Thursday, January 21, 2021

ஆசாரக் கோவை - முந்தையோர் கண்ட முறை

ஆசாரக் கோவை - முந்தையோர் கண்ட முறை 


ஏன் ஆசாரம் வேண்டும் என்று முந்தைய பிளாகில் சிந்தித்தோம். இனி, என்னவெல்லாம் ஆசாரம் இருக்கிறது, அதை எப்படி கடை பிடிக்க வேண்டும் என்று சிந்திப்போம். 

பாடலை படிக்கும் முன், கொஞ்சம் இலக்கணம், கொஞ்சம் நம் கலாச்சாரம் இரண்டையும் தெரிந்து கொள்வோம். 


தமிழர்கள் காலத்தை இரண்டாகப் பிரித்தார்கள். 


சிறு பொழுது, பெரும் பொழுது. 


ஒரு நாளின் வேறு வேறு பகுதிக்கு சிறு பொழுது என்று பெயர்.


ஒரு ஆண்டின் வேறு வேறு பகுதிக்கு பெரும் பொழுது என்று பெயர். 


6  - 10  -  காலை 

10 - 2 - நண்பகல் 

2 - 6 - ஏற்பாடு 

6 - 10 - மாலை 

10 - 2 - யாமம் 

2 - 6 - வைகறை 


இந்த அதிகாலை 2 முதல் 6 மணிவரை உள்ள நேரம் இருக்கிறதே, இதை ப்ரம்ம முகூர்த்தம்  என்று சொல்லுவார்கள். 

படிக்க, பாராயணம் செய்ய, நல்ல காரியங்கள் தொடங்க சிறந்த நேரம் என்று சொல்லுவார்கள். 

சாத்வீக குணம் உச்சம் பெற்று இருக்கும் நேரம். 


ஆசாரக் கோவை சொல்கிறது - வைகறையில் படுக்கையில் இருந்து எழுந்து விட வேண்டும். 

எழுந்த உடன், அன்று செய்ய வேண்டிய நல்ல வேலைகளை பட்டியல் போட்டுக் கொள்ள வேண்டும். மனதில் சிந்திக்க வேண்டும்.  அந்த ரிப்போர்ட் அனுப்பனும், இதில் முதலீடு செய்ய வேண்டும், இன்னாரை பார்க்க வேண்டும், அந்த பதிலை இன்று போட்டு விட வேண்டும், என்று என்னவெல்லாம் நல்ல காரியங்கள் செய்ய வேண்டி இருக்கிறதோ, அதை சிந்தித்து மனதில் குறித்துக் கொள்ள வேண்டும். 

பின் தந்தையையும், தாயையும் தொழ வேண்டும். 


பாடல் 

 வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும்

நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதின்

தந்தையும் தாயும் தொழுது எழுக!’ என்பதே-

முந்தையோர் கண்ட முறை.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_21.html


click the above link to continue reading


வைகறை யாமம் துயில் எழுந்து = யாமம் தாண்டி, வைகறையில் துயில் எழுந்து. வைகறை ஆறு மணி வரை இருக்கிறதே என்று அதுவரை தூங்கக் கூடாது. யாமம் தாண்டிய வைகறையில் எழ வேண்டும். 

தான் செய்யும் = நாம் செய்ய வேண்டிய 

நல் அறமும்  = நல்ல அறச் செயல்களையும் 

ஒண் பொருளும் = சிறந்த பொருள்களையும் 

சிந்தித்து = மனதில் சிந்தித்து 

வாய்வதின் = வாய்த்த, 

தந்தையும்  = தந்தையையும் 

தாயும் தொழுது எழுக!’ = தாயையையும் தொழுது எழுக 

என்பதே- = எனபதே 

முந்தையோர் கண்ட முறை. = முன்னோர் கண்டா நல்ல வழி 


இது ஆசாரக் கோவை சொல்வது அல்ல. இப்படித்தான் நம் முன்னோர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்று அது   சொல்கிறது. 


5 am club என்று ஒரு ஆங்கில நூல் எழுதினால், காசு போட்டு வாங்கி படித்து விட்டு, பிரமாதம் என்று சொல்கிறார்ககள். 

அதற்கு ஆயிர கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே இதையெல்லாம் சொல்லிவிட்டுப் போய் இருக்கிறார்கள். 


அதி காலை எழுந்து பாருங்கள். அதன் சுகம் தெரியும். 

நாள் முழுவதும் ஒரு புத்துணர்ச்சியோடு இருப்பதை உணர்வீர்கள். 


இப்படி, பல பாடல்கள் இருக்கின்றன.


மூல நூலை தேடிப் பிடித்து படித்து பயன் அடையுங்கள். 





Wednesday, January 20, 2021

கம்ப இராமாயணம் - கல்லும் மரங்களும் உருக நோக்கும் காதலன்

 கம்ப இராமாயணம் - கல்லும் மரங்களும் உருக நோக்கும் காதலன் 


வீடணன் செய்தது சரியா, தவறா என்ற வாதம் இன்று வரை தொடர்கிறது. 

