Friday, February 12, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வாக்குத் தூய்மை

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - வாக்குத்  தூய்மை 


பெரியாழ்வார் பாசுரம்.


தமிழிலே "பழக்க வழக்கம்" என்று ஒரு சொற்றொடர் உண்டு. 


ஒன்றை திரும்ப திரும்பச் செய்வதை பழக்கமாகக் கொண்டால், அது வழக்கமாகி விடும். அப்புறம் நாம் நினைகாமாலையே அதை செய்து விடுவோம். 


காலையில் எழுந்தவுடன் பல் துலக்குவது மாதிரி. தன்னிச்சையாக நிகழும். 


பெரியாழ்வார் சொல்கிறார் 


"எனக்கு வாக்கு சுத்தம் கிடையாது. சொல்லில் வரும் குற்றங்கள் பல என்னிடம் உண்டு. இப்படி குற்றமுள்ள நாவால் உன்னை எவ்வாறு நான் போற்றுவேன். சரி, போற்றாமல் விட்டு விடலாம் என்றால், இந்த நாக்கு உன்னைப் போற்றி பழகி விட்டது. நான் சொன்னாலும் அது கேட்பது இல்லை. என் நாக்கு என் வசம் இல்லை.  நான் உன்னைப் போற்றி சொல்கின்ற சொற்களை ஏதோ காகம் கரைந்தது போல என்று எடுத்துக் கொள்ளேன்" என்கிறார். 



பாடல் 


வாக்குத் தூய்மை யிலாமையி னாலே மாத வாஉன்னை வாய்க்கொள்ள மாட்டேன்

நாக்கு நின்னையல் லால்அறி யாது நான தஞ்சுவன் என்வச மன்று

மூர்க்குப் பேசுகின் றானிவ னென்று முனிவா யேலும்என் நாவினுக்கு ஆற்றேன்

காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் கார ணாகரு ளக்கொடி யானே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/02/blog-post_12.html


(click the above link to continue reading)


வாக்குத் = வாக்கில், பேச்சில் 


தூய்மை  = தூய்மை 


யிலாமையி னாலே = இல்லாததால் 


மாதவா  = மாதவா 


உன்னை = உன்னை 


வாய்க் கொள்ள மாட்டேன் = என் வாயால் சொல்ல மாட்டேன் 


நாக்கு = என்னுடைய  நாக்கு 


 நின்னையல் லால் = உன்னைத் தவிர 


அறி யாது = வேறு ஒன்றை அறியாது 


நான தஞ்சுவன் = நான் அதை நினைத்து அஞ்சுகிறேன் 


என் வசமன்று = என் நாக்கு என் வசம் அன்று 


மூர்க்குப் = மூர்கனைப் போல 


பேசுகின் றானிவ னென்று = பேசுகிறான் இவன் என்று 


முனிவா யேலும் = நீ என் மேல் கோபப் பட்டாலும் 


என்  = என்னுடைய 


நாவினுக்கு = நாவினை 


ஆற்றேன் = என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை 


காக்கை வாயிலும்  = காகத்தின் வாயில் இருந்து  வரும் சப்தங்களை கூட 


கட்டுரை கொள்வர் =உயர்ந்ததென்று கொள்வார்கள் 


காரணா = காரணம் என்ன என்றால், ஏன் என்றால் , 


கரு ளக்கொடி யானே. = கருடக் கொடியை கொண்டவனே 


"என் சொல் அவமெனினும் நின் நாமங்கள் தோத்திரமே " என்பார் அபிராமி பட்டர். 



"நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே"  என்பார் சுந்தரர். 



இந்த இரண்டையும் சொல்லாமல் விட்டு விடலாம்தான். ஆனால், சிலர், பாசுரத்தை விட்டு விட்டு, இதை கமெண்ட் ல் போடுவார்கள். அதைத் தவிர்க்கவே, சுட்டிக் காட்டினேன். 


மீண்டும் பாசுரத்துக்கு வருவோம். 


பெரியாழ்வார் என்ன சொல்ல வருகிறார். 


