Sunday, February 13, 2022

திருக்குறள் - இன் சொல் சொல்வதால் என்ன பயன் ?

 திருக்குறள் - இன் சொல் சொல்வதால் என்ன பயன் ?


திருவள்ளுவர் இன்சொல் சொல் என்கிறார். அப்படி சொல்வதால் என்ன பயன். எதுக்காக அவ்வளவு முயன்று இன்சொல் சொல்ல வேண்டும்? 


அல்லவை தேய அறம் பெருகும் என்று முந்தைய குறளில் கூறினார். 


அறம் பெருகிட்டு போகட்டும். அதனால் என்ன பயன் என்ற கேள்வி வரும் அல்லவா? அதற்கும் பதில் சொல்கிறார் வள்ளுவர்.


"பிறருக்கு பயன் தரும் இனிய சொல்லைச் சொன்னால், விரும்பபட்டதைத் தந்து ஒருவனுக்கு நன்மை தரும்"


என்கிறார். 


பாடல் 


நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று

பண்பின் தலைப்பிரியாச் சொல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_13.html


(pl click the above link to continue reading)


நயன் ஈன்று = விரும்பியதை தந்து 


நன்றி பயக்கும் = நலன் விளைவிக்கும் 


பயன்ஈன்று = பயன் தரக்கூடிய 


பண்பின் = இனிய சொல்லை 


தலைப்பிரியாச் சொல் = சேர்த்துச் சொன்னால் 



தெரிந்த சொற்கள் என்றாலும் புரியாத மாதிரி இருக்கும். 


நயன், நன்றி, பயன், தலைப்பிரியா என்ற சொற்கள் புரிந்த மாதிரி இருந்தாலும் கொஞ்சம் குழப்பமாகவும் இருக்கிறது. 


சொல்லுக்குப் பொருள் தெரிந்தாலும், குறளுக்கு பொருள் தெரிய வேண்டும் என்றால் பரிமேலழகரைத்தான் பிடிக்க வேண்டும். 


முதலாவது, "பண்பின்" என்ற சொல்லுக்கு இனிய சொற்களை கூறும் பண்பு என்று பொருள் சொல்கிறார். அது எப்படி, பண்பு என்றால் இனிய சொல் என்று கூறலாம்? பண்பு என்றால் எந்த பண்பாக வேண்டுமானாலும் இருக்கலாம் அல்லவா? "அதிகார முறைமையால் பெறப் பட்டது" என்கிறார். அதாவது, இந்த அதிகாரம் "இனியவை கூறல்" என்ற அதிகாரம். எனவே, இங்கே பண்பு என்பது இனிய சொற்களை கூறும் பண்பு என்று கொள்ள வேண்டும் என்கிறார். 


இலையில் இட்லி, சட்னி, சாம்பார், கேசரி இருக்கிறது. "இனிப்பு கொஞ்சம் கூட" என்றால் எதில் என்று கேட்க மாட்டோம் அல்லவா? கேசரியில் இனிப்பு கூட என்று அறிந்து கொள்கிறோம் அல்லவா? 


இரண்டாவது, "தலைப்பிரியா" என்றால் ஒரு வார்த்தை என்கிறார். தலை + பிரியா என்று பிரிக்கக் கூடாது. தலைப்பிரியா என்றால் சேர்ந்தே இருத்தல் என்று பொருள். 


எது சேர்ந்து இருக்க வேண்டும் ?


மூன்றாவது "பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியா". நாம் சொல்லும் சொல்லினால் பயனும் இருக்க வேண்டும். அதை இனிமையாகவும் சொல்ல வேண்டும். பயனும், இனிமையும் சேர்ந்தே இருக்க வேண்டும். 


நான்காவது, "பயன் ஈன்று" என்றால் என்ன? பயன் என்றால் பலன். புரிகிறது. என்ன பலன்? புரியவில்லை. பரிமேலழகர் கூறுகிறார் "கேட்பவனுக்கு இம்மை, மறுமை பயன் தந்து" என்கிறார். யாருக்குச் சொல்கிறோமா, அவனுக்கு இம்மைப் பயன் இருக்க வேண்டும் அல்லது மறுமைப் பயன் இருக்க வேண்டும். இரண்டும் இல்லாத சொல்லை சொல்லவே கூடாது. 


நாம் என்ன சொல்லப் போகிறோம். அதனால் கேட்பவருக்கு இம்மை, மறுமைப் பயன் ஏதாவது விளையுமா என்று யோசிக்க வேண்டும். எனக்குத் ஏதோ தெரியும் என்பதை காட்டுவதற்காக எதையும் சொல்லக் கூடாது. கேட்பவருக்கு பலன் விளைய வேண்டும். 


நான் பல பேரிடம் தேவை இல்லாமல் வாதம் செய்து இருக்கிறேன். அதனால் என்ன விளைந்தது என்று யோசிக்கிறேன். கேட்பவருக்கு ஒரு பலனும் இல்லை. அத்தனையும் வீண். இனிமேலாவது பயன் தராத சொற்களை பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று முயற்சி செய்வேன். 


