Tuesday, June 30, 2020

திருக்குறள் - தீவினை அச்சம்

திருக்குறள் - தீவினை அச்சம் 

பெரிய பெரிய கட்டிடம் கட்டும் இடங்களில் பார்த்தால் தெரியும், அங்கே பலர் சாளரம் கட்டி, அந்த கம்புகளின் மேல் நின்று வேலை செய்வார்கள். ஒரே ஒரு கம்பி அல்லது கம்பு தான் இருக்கும். அதன் மேல் நின்று கொண்டு வேலை செய்வார்கள். நம்மால் முடியுமா? முடியாது. பார்க்கவே பயமாக இருக்கும். விழுந்து விடுவோமோ என்று அச்சமாக இருக்கும். 

முதன் முதலாக கார் ஓட்டக் கற்றுக் கொள்ளும் போது, பயமாக இருக்கும். சுற்றிலும் வண்டிகள், நாம் யார் மேல் மோதி விடுவோமோ என்று அச்சம். யார் நம் மீது மோதி விடுவார்களோ என்று அச்சம். ஆனால், பழக்கம் ஆகி விட்டால், கார்ஓட்டிக் கொண்டே cd மாத்துவோம், கை பேசியில் பேசுவோம், தண்ணீர் குடிப்போம். என்ன ஆயிற்று? பழக்கம். 

பழக்கம் இல்லாவிட்டால் பயமாக இருக்கும். பழக்கமாகி விட்டால் பயம் போய் விடும். 

திருவள்ளுவர் செயலால் ஏற்படும் குற்றங்களை பற்றிச் சொல்ல வந்த அதிகாரத்துக்கு "தீ வினை அச்சம்" என்று பெயரிட்டார். 

"தீ வினை தவிர்த்தல்" அல்லது "தீ வினை ஒழித்தல்" என்று பெயர் இட்டு இருக்கலாமே? 

தீ வினை செய்ய அச்சப் படு என்கிறார். 

முதலில் மனதில் அச்சம் வர வேண்டும். பயம் இல்லாவிட்டால் துணிந்து செய்து விடுவோம். 

"ஐயோ, நான் மாட்டேன்பா...ரொம்ப ஆபத்தானது " என்று விலகி ஓட வேண்டும். 

எப்போது அச்சம் போகும்? ஒரு காரியத்தை மீண்டும் மீண்டும் செய்து பழகி விட்டால், அதில் உள்ள அச்சம் போய் விடும். 

முதலில் வண்டி ஒட்டவே பயந்தவன், இப்போது 100 அல்லது 120 கிலோ மீட்டர் வேகத்தில்  ஓட்டுகிறான். 

அது போல, களவு எடுக்க பயந்தவன், பழகிய பின், கோடிக்கணக்கில் களவு செய்யத் தலைப்படுவான். 

சின்ன தவறுகளை போனால் போகிறது என்று விட்டவர்கள், பெரிய தவறு  செய்யும் போது பிடித்து  சிறையில் போட்டு விடுகிறார்கள். 

மீண்டும் மீண்டும் செய்யும் போது, எப்போதோ ஒரு தரம் மாட்டிக் கொள்கிறான். 

எனவே, தீ வினை செய்வதில் அச்சம் வேண்டும். 

இரண்டாவது, 

அச்சம் என்பது மனதில் எழுவது. அதற்கு மனப் பயிற்சி வேண்டும். எதற்கு பயப்படுவது,  எவ்வளவு பயப்படுவது என்று மனதை பழக்க வேண்டும். இல்லை என்றால், ' பயமாகத்தான் இருக்கிறது...இருந்தாலும் செஞ்சு பார்ப்போமே" என்று மனம் விரும்பும். எனவே, தீயவை செய்யலாம் இருக்க வேண்டும் என்றால், தீயனவற்றை கண்டு அஞ்ச வேண்டும். 

மூன்றாவது, 

சிலர் ஒரு பயமும் இல்லாமல் தீயனவற்றை செய்கிறார்களே என்றால்,  முற் பிறவியில்  தீமை செய்து பழகி இருப்பார்கள் என்று சொல்கிறார் பரிமேல் அழகர். 

சில வருடங்களுக்கு முன்,  ஒரு பெண் கொடூரமான முறையில் கற்பழிக்கப்ட்டது பற்றி அறிந்தோம். அப்படி ஒரு கொடுமையை செய்ய முடியுமா? நினைத்தாலே நமக்கு மனம் நடுங்குகிறது அல்லவா? அதை ஒருவன் செய்திருக்கிறான். அவன் அது போல் முன்பே செய்திருக்க மாட்டான். பின் எப்படி செய்தான் என்றால், அது முற்பிறவி வாசனை. 

ஒருவன் குற்றங்களை எளிதாகச் செய்கிறான் என்றால் அவன் முற்பிறவியில் பழகி விட்டான் என்று பொருள். 



நான்காவது,

இப்போது தீமை செய்து பழகி விட்டால், அது இப்பிறப்பில் மட்டும் அல்ல, பின் வரும்  பிறவியிலும் தொடரும். சிலர் கேட்கிறார்கள், "அவன் எவ்வளவு அயோக்கியத்தனம் செய்கிறான். நல்லாத்தான் இருக்கிறான். இந்த சாத்திரம், சம்பிரதாயம், அறம் எல்லாம் பொய் தான் போலிருக்கிறது" என்று. 

அல்ல. அவன் செய்யட்டும். செய்து பழகட்டும். அந்த பழக்கம் தொடரும். 