இறைவனின் நாமத்தை சொன்ன வாயால் மற்ற கீழான வார்த்தைகளை பேசக் கூடாது.  இறைவன் நாமத்தை சொல்ல வேண்டுமா, வாக்கில் தூய்மை வேண்டும். 


வாக்குத் தூய்மை என்றால் என்ன?


- பொய் சொல்லுதல் 

- புறம் சொல்லுதல் 

- கடும் சொல் 

- பயனற்ற சொற்கள் 


எங்கே ஒரு நாள் முயன்று பாருங்கள்.  இந்த நான்கு குற்றமும் சொல்லில் வராமால் பேசிப் பாருங்கள் பார்ப்போம். முதல் மூன்றைத் தவிர்த்தால் கூட, நான்காவதை தவிர்கவே முடியாது. பயனுள்ள சொற்களை எப்படி பேசுவது? 


பயனுள்ள சொற்கள் என்றால் மற்றவருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் பயன் தரும் சொற்கள் என்பார் பரிமேல் அழகர். 


ஒரு பக்கம் இறைவன் நாமம் நாவில். அதே நாவில், ஊரில் உள்ளவர்களை ஏசுவது, பொய் சொல்லுவது, வெட்டி பேச்சு பேசுவது. அது கூடாது என்கிறார் பெரியாழ்வார். 


"அவருக்கென்ன சொல்லுவார்...நடைமுறை னு ஒண்ணு இருக்குல்ல ...."


நாம நம்ம வேலையை பார்ப்போம். 

Wednesday, February 10, 2021

அறநெறிச் சாரம் - கல்லினும் வல்லென்னும் நெஞ்சு

அறநெறிச் சாரம் - கல்லினும் வல்லென்னும் நெஞ்சு


சிலர் எவ்வளவோ படிப்பார்கள். கேட்பார்கள். இருந்தாலும் வாழ்வில் ஒரு மாற்றமும் இருக்காது. கேட்டால், " அதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது என்பார்கள்". நடைமுறையில் ஒத்து வருமா வராதா என்பது நடைமுறையில் கடை பிடித்தால்தானே தெரியும். ஆரம்பிக்கும் முன்னாலேயே அது சரி வராது என்றால் எப்படி?  


எதுவுமே நடைமுறையில் கடினம்தான். ஆனால், அதை செயல்படுத்தத் தொடங்கினால் அதில் ஒரு பற்றும் பிடிப்பும் வந்து விடும்.  பின் அதை விடுவது கடினமாகி விடும். 


ஆனால், சிலர் எவ்வளவுதான் படித்தாலும், கேட்டாலும் ஒன்றும் நடக்காது. தண்ணீரில் ஒரு கல் எவ்வ்ளவு நாள் மூழ்கிக் கிடந்தாலும், அது மென்மையாகாது. பாசி பிடிக்கும். ஆனால் மென்மையாகாது. எவ்வளவு படித்தாலும், கீழ் மக்கள் மனம் மாறவே மாறாது. 


மணிவாசகர் தன்னை நாய் என்று குறிப்பிட்டுக் கொள்வார். காரணம், நாயை எவ்வளவுதான்  குளிப்பாட்டி, சாம்பிராணி போட்டு, அழகு படுத்தி வைத்தாலும், அதன் மனம் என்னவோ வேறு இடத்தில்தான். 


பாடல் 

 வைகலு நீருட் கிடப்பினும் கல்லிற்கு

மெல்லென்றல் சால அரிதாகும்--அஃதேபோல்

வைகலும் நல்லறம் கேட்பினுங் கீழ்கட்குக்

கல்லினும் வல்லென்னும் நெஞ்சு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/02/blog-post_10.html


click to contitnue

 வைகலு  = ஒவ்வொவரு நாளும் 

நீருட் கிடப்பினும் = நீரின் உள் கிடப்பினும் 

கல்லிற்கு = பாறாங் கல்லுக்கு 

மெல்லென்றல் = மென்மையாக மாறுவது 

சால அரிதாகும் = மிகவும் கடினமான செயல் 

அஃதேபோல் = அதே போல 

வைகலும் = தினமும் 

நல்லறம் = நல்ல அறங்களை 

கேட்பினுங் = கேட்டாலும் 

கீழ்கட்குக் = கீழ் மக்களுக்கு 

கல்லினும் = கல்லை விட 

வல்லென்னும் நெஞ்சு. = வன்மையானது மனது 


யார் கீழ்மக்கள் என்றால், நல்ல அறங்களை படித்தும் கேட்டும், அதன் படி நடக்காமல்  இருப்பவர்கள். 




