Wednesday, March 31, 2021

திருக்குறள் - அகர முதல - பாகம் 6

திருக்குறள் - அகர முதல - பாகம் 6 


அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி- 
பகவன் முதற்றே, உலகு.




என்ற குறளில் , எப்படி அகரம் மொழிக்கெல்லாம் முதலாக இருக்கிறதோ அது போல இறைவன் உலகுக்கு முதலாக இருக்கிறான் என்பது பற்றி முந்தைய ப்ளாகுகளில் சிந்தித்தோம். 


இறைவன் முதல் என்றால் யார் அவனை முதலாக நியமித்தது ? அவன் மட்டும் தான் முதல்வனா அல்லது இந்த உலகம் தோன்ற மற்ற காரணங்களும் உண்டா ? இறைவனும் முதல் , அவன் கூட மற்ற ஏதாவது முதலாக இருக்குமா ? சொல்லும் போது தெளிவாக சொல்ல வேண்டும் அல்லவா ?


சில சமயம் பரிசு வழங்கும் போது முதல் பரிசு இரண்டு பேருக்கு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. அது போல, இறைவன் முதல்வன். அவன் மட்டும்தான் முதல்வனா, அல்லது அவன் கூட வேறு யாராவது உண்டா என்ற கேள்வி வரும் அல்லவா?


இருப்பதோ ஏழே வார்த்தைகள். விரித்தும் சொல்ல முடியாது. அதே சமயம் தெளிவாகவும் சொல்ல வேண்டும்.


வள்ளுவர் எப்படி சொல்லி இருக்கிறார் என்று பார்ப்போம்.


அதற்கு முன் கொஞ்சம் இலக்கணம்.


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/6.html


(click the above link to continue reading)


தமிழ் இலக்கணத்தில் இடைச் சொல் ஒன்று உண்டு.


தனித்து நின்று பொருள் தராது. இரண்டு சொற்களுக்கு இடையில் வந்து அவற்றிற்கு இடையில் உள்ள உறவு, அல்லது அர்த்தத் தெளிவை தரும்.


இடை எனப்படுவ
பெயரொடும் வினையொடும்
நடைபெற்று இயலும் : தமக்கு இயல்பு இலவே


என்பது தொல்காப்பியம்.


இடை எனப்படுவது பெயரோடும் (பெயர் சொல்லோடும் ), வினையோடும் (வினைச் சொல்லோடும் ) சேர்ந்து வரும். தனக்கென்று தனி இயல்பு இல்லாதது என்பது தொல்காப்பியம் தரும் இலக்கணம். 


நிறைய இடைச் சொற்கள் இருக்கின்றன.


அதில் ஏகார (ஏ ) இடைச் சொல்லை மட்டும் பார்ப்போம்.


இந்த ஏகார இடைச் சொல்  7 விதமாக வரும்.


ஏகார வினைச்சொல், தேற்றமும், வினாவும், எண்ணும், பிரிநிலையும் எதிர்மறையும், இசைநிறையும் ஈற்றசைவுமாகிய ஏழு பொருளைத்தரும்.


எப்படி என்று பார்ப்போமா ?


1. தேற்றம் என்றால் உறுதி, தெளிவு.


நான் நேற்று வந்தேன் என்று சொல்லலாம்


நான் நேற்றே வந்தேன் என்றும் சொல்லலாம்.


இரண்டுக்கும் என்ன வேறுபாடு ? நேற்றே வந்தேன் என்பது நேற்று வந்தேன் என்பதே அழுத்தமாக , உறுதியாகச் சொல்கிறது.


நான் இதைச் செய்தேன்
நானே இதைச் செய்தேன்


நான் செய்தேன் என்றால் வேறு யாரோ கூட என்னோடு சேர்ந்து செய்திருக்கலாம்.


நானே செய்தேன் என்பது நான் மட்டும் தான் செய்தேன் என்பதே தெளிவாக்குகிறது அல்லவா.


திருவிளையாடல் படத்தில் தருமி சொல்வதாக ஒரு வசனம் வரும்.


"இந்தப் பாட்டை எழுதியது நீர் தானே?" என்று நக்கீரர் கேட்பார். 


"நான், நான், நானே தான் எழுதினேன்" என்று தருமி சொல்வதாக அந்த வசனம் வரும். அதில் நானே என்ற சொல்லுக்கு அர்த்தம் நான் மட்டும் தான் என்பது. 

2. வினா


வீட்டுக்குப் போகிறாய்
வீட்டுக்குத் தானே போகிறாய் ?


முதலில் உள்ள வாக்கியம் வீட்டுக்குப் போவதை குறிக்கிறது.
இரண்டாவது உள்ள வாக்கியம் வீட்டுக்குப் போகிறாயா அல்லது வேறு எங்காவது போகிறாயா என்ற வினாவை எழுப்புகிறது. "தானே" வில் உள்ள ஏகாரம் அந்த வாக்கியத்தை வினாவாக மாற்றுகிறது.


3. எண்


வீடு, நிலம், நகை
வீடே, நிலமே, நகையே


இரண்டாவது உள்ள வாக்கியம் வீடு, நிலம் , நகை என்ற மூன்று இருக்கிறது என்று எண்ணிக்கையை சொல்ல வருகிறது.


வீடே , நிலமே, நகையே என்று சொல்லும் போது நம்மை அறியாமலேயே நாம் அவற்றை எண்ணத் தொடங்கி விடுகிறோம். சொல்லிப் பாருங்கள்.


