Friday, November 26, 2021

திருவாசகம் - யாத்திரைப் பத்து

 திருவாசகம் - யாத்திரைப் பத்து 


எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்? 


ஏதாவது இலக்கு இருக்கிறதா? இந்த நேரத்தில், இந்த இடத்துக்குப் போக வேண்டும் என்று ஏதேனும் குறிக்கோள் இருக்கிறதா? 


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திசையில் பயணிக்கிறோம். 


எங்கு போவது என்றும் தெரியாது. எப்படி போவது என்றும் தெரியாது. 


சரி, போகலாம், போகிற வழியில் யாரையாவது விசாரித்துக் கொள்ளலாம் என்றால் கிளம்ப வேண்டுமே. 


எல்லாம் போட்டது போட்டபடி இருக்கிறது. எல்லாவற்றையும் ஒரு ஒழுங்கு பண்ணி வைத்துவிட்டு தானே கிளம்ப முடியும். 


இருக்கிற வீட்டை விட்டு கிளம்புவது என்றாலே gas ஐ மூடினோமா, மின்சாரத்தை ஆப் செய்தோமா, குழாய் எல்லாம் சரியாக அடைத்தோமா, ஜன்னல் எல்லாம் சரியாக சாத்தினோமா என்று ஆயிரம் யோசனை இருக்கிறது. 


இந்த உலகை விட்டு இறைவனை நோக்கிய பயணம் என்றால் எவ்வளவு செய்ய வேண்டும். 


மனைவி/கணவன், பெற்றோர், பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், மகன்/மகள், மருமகன், மருமகள், இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள், அனுபவிக்க வேண்டிய விஷயங்கள் என்று எவ்வளவு இருக்கிறது. 


இதை எல்லாம் முடித்துவிட்டு கிளம்புவது என்றால், எப்போது கிளம்புவது? 


அலை எப்ப ஓய , தலை எப்ப முழுக?


மணிவாசகர் சொல்கிறார், "இப்ப...இப்பவே கிளம்புங்கள்" என்று. 


ஆன்ம தேடல் வந்து விட்டால், சித்தார்த்தன் மாதிரி, பட்டினத்தார் மாதிரி துண்டை உதறி தோளில் போட்டுகொண்டு கிளம்பி விடவேண்டும். 


எல்லாம் முடித்துவிட்டு கிளம்புகிறேன் என்றால் அது ஒரு காலத்திலும் நடக்காது. 


பாடல் 


பூ ஆர் சென்னி மன்னன், எம் புயங்கப் பெருமான், சிறியோமை

ஓவாது உள்ளம் கலந்து, உணர்வு ஆய் உருக்கும் வெள்ளக் கருணையினால்,

`ஆ! ஆ!' என்னப் பட்டு, அன்பு ஆய் ஆட்பட்டீர், வந்து ஒருப்படுமின்;

போவோம்; காலம் வந்தது காண்; பொய் விட்டு, உடையான் கழல் புகவே.



பொருள் 



(Please click the above link to continue reading)


பூ ஆர் சென்னி  = பூக்கள் நிறைந்த தலை 


மன்னன் =எங்கள் மன்னன் 


எம் புயங்கப் பெருமான் = பாம்பை அணிந்த எங்கள் பெருமான் 


சிறியோமை = சிறியவர்களான எங்களை 


ஓவாது உள்ளம் கலந்து  = ஓவுதல் என்றால் நீக்குதல். ஓவாது என்றால் நீங்காமல் எம் உள்ளத்தில் கலந்து 


உணர்வு ஆய் = உணர்வாகி 


உருக்கும் வெள்ளக் கருணையினால், = வெள்ளம் போல் வரும் கருணையினால் நம்மை உருக்கி 


`ஆ! ஆ!' என்னப் பட்டு = அடா என்று ஆச்சரியப் பட்டு 


அன்பு ஆய் ஆட்பட்டீர் = அன்பு உருவமாய் ஆட் கொள்ளப் பட்டீர் 


வந்து ஒருப்படுமின்; = வந்து ஒன்றாகக் கூடுங்கள் 


போவோம் = போகலாம் 


காலம் வந்தது காண் = போக இதுதான் சரியான காலம் 


பொய் விட்டு = பொய்யான இந்த உலகை விட்டு 


உடையான் கழல் புகவே. = அனைத்தும் உடையவன் திருவடிகளை அடைய 


Travel Agent மாதிரி மணிவாசகர் எல்லோரையும் அழைக்கிறார். 