என்னைப் பொறுத்தவரை சரி தவறு எல்லாம் அறிவு சம்பந்தப் பட்டது.  சாத்திரங்கள், சட்டங்கள், நடைமுறை பழக்க வழக்கங்கள் இவற்றைக் கொண்டு, தர்கா ரீதியாக அலசி ஆராய்ந்து எடுக்கப்படும் முடிவுகளை சரியா தவறா என்று விவாதம் செய்யலாம்.


அளவற்ற அன்பில், கருணையில் பிறக்கும் ஒரு செயலை எப்படி சரி தவறு என்று நிர்ணயம் பண்ணுவது. 


பிள்ளைக்கு உடம்பு சரியில்லை. சரியாக சாப்பிட மாட்டேன் என்கிறது. சோர்ந்து படுத்து இடுக்கிறது. ஊரெல்லாம் விழாக் கோலம். பக்கத்து வீடுகளில் இருந்து நிறைய பலகாரங்கள் வந்து கிடக்கிறது. அந்தப் பிள்ளையின் அம்மா உற்சாகமாக அவற்றை எடுத்து உண்பாளா ? அல்லது, அவற்றை வெறுத்து ஒதுக்குவாளா?


பிள்ளைக்குத் தானே உடம்பு சரி இல்லை. இவளுக்கு என்ன? சாப்பிட வேண்டியது தானே?  இவள் சாப்பிடாமல் விட்டால் பிள்ளைக்கு உடம்பு சரியாகுமா?  அவள் செய்தது சரியா தவறா என்று விவாதம் பண்ண முடியாது. 


எனக்குத் தெரிந்து எவ்வளவோ வீடுகளில் பிள்ளைகள் நலமாக இருக்க வேண்டும், கணவன் நலமாக இருக்க வேண்டும் என்று பெண்கள் பல விரதங்கள் இருக்கிறார்கள்.  பிள்ளை பிழைத்து வந்தால், இனி வாழ் நாள் எல்லாம் இனிப்பு சாப்பிடாமல் இருப்பேன்  என்றெல்லாம் தியாகம் செய்கிறார்கள். இவை எல்லாம் சரியா தவறா என்று விவாதம் பண்ண முடியாது. 


அன்புக்கு முன்னால் எல்லாம் சரி தான். 


கருணைக் கொலை என்று சொல்கிறார்கள்.  அன்புக்கு உரியவர் படும் பாடு தாங்க முடியாமல்  அவர்கள் நிம்மதியாகப் போய் சேரட்டும் என்று அவர்களுக்கு தரும்  சிகிச்சையை நிறுத்தி அவர்கள் உயிர் பிரிய வழி செய்கிறார்கள். அது கொலை தான். அதற்குப்   பெயர் கருணைக் கொலை. பல நாடுகள்   அதை அங்கீகரிக்கிறது. 


அன்புக்கு முன்னால், எதுவும் சரி தான். 


அதை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், சட்டப் புத்தகங்களை தூக்கிக் கொண்டு வரக் கூடாது. மனம் நிறைய அன்பைக் கொண்டு வர வேண்டும்.   அவ்வளவு அன்பு வந்து விட்டால், இந்த விவாதங்கள் இருக்காது. 


இராமனிடம் அடைக்கலம் வேண்டி வீடணன் வருகிறான். 


அவன் வரும் அந்தக் காட்சியை கம்பன் காட்டுகிறான். படித்துப் பாருங்கள். அதற்குப் பின், சரியா தவறா என்ற வாதங்கள் எவ்வளவு அபத்தம் என்று புரியும். 


"இரண்டு கைகளையும் தலைக்கு மேல் கூப்பியபடி வருகிறான். அவன் மனதில் உள்ள அன்பும் கருணையும் கண்ணில் வெளிப்படுகிறது. அதைப் பார்த்து கல்லும் மரமும் உருகுகின்றன. இராமன் அவனை பார்த்த போது, தரையில் விழுந்து வணங்குகிறான்".


இது நான் சொல்லும் உரை. கம்பன் பாடலைப் பாருங்கள். மனம் உருகும்.


பாடல் 

கரங்கள் மீச் சுமந்து செல்லும் கதிர் மணி முடியன், கல்லும்

மரங்களும் உருக நோக்கும் காதலன், கருணை  வள்ளல்

இரங்கினன் நோக்கும்தோறும், இரு நிலத்து இறைஞ்சுகின்றான்;

வரங்களின் வாரி அன்ன தாள் இணை வந்து வீழ்ந்தான்.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_20.html


click the above link to continue reading


கரங்கள் = கைகளை 

மீச்  = மேலே 

சுமந்து = சுமந்து. கைகள் மேலே நிற்கவில்லை. தளர்ந்து விழுகின்றது. அதை தலையில் சுமந்து 

