Tuesday, January 19, 2021

ஆசாரக் கோவை - முந்தையோர் கண்ட முறை

 ஆசாரக் கோவை - முந்தையோர் கண்ட முறை


ஆசாரம் என்றால் ஒழுக்கம். ஒழுக்கம் என்றால் நம்மை விட உயர்ந்தவர்கள் செய்தவற்றை நாம் இடைவிடாமல் செய்வது. 

உயர்ந்தவர்கள் என்றால் அறிவில், அனுபவத்தில், ஒழுக்கத்தில் உயர்ந்தவர்கள்.  இன்று என்ன ஆகி விட்டது என்றால் யார் சொல்வதை கேட்பது, யார் செய்வதை பின்பற்றுவது என்பதில் பெரிய குழப்பம் இருக்கிறது. 


அயோக்கியத்தனம் செய்பவன் எல்லாம் நல்லவன் என்று சினிமா மற்றும் பிற ஊடகங்கள் சித்தரிக்கத் தொடங்கிவிட்டன. மக்கள் குழம்ப ஆரம்பித்து விட்டார்கள். எது சரி, எது தவறு என்பதில் தடுமாற்றம் வருகிறது. 


யாரிடம் கேட்பது?


வக்கிரங்கள் எல்லாம் நடை முறையாகிக் கொண்டு வருகிறது. 


இந்த மாதிரி தருணங்களில், நமக்கு வழிகாட்ட ஆசாரக் கோவை போன்ற நூல்கள் உதவுகின்றன.


எதற்கு ஆசாரத்தை  கடை பிடிக்க வேண்டும்?


அது எல்லாம் அந்தக் காலத்தில் செய்தார்கள். இது கம்ப்யூட்டர் காலம். இப்ப வந்து ஆசாரம்   என்று பேசிக் கொண்டு என்று கேலி பேசுகிறார்கள். 


ஆசாரத்தை கடை பிடிப்பவர்கள் கூட அதைஏன் செய்கிறாய் என்று கேட்டால் பதில் தெரியாமல் விழிக்கிறார்கள். முன்னோர்கள் செய்தார்கள். நானும் செய்கிறேன். எல்லாம் ஒரு நம்பிக்கைதான் என்று ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார்கள். 


ஆசாரம் என்றால் என்ன, அதை ஏன் கடைபிடிக்க வேண்டும் என்று அறிந்து கொண்டு கடைபிடிப்போம். 


மனித வாழ்க்கை அகம் புறம் என இரண்டாக இருக்கிறது. இரண்டாக இருந்தாலும், ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டுள்ளது. 


மனதை செம்மை செய்தால், வாழ்வு உயரும். மனதில் உள்ள அழுக்கை நீக்கினால், வாழ்வு சுகப்படும். 


பொறாமை, கோபம், வன்மம், துவேஷம்,  பொருந்தா காமம், பேராசை, கயமை போன்ற  கீழான எண்ணங்களை நீக்கினால், வாழ்வு எவ்வளவு சுகமாக இருக்கும். 


ஆனால், எப்படி நீக்குவது? 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_19.html


click the above link to continue reading


மனதை வெளியே எடுத்து, சுத்தம் செய்து திருப்பி உள்ளே வைக்க முடியுமா? 


முடியாது. மனதை நம்மால் நேரடியாக ஒன்றும் செய்ய முடியாது. 


ஆனால், மனமும், உடலும் நெருங்கிய தொடர்பு உள்ளவை. உடலை மாற்றினால் மனம் மாறும். 


நாலு நாள் குளிக்காமல் இருந்து பாருங்கள். உடல் அழுக்காக இருக்கும். ஆனால், மனமும் சோர்ந்து, குறுகி விடும். 


நல்ல வெந்நீர் வைத்தது குளித்து, புது ஆடை அணிந்து, கொஞ்சம் வாசனை திரவங்களை தெளித்தால், உடம்பு புத்துணர்ச்சி அடைவது மட்டும் அல்ல, மனமும்  துள்ளிக் கொண்டு நிற்கும். 


உடலை சரி செய்தால், மனம் சரியாகும்.  


இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 


ஆசாரம் என்பது உடலின் மூலம் மனதை சரி செய்யும் வித்தை. 


வெறும் ஆசாரத்தோடு நின்று விடக் கூடாது. 


காலையில் எழுந்து பல் விளக்கி குளித்து விட்டுத்தான் அடுப்பே பத்த வைப்பேன் என்று பெருமையாக சொல்வார்கள். 


ஏன்? குளிக்காமல் பத்த வைத்ததால் என்ன ஆகும் என்று கேட்டால் தெரியாது. 


காலையில் குளிக்கும் போது மனம் எப்படி சிலிர்க்கிறது என்று பார்க்க வேண்டும். இரவின் சோம்பல் எல்லாம் போய், உடம்பு புத்துணர்ச்சி பெறும் போது உள்ளமும் மகிழும். சுறுசுறுப்பாக இருக்கும். புத்தி நன்றாக வேலை செய்யும். 


குளிப்பதற்கு அல்ல ஆசாரம். மனதையும், புத்தியையும் தெளிவு படுத்த. 


எனவே, உடலை எப்படி ஒரு ஒழுக்க நிலையில் கொண்டு வர வேண்டும் என்று சொல்ல வருகிறது  ஆசாரக் கோவை. 


நமக்குத் தெரியுமா எப்படி உடம்பை, நாளை, மூளையை நெறி படுத்துவது என்று? தெரிந்தால் பின் ஆசாரக் கோவை படிக்க வேண்டாம். 


தெரிந்து கொள்ள விரும்பினால், ஆசாரக் கோவை நமக்கு வழி காட்டும். 


என்ன தான் சொல்கிறது என்று பார்ப்போமே.....கடை பிடிக்கறோமோ இல்லையோ, தெரிந்து கொள்வோமே...


தெரிந்து கொள்வோமா?

2 comments:

  1. ஆவலோடு காத்துள்ளோம் சார்

    ReplyDelete
  2. எதிர் நோக்கி நிற்கிறோம்

    ReplyDelete