Thursday, October 12, 2023

திருக்குறள் - ஈகை - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - ஈகை - ஒரு முன்னோட்டம் 


தனி மனிதனுக்கு செய்யும் உதவி ஈகை எனப்படும். ஊருக்காக செய்யும் உதவி ஒப்புரவு எனப்படும். 


கேள்வி என்ன என்றால் ஒப்புரவு உயர்ந்ததா, ஈகை உயர்ந்ததா? 


ஒரு தனி மனிதனுக்கு செய்வதை விட ஊருக்கே செய்வது தானே உயர்ந்தது என்று நாம் நினைப்போம். ஆனால் வள்ளுவர் அப்படி நினைக்கவில்லை. 


ஊருக்காக செய்யும் எந்த உதவிக்கும், ஒரு விளம்பரம் கிடைக்கும். ஒரு பேருந்து நிலையம், ஒரு தண்ணீர் பந்தல், இலவச மருத்துவமனை என்று எது செய்தாலும் ஒரு புகழ் கிடைக்கும். அந்த உதவிக்கு பலன் கிடைக்கும். 


நாம் ஒன்று செய்தோம். பதிலுக்கு நமக்கு ஒன்று கிடைத்தது என்றால் அது வியாபாரம். இலாபம் நட்டம் அப்புறம். கொடுத்ததற்கு பலன் கிடைத்தது அல்லவா?


மாறாக, ஒரு பிச்சைகாரனுக்கு ஒரு பத்து உரூபாய் பிச்சை போடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். நம் பெயர் கூட அவனுக்குத் தெரியாது. அந்த உதவியால் நமக்கு ஒரு பலனும் இல்லை. இப்படி பலன் எதிர்பாராமல் செய்யும் உதவி பலன் பெறும் உதவியை விட உயர்ந்தது அல்லவா?


எனவே, ஈகை என்ற அதிகாரத்தை ஒப்புரவு என்ற அதிகாரந்த்தின் பின் வைக்கிறார். 


சரி, ஈகை என்றால் என்ன என்று தெரிந்து விட்டது. 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_12.html


(please click the above link to continue reading)


ஈகை பற்றி ஒரு கட்டுரை எழுது என்றால் நாம் எப்படி எழுதுவோம்?


யோசித்துப் பார்ப்போம். 


வள்ளுவர் எப்படி எழுத்கிறார் என்று பாருங்கள். 


முதலில், ஈகை என்றால் என்ன, அதன் இலக்கணம் என்ன, பொருள் என்ன என்று வரையறை செய்கிறார். முதல் குறளில் இதை சொல்லி விடுகிறார். 


அடுத்த ஆறு குறள்களில் ஈகையின் சிறப்பு பற்றி கூறுகிறார். 


ஆறு ஒண்ணும் ஏழு குறள் ஆகி விட்டது. இன்னும் மூன்று குறள்கள் இருக்கின்றன. 


அடுத்த மூன்று குறள்களில் ஈயாமையின் குற்றம் பற்றி கூறுகிறார். ஈயாமல் என்ன ஆகும், யார் அப்படி இருப்பார்கள் என்று விளக்குகிறார். 


மிக மிக அருமையான ஆழமான அர்த்தம் கொண்ட அதிகாரம். 


ஒவ்வொன்றாக சிந்திப்போம். 


 



Wednesday, October 11, 2023

கம்ப இராமாயணம் - வாழ்கையை இரசிக்க வேண்டும்

கம்ப இராமாயணம் - வாழ்கையை இரசிக்க வேண்டும்


எந்நேரமும் ஒரு பதற்றம். ஒரு அவசரம். ஏதோ ஒரு சிந்தனை. குழப்பம். 


எதையும் நிறுத்தி, நிதானமாக, பொறுமையாக கையாள நேரம் இல்லை. இரசிக்க நேரம் இல்லை. 


வாழ்வின் வேகத்தை குறைக்க வேண்டும். இனிய காலைப் பொழுது, மரத்தின் இலைகளில் இருந்து சொட்டும் மழை நீர், மென்மையான தென்றல், சூடான காப்பி, சுவையான உணவு, மயக்கும் பாடல், குழந்தையின் மழலை...என்று எவ்வளவோ இருக்கிறது. 


வீட்டில், மனைவியோ, அம்மாவோ இரண்டு மணி நேரம் போராடி உணவு தயாரித்து இருப்பார்கள் . அது என்ன என்று கூட பார்க்காமல், டிவி பார்த்து கொண்டே உள்ளே அள்ளிப் போடுவது. நல்லா இருக்குனு ஒரு வார்த்தை சொல்வது கிடையாது. சொல்லக் கூடாது என்று இல்லை. பழக்கம் இல்லை. இரசிக்கப் பழகவில்லை. 