செல்லும் = செல்லுகின்ற 

கதிர் = ஒளி வீசும் 

மணி  = மணிகள் நிறைந்த 

முடியன் = கிரீடம் அணிந்த வீடணன் 

கல்லும் = கல்லும் 

மரங்களும் = மரங்களும் 

உருக = உருகும்படி 

நோக்கும் காதலன் = நோக்கும் காதலன் 


கருணை  வள்ளல் = கருணை வள்ளலான இராமன் 

இரங்கினன் = இரக்கம் கொண்டு 

நோக்கும்தோறும், = பார்க்கும் போதெல்லாம் 

இரு நிலத்து இறைஞ்சுகின்றான்; = நிலத்தில் விழுந்து வணங்குவான் 

வரங்களின் = வரங்களின் 

வாரி அன்ன = கடல் போன்ற 

தாள் இணை = இரண்டு திருவடிகளில் 

வந்து வீழ்ந்தான். = வந்து வீழ்ந்தான். வணங்கினான் என்று கூட இல்லை. வீழ்ந்தான்  என்கிறான் கம்பன். 


இராமனை சொல்லும் போது , "வரங்களின் கடல்" என்கிறான். எவ்வளவு கொடுத்தாலும் குறையாது. 


வீடணனின் தோற்றம் கண்டு கல்லும் மரமும் உருகியது. 


அப்படிப்பட்ட மனதில் குற்றம் இருக்குமா?  துரோக சிந்தனை இருக்குமா? பதவி ஆசை இருக்குமா? 


சரியா தவறா என்று ஆய்வு செய்வது அன்பில்லாதவர்,  அன்பு பற்றி அறியாதவர் செய்யும் செயல். 


அன்புக்கு மிஞ்சிய ஒரு அறம் இல்லை. 





Tuesday, January 19, 2021

ஆசாரக் கோவை - முந்தையோர் கண்ட முறை

 ஆசாரக் கோவை - முந்தையோர் கண்ட முறை


ஆசாரம் என்றால் ஒழுக்கம். ஒழுக்கம் என்றால் நம்மை விட உயர்ந்தவர்கள் செய்தவற்றை நாம் இடைவிடாமல் செய்வது. 

உயர்ந்தவர்கள் என்றால் அறிவில், அனுபவத்தில், ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள்.  இன்று என்ன ஆகி விட்டது என்றால் யார் சொல்வதை கேட்பது, யார் செய்வதை பின்பற்றுவது என்பதில் பெரிய குழப்பம் இருக்கிறது. 


அயோக்கியத்தனம் செய்பவன் எல்லாம் நல்லவன் என்று சினிமா மற்றும் பிற ஊடகங்கள் சித்தரிக்கத் தொடங்கிவிட்டன. மக்கள் குழம்ப ஆரம்பித்து விட்டார்கள். எது சரி, எது தவறு என்பதில் தடுமாற்றம் வருகிறது. 


யாரிடம் கேட்பது?


வக்கிரங்கள் எல்லாம் நடை முறையாகிக் கொண்டு வருகிறது. 


இந்த மாதிரி தருணங்களில், நமக்கு வழிகாட்ட ஆசாரக் கோவை போன்ற நூல்கள் உதவுகின்றன.


எதற்கு ஆசாரத்தை  கடை பிடிக்க வேண்டும்?


அது எல்லாம் அந்தக் காலத்தில் செய்தார்கள். இது கம்ப்யூட்டர் காலம். இப்ப வந்து ஆசாரம்   என்று பேசிக் கொண்டு என்று கேலி பேசுகிறார்கள். 


ஆசாரத்தை கடை பிடிப்பவர்கள் கூட அதைஏன் செய்கிறாய் என்று கேட்டால் பதில் தெரியாமல் விழிக்கிறார்கள். முன்னோர்கள் செய்தார்கள். நானும் செய்கிறேன். எல்லாம் ஒரு நம்பிக்கைதான் என்று ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார்கள். 


ஆசாரம் என்றால் என்ன, அதை ஏன் கடைபிடிக்க வேண்டும் என்று அறிந்து கொண்டு கடைபிடிப்போம். 


மனித வாழ்க்கை அகம் புறம் என இரண்டாக இருக்கிறது. இரண்டாக இருந்தாலும், ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டுள்ளது. 


மனதை செம்மை செய்தால், வாழ்வு உயரும். மனதில் உள்ள அழுக்கை நீக்கினால், வாழ்வு சுகப்படும். 


பொறாமை, கோபம், வன்மம், துவேஷம்,  பொருந்தா காமம், பேராசை, கயமை போன்ற  கீழான எண்ணங்களை நீக்கினால், வாழ்வு எவ்வளவு சுகமாக இருக்கும். 


ஆனால், எப்படி நீக்குவது? 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_19.html


click the above link to continue reading


மனதை வெளியே எடுத்து, சுத்தம் செய்து திருப்பி உள்ளே வைக்க முடியுமா? 


முடியாது. மனதை நம்மால் நேரடியாக ஒன்றும் செய்ய முடியாது. 


ஆனால், மனமும், உடலும் நெருங்கிய தொடர்பு உள்ளவை. உடலை மாற்றினால் மனம் மாறும். 


நாலு நாள் குளிக்காமல் இருந்து பாருங்கள். உடல் அழுக்காக இருக்கும். ஆனால், மனமும் சோர்ந்து, குறுகி விடும். 