நான்காவது, பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியா சொல்லை சொன்னால் என்ன ஆகும்? "நயன் ஈன்று நன்மை பயக்கும்" என்கிறார். பரிமேலழகர் சொல்கிறார் "ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்" என்று. 


நீதி என்றால் உலகுடன் ஒத்து வாழ்தல். பயனுள்ள சொல்லை இனிமையாக கூறினால் உலகில் எல்லோரும் நம்மிடம் அன்பாக இருப்பார்கள். எனவே அதை "நீதி" என்றார். நீதி என்றால் ஏதோ சட்டம், நீதி, ஒழுங்கு என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. ஊருடன் ஒத்துப் போகாததுதான் அநீதி. மறுமைக்கு அறத்தைத் தரும் என்கிறார். அதவாது இம்மைக்கும், மறுமைக்கும் பயன் தரும் என்கிறார். 


இப்போது குறளை மீண்டும் வாசிப்போம், கொஞ்சம் சொற்களை மாத்திப் போட்டு. 


பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச்  சொல் 

நயன் ஈன்று நன்மை பயக்கும் 


முயற்சி செய்வோம். 





Wednesday, February 9, 2022

திருக்குறள் - நல்லதையும் எப்படிச் சொல்ல வேண்டும்

திருக்குறள் -  நல்லதையும் எப்படிச் சொல்ல வேண்டும் 


பேசுவதில்தான் எவ்வளவு இருக்கிறது !


நல்லதை பேசுவதற்கும் ஒரு முறை இருக்கிறது. 


"நீ நல்லா படிக்கேலேனா மாடு மேய்க்கத்தான் போற" என்று பல வீடுகளில் பெற்றோர்கள் பிள்ளைகளை கடிந்து கொள்வார்கள். அவர்கள் நினைவு நல்லதுதான். பிள்ளை நல்லா படித்து பெரியவனாக வேண்டும் என்பதுதான் எண்ணம். சொன்னதும் நல்லது நடக்க வேண்டும் என்றுதான். ஆனால், சொல்லிய முறை சரி அல்ல. 


இது ஒரு உதாரணம். இப்படி பல சொல்லிக் கொண்டே போகலாம். 


மனைவிக்கு ஏதோ விடயத்தில் செலவழிக்க வேண்டும் என்று ஆசை - ஒரு வெளிநாடு சுற்றுலா, ஒரு வீடு, நல்ல கார் என்று ஏதோ ஒன்று வாங்க வேண்டும். கணவனுக்கோ பணத்தை சேர்த்து வைக்க வேண்டும். பிள்ளைகளின் எதிர்காலம் என்று. ஒருவருக்கு ஒருவர் வாக்குவாதம் செய்து மனக் கசப்பு ஏற்படலாம். இருவரும் நல்லதுக்குத்தான் பாடு படுகிறார்கள். ஆனால், அதை இனிமையாக பேசுவது இல்லை. 


வேலை பார்க்கும் இடத்தில், உறவில், நட்பில் என்று அனைத்து இடங்களிலும், நல்லதுதானே சொல்கிறேன் என்று அதை எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைக்கக் கூடாது. அதையும் இனிமையாக கூற வேண்டும். 


அது மட்டும் அல்ல, நாம் இன்று பார்க்க இருக்கும் குறள் பல ஆழ்ந்த அர்த்தங்களை உள்ளடக்கியது. விரிவாக பார்ப்போம்.


பாடல் 

 

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post_9.html


(Please click the above link to continue reading)


அல்லவை தேய = பாவம் தொலைய 


அறம்பெருகும் = அறம் பெருகும் 


நல்லவை = நல்லவற்றை 


நாடி = விரும்பி 


இனிய சொலின் = இனிமையாக சொன்னால் 


மேலோட்டமான பொருள் இவ்வளவுதான். 


இதில் எவ்வளவு இருக்கிறது தெரியுமா? ப்ளாகின் முடிவில் உங்களுக்கே ஒரு பிரமிப்பு வரும். 


முதலாவது, "அல்லவை தேய". அல்லவை என்றால் மற்றவை என்று அர்த்தம். அது என்ன மற்றது? அது புரிய வேண்டும் என்றால் அடுத்த சொல்லைப் பார்க்க வேண்டும். "அறம் பெருகும்" என்கிறார். அப்படி என்றால் அறத்துக்கு எதிரான பாவம் தேயும் என்று அர்த்தம். பெருகுதல். அதன் எதிர்பதம் தேய்தல். அறம் பெருகும் என்றதால் அதன் எதிர்பதமான பாவம் தேயும். 


