Sunday, August 9, 2020

ஔவையார் தனிப்பாடல் - உண்டாயின் உண்டென் றறு

ஔவையார் தனிப்பாடல் - உண்டாயின் உண்டென் றறு


பாண்டிய மன்னன் ஒரு பொற்கிழியை ஒரு பெரிய கொடிக் கம்பத்தில் கட்டி தொங்க விட்டு, அவையில் உள்ள புலவர்களளைப் பார்த்துக் "உங்களில் யாராவது பாடல் பாடுங்கள். உங்கள் பாடலுக்கு அந்த கயிறு அறுந்து பொற் கிழி கீழே விழுந்தால் அதை நீங்கள் பரிசாக எடுத்துக் கொள்ளலாம்" என்று அறிவித்து விட்டான். 

புலவர்கள் யாரும் பாடவில்லை. அவர்கள் பாடி, கயிறு அறுந்து விழாவிட்டால் அவர்களுக்கு அது பெரிய அவமானமாகப் போய் விடும். பரிசு கிடைக்காதது ஒரு புறம். அவர்கள் பாடிய பாடல் சரி இல்லை என்று எல்லோர் முன்பும் அவமானம் வேறு வந்து சேரும்.

ஒளவையார் இதை கேள்விப் பட்டு, அவர் இரண்டு பாடல்களைப் பாடினார். அவர் பாடிய முதல் பாடல் கீழே உள்ள link இல் உள்ளது. 



அவர் பாடிய அடுத்த பாடல். 

இரண்டாவது பாடலில் அவர் சொல்கிறார் 

"யுத்தம் வந்து விட்டது, சண்டைக்கு வாருங்கள் என்றால் நூற்றில் ஒருவன் வருவான்.  நல்ல பாடல் எழுது என்றால் ஆயிரத்தில் ஒருவனுக்குத்தான் அது முடியும். படித்ததை எல்லோருக்கும் விளங்கும்படி தெளிவாக எடுத்துச் சொல் என்றால் அது பத்தாயிரத்தில் ஒருவரனுக்குத்தான் முடியும். சம்பாதித்த பொருளை பிறருக்கு தானமாகக் கொடு என்றால் அது கோடியில் ஒருவனுக்குத்தான் முடியும். அது உண்மை என்றால், ஏ பொற்கிழியே நீ அறுந்து விழுவாயாக" என்று பாடினார். 

பொற்கிழி  அறுந்து விழுந்தது. 

பாடல் 

ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன் றாம்புலவர் 
வார்த்தை பதினா யிரத்தொருவர் - பூத்தமலர்த் 
தண்டா மரைத்திருவே தாதாகோ டிக்கொருவர் 
உண்டாயின் உண்டென் றறு. 


பொருள் 

(click the following link to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/08/blog-post_9.html

ஆர்த்தசபை = சண்டைக்கு வா என்றால் சபையில் இருந்து 

நூற்றொருவர்  = நூற்றில் ஒருவன் வருவான் 

ஆயிரத்தொன் றாம்புலவர் = பாடல் பாடு என்றால் ஆயிரத்தில் ஒருவனுக்குத் தான் முடியும் 

வார்த்தை பதினா யிரத்தொருவர் = கற்றதை தெளிவாக மற்றவர்களுக்குச் சொல் என்றால், அது பத்தாயிரத்தில் ஒருவனுக்குத்தான் முடியும் 


பூத்தமலர்த்  = பூத்த மலர் 

தண்டா மரைத் = குளிர்ந்த தாமரை மலரில் இருக்கும் 

திருவே  = இலக்குமியே 

தாதா = கொடையாளி 

கோ டிக்கொருவர்  = கோடியில் ஒருவன் 


உண்டாயின் உண்டென் றறு.  = அது உண்மையானால், உண்மை என்று சொல்ல நீ அறுந்து விழுவாயாக 

பாடல் எழுதுவதை விட, படித்ததை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல யாரும் முன் வர மாட்டார்கள்  என்கிறார் ஒளவையார். 

காரணம் 

ஒன்று, சொல்வது  எளிது அல்ல. படித்து புரிந்து கொள்ளலாம். அதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் எளிதாக வருவது கிடையாது. 

இரண்டாவது, பொருளைக் கொடுப்பது போல கல்வியைக் கொடுக்கவும் மனம் வராது.   எனக்குத் தெரிந்ததை  மற்றவர்களுக்குச் சொல்லி தந்து விட்டால், என் மதிப்பு என்ன ஆவது.  அவனும் எனக்கு சமமாக ஆகி விடுவானே என்ற எண்ணம். 



