Wednesday, March 31, 2021

திருக்குறள் - அகர முதல - பாகம் 6

திருக்குறள் - அகர முதல - பாகம் 6 


அகரம் முதல, எழுத்து எல்லாம்; ஆதி- 
பகவன் முதற்றே, உலகு.




என்ற குறளில் , எப்படி அகரம் மொழிக்கெல்லாம் முதலாக இருக்கிறதோ அது போல இறைவன் உலகுக்கு முதலாக இருக்கிறான் என்பது பற்றி முந்தைய ப்ளாகுகளில் சிந்தித்தோம். 


இறைவன் முதல் என்றால் யார் அவனை முதலாக நியமித்தது ? அவன் மட்டும் தான் முதல்வனா அல்லது இந்த உலகம் தோன்ற மற்ற காரணங்களும் உண்டா ? இறைவனும் முதல் , அவன் கூட மற்ற ஏதாவது முதலாக இருக்குமா ? சொல்லும் போது தெளிவாக சொல்ல வேண்டும் அல்லவா ?


சில சமயம் பரிசு வழங்கும் போது முதல் பரிசு இரண்டு பேருக்கு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. அது போல, இறைவன் முதல்வன். அவன் மட்டும்தான் முதல்வனா, அல்லது அவன் கூட வேறு யாராவது உண்டா என்ற கேள்வி வரும் அல்லவா?


இருப்பதோ ஏழே வார்த்தைகள். விரித்தும் சொல்ல முடியாது. அதே சமயம் தெளிவாகவும் சொல்ல வேண்டும்.


வள்ளுவர் எப்படி சொல்லி இருக்கிறார் என்று பார்ப்போம்.


அதற்கு முன் கொஞ்சம் இலக்கணம்.


https://interestingtamilpoems.blogspot.com/2021/03/6.html


(click the above link to continue reading)


தமிழ் இலக்கணத்தில் இடைச் சொல் ஒன்று உண்டு.


தனித்து நின்று பொருள் தராது. இரண்டு சொற்களுக்கு இடையில் வந்து அவற்றிற்கு இடையில் உள்ள உறவு, அல்லது அர்த்தத் தெளிவை தரும்.


இடை எனப்படுவ
பெயரொடும் வினையொடும்
நடைபெற்று இயலும் : தமக்கு இயல்பு இலவே


என்பது தொல்காப்பியம்.


இடை எனப்படுவது பெயரோடும் (பெயர் சொல்லோடும் ), வினையோடும் (வினைச் சொல்லோடும் ) சேர்ந்து வரும். தனக்கென்று தனி இயல்பு இல்லாதது என்பது தொல்காப்பியம் தரும் இலக்கணம். 


நிறைய இடைச் சொற்கள் இருக்கின்றன.


அதில் ஏகார (ஏ ) இடைச் சொல்லை மட்டும் பார்ப்போம்.


இந்த ஏகார இடைச் சொல்  7 விதமாக வரும்.


ஏகார வினைச்சொல், தேற்றமும், வினாவும், எண்ணும், பிரிநிலையும் எதிர்மறையும், இசைநிறையும் ஈற்றசைவுமாகிய ஏழு பொருளைத்தரும்.


எப்படி என்று பார்ப்போமா ?


1. தேற்றம் என்றால் உறுதி, தெளிவு.


நான் நேற்று வந்தேன் என்று சொல்லலாம்


நான் நேற்றே வந்தேன் என்றும் சொல்லலாம்.


இரண்டுக்கும் என்ன வேறுபாடு ? நேற்றே வந்தேன் என்பது நேற்று வந்தேன் என்பதே அழுத்தமாக , உறுதியாகச் சொல்கிறது.


நான் இதைச் செய்தேன்
நானே இதைச் செய்தேன்


நான் செய்தேன் என்றால் வேறு யாரோ கூட என்னோடு சேர்ந்து செய்திருக்கலாம்.


நானே செய்தேன் என்பது நான் மட்டும் தான் செய்தேன் என்பதே தெளிவாக்குகிறது அல்லவா.


திருவிளையாடல் படத்தில் தருமி சொல்வதாக ஒரு வசனம் வரும்.


"இந்தப் பாட்டை எழுதியது நீர் தானே?" என்று நக்கீரர் கேட்பார். 


"நான், நான், நானே தான் எழுதினேன்" என்று தருமி சொல்வதாக அந்த வசனம் வரும். அதில் நானே என்ற சொல்லுக்கு அர்த்தம் நான் மட்டும் தான் என்பது. 