நல்ல வெந்நீர் வைத்தது குளித்து, புது ஆடை அணிந்து, கொஞ்சம் வாசனை திரவங்களை தெளித்தால், உடம்பு புத்துணர்ச்சி அடைவது மட்டும் அல்ல, மனமும்  துள்ளிக் கொண்டு நிற்கும். 


உடலை சரி செய்தால், மனம் சரியாகும்.  


இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 


ஆசாரம் என்பது உடலின் மூலம் மனதை சரி செய்யும் வித்தை. 


வெறும் ஆசாரத்தோடு நின்று விடக் கூடாது. 


காலையில் எழுந்து பல் விளக்கி குளித்து விட்டுத்தான் அடுப்பே பத்த வைப்பேன் என்று பெருமையாக சொல்வார்கள். 


ஏன்? குளிக்காமல் பத்த வைத்ததால் என்ன ஆகும் என்று கேட்டால் தெரியாது. 


காலையில் குளிக்கும் போது மனம் எப்படி சிலிர்க்கிறது என்று பார்க்க வேண்டும். இரவின் சோம்பல் எல்லாம் போய், உடம்பு புத்துணர்ச்சி பெறும் போது உள்ளமும் மகிழும். சுறுசுறுப்பாக இருக்கும். புத்தி நன்றாக வேலை செய்யும். 


குளிப்பதற்கு அல்ல ஆசாரம். மனதையும், புத்தியையும் தெளிவு படுத்த. 


எனவே, உடலை எப்படி ஒரு ஒழுக்க நிலையில் கொண்டு வர வேண்டும் என்று சொல்ல வருகிறது  ஆசாரக் கோவை. 


நமக்குத் தெரியுமா எப்படி உடம்பை, நாளை, மூளையை நெறி படுத்துவது என்று? தெரிந்தால் பின் ஆசாரக் கோவை படிக்க வேண்டாம். 


தெரிந்து கொள்ள விரும்பினால், ஆசாரக் கோவை நமக்கு வழி காட்டும். 


என்ன தான் சொல்கிறது என்று பார்ப்போமே.....கடை பிடிக்கறோமோ இல்லையோ, தெரிந்து கொள்வோமே...


தெரிந்து கொள்வோமா?

Tuesday, January 12, 2021

திருவாசகம் - ஒளி செய் மானிடம்

 திருவாசகம் - ஒளி செய் மானிடம் 


திருவாசகம் படிக்க படிக்க கண்ணில் நீர் நிறைவது என்னவோ உண்மைதான். 

நமக்கு கிடைத்து இருக்கும் கொடைகளை எண்ணிப் பாருங்கள். ஆரோக்கியமான உடல். இது நாள் வரை. கண் இல்லாமல் இருந்திருந்தால் எப்படி இருக்கும்? இரண்டு கால் இல்லாமல் இருந்திருந்தால்? எத்தனையோ குறைகள் இல்லாமல் இருக்கிறோம். என்றாவது அது பற்றி மகிழ்ந்தது உண்டா? திருப்தி அடைந்தது உண்டா? 

அறிவு இருக்கிறது. படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. படிக்க ஆயிரம் ஆயிரம் புத்தகங்கள் கொட்டிக் கிடக்கிறது. அறிவை அள்ளி அள்ளித் தர வரிசையில் நிற்கிறார்கள் அறிஞர் பெருமக்கள். 

அதெல்லாம் நமக்குத் தெரிவதில்லை. 

இருப்பதை எல்லாம் புறம் தள்ளி விட்டு, இல்லாததை கொண்டா என்று எவ்வளவு கீழ்மையாக நாம் நடந்து கொள்கிறோம். 


மணிவாசகர் உருகுகிறார். 


எனக்கு முன்னால் வந்தவர்கள், உன் கருணை வேண்டும் என்று உண்மையிலேயே வேண்டி, அதைப் பெற்றுக் கொண்டார்கள். எவ்வளவோ பெரிய ஆள் நீ. எனக்காக அருள் செய்ய வந்தாய். அந்தக் கருணையைக் கூட நான் புரிந்து கொள்ளவில்லை. என்னே என் கீழ் மதி 


என்று நொந்து கொள்கிறார். 


பாடல் 


மாறு இலாத மாக் கருணை வெள்ளமே! வந்து முந்தி நின் மலர்கொள் தாள் இணை,

வேறு இலாப் பதப் பரிசு பெற்ற, நின் மெய்ம்மை அன்பர், உன் மெய்ம்மை மேவினார்;