இந்தப் பிறவியில் இல்லாவிட்டால் அடுத்தப் பிறவியில் அதற்கான தண்டனை வரும். நீ செய்து பழகாதே என்கிறார் வள்ளுவர். 

ஐந்தாவது, 

தீ வினை செய்வதில் உள்ள அச்சம் போய் விட்டால், பின் தீ வினை செய்வதற்கு காரணங்கள் கண்டு பிடித்து  அதை ஞாயப் படுத்தத் தொடங்கி விடுவோம். அச்சம் ஒன்று தான், நம்மை அதில் இருந்து காக்கும். 


ஆறாவது, 

கொதிக்கிற எண்ணையில் கையை விடாதே என்று ஏதும் சட்டம் இருக்கிறதா?  சட்டம் இல்லாவிட்டாலும், நாம் அதைச் செய்வது இல்லை. சட்டம் போட்டு தடுத்தாலும்  தீய செயல்களை செய்கிறவன், சட்டமே இல்லாத போதும்   அந்தக் காரியத்தை செய்வது இல்லை. ஏன்? பயம். கொதிக்கிற எண்ணெய் சுடும். தோல் வெந்து விடும். வலிக்கும் என்ற பயம்.  ஒரு சமுதாயத்தில், தீ வினை செய்ய எல்லோரும் அச்சப் பட்டால், ஒரு சட்டம்,  காவல் தூரம், நீதித் துறை என்று ஒன்றும் வேண்டாம். ஒருவனும் செய்ய மாட்டான். 

ஏழாவது, 

சட்டம், நீதி மன்றம், சிறைச்சாலை எல்லாம் என்ன செய்யும்? கையில் காசு இருக்கிறது.  பாத்துருவோம் ஒரு கை என்று பயம் விட்டுப் போய் விட்டால், என்ன சட்டம் போட்டும்  பயன் இல்லை. சாட்சியை விலைக்கு வாங்குவது, அல்லது மிரட்டுவது,  அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுப்பது என்று எல்லாம் செய்து  வெளியில் வந்து விட முடியும். பயம் போய் விடும். சட்டம் போட்டு திருத்த முடியாது.  எனவே தான் சொன்னார் "தீ வினை செய்வதில் அச்சம் வேண்டும்" என்று.  நல்ல பாம்பை கையால் பிடிப்போமா? பிடிக்கக் கூடாது என்று சட்டம்இல்லை . இருந்தும் நாம் செய்வது இல்லை. காரணம், "அச்சம்"

வெறும் தலைப்புக்கு இவ்வளவு உரை. 

இனி அதிகாரத்துக்குள் போக வேண்டும். 

மலைப்பாக இருக்கிறது அல்லவா?



Monday, June 29, 2020

திருக்குறள் - மனக்கவலை

திருக்குறள் - மனக்கவலை 


இறைவன் இருக்கிறானா இல்லையா என்பது பெரிய சர்ச்சை. அவன் இருக்கிறான் என்றும் நிரூபணம் செய்ய முடியாது. இல்லை என்றும் நிரூபணம் செய்ய முடியாது. வாத பிரதி வாதங்கள் இரண்டு பக்கமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

சரி, இருக்கிறான் என்றே வைத்துக் கொள்வோம். எதற்காக அவனை வணங்க வேண்டும்? வணங்கினால்தான் நல்லது செய்வார் என்றால் அவனுக்கும் சாதாரண மனிதர்களுக்கும் என்ன வேறுபாடு? இறைவன் எல்லாம் வல்லவன் என்றால், நாம் வணங்கி அவனுக்கு ஆகப் போவது என்ன அல்லது நாம் வணங்காமல் விட்டால் அவனுக்கு என்ன குறைந்து விடப் போகிறது? ஒன்றும் இல்லை.. பின் எதற்கு வேலை மெனக்கெட்டு வணங்க வேண்டும்.

இந்த உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஆண்டவன் படைப்பு என்றால், அவர்களுக்கு நல்லது செய்வது அவன் கடமை அல்லவா. என் பிள்ளை என்னை வாங்கினால்தான் அவனுக்கு நல்லது செய்வேன் என்று எந்த தகப்பனாவது சொல்வானா?

பின் எதற்கு வணங்க வேண்டும்.

வள்ளுவர் சொல்கிறார்....

"நீ வணங்கி அவனுக்கு ஆகப் போவது ஒன்றும் இல்லை. நீ வாங்காவிட்டால் அவனுக்கு ஒரு நட்டமும் இல்லை. ஆனால், அவன் இருக்கிறான் என்று நம்பி அவனை  வணங்கினால், உன் மனக்கவலைகள் தீரும்.  மனக் கவலைகள் தீர வேண்டும் என்றால்   அவனை வணங்கு. வேண்டாம் என்றால் உன் இட்டம்" என்கிறார்.

பாடல்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

பொருள்

தனக்குவமை  = தனக்கு உவமை (சமம்)

இல்லாதான்  = இல்லாதவன்

தாள்சேர்ந்தார்க்கு = திருவடிகளை சேர்ந்தவருக்கு

அல்லால் = மற்றவர்களுக்கு

மனக்கவலை = மனதில் உள்ள கவலைகளை

மாற்றல் அரிது = மாற்றுவது அரிது.

நமக்கு ஒரு கவலை வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.    நம்மால் அதை தீர்க்க முடியவில்லை.

மற்றவர்கள் உதவியை நாடுகிறோம். அவர்களாலும் முடியவில்லை.

இப்போது என்ன செய்வது?