கரவா கியகல்வி யுளார் கடைசென்
 றிரவா வகைமெய்ப் பொருள் ஈகுவையோ
 குரவா குமரா குலிசா யுதகுஞ்
 சரவா சிவயோக தயாபரனே!

கரவாகிய கல்வி உளார் என்பார் அருணகிரிநாதர்.  கரவு என்றால் மறைத்தல். 

இயல்வது கரவேல் என்பது ஆத்திச் சூடி. 

கல்வி கற்றவர்கள் பிறருக்குச்  சொல்ல மாட்டார்கள். மறைத்து வைத்துக் கொள்வார்கள். 






Friday, August 7, 2020

ஔவையார் தனிப்பாடல் - இறுமேல் இறு

ஔவையார் தனிப்பாடல் - இறுமேல் இறு


ஒரு நூலோ, பாடலோ, கதையோ நல்லது என்று எப்படி அறிந்து கொள்வது?

நல்லது அல்லாதனனவற்றைப் படித்து நம் நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பது ஒரு புறம். தீயனவற்றைப் படிப்பதால் நம் மனம் குழம்பும். தீய வழியில் செல்ல முற்பட்டு விடுவோம்.

ஒரு நூல் நல்ல நூல் என்பதற்கு ஒரே சான்று அது காலத்தை வென்று நிற்க வேண்டும்.

நல்லன அல்லாதவற்றை காலம் கழித்து விடும்.

ஒரு நூல் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் நிற்கிறது என்றால் அதில் ஏதோ ஒரு உண்மை புதைந்து கிடக்கிறது என்றுதான் அர்த்தம்.

ஓலைச் சுவடியில் எழுதி வைத்த பாடல்கள் ஆயிரம் ஆண்டுகளைத் தாண்டி வந்திருக்கிறது என்றால் அதன் மகத்துவம் புரிய வேண்டும்.

அந்தக் காலத்தில் ஒரு நூலைச் செய்தால் அதை எளிதில் அங்கீகரிக்க மாட்டார்கள்.

அனல் வாதம், புனல் வாதம் என்றெல்லாம் உண்டு.

நூல் எழுதப் பட்ட ஓலைச் சுவடிகளை தீயில் போடுவார்கள். அது தீயில் கருகாமல் இருந்தால், அது நல்ல நூல் என்று ஏற்றுக் கொள்ளவார்கள்.

அது போல, ஓடுகிற நதியில் அந்த நூலைப் போடுவார்கள். அது ஆற்று நீரில் அடித்துக் கொண்டு செல்லாமல்  எதிர் நீந்தி வந்தால், அந்த நூல் ஏற்றுக் கொள்ளப் படும்.

ஒரு முறை ஒரு (பாண்டிய) மன்னன் ஒரு பெரிய கொம்பில் ஒரு கயிரைக் கட்டி, அதில் ஒரு பொன்னாலான ஒரு பையை கட்டித் தொங்க விட்டான்.

அவன், தன்னை நாடி பரிசு பெற வரும் புலவர்களிடம் சொல்லுவானாம் "நீங்கள்  கவிதை பாடுங்கள். அந்த பொற்கிழி கயிறு அறுந்து விழுந்தால் நீங்கள் அதை  எடுத்துக் கொண்டு செல்லலாம்" என்று.

புலவர்களுக்கு பயம். அவர்கள் பாடி, பொற் கிழி கீழே அறுந்து விழாவிட்டால், அவர்கள் பாட்டு  சிறந்தது அல்ல என்று நகைப்புக்கு இடமாகி விடும் அல்லவா?  எனவே யாரும் பாடல் பாடவில்லை.

மன்னனுக்கு சந்தோஷம்.

ஒளவையார் வந்தார். என்ன அங்கே பொற்கிழி கட்டி தொங்குகிறது என்று கேட்டு அறிந்து கொண்டாள். ஓ  இதுவா சங்கதி என்று இரண்டு பாடல்கள் பாடினாள் . இரண்டு பொற்கிழிகள் கயிறு அறுந்து விழுந்தது என்று கதை.

அதில் முதல் பாடல்.