இரசனை என்பது ஒரு நாளில் வந்து விடாது. அதை கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சியின் மூலம் வளர்க்க வேண்டும். 


இலக்கியங்கள் அந்தப் பயிற்சியை நமக்குத் தருகின்றன. 


யுத்த காண்டம் சொல்ல வந்த கம்பன், எங்கு, எப்படி ஆரம்பிக்கிறான் பாருங்கள். 


இராமன் கடற்கரையில் நிற்கிறான். அவ்வளவுதான் செய்தி. அதை கம்பன் எப்படிச் சொல்கிறான் பாருங்கள். 


"பாற்கடலில் இருந்து பிரிந்து வந்த திருமால், எங்கெங்கோ போய் விட்டு, இப்போது நம்மிடம் மீண்டும் வந்து சேர்ந்து இருக்கிறான். அவன் கண் மூடி தூங்க நல்ல மென்மையான பாய் போடுவோம் என்று அலை என்ற பாயை உதறி உதறிப் போடுகிறதாம்..வா இராமா வந்து படுத்துக் கொள்" என்று. 


பாடல் 


சேய காலம் பிரிந்து அகலத் திரிந்தான், மீண்டும் சேக்கையின்பால்,

மாயன், வந்தான்; இனிவளர்வான்' என்று கருதி, வரும் தென்றல்

தூய மலர்போல் நுரைத் தொகையும் முத்தும் சிந்தி, புடை சுருட்டிப்

பாயல் உதறிப் படுப்பதே ஒத்த-திரையின் பரப்பு அம்மா


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_11.html


(pl click the above link to continue reading)


சேய காலம் = நீண்ட காலம் 


பிரிந்து = பிரிந்து இருந்து 


அகலத் திரிந்தான் = அகன்று திரிந்தான் (இராமன்) 


மீண்டும் = மீண்டும் 


சேக்கையின்பால் = படுக்கையின் பக்கம் 


மாயன் = மாயனான இராமன் 


வந்தான் = வந்தான் 


இனி = இனிமேல் 


வளர்வான்' = கண் வளர்வான் (தூங்குவான்) 


என்று கருதி = என்று நினைத்து 


வரும் தென்றல் = மெல்ல வரும் தென்றல் 


தூய மலர்போல்  = தூய்மையான மலர் போன்ற 


நுரைத் தொகையும் = நுரைகளை  


முத்தும் சிந்தி = முத்துப் போல சிதறி 


புடை சுருட்டிப் = அருகில் சுருட்டி  


பாயல் = பாயை 


உதறிப் படுப்பதே = உதறி படுப்பதற்கு போட்டது 


ஒத்த = மாதிரி இருந்தது 


திரையின் = அலைகளின் 


பரப்பு = விரிந்த பரப்பு 


அம்மா = ஆச்சரியச் சொல் 


அலைகளைப் பார்த்தால் அதன் மேல் பரப்பில் நீர் குமிழிகள் இருக்கும். அந்தக் குமிழிகள் முத்துப் போல இருக்கிறதாம். 


அலை சுருண்டு, சுருண்டு எழுவதும், விழுவதும் ஏதோ கடல் பாயை உதறிப் போடுவது போல இருக்கிறதாம். 


பின்னாடி இரத்த ஆறு ஓடப் போகிறது. யுத்தம் என்றால் வலியும், இழப்பும் இருக்கும் தானே. கம்பனுக்கு அது தெரியாதா.


அது வரும் போது பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு இதை இரசிப்போம் என்று கற்பனையை தவழ விடுகிறான். 


நம் வாழ்வில், நாளை என்ன வரும் என்று நமக்குத் தெரியாது. விபத்து, உடல் நலக் குறைவு, துக்க செய்தி, தோல்வி, என்று எது வேண்டுமானாலும் வரலாம். 


இன்றை, இந்த நொடியை இரசித்துப் பழக வேண்டும். 


வாழ்வை இரசிக்க காரணம் எல்லாம் வேண்டாம். அனைத்தையும் இரசிக்கப் பழக வேண்டும். 


Tuesday, October 10, 2023

திருக்குறள் - விற்றும் கொளல் வேண்டும்.

 திருக்குறள் - விற்றும் கொளல் வேண்டும். 