4. பிரிநிலை


அனைத்து மாணவர்களில் அவனே சிறந்த மாணவன்


இதில் , அந்த ஒரு மாணவனை பிரித்து காட்டுகிறது.


இராமாயணத்தில் உள்ள பாத்திரங்களில் பரதனே சிறந்த பாத்திரம்.


பரதனை பிரித்துக் காட்டுவதால், இது பிரிநிலை ஏகாரம்.



5. எதிர்மறை


நீயே கொண்டாய் என்ற வாக்கியத்தில் நீயா கொண்டாய் என்ற கேள்வி நிற்கிறது.


6. இசை நிறை


’ஏயே யிவலொருத்தி பேடியோ வென்றார்.’’


இதை இவள் ஒருத்தி என்று ஆரம்பித்து இருக்கலாம். ஏயே என்று ஆரம்பித்தது  இசை நயம் கருதி.


7. ஈற்று அசை


அசைச் சொல் என்றால் அர்த்தம் இல்லாமல், இலக்கணத்தை நிறைவு செய்யும் பொருட்டு  சேர்க்கப்படும் சொற்கள்.  Filler , buffer , மாதிரி.


 என்றுமேத்தித் தொழுவோ மியாமே


என்றும் ஏத்தி தொழுவோம் யாம் என்று நிறுத்தி இருக்கலாம். யாமே என்பதில் உள்ள  ஏ காரம் அர்த்தம் ஏதும் இன்றி நின்றது. அசைச் சொல்.


சரி, இவ்வளவு பெரிய இலக்கணம் எதற்கு ?


அதற்கும் இந்த குறளுக்கும் என்ன சம்பந்தம் ?


"ஆதி பகவன் முதற்றே உலகு "  என்ற வரியில் முதற்றே என்ற சொல்லை கவனியுங்கள்.


ஆதி பகவான் முதற்று உலகு என்று சொல்லி இருக்கலாம் அல்லவா ?


அப்படி சொல்லி இருந்தால், உலகுக்கு இறைவன் முதல் என்று அர்த்தம் வரும். அவன் மட்டும் தான் முதல் என்ற அர்த்தம் வராது.


முதற்றே என்பதில் உள்ள ஏகாரம் தேற்றப் பொருளில் வந்தது. அதாவது உறுதிப் பொருளில் வந்தது.


அவன் மட்டுமே முதல். வேறு யாரும் கிடையாது. மிக உறுதியாக சொல்கிறார் வள்ளுவர்.  


அது மட்டும் அல்ல, அவன் மட்டுமே  என்று சொல்லும் போது அவனுக்கு முன்னால் யாரும் கிடையாது. எனவே அவனை  யாரும் முதல்வனாக நியமிக்கவில்லை. வோட்டு போட்டோ, தேர்ந்து எடுத்தோ அவனை நியமிக்கவில்லை. 


ஒரே ஒரு ஏகாரம், பொருள் எப்படி மாறுகிறது ?


இலக்கணம் தெரியாவிட்டால் இவற்றை சுவைக்க முடியாது அல்லவா.


"முதற்றே உலகு"  என்ற சொற்றொடரில் "உலகு" என்று வருகிறது. உலகு என்றால் என்ன?  


உலகு என்றால் உலகம்.  சரி. உலகம் என்றால் ? இந்த பூமி, சூரியன், நிலா, கோள்கள், நட்சத்திரங்கள் போன்றவையா? 


இல்லை. 


பரிமேலழகர் உரை செய்கிறார். 


"உலகு’ என்றது, ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தாற் காணப்படாத கடவுட்கு உண்மை கூறவேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே உலகு' என உலகின்மேல் வைத்துக்கூறினார். கூறினாரேனும்,உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க."


"உலகு’ என்றது, ஈண்டு உயிர்கள் மேல் நின்றது." - இங்கே உலகம் என்பது உயிர்களை குறிக்க வந்தது என்கிறார்.  எல்லா உயிர்களுக்கும் அவனே முதல் என்பது அர்த்தம். 


"காணப்பட்ட உலகத்தாற் காணப்படாத கடவுட்கு உண்மை கூறவேண்டுதலின்"


உயிர்கள் எங்கும் இருப்பதைக் காண்கிறோம். இந்த உயிர்களை படைத்தது யார் என்ற கேள்விக்கு விடை, "இறைவன்" என்பது. 


இதை எல்லாம் ஏன் திருவள்ளுவர் சொல்கிறார்  என்ற கேள்விக்கு விடை 


"இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது."


கடவுளது உண்மை அல்லது இயல்பு கூறப்பட்டது என்கிறார் பரிமேலழகர். 


இவற்றை எல்லாம் நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, அது வேறு விஷயம். 


எவ்வளவு ஆழ்ந்து, சிந்தித்து எழுதி இருக்கிறார்கள் என்று பாருங்கள். இவ்வளவு நுண்மையான அறிவு உள்ள ஒருவர், தவறாக சொல்வாரா? எவ்வளவு அறிவு அறிந்தால்,  இப்படி எழுத முடியும். 


இது ஒரு சாதரணமான மனிதனால் முடியக் கூடிய காரியமா? 


அப்பேற்பட்ட அறிவு உள்ள ஒருவரின் எண்ணத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? அவர் சொல்வது தவறாக இருக்குமா? அவர் பொய் சொல்வாரா? 