வண்டி எடுக்கப் போறோம். சீக்கிரம் வாங்க என்று அறை கூவி அழைக்கிறார். 


"போவோம், காலம் வந்தது காண்" என்கிறார். 


இதுதான் காலம். 


இந்த உலகில் எதையும் நாம் சரி செய்து வைத்துவிட்டுப் போக முடியாது. 


நமக்கு முன் இந்த உலகம் இருந்தது. 


நமக்கு பின்னும் இருக்கும். 


நாம் ஒழுங்கு படுத்தாவிட்டால் ஒன்றும் கெட்டுப் போய் விடாது. 


யாத்திரைக்கு அழைக்கிறார் மணிவாசகர். 




Thursday, November 25, 2021

திருவிளையாடற் புராணம் - பண்டை பழவினை மாற்றுவார் யார் ?

 திருவிளையாடற் புராணம் - பண்டை பழவினை மாற்றுவார் யார் ?


பாண்டிய மன்னன் குதிரை வாங்கி வரும்படி சொல்லி மாணிக்கவாசகரிடம் பொன் கொடுத்து அனுப்பினான். மணிவாசகரோ, குதிரை வாங்காமல் அந்தப் பணத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார்.


என்னதான் பக்திமானாக இருந்தாலும், மற்றவர் பணத்தை எடுத்து இறை காரியம் செய்யலாமா? நாளை மற்றவர்களும் அப்படிச் செய்யலாம் அல்லவா? மாணிக்கவாசகரே செய்தார், நான் செய்தால் தப்பா என்று ஆளாளுக்கு ஆரம்பித்து விட்டால்? 


அப்படி செய்ததற்கு மணிவாசகர் தண்டனை பெற்றார். அது வேறு விடயம்.


அது ஒரு புறம் இருக்கட்டும். 


மணிவாசகரின் நண்பர்கள் அவரிடம் "இப்படி மன்னன் கொடுத்த பணத்தில்திருப்பணி செய்து விட்டீரே, மன்னன் குதிரை எங்கே கேட்டு, உண்மை அறிந்து உம்மை தண்டித்தால் என்ன செய்யப் போகிறீர்" என்று கேட்டார்கள். 


அதற்கு அவர் 


"இன்றே இறந்தாலும், சரி. அல்லது நீண்ட நாள் இருக்க வேண்டி இருந்தாலும் சரி. அரசன் கோபித்தாலும் சரி. அல்லது பாராட்டினாலும் சரி. சுவர்க்கம் போனாலும் சரி. அல்லது நரகமே ஆனாலும் சரி. என்ன ஆனாலும் சரி, சிவனை மறக்க மாட்டேன். நடப்பது எல்லாம் விதிப் பயன். அதை யாராலும் மாற்ற முடியாது"


என்று கூறினார். 


பாடல் 


இறக்கினு மின்றே யிறக்குக வென்று மிருக்கினு மிருக்குக வேந்தன்

ஒறுக்கினு மொறுக்க வுவகையு முடனே யூட்டினு மூட்டுக வானிற்

சிறக்கினுஞ் சிறக்க கொடியதீ நரகிற் சேரினுஞ் சேருக சிவனை

மறக்கிலம் பண்டைப் பழவினை விளைந்தான் மாற்றுவார் யாரென

                                            மறுத்தார்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_25.html



(pl click the above link to continue reading)



இறக்கினு மின்றே யிறக்குக = இறக்கினும் இன்றே இறக்குக 


வென்று மிருக்கினு மிருக்குக = என்றும் இருக்க வேண்டும் என்றாலும் இருப்போம் 


 வேந்தன் = அரசன் 


ஒறுக்கினு மொறுக்க = கோபித்தால் கோபித்து கொள்ளட்டும் 


வுவகையு முடனே யூட்டினு மூட்டுக = அல்லது உவகையுடன் உபசரித்தாலும் உபசரிகட்டும் 


வானிற் = மேலுலகில் 


சிறக்கினுஞ் சிறக்க = சிறப்பாக சொர்க்கத்தில் இருந்தால் சந்தோஷமாக இருப்போம் 


கொடியதீ நரகிற் சேரினுஞ் சேருக = அல்லது கொடிய தீ நரகத்தில் கிடந்து துன்பப் பட வேண்டி இருந்தால் துன்பப் படுவோம் 


 சிவனை மறக்கிலம் = என்ன ஆனாலும் சரி, சிவனை மறக்க மாட்டோம் 


 பண்டைப்  = முந்தைய 


பழவினை = பழுத்த வினைகள் 


விளைந்தான் = வந்து விளைந்தால் 


 மாற்றுவார் யாரென மறுத்தார். = அதை மறுத்து யாரால் மாற்ற முடியும் 


அதெல்லாம் சரி, மாணிக்கவாசகர் அப்படி இருந்தார். அதுக்கு என்ன இப்ப? நாம அவர் போல இருக்க முடியுமா? அப்படி இருந்தால் நாமும் மணிவாசகராகி விடமாட்டோமா? இதெல்லாம் நடக்கிற காரியமா?


