது சாக்கு போக்கு சொல்லி, தள்ளிப் போட்டு விடுவது அல்லது அது சரியா வரல , சரிப்படாது என்று கூறி தொடங்கியதை பாதியில் விட்டு விடுவது. 

படிப்பதாக இருக்கட்டும், உடற் பயிற்சியாக இருக்கட்டும்,  உணவு கட்டுப்பாடாக இருக்கட்டும், உடல் ஆரோக்கியமாக இருக்கட்டும், பணத்தை எதில் , எப்படி முதலீடு செய்வது என்று அறிந்து கொண்டு செயல்படுவதாக இருக்கட்டும்...எல்லாவற்றிலும் ஓரளவுக்கு மேல் அதை செய்வதால் வரும் துன்பத்தை  பொறுத்துக் கொள்ளாமல் விட்டு விடுகிறோம். 

சாதனை செய்தவர்கள் எல்லாம், அந்த வலியை , துன்பத்தை பொறுத்துக் கொண்டு மேலே  சென்றவர்கள். 

சாதிக்க வேண்டும் என்றால் உடல் உழைப்பு வேண்டும், தூக்கம் குறைக்க வேண்டும், சோம்பல் இருக்கக் கூடாது, தோல்வியை தாங்கும் பக்குவம் வேண்டும். 

"முடியல...கால் வலிக்குது, முதுகு வலிக்குது, கண் வலிக்குது," என்று விட்டு விட்டால், எங்கிருந்து சாதனை வரும். 

ஒளவை ரெண்டே வார்த்தையில் சொன்னாள் 


"துன்பத்திற் கிடங்கொடேல்"

துன்பம் வரும். அதுக்கு இருக்க இடம் கொடுக்கக் கூடாது. விரட்டி அடித்து விட வேண்டும். 

"சீ போ...இங்க வராத...வேற எங்காவது போ " என்று விரட்டி விட வேண்டும். 

கொஞ்சம் துன்பம் வந்தவுடன் 

"ஐயோ, முடியலையே, எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகுது. எடுத்தது எல்லாம் தடங்கல், ஒண்ணாவது போன உடனே நடக்குதா" என்று அலுத்துக் கொண்டு தொடங்கிய வேலையை விட்டு விடுவது.

துன்பம் வந்தால், அது என்னவோ அழையா விருந்தாளி மாதிரி வந்துட்டுப் போகட்டும் நாம் நம்  வேலையை பார்ப்போம் என்று முயற்சியை கை விட்டு விடக் கூடாது. 


தடங்கல் வரும், தோல்வி வரும், காலம் இழுக்கும், பண விரயம் ஆகும், உடல் சோர்வு வரும், மனச் சோர்வு வரும். 

இவற்றால் வரும் துன்பத்துக்கு இடம் கொடுக்கக் கூடாது. 

தொடங்கிய வேலையை செய்து கொண்டே இருக்க வேண்டும். குறிக்கோளை எட்டும் வரை. 

துன்பத்தைக் கொண்டு துவண்டு விடக் கூடாது.  துன்பத்தை சகிக்க படிக்க வேண்டும். அதை உதாசீனப் படுத்த பழக வேண்டும். 

"ஏய் துன்பமே, இதுக்கெல்லாம் அசர்ற ஆள் நான் இல்லை"  என்று அதைப் பார்த்து கை ஆட்டி விட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும். 

"துன்பத்திற்கு இடம் கொடேல்"

இடம் கொடுப்பீர்களா?


Saturday, March 7, 2020

திருக்குறள் - பெறுவது என்?

திருக்குறள்  - பெறுவது என்?


இந்த தமிழ் இலக்கியம் எப்பப் பார்த்தாலும் ஏதாவது அறிவுரை சொல்லும், இல்லை என்றால் பக்தி, கடவுள், வீடு பேறு , அறம் என்று பஜனை மடம் போல இருக்கும் என்ற நினைப்பு பலருக்கு வரலாம்.

எப்பப்பாரு, இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, பெண்களை கண்டபடி ஏசுவது, இல்லைனா இறைவா நீ அப்படிப்பட்டவன், இப்படிப்பட்டவன், உனக்குத் தெரியாதா, என்னை காப்பாற்று என்று ஓலம் இடுவது. இதுதான் வாழ்க்கையா.

வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா. எவ்வளவு இன்பம் இருக்கிறது. எல்லாவற்றையும் விட்டு விட்டு சாமியாரா போ, காட்டுக்குப் போ, கோயில் குளம் னு திரினு சொன்னா யார் கேட்பா என்று ஒரு எண்ணம் வரலாம்.

அவர்கள், தமிழ் இலக்கியத்தை முழுமையாக படிக்காதவர்கள்.

வள்ளுவர் சொல்கிறார்.