Sunday, February 7, 2021

திருக்குறள் - நெடிய கழியும் இரா

 திருக்குறள் - நெடிய கழியும் இரா 

அறம் பொருளில் உச்சம் தொட்ட வள்ளுவர், இன்பத்துப் பாலிலும் இவ்வளவு மென்மையாக, நுணுக்கமாக உணர்வுகளை வெளிப்படுத்தும் குறள்களை எழுதி இருப்பது ஆச்சரியம். 


இன்பத்துப் பால் என்பது கத்தியின் மேல் நடக்கும் வித்தை. கொஞ்சம் பிசகினாலும் கையை அறுத்து விடும். ஆபாசத்தின் எல்லையை தொட்டு விடும். 


மிக எச்சரிக்கையாக, அதே சமயம் அந்த உணர்சிகளின் அழகு குன்றாமல் எழுத வேண்டும். 


காதலர் பிரிந்து போய் விட்டார். அவளுக்கு அவன் மேல் மிகுந்த கோபம். அவனைக் "கொடியவன்" என்றும் அவன் செய்த செயல் "கொடுமை" என்று கடுமையாக குறிப்பிடுகிறாள்.  கொடுமையான அவன் செய்த கொடுமையை விட இப்படி ஒவ்வொரு நாளும் நீண்டு கொண்டே போகிறதே இந்த இரவு, அது அவற்றை விட கொடுமையானது என்கிறாள். 


பாடல் 


கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்

நெடிய கழியும் இரா


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/02/blog-post_63.html


(click the above link to continue reading)


கொடியார் = கொடுமை செய்யும் அவர் 

கொடுமையின் = அவர் செய்த கொடுமையை விட 

தாம்கொடிய = இவை கொடியவை 

இந்நாள் = இப்போதெல்லாம் 

நெடிய கழியும் இரா  = நீண்டு பின் விலகும் இந்த இரவு. 


இதில் பரிமேல் அழகர் செய்யும் நுணுக்கம் மிகச் சிறப்பானது. 


கொடியார் - ஏன் அவன் கொடியவன். அவளுடைய காதலன் நல்லவன் தான். அன்பு உள்ளவன் தான். இருந்தாலும், தன்னை விட்டு பிரிந்து போனதால் அவனைக் கொடியவன் என்கிறாள். 


கொடுமை - அவன் என்ன கொடுமை செய்தான். பிரிந்து சென்றது கொடுமை இல்லை. பிரிந்த பின் உடனே திரும்பி வராதது அவன் செய்து கொண்டிருக்கும் கொடுமை. 


இந்நாள் = இப்போதெல்லாம். ஒரு நாள் அல்ல. ஒவ்வொரு நாளும். 

நெடிய கழியும் இரா = இரவு நீண்டு கொண்டே போவது அவளுக்கு எப்படி தெரிந்தது?  தூங்காமல் விழித்துக் கொண்டு இருக்கிறாள். எல்லோரும் தூங்கி விட்டார்கள். பேச்சு துணைக்குக் கூட ஆள் இல்லை. நேரம் நகர மாட்டேன் என்கிறது. எப்படா விடியும் என்று காத்து இருக்கிறாள். விடிய மாட்டேன் என்கிறது. கொடுமையாக இருக்கிறது. 


இப்போது நீண்டு கொண்டே போகிறது என்றால் முன்பு அது அப்படி அல்ல என்று தானே அர்த்தம்?


காதலன் உடன் இருக்கும் போது, இந்த இரவு தொடங்குவதும் தெரியாது, முடிவதும் தெரியாது. அப்படி சட்டென்று முடிந்து விடும். அப்போது எல்லாம் அது நீண்ட இரவாகத் தெரியவில்லை. ஆனால், இப்போது நெடிய கழியும் இரா. 