இரண்டாவது, நம்மால் புண்ணியத்தை தேட முடியும். நல்ல காரியங்கள் செய்தால் புண்ணியம் வளரும். ஆனால், முன் செய்த பாவம் எப்படி போகும்? ஒரு புண்ணியத்துக்கு ஒரு பாவம் என்று கணக்கை நேர் செய்ய முடியாது. அது வேறு கணக்கு, இது வேறு கணக்கு. நாம் முன் செய்த பாவம் நம்மை தேடி வரும். ஆனால், புண்ணியம் செய்தால் அந்த பாவம் நம்மை பற்ற எண்ணி, முயன்று முயன்று தேய்ந்து போகும். அதன் வலிமை குன்றும் என்கிறார். நேற்றைய ப்ளாகில் "தவத்தின் முன் நில்லா பாவம்" என்ற நாலடியார் பற்றி சிந்தித்தோம்.  அறம் வளர பாவம் தேயும். 


நமக்கு இரட்டிப்பு பலன். ஒரு புறம் அறம் வளர்கிறது. இன்னொரு புறம் பாவம் தேய்கிறது. 


மூன்றாவது, "நல்லவை நாடி". ஒருவரிடம் பேசப் போகிறோம் என்றால் அவருக்கு அதனால் ஏதாவது ஒரு நன்மை கிடைக்க வேண்டும். மற்றவருக்கு நல்லது கிடைக்கும் என்றால் மட்டும் தான் பேச வேண்டும். அடுத்தவருக்கு இம்மை, மறுமை பலன் கிடைப்பதாக இருந்தால் மட்டுமே பேச வேண்டும். இதைச் சொன்னால் அவருக்கு இன்ன நன்மை கிடைக்கும் என்று அறிந்து, சொல்ல வேண்டும். சும்மா வெட்டிப் பேச்சு பேசக் கூடாது. மற்றவருக்கு நன்மை தரும் அளவுக்கு பேச நம் ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும். 


நான்காவது, "நாடி". நல்லது மட்ட்டும் இருந்தால் போதாது. அவர் அந்த நன்மை அடைய வேண்டும் என்ற விருப்பம் நம்மிடம் இருக்க வேண்டும். கடமைக்கு சொன்னது மாதிரி இருக்கக் கூடாது. "படி" நு சொல்ல வேண்டியது என் கடமை. சொல்லியாச்சு. அப்புறம் உன் விருப்பம் என்றால் அவன் படித்து பெரிய ஆளாக வேண்டும் என்ற விருப்பம் இல்லை. ஏதோ கடமை இருக்கிறது. அது அல்ல வள்ளுவர் சொல்ல வந்தது. ஒரு ஆசை, விருப்பம், நாட்டம் இருக்க வேண்டும். 


ஐந்தாவது, "இனிய சொலின்". நல்லது தான், நாட்டம் இருக்கிறதுதான் என்றாலும், அதையும் இனிமையாக சொல்ல வேண்டும். வார்த்தையில் மென்மை, அன்பு, உண்மை, வஞ்சனை இல்லாமை எல்லாம் இருக்க வேண்டும். எப்படிச் சொன்னால் என்ன?  என்ன சொல்றோம் என்பதுதானே முக்கியம். எப்படி சொல்கிறோம் என்பது முக்கியம் இல்லை என்று வாதம் செய்யக் கூடாது. நல்லதையும், இனிமையாக சொல்ல வேண்டும். 


அப்படிச் சொன்னால் என்ன ஆகும், 


வள்ளுவர் சொல்கிறார் அறம் வளரும், பாவம் தேயும் என்று. 


நாம் நடைமுறையில் சிந்தித்துப் பார்ப்போம். 


ஆறாவது, மற்றவர்களுக்கு நல்லது செய்யக் கூடிய ஆற்றலை நாம் வளர்த்துக் கொள்வோம்.  


ஏழாவது, நாம் மற்றவர்களுக்கு உண்மையிலேயே நன்மை செய்வதால் மற்றவர்கள் நம்மை விரும்புவார்கள். நமக்கு நல்லது செய்ய நினைப்பார்கள். நமக்கு ஒரு துன்பம் வந்தால் ஓடி வந்து காப்பாற்றுவார்கள். கை கொடுப்பார்கள். நாம் செய்த பாவம் நம்மை துரத்தி வந்து துன்பம் செய்தாலும், மற்றவர்கள் நமக்கு உதவி செய்து அந்த துன்பத்தில் இருந்து நம்மை காப்பார்கள். 


எட்டாவது, நமக்கு மட்டும் அல்ல. நம் சந்ததிக்கும், உறவுக்கும் பலன் தரும். "அந்தக் காலத்ல உங்க அண்ணன்/ அப்பா/தாத்தா/ அம்மா எங்க குடும்பத்துக்கு எவ்வளவோ செய்து இருக்கிறார்கள்..." என்று நாம் இன்று  மற்றவர்களுக்கு செய்யும் உதவி அடுத்த தலைமுறைக்கும் வரும். என் அனுபவத்தில் இதை நான் பல முறை கேட்டு இருக்கிறேன்.  நாம் போன பிறகும், நாம் செய்த நன்மைகள் நம் குடும்பத்தை எப்படியோ காத்து நிற்கும். 