மாட்டார் என்பது என் முடிவு. 


திருக்குறளில் தவறு கண்டு பிடிக்கும் அளவுக்கு நமக்கு அறிவுத் திறன் இருக்குமா? என்று சிந்திக்க வேண்டும். 


எனவே, அவர் சொல்லியது அனைத்தையும் உள் வாங்குவோம். முடிந்தவரை கடைபிடிப்போம். 


சரியா?


இனி, அடுத்த குறளுக்கு போவோம்.  உடனே போவோமா அல்லது இரண்டு மூணு நாள் விடுமுறை எடுத்துக் கொள்வோமா? முதல் குறளை முழுவதுமாக உள் வாங்க இரண்டு மூணு நாள் தேவைப்படாதா?





Tuesday, March 30, 2021

திருக்குறள் - அகர முதல - பாகம் 5

திருக்குறள் -  அகர முதல - பாகம் 5 


அகர முதல எழுத்து எல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.


பகவன் என்றால் என்ன?


பகவன் என்றால் பகுத்துத் தருபவன் என்று பொருள். எதை பகுத்துத் தருபவன்?

அதைத் தெரிந்து கொள்வதற்கு முன்னால், இந்து சமயத்தின் ஆணி வேரானா கர்மா கொள்கையை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/5.html


(click the above link to continue reading)


ஒருவன் தான் செய்த வினைக்கு ஏற்ற பலன் அவனை வந்து சேரும். ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு என்பது அடிப்படைத் தத்துவம். ஆனால், வினையும் எதிர் வினையும் உடனே நிகழுமா? அப்படி நிகழ்வது இல்லை. 


நாம் செய்யும் நல்லன தீயன என்பவை 

பாவ புண்ணியங்களாக மாறி 

இன்ப துன்பங்களாக நமக்கு வந்து சேர்கின்றன 


(நல்லன தீயன ), (பாவம் புண்ணியம்), (இன்பம் துன்பம்) 


இதை புரிந்து கொள்ள வேண்டும். 


நாம் செய்யும் வினைகளுக்கு ஏற்ப நம் பாவ புண்ணியங்கள் கூடுகின்றன.


முடிந்தவரை இந்தப் பிறவியிலேயே அவற்றை நாம் அனுபவித்து விடுகிறோம். அனுபவித்து முடிக்காத வினைப் பயன்கள் அடுத்த பிறவியில் தொடரும். 


இப்படி சேமித்து வைத்த வினைகளை சஞ்சித வினை என்பார்கள். இந்த வினையின் தொகுதி பின் வரும் பிறவிகளில் நம்மைத் தொடரும். 


இந்த சஞ்சித வினையின் ஒரு பகுதியை இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கிறோம். அதற்கு பிராரப்த  கர்மம் என்று பெயர். 

அப்படி அனுபவிக்கும் போது மேலும் பாவ புண்ணியங்களை சேர்த்துக் கொள்கிறோம். அதற்கு ஆகாமிய கர்மம் என்று பெயர். 


சஞ்சிதம் - பிரார்பதம்  -  ஆகாமியம் 


கொண்டுவந்தது, அனுபவிப்பது, அனுபவிக்கும் போது மேலும் உண்டாக்குவது. 


நம் சஞ்சித வினை குவிந்து கிடக்கிறது. நிறைய பாவங்களும் உண்டு, நிறைய புண்ணியங்களும் உண்டு. 


சரி, முதலில் இவனின் பாவங்களை தீர்த்து விடுவோம் என்று அடுத்து வரும் பிறவிகளில் துன்பம் மட்டுமே தந்தால் எப்படி இருக்கும்? பிறந்தது முதல் இறக்கும் வரை துன்பம் மட்டும் தான். இன்பமே கிடையாது என்றால் எப்படி இருக்கும். தாங்க முடியாது அல்லவா?


சரி, முதலில் புண்ணியம் மட்டும் தருவோம், என்று இன்பம் மட்டுமே தந்து கொண்டிருந்தால், நன்றாகத்தான் இருக்கும்.ஆனால், பின்னாளில் வெறும் துன்பம் மட்டுமே வரும். சகிக்க முடியாது. 


எனவே, இறைவன் , கருணையோடு நாம் சேர்த்து வைத்த பாவ புண்ணியங்களை  "பகுத்து",  இந்தப் பிறவியில் இவ்வளவு இன்பம், இவ்வளவு துன்பம் என்று தருகிறான்.  கொஞ்சம் துன்பம் வரும், பின் கொஞ்சம் இன்பம் வரும். இரண்டும் மாறி மாறி வரும்படி இறைவன் பகுத்துத் தருகிறான். 


கொஞ்சம் வெயில், கொஞ்சம் மழை, கொஞ்சம் குளிர், என்று வரும்போது நம் உடல் அதற்குப் பழக்கிக் கொள்கிறது. 


இப்படி, உயிர்கள் செய்த நல் வினை, தீ வினைகளை அவற்றிற்கு பகுத்துத் தருவதால் அவன் "பகவன்"  என்று அழைக்கப் படுகிறான். 


சரி, அது "முதற்றே உலகு" ?

Monday, March 29, 2021

திருக்குறள் - அகர முதல - பாகம் 4

திருக்குறள் - அகர முதல - பாகம் 4 


 அகர முதல எழுத்து எல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.