கடவுள் நம்பிக்கை இருந்தால், "ஆண்டவா என்னை இந்த சங்கடத்தில் இருந்து காப்பாற்று"  என்று வேண்டலாம்.  காப்பாற்றுகிறானோ இல்லையோ, அப்படி   வேண்டுவதன் மூலம் மனதுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கிறது. கவலை கொஞ்சம்  குறைகிறது.

ஒரு வேளை  காப்பாற்றாவிட்டால் கூட, அந்த கவலையின் விளைவுகளை மனம் ஏற்றுக் கொள்ள பக்குவப் பட்டு விடுகிறது.

"எல்லாம் அவன் செயல்" என்று அவன் மேல் பாரத்தைப் போட்டு விடுவதால், கவலை கொஞ்சம்  மாறுகிறது.

அப்படி ஒரு நம்பிக்கை இல்லை என்றால், மற்றவர்கள் மேல் கோபம், தன் மேல் ஒரு  தன்னிரக்கம், என்னால் ஒன்றும் முடியவில்லை என்று ஒரு சுய பச்சாதாபம், எல்லாவற்றின் மேலும் ஒரு வெறுப்பு, கோபம், என்று கவலை பன்மடங்காகி விடும்.

பெற்றவர்கள், நண்பர்கள், அரசாங்கம், இந்த மக்கள், இந்த கல்வி முறை, இந்த நாடு, என்று எல்லோர் மேலும் கோபம், வெறுப்பு, என்று வந்து மனம் மேலும்  அழுத்தப்பட்டு விடும்.

"ஐயா, நீ பார்த்து ஏதாவது செய்" என்று அவனிடம் விட்டு விட்டால், மனக் கவலை குறையும்.

அதற்காகவேனும், அவன் தாள் வணங்கு.  அதைத் தவிர வேறு வழி இல்லை என்கிறார்   வள்ளுவர்.

தாளை வணங்காவிட்டால் , மனக் கவலையோடு அலைந்து கொண்டு இருப்பாய் என்கிறார்.

மனக் கவலையை மாற்ற வேண்டுமா ? வேண்டாமா?


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_29.html

Sunday, June 28, 2020

பொது - பயிற்சி

பொது - பயிற்சி 


நமக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் மருத்துவரை சென்று பார்க்கிறோம். பொதுவாக மருத்துவர் என்ன சொல்லுவார் " நல்ல உடற் பயிற்சி செய்யுங்கள். இரத்த அழுத்தம் சரியாகும், சர்க்கரை அளவு சரியாக இருக்கும், உடல் எடை குறையும், சுவாசம் சரியாகும் " என்று உடலில் வரும் பல நோய்களுக்கு மருந்தாக உடல் பயிற்சியை சொல்லுவார்.

மேலும், உடல் பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தால், அது உடல் நலத்திற்கு நல்லது. மூட்டு வலி வராது, தசைகள் வலுவாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி வளரும்.

இப்போது அறிவியலில், உடல் பயிற்சி செய்தால் நினைவு ஆற்றல் வளரும் என்கிறார்கள். மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் வராது என்கிறார்கள். ஞாபக மறதி, அல்ஸைமர், பார்கின்சன் போன்ற நோய்கள் வராது என்கிறார்கள்.

மாற்று கருத்து இல்லை.

ஆங்கில அறிவியல் மற்றும் சிந்தனை அந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறது.

நம்மவர்கள் அதற்கு மேல் எங்கேயோ போய் விட்டார்கள்.

மனிதன் என்பவன் உடல் மட்டும் அல்ல.

அவனுக்கு மனமும் இருக்கிறது.

மனப் பயிற்சி  என்று   யாரவது , எப்போதாவது சொல்லக் கேட்டு இருக்கிறீர்களா?

"நீங்கள் தினமும் 30 நிமிடம் மனப் பயிற்சி செய்யுங்கள்" என்று சொல்லக் கேட்டு இருக்கிறோமா?

தியானம், மெடிடேஷன் என்பதெல்லாம் நம்மவர்கள் கண்டுபிடிப்பு.

தியானம் கூட மனதை ஒருமுகப் படுத்துவதுதானே அன்றி பொதுவான பயிற்சி என்று சொல்ல முடியாது.

தமிழ் இலக்கியம், மனப் பயிற்சி பற்றி மிக அடிப்படையாக பேசுகிறது.

சில உதாரணங்கள் பார்ப்போம்.

அறம் செய்ய விரும்பு. 

அறம் செய் என்று சொல்லி விட்டுப் போய் இருக்கலாமே? அது என்ன விரும்பு?

விரும்பதல் என்பது மனத்தால் செய்வது. முதலில் மனப் பயிற்சி. மனம் பழகி விட்டால்  பின் செய்வது எளிது.

மனத்திற்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் 
ஆகுல நீர பிற 

மனதில் குற்றம் இல்லாமல் இருப்பதுதான் அறம் என்கிறார் வள்ளுவர்.

மனதில் ஆயிரம் குற்றங்கள் நிகழ்கின்றன.

கோபம் - காமம் - பொறாமை - புறம் கூறுவது - பொய்மை ...

இந்த மனக் குற்றங்களினால், பல புற குற்றங்கள் விழைகின்றன.

மனதை சரி படுத்த வேண்டும் என்றால், அதை பழக்க வேண்டும்.

அதற்கு பயிற்சி வேண்டும்.

புலனடக்கம் என்பது எப்படி வரும்? மனதை அடக்கினால் புலன் அடங்கும்.

