Monday, January 11, 2021

திருக்குறள் - எண்ணித் துணிக கர்மம்

திருக்குறள் - எண்ணித் துணிக கர்மம் 


எல்லோருக்கும் தெரிந்த குறள் தான். 


பாடல் 

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_11.html


click the above link to continue reading

எண்ணித் = நினைத்து , ஆராய்ந்து 

துணிக = துணிந்து செய்க 

கருமம்  = காரியங்களை 

துணிந்தபின் = செய்யத் தொடங்கிய பின் 

எண்ணுவம் = ஆராய்ந்து கொள்ளலாம் 

என்பது இழுக்கு. = என்பது குறை 


சரி, அதுக்கு என்ன இப்ப? அதுதான் தெரியுதே. 


எண்ணித் துணிக - ஆராய்ந்து செய்யணும். சரி, எதை ஆராயணும்?  அதுக்குத்தான் பரிமேல் அழகர் வேணும். 

இரண்டு விடயங்களை ஆராய்ந்து பின் ஒரு செயலை தொடங்க வேண்டும். அவை என்ன இரண்டு?


முதலாவது,  எதைச் செய்வது என்று யோசித்து முடிவு எடுக்க வேண்டும். நிறைய பேருக்கு என்ன  செய்ய வேண்டும் என்றே தெரிவதில்லை. திருமணம் செய்வதாக இருக்கட்டும் , மேல்படிப்பு, தொழில் தொடங்குவது, என்று எதை எடுத்தாலும்  ஆராய்ந்து செய்ய வேண்டும்.  வீடு வாங்குவது,  கார் வாங்குவது ...எதாக வேண்டுமானாலும் இருக்கட்டும். செய்வதற்கு முன்னால் ஆராய்ந்து   செய்ய வேண்டும்.


இரண்டாவது, எப்படி செய்வது என்று சிந்திக்க வேண்டும்.  திருமணம் முடித்தால், அதில் என்னென்ன பொறுப்புகள் வரும், அவற்றை எப்படி சமாளிப்பது, அதில் வரும் சிக்கல்கள் என்ன என்றெல்லாம் சிந்திக்க வேண்டும். முதல்ல கல்யாணம் பண்ணிக்குவோம், அப்புறம் யோசிப்போம் என்பது இழுக்கு.   


எதைச் செய்வது, எப்படி செய்வது என்று இரண்டையும் யோசிக்க வேண்டும். எல்லா காரியத்துக்கும்.  


அப்படிச் செய்யாவிட்டால் என்ன ஆகும்?  


இழுக்கு.


அப்படினா?  குறை, குற்றம். 

என்ன ஆயிரும் ?


முதலாவது, தொடங்கிய காரியம் வெற்றிகரமாக முடியாது. தோல்வியில் முடியும். எல்லோரும் நகைப்பார்கள். 


இரண்டாவது, பாதியில் விடவும் முடியாது. கட்டத் தொடங்கிய வீட்டை பாதியில் விட முடியுமா? குடும்ப பாரம் அதிகம் என்று விட்டு விட்டு ஓட முடியுமா? எனவே அது ஒரு சிக்கல்.


மூன்றாவது, அளவுக்கு அதிகமாக செலவு பண்ணி, இருக்குற சொத்தும், புகழும் போய் விடும். 


எனவே, துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு. 


எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும் என்று சிந்தித்து முடிவு எடுங்கள். 






1 comment:

  1. "துணிந்தபின், எண்ணுவம் என்பது இழுக்கு" என்பதற்கு என்ன பொருள் என்று பல முறை எண்ணிப் பார்த்திருக்கிறேன். ஒரு செயலைத் தொடங்கிய பின்னால், அது சரிதானா என்று சந்தேகப்பட்டுக்கொண்டே இருக்கக் கூடாது என்பதும் ஒரு பொருளாக இருக்கலாமே.

    ReplyDelete