ஏழே ஏழு சொல். ஒண்ணே முக்கால் அடி. எவ்வளவு கருத்துச் செறிவு. 


இன்னும் கூட இருக்கலாம். நான் படித்தவரை, எனக்கு தெரிந்தவரை இவ்வளவு. இன்னும் எவ்வளவு இருக்கிறதோ. 


ஒவ்வொரு குறளும் நம் வாழ்கையை நல்ல முறையில் திசை திருப்பி செம்மையாக வாழ வழி செய்யும். 


ஒரு குறளை நடை முறை படுத்தினால் போதும். 


"நல்லாத்தான் இருக்கு....அடுத்து என்ன குறள் " என்று தொடர்கதை வாசிப்பது போல வாசிக்காமல், குறளை வாழ்வில் நடைமுறைப் படுத்த முயற்சி செய்ய வேண்டும். 




Wednesday, February 2, 2022

நாலடியார் - தவமும் பாவமும்

நாலடியார் - தவமும் பாவமும் 


இருள் இருந்தால் அதை எப்படி போக்குவது? 


அதை அடித்து விரட்ட முடியுமா? ஒரு பெட்டியில் போட்டு அடைத்து தூக்கி எறிந்து விட முடியுமா? இருளை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், நம்மால் ஒளியை கொண்டு வர முடியும். இருள் அது பாட்டுக்கு ஒரு புறம் இருக்கட்டும். நாம் ஒரு விளக்கை கொண்டுவந்து ஏற்றினால், இருள் தானே ஓடி விடும். இருளை பிடித்து தள்ள முடியாது. ஒளியைக் கொண்டு வந்தால் அது தானே ஓடிவிடும்.


அது போல,


நாம் முன் செய்த பாவத்தை ஒன்றும் செய்ய முடியாது. செய்த நல்வினையும், தீ வினையும் பாவ புண்ணியமாக மாறி இந்தப் பிறவியில் இன்ப துன்பங்களைத் தரும். 


முன் செய்த நல் வினை, தீவினை 

பாவ புண்ணியம் 

இப்பிறவியில் இன்பம் துன்பம் 


வந்து நிற்கும் பாவத்தை என்ன செய்வது? பிடித்துத் தள்ள முடியுமா? வேண்டாம் என்று பயந்து ஓட முடியுமா? முடியாது. 


நாலடியார் சொல்கிறது 


"எப்படி விளக்கின் முன்னால் இருள் நிற்காதோ அது போல தவத்தின் முன்னால் பாவம் நிற்காது"


என்று. 


நம்மால் பாவத்தை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், தவம் செய்ய முடியும். தவம் செய்தால், பாவம் ஓடி விடும். 


சரி, இருள் விலகி விட்டதே என்று விளக்கை அணைத்தால் என்ன ஆகும்? ஓடிய இருள் உடனே வந்து விடும். அது போல, தவம் செய்வதை நிறுத்தினால் பாவம் மீண்டும் வந்துவிடும். 


விளக்கில் ஒளி குறைந்தால் இருள் வருவது போல, தவம் குறைந்தால் பாவம் வரும். 


பாடல் 


 விளக்குப் புகஇருள் மாய்ந்தாங் கொருவன்

தவத்தின்முன் நில்லாதாம் பாவம் - விளக்குநெய்

தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை

தீர்விடத்து நிற்குமாம் தீது.



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/02/blog-post.html


(pl click the above link to continue reading)



விளக்குப் = ஒளி பொருந்திய விளக்கு 


புக = வந்தவுடன் 


இருள் மாய்ந்தாங் = இருள் மாய்ந்து ஆங்கு 


கொருவன் = ஒருவன் 


தவத்தின்முன் = தவத்தின் முன் 


நில்லாதாம் பாவம் = பாவம் நிற்காது 


விளக்குநெய் = விளக்கின் நெய் 


தேய்விடத்துச் = குறைந்த போது 


சென்றிருள் = சென்ற இருள் 


பாய்ந்தாங்கு = பாய்ந்து அங்கு 


நல்வினை = நல்லவினை 


தீர்விடத்து = தீரும் இடத்தில் 


நிற்குமாம் தீது. = நிற்குமாம் தீது 


அதாவது, தவம் என்ற நல்வினை தீரும் இடத்தில், மீண்டும் பாவம் என்ற தீவினை வந்து நிற்கும். 


தவம் செய்வதை ஒருகாலும் நிறுத்தக் கூடாது என்பது கருத்து. 


நல்ல காரியங்களை எப்போதோ ஒரு தரம், நம் வசதிக்கு செய்வதும், நிறுத்துவதும் கூடாது. 


தமிழில் "கடைபிடிக்க வேண்டும்" என்று ஒரு சொல் வழக்கம் உண்டு. 


கடைபிடித்தல் என்றால் கடைசிவரை பிடிக்க வேண்டும். விட்டுவிடக் கூடாது. 