"நெடிய கழியும் இரா" என்ற அந்த சொற்றொடரில் எவ்வளவு ஏக்கம், தனிமை, தவிப்பு, எல்லாம் தெரிகிறது....




ஆசாரக் கோவை - உடை உடுத்தல்

 ஆசாரக் கோவை - உடை உடுத்தல் 


நமது அகமும் புறமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை.  அகத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்றால், முதலில் புறத்தை சுத்தம் செய்ய வேண்டும். புறம் அகத்தை பாதிக்கும். 

எனவேதான் ஆசாரக் கோவை போன்ற நூல்கள் புறத் தூய்மை பற்றி பேசுகின்றன. இதைப் படித்து விட்டு, இதோடு நின்று விடக் கூடாது. அகத் தூய்மை பற்றி சிந்திக்க வேண்டும். 


உண்ணும் உணவில், உடுக்கும் உடையில் இருக்கிறது நம் கலாச்சாரம், பண்பாடு. 

கூழானாலும் குளித்துக் குடி, கந்தையானாலும் கசக்கிக் கட்டு என்பது நம் பண்பாடு, கலாசாரம். 


Bed coffee அவர்கள் கலாசாரம். எழுந்து பல் கூட விளக்காமல் காப்பி குடிப்பது 

கந்தை ஆனாலும் கசக்கிக் கட்டு என்பது நம் பாரம்பரியம். நல்ல துணியை கிழித்து, அழுக்காகி, துவைக்காமல் நாள் கணக்கில், மாதக் கணக்கில் உடுப்பது அவர்கள் பாரம்பரியம். ஜீன்ஸ் என்று ஒன்று இருக்கிறது. அங்கங்கே கிழிந்து இருக்கும், இதில் துப்பாகியால் சுட்டு ஓட்டை விழுந்த ஜீன்ஸ் என்றால் மதிப்பு கூட. 


எது சரி, எது தவறு என்பதல்ல நோக்கம். நாம் எதை விட்டு விட்டு எதை நோக்கிப் போய் கொண்டு இருக்கிறோம். 


நம் பண்பாட்டினை அவர்களுக்கு சொல்லித் தருவதை விட்டு விட்டு, அவர்கள் செய்வதை பெருமையாக நாம் செய்து கொண்டு இருக்கிறோம். 


எப்படி உடை உடுக்க வேண்டும் என்று ஆசாரக் கோவை சொல்கிறது. 


"ஏதேனும் ஒன்றை உடுக்காமல் நீராட மாட்டார்கள். குறைந்தது இரண்டு உடையாவது அணிந்து தான் உணவு உண்ணுவார்கள். அழுக்குத் துணியை நீரில் பிழிய மாட்டார்கள். தண்ணீரில் முக்கி வெளியே பிழிவார்கள். ஒற்றை ஆடை உடுத்து சபையில் நுழைய மாட்டார்கள், பெரியவர்கள்" 


பாடல் 

உடுத்தலால் நீராடார் ஒன்றுடுத் துண்ணார்

உடுத்தாடை நீருட் பிழியார் விழுத்தக்கார்

ஒன்றுடுத் தென்றும் அவைபுகா ரென்பதே

முந்தையோர் கண்ட முறை.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/02/blog-post_7.html


(click the above link to continue reading)


உடுத்தலால் = உடை உடுக்காமல் 

நீராடார் = குளிக்க மாட்டார்கள் 

ஒன்றுடுத் துண்ணார் = ஒரு துணியை உடுத்தி உண்ண மாட்டார்கள். அதாவது குறைந்தது இரண்டு உடையாவது அணிந்து தான் உண்பார்கள். 