ஈறு இலாத நீ, எளியை ஆகி வந்து, ஒளிசெய் மானிடம் ஆக, நோக்கியும்,

கீறு இலாத நெஞ்சு உடைய நாயினேன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_12.html


click the above link to continue reading


மாறு இலாத = மாற்றம் இல்லாத 

மாக் கருணை = பெரிய கருணை 

வெள்ளமே! = வெள்ளமே 

வந்து = இங்கு வந்து 

முந்தி = எனக்கு முன்னால் 

நின் மலர்கொள் = உன்னுடைய மலர் போன்ற 

தாள் இணை, = இரண்டு திருவடிகளை 

வேறு இலாப் = நீங்குதல் இல்லாத 

பதப் பரிசு பெற்ற = அந்தப் பாதங்களை அடையும் பரிசு பெற்ற 

நின் = உன் 

மெய்ம்மை அன்பர் = உண்மையான அன்பர்கள் 

உன் மெய்ம்மை மேவினார்; = உன்னை அடைந்தார் 

ஈறு இலாத நீ = முடிவே இல்லாத நீ 

எளியை ஆகி வந்து = எளிமையாக வந்து 

ஒளிசெய் மானிடம் ஆக = ஒளி பொருந்திய மானிட வடிவம் பெற்று 

நோக்கியும், = எனக்கு காட்சி தந்தும் 

கீறு இலாத  =  இளகாத 

நெஞ்சு உடைய = மனதை உடைய 

நாயினேன் = நாயைப் போன்றவன் 

கடையன் = கீழானவன் 

ஆயினேன் = ஆயினேன் 

பட்ட கீழ்மையே. = நான் பட்ட கீழ்மையே 


முக்தி வேண்டும், இறைவனை அடைய வேண்டும், அற வழியில் வாழ வேண்டும் என்பார்கள். சரி, எப்படி என்று சொன்னால், அதெல்லாம் சரிப்படாது,  நடை முறைக்கு ஒத்து வராது என்று தள்ளி விடுவார்கள். பின்னும், முக்தி அடைவது எப்படி,  இறைவனை அடைவது எப்படி என்று படிப்பார்கள். 


என்ன சொல்வது அவர்களை. 


இறைவன் எத்தனையோ வழிகளில் வந்து அருள் செய்கிறான். அது வேண்டாம், இது சரி இல்லை என்று தள்ளி விட்டுக் கொண்டே இருந்தால் என்ன செய்வது. உண்மையான  பக்தி உள்ளவர்கள், அருளை பெற்றார்கள். முக்தி அடைந்தார்கள். எனக்கு நீ எவ்வளவோ சொல்லியும், தந்தும் ஒன்றும் புரியாமல்  கடின நெஞ்சோடு வாழ்கிறேனே என்று உருகுகிறார் மணிவாசகர்.

பக்குவம் அடைந்து விட்டால், ஒரு வார்த்தை போதும். 




Monday, January 11, 2021

திருக்குறள் - எண்ணித் துணிக கர்மம்

திருக்குறள் - எண்ணித் துணிக கர்மம் 


எல்லோருக்கும் தெரிந்த குறள் தான். 


பாடல் 

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_11.html


click the above link to continue reading

எண்ணித் = நினைத்து , ஆராய்ந்து 

துணிக = துணிந்து செய்க 

கருமம்  = காரியங்களை 

துணிந்தபின் = செய்யத் தொடங்கிய பின் 

எண்ணுவம் = ஆராய்ந்து கொள்ளலாம் 

என்பது இழுக்கு. = என்பது குறை 


சரி, அதுக்கு என்ன இப்ப? அதுதான் தெரியுதே. 


எண்ணித் துணிக - ஆராய்ந்து செய்யணும். சரி, எதை ஆராயணும்?  அதுக்குத்தான் பரிமேல் அழகர் வேணும். 

இரண்டு விடயங்களை ஆராய்ந்து பின் ஒரு செயலை தொடங்க வேண்டும். அவை என்ன இரண்டு?


முதலாவது,  எதைச் செய்வது என்று யோசித்து முடிவு எடுக்க வேண்டும். நிறைய பேருக்கு என்ன  செய்ய வேண்டும் என்றே தெரிவதில்லை. திருமணம் செய்வதாக இருக்கட்டும் , மேல்படிப்பு, தொழில் தொடங்குவது, என்று எதை எடுத்தாலும்  ஆராய்ந்து செய்ய வேண்டும்.  வீடு வாங்குவது,  கார் வாங்குவது ...எதாக வேண்டுமானாலும் இருக்கட்டும். செய்வதற்கு முன்னால் ஆராய்ந்து   செய்ய வேண்டும்.


இரண்டாவது, எப்படி செய்வது என்று சிந்திக்க வேண்டும்.  திருமணம் முடித்தால், அதில் என்னென்ன பொறுப்புகள் வரும், அவற்றை எப்படி சமாளிப்பது, அதில் வரும் சிக்கல்கள் என்ன என்றெல்லாம் சிந்திக்க வேண்டும். முதல்ல கல்யாணம் பண்ணிக்குவோம், அப்புறம் யோசிப்போம் என்பது இழுக்கு.   


எதைச் செய்வது, எப்படி செய்வது என்று இரண்டையும் யோசிக்க வேண்டும். எல்லா காரியத்துக்கும்.  


அப்படிச் செய்யாவிட்டால் என்ன ஆகும்?  


இழுக்கு.


அப்படினா?  குறை, குற்றம். 

என்ன ஆயிரும் ?


முதலாவது, தொடங்கிய காரியம் வெற்றிகரமாக முடியாது. தோல்வியில் முடியும். எல்லோரும் நகைப்பார்கள். 