Monday, January 31, 2022

திருக்குறள் - எது அணிகலன் ?

திருக்குறள் - எது அணிகலன் ?


நம்மை அழகு படுத்திக் கொள்ள நாம் உயர்ந்த ஆடைகள், நகைகள் இவற்றை அணிந்து கொள்கிறோம். முடியை திருத்தி, முகத்தில் பலவிதமான பொருள்களை பூசி மெருகு ஏற்றுகிறோம். 


அதெல்லாம் ஒரு அழகா? அதெல்லாம் எவ்வளவு நேரம் நிற்கும்? சில மணி நேரம் நிற்கும் அல்லது மிஞ்சி  மிஞ்சி போனால் சில நாள். 


எவ்வளவுதான் புற அழகை மெருகு ஏற்றினாலும், ஒருவன் பேச்சில், செயலில் அவன் உண்மை அழகு என்ன என்று தெரிந்து விடும். 


வள்ளுவர் சொல்கிறார் " பணிவும், இனிய சொல்லும் தான் ஒருவனுக்கு அழகு. மற்ற அழகு எல்லாம் அழகே அல்ல" என்று. 


பாடல் 


 பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_31.html


(please click the above link to continue reading)


பணிவுடையன் = பணிவுடன் இருத்தல் 


இன்சொலன் ஆதல் =இனிய சொற்களை பேசுதல் 


ஒருவற்கு = ஒருவனுக்கு 


அணி = அணிகலன் ஆகும் 


யல்ல = அல்ல 


மற்றுப் பிற = மற்றவைகள் 


இப்படி நேரடி பொருள் கொண்டால் அனர்த்தம் தான் விளையும். எல்லோரிடமும் பணிவாக இருக்க வேண்டுமா? 


பிள்ளைகளிடம், பேரப் பிள்ளைகளிடம், தனக்கு கீழே வேலை பார்பவர்களிடம், அறிவற்ற முதலாளிகளிடம், பதவியில் இருக்கும் மோசமானவர்களிடம் எல்லாம் பணிவாக இருக்க வேண்டுமா? யாரைப் பார்த்தாலும், அவர் என்ன சொன்னாலும் பணிந்து போக வேண்டுமா? 


ஒரு கம்பீரம் வேண்டாமா? ஒரு ஆளுமை வேண்டாமா? ஒரு தன்னம்பிக்கை வேண்டாமா?


பரிமேலழகர் மிகத் துல்லியமாக பொருள் சொல்கிறார். 


"தன்னால் தாழப்படுவார்கண் தாழ்ச்சியுடையனாய்" என்று.


அதாவது, தன்னை விட உயர்ந்தவர்களிடம், வணங்கத் தக்கவர்களிடம், பெரியவர்களிடம் பணிவாக இருக்க வேண்டும் என்கிறார். 


ஆசிரியர், பெற்றோர்,  அறிவில், ஒழுக்கத்தில்  சிறந்த பெரியோர் இவர்களிடம் பணிவாக இருக்க வேண்டும். 


பணிவு இவர்களிடம் இருக்க வேண்டும். 


ஆனால், இனிய சொல் பேசுவது எல்லோரிடமும் இருக்க வேண்டும். அதற்கு கட்டுப்பாடு கிடையாது. 


இந்த அதிகாரம் இன்சொல் பற்றியது. இதில் பணிவுடையன் பற்றி ஏன் சொல்ல வேண்டும்? வேண்டும் என்றால் அதற்கு ஒரு அதிகாரம் எழுதிக் கொள்ள வேண்டியது+ தானே?


பரிமேலழகர் சொல்கிறார், " இன்சொலனாதற்கு இனமாகலின், பணிவுடைமையும் உடன் கூறினார்"


இன் சொல் சொல்வதற்கு பணிவுடைமை என்பது அவசியம். பணிவு இல்லாமல் இனிய சொல் கூற முடியாது என்பதால், வணங்கத்தக்க பெரியவர்களிடம் பணிவோடு கூடிய இன் சொல் சொல்ல வேண்டும் என்கிறார். 


நம்மை விட பெரியவர் ஒருவர் வருகிறார் என்றால் "வாருங்கள், அமருங்கள்" என்று இனிமையாக கால் மேல் கால் போட்டுக் கொண்டு சொல்லக் கூடாது. 


"அணியல்ல" என்று எப்படி கூற முடியும். பணிவும், இன் சொல் இல்லாவிட்டாலும் தங்க நகை, தங்க நகைதானே? பட்டுப் புடவை பட்டுப் புடவைதானே? எப்படி அணி அல்ல என்று கூற முடியும்? 


நகையும், பட்டுப் புடவையும் அழகு தரும்தான் என்றாலும், பணிவும், இன் சொல்லும் போல பேரழகு தராது என்பதால், இதோடு ஒப்பிட்டால் அது அணி அல்ல என்று கூறினார் என்று பரிமேலழகர் கூறுகிறார். 