"ஒருவன் கேட்காமல் அவனுக்கு உதவி செய்வது தான் தாளாண்மை எனப் படுவது. கேட்ட பின் கொடுப்பது வலிமையை காட்டுவது. மீண்டும் மீண்டும் ஒருவனை அலைய விட்டு பின் கொடுப்பது அவன் நடந்ததற்கு தந்த கூலி. அப்படி பல முறை வந்து கேட்ட பின்னும் கொடுக்காமல் இருப்பவன் குலம் வாரிசு அற்றுப் போய் விடும் என்பது உண்மையானால்,ஏ பொற் கிழியே நீ அறுந்து விழுவாய் "

இது முதல் பாடல். அவர் பாடி முடித்தவுடன், அவர் சொன்னது உண்மைதான் எனபதால், பொற் கிழி அறுந்து விழுந்ததாம்.

பாடல்

தண்டாமல் ஈவது தாளாண்மை - தண்டி 
அடுத்தக்கால் ஈவது  வண்மை - அடுத்தடுத்துப் 
பின்சென்றால் ஈவது காற்கூலி - பின்சென்றும் 
பொய்த்தான் இவனென்று போமேல், 
அவன்குடி எச்சம் இறுமேல் இறு.

பொருள்

(click the link below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/08/blog-post_7.html

தண்டாமல்  = பிச்சை கேட்காமல் (இன்றும் கூட மலையாளத்தில் தெண்டுதல் , தெண்டி என்ற சொற்கள் உண்டு. தெண்டி என்றால் பிச்சைக்காரன்).

ஈவது = கொடுப்பது

தாளாண்மை  = தயவு உள்ள குணம். கருணை.

தண்டி  = பிச்சை

அடுத்தக்கால் =  கேட்ட பின்

ஈவது = கொடுப்பது

வண்மை = வள்ளல் தன்மை

அடுத்தடுத்துப்  = மீண்டும் மீண்டும்

பின்சென்றால் = பின்னும் வந்து கேட்ட பின்

ஈவது =  கொடுப்பது

காற்கூலி = அவன் நடந்து வந்ததற்கு கொடுத்த கூலி

பின்சென்றும்  = அதன் பின்னும்

பொய்த்தான் = கொடுக்காமல் ஏமாற்றினால்

இவனென்று போமேல்,  = அவனை கொடுக்காமல் விட்டால்

அவன்குடி = அப்படிப்பட்டவன் குடும்பத்தில்

எச்சம் = வாரிசு

இறுமேல் = இற்றுப் போய்விடும் என்பது உண்மை ஆனால்

இறு = நீயும் அறுந்து போ (வாரிசு அறுந்து போவது போல)

கதை உண்மையோ பொய்யோ. ஆனால், அது சொல்லும் கருத்து உயர்வானது.

கேட்காமல் கொடுப்பது என்பது எவ்வளவு உயர்ந்த பண்பு.

இன்று பொது உடைமை பற்றி பேசுகிறோம். அன்றே, இதை எல்லாம் தாண்டி வாழ்க்கை முறையை வகுத்து  வைத்து இருக்கிறார்கள்.

விட்டு விட்டோம்.

பெறவும் இல்லை. கொடுக்கவும் இல்லை.

நடுவில் பல தலைமுறைகள் திசை தெரியாமல் தடுமாறி போய் இருக்கின்றன.

பல படையெடுப்புகள், ஆங்கிலேய ஆதிக்க, நம் பாடத்திட்ட முறைமைகளின் மாற்றம்  என்று வந்ததால் நம் அடிப்படை நமக்குத் தெரியாமல் போய் விட்டது.

அவற்றை நாம் புரிந்து கொள்வதுடன் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் வேண்டும்.





Saturday, August 1, 2020

திருவருட்பா - கருணை ஈதோ ?

திருவருட்பா - கருணை ஈதோ ?


ஒன்று அழகாக, நன்றாக இருந்தால் கண் பட்டு விடும் என்று சொல்லுவார்கள்.

குழந்தைகளுக்கு திருஷ்டி பொட்டு வைப்பார்கள். பார்ப்பவர் கண்கள், அந்த பொட்டில் போய் நிற்கட்டும் என்று.

கடைகளில் பூசணிக் காய், பெரிய அரக்கன் வடிவம், படிகாரக் கல் என்றல்லாம் வைத்திருப்பார்கள். காரணம் பார்ப்பவர் கண்கள் அவற்றின் மேல் சென்று விடும். அந்தப் பார்வையின் தீய நோக்கம் பாதிக்கப் படாமல் இருக்கட்டும் என்று.

இது நமது ஆழமான நம்பிக்கை.

வள்ளலார் பாடுகிறார்.