அப்படி அல்ல.


வாழ்வில், நாம் நினைக்கிறோம் எல்லாம் நம் சாமர்த்தியத்தில், நம் அறிவுத் திறனில், நம் உழைப்பில் நிகழ்கிறது என்று. நம்மால் எதையும் செய்ய முடியும் என்று நினைக்கிறோம். 


அப்படி நடந்தால் "பார்த்தாயா என் சமத்தை" என்று மார் தட்டுகிறோம். 


அப்படி நடக்கவில்லை என்றால்  மனமொடிந்து போகிறோம். 


இது போன்ற இலக்கியங்கள் நமக்கு ஒரு சமநிலையைத் தருகின்றன.


வெற்றியில் ஆடாதே. தோல்வியில் துவண்டு விடாதே.


எல்லாம் முன் செய்த வினை என்று இரு. இனி வரும் நாட்கள் நல்லவையாக இருக்க வேண்டும் என்றால்,இப்போது நல்லது செய்து கொண்டிரு என்று சொல்கின்றன. 


வாழ்க்கை என்றால் இன்ப துன்பம் இரண்டும் இருக்கும். 


ரொம்ப அல்லாட வேண்டாம். நிதானமாக இருப்போம் என்று நமக்கு அறிவுறுத்துகின்றன. 





Wednesday, November 24, 2021

திருக்குறள் - அன்புடைமைக்குப் பின்

 திருக்குறள் - அன்புடைமைக்குப் பின் 


திருக்குறளின் அதிகார முறைமையே நம்மை பிரமிக்க வைக்கும். 


முதலில் இந்த உலகைப் படைத்த கடவுளுக்கு கடவுள் வாழ்த்துச் சொன்னார். 


அடுத்தது, 


படைத்த உலகத்தை காக்க வேண்டி இறைவன் அளிக்கும் கொடையான மழையைப் போற்றி வான் சிறப்பு பற்றி கூறினார். 


உலகம் வந்தாகி விட்டது, மழையால் அது நிலை பெற்று விட்டது, இந்த உலகில், அதில் உள்ள இயற்கையின் இரகசியங்களை அறிந்து சொல்லும் நீத்தார் பெருமை பற்றி கூறினார். 


அடுத்தது, 


அவர் சொல்லும் அறங்களின் பெருமை பற்றி அறன் வலியுறுத்தல் என்ற அதிகாரத்தை வைத்தார்.


அடுத்தது, அறம் என்பது இல்லறம், துறவறம் என்று இரண்டாகப் பிரியும். எனவே இல்லறம் பற்றி சொல்ல மேற்கொண்டு இல்வாழ்க்கை என்ற அதிகாரம் செய்தார். 


அடுத்தது, அந்த இல்லறம் சிறக்க வேண்டும் என்றால், ஒரு பெண்ணின் துணை வேண்டும். எனவே, "வாழ்க்கை துணை நலம்" பற்றி கூறினார். 


அடுத்தது, திருமணம் செய்து கொண்டு, மனைவியோடு இல்லறம் நடத்தும் போது அன்பின் விரிவாக்கம் நிகழும். அதன் அடுத்த கட்டமாக "புதல்வர்களைப் பெறுதல்" பற்றி கூறினார். 


அடுத்தது, மனைவி, பிள்ளைகள் என்று ஆகி விட்டது. அந்த இல்லறம் சிறக்க வேண்டும் என்றால் அங்கு அன்பு பெருக வேண்டும். எனவே, "அன்புடைமை" பற்றி கூறினார். 


அடுத்து என்னவாக இருக்கும் ?


கணவன், மனைவி, பிள்ளைகள், அன்பு செய்யும் இல்லறம் என்று ஆகி விட்டது. 


அடுத்து என்ன? 


இல்லறம் விரிய வேண்டும். தன் வீட்டை கடந்தும் அன்பு பெருக வேண்டும், அதற்காக 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_24.html


Please click the above link to continue reading



"விருந்தோம்பல்" 


பற்றி கூறப் போகிறார். 