 எழுத்து எண்ணி எழுதி இருக்கிறார்கள். படித்து இருக்கிறார்கள். 


ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு எழுத்தும் மிக கவனமாக சொல்லப் பட்டு இருக்கிறது. 


அப்படி படிக்க வேண்டும். 


Saturday, January 29, 2022

குறுந்தொகை - தாகம்

குறுந்தொகை  - தாகம் 


பசி கூட பொறுத்து விடலாம், தாகம் பொறுக்க முடியாது. 


தாகம் வந்து விட்டால், உடம்பு தவித்துப் போய் விடும். நா வறளும். கண் மயங்கும். காது அடைக்கும். மயக்கம் வரும். 


ஓரிரண்டு நாள் சாப்பிடாமல் இருந்தால் ஒன்றும் ஆகாது. நீர் குடிக்காமல் இருக்க முடியாது. 


அந்த தாகத்தையும் மீறியது காதல் உணர்வு. 


தலைவன் பிரிந்து போய் விட்டான். எப்போது வருவான் என்று தெரியாது. வருவானா மாட்டானா என்றும் தெரியவில்லை. தலைவி தவிக்கிறாள். தோழியிடம் தன் தவிப்பை சொல்கிறாள். 


தோழி, அவளுக்கு ஆறுதல் சொல்கிறாள். 


"கவலைப்படாதே அவர் கட்டாயம் வருவார். வேலை நிமித்தமாக அவர் உன்னை மறந்தால் கூட, அவர் போகிற வழி உன்னை அவருக்கு ஞாபகப் படுத்தும். அவர் போகிற வழி பாலை நிலம். வெப்பம் அதிகமாக இருக்கும். தண்ணீர் கிடைப்பது அரிது. அங்கு ஆண் யானைகளும், பெண் யானைகளும் திரியும். அப்போது, பெண் யானைக்கு தாகம் எடுக்குமே என்று ஆண் யானை, அங்குள்ள மரப் பட்டைகளை உரித்து, அதில் வடியும் நீரை தன் தும்பிக்கையில் ஏந்தி, தான் குடிக்காமல் , பெண் யானைக்கு ஊட்டி விடும். அதை பார்க்கும் போது தலைவனுக்கு உன் நினைவு கட்டாயம் வரும்"


என்று. 


பாடல் 


"நசைபெரி துடையர் நல்கலு நல்குவர்

பிடிபசி களைஇய பெருங்கை வேழம்

மென்சினை யாஅம் பொளிக்கும்

அன்பின தோழியவர் சென்ற வாறே."


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_26.html


(please click the above link to continue reading)


"நசை = அன்பு, நட்பு 


பெரி துடையர் = நிறைய உள்ளவர் 


நல்கலு நல்குவர் = உனக்கு அவர் காதலைத் தருவார் 


பிடி = பெண் யானையின் 


பசி = தாகத்தை 


களைஇய = போக்க 


பெருங்கை = பெரிய கையை உடைய 


வேழம் = ஆண் யானை 


மென்சினை = மென்மையான கிளைகளை 


யாஅம் = யா என்ற மரத்தின் 


பொளிக்கும் = உடைத்து, முறித்து 


அன்பின = அன்பினால் 


தோழி = தோழி 


யவர் =அவர் 


சென்ற வாறே." = சென்ற ஆறே = சென்ற வழியே 


யதார்த்தமான கவிதை. 


நிலவு போல் முகம், மூங்கில் போல் கை என்று பெண்ணின் உடலை வருணனை செய்யாமல், பிரிவு, காதல், ஏக்கம், நம்பிக்கை, என்று மனித உணர்வுகளை படம் பிடிக்கும் பாடல். 


"இதோ இருக்கிறது மரம். நான் இந்தப் பக்கம் கிளைகளை முறித்து நீர் அருந்துகிறேன். நீ அந்தப் பக்கம் குடி" என்று சொல்லாமல், பெண் யானைக்கு நீர் ஊட்டி விடுமாம் ஆண் யானை. 


அம்புட்டு காதல். 


ஒரு யானைக்கே இவ்வளவு காதலா என்று தலைவன் மனதில் தோன்றும் தானே. 


பொருளீட்டிக் கொண்டு , அதை அவள் கையில் கொடுத்து, அவள் முகம் மலர்வதை பார்க்க அவனுக்கும் அவனுக்கும் ஆசை வரும் தானே. 


சும்மா காதல் காதல் என்று சொல்லிக் கொண்டு இருக்கவில்லை. மரப் பட்டைகளை உரித்து, நீர் எடுத்து, பெண் யானைக்கு ஊட்டி விடுகிறது. அது காதல். 


இப்படி பல விடயங்களை நம் கற்பனைக்கு விடுகிறது இந்தப் பாடல். 


இப்படி நிறைய பாடல்கள் இருக்கின்றன.  


ஆர்வம் உள்ளவர்கள்,  தேடிப் பிடியுங்கள், படியுங்கள். 