"முருகப் பெருமானே , உன்னுடைய அழகான பாதங்களை நான் பார்த்தால், இந்தப் பாவியின் கண் பட்டுவிடும் என்று நினைத்தா உன் பாதங்களை எனக்கு கனவில் கூட காட்டாமல் இருக்கிறாய்? உன்னை எல்லோரும் கருணை உள்ளவன் என்று சொல்கிறார்கள். இதுவா கருணை?"

என்று உருகுகிறார்.


பாடல்

பண்ஏறும் மொழிஅடியர் பரவி வாழ்த்தும்
பாதமலர் அழகினைஇப் பாவி பார்க்கில்
கண்ஏறு படும்என்றோ கனவி லேனும்
காட்டென்றால் காட்டுகிலாய் கருணை ஈதோ
விண்ஏறும் அரிமுதலோர்க் கரிய ஞான
விளக்கேஎன் கண்ணேமெய் வீட்டின் வித்தே
தண்ஏறு பொழில்தணிகை மணியே ஜீவ
சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே.

பொருள்

(click the link below to continue reading)


https://interestingtamilpoems.blogspot.com/2020/08/blog-post.html

பண் ஏறும்  மொழி = இசையுடன் கூடிய பாடல்

 அடியர் = அடியவர்கள்

பரவி  = போற்றி

வாழ்த்தும் = வாழ்த்தும்

பாதமலர் அழகினை  = அழகான உன் பாத மலர்களை

இப் பாவி பார்க்கில் =இந்தப் பாவி பார்த்தால்

கண் ஏறு படும்என்றோ = கண் பட்டு விடும் என்றா

கனவி லேனும் = கனவில் கூட

காட்டென்றால் = காட்டமாட்டாயா என்றால்

காட்டுகிலாய்  = காட்ட மாட்டேன் என்கிறாய்

கருணை ஈதோ = இதுவா கருணை

விண் ஏறும் = விண்ணகத்தில் உள்ள

அரி முதலோர்க் = திருமால் போன்றவர்களுக்கு

கரிய = அரிய, கடினமான

ஞான விளக்கே  = ஞான விளக்கே

என் கண்ணே = என் கண் போன்றவனே

மெய் வீட்டின் வித்தே = மெய்மையின் மூலமே

தண் ஏறு பொழில் = குளிர்ச்சி மிகுந்த சோலைகள் சூழ்ந்த

தணிகை மணியே  = திருத்தணிகையில் வாழும் மணியே

ஜீவ சாட்சியாய்  = உயிருள்ள சாட்சியாய்

நிறைந்தருளும்  = நிறைந்து அருள் செய்யும்

சகச வாழ்வே =  இயல்பான வாழ்வே

எவ்வளவு இனிமையான பாடல் !





Wednesday, July 29, 2020

நான்மணிக் கடிகை - உலக இயற்கை

நான்மணிக் கடிகை  - உலக இயற்கை 


கடிகை என்றால் துண்டு. மணி கடிகை என்றால் மணிகள் அமையப்பெற்ற துண்டு. இந்த நூலில் ஒவ்வொரு பாடலிலும் நான்கு நல்ல கருத்துக்களை அழகாகச் சொல்லுவதால் இது நான் மாணிக்கடிகை என்று பெயர் பெற்றது.

இனிமையான, அனுபவ மொழிகள்.

நமக்கு இப்போது  சில வலிமைகள் இருக்கும். உடல் நன்றாக இருக்கும். ஞாபகம் சரியாக இருக்கும். நம் வேலையை நாமே செய்து கொள்ளக் கூடிய வலு இருக்கும்.

ஆனால், இந்த வலிமை அப்படியே இருக்காது. ஒரு நாள் கட்டாயம் குன்றும். எழுந்திருக்க முடியாமல் போய் விடலாம். நினைவு குறைந்து பல விட்டுப் போகலாம்.

அதை நினைக்க வேண்டும். என்றும் நாம் இதே வலிமையோடு இருப்போம் என்று நினைக்கக் கூடாது.

உடல் வலிமை மட்டும் அல்ல. எல்லா வலிமையையும் ஒரு நாள் குன்றும்.

உலகம் அனைத்தையும் ஆண்ட சர்வாதிகாரிகள் எங்கே? அவர்கள் கட்டிய அரசாங்கம் எங்கே? உலகிலேயே பெரிய நிறுவனம் என்று சொல்லிக் கொண்டிருந்த சில நிறுவனங்கள் இன்று இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன.

எல்லா வலிமையையும் ஒருநாள் குன்றும்.