வீடு என்று ஒன்று இருந்தால்,  நாலு பேர் வந்து போக வேண்டும். 


நான், என் மனைவி, என் பிள்ளை என்று இருக்க முடியுமா?  சுற்றம் சூழ இருக்க வேண்டாமா?


எப்படி விருந்தை போற்றுவது என்று கூற இருக்கிறார். 


விருந்தை போற்றுவதை ஒரு அறமாகச் சொன்னது நம் மொழியாகத்தான் மட்டும் இருக்கும். 


விருந்தை எல்லோரும் உபசரிப்பார்கள்.  ஆனால், அதை தர்மமாக, அறமாகச் சொன்னது நம் நாட்டுக்கே உரிய பண்பாடு, கலாசாரம். 


விருந்தினர்களை தெய்வத்துக்கு இணையாக வைத்து போற்றியது நம் நாடு. 


அதிதி தேவோ பவா 


என்று போற்றியது நம் நாடு. 


விருந்தோம்பலில் உச்சம் தொட்டு காட்டுவார் வள்ளுவர். 


விருந்தோம்பல் பற்றி இனி வரும் நாட்களில் சிந்திப்போம். 




Tuesday, November 23, 2021

அபிராமி அந்தாதி - எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே

 அபிராமி அந்தாதி - எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே


பயமாக இருந்தால் இன்னொருத்தர் கையை பிடித்துக் கொண்டால் பயம் போய்விடுகிறது, அல்லது குறைந்து விடுகிறது. அக்கம் பக்கம் யாரும் இல்லாவிட்டாலும், இருக்கும் இருக்கையின் கைப் பிடியை இறுகப் பற்றிக் கொள்கிறோம் அல்லவா? 


அன்பை வெளிப்படுத்த கை குலுக்குகிறோம்.


மனைவி/கணவன் மேல் அன்பு மேலீட்டால் அவர்கள் கையைப் பற்றிக் கொள்கிறோம். 


சில சமயம், காலையும் பற்றிக் கொள்ளலாம். பாதத்தை பற்றிக் கொல்வதும் ஒரு சுகம் தான். 


சிவனுக்கு குறை வந்தால், அபிராமியின் பாதங்களைப் பற்றி தன் தலை மேல் வைத்துக் கொள்வாராம். 


இதில் யார் பெரியவர், சிறியவர் என்பதல்ல கேள்வி. 


அளவு கடந்த பாசம். காதல். 


தலை மேல் வைத்துக் கொல்வதற்கு முன், அந்த சிவந்த பாதங்களை தொட்டு தன் மடி மேல் வைத்து இருப்பார். அதை மென்மையாக வருடி கொடுத்து இருப்பார். (பாகு கனி மொழி, மாது குற மகள் பாதம் வருடிய மணவாளா என்று முருகனைப் பற்றிச் சொல்வார் அருணகிரி), அந்தப் பாதங்களுக்கு முத்தம் தந்திருப்பார். இன்னும் இன்னும் காதல் ஏற, அந்தப் பாதங்களை தன் தலை மேல் வைத்து இருப்பார். 


இதை என்னவென்று சொல்லுவது? 


பக்தியை கடந்த, அன்யோன்யம். நெருக்கம். உருக்கம். 


அவள் பாதத்தை தூக்கி தலை மேல் வைத்தவுடன் அவருக்கு அவருடைய குறை எல்லாம் தீர்ந்த மாதிரி இருந்ததாம். 


பாடல் 


என்குறை தீரநின்று ஏத்துகின்றேன்; இனி யான் பிறக்கின்

நின்குறையே அன்றி யார் குறை காண்; இரு நீள்விசும்பின்

மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்?

தன்குறை தீர எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_23.html


Please click the above link to continue reading




என்குறை தீர = என்னுடைய குறைகள் தீர வேண்டி 


நின்று =உன் முன் நின்று 


ஏத்துகின்றேன் = உன்னைப் போற்றுகின்றேன் 


இனி யான் பிறக்கின் = இனிமேல் நான் பிறவி எடுத்தால் 


நின்குறையே அன்றி = அது உன் குறை.  உன் பக்தனுக்கு நீ முக்தி தராவிட்டால் அது உன் தப்புத்தான் 


யார் குறை காண் = வேற யாருடைய குறை? 