அது என்ன "ஆதி பகவன்" 


அதற்கு முன் கொஞ்சம் இலக்கணம்.


முதலில் ஒலி வடிவம்.


பின் ஒலியைக் குறிக்கும் எழுத்து வடிவங்கள்.


முதலில் எழுத்து.


எழுத்துகள் சேர்ந்து சொற்கள் உருவாகின்றன.


சொற்கள் சேர்ந்து வாக்கியம் உருவாகிறது.


இரண்டு சொற்களை சேர்க்க சில விதி முறைகள், இலக்கணங்கள் உண்டு.


வீடு கட்டும் போது இரண்டு செங்கலை வைத்தால் அவை தானாக ஒட்டிக் கொள்ளாது. அதை சேர்த்து வைக்க சிமெண்ட் அல்லது வேறு ஏதாவது ஒரு கலவை வேண்டும். அப்போதுதான் அது விழுந்து விடாமல் உறுதியாக இருக்கும்.


அது போல


இரண்டு வார்த்தைகளை சேர்க்கும் சிமென்டுக்கு தொகைமொழி என்று பெயர்.


தொகுக்கும் மொழி தொகை மொழி.


புரிகிறது அல்லவா?


தமிழிலே ஆறு வகையான தொகை மொழிகள் இருக்கின்றன.


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/4.html


(please click the above link to continue reading)


1. வேற்றுமைத்தொகை

2. வினைத்தொகை

3. பண்புத்தொகை

4. உவமைத்தொகை

5. உம்மைத்தொகை

6. அன்மொழித்தொகை


இதில் நாம் பண்புத் தொகையை மட்டும் பார்ப்போம் .


ஒரு பொருளை அல்லது செயலை மேலும் விளக்கி கூறுவது பண்புத் தொகை.


உதாரணமாக


பச்சை இலை  என்றால் இலையின் நிறம் பச்சை என்று இலையைப் பற்றி மேலும் விளக்கிக் கூறுகிறது.


உயர்ந்த மரம்


கரிய மலை


இவை எல்லாம் பண்புத் தொகைகள்.


இதில் உள்ள பச்சை, உயர்ந்த, கருப்பு என்பவை பண்புப் பெயர்கள்.


சில சமயம் பண்புப் பெயருக்கு பதிலாக இன்னோர் பெயர்ச் சொல் வரும்.


தாமரைப் பூ

தென்னை மரம்

நாகப் பாம்பு


என்பனவற்றில் தாமரை என்ற சொல் பூவைப் பற்றி மேலும் விளக்குகிறது.


வெறும் மரம் என்று சொன்னால் என்ன மரம் என்ற கேள்வி வரும். அதை விளக்குவது தென்னை என்ற சொல். இங்கே தென்னை என்ற சொல் மரத்தின் பண்பை குறிக்கிறது. தென்னை என்பது பண்புப் பெயர் அல்ல. இருந்தும் அது பண்புப் பெயரின் வேலையைச் செய்கிறது அல்லவா.


தென்னை என்று சொன்னால் போதாதா? தென்னை என்றாலே மரம் தானே. தாமரை என்றாலே பூ தானே. பின் ஏன், தாமரைப் பூ? 


வெறும் தென்னை என்றால் தென்னை ஓலை, தென்னை குருத்து என்று வேறு பல விடயங்களும் வரும். எனவே, தென்னை மரம். 


இதற்கு இரு பெயரொட்டு பண்புத் தொகை என்று பெயர்.


இரண்டு பெயர்கள் சேர்ந்து வந்து, அதில் ஒன்று மற்றொன்றின் பண்பைக் குறிப்பது.


இருபெயரொட்டு பண்புத் தொகையை பிரிக்கக் கூடாது. அவற்றை சேர்த்தே படிக்க வேண்டும்.


சரி, அதற்கும் இந்த குறளுக்கும் என்ன சம்பந்தம் ?


ஆதி பகவன் என்ற சொல்லில், பகவன் என்றாலே ஆதியில் இருந்து இருப்பவன் தான். ஆதி என்றாலே அது இறைவனைத்தான் குறிக்கும்.


ஆதி மூலமே  என்ற அந்த யானை அழைத்தது நினைவு இருக்கிறது அல்லவா.


ஆதி பகவன் என்பது இரு பெயரொட்டு பண்புத் தொகை.


இரண்டும் ஒன்றையே குறிப்பது.


பகவன் என்றால் வேறு  யாரையோ நினைத்துக் கொள்ளக் கூடாது. பலப் பல சமயங்கள் பின் நாளில் தோன்றலாம். ஒவ்வொரு சமயமும் புதுப் புது கடவுள்களை பற்றிக் கூறலாம்.


அவையெல்லாம் கருத்தில் கொள்ளக் கூடாது.


ஆதி பகவன் எவனோ அவனே உலகுக்கு முதல்.


இரு பெயரொட்டு பண்புத் தொகை பற்றி அறிந்தால் இந்த குறளை மேலும் நாம் இரசிக்க முடியும்.


இலக்கியத்தை ஆழ்ந்து அறிய இலக்கணம் அவசியம். 


பகவான் கேள்விப் பட்டு இருக்கிறோம். அது என்ன பகவன்? 


Sunday, March 28, 2021

திருக்குறள் - அகர முதல - பாகம் 3

திருக்குறள் - அகர முதல - பாகம் 3 


 அகர முதல எழுத்து எல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.