அது போல, பிறந்த உயிர்கள் எல்லாம் கட்டாயம் ஒரு நாள் அழியும். சந்தேகமே இல்லை.

அது போல, செல்வம். ஓரிரு தலைமுறைகள் இருக்கும். பின் விட்டுச் சென்று விடும்.  செல்வோம் என்பதால் அது செல்வம்.

இளமை அப்படியே இருக்குமா? இளமை மாறி முதுமை வருவது கட்டாயம்.

இதை எல்லாம் உணர்ந்து என்றும் அறம் செய்ய வேண்டும்.

பாடல்

சாவாத இல்லை பிறந்த உயிரெல்லாம்
தாவாத இல்லை வலிகளும் - மூவாது
இளமை யிசைந்தாரும் இல்லை - வளமையிற்
கேடுஇன்றிச் சென்றாரும் இல்.

பொருள்

(click the link below to read further)

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_64.html

சாவாத இல்லை பிறந்த உயிரெல்லாம் = பிறந்த உயிர்கள் சாகாமல் இருக்க முடியாது.


தாவாத இல்லை வலிகளும்  = எல்லாம் வலிமையையும் ஒரு நாள் குன்றும்.

மூவாது இளமை யிசைந்தாரும் இல்லை = மூப்பு அடையாமல் எப்போதும் இளமையோடு இருப்பவர் யாரும் இல்லை

வளமையிற் கேடுஇன்றிச் சென்றாரும் இல். = செல்வச் செழிப்போடு இருந்தாலும், அந்தச் செல்வம் நீண்ட நாள் நிற்காமல் போய் விடும்.


பிறந்தது இறக்கும், வலிமைகள் குன்றும், இளமை போய் முதுமை வரும், செல்வம் ஒரு நாள் போய் விடும்.

யாக்கை நிலையாமை
இளமை நிலையாமை
செல்வத்தின் நிலையாமை
வலிமையின் நிலையாமை

இந்த நிலையாமைகளைப் பற்றி ஒரே செய்யுளில் சொல்கிறது நான்மணிக் கடிகை.

இந்த நூலில் உள்ள மற்ற பாடல்களையும் படித்துப் பாருங்கள். 

நாலடியார் - தோள் வைத்து அணை மேல் கிடந்து

நாலடியார் - தோள் வைத்து அணை மேல் கிடந்து 


நாலடியார் என்றால் ஏதோ தத்துவம், அறம் மட்டும் பேசும் நூல் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது.

இல்லறம் இனிமையாக இருக்க வேண்டும் என்றால் கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்க வேண்டும். ஒருவர் மேல் ஒருவர் அன்பு செலுத்த வேண்டும். என்னை பிரிந்து அவள் எப்படி இருப்பாளோ என்று கணவன் நினைக்க வேண்டும். அதே போல் மனைவியும்.

பிரிவு என்பது  அருளிரக்கத்தை தரும் என்பார்கள். "ஐயோ பாவம், அவள் தனியாக எப்படி துன்பப் படுவாளோ" என்று அவள் மேல் இரக்கமும், அதன் காரணமாக அவள் மேல் அருளும் பிறக்குமாம்.

"நான் இல்லாட்டி என்ன, அவ தனியா சமாளிச்சுக்குவா" என்று கணவன் நினைத்தால், பின் பிரிவு என்பதன் அர்த்தம்தான் என்ன?

Independence, equal rights, liberation என்ற பெயரில் மெல்லிய அன்பு உணர்வுகளை சிதைக்க தலைப் பட்டுவிட்டோம். ஒருவரை ஒருவர் சார்ந்து நிற்பது என்பது அடிமை தளை என்று நமக்கு நாமே கற்பித்துக் கொண்டு, அந்த அடிமை தளையில் இருந்து விடுதலை பெற துடிக்கிறோம்.

அன்புக்கு கட்டுப் படுவதின் சுகம் தெரியாதவர்கள்.

தலைவியை பிரிந்த தலைவன், வேறு ஏதோ ஊரில் இருக்கிறான். தலைவியைப் பற்றி நினைக்கிறான். அவன் மனதில் இரக்கம் பிறக்கிறது.

"பாவம் அவளை தனியே விட்டு விட்டு வந்து  விட்டேன். மாலை நேரத்தில் அவள் என் பிரிவால் மனம் ஏங்கி, கண்ணீர் விட்டு, அந்த கண்ணீரை தன்னுடைய மெல்லிய விரலால் தொட்டு துடைத்து, நான் செய்த இந்த குற்றத்தை நினைத்து, கையை தலைக்கு வைத்து படுத்துக் கொண்டு வருந்திக் கொண்டு இருப்பாளோ" என்று ஏங்குகிறான்.