இரு நீள்விசும்பின் = இருண்ட நீண்ட வானத்தில் 


மின்குறை காட்டி = பளிச்சென்று குறைந்த நேரம் காட்டி மறைந்து விடும் மின்னலைப் போல 


மெலிகின்ற நேரிடை = மெலிந்த நேர்த்தியான இடையை உடையவளே 


மெல்லியலாய் = மென்மையானவளே 


தன்குறை தீர = தன்னுடைய குறைகள் தீர 


எங்கோன் = எங்கள் தலைவர் சிவ பெருமான் 


சடைமேல்வைத்த = தன்னுடைய தலைமேல் வைத்துக்கொண்ட 


தாமரையே.  = தாமரை போன்ற சிவந்த பாதங்களை உடையவளே 


அனுபவம் இருந்தால் அன்றிப்  புரியாது. 


"நின் பாதம் எனும் வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆட்கொண்ட நேசத்தை என் சொல்வேன்" 


என்பார் பட்டர்.


அபிராமி அந்தாதி படித்தால் பாட்டை விட்டுவிடவேண்டும்.  அவர் காட்டும் அந்த நிகழ்வுக்குப் போய் விட வேண்டும். அந்த மன நிலையைப் பற்றிக் கொள்ள வேண்டும். 


மற்ற பாடல்கள் போல் சொல்லுக்கு பொருள் சொல்லி புரிந்து கொள்ளும் பாடல்கள் அல்ல அவை. 


கற்கண்டு எப்படி இருக்கும் என்று எப்படி சொல்லி விளங்க வைப்பது. 


ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொள்ள வேண்டும். எல்லாம் புரிந்து விடும். 


அபிராமி அந்தாதி கற்கண்டு போல. சொன்னால் புரியாது. மனதுக்குள் போட்டுக் கொண்டால் தித்திக்கும். 


வேறு என்ன சொல்ல?






Monday, November 22, 2021

திருக்குறள் - உயிர் நிலை

 திருக்குறள் - உயிர் நிலை 


பாடல் 


அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_22.html


(please click the above link to continue)




அன்பின் வழியது உயிர்நிலை  = அன்பின் வழி செல்லும் உடம்பே உயிர் உயிர் உள்ள உடம்பு 


அஃதிலார்க்கு = அந்த அன்பு இல்லாதவர்களுக்கு 


என்புதோல் போர்த்த உடம்பு. = உள்ள உடம்பு என்பது எலும்பை தோல் போர்த்திய ஒன்று 


அதாவது, அன்பு இல்லாதவனை பிணம் என்கிறார் வள்ளுவர். எலும்பு இருக்கிறது, தோல் இருக்கிறது. உயிர் இல்லை என்றால் அது பிணம்தானே. 


இப்படித்தான் உரை எழுதிய பெரியவர்கள் அனைவரும் கூறி இருக்கிறார்கள். 


இருந்தும் ஏதோ ஒன்று நிறைவு பெறாத மாதிரி இருக்கிறது. 


அன்பில்லாதவன் பிணத்துக்கு சமம், உயிர் இல்லாதவன் மாதிரி என்று சொல்வதற்கு வள்ளுவர் வேண்டுமா? அல்லது அதை சொல்ல "அன்பின் வழியது உயிர் நிலை" என்று சொல்ல வேண்டுமா?


இதில் மேலும் ஆழமான கருத்து ஏதேனும் இருக்குமோ என்று சிந்தனை செய்து பார்த்தேன். 


எனக்குத் தோன்றியதை பகிர்ந்து கொள்கிறேன். அது தவறாகவும் இருக்கலாம். சரி என்று பட்டால், ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லையேல் தள்ளி விடுங்கள். 


நிலை அல்லது நிலைப்பாடு என்று நாம் எதைச் சொல்கிறோம்? 


ஒருவரின் நோக்கம், விருப்பம், செயல் இவற்றை நாம் அவரின் நிலைப்பாடு என்கிறோம். 


வருமான வரியைக் குறைக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு என்று ஒரு அரசியல் கட்சி கூறலாம். அது அவர்கள் நிலை. அவர்கள் அந்த நிலையில் இருக்கிறார்கள்.


உயிரின் நிலை என்ன என்று கேட்டால் அன்பு வழியில் செல்வது தான் உயிரின் நிலை. அதன் நிலைப்பாடு. எப்போது உயிர் அன்பு செய்வதை நிறுத்தி விடுகிறதோ, அப்போது, அது இருந்தும் பயன் இல்லை. 


பள்ளிக் கூடம் செல்வேன், படிக்க மாட்டேன் என்று ஒருவன் கூறினால், அவன் மாணவனாக இருக்கவே தகுதி இல்லாதவன் தானே? 