இரண்டாவது, பாதியில் விடவும் முடியாது. கட்டத் தொடங்கிய வீட்டை பாதியில் விட முடியுமா? குடும்ப பாரம் அதிகம் என்று விட்டு விட்டு ஓட முடியுமா? எனவே அது ஒரு சிக்கல்.


மூன்றாவது, அளவுக்கு அதிகமாக செலவு பண்ணி, இருக்குற சொத்தும், புகழும் போய் விடும். 


எனவே, துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு. 


எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று சிந்தித்து முடிவு எடுங்கள். 






Sunday, January 10, 2021

கம்ப இராமாயணம் - இந்திய கலாச்சாரம்

 கம்ப இராமாயணம் - இந்திய கலாச்சாரம் 


இந்திய கலாச்சாரம், இந்திய கலாச்சாரம் என்று சொல்கிறீர்களே, அப்படி என்றால் என்ன? என்னதான் உங்கள் கலாச்சாரம்? எதை வைத்துக் கொண்டு உங்கள் கலாச்சாரம் மற்றவற்றைவிட உயர்ந்தது என்று கூறுகிறீர்கள் என்று இளைய தலை முறையினர் கேட்கும் போது, பெரியவர்கள் பதில் சொல்லத் தெரியாமல் விழிப்பதை நான் பார்த்து இருக்கிறேன். 

நம் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களை, நாம் போற்றும் கதா நாயகர்கள் மற்றும் நாயகிகள் மேல் ஏற்றிக் கொண்டாடுகிறோம். 

தனித் தனியாக பட்டியல் போட முடியாது. நல்ல கலாச்சார, பண்பாடுகளை உயர்ந்த பாத்திரங்களின் மேல் ஏற்றிச் சொல்லி விடுகிறோம். 

ஒரு வேளை அந்தக் கலாச்சாரம் மாறி இருந்தால், அந்த கதைகள், அந்தக் கதா பாத்திரங்கள் இன்னேரம் செல்லரித்துப் போய் இருக்கும். 


இன்றும் காலம் கடந்து நாம் அவற்றை கொண்டாடுகிறோம் என்றால், அந்தக் கதா பாத்திரங்கள் செய்ததுதான் நம் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் அடிப்படை. 


இன்று ஒரு பெரிய நாட்டில் தேர்தல் நடந்து, தோல்வி அடைந்த அதிபர் பதவியை விட மனம் இல்லாமல்  ஏதேதோ நடக்கிறது அந்த நாட்டில்.  பதவி என்பது பெரிய விடயம்தான். அதை விடுவது என்பது எளிய காரியம் இல்லை. 


எத்தனையோ கோடி மக்கள் எதிர்த்து ஒட்டுப் போட்டாலும்,  அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்  என்று அடம் பிடிப்பது ஒரு வகை கலாச்சாரம், பண்பாடு. 


அது சரி அல்ல, பதவி ஒன்றும் பெரிய விடயம் அல்ல. அதை விட பெரிய விடயங்கள் உலகில் இருக்கின்றன  என்று காட்டியது நம் கலாச்சாரம். 

ஏதோ அந்த நாட்டில் எல்லோரும் பதவி ஆசை பிடித்தவர்கள் என்று சொல்ல வரவில்லை. அதே போல் நம் நாட்டில் யாருக்குமே பதவி ஆசை இல்லை என்றும் சொல்ல வரவில்லை. 

நம் நாட்டின் உரை கல் எது என்று காண்பிப்பதுதான் என் வேலை. எதை நாம் பெரிதாக  கொண்டாடுகிறோம்? எது நமக்கு உயர்ந்தது ? எது நமது அளவு கோல் என்று காட்ட முயற்சி செய்கிறேன். 


இராமனுக்கு முடி சூட்டுவது என்று தசரத சக்கரவர்த்தி முடிவு செய்துவிட்டார். எல்லோருக்கும் அறிவித்தாகி விட்டது.  மனைவியிடம் அதைச் சொல்லப் போகிறார்.  போன இடத்தில், கைகேயி அந்த முடிவை மாற்றி, இராமனுக்கு செல்ல வேண்டிய  அரசை பரதனுக்கு என்று மாற்றுகிறாள். 


தெரிந்த கதை தான். 


வந்த அரசை விட மனம் வருமா? சின்ன பதவியா, விட்டு விட. ஆழி சூழ் உலகம்  அனைத்துக்கும் அதிபதி என்ற பட்டம். அதை விட மனம் வருமா?  வந்த பதவியை விடுங்கள். ஒரு பதவி உயர்வு வரவில்லை என்றால் எவ்வளவு கவலை வருகிறது. 

"உனக்கு அரசு கிடையாது. காட்டுக்குப் போ" என்று விரட்டி விடுகிறாள். 


இராமன் நினைத்து இருந்தால், கைகேயி தூக்கி சிறையில் போட்டு இருக்கலாம். யாரும் ஒன்றும் சொல்லி இருக்க மாட்டார்கள். 

