Wednesday, February 10, 2021

அறநெறிச் சாரம் - கல்லினும் வல்லென்னும் நெஞ்சு

அறநெறிச் சாரம் - கல்லினும் வல்லென்னும் நெஞ்சு


சிலர் எவ்வளவோ படிப்பார்கள். கேட்பார்கள். இருந்தாலும் வாழ்வில் ஒரு மாற்றமும் இருக்காது. கேட்டால், " அதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வராது என்பார்கள்". நடைமுறையில் ஒத்து வருமா வராதா என்பது நடைமுறையில் கடை பிடித்தால்தானே தெரியும். ஆரம்பிக்கும் முன்னாலேயே அது சரி வராது என்றால் எப்படி?  


எதுவுமே நடைமுறையில் கடினம்தான். ஆனால், அதை செயல்படுத்தத் தொடங்கினால் அதில் ஒரு பற்றும் பிடிப்பும் வந்து விடும்.  பின் அதை விடுவது கடினமாகி விடும். 


ஆனால், சிலர் எவ்வளவுதான் படித்தாலும், கேட்டாலும் ஒன்றும் நடக்காது. தண்ணீரில் ஒரு கல் எவ்வ்ளவு நாள் மூழ்கிக் கிடந்தாலும், அது மென்மையாகாது. பாசி பிடிக்கும். ஆனால் மென்மையாகாது. எவ்வளவு படித்தாலும், கீழ் மக்கள் மனம் மாறவே மாறாது. 


மணிவாசகர் தன்னை நாய் என்று குறிப்பிட்டுக் கொள்வார். காரணம், நாயை எவ்வளவுதான்  குளிப்பாட்டி, சாம்பிராணி போட்டு, அழகு படுத்தி வைத்தாலும், அதன் மனம் என்னவோ வேறு இடத்தில்தான். 


பாடல் 

 வைகலு நீருட் கிடப்பினும் கல்லிற்கு

மெல்லென்றல் சால அரிதாகும்--அஃதேபோல்

வைகலும் நல்லறம் கேட்பினுங் கீழ்கட்குக்

கல்லினும் வல்லென்னும் நெஞ்சு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/02/blog-post_10.html


click to contitnue

 வைகலு  = ஒவ்வொவரு நாளும் 

நீருட் கிடப்பினும் = நீரின் உள் கிடப்பினும் 

கல்லிற்கு = பாறாங் கல்லுக்கு 

மெல்லென்றல் = மென்மையாக மாறுவது 

சால அரிதாகும் = மிகவும் கடினமான செயல் 

அஃதேபோல் = அதே போல 

வைகலும் = தினமும் 

நல்லறம் = நல்ல அறங்களை 

கேட்பினுங் = கேட்டாலும் 

கீழ்கட்குக் = கீழ் மக்களுக்கு 

கல்லினும் = கல்லை விட 

வல்லென்னும் நெஞ்சு. = வன்மையானது மனது 


யார் கீழ்மக்கள் என்றால், நல்ல அறங்களை படித்தும் கேட்டும், அதன் படி நடக்காமல்  இருப்பவர்கள். 




No comments:

Post a Comment