உடுத்தாடை = உடுத்த ஆடையை 

நீருட் பிழியார் = நீரில் பிழிய மாட்டார்கள் 

விழுத்தக்கார் = பெருமை உள்ளவர்கள், பெரியவர்கள் 

ஒன்றுடுத் தென்றும் = ஒற்றை ஆடையி உடுத்து என்றும் 

அவைபுகா ரென்பதே = எந்த அவையிலும் நுழைய மாட்டார்கள் என்பதே 

முந்தையோர் கண்ட முறை. = முன்னோர்கள் கண்ட முறை 


சில ஆசாரங்களுக்கு காரணம் தெரியவில்லை. அதற்காக அதை விட்டு விடுவதா அல்லது அவற்றை பின்பற்றிக் கொண்டே அதற்கான காரணத்தை தேடுவதா? 


யோசிப்போம். 



Saturday, February 6, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - அன்பு செய்யும் அடியாரை உகத்தி

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - அன்பு செய்யும் அடியாரை உகத்தி 


நாம் கடவுள் மேல் அன்பு செய்வது ஒரு புறம் இருக்கட்டும். 

கடவுள் யார் மேல் அன்பு செய்கிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?


நல்ல பணக்காரன், படிப்பு அறிவு உள்ளவன், உயர்ந்த குலத்தில் பிறந்தவன், ஆசார அனுஷ்டானங்களை கடை பிடிப்பவன் என்று தேர்ந்து எடுத்து அவர்கள் மேல் அன்பு செய்வானோ என்றால் இல்லை என்கிறார் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார். 


இறைவன் யார் மேல் பிரியமாக இருப்பான் என்றால், அவன் மேல் யார் அன்போடு இருக்கிறார்களோ அவர்கள் மேல் அவனும் அன்போடு இருப்பான். அவ்வளாவு தான். இறைவனுக்கு தெரிந்தது எல்லாம் அன்பு ஒன்று தான். குலம், கோத்திரம், ஜாதி, மதம், பணம், அறிவு இதெல்லாம் இறைவனுக்கு ஒரு பொருட்டே இல்லை. 


அன்பு ஒன்று அவன் அறிந்து மொழி. 


பாடல் 


அடிமையில் குடிமை யில்லா அயல்சதுப் பேதி மாரில்

குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்ப ரேலும்

முடியினில் துளபம் வைத்தாய் மொய்கழற் கன்பு செய்யும்

அடியரை யுகத்தி போலும் அரங்கமா நகரு ளானே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/02/blog-post.html


(plese click the above link to continue reading)


அடிமையில் = தொண்டு செய்வதில் 

குடிமை யில்லா = உயர் குடியில் பிறக்காத 

அயல் = வேறானா 

சதுப் பேதி மாரில்  = நான்கு வேதங்களையும் கற்று அறிந்த வேதியர்களை விடவும் 

குடிமையில் = குடிப்பிறப்பில் 

கடைமை பட்ட = கீழான 

குக்கரில் பிறப்ப ரேலும் = குடும்பத்தில் பிறந்தாலும் 

முடியினில் துளபம் = தலையில் துளசி மாலையை 

வைத்தாய் = வைத்தவனே 

மொய்கழற் கன்பு செய்யும் = உன்னுடைய திருவடிகளுக்கு அன்பு செய்யும் 

அடியரை யுகத்தி போலும் = அடியவர்கள் மேல் ஆர்வம் (உகத்தி) போலும் 

அரங்கமா நகரு ளானே. = திருவரங்கத்தில் எழுந்து அருளி இருப்பவனே 


பெருமாளுக்கு பேதம் இல்லை. 

எவ்வளவு பாராயணம் பண்ணினாலும், எத்தனை முறை திருப்பிச் சொன்னாலும், மனதில் அன்பு இல்லாவிட்டால் ஒன்றும் பயன் இல்லை. 




Saturday, January 30, 2021

திருக்குறள் - இதுவும் மாசற்றார் கோள்

 திருக்குறள் - இதுவும் மாசற்றார் கோள் 


மூன்று விதத்தில் நாம் பிறருக்கு தீமை செய்கிறோம் என்று பார்த்தோம். அவை

- பலன் நோக்கிச் செய்தல்

- செற்றம் (பகை) பற்றிச் செய்தல் 

- சோர்வால் (மறதியால்) செய்தல் 

சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா செய்யாமை மாசற்றார் கோள் என்று பலன் கருதி இன்னா செய்யாமை பற்றி முதல் குறளில் சொன்னார். 