ஒப்புரவு என்றால் ஊருக்கு நல்லது செய்வது. தனி மனிதனுக்கு அல்ல, ஊருக்கு. 


சரி, ஊருக்கு நல்லது செய்கிறேன் என்று இறங்கினால், நம்மிடம் உள்ள செல்வம் எல்லாம் சீக்கிரம் கரைந்து போய் விடாதா? அப்புறம் நமக்கு யார் உதவி செய்வார்கள்? இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வி வரும். 


இந்த மாதிரி சந்தேகம் வரும் போது நாம் இரண்டு விதத்தில் அதைப் போக்கிக் கொள்ளலாம். 


முதலாவது, இதுவரை அப்படி நாட்டுக்கு நல்லதுசெய்து ஏழையாகி துன்பப் பட்டவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று ஆராயலாம். நாட்டுக்கு நல்லது செய்து நொடித்துப் போனவர் யார்?


எனக்குத் தெரிந்து கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார் நாட்டுக்காக தன் செல்வம் அனைத்தையும் கொடுத்து, சிறையில் கிடந்து துன்பப்பட்டார். அவர் அப்படி செய்யாமல் இருந்திருந்தால், சொத்தோடு சுகமாக வாழ்ந்து இருக்கலாம். 


பணம் போனது என்னவோ உண்மைதான். அவர் வாங்கிய கப்பலும் போனது. வியாபாரம் நொடித்துப் போனது. இனிய வாழ்நாளை சிறையில் கழித்தார். 


என்ன ஆயிற்று?  


இந்தத் தமிழனம் உள்ள வரை, அவர் புகழ் நிலைத்து நிற்கும் அல்லவா?  ஒரு வேளை அவர் இது ஒன்றையும் செய்யாமல் இருந்து இருந்தால் அப்படி ஒரு ஆள் இருந்தார் என்றே தெரியாமல் போய் இருக்கும். 


இன்னொருவர், தமிழ் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர். தன் சொந்த செலவில் ஊர் ஊராக சுற்றி அலைந்து, படாத பாடு பட்டு பழைய தமிழ் ஓலைச் சுவடிகளை கண்டு பிடித்து அச்சில் ஏற்றினார். அவர் அப்படி ஊருக்கு நல்லது செய்யாமல் இருந்திருந்தால், எவ்வளவு நாம் இழந்து இருப்போம். 


தேடினால் இன்னும் பலர் கிடைக்கலாம். ஊருக்கு நல்லது செய்து வருந்தியவர் யாரும் இல்லை 


இன்னொரு வகை, இதையெல்லாம் ஆராய்ந்து ஒருவர் சொன்னால், அதை ஏற்றுக் கொள்ளலாம்.. 


வள்ளுவர் சொல்கிறார், 


"ஒப்புரவு செய்வதானால் வறுமை வரும் என்று யாராவது சொன்னால், அந்த வறுமையை தன்னைக் விற்றாவது பெற வேண்டும்"


என்று. 


பாடல் 


ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்

விற்றுக்கோள் தக்கது உடைத்து


பொருள் 



https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_10.html


(please click the above link to continue reading)

ஒப்புரவி னால் = ஒப்புரவு செய்வதானால் 


வரும் = வருவது 


கேடெனின்= கேடு என்றால் 


அஃதொருவன் = அந்தக் கேட்டினை ஒருவன் 


விற்றுக்கோள் = விலைக்கு வாங்கிக் கொள்ளும் 


தக்கது உடைத்து = தகுதி உடையது 


இந்த குறளுக்கு பரிமேலழகர் மிக நுணுக்கமாக உரை செய்து இருக்கிறார். அது என்ன என்று பார்ப்போம். 


"ஒப்புரவி னால்வரும் கேடெனின் " = ஒப்புரவு செய்வதனால் கேடு வரும் என்று கூறினால். "கூறினால்" என்றால் யார் கூறினார் என்ற கேள்வி வரும் அல்லவா. அப்படி ஒரு வேளை யாரவாது கூறினால் என்று பொருள் சொல்கிறார். 


அதாவது, யாரும் சொல்ல மாட்டர்கள். ஆனால், சில வம்பு செய்பவர்கள் இருப்பார்கள். அவர்கள் ஒரு வேளை கேட்கலாம். அப்படி யாராவது கூறினால்....