2. வினா


வீட்டுக்குப் போகிறாய்
வீட்டுக்குத் தானே போகிறாய் ?


முதலில் உள்ள வாக்கியம் வீட்டுக்குப் போவதை குறிக்கிறது.
இரண்டாவது உள்ள வாக்கியம் வீட்டுக்குப் போகிறாயா அல்லது வேறு எங்காவது போகிறாயா என்ற வினாவை எழுப்புகிறது. "தானே" வில் உள்ள ஏகாரம் அந்த வாக்கியத்தை வினாவாக மாற்றுகிறது.


3. எண்


வீடு, நிலம், நகை
வீடே, நிலமே, நகையே


இரண்டாவது உள்ள வாக்கியம் வீடு, நிலம் , நகை என்ற மூன்று இருக்கிறது என்று எண்ணிக்கையை சொல்ல வருகிறது.


வீடே , நிலமே, நகையே என்று சொல்லும் போது நம்மை அறியாமலேயே நாம் அவற்றை எண்ணத் தொடங்கி விடுகிறோம். சொல்லிப் பாருங்கள்.


4. பிரிநிலை


அனைத்து மாணவர்களில் அவனே சிறந்த மாணவன்


இதில் , அந்த ஒரு மாணவனை பிரித்து காட்டுகிறது.


இராமாயணத்தில் உள்ள பாத்திரங்களில் பரதனே சிறந்த பாத்திரம்.


பரதனை பிரித்துக் காட்டுவதால், இது பிரிநிலை ஏகாரம்.



5. எதிர்மறை


நீயே கொண்டாய் என்ற வாக்கியத்தில் நீயா கொண்டாய் என்ற கேள்வி நிற்கிறது.


6. இசை நிறை


’ஏயே யிவலொருத்தி பேடியோ வென்றார்.’’


இதை இவள் ஒருத்தி என்று ஆரம்பித்து இருக்கலாம். ஏயே என்று ஆரம்பித்தது  இசை நயம் கருதி.


7. ஈற்று அசை


அசைச் சொல் என்றால் அர்த்தம் இல்லாமல், இலக்கணத்தை நிறைவு செய்யும் பொருட்டு  சேர்க்கப்படும் சொற்கள்.  Filler , buffer , மாதிரி.


 என்றுமேத்தித் தொழுவோ மியாமே


என்றும் ஏத்தி தொழுவோம் யாம் என்று நிறுத்தி இருக்கலாம். யாமே என்பதில் உள்ள  ஏ காரம் அர்த்தம் ஏதும் இன்றி நின்றது. அசைச் சொல்.


சரி, இவ்வளவு பெரிய இலக்கணம் எதற்கு ?


அதற்கும் இந்த குறளுக்கும் என்ன சம்பந்தம் ?


"ஆதி பகவன் முதற்றே உலகு "  என்ற வரியில் முதற்றே என்ற சொல்லை கவனியுங்கள்.


ஆதி பகவான் முதற்று உலகு என்று சொல்லி இருக்கலாம் அல்லவா ?


அப்படி சொல்லி இருந்தால், உலகுக்கு இறைவன் முதல் என்று அர்த்தம் வரும். அவன் மட்டும் தான் முதல் என்ற அர்த்தம் வராது.


முதற்றே என்பதில் உள்ள ஏகாரம் தேற்றப் பொருளில் வந்தது. அதாவது உறுதிப் பொருளில் வந்தது.


அவன் மட்டுமே முதல். வேறு யாரும் கிடையாது. மிக உறுதியாக சொல்கிறார் வள்ளுவர்.  


அது மட்டும் அல்ல, அவன் மட்டுமே  என்று சொல்லும் போது அவனுக்கு முன்னால் யாரும் கிடையாது. எனவே அவனை  யாரும் முதல்வனாக நியமிக்கவில்லை. வோட்டு போட்டோ, தேர்ந்து எடுத்தோ அவனை நியமிக்கவில்லை. 


ஒரே ஒரு ஏகாரம், பொருள் எப்படி மாறுகிறது ?


இலக்கணம் தெரியாவிட்டால் இவற்றை சுவைக்க முடியாது அல்லவா.


"முதற்றே உலகு"  என்ற சொற்றொடரில் "உலகு" என்று வருகிறது. உலகு என்றால் என்ன?  