எல்லா மொழிகளுக்கும் அகரம் எப்படி முதன்மையாக இருக்கிறதோ அது போல அனைத்து உலகுக்கும் இறைவன் முதலாக இருக்கிறான். அகரம் எப்படி முதன்மை பெற்றது என்பதை முந்தைய ப்ளாகுகளில் சிந்தித்தோம். 


அகரம் மொழிகளுக்கு முதல் அது போல உலகத்துக்கு இறைவன் முதல் என்றால், இறைவன் அந்த எழுது 'அ' போல இருப்பானா என்று கேட்கலாம். 


யாராவது கேட்டு இருப்பார்கள். குதர்க்கவாதிகள் அன்றும் இருந்திருப்பார்கள் போல் இருக்கிறது. புலி என்பது பூனை போல் இருக்கும் என்றால், 'ஆஹா, அப்படி என்றால் புலி பால் குடிக்குமா ?" என்று கேட்கும் அறிவாளிகளைக் கொண்டது இந்த உலகம். 


பரிமேலழகர் அதற்கும் விடை சொல்கிறார். 


"இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை"


என்று உரை எழுதுகிறார். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/blog-post_28.html


(click the above link to continue reading)


இது வடிவம், ஓசை பற்றி வந்தது அல்ல, தலைமை பண்பு பற்றி வந்தது என்கிறார். 


அது கூடவே, "எடுத்துக்காட்டுவமை" என்றும் கூறுகிறார். 


அது என்ன "எடுத்துக்காட்டுவமை"


கொஞ்சம் இலக்கணம் படிப்போம். 


அணி என்றால் அணிகலன். மோதிரம், வளையல், சங்கிலி போன்ற அணிகலன்கள். இவை நமக்கு அழகு செய்பவை. அது போல, பாடலுக்கு அழகு செய்பவை அணி எனப்படும்.


உவமை அணி என்றால், ஒன்றைச் சொல்லி மற்றதை விளங்க வைப்பது.


நிலவு போன்ற முகம், தாமரை போன்ற பாதம் என்று சொல்லும் போது முகத்தை நிலவுக்கு உவமையாக்கி சொல்கிறோம்.


இதில் இரண்டு வகை உண்டு.


உவமை அணி


எடுத்துக்காட்டு உவமை அணி என்று.


நிலவு போல முகம் என்றால் உவமை அணி.


நிலவு முகம் என்றால் எடுத்துக்காட்டு உவமை அணி. 


இதில் "போல" என்ற உவம உருபு இல்லை. அதை நாம் தான் எடுத்துக் காட்ட வேண்டும்.


மதி முகம் என்றால் மதி போன்ற முகம்.


அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.


என்ற குறளில் 


அகர முதல எழுத்து எல்லாம் 
ஆதி பகவான் முதற்றே உலகு 


என்ற இரண்டு வரிகள் இருக்கின்றன. இரண்டுக்கும் என்ன சம்பந்தம் ?


நடுவில் "போல" என்ற உவம உருபு இல்லை. அகரம் மொழிக்கு முதலாக இருப்பது "போல", இறைவன் உலகுக்கு முதலாக இருக்கிறான் என்று பொருள் கொள்ள வேண்டும். 


இப்போது ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். எடுத்துக்காட்டு உவமை அணி என்று ஒன்று இல்லாவிட்டால், இந்த இரண்டு வரியும் ஒன்றுக்கொன்று எப்படி சம்பந்தப்படும் ? தனித்தனியான இரண்டு வரிகள் இருக்கும். ஒரு பொருளும் இருக்காது. 


போல என்ற அந்த ஒரு சொல்  இந்த குறள் என்ன சொல்ல வந்ததோ அதை நமக்கு  உணர்த்துகிறது அல்லவா ?


உவமைக்கு இரண்டு வேலை இருக்கிறது. 



ஒன்று ஒன்றை உயர்வு படுத்திச் சொல்வது. 



இரண்டாவது, தெரிந்ததை வைத்து தெரியாதை விளங்கச் செய்வது. 


உதாரணமாக,


அவளுடைய முகம் நிலவு போல இருந்தது என்றால் முகமும் தெரியும், நிலவும் தெரியும். எனவே , இங்கே உவமை முகத்தின் அழகை உயர்த்திச் சொல்ல வந்தது. 



புலி இருக்கிறதே அது ஒரு பெரிய பூனை போல இருக்கும் என்று சொல்லும்போது பூனை ஒன்றும் புலியை விட உயர்ந்தது அல்ல. ஆனால் நாம் பூனையை பார்த்து இருப்போம். வீட்டிலேயே இருக்கும். புலியை பாத்து இருக்க மாட்டோம். எனவே, தெரிந்த பூனையை வைத்து தெரியாத புலியை புரிய வைக்க உவமை பயன்படுகிறது. 


இது ஒரு புறம் இருக்கட்டும். 


உவமை சொல்லும் போது , ஒரு படி உவமை என்று ஒன்று உண்டு. அதாவது உவமை சொல்லப்பட்ட பொருளின் ஒரே ஒரு குணம் தான் பொருந்தும். எல்லாவற்றையும் பொருத்திப் பார்த்தால் அர்த்தம் அனர்த்தம் ஆகும். 