இப்போது, செற்றம் பற்றி இன்னா செய்வதைப் பற்றி கூறப் போகிறார். 


நம் மேல் பகை கொண்டு, பொறாமை கொண்டு, நமக்கு ஒருவன் கெடுதல் செய்தாலும், அதை மறுத்து அவனுக்கு கெடுதல் செய்யாமல் இருப்பது மாசற்றவர்களின் கொள்கை. 


பாடல் 

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா

செய்யாமை மாசற்றார் கோள்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_30.html

(click the above link to continue reading)

கறுத்து = பகைமை கொண்டு, கோபம் கொண்டு, 

இன்னா  = தீமை 

செய்தவக் கண்ணும் = செய்த அந்த போதும் 

 மறுத்து = அதை மறுத்து 

இன்னா = அவருக்கு தீமை 

செய்யாமை = செய்யாமல் இருப்பது 

மாசற்றார் கோள் = குற்றமற்றவர்களின் கொள்கை 


அதாவது பழிக்குப் பழி, பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் என்று போகக் கூடாது என்கிறார். 


மகாத்மா காந்தி கூறினார் "கண்ணுக்கு கண் என்று ஆரம்பித்தால் இந்த உலகமே வெகு சீக்கிரம் குருடாகி " விடும் என்று. 


மறுத்து என்ற சொல்லுக்கு பரிமேல் அழகர் மிக அழகான விளக்கம் தருகிறார். 


"உட்கொள்ளாது" என்று கூறுகிறார். 


யோசித்துப் பார்த்தால் தெரியும், ஒருவர் ஒன்று சொல்கிறார், உடனே அது நம்முள் ஒரு எதிர் விளைவை ஏற்படுத்துகிறது. 


"கடவுள் இருக்கிறார்" என்று சொன்னால், "யார் சொன்னா...எங்கே நிரூபி பார்போம்" என்று வாதம் செய்யத் தொடங்கி விடுகிரோறம். 


"அந்தத் தலைவர் நல்லவர்" என்றால், "ஹா அவர் இலட்சணம் எனகுத் தெரியாதா" அவர் செய்த தவறுகளை எடுத்துக் காட்ட ஆரம்பித்து விடுகிறோம். 


இதுதான் நமக்கு வேலையா? ஒவ்வொருவர் சொல்லுவதற்கும், செய்வதற்கும் எதிர் வினை செய்து கொண்டே இருந்தால் நாம் போய் சேர வேண்டிய இடத்தை எப்போது அடைவது. 


தெருவில் போகும் போது நாய் குரைக்கும். "என்னைப் பார்த்த குரைத்தாய்" என்று பதிலுக்கு நாமும் நின்று அதைப் பார்த்து குரைத்துக் கொண்டு இருக்க முடியுமா? அப்படிச் செய்தால் , இந்த உலகம் நம்மைப் பற்றி என்ன நினைக்கும்? 


அதை கண்டு கொள்ளாமல் மேலே போய் விட வேண்டும். முட்டாள்களுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டே இருந்தால், காலம்தான் விரயம் ஆகும். 


நாம் அவனை கண்டு கொள்ளாமல் போய் விட்டால், இவன் நம்மை சீண்டக் கூட மாட்டேன் என்கிறான் என்று வேறு இடம் போய் விடுவார்கள். மாறாக, அவனோடு சரிக்கு சரி நின்றால், நம் நிலை தான் தாழும். 


Don't fight with the pig in the mud, the pig will enjoy it என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. 


கீழ் மக்களுக்கு வம்புக்கு சண்டை பிடிப்பதும், முரண் படுவதும் இயற்கை. நாம் அவர்களுக்கு நிகராக நம் நிலைமையை தாழ்த்திக் கொள்ள கூடாது. 


சரி தானே?


கொஞ்சம் இலக்கணம் படிப்போமா? 