அவனை மாணவன் என்றே சொல்ல முடியாது. 



இப்போதெல்லாம் ஆசிரியர்கள் பல தகாத காரியங்களை செய்கிறார்கள் என்று செய்திகள் வருகின்றன. தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கு பாலியில் தொல்லை தந்ததாக ஆசிரியர்கள் மேல் குற்றச் சாட்டுகள் வருகின்றன . அது உண்மையாக இருந்தால், அவர்கள் ஆசிரியர்கள் என்ற தகுதியில் இருந்து தவறி விட்டவர்கள் என்று தானே ஆகும். அவர்களை ஆசிரியர்கள் என்று கூற முடியுமா?


அது போல, அன்பு செய்யாத உயிரை, உயிர் என்ற கணக்கில் கொள்ள முடியாது. அது ஒரு உடம்பில் இருந்தாலும், அந்த உடம்பு உயிரற்ற உடம்பாகத்தான் கருதப் படும். என்பு தோல் போர்த்திய உடம்பு தான். உயிர் என்று பேருக்கு இருக்கிறதே தவிர அது செய்ய வேண்டிய கடமைகளை செய்யவில்லை. 


குறளை சற்று மாற்றிப் போடுவோம்.


அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு

என்புதோல் போர்த்த உடம்பு.


என்பதை 


உயிர்நிலை(யாவது) அன்பின் வழி


 அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.


என்று கொண்டால் நான் சிந்திக்கும் பொருள் வர வாய்ப்பு இருக்கிறது. 


மூச்சு விடுவது, சாப்பிடுவது, நடப்பது, தூங்குவது எல்லாம் உயிரின் வேலை முக்கிய வேலை அல்ல. அன்பு செய்வதுதான் உயிரின் முக்கிய வேலை. அன்பின் வழியில் செல்வதுதான் உயிரின் நிலை. 


மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். 


இந்த உரை சரி என்று சொல்லவில்லை. இப்படி சிந்தித்தேன் என்று சொல்கிறேன். 


சரி என்று பட்டால் கொள்ளவும். இல்லையெனில் தள்ளவும். 






பிணம் யார் மேலாவது அன்பு செய்யுமா? அதற்கு தாய் யார், தகப்பன் யார், உற்றார் யார்,நட்பு யார் என்று ஒன்றும் தெரியாது. அது பாட்டுக்கு கிடக்கும். தோல் இருக்கும், உள்ளே எலும்பு இருக்கும். என்ன பயன்? அன்பு செலுத்த முடியாது. 


வள்ளுவர் சொல்கிறார், சில பேர் உயிரோடு இருந்தாலும், அன்பு செய்யாமல் இருப்பார்கள். அவர்களை வள்ளுவர் உயிர் உள்ளவர்கள் பட்டியலில் இருந்து எடுத்து விடுகிறார். அவர்களிடம் இருப்பது எலும்பை தோல் போர்த்திய உடம்பு அவ்வளவுதான் என்கிறார். அதில் உயிர் இருக்கிற மாதிரி தெரியவில்லை. இருந்தால் அது அன்பு செய்யுமே?



Thursday, November 18, 2021

நாலாயிர திவ்ய பிரபந்தம் - மனக்கவலை தீர்ப்பார் வரவு

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - மனக்கவலை தீர்ப்பார் வரவு 


உடம்புக்கு ஒரு வலி என்றால் மருத்துவரைப் போய் பார்க்கிறோம். மருந்து தருகிறார். குணமாகிறது. 


மனதில் வரும் வலியை, கவலையை எப்படி போக்குவது? மனோ தத்துவ நிபுணர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் கண்டு பிடிப்பதற்கே பல காலம் ஆகும். கண்டு பிடித்தாலும் எல்லா மனக் கவலைக்கும் மருந்து இருக்கிறதா? 


ஏதோ ஒரு பெரிய தோல்வி, நெருங்கியவர் இறந்து போனார், இப்படி பல கவலைகள் இருக்கின்றன. அவற்றுக்கு எல்லாம் எங்கே மருந்து இருக்கிறது. 


நம்மாழ்வார் சொல்கிறார்...இறைவன் ஒருவன் தான் எல்லா மன கவலைக்கும் மருந்து. 


இறைவன் திருவடியை சேராதவர்களுக்கு மனக் கவலையை மாற்ற முடியாது என்கிறார் வள்ளுவர். 


தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.