அல்லது 

"சரி என்ன செய்ய. நம் விதி" என்று வருத்தத்துடன் ஏற்றுக் கொண்டு இருக்கலாம்.  அதுவும் இல்லை. 


அப்போது பூத்த செந்தாமரை போல மலர்ச்சியாக இருந்ததாம் இராமனின் முகம். ஒரு வாட்டம் இல்லை. ஒரு கவலை இல்லை. 


அப்பா, அம்மா சொல்லுக்கு முன்னால், பதவி ஒரு தூசு என்று நினைப்பது நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதி. 

அம்மா சொன்னால், காட்டுக்குக் கூட சிரித்த முகத்தோடு போகலாம் என்று இராமன் காட்டினான். ஒரு வேளை இராமன், "நான் ஏன் போக வேண்டும். சரியான காரணம் சொல்லுங்கள். வேண்டுமானால், அரசை இரண்டாக பிரித்து நான் ஒரு பக்கம் ஆள்கிறேன், பரதன் ஒரு பக்கம் ஆளட்டும் " என்று வாதம் பண்ணி இருக்கலாம். பண்ணி இருந்தால் கூட குற்றம் சொல்ல முடியாது. 

இன்று, இளைய தலைமுறையினர், அவர்களின் பெற்றோர்களை பார்த்து  கேட்கிறார்கள் "உனக்கு என்ன தெரியும்?" என்று. 


இராமன் கேட்டு இருக்கலாம். "அம்மா, நீ சும்மா ஒரு. உனக்கு ஒண்ணும் தெரியாது. இந்த அரசியல் எல்லாம் உனக்கு ஒண்ணும் புரியாது. வாய மூடிக்கிட்டு பேசாம இரு" என்று சொல்லி இருக்கலாம். அது உண்மையும் கூட. கைகேயிக்கு   என்ன தெரியும்? பிள்ளை பெற்றாள் , வளர்த்தாள். அரசியல் அறிவு அவளுக்கு உண்டா?


இராமன் அதெல்லாம் பேசவே இல்லை.  அம்மா சொன்னா கேக்கணும். அவ்வளவுதான். அவள் எனக்கு கெடுதல் செய்ய மாட்டாள் என்று ஆழமாக நம்பினான்.  


பாடல் 


இப்பொழுது எம் அனோரால்

    இயம்புதற்கு எளிதே! யாரும்

செப்ப(அ)ரும் குணத்து இராமன்

    திருமுகச் செவ்வி நோக்கில்

ஒப்பதே முன்பு; பின்பு அவ்

    வாசகம் உணரக் கேட்ட

அப்பொழுது அலர்ந்த செந்தா

    மரையினை வென்றது அம்மா!


பொருள் 

click the link below to continue reading

https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_10.html


இப்பொழுது = இப்போது 

எம் அனோரால் = எம் போன்ற கவிஞர்களுக்கு 

இயம்புதற்கு = சொல்வதற்கு 

எளிதே! = எளிதான காரியமா? இல்லை 

யாரும் = யாராலும் 

செப்ப = சொல்ல 

(அ)ரும் = முடியாத அருமையான 

குணத்து இராமன் = குணங்களை கொண்ட இராமன் 

திருமுகச் = திரு முகத்தின் 

செவ்வி  = அழகைப் 

நோக்கில் = பார்த்தால் 

ஒப்பதே = ஒரே மாதிரி இருந்தது 

முன்பு; பின்பு = முன்னும்,பின்னும் 

அவ் வாசகம் = கைகேயி சொன்ன வாசகம்  

உணரக் கேட்ட = உணர்ந்து, கேட்ட 

அப்பொழுது  = அந்தக் கணத்தில் 

அலர்ந்த = மலர்ந்த 

செந்தாமரையினை  = சிவந்த தாமரை மலரை 

வென்றது = விட அழகாக இருந்ததது 

அம்மா! = அம்மா என்பது வியப்புச் சொல் 


கைகேயி சொல்வதற்கு முன்னும், பின்னும் இராமனின் முகம் சிவந்த தாமரை மலர் அப்போதுதான் மலர்ந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்ததாம்.


இந்திய கலாச்சாரம் பெரிய கலாச்சாரமா என்று கேட்கும் குழந்தைகளுக்கு இராமாயணம்  சொல்லுங்கள். 


தாமரை போல் இருந்தது என்ற  உதாரணத்தின் பின்னால் போய் விடக் கூடாது. கருத்தைப் பற்றிக் கொள்ள வேண்டும். அதை எடுத்துச் சொல்ல வேண்டும். 


பதவி  போனால், வேலை போனால் நடுங்காமல் இருக்க முடியுமா? 

எப்படி வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள் என்று. 



Saturday, January 9, 2021

திருக்குறள் - செய்வன

 திருக்குறள் - செய்வன 

பெரும்பாலும் திருக்குறள் படிக்கும் போது, அறத்துப் பால் படிப்போம். ஒரே அறவுரையாக இருக்கும். சரி கொஞ்சம் மனதை இலகுவாக்குவோம் என்று இன்பத்துப் பால் படிப்போம். நடுவில் உள்ள பொருள் பால் போவதற்கு நேரம் கிடைப்பதில்லை. 