மனதை எப்படி அடக்குவது? அதை பழக்க வேண்டும்.

மனப் பயிற்சி பற்றி சிந்தியுங்கள்.

இது பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள நிறைய இருக்கின்றது.

வருகின்ற நாட்களில் இது பற்றி நிறைய சிந்திப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_28.html

Saturday, June 27, 2020

தேவாரம் - சொல்லாய் கழிகின்றது

தேவாரம் - சொல்லாய் கழிகின்றது 



பெரும்பாலானோர் வாழ்க்கை என்பது என்ன ?

பிறந்தார் - வளர்ந்தார் - மூப்பு அடைந்தார் - இறந்தார்

என்ற இந்த நான்கு செயல்களில் அடங்கி விடுகிறது. கல்யாணம் கட்டி, பிள்ளைகள் பெற்று, வேலை பார்த்து, சம்பளம் பெற்று என்று கொஞ்சம் நீட்டிக்கலாம். அவ்வளவுதான்.

பிறந்தார் - படித்தார் - வேலை பார்த்தார் - மணந்தார் - பிள்ளைகள் பெற்றார் - மூப்பு அடைந்தார் - இறந்தார்.

அவ்வளவுதான். 7 சொற்கள். வாழ்க்கை முடிந்து விட்டது.

வேறு ஏதாவது நடக்கிறதா?

நம் வாழ்க்கை எல்லாம் இந்த சொற்களாய் போய் விட்டது. வேறு ஒன்றும் இல்லை.

இப்படி என் வாழ்வும் போய் விடக் கூடாது. நான் இந்த சூழலில் இருந்து தப்பிக்க வழி சொல் என்று இறைவனை வேண்டுகிறார் சுந்தரர்.

"மலையில் இருந்து அகிலும், ஒளி வீசும் மணிகளையும் கலந்து வரும் ஆற்றின் கரையில் இருக்கும் நெல் வாய் என்ற ஊரில் உறைபவனே, இந்த பிறவியில் பிறந்து, வளர்ந்து, மூப்பு அடைந்து, இறந்து போகும் இந்த சூழலில் இருந்து நான் உய்ய வழி சொல்வாய்"

என்கிறார்.

பாடல்


கல்வாய் அகிலுங் கதிர்மா மணியுங்
  கலந்துந் திவருந் நிவவின் கரைமேல்
நெல்வா யில்அரத் துறைநீ டுறையும்
  நிலவெண் மதிசூ டியநின் மலனே
நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
  நரைத்தார் இறந்தா ரென்றுநா னிலத்திற்
சொல்லாய்க் கழிகின் றதறிந் தடியேன்
  தொடர்ந்தேனுய் யப்போவ தோர்சூழல் சொல்லே.  

பொருள்


கல்வாய் = மலை

அகிலுங்  = அகில் (மணம் வீசும் மரம்)

கதிர்மா மணியுங் = கதிர் ஒளி வீசும் மணிகளை

கலந்துந் தி = கலந்து + உந்தி = கலந்து வேகமாக

வருந் = வரும்

நிவவின்  = நிவா நதியின்

கரைமேல் = கரையில்

நெல்வா யில் = நெல் வாய் என்ற திருத்தலத்தில்

அரத் துறை = அரத்துறையில்

நீ டுறையும் =நீடு + உறையும் = நீண்ட நாள் இருக்கும்

நிலவெண் மதிசூ டிய = வெண்மையான நிலவை சூடிய

நின் மலனே = நிர்மலமானவனே

நல்வாயில் = நல்ல வீட்டினை

செய்தார் = கட்டினார்

நடந்தார் = நடந்தார்

உடுத்தார் = உடுத்தார்

நரைத்தார் = நரைத்தார்

இறந்தா ரென்று = இறந்தார் என்று

நா னிலத்திற் = இந்த உலகில்

சொல்லாய்க் = வெறும் சொல்லாய்

கழிகின் றதறிந் = கழிகின்றது அறிந்து

தடியேன் = அடியேன்

தொடர்ந்தே = தொடர்ந்து

னுய் யப் = உய்ய

போவ தோர் = போவது ஓர்

சூழல் சொல்லே.   = வழி சொல்லேன்



இதற்கு கி வா ஜா உரை சொல்லுவார்

ஒருவன் ரொம்ப கஷ்டப் பட்டு ஒரு வீடு கட்டினான். சிறுக சிறுக சேர்த்து கட்டிய வீடு.  பார்த்து பார்த்து கட்டினான்.

வீடு அருமையாக வந்து விட்டது. அவனுக்கு பெருமை தாளவில்லை. தன் வீட்டைப் பார்த்து  பார்த்து பெருமிதம் கொள்கிறான்.

காலையிலும் மாலையிலும் வீட்டின் முன் புறம் நடப்பான். வருகிற போகிற ஆட்களை பார்ப்பான். முற்றத்தில் அமர்ந்து செய்தித்தாள் படிப்பான்.

நல்ல உடை உடுத்திக் கொண்டு  வாசலில் நின்று வேடிக்கை பார்ப்பான்.


கொஞ்ச நாள் கழித்து வயதாகிப் போனது. அடிக்கடி வெளியே வர முடியவில்லை. படுத்த படுக்கையாகி விட்டான்.

அப்புறம் சில வருடங்களில் இறந்தும் போனான்.

இப்போது தேவாரத்தைப் படியுங்கள்.

"நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
  நரைத்தார் இறந்தா ரென்று"

வீட்டைக் கட்டி - வாசலில் குறுக்கும் நெடுக்கும் நடந்து - உடை உடுத்தி - நரை பருவம் எய்தி  - இறந்து போனான்.