கல்யாணம் பண்ணிக் கொள். மனைவி கூட சந்தோஷமா இரு. பிள்ளைகளை பெற்றுக் கொள். குடும்ப வாழ்வில், அன்பு திகட்ட திகட்ட அனுபவி. தப்பு தண்டா செய்யாதே. உனக்கு கிடைத்ததை பகுத்து உண்டு வாழ்.

அப்படி எல்லாம் வாழ்ந்தால், இந்த துறவறம், சாமியாரா போவது, காட்டுக்குப் போவது, எல்லாம் எதுக்கு? தேவையே இல்லை. இதுதான் சுவர்க்கம். இதுதான் வீடு பேறு . இதுதான் ஆனந்தம். அனுபவி என்கிறார்.

பாடல்

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவது எவன்?

பொருள்


அறத்தாற்றின் = அறத்து + ஆற்றின் என்று இரண்டா பிரிச்சுக்கணும். அறத்தின் வழியில். ஆறு என்றால் வழி.

இல்வாழ்க்கை ஆற்றின்  = இல்வாழ்க்கை சென்றால், நடத்தினால்

புறத்தாற்றில் = புற வழிகளில். அதாவது இல்லறம் அல்லாத புற வழிகளில்

போஒய்ப் = சென்று

பெறுவது எவன்? = பெறுவது என்ன? (ஒன்றும் இல்லை)



இல்வாழ்க்கை இனிமையாக அமைந்து விட்டால், வீடு பேறு ,சுவர்க்கம், வானுலகம்  எல்லாம் தானே வரும். இதுக்காக தனியா முயற்சி எல்லாம் செய்ய வேண்டாம்  என்கிறார்.  இல்லறமே போதும் என்கிறார்.

இல்லறம் என்று அவர் சொல்வது முன் சொன்ன 6 குறள்கள்.

11 கடமைகள். அன்பும் அறனும் நிறைத்த குடும்ப வாழ்க்கை. பகுத்துண்டு வாழும் வாழ்க்கை.

இங்கே ஒரு முக்கியமான ஒன்றைச் சொல்ல வேண்டும்.

பொதுவாக நாம் திருக்குறள் படிக்கும் போது , ஒவ்வொரு குறளும் தனியானது என்று  அவற்றை தனித்தனியே படிக்கிறோம்.

அது தவறு.

ஒவ்வொரு அதிகாரமும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு கொண்டவை. ஒரு அதிகாரத்தில் , ஒவ்வொரு குறளும் தொடர்பு கொண்டவை.

இந்தக் குறளில் சொல்லப்பட்ட "அறத்தாற்றின் இல் வாழ்க்கை" என்பது முந்தைய 6 குறளிலும் சொல்லப்பட்டவை. அவற்றை ஒரு முறை மீண்டும் படித்து விடுங்கள்.

இன்னும் வர இருக்கின்ற குறள்களும், இவற்றோடு தொடர்பு கொண்டவை.

தனித்தனியே படிக்கக் கூடாது.

திருக்குறள் வாழ்க்கையை சொல்லிக் கொண்டு வருகிறது. அது எப்படி தனியாக இருக்க முடியும்.

சரியா ?

மீண்டும் குறளுக்கு வருவோம்.

அப்படி என்றால், இந்த சாமியாராகப் போனவர்கள், துறவிகள் எல்லாம் செய்வது தவறா?

இல்லறம் நன்றாக இருந்தால், வேற வழி ஒன்றும் வேண்டாம் என்கிறார். அப்படி என்றால்,  வேற வழியில் போனவர்கள் யாராக இருக்கும் என்பதை நம்  சிந்தனைக்கு விட்டு விடுகிறார்.

இல்வாழ்க்கை இனிமையாக இருந்தால், இந்த  கோவிலுக்குப் போவது, கிரி வலம் வருவது, மொட்டை அடிப்பது, பாத யாத்திரை போவது, அர்ச்சனை செய்வது, அபிஷேகம் செய்வது, பாராயணம் செய்வது என்பது எல்லாம் தேவையே இல்லை.

"எவன் செய்யும்?" என்று கேட்கிறார்.

அதெலாம் யார் செய்வா? எதற்காக செய்ய வேண்டும் என்று கேட்கிறார்.

உன் இல்லறத்தை நீ கவனி. மத்ததெல்லாம் தேவையே இல்லை என்கிறார்.

சரி, நல்ல குடும்ப வாழ்க்கை நடத்தினால் போதுமா? அவ்வளவு தானா?

பொறுங்கள். வள்ளுவர் கூட்டிக் கொண்டு போகிறார் நம்மை. அவர் கை பிடித்துச் செல்வோம்.

interestingtamilpoems.blogspot.com/2020/03/blog-post_7.html