சரி, இறைவனை எப்படி அடைவது? அவன் எப்படி இருப்பான், எங்கே இருப்பான், ஒன்றும் தெரியாது. விலாசம் இருந்தால் தேடிக் கண்டு பிடிக்கலாம். விலாசமே இல்லாவிட்டால் எப்படி கண்டு பிடிப்பது? 


சரி, விலாசம் இருக்கிறது என்றே வைத்துக் கொள்வோம். வழி தெரியுமா? தெரியாது. 


சரி, விலாசமும் இருக்கிறது. வழியும் தெரியும். இறைவன் இருக்கும் இடத்துக்கு போயும் சேர்ந்தாகி விட்டது. இறைவனை நம் அறிவால் புரிந்து கொள்ள முடியுமா? அவன் அறிவுக்கு எட்டிய உயரம், நிறம், கனம், ஆண்/பெண் பாகுபாடு என்ற எல்லைக்குள் இருப்பானா? நம் சிற்றறிவுக்குள் அவனை எப்படி அடக்குவது? 


நம்மாழ்வார் சொல்கிறார், நம்மால் தேடி கண்டு பிடிக்க முடியாது. ஆனால், அவன் நினைத்தால் நம் உள்ளத்துக்குள் வர முடியும். 


தேடுபவர்களுக்கு கிடைக்க மாட்டான். தேடாதார் நெஞ்சில் தானே வந்து அமர்ந்து கொள்வான் என்கிறார். 


அப்படி அவன் வந்து விட்டால், மனதில் கவலையே இருக்காது என்கிறார். 


பாடல் 



மருங்கோத மோதும் மணிநா கணையார்,


மருங்கே வரவரிய ரேலும்,-ஒருங் கே


எமக்கவரைக் காணலா மெப்போது முள்ளால்,


மனக்கவலை தீர்ப்பார் வரவு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_62.html


(click the above link to continue reading)



மருங்கோத மோதும்  = மருங்கு + ஓதம் + மோதும் = கரையில் அலை வந்து மோதும். பாற்கடலில் அலை வந்து மோதும் 


மணிநா கணையார், = மாணிக்கத்தை உடைய படத்தைக் கொண்ட ஆதி சேஷன் மேல் பள்ளி கொள்ளும் 


மருங்கே வரவரிய ரேலும் = மருங்கே வர அரியர் எலும் = அருகில் யாராலும் வர முடியாத 


ஒருங் கே = சிறந்த தனித் தன்மையுடன் 


எமக்கவரைக் = எமக்கு அவரை 


காணலா மெப்போது = காணலாம் எப்போதும் 


முள்ளால், = உள்ளதால் 


மனக்கவலை தீர்ப்பார் வரவு. = மனக் கவலை தீர்ப்பார் வரவு 


வீடு கட்டும் போது, இரண்டு செங்கலை ஒட்ட வைக்க நடுவில் சிமென்ட் கலவையை வைப்போம் அல்லவா? 


அது போல செய்யுளை செய்யும் போது இரண்டு சீர்களை (சொற்களை) ஒட்டி வைக்க வேற்றுமை உருபுகள் என்று உண்டு. 


மூன்றாம் வேற்றுமை உருபு "ஆல்" என்ற சொல். 


இந்த வேற்றுமை உருபுகள் சில சமயம் வெளிப்பட்டு நிற்கும். சில சமயம் மறைந்து நிற்கும். அப்படி மறைந்து நிற்பதற்கு "தொக்கி நிற்றல்" என்று பெயர். 


இங்கே, 


"மனக்கவலை தீர்ப்பார் வரவு"


என்று இருக்கிறது. 


ஒருவாறு அர்த்தம் புரிந்தாலும், எங்கோ இடிக்கிறது அல்லவா?


இங்கே, "ஆல்" என்ற மூன்றாம் வேற்றுமை உருபு தொக்கி நிற்கிறது. 


எப்படி?


"வரவால் மனக் கவலை தீர்ப்பார்"


என்று இருக்க வேண்டும். 


வரவால் என்பதில் உள்ள "ஆல்" தொக்கி நிற்கிறது. 


அதை வெளிப்படுத்தினால் அர்த்தம் சரியாக விளங்கும். 


அவர் வந்தால் மனக் கவலை எல்லாம் தீர்ந்து விடும். 


இலக்கணம் தெரிந்து கொண்டால் இலக்கியம் இன்னும் சுவைக்கும். 


முழு இலக்கணத்தையும் படிப்பது என்பது வாழ் நாள் வேலை. வேண்டிய அளவு அங்கங்கே தெரிந்து கொண்டு போவோம். 