திருக்குறள் - துன்பம் இல்லாமல் போகும்

 திருக்குறள் - துன்பம் இல்லாமல் போகும் 


துன்பம் வேண்டுவார் யாரும் இல்லை. இருந்தும் துன்பம் இலாதார் யாரும் இல்லை. ஏதோ ஒரு வழியில் துன்பம் வந்து வாசல் கதவை தட்டுகிறது. 


துன்பத்திற்கு பெருமாலான காரணம் செல்வம்.


செல்வம் இல்லாமை ஒரு துன்பம். 


இருக்கும் செல்வதை இன்பமாக அனுபவிக்கத் தெரியாமல் அதை காக்க பாடுபவது இன்னொரு துன்பம். 


" எல்லோரிடத்தும் இனிய சொல் சொல்பவர்களுக்கு துன்புறுத்தும் வறுமை அல்லது வெறுப்பு இல்லாது போகும்" என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

இன்புறூஉம் இன்சொ லவர்க்கு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_29.html


(please click the above link to continue reading)


துன்புறூஉம்  = துன்பம் தரும் 


துவ்வாமை = வறுமை, வெறுப்பு 


இல்லாகும் = இல்லாது போகும் 


யார்மாட்டும் = எல்லோரிடத்தும் 


இன்புறூஉம் = இன்பம் தரும் 


இன்சொ லவர்க்கு = இனிய சொற்களை சொல்பவர்களுக்கு 


வள்ளுவர் சொல்லி விட்டார். அது எப்படி என்று நாம் யோசிக்கலாம். 


நமக்கு துன்பம் எப்படி வருகிறது?


வறுமையால் வரும் - எல்லோரிடமும் இனிய சொல் பேசுபவர்களுக்கு எல்லோரும் உதவி செய்வார்கள். ஏதோ ஒரு வேலை, பொருள் உதவி என்று தருவார்கள். எனவே அந்தத் துன்பம் இல்லாமல் போகும் 


எதிரிகளால் வரும் - எதிரி என்றால் ஏதோ கொலைகாரன், கொள்ளைக் காரன் என்று இல்லை. அலுவலகத்தில் நமக்கு எதிராக வேலை செய்பவர்கள், உறவில் நம் முன்னேற்றத்தில் பொறாமை கொண்டவர்கள்,  என்று அருகிலேயே இருப்பார்கள். எல்லோரிடமும் இனிமையாக பேசி வாழ்ந்தால், நமக்கு எதிரிகளே இருக்க மாட்டார்கள். எதிரிகளே இல்லாவிட்டால் அவர்களால் வரும் துன்பம் இல்லாமல் போகும் தானே. 


நண்பர்களால் துன்பம் வராது. 


எதிரிகளால் துன்பம் வராது. 


நம் இலக்கியங்களில் மூன்றாவதாக ஒரு பகுதியினரைப் பற்றி கூறுகிறார்கள். 


நட்பு, எதிரி, நொதுமல் என்று. 


நொதுமல் என்றால் நட்பும் இல்லை, எதிர்ப்பும் இல்லாதவர்கள். தெருவில் போகும் முன் பின் தெரியாதவரிடம் உள்ளது நொதுமல். 


இனிய சொல் பேசுபவர்களிடம் அப்படி முன் பின் தெரியாதவர்கள் கூட அன்பு பாராட்டத் தலைப்படுவார்கள். அவர்களின் நட்பை விரும்புவார்கள். 


யோசித்துப் பாருங்கள், இந்த உலகில் உள்ள அனைவரும் உங்களுக்கு நட்பு என்றால் அது எவ்வளவு உயர்வைத்தரும் என்று.  அப்படி இருக்கும் போது துன்பம் எங்கிருந்து வரும் ?


அதெல்லாம் சரி, இப்படிச் செய்தால் அப்படி நடக்கும் என்று என்ன உத்தரவாதம்?


ஒரு உத்தரவாதமும் இல்லை. செய்துதான் பார்க்க வேண்டும்.  


காசா பணமா? நட்டப் பட ஒன்றும் இல்லை. 


முயன்றுதான் பார்ப்போமே. ஒரு வேளை சரியாக இருந்தால்?....







Sunday, January 23, 2022

திருவாசகம் - யாத்திரைப் பத்து - பொய் நீக்கி

 திருவாசகம் - யாத்திரைப் பத்து - பொய் நீக்கி 


கணவன்/மனைவி, பிள்ளைகள், சொந்தம், பந்தம், உற்றார், உறவு, நட்பு என்று நாம் பலபேரை நினைத்துக் கொண்டிருக்கிறோம். அவை எல்லாம் உண்மையா?  இந்த உலகில் நம்மைத் தவிர நமக்கு வேறு எந்த சுற்றமும் கிடையாது. எல்லா உறவும் ஒரு எல்லை வரைதான்.  


பட்டினத்தார் சொன்னது போல, "கொட்டி முழக்கி அழுதிடுவார். மயானம் குறுகி எட்டி அடி வைப்பாரோ கச்சியேகம்பனே". 