வீடு என்பது இங்கே ஒரு உபமானம்.

வீடுதான் நம் உடம்பு. வீட்டைக் கட்டி,

நடத்தல் - படித்தல், வேலையை செய்தல் போன்றவை

உடுத்தார் - அனுபவித்தல்,மனைவி, மக்கள், சுற்றம், செல்வம் என்று கொஞ்ச நாள் அனுபவித்து

நரைத்தல் - வயதாகிப் போதல்

இறத்தல் - முடிவு

இப்படியா நம் வாழ்க்கையும் செக்கு மாடு  போல இந்த வட்டத்துக்குள்  சுத்தி சுத்தி வர வேண்டும்.

இதைத் தானே எல்லோரும் செய்கிறார்கள்.

பத்தோடு பதினொன்றாக நாமும் அப்படியே போக வேண்டியதுதானா .

பிறந்தான், வளர்ந்தான், இறந்தான் என்று ஒரு முக்கியத்துவம் இல்லாமல், பயனின்றி  இந்த வாழ்க்கை முடிய வேண்டுமா?

நான் உய்ய வழி சொல் என்று சுந்தரர் வேண்டுகிறார்.

நாம எப்படி?

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_27.html

Friday, June 26, 2020

அபிராமி அந்தாதி - எழுதா மறை

அபிராமி அந்தாதி - எழுதா மறை 


தமிழை தாய் மொழியாகக் கொண்ட யாரிடமாவது அவர்களுக்கு தமிழ் தெரியுமா என்று கேட்டால் சண்டைக்கு வருவார்கள். "என் தாய் மொழி தமிழ். எனக்குத் தமிழ் தெரியாதா?" என்பார்கள்.

தமிழ் மொழி மூன்று பிரிவுகள் உடையது.

இயல், இசை மற்றும் நாடகம்.

மூன்றும் தெரிந்தால் தான் தமிழ் தெரிந்ததாக அர்த்தம்.

இப்போது மீண்டும் அதே கேள்வியை கேட்டுப் பாருங்கள். "வந்து, அது என்னன்னா ..." என்று இழுப்பார்கள்.

ஏன் இசையும், நாடகமும் தெரிந்து இருக்க வேண்டும்? அது ஏன் மொழியின் ஒரு கூறாக இருக்கிறது?

சொல்லுகின்ற தொனியிலும், சொல்லும் போது காட்டும் முக பாவத்திலும் சொல்லின் பொருள் மாறிப் போய் விடும்.

"உடம்பு எப்படி இருக்கிறது" என்ற கேள்வியை கேட்கும் விதத்திலும், காட்டும் முக பாவத்திலும் இருக்கிறது அதன் உண்மையான அர்த்தம். உண்டா ? இல்லையா?

எனவே, உச்சரிப்பும், பாவமும் முக்கியம் என்று வரையறை செய்தார்கள்.

சில ஆழ்ந்த அர்த்தங்களை எழுத்தில் கொண்டு வரவே முடியாது.

அவனும் அவளும் காதலிக்கிறார்கள்.  அவர்கள் பார்வையில் ஆயிரம் அர்த்தம். அதை எழுதிக் காட்ட முடியுமா?

கண்ணோடு கண்ணினை நோக்கின் வாய் சொற்கள் என்ன பயத்ததோ சால்பு.

தாய்க்கு பிள்ளை மேல் உள்ள பரிவு...அதை வார்த்தையில் வடிக்க முடியுமா?

உணர்ச்சிகளை  எழுத்தில் கொண்டு வர முடியாது. அப்படியே கொண்டு வந்தாலும்  அது தவறாகிப் போய் விடும்.

சொல்லிக் காட்டலாம். சொல்லும் போது முகம்  அந்த உணர்ச்சியை பிரதி பலிக்கும்.  அதில் ஆயிரம் அர்த்தங்கள் தோன்றும்.

I Love you என்று எழுதி காண்பிப்பதற்கும் , காதலியின் கையை பிடித்துக் கொண்டு , அவள் கண்களை பார்த்து சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா?

அது போல்,  ஆழ்ந்த உண்மைகளை ஒருவன் ஆசிரியரிடம் இருந்து நேரடியாக கேட்டு அறிந்து கொள்ள வேண்டும். அதை எழுத்தில் கொண்டு வர முடியாது  என்று நம்பினார்கள் நம் முன்னவர்கள்.

வேதத்தை எழுதக் கூடாது. அதன் அர்த்தம் அதன் உச்சரிப்பில் இருக்கிறது என்பதனால்  கேட்டு பெற வேண்டும் என்று வைத்தார்கள்.

நாம் பல பாடல்களை படிக்கும் போது, அவற்றின் சொற்கள் எளிமையாக இருந்தால்,  "இது தான் எனக்குத் தெரியுமே" என்று சொல்லி விட்டு மேலே போய் விடுகிறோம்.

அதன் ஆழ்ந்த அர்த்தங்களை நாம் அறிந்து கொள்ள சில நேரம் தவறி விடுகிறோம்.

பாடல்



நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை, 
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின் 
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து 
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.

பொருள்



நின்றும் = நின்றும்

இருந்தும் = ஓரிடத்தில் இருந்தும்

கிடந்தும் = கிடந்தும்

நடந்தும் = தேடி நடந்தும்

 நினைப்பது உன்னை = நினைப்பது உன்னை

என்றும் வணங்குவது உன் மலர்த் தாள் = நான் எப்போதும் வணங்குவது உன் மலர் போன்ற பாதங்களை .