வீட்டுக்குள் அம்மா வருகிறாள்.  மதிய நேரம்..ஒரு இரண்டு மணி இருக்கும். மகனைப் பார்த்து கேட்கிறாள் "என்னடா ...மத்யானம் சாப்டியா" என்று. 


மகன் சொல்கிறான் "வேலை ரொம்ப இருக்கு...காலையிலும் சாப்பிடலை" அப்படின்னு. 


அப்படினா, மத்யானமும் சாப்பிடலைன்னு தெரியுதுல?  


காலையில் சாபிடல அப்படின்னு சொல்லி இருந்தால், சரி , மத்யானம் சாப்பிட்டு இருப்பான் என்று நினைக்க இடம் இருக்கு. 


காலையிலு"ம்" என்று ஒரு "ம்" போட்டதால காலையிலும் சாபிடல, மத்தியானமும் சாப்பிடலைன்னு தெரியுதுல.


அந்த "ம்" க்கு இறந்தது தழுவிய எச்ச உம்மை என்று பெயர். 


ஆங்கில பரீட்சை எப்படி செய்து இருக்கிறாய் என்று கேட்டாலும் "அதை ஏன் கேக்குற...தமிழும் சரியா செய்யல" என்றால் ஆங்கிலம், தமிழ் இரண்டும் சரியா செய்யல என்று நாம் புரிந்து கொள்கிறோம் அல்லவா. 


இங்கே, குறளில், 


கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா

செய்யாமை மாசற்றார் கோள்


என்றார். 


முந்தைய குறளில் 


சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் 

பிறர்க்கு இன்னா செய்யாமை மாசற்றார் கோள் 


என்றார். 


இங்கே இரண்டாவது குறளில் "செய்யாமையு'ம்' மாசற்றார் கோள் என்று இருந்திருக்க வேண்டும். 


அதுவும் மாசற்றார் கோள் , இதுவும் மாசற்றார் கோள் என்பதால், இரண்டாவதாக வந்த "செய்யாமை" என்பதை 'செய்யாமையும்"  என்று இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லை. 


எனவே, அது "இறந்தது தழுவிய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கி (மறைந்து) நின்றது " என்று உரைக் குறிப்பு எழுதுகிறார் பரிமேல் அழகர். 


எவ்வளவு தூரம் உன்னிப்பாக ஒரு நூலை படித்து இருக்கிறார்கள். 


அப்படி படிக்க வேண்டும். 




Friday, January 29, 2021

திருக்குறள் - மாசற்றார் கோள்

 திருக்குறள் - மாசற்றார் கோள் 

மூன்று விதத்தில் நாம் மற்றவர்களுக்கு தீமை செய்கிறோம் என்று முந்தைய ப்ளாகில் பார்த்தோம். 


அதில் முதலாவது, நமக்கு ஒரு பயன் வேண்டி மற்றவர்களுக்கு துன்பம் செய்தல். 

பிறரை ஏமாற்றுவது, பிறர் பொருளை களவு எடுப்பது, ஒருவருக்கு வர வேண்டிய உழைப்பின் பலனை தட்டிப் பறிப்பது, நம்மிடம் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக மற்றவர்களை உதாசீனப் படுத்தி மகிழ்வது, மற்ற உயிர்களை துன்புறத்தி அதில் இன்பம் காண்பது...என்று பல விதங்களில் நமக்கு ஒரு பலன் வேண்டி மற்றவர்களை துன்புறுத்துகிறோம். 

இதில் மற்றவர்கள் என்பது மனிதர்கள் மட்டும் அல்ல, விலங்குகளும் சேரும். 


அப்படி, நமக்கு ஒரு பலன் கிடைக்கும் என்றாலும், பிறருக்கு இன்னல் தரமால் இருப்பது பெரியவர்களின் கோட்பாடு என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா

செய்யாமை மாசற்றார் கோள்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_29.html

click the above link to continue reading


சிறப்புஈனும் = சிறப்பினைத் தரும் 

செல்வம் பெறினும் = செல்வத்தைப் பெற்றாலும் 

பிறர்க்கு = மற்றவர்களுக்கு 

இன்னா செய்யாமை = துன்பம் செய்யாமல் இருப்பது 

மாசற்றார் கோள். = குற்றமற்றவர்களின் கொள்கை, கோட்பாடு.