திருக்குறள் - அக மற்றும் புற உறுப்புகள்

 திருக்குறள் - அக மற்றும்  புற உறுப்புகள் 


பாடல் 


புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை

அகத்துறுப்பு அன்பில் அவர்க்கு


பொருள் 


புறத்துறுப்பு = புறத்தில் உள்ள உறுப்புகள் 


எல்லாம் = அனைத்தும் 


எவன்செய்யும் = என்ன செய்யும்? என்ன பலனைத் தரும் 


யாக்கை = உடம்பில் 


அகத்துறுப்பு = அகத்தில் உள்ள உறுப்பில் 


அன்பில் அவர்க்கு = அன்பு இல்லாதவர்களுக்கு 


இதை பொதுவாக பொருள் சொல்வது என்றால், புற உறுப்புகளான கால், கை முதலியவை என்ன பயன் தரும், உடம்பில் அன்பு இல்லாத போது என்று சொல்லி விடலாம். 


பரிமேலழகர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. 


https://interestingtamilpoems.blogspot.com/2021/11/blog-post_18.html

(please click the above link to continue reading)



அப்படி பொருள் கொண்டால், அந்தக் குறளுக்கும், இல்லறத்துக்கும் ஒரு தொடர்பும் இருக்காது. 


சரி, பின் பரிமேலழகர் என்ன உரை சொல்கிறார்?


அதற்கு  அப்புறம் வருவோம். 


இல்லறம் நன்றாக நடக்க என்ன வேண்டும்?


உற்றார், உறவினர், நட்பு, சுற்றம், அக்கம் பக்கம் உள்ளோர், என்று எல்லோரின் தயவும், அவர்களோடு சுமுகமான உறவும் முக்கியம் அல்லவா?


எல்லோரிடமும் சண்டை போட்டுக் கொண்டு, குற்றம் குறை கூறிக் கொண்டு திரிந்தால் அந்த இல்லறம் எப்படி இருக்கும்?


விருந்து வேண்டும், நட்பு வேண்டும், நாலு பேர் நம்மை நாடி வர வேண்டும். நாம் போக நாலு இடம் வேண்டும். 


ஒன்றும் வேண்டாம் என்றால் பின் இல்லறம் எதற்கு? துறவியாகப் போய் விடலாமே?


எவ்வளவுக்கு எவ்வளவு மற்றவர்களோடு நாம் பின்னி பிணைந்து செல்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு இல்லறம் சிறக்கும். 


சரி தானே?


அந்த நட்பு, உறவு, நெருக்கமானவர்களைத் தான் பரிமேலழகர் "புறத்து உறுப்பு" என்கிறார். 


எத்தனை நட்பு, சுற்றம், உறவுகள் இருந்தாலும், மனதில் அன்பு இல்லாவிட்டால் அவற்றால் ஒரு பயனும் இல்லை. 


நாளடைவில் அவர்கள் நம்மை விட்டு விலகிப் போய் விடுவார்கள் அல்லது நாம் விலகி வந்து விடுவோம். 


அகத்தில் அன்பு இல்லாவிட்டால், புறத்தில் எத்தனை உறவுகள் இருந்தாலும் ஒரு பயனும் இல்லை. 


அது பரிமேலழகர் சொல்லும் உரை. 


நம் உடல் உறுப்புகள் மேல் நமக்கு வெறுப்பு இருக்குமா? என் கையை எனக்கு பிடிக்கவில்லை. எப்படியாவது அதை வெட்டி எறிந்து விட வேண்டும் என்று நினைப்போமா? என் கண் அழகாக இல்லை. அதைத் தோண்டி எடுத்து தூர எறிந்து விட வேண்டும் என்று நினைப்போமா? 


நாம் என்பதே இந்த உடல் உறுப்புகளின் தொகுப்புதானே. 


அது போல் இந்த இல்லறத்துக்கு உறவுகள் உறுப்பு போன்றவை. 


நம் விரல் நம் கண்ணை குத்தி விட்டது என்பதற்காக விரலை வேட்டுவோமா? சிலசமயம் பல் தெரியாமல் நாக்கை கடித்து விடும். அதற்காக பல்லை பிடுங்கி விட முடியுமா? 


உறுப்புகள் தவறு செய்யலாம். விட்டு விடக் கூடாது. 


மேலும் சிந்தித்துப் பார்க்க பொருள் விரியும். 


அன்பு இருந்தால் உறவுகள் பலப்படும். இல்லறம் சிறக்கும் என்பது நுண்ணிய கருத்து.