Tuesday, January 5, 2021

நளவெண்பா - இன் துணைமேல் வைத்து உறங்கும்

நளவெண்பா - இன் துணைமேல் வைத்து உறங்கும் 


அன்றில்  என்று ஒரு பறவை இருந்ததாம். இப்போது இல்லை. அந்தப் பறவை, தன் இணையை விட்டு பிரியவே பிரியாதாம். அவ்வளவு காதல். இரவு தூங்கும் போது கூட, இரண்டும் ஒன்றை ஒன்று கழுத்தை பின்னிக் கொண்டுதான் தூங்குமாம். 


அது மட்டும் அல்ல,

ஒரு கண் தூங்குமாம், இன்னொரு கண்ணால் தன் இணையை பார்த்துக் கொண்டே உறங்குமாம். தூக்கத்தில் கூட பிரிந்து இருக்க முடியாது அவைகளால். அப்படி ஒரு காதல். 


ஒரு நாள், ஒரு பெண் அன்றில் பறவை அழும் குரல் தமயந்திக்கு கேட்டதாம். 


ஏன்?


ஒரு வேளை ஆண் பறவை இரண்டு கண்ணையும் மூடி தூங்கி இருக்குமோ? அப்படிப்பட்ட  இரவு. எப்போதுமே முழுவதும் தூங்காத அன்றில் பறவை கூட அன்று தூங்கி விட்டதாம். 


அன்றில் தூங்கிய போதும், தமயந்தி தூங்கவில்லை. நளன் நினைப்பு அவளை தூங்க விடாமல்  பண்ணுகிறது. 


புகழேந்தியின் கற்பனை. 


பாடல் 


அன்றில் ஒருகண் துயின்றொருகண் ஆர்வத்தால்

இன்துணைமேல் வைத்துறங்கும் என்னுஞ்சொல் - இன்று

தவிர்ந்ததே போலரற்றிச் சாம்புகின்ற போதே

அவிழ்ந்ததே கண்ணீர் அவட்கு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_5.html


click the above link to continue reading


அன்றில் = அன்றில் பறவை 

ஒருகண் = ஒரு கண் 

துயின்றொருகண்  = துயின்று (தூங்கி) இன்னொரு கண் 

ஆர்வத்தால் = ஆர்வத்தால் 

இன்துணைமேல் = இனிய துணை மேல் 

வைத்துறங்கும் = வைத்து உறங்கும் 

என்னுஞ்சொல் = என்ற சொல் 

இன்று = இன்று 

தவிர்ந்ததே = தவறாகிப் போனதே 

போலரற்றிச் = என்பது போல் அரற்றி 

சாம்புகின்ற போதே = வருந்துகின்ற போதே 

அவிழ்ந்ததே = அவிழ்ந்ததே 

கண்ணீர் = கண்ணீர் 

அவட்கு. = அவளுக்கு 


கூந்தல் அவிழ்ந்தது என்று கூறுவது போல, கண்ணீர் அவிழ்ந்ததாம். துளி துளியாக வரவில்லை. மொத்தமாக அப்படியே வந்ததாம் தமயந்திக்கு. 


கொஞ்சும் தமிழ்.  இனிமையான கற்பனை.  



2 comments:



  1. உங்களின் கூந்தல் உவமை அருமை

    ReplyDelete
  2. 1. "ஆண் பறவை தூங்கிவிட்டது, பெண் பறவை அழுதது" என்று பாடலில் எழுதவில்லையே. ஒருவேளை நேர் மாறாகக் கூட இருந்திருக்கலாமே.

    2. ஒரு அன்றில் பறவை கண் மூடி விட்டால், அந்தப் பறவை இறந்து விட்டதோ? அந்த மாதிரி ஆபத்து நலனுக்கு நேர்ந்திருக்கலாம் என்பதை நினைத்து தமயந்தி அழுதாளோ?

    அன்றில் பறவைகளின் நேசம் அருமையாக இருந்தது.

    ReplyDelete