எழுதாமறையின் = எழுதப் படாத மறையின் (வேதத்தின், மறை பொருளின்)

ஒன்றும் அரும்பொருளே = அறிய ஒரு பொருளே

அருளே = அருளே வடிவானவளே

உமையே = ஒளி வடிவானவளே

இமயத்து அன்றும் பிறந்தவளே = என்று என்று அறியமுடியாத அன்று தோன்றியவளே

 அழியா முத்தி ஆனந்தமே = அழியாத முத்தியும், ஆனந்தமும் தருபவளே

உமா என்றால் ஒளி  என்று பொருள். ஒளி  அநாதியானது. என்று பிறந்தவள் என்று அறிய முடியாத அன்று பிறந்தவள் அவள்..

அது என்ன "எழுதா மறை" ?

வேதத்திற்கு இன்னொரு பெயர் "எழுதா மறை"

எழுத்துக்கும் சொல்லுக்கும் இடையே நிறைய வேறுபாடு இருக்கும். உண்மையான அர்த்தம்  அதன் உச்சரிப்பில் இருக்கிறது. எனவே தான் அதை "எழுதா மறை  " என்றார்கள்.

பின்னால் வந்தவர்கள், "அது உயர் குலத்தவர் செய்த சதி. மற்றவர்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்று எழுதாமல் வைத்தார்கள் " என்று கூறினார்கள்.

எழுதாமல் இருந்ததற்கு காரணம், எழுதினால் பொருள் பழுது பட்டுவிடும்  என்பதால்.

"எழுதா மறையின் அரும் பொருள்"  அவள்.

ஒவ்வொரு பாடலுக்குள்ளும் ஆயிரம் அர்த்தங்கள் மறைந்து , புதைந்து கிடக்கின்றன.

என்று, எப்படி வெளிப்படுமோ?

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_26.html

Thursday, June 25, 2020

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வணங்கும் துறைகள்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வணங்கும் துறைகள்


ஆற்றில் இறங்கி குளித்து இருக்கிறீர்களா ? சிலு சிலு என்று நீர் ஓடிக் கொண்டிருக்கும். கரையில் இருந்து, முதலில் காலை நனைத்து, பின் மெல்ல மெல்ல ஆற்றில் இறங்கி குளிப்பது ஒரு இனிய அனுபவம்.

எவ்வளவுதான் தெளிந்த, ஜில் என்ற நீராக இருந்தாலும், முழு ஆற்றையும் இரண்டு கைகளால் மறித்து கையில் ஏந்தி குளிக்க முடியுமா?

ஏதோ ஒரு படித்துறையில் இறங்கித் குளிக்க முடியும் அல்லவா?

படி இருக்கும் , பிடித்துக் கொள்ள கை பிடி இருக்கும், ஆற்று நீர் வேகமாக இழுக்காது, ஆழம் அதிகம் இருக்காது. தைரியமாக நீராடலாம்.

ஆற்றில் அங்கங்கே படித்துறைகள் செய்து வைத்து இருப்பார்கள்.

இறைவனைத் தேடி அடையும் வழி என்பது ஆறு போல. அது நீண்டும் அகன்றும் ஆழமாகவும் இருக்கும். நம்மால் அது முழுவதையும் அறிந்து கொள்ள முடியாது.

ஏதோ ஒரு படித்துறையில் இறங்கி கொஞ்சம் நீராடலாம். அவ்வளவுதான் முடியும்.

ஒவ்வொரு சமயமும் ஒரு படித்ததுறை.

சைவம், வைணவம், பௌத்தம், இஸ்லாமியம், கிறித்துவம் என்று பல படித்துறைகள்.

இதில்  என் படித்துறைதான் சிறந்தது, மற்றது தாழ்ந்தது என்ற நினைப்பே நகைப்புக்கு  இடமானது.

ஆறு ஒன்று, அது சேரும் கடல் ஒன்று. படித்துறைகள் வேறு அவ்வளவுதான்.

எல்லா படித்துறையிலும் ஒரே நீர் தான்.

நம்பவாழ்வார் சொல்கிறார்,

"இறைவனை வணங்கும் துறைகள் பல ஆகி, மக்களுடைய புத்தி வேறுபாட்டால் பல சமயங்கள் ஆகி, அவர்கள் வணங்கும் கடவுள்களும் பல ஆகி, அவற்றிற்குள் வேறுபாடுகள் பல ஆகி இருந்தாலும், எல்லாவற்றையும் நீயே உண்டாக்கி வைத்தாய், உனக்கு இணை யாரும் இல்லை, உன் பால் என் ஆசையை உண்டாக்கி வைப்பேன் " என்கிறார்.

பாடல்


வணங்கும் துறைகள்* பலபல ஆக்கி,* மதிவிகற்பால்-
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி,* அவையவைதோறு-
அணங்கும் பலபல ஆக்கி நின் மூர்த்தி பரப்பிவைத்தாய்*
இணங்கு நின்னோரை இல்லாய்,* நின்கண் வேட்கை எழுவிப்பனே. 96


பொருள்

வணங்கும் துறைகள் = வணங்குகின்ற துறைகள்

 பலபல ஆக்கி = பலவிதமாக உருவாக்கி

மதிவிகற்பால் = புத்தி வேறுபாட்டால்

பிணங்கும் = ஒன்றோடு ஒன்று மாறுபடும்

சமயம் பலபல ஆக்கி = பலவிதமான சமயங்களை உண்டாக்கி

அவையவைதோறு = அவற்றினுள்

அணங்கும் = தெய்வங்களும்

பலபல ஆக்கி  = பலவாக உண்டாக்கி

நின் மூர்த்தி  = உன் அம்சத்தை

பரப்பிவைத்தாய் = பரப்பி வைத்தாய்

இணங்கு நின்னோரை இல்லாய் = உனக்கு இணையாக யாரும் இல்லாமல் இருந்தாய்

நின்கண்  = உன்மேல்

வேட்கை = ஆவல், காதல், பக்தி

எழுவிப்பனே = நான் உண்டாகுவேனே


யார், எதை எப்படி வழி பட்டாலும் அது நாராயணனையே சாரும் என்பது அவர் முடிவு.