பாடல்

செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்டநீர்
மெல்விரல் ஊழ்தெறியா விம்மித்தன் - மெல்விரலின்
நாள்வைத்து நங்குற்றம் எண்ணுங்கொல், அந்தோதன்
தோள்வைத் தணைமேற் கிடந்து.

பொருள்

(click the link below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_29.html

செல்சுடர்  = சுடர் என்றால் சூரியன். செல் சுடர், மாலை நேரச் சூரியன். (தமிழ் எங்கள் உயர்வுக்கு வான், இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன் -பாரதி தாசன்)

நோக்கிச் = அந்த சூரியனைக் கண்டு

சிதரரிக்கண் கொண்டநீர் = சிவந்த கண்களில் வந்த கண்ணீர் சிதற

மெல்விரல் =மெல்லிய விரல்களைக் கொண்ட அவள்

ஊழ்தெறியா =விதி  தெரியாமல்

விம்மித் =விம்மல் கொண்டு

தன் - மெல்விரலின் = தன்னுடைய மெல்லிய விரலின்

நாள்வைத்து =நாட்களை குறித்து

நங்குற்றம் =என்னுடைய குற்றத்தை

எண்ணுங்கொல், = நினைத்து வருந்துவாளோ

அந்தோ = அந்தோ

தன் = தன்னுடைய

தோள்வைத் தணைமேற் கிடந்து. = கையை தலைக்கு தலையணையாகக் கொண்டு

கற்பனை செய்து கொள்ளுங்கள்.

புதிதாக மணம் முடித்த பெண். கணவனை பிரிந்து இருக்கிறாள். மெலிந்து, தரையில் படுத்து இருக்கிறாள். கையை மடித்து தலைக்கு வைத்துக் கொண்டு படுத்து இருக்கிறாள்.

இரவு நேரம் கூட அல்ல. மாலை நேரம்.

சீவி முடித்து, பூ வைத்து, விளக்கு ஏற்றி, அதெல்லாம் அவளுக்குத் தோன்றவிலை. கட்டாந் தரையில் அந்தி சந்தி நேரம் படுத்துக் கிடக்கிறாள்.

கண்ணில் இருந்து நீர் வழிகிறது. விரலால் சுண்டி விடுகிறாள்.

கண்ணீர் நிறைவதால் "ஊழ் தெரியா" என்றார்.

அவள் அப்படி இருப்பாளோ என்னவோ தெரியாது. அப்படி இருப்பாள் என்று  கணவன்  நினைக்கிறான். அவன் மனதில் பச்சாதாபம் ஏற்படுகிறது.

என்னால் தானே அவள் துன்பப் படுகிறாள் என்று இவன் வருந்துகிறான்.

தான் குற்றம் செய்து விட்டதாக பழியை தன் மேல் போட்டுக் கொள்கிறான் "நம் குற்றம் எண்ணும் கொல் "என்று நினைக்கிறான்.

அவளுக்கு என்ன, ஜாலியா ஊர் சுத்திட்டு, swiggy ல order பண்ணி சாப்பிட்டுக்கிட்டு இருப்பாள் என்று  நினைத்தால் காதல் வருமா?

மீண்டும் மீண்டும் அவன் நினைவில் வருவது அவளின் மெல்லிய விரல்கள்.

அவள் வருந்துவாளே என்று அவன் வருந்துகிறான்.

அது தான் தாம்பத்யம். அது தான் காதல்.


இப்படி மெல்லிய, நுணுக்கமான மனித உணர்வுகளை படம் பிடித்துக் காட்டுகிறது  நாலடியார்.

இப்படி நிறைய பாடல்கள் இருக்கின்றன.

மூல நூலை தேடிப் பிடித்து படியுங்கள்.

Tuesday, July 28, 2020

திருக்குறள் - நன்றி மறப்பது நன்றன்று

திருக்குறள் - நன்றி மறப்பது நன்றன்று 


தமிழ் பாடல்களை படித்து புரிந்து கொள்வது என்ன பெரிய கடினமான காரியமா என்று நான் நினைத்தது உண்டு.

எந்தப் பாடலிலும் ஒரு சில கடினமான சொற்கள் இருக்கும். அகராதியில் தேடினால் தெரியாத சொற்களுக்கு பொருள் விளங்கிவிட்டுப் போகிறது.

இதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று நினைத்தேன்.

அது எவ்வளவு தவறு என்று பரிமேலழகரின் உரையைப் படிக்கும் போது தெரிகிறது.

நாம் சொல்லில் இருந்து பொருளை பிடிக்க நினைக்கிறோம். அவர் பொருளில் இருந்து சொல்லுக்கு வருகிறார்.

பாடல்

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று

பொருள்

(to continue reading, please click the link below)

interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_50.html

இது என்ன பெரிய சிக்கலான குறளா ? வார்த்தைக்கு வார்த்தை பொருள் சொல்வதானால் இப்படி சொல்லி விடலாம்

நன்றி   = ஒருவன் நமக்குச் செய்த நல்லவைகளை

மறப்பது நன்றன்று = மறப்பது நல்லது அல்ல

நன்றல்லது = நன்மை தராதவற்றை

அன்றே மறப்பது நன்று = அன்றே மறப்பது நல்லது

அவ்வளவுதானே. பொதுவான அர்த்தம் அப்படித்தான் என்று நினைப்போம். இதில் என்ன  நுணுக்கமான பொருள் இருந்து விடப் போகிறது என்று நினைத்து  இதை அலட்சியம் செய்து விட்டு அடுத்து குறளுக்கு தாவி விடுவோம்.

பரிமேலழகர் ஒரு உரை சொல்கிறார். எத்தனை ஆயிரம் வருடம் படித்தாலும் அது  என் மர மண்டைக்கு எட்டி இருக்காது.

அது என்ன தெரியுமா?

நமக்கு நல்லது செய்வதும், அல்லாதன செய்வதும் வேறு வேறு ஆள் என்று நினைத்துக் கொண்டு நாம் பொருள் சொல்கிறோம்.

ஒரே ஆள் இரண்டையும் செய்தால்?

இப்படி யோசிக்க முடியுமா நம்மால்?

ஒருவன் நமக்கு நன்மையையும் செய்து இருக்கிறான், தீமையும் செய்து இருக்கிறான். அப்படி இருந்தால், அவன் செய்த நல்லவைகளை மனதில் வைத்துக் கொள் . அவன் செய்த தீமைகளை உடனேயே மறந்து விடு என்கிறார்.

நம்மில் பலருக்கு சிக்கல் என்ன என்றால், நல்லதை மறந்து விடுகிறோம். தீயவற்றை  நினைவில் வைத்துக் கொள்கிறோம்.

பெரும்பாலான கணவன் மனைவி சிக்கல் ஏன் வருகிறது.

என்றோ எப்போதோ நடந்த ஒன்றை ஞாபகம் வைத்துக் கொண்டு,  நீங்கள் அன்று அப்படி சொன்னீர்களே, அப்படிச் செய்தீர்களே என்று அந்த ஒரு நல்லன அல்லாதாதை  ஆயுள் முடியும் வரை மனதில் வைத்து கொண்டு சொல்லிக் சொல்லி காட்டிக் கொண்டே இருப்பது.

கணவன் எவ்வளவு நல்லது செய்து இருந்தாலும், எல்லாவற்றையும் மறந்து விட்டு, என்றோ சொன்ன ஒன்றை ஞாபகம் வைத்து மறக்காமல் சொல்வது.

நம்மை சுற்றி உள்ள ஒவ்வொருவரும் நமக்கு ஏதோ ஒரு நன்மை செய்து இருப்பார்கள். அறிந்தோ அறியாமலோ சில தீமைகளும் செய்து இருக்கலாம்.

தீமையை மறந்து, நல்லதை மட்டும் மனதில் வைத்து இருந்தால் வாழ்க்கை எவ்வளவு சுகமாக இருக்கும்? உறவுகள் எவ்வளவு இனிமையாக இருக்கும்.

ஒருவன் நமக்கு ஒரு தீமை செய்தால், அதை எப்படி மறக்க முடியும்? வள்ளுவர் சொல்லுவார். அவருக்கு என்ன.

இன்னும் சொல்லப் போனால், தீமை மட்டும் தான் ஆழமாக ஞாபகம் இருக்கிறது.

இந்த மனுஷன் திருவள்ளுவர், இப்படி ஒரு கேள்வி வரும் என்று நினைத்து, அதற்கும் பதில் சொல்லிவிட்டு   போய் இருக்கிறார்.

மறப்பது எப்படி என்று தெரியுமா உங்களுக்கு?