உதாரணமாக,


நிலவு போன்ற முகம் என்றால், குளிர்ந்த ஒளி பொருந்திய முகம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.  நிலவில் இருப்பது போல அவளின் முகத்தில் பள்ளம் மேடு இருக்குமா ? அவளும் நிலவு போல வளர்ந்து வளர்ந்து தேய்வாளா என்று கேட்கக்  கூடாது.நிலவின் குளிர்ச்சி மட்டும் தான் இங்கே எடுத்துக் கொள்ள வேண்டும். 


இறைவனைப் பற்றி சொல்ல வருகிறார் வள்ளுவர். 


இறைவனை எதற்கு உதாரணமாகச் சொல்லலாம் ? இறைவனை விட உயர்ந்தது எதுவும் இல்லை. எனவே, உயர்ந்ததைச் சொல்லி இறைவன் அது போல இருப்பான் என்று சொல்ல முடியாது. 


இறைவன் அறிய முடியாதவன். எனவே, அறிந்த ஒன்றை வைத்து அறியாத இறைவனை விளங்கச் செய்ய வேண்டும். 


எனவே, அகரத்தை எடுக்கிறார் வள்ளுவர். 


இங்கே,அகரத்துக்கும் இறைவனுக்கும் எதில் சம்பந்தம் ?


"தலைமை பண்பு பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை " என்கிறார் பரிமேலழகர். 


அதாவது, அகரம் நமக்குத் தெரியும். அது போல இறைவன் தலைமை பண்பு கொண்டவன் என்பதற்காக "தலைமை பண்பு பற்றி வந்த எடுத்துக் காட்டு உவமை" என்றார். 


எப்படி அகரம் எழுத்துக்கு முதலாக இருக்கிறதோ அது போல இறைவன் உலகுக்கு முதலாக இருக்கிறான்.


சரி, ஒருவன் தலைவன் என்றால் அவனை யாரோ தேர்ந்து எடுத்து இருக்க வேண்டும் அல்லவா ? முதல்வரோ, பிரதமந்திரியோ மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு தலைவராக வருகிறார்கள். 


அப்படி என்றால் இறைவனை மக்கள் தேர்ந்து எடுத்தார்களா ?


எப்படி இறைவன் முதல்வனான் ?


இலக்கணம் அதையும் விளக்குகிறது.


எப்படி என்று மேலும் சிந்திப்போம். 

Saturday, March 27, 2021

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - அகர முதல - பாகம் 2

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - அகர முதல - பாகம் 2 




பாடல் 

அகர முதல எழுத்து எல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.


பொருள் 

இதன் முதல் பாகத்தை கீழே உள்ள இணைய தளத்தில் காணலாம். 

https://interestingtamilpoems.blogspot.com/2021/03/1_26.html


இங்கே "அகர முதல" என்பதில் முதல் என்றால் என்ன? முதல் எழுத்தாக இருக்கிறது என்று அர்த்தமா ?


இல்லை. 


"நான் வகுப்பில் முதலாவதாக வருவேன்" என்றால், பத்து மணி வகுப்புக்கு எட்டு மணிக்கே போய் உட்கார்ந்து கொள்வது அல்ல முதலாவதாக வருவது. படிப்பில், விளையாட்டில், திறமையில் முதலாவதாக வருவது. அதாவது முதன்மை பண்பு இருக்க வேண்டும். 


அப்படி இந்த அ என்ற எழுத்துக்கு என்ன முதன்மை பண்பு இருக்கிறது? மற்ற எழுத்துகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு அகரத்துக்கு என்ன இருக்கிறது? 


அதற்கு முன்னால், இறைவன், கடவுள் பற்றிய தர்க்கம் எழும் போது கடவுளை நம்புபவர்கள் சொல்லுவது "ஒரு பொருள் இருக்கிறது என்றால் அதை செய்த ஒருவன் இருக்க வேண்டும் அல்லவா? அது போல இந்த உலகம் இருக்கிறது என்றால் அதை தோற்றுவித்தவன் ஒருவன் இருக்க வேண்டும் அல்லவா" என்பது அவர்கள் வாதம். 


அதற்கு எதிர் வாதம் செய்பவர்கள் சொல்வது, "எதற்குமே ஒரு காரிய கர்த்தா வேண்டும் என்றால், இறைவனை தோற்றுவித்தவர் யார்" என்று வாதம் செல்லும். இறைவன் தானகவே தோன்றி விட்டான் என்றால் இந்த உலகமும் தானாகவே தோன்றி விட்டது என்று ஏன் சொல்லக் கூடாது என்ற கேள்வி வரும். 


இப்போது அகரத்துக்கு வருவோம். 


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/2_27.html


(click the above link to continue reading)


ஒவ்வொரு எழுத்தையும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணம் இருக்கிறது. நினைத்த மாதிரி எல்லாம் உச்சரிக்க முடியாது. அதற்கென்று ஒரு வரை முறை இருக்கிறது. 


ஒலி தோன்ற மூன்று வேண்டும். காற்று வெளிப்பட வேண்டும். அப்புறம் அசையும் உறுப்புகள், அசையா உறுப்புகள் என்ற இரண்டு வேண்டும். 


நாக்கு, உதடு, கீழ் தாடை - அசையும் உறுப்பு. 


பல், மேல் அன்னம் - அசையா உறுப்பு. 