ஆற்றில் போட்ட மரக் கட்டைகள் ஆற்று வெள்ளத்தில் சில சமயம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொண்டு சிறிது தூரம் செல்லும். பின் வெள்ளம் அந்த இரண்டு மரத் துண்டுகளையும் வேறு இடத்துக்கு இழுத்துச் சென்று விடும். 


நாமும் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப் படுகிறோம். உறவுகள் வரும், போகும். நம்மைத் தவிர நமக்கு எதுவும் நிரந்தர உறவு அல்ல.


சொல்வது, மணிவாசகர். 


உறவு மட்டும் அல்ல. நாம் சேர்த்து வைத்த பொருளும் நமது அல்ல. நாம் நினைத்தாலும் அவற்றை பிடித்து வைக்க முடியாது. அது போகின்ற காலத்தில் போகும். எத்தனை அரசர்கள் எத்தனை அரண்மனை கட்டி வாழ்ந்தார்கள். எங்கே அந்த அரண்மனைகள் எல்லாம்? அரன் மனைகள் இருக்கிறது. அரண்மனைகள் இல்லை. 


நமக்கு வரும் நன்மை தீமைகள் பிறர் நமக்குச் செய்வது என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். இல்லை. நமக்கு நடக்கும் நல்லதுக்கும் தீயவற்றிற்கும் நாமே பொறுப்பு. நாம் செய்த வினை நமக்கு வந்து சேர்கிறது. ஆழ்ந்து யோசித்தால் நமக்கு நிகழ்ந்த ஒவ்வொன்றிற்கும் நாமே காரணம் என்று புரியும். 


உறவு வெளியில் இல்லை.பொருள் வெளியில் இல்லை. நன்மை தீமைகள் வெளியில் இருந்து வருவது இல்லை. 


ஆனால், நடைமுறையில் அப்படித் தெரியவில்லையே. என் கணவன்/மனைவி என் மேல் உயிரையே வைத்து இருக்கிறார்/ள். நான் என் கணவன்/மனைவி மேல் உயிரையே வைத்து இருக்கிறேன். பிள்ளைகள் மேல் அவ்வளவு பாசம்...என்றெல்லாம் தோன்றும். 


காரணம், நமக்கு உண்மை புரியாத மாயை. அது ஒரு பொய்த் தோற்றம். 


பாடல் 


தாமே தமக்குச் சுற்றமுந் தாமே தமக்கு விதிவகையும்

யாமார் எமதார் பாசமார் என்ன மாயம் இவைபோகக்

கோமான் பண்டைத் தொண்டரொடும் அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு

போமா றமைமின் பொய்நீக்கிப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/01/blog-post_23.html


(please click the above link to continue reading)


தாமே தமக்குச் சுற்றமுந் = ஒருவற்கு சுற்றம், நட்பு எல்லாம் அவரே தான் 


தாமே தமக்கு விதிவகையும் = ஒருவற்கு நடக்கும் நன்மை தீமைகளுக்கு அவர் செய்த வினையின் பலனே விதியாக வந்து சேர்கிறது. 


யாமார் = நான் யார்? 


எமதார் = என்னுடையது எது ?


பாசமார் = பாசம் என்றால் என்ன? 


என்ன மாயம் = இவை எல்லாம் என்ன மாயம், மாயை 


இவைபோகக் = இதெல்லாம் போய்  (மாயை விலகி) 


கோமான் = தலைவன் (சிவன்) 


பண்டைத் தொண்டரொடும் = பழைய தொண்டர்களோடும் 


அவன்றன் = அவனுடைய 


குறிப்பே = மனக் குறிப்பை 


குறிக்கொண்டு = குறியாகக் கொண்டு 


போமா றமைமின் = போகும் + ஆறு + அமைமின் = போகின்ற வழியை அறிந்து கொண்டு 


பொய்நீக்கிப் = பொய்யானவற்றை நீக்கி 


புயங்கன் = பாம்பணிந்த கைகளை உடைய 


ஆள்வான் = நம்மை ஆளும் அவன் 


பொன்னடிக்கே. = திருவடிகளுக்கே 



மற்றது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். 


எது உண்மை, எது பொய் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? 


பொய் என்று தெரிந்தால் அதை விட்டு விட வேண்டாமா?


கவரிங் நகையை உண்மையான நகை என்று நினைத்து அதை காப்பாற்றிக் கொண்டு இருக்க முடியுமா?


நல்ல நகையை கவரிங் நகை என்று அலட்சியமாக போட்டு விட முடியுமா? 


எது உண்மையான உறவு, எது நம் பொருள், எது பாசம் என்றெல்லாம் அறிய வேண்டும். 


ஞான இருள், மாய இருளை போக்கும். 


அந்த ஞானத்தைத் தேடும் பயணத்தை இன்றே தொடங்க வேண்டும். 


யாத்திரைப் பத்து. 


திருச்சிற்றம்பலம்.