எவ்வளவு யோசித்தாலும் கண்டு பிடிக்க முடியாது. திருவள்ளுவர் ஒருவரால் தான்  அப்படி யோசித்து சொல்ல முடியும்.

மறப்பது எப்படி என்று வள்ளுவர் சொன்னதை நாளை சிந்திப்போமா ...



Monday, July 27, 2020

நாலடியார் - எதைக் கற்பது ?

நாலடியார் - எதைக் கற்பது ?


உலகத்தில் கற்றுக் கொள்ள வேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன. எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள முடியுமா?  அதுவும் நன்றாக இருக்கிறது, இதுவும் சுவாரசியமாக இருக்கிறது, அது பயனுள்ளதாக இருக்கும், இது ஆன்மீகத்துக்கு உரிய நூல் என்று அவ்வளவு கொட்டிக் கிடக்கிறது.

சரி, ஏதோ ஒன்றை படிக்கலாம் என்று உட்கார்ந்தால் , "டொய்ங்" என்று whatsapp சத்தம். என்ன தான் வந்திருக்கிறது என்றுர் பார்ப்போம் என்று மனம் அதன் பின்னே போகிறது. பார்த்தால் அதோடு நிற்குமா மனம்? அதுக்கு ஒரு பதில் போடுவது. நாம் போட்டால் மற்றவன் சும்மா இருப்பானா? அவன் பதிலுக்கு ஒன்று சொல்லுவான். இப்படி கொஞ்ச நேரம் போகிறது.

சரி, அதை எல்லாம் முடித்து விட்டு படிக்கலாம் என்று நினைத்தால்,இந்த செய்திகளை கொஞ்சம் பார்த்து விட்டு வந்து விடலாம் என்று மனம் போகிறது.  கொரோனா என்ன ஆச்சோ, கிரிக்கட் மேட்ச் எப்படி வருமோ, தங்கம் விலை என்ன ஆயிற்றோ என்று கவலை. சரி அதை எல்லாம் பார்த்துட்டு படிக்கலாம் என்று நினைத்தால்,

இந்த hotmail / gmail ஒருக்க சீக்கிரம் பாத்ருவோம் என்று மனம் போகிறது.

அப்புறம், இந்த facebook update கொஞ்சம் பாக்கணும்.

இது உருப்படுமா?



நாலடியார் சொல்கிறது....

"கல்விக்கு கரை இல்லை. நம் வாழ்நாளோ மிகவும் சொற்பமானது. அதிலும் பல நாட்கள் நோயில் போய் விடுகிறது. எனவே, ஆராய்ந்து, தெளிந்து சிறந்தவனவற்றையே படிக்க வேண்டும். எப்படி என்றால், நீரும் பாலும் கலந்து இருந்தாலும், நீரை விடுத்து பாலை மட்டும் உண்ணும் அன்னம் போல."

பாடல்

கல்வி கரையில கற்பவர் நாள்சில;
மெல்ல நினைக்கின் பிணிபல - தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
பாலுண் குருகின் தெரிந்து.

click the link below to continue reading

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_34.html

பொருள்

கல்வி கரையில = கல்வி கரை காண முடியாதது. நாலடியார் காலத்திலேயே அப்படி என்றால், இப்போது எவ்வளவு வளர்ச்சி நிகழ்ந்து இருக்கிறது?

கற்பவர் நாள்சில; = கற்றுக் கொள்ள நினைப்பவர்களின் நாடுகளோ வெகு சில.


மெல்ல நினைக்கின்  = ஆராய்ந்து பார்த்தால்

பிணிபல = நோய் பல.உடல் நோயும், மன நோயும்.

தெள்ளிதின் =  தெளிந்து

ஆராய்ந்து =ஆராய்ந்து

அமைவுடைய = பொருத்தமானவற்றை

கற்பவே = கற்க வேண்டும்

நீரொழியப் = நீரை நீக்கி

பாலுண் = பாலை மட்டும் உண்ணும்

குருகின் தெரிந்து. = அன்னப் பறவையைப் போல

வாசிக்கின்ற ஒவ்வொன்றையும் கேள்வி கேட்க வேண்டும். நான் இப்போது வாசிப்பது எனக்கு  எந்த விதத்தில் நன்மை பயக்கும் என்று.

தனக்கும், பிறருக்கும் இம்மைக்கும், மறுமைக்கும் அறம் பொருள் இன்பம் என்றான பலன்களை தராத நூல்களை ஒரு போதும் படிக்கக் கூடாது.

என்ன ? சரியா?