சரி, இது ஒரு எளிமையான குறள் போலத்தானே இருக்கிறது என்று நாம் நினைப்போம். 

இதற்கு பரிமேல் அழகர் தந்த உரையை படித்தால் தெரியும் எவ்வளவு நுட்பமாக, எவ்வளவு ஆழமாக படித்து உரை செய்து இருக்கிறார் என்று. 


ஒவ்வொரு வார்த்தையும் ஒரு தங்கச் சுரங்கம். 

"சிறப்புஈனும்" என்றால் என்ன அர்த்தம்? கன்றினை ஈனும் என்றால், எது கன்றினை ஈனும்? ஒரு பசு மாடு கன்றினை ஈனும். அது போல, இங்கே சிறப்பு ஈனும் எது சிறப்பு? பரிமேல் அழகர் யோசிக்கிறார்.  எது சிறந்தது? பக்தி, வீரம், காதல், அன்பு, அதிகாரம், ...எது சிறந்தது, சிறப்பு வாய்ந்தது என்று யோசித்து முடிவுக்கு வருகிறார். 


"யோகம்" தான் உள்ளதிற்குகுள் சிறந்தது. ஏன் என்றால், அது இம்மைக்கும், மறுமைக்கும் பலன் தர வல்லது. எனவே, சிறப்பு என்றால் அது யோகம் தான். அதைவிட சிறந்து ஒன்றும் இல்லை. 

அந்த யோகம் ஈனும் என்றால், யோகத்தில் ஈடுபட்டால் கிடைக்கும் என்று அர்த்தம். என்ன கிடைக்கும் ? அட்டமா சித்திகள் கிடைக்கும். ஞானம் கிடைக்கும். வீடு பேறு கிடைக்கும். 


எனவே, அந்தப் பலன்களை சிறப்பு ஈனும் செல்வம் என்றார். செல்வமாவது அந்த யோகம் தரும் பலன்கள்.


அப்படி, அவ்வளவு சிறப்பான யோகம் தரும் பலன்கள் கிடைத்தால் கூட, மற்றவர்களுக்கு  துன்பம் செய்ய மாட்டார்கள் "மாசற்றவர்கள்" என்கிறார். 


"மாசற்றவர்கள்" என்றால் யார்?  முற்றும் துறந்த துறவிகள், மயக்கம், குழப்பம், ஐயம், திரிபு போன்றவை இல்லாதவர்கள். அவர்களிடம் ஒரு குற்றமும் இருக்காது. 


எவ்வளவுதான் சிறந்த நன்மை கிடைக்கும் என்றாலும், மற்றவர்களுக்கு துன்பம் செய்யக் கூடாது. அல்லது பிறருக்கு துன்பம் தந்து அதன் மூலம் கிடைக்கும் நன்மை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதை வேண்டாம் என்று ஒதுக்கி விட வேண்டும். 


நாம் அவ்வாறு செய்கிறோமா? பெரிய நன்மை என்ன பெரிய நன்மை, ஒரு சின்ன நன்மை கிடைத்தால் கூட போதும், பிறருக்கு தீமை செய்ய நாம் தயங்குவதே இல்லை. 


ஓட்டுக்கு பணம் வாங்குவதில் இருந்து, இலஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பதில் இருந்து, பில் போடாமல் சாமான்கள் வாங்குவதில் இருந்து சின்ன சின்ன நன்மைகளுக்காக எவ்வளவு பெரிய தீமைகளையும் நாம் செய்யத் தயாராக இருக்கிறோம். 


அப்படி செய்யக் கூடாது என்று நன்மை நோக்கி பிறருக்கு தீமை செய்வதை விலக்குவதைப் பற்றி கூறுகிறார். 


நமக்கு ஒரு நன்மை வருகிறது என்பதற்காக பிறருக்கு துன்பம் செய்யலாமா?




 


 செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா

செய்யாமை மாசற்றார் கோள்.