தொண்டையில் இருஇருந்து வரும் காற்றை இந்த உறுப்புகளின் மூலம் நாம் வேறு படுத்தலாம். அப்போது வேறு வேறு ஒலி உண்டாகும். 


வாயைத் திறந்தாலே போதும், அ என்ற ஓசை வந்து விடும் என்கிறது நன்னூல் சூத்திரம். 


அவற்றுள்  

முயற்சியுள் அஆ அங்காப்புடைய (நன்னூல்-76) 


அங்காப்பு என்றால் வாயைத் திறப்பது. 


மற்ற ஒலிகளுக்கு வாயை குவிக்க வேண்டும் (உ) உதட்டை விரிக்க வேண்டும் (ஈ), நாக்கை மடிக்க வேண்டும் (ழ). 


(இ, ஈ, எ, ஏ, ஐ அங்காப்போடு 

அண்பல் முதல்நா விளிம்புற வருமே. (நன்னூல்-77)


உ, ஊ, ஒ, ஓ, ஔ இதழ் குவிவே.(நன்னூல்-78)


என்று ஒவ்வொரு எழுத்தும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்று இலக்கணம் இருக்கிறது. ஆர்வம் உள்ளவர்கள் மேற்கொண்டு நன்னூலில் காண்க) 


 உறுப்புகளின் உராய்வில் உண்டாவது தான் மற்ற எழுத்துக்கள். ஆனால் அ என்ற ஓசை மட்டும் எந்த உறுப்பும் உராய்வு இல்லாமல் தானே வெளிப்படும். 


எனவே அ என்ற எழுத்துக்கு முதன்மை இடம். அது தானே தோன்றும். 


சரி, தானே தோன்றியது மட்டும் அல்ல,  பிற உறுப்புகளின் துணை கொண்டு ஏனைய எழுத்துகளை உண்டாக்கும். 


எனவே அகரத்துக்கு முதலிடம். 


அந்த அகரம் போல, இறைவன் தானே தோன்றி, மற்றவற்றையும் தோற்றிவிப்பான். 


எனவே, அகரத்தைச் சுட்டி, அதுபோல இறைவன் உலகுக்கு முதலானவன் என்றார். 


இந்த குறளை உற்று நோக்கினால் ஒன்று புரியும் 


முதல் வரிக்கும், இரண்டாவது வரிக்கும் ஒரு ஒரு தொடர்பும் இல்லை. 


அகர முதல எழுத்து எல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.


இப்படி ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாமல் இரண்டு வரியை வள்ளுவர் எழுதுவாரா?


சிந்திப்போம். 

 


திருக்குறள் - நூல் கட்டமைப்பு

 திருக்குறள் - நூல் கட்டமைப்பு 


அறம், பொருள், இன்பம், வீடு என்ற இந்த நான்கில் வீடு என்பதை இலக்கண வகையால் சொல்ல முடியாது என்பதால் அதை நேரடியாக சொல்லவில்லை என்று பார்த்தோம்.

திருக்குறளின் கட்டமைப்பிலே இன்னும் இரண்டு செய்திகள் விடுபட்டுப் போய் விட்டன. அவற்றை இங்கே பார்க்கலாம். 


வாழ்வின் நான்கு கூறுகளான பிரமச்சரியம், இல்லறம், வானப்ரஸ்தம், துறவறம் என்ற நான்கு இருக்கிறதே அதில் வள்ளுவர் இல்லறம் மற்றும் துறவறம் மட்டும் தான் எடுத்துக் கொள்கிறார். 


ஏன்?


மற்ற இரண்டும் கிடையாதா என்றால், 


பிரமச்சரியம் என்பது இல்லறத்தின் ஒரு கூறு, அது போல வானப்ரஸ்தம் என்பது துறவறத்தின் ஒரு கூறு என்பதால், நான்கான அறங்களை இரண்டாக சுருக்கிக் கொள்கிறார் வள்ளுவர். 


அடுத்தது, குறளின் கட்டமைப்பிலே முதலில் பால் என்ற பிரிவு (அறத்துப் பால், பொருட்பால், காமத்துப் பால்) உள்ளது. 


அதற்குக் கீழே, இயல் என்ற பிரிவு இருக்கிறது. அறத்துப் பாலில் இல்லறவியல், துறவறவியல் என்று இரண்டு இயல்கள். 


நூல் தொடங்கிய பின், நூலுக்கு முன்னுரை எழுத வேண்டும். பாயிரம் என்பது மிக முக்கியமான ஒன்று. வள்ளுவர் பாயிரம் எழுதி இருக்கிறாரா?


வள்ளுவர் தனியே பாயிரம் எழுதவில்லை. முதல் நான்கு அதிகாரங்கள் பாயிரவியல் என்று சொல்லிவிட்டார். 


அதாவது, திருக்குறளுக்கு முன்னுரையாக நான்கு அதிகாரங்கள். 


அவையாவன 


- கடவுள் வாழ்த்து 

- வான் சிறப்பு 

- நீத்தார் பெருமை 

- அறன் வலியுறுத்தல் 


என்ற நான்கும். 


இந்த நான்கு அதிகாரங்களும் குறளுக்கு முன்னுரை அல்லது பாயிரம். 


அந்தப் பாயிரவியலில் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தின் முதல் குறளுக்கு கொஞ்சம் அர்த்தம் நேற்று சிந்தித்தோம். 

மேலும் சிந்திக்க இருக்கிறோம். 