"யாதொரு தெய்வம் கண்டீர் அத்தெய்வமாகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவார்’ என்பது சைவர்களின் கருத்து.

எல்லா சமயங்களும் சொல்லுவது ஒன்றே...வழி வேறானாலும், போய்ச் சேரும் இடம் ஒன்றுதான்.


https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_25.html

Wednesday, June 24, 2020

கந்தர் அலங்காரம் - பயந்த தனி வழி - பாகம் 2

கந்தர் அலங்காரம் - பயந்த தனி வழி  - பாகம் 2


என்னமோ இந்த பாடல் மனதுக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது. எழுதிய அர்த்தம் சரிதானா என்று என்ற கேள்வி விடை காணாமல் நடுவில் நிற்கிறது.

"பயந்த தனி வழி"

என்று மட்டும் தான் அருணகிரிநாதர் சொல்லி இருக்கிறார்.

அந்த வழி ஏன், உயிர் பிரிந்த பின், ஆன்மா செல்லும் வழியாக இருக்க வேண்டும்? அவர் அப்படி ஒன்றும் சொல்லவில்லையே. நானாக அப்படி ஒரு அர்த்தத்தை வலிந்து கொண்டு வந்த மாதிரி இருக்கிறது.

சரி, அது இல்லை என்றால், பின் எது "பயந்த தனி வழி"?

உண்மையை தேடும் எல்லா வழியும் தனி வழிதான். அந்த உண்மையை கடவுள் என்று சொல்லலாம், சத்யம் என்று சொல்லலாம், இயற்கை என்று சொல்லலாம்...எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்.

அதை தேடி கண்டடையும் வழி தனி வழிதான். அங்கே கும்பல் கும்பலாக போக முடியாது.

பின் எல்லோரும் பெரிய கும்பலாக கோவிலுக்குப் போகிறார்களே, இரத யாத்திரை, கும்பாபிஷேகம்,  போன்ற விசேடங்களுக்கு பெரும் திரளாக போகிறார்களே அது தவறா என்றால், இல்லை.

பாதையின் தொடக்கத்தில் எல்லோரும் இருப்பார்கள். அது நீண்ட வழி என்பதால், முடிவு வரை எல்லோரும் வரமாட்டார்கள்.

மாரத்தான் ஓட்டப் பந்தயத்தின் தொடக்கத்தில் பார்த்தால் பெரிய கும்பல் இருக்கும். முடிவில் ஓரிரண்டு பேர்கள் இருப்பார்கள்.

இறைவன் ஒருவன் தானே? எல்லோரும் போய் சேரும் இடம் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும். பின் ஏன் தனி வழி என்றால்...சேரும் இடம் ஒன்றுதான், புறப்படும் இடங்கள் வேறு வேறு.

எனவே, வழிகள் தனியாகத்தான் இருக்க முடியும்.

தனியாக இருப்பதால் பயம்.

அந்த பயத்தைப் போக்க வேலும் மயிலும் துணை.

சரி, இந்த விளக்கம் சரியாக இருக்குமா ? அருணகிரி நாதர் சொன்னது இறப்புக்குப் பின் உள்ள  வழியை அல்ல, வாழும் போதே இறைவனை தேடி அடையும் வழியை என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்வது?

"அவன் அருளாலே அவன் தாள் வணங்கி" என்பார் மணிவாசகர். அவனை வணங்கவும் அவன் அருள் இல்லாமல் முடியாது.

"குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" என்பார் அருணகிரி. அவன் அருளினால்தான் உண்டு.

முருகன் தனிவேல் முநிநம் குருவென்
   றருள்கொண் டறியார் அறியுந் தரமோ
      உருவன் றருவன் றுளதன் றிலதன்
         திருளன் றொளியன் றெனநின் றதுவே!

"அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ" என்பதும் அவர் வாக்கு.

எனவே, பயந்த தனி வழி என்பது இறைவனை இந்தப் பிறவியிலேயே தேடிச் செல்லும் வழி என்று கொள்ளுவதே சாலச் சிறந்தது.

அது அப்படி என்றால், நீங்கள் இறைவனைத் தனியாகத்தான் போய் சந்திக்க வேண்டி இருக்கும்.  மற்றவர்களோடு, சேர்ந்து பயணம் ஆரம்பித்தாலும் ஏதோ ஒரு இடத்தில், நீங்கள் உங்களுக்கு என்று ஒரு பாதையை தேர்ந்து எடுக்கத்தான் வேண்டும். பயமாக இருக்கிறது என்று கும்பலோடு சேர்ந்து போனால், போய் சேர வேண்டிய இடம் வராது.

உங்கள் பாதை, உங்கள் ஆத்ம பக்குவத்தைப் பொறுத்தது. ஒவ்வொருவருக்கும் ஒரு வழி.