உலகு என்றால் உலகம்.  சரி. உலகம் என்றால் ? இந்த பூமி, சூரியன், நிலா, கோள்கள், நட்சத்திரங்கள் போன்றவையா? 


இல்லை. 


பரிமேலழகர் உரை செய்கிறார். 


"உலகு’ என்றது, ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தாற் காணப்படாத கடவுட்கு உண்மை கூறவேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே உலகு' என உலகின்மேல் வைத்துக்கூறினார். கூறினாரேனும்,உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க."


"உலகு’ என்றது, ஈண்டு உயிர்கள் மேல் நின்றது." - இங்கே உலகம் என்பது உயிர்களை குறிக்க வந்தது என்கிறார்.  எல்லா உயிர்களுக்கும் அவனே முதல் என்பது அர்த்தம். 


"காணப்பட்ட உலகத்தாற் காணப்படாத கடவுட்கு உண்மை கூறவேண்டுதலின்"


உயிர்கள் எங்கும் இருப்பதைக் காண்கிறோம். இந்த உயிர்களை படைத்தது யார் என்ற கேள்விக்கு விடை, "இறைவன்" என்பது. 


இதை எல்லாம் ஏன் திருவள்ளுவர் சொல்கிறார்  என்ற கேள்விக்கு விடை 


"இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது."


கடவுளது உண்மை அல்லது இயல்பு கூறப்பட்டது என்கிறார் பரிமேலழகர். 


இவற்றை எல்லாம் நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, அது வேறு விஷயம். 


எவ்வளவு ஆழ்ந்து, சிந்தித்து எழுதி இருக்கிறார்கள் என்று பாருங்கள். இவ்வளவு நுண்மையான அறிவு உள்ள ஒருவர், தவறாக சொல்வாரா? எவ்வளவு அறிவு அறிந்தால்,  இப்படி எழுத முடியும். 


இது ஒரு சாதரணமான மனிதனால் முடியக் கூடிய காரியமா? 


அப்பேற்பட்ட அறிவு உள்ள ஒருவரின் எண்ணத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? அவர் சொல்வது தவறாக இருக்குமா? அவர் பொய் சொல்வாரா? 


மாட்டார் என்பது என் முடிவு. 


திருக்குறளில் தவறு கண்டு பிடிக்கும் அளவுக்கு நமக்கு அறிவுத் திறன் இருக்குமா? என்று சிந்திக்க வேண்டும். 


எனவே, அவர் சொல்லியது அனைத்தையும் உள் வாங்குவோம். முடிந்தவரை கடைபிடிப்போம். 


சரியா?


இனி, அடுத்த குறளுக்கு போவோம்.  உடனே போவோமா அல்லது இரண்டு மூணு நாள் விடுமுறை எடுத்துக் கொள்வோமா? முதல் குறளை முழுவதுமாக உள் வாங்க இரண்டு மூணு நாள் தேவைப்படாதா?





4 comments:

  1. அற்புதமான விளக்கம் ...ஐயா .
    வணக்கம் . வாழ்க ...வாழ்க...

    ReplyDelete
  2. திருவள்ளுவர் எழுதியது முற்றிலும் உண்மை. தினம் தமிழ் இலக்கணமும் ஓரளவு தெரிந்து கொள்கிறோம். நன்றி.

    ReplyDelete
  3. சரி தான். Holiday is fine. But v have to read this kural again and again. Correct?

    ReplyDelete
  4. 1. இலக்கணக் குறிப்பும், உதாரணங்களும் அருமை. நாம் தினம் இலகுவாகப் பேசும் மொழியில், அதன் பிரயோகங்களில் இப்படிப்படட இலக்கணங்கள் புதைந்து கிடைக்கின்றனவா என்று வியப்பாக இருக்கிறது.

    2. ஆனால், ஒருவர் மிகவும் யோசித்து எழுதியிருக்கிறார் என்பதால் மட்டுமே அது உண்மை ஆகி விடாது. எத்தனையோ பேர் பேத்தல்களும், பினாத்தல்களும் கொண்டு, மிகவும் யோசித்து, நுணுக்கமான வாதங்களுடன் பல நூறு பக்கங்களுக்குப் புத்தகமே எழுதி இருக்கிறார்கள். உதாரணமாக, creationism தான் சரி என்று எத்தனை புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால் அவை உண்மை ஆகிவிட முடியாது.

    நன்றி.

    ReplyDelete