பொருள் பாலில், பொருள் சம்பாதிப்பது மட்டும் அல்ல, ஒரு நல்ல குடிமகனாக, சமுதாயத்தில் ஒரு நல்ல அங்கத்தினனாக இருப்பது என்பது பற்றி எல்லாம் வள்ளுவர் சொல்லி இருக்கிறார். 

ஒரு செயலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு அதிகாரம். அது எந்த செயலாக வேண்டுமானாலும் இருக்கட்டும். 

"தெரிந்து செயல் வகை" 


அதில் ஒரு குறள். 


செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானும் கெடும்


பொருள் 

click to continue


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_9.html


செய்தக்க அல்ல = செய்வதற்கு தகுதி இல்லாதவற்றை 

செயக்கெடும் = செய்தால், கெடுதல் விளையும் 

செய்தக்க = செய்யத் தகுந்தவற்றை 

செய்யாமை யானும் கெடும் = செய்யாவிட்டாலும் கெடுதல் வரும் 


எது செய்யக் கூடாதோ, அதைச் செய்தால் கெடுதல் வரும். 


எதைச்  செய்ய வேண்டுமோ, அதை செய்யாமல் விட்டாலும் கெடுதல் வரும். 


புரிஞ்ச மாதிரியும் இருக்கு, புரியாத மாதிரியும் இருக்கு.  


சிந்திப்போம். 


செய்ய வேண்டியவற்றை செய்யாவிட்டால் என்ன கெடுதல் வந்து விடும்? அதனால் வர  வேண்டிய பலன் கிடைக்காமல் போகலாம். கெடுதல் எப்படி வரும்?

ஒவ்வொரு வருடமும், உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கிறது என்று சோதனை செய்ய வேண்டும். (annual medical check up ). அதைச் செய்தால், நோயின் ஆரம்ப கால அறிகுறிகள் ஏதாவது இருந்தால், அதை உடனே கண்டு பிடித்து, மருந்து சாப்பிட்டு  குணப் படுத்திக் கொள்ளலாம். ஆண்டு மருத்துவ சோதனை செய்யாமல் விட்டால், நோய் முற்றி , பின்னாளில் எந்த மருந்துக்கும் சரியாகாமல்  துன்பப் பட நேரிடும். 


செய்ய வேண்டியதை, செய்யாமல் விட்டால் வரும் கெடுதல். 

உடற் பயிற்சி செய்ய வேண்டும். அதை செய்யாவிட்டால் கெடுதல் வருமா இல்லையா?


இளமையில் படிக்க வேண்டும். படிக்காவிட்டால்? 

இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். செய்ய வேண்டியவற்றை  செய்யாமல் விட்டால்  துன்பம் வரும். 


இதில் முக்கியமான செய்தி என்ன என்றால், செய்ய வேண்டியது எது என்று நமக்குத் தெரியாமல்  இருப்பதுதான். 


பிள்ளைகளை கட்டிக் கொடுத்து, அதுக எல்லாம் செட்டில் ஆகிருச்சு. இனி என்ன இருக்கு செய்ய வேண்டியது என்று   சிலர் நினைக்கலாம். 

படிச்சோம், வேலைக்குப் போனோம்...சம்பாதித்தோம் , இனி என்ன செய்ய வேண்டியது இருக்கிறது , என்று சிலர் நினைக்கலாம். 

குடும்பம் ஒழுங்கா போய்கிட்டு இருக்கு. இதுல என்ன செய்ய வேண்டி இருக்கு என்று கேள்வி எழலாம். 

அதற்கு பதில் சொல்ல முடியும். இருந்தாலும், அவரவர்கள் சிந்தித்து முடிவுக்கு வருதலே நலம். 


அடுத்தது, செய்ய வேண்டாதவற்றை செய்தாலும் கெடுதல் வரும். 


புகை பிடிப்பது, மது அருந்துவது, அளவுக்கு அதிகமாக தூங்குவது, சோம்பேறியாக இருப்பது,  whatsapp ல் நேரத்தை செலவிடுவது,  facebook , youtube  என்று  நேரத்தை விரயம் பண்ணுவது,  கண்ட கண்ட சீரியல்களை பார்ப்பது, அரட்டை அடிப்பது  போன்ற செய்ய வேண்டாத காரியங்களை செய்தாலும் கெடுதல் வரும். 


இரண்டு பட்டியல் போடுங்கள்.


எதை எல்லாம் நிறுத்த வேண்டும் என்று ஒரு பட்டியல். 


எதை ஆரம்பிக்க வேண்டும்/ தொடர வேண்டும் என்று ஒரு பட்டியல். 


இந்தக் குறளை இன்னும் விரித்துச் சொல்லலாம்.  அவ்வளவு இருக்கிறது. இப்போதைக்கு இது போதும். 


பொருட்பாலில், ஒரு அதிகாரத்தில், ஒரு குறளில் இவ்வளவு இருக்கிறது. 


வேறு என்ன சொல்ல?