"தனி வழி" என்பதால் அதில் இதற்கு முன் போனவர்கள் யாரும் இல்லை.  போகிற வழியிலும் யாரிடமும்   வழி கேட்க முடியாது. map , கைகாட்டி, பெயர் பலகை ஒன்றும் இருக்காது.  எனவே அது "பயந்த தனி வழி".

யாரோ சொன்ன பாதையில் போக முடியாது...அது அவர் கண்ட வழி. அவருக்கு அந்த  வழி. நீங்கள் புத்தகங்கள், சொற்பொழிவு இவற்றைக் கேட்டு விட்டு நான் அந்த   வழியில் சென்று இறைவனை அடைவேன் என்றால் முடியாது.

எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விட்டு, உங்கள் வழியை நீங்கள் தேர்ந்து எடுங்கள்.

அதுவே இறை தரிசனம் காண வழி வகுக்கும்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/2.html


இந்த முதல் பாகத்தை கீழே காணலாம்


பாகம் 1


கந்தர் அலங்காரம் - பயந்த தனி வழி

இந்தப் பாடலை முன்பே ஒரு தரம் சிந்தித்தோம்.

இன்னும் ஒரு முறை சிந்தித்தால் என்ன.

அந்த சோறு, சாம்பார், இட்லி, தோசை, பொங்கல், வடை, பூரி, சப்பாத்தி என்று எத்தனை தரம் சாப்பிடுகிறோம். கேட்ட சினிமா பாட்டையே எத்தனை தரம் கேட்கிறோம். பார்த்த நகைச்சுவை காட்சிகளை எத்தனை தரம் பார்க்கிறோம். சலித்தா போகிறது?

நல்ல விஷயங்களை ஒன்றுக்கு இரண்டு தரம் படித்தால் என்ன ஆகி விடும்.

இல்லை, முன்னமே ஒரு தரம் படித்து விட்டேன், மீண்டும் ஒரு முறை படிக்க முடியாது என்று நினைத்தால், விட்டு விடலாம்.  இதை மூடி வைத்து விட்டு இது வரை செய்யாத ஒன்றை செய்ய முற்படலாம்.

மேலும், ஒவ்வொரு பாடல் பற்றி எழுதும் போதும் ஏதோ ஒரு சிந்தனை மேலோங்கி நிற்கும். அப்போது, பாடலில் உள்ள மற்ற விடயங்கள் சரியாக எடுத்துச் சொல்லாமல் விடுபட்டுப் போய் இருக்கலாம். அதை மீண்டும் கொண்டு வரவே இந்த முயற்சி.

அது ஒரு முன்ன பின்ன தெரியாத ஒரு ஊர். நேரமோ இரவு நேரம். சாலையில் ஒரு ஆள் அரவம் இல்லை. போகும் இடம் உங்களுக்கு சரியாகத் தெரியாது. விலாசம் தொலைந்து போய் விட்டது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

தனியே நடந்து போகிறீர்கள். பயமாக இருக்குமா இல்லையா?

அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது. எதுக்காக முன்ன பின்ன தெரியாத ஊருக்குப் போகப் போகிறோம்? வேற வேலை இல்லையா?  என்று நீங்கள் நினைக்கலாம்.

அப்படி ஒரு  நேரம் எல்லோருக்கும் கட்டாயம் வரும். யாரும் இல்லாத தனி வழியில், போகும் இடம் தெரியாமல் போக வேண்டி வரும் என்கிறார் அருணகிரிநாதர்.

இறப்புக்குப் பின், இந்த ஆத்மா தனியாகத்தான் போக வேண்டும்.

எவ்வளவுதான் அன்பு செலுத்தும் நட்பும் உறவும் இருந்தாலும், யாரையும் துணைக்கு அழைத்துக் கொண்டு போக முடியாது.   யார் வருவார்கள் கூட?

வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை.

கொட்டி முழக்கி அழுதிடுவார், மயானம் குறுகி எட்டி அடி வைப்பாரோ இறைவா கச்சி ஏகம்பனே  என்று ஓலமிடுவார் பட்டினத்தடிகள்.

மனைவி, மகன், மகள் , அம்மா, அப்பா, அண்ணன் , தம்பி, தங்கை, பேரன் , பேத்தி ஒருத்தரும் கூட வர மாட்டார்கள்.

தனியாகத்தான் போக வேண்டும். அது மட்டும் அல்ல, போகும் இடமும் தெரியாது.  அந்த வழியில் வேலும் மயிலும் துணை என்கிறார்.


பாடல்


விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.

பொருள்

விழிக்குத் துணை  = விழிக்குத் துணை

திரு மென்மலர்ப் பாதங்கள் = உயர்ந்த மென்மையான மலர் போன்ற பாதங்கள்

மெய்ம்மை குன்றா = உண்மை குறையாத

மொழிக்குத் துணை = மொழிக்குத் துணை

முரு காவெனு நாமங்கள் = முருகா, முருகா, முருகா என்ற நாமங்கள்

 முன்புசெய்த = முற்பிறவியில் செய்த

பழிக்குத் துணை  = பழிகளுக்கு துணை

யவன் பன்னிரு தோளும் = அவன் பன்னிரு தோள்களும்

பயந்த தனி வழிக்குத் துணை = பயந்த தனி வழிக்குத் துணை

வடி வேலுஞ் = வடிவான வேலும்

செங் கோடன் மயூரமுமே. = செங்கோடன் மயிலும்

https://interestingtamilpoems.blogspot.com/2020/06/blog-post_22.html