இந்த செய்தி விட்டுப் போய் விட்டதால், நடுவில் இதைக் சொல்ல வேண்டி இருந்தது. 


நாளை, குறளை தொடர்வோம். 



Friday, March 26, 2021

திருக்குறள் - கடவுள் வாழ்த்து - அகர முதல - பாகம் 1

 திருக்குறள் - கடவுள் வாழ்த்து - அகர முதல - பாகம் 1 


இப்போது முதல் குறளுக்குப் போகிறோம். எல்லோரும் அறிந்தது தான். 


பாடல் 

அகர முதல எழுத்து எல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/1_26.html

(click the above link to continue reading)


அகர முதல = அகரத்தை முதலாகக் கொண்டது 

எழுத்து எல்லாம்  = எல்லா எழுத்துக்களும் 

ஆதி பகவன் = ஆதி பகவனை 

முதற்றே உலகு. = முதலாகக் கொண்டது இந்த உலகம். 


இவ்வளவுதான் இந்த குறளுக்கு பொருள். இதற்குள் புதைந்து கிடக்கும் நுட்பம் நம்மை வியக்க வைக்கிறது. 


எழுத்துக்கு அகரம் எப்படி முதலோ அது போல உலகுக்கு இறைவன் முதல். 


இதில் என்ன ஆழம் இருந்து விடப் போகிறது?


இறைவன் என்றால் யார்? அவன் எப்படி இருப்பான் ? அவன் தொழில் என்ன? அவனை எப்படி நாம் அறிந்து கொள்வது? எப்படி அவனைப் பற்றி சிந்திப்பது ? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தருகிறார் வள்ளுவர். 


தெரியாத ஒன்றை, காணாத ஒன்றை எப்படி விளக்குவது ? தெரிந்த ஒன்றைச் சொல்லி, தெரியாததை விளங்கச் செய்ய வேண்டும். 


உதாரணமாக, ஒரு சிறுவன், புலியை பார்த்ததே இல்லை. புலி எப்படி இருக்கும் என்று கேட்கிறான்.  அவனுக்கு எப்படி சொல்வது?


"நீ பூனை பார்த்து இருக்கிறாய் அல்லவா? புலி என்பது ஒரு பெரிய பூனை மாதிரி இருக்கும்" என்று சொல்லி விளங்கச் செய்வது போல. 


இறைவனின் தன்மை என்ன என்று கேட்டால், மொழிக்கு அகரம் எப்படியோ உலகுக்கு இறைவன்.


மொழிக்கு அகரம் எப்படி என்றால் என்ன அர்த்தம்? அது தெரிந்தால் அல்லவா உலகுக்கு இறைவன் எப்படி என்று அறிந்து கொள்வது.


உலகிலே எத்தனையோ மொழிகள் இருக்கின்றன. மொழி என்பது எழுத்து, சொல், வாக்கியம், இலக்கணம் இவற்றால் புனையப் படுவது. 


மொழிகள் வரி வடிவம், ஒலி வடிவம் என்ற இரண்டு பகுதிகளைக் கொண்டது.  சில மொழிகளுக்கு வரி வடிவம் கிடையாது. ஒலி வடிவம் மட்டும் தான் உண்டு. 


ஒலி தான் ஜீவ நாடி. வரி வடிவம் இல்லாமல் கூடப் போகலாம். அல்லது காலப் போக்கில் மாறியும் போகலாம். இன்று திருவள்ளுவர் நேரில் வந்தால், அவரிடம் திருக்குறளைக் கொடுத்து வாசிக்கச் சொன்னால் அவரால் முடியாது. காரணம், அவர் காலத்தில் இருந்த வரிவடிவம் மாறிப் போய் விட்டது. ஆனால் ஒலி வடிவம் மாறாமல் அப்படியே இருக்கிறது. 


"அகர முதல எழுத்து" என்றால் எல்லா எழுத்தும் (மொழியும்) நம் "அ" வன்னா போல இருக்காது. ஹிந்தியில் உள்ள அகரம் வேறு மாதிரி இருக்கும். ஆங்கிலத்தில் உள்ள 'A" வேறு மாதிரி இருக்கிறது. 


ஆனால், அவற்றின் ஒலி வடிவம் "அ" என்ற சத்ததிலேயே பிறக்கிறது. 


அதை ஆதி நாதம் என்று சொல்லுவார்கள். 


உலகில் உள்ள எல்லா மொழியும் 'அ' என்ற சப்த்தத்தில் இருந்துதான் பிறக்கின்றன. எப்படி உலகில் உள்ள எல்லா மொழிக்கும் அ என்ற சப்த்தம் அடிப்படையாக இருக்கிறதோ, அது போல அனைத்து உலகுக்கும் இறைவன் அடிப்படை என்கிறார். 


அகர முதல எழுத்து "எல்லாம்" 


என்று கூறினார். "எல்லாம்" என்றால் அனைத்து எழுத்துகளுக்கும் அ தான் அடிப்படை. அதில் விதி விலக்கே கிடையாது. 


எழுத்துக்கு அகரம் எப்படி தலைமையோ அது போல உலகுக்கு இறைவன் தலைவன் என்றார். 


அ என்ற சப்தத்தை மட்டும் வைத்துக் கொண்டு அது தான் தலைமை என்று எப்படி சொல்ல முடியும்?


மேலும் சிந்திக்க இருக்கிறோம்.