"விற்றுக்கோள் தக்கது உடைத்து": அந்த கேட்டினை விற்றாவது பெற்றுக் கொள்ளும் தகுதி உடைத்து.. அவன் தான் ஒப்புரவு செய்து, எல்லாம் இழந்து நிற்கிறானே. அவன் எதை விற்பான் என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு, அதற்கு பதில் சொல்கிறார். "தன்னை விற்றாவது" அந்த செயலை செய்ய வேண்டும். 


தன்னை விற்று செய்யும் காரியம் உலகில் ஒன்றும் இல்லை. எனவே, அப்படி ஒன்றும் நிகழ்ந்து விடாது என்பதை குறிப்பால் உணர்த்தினார். 


இந்தக் குறளோடு, இந்த அதிகாரம் முற்றுப் பெறுகிறது. 


நாளை, இதன் தொப்புரையை காண்போம். 





Monday, October 9, 2023

கம்ப இராமாயணம் - துயிலாத கண்ணன்

 கம்ப இராமாயணம் - துயிலாத கண்ணன் 



உணர்சிகள் ஆணுக்கும், பெண்ணுக்கும் சமம்தான். இருந்தாலும், நாம் சில உணர்ச்சிகளை பெண்களுக்கு உள்ளது என்றும், சிலவற்றை ஆண்களுக்கு உள்ளது என்றும் சொல்லி சொல்லி பிள்ளைகளை வளர்க்கிறோம்.


உதாரணமாக, ஆண் பிள்ளை அழக் கூடாது. சிறு வயதில் அழுதால் கூட "..சீ, என்ன இது பொம்பள பிள்ளை மாதிரி அழுதுகிட்டு" என்று கேலி செய்வார்கள். நாளடைவில் அழுவது அசிங்கம் என்று அந்தப் பையன் புரிந்து கொள்கிறான். அழுவது பலவீனத்தின் வெளிப்பாடு என்று நினைத்துக் கொள்கிறான். அது மட்டும் அல்ல, தான் அழுதால் பலவீனம் என்று நினைத்தால் பரவாயில்லை. அழுகை என்பதே பலவீனம் என்று நினைக்கிறான். நாளை அவன் மனைவி அழுதாலும், அவள் பலவீனமானவள் என்று எடை போடும் அவன் மனது. 


அது மட்டும் அல்ல, ஒரு துக்கம், கவலை என்றால் வெளியே சொல்லக் கூடாது, தைரியமாக இரு என்று சொல்லி வளர்க்கப் படுகிறான். சிறு வயதில் சரி. வயதாகும் போது பெரிய பிரச்சனைகள் வரும் போது, தனக்குத் தானே மனதில் வைத்துக் கொண்டு புளுங்குவான். மனைவி கேட்டால் கூட, "சும்மா இரு, ஒண்ணும் இல்ல" என்று எரிந்து விழுவான். 


இராமன் தனித்து நிற்கிறான். வானர படையை கொண்டு வந்தாகி விட்டது. இலங்கைக்குப் போக வேண்டும். 


கடலைப் பார்க்கிறான். சீதையை பிரிந்த துயர் அவனை வாட்டுகிறது. 


எவ்வளவு பெரிய, வலிமையான ஆளாக இருந்தாலும், மனைவியைப் பிரிந்த துயர் அவனுக்கும் இருக்கும் தானே. 


இரவெல்லாம் தூக்கம் இல்லை. அதிகாலையில் எழுந்து விட்டான். இன்னும் சூரியன் வெளி வரவில்லை. இராமன் வெளியே வந்து பார்க்கிறான். தாமரை மலர்கள் இன்னும் விரிய வில்லை...பொழுது இன்னும் சரியாக புலரவில்லை ....



பாடல் 




பொங்கிப் பரந்த பெருஞ்சேனை புறத்தும் அகத்தும் புடைசுற்றச்

சங்கின் பொலிந்த கையாளைப் பிரிந்த பின்பு தமக்கு இனமாம்

கொங்கின் பொலிந்த தாமரையின் குழுவும் துயில்வு உற்று, இதழ் குவிக்கும்

கங்குல் பொழுதும் துயிலாத கண்ணன் கடலைக் கண்ணுற்றான்.




பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_9.html


(pl click the above link to continue reading)



பொங்கிப் பரந்த = பொங்கி, பெரிதாக உள்ள 


பெருஞ்சேனை  = பெரிய சேனை, பெரிய படை


புறத்தும் அகத்தும் = உள்ளும் வெளியும், எங்க பார்த்தாலும் 


புடைசுற்றச் = சுற்றி நிற்க 


சங்கின் = சங்கைப் போல 


பொலிந்த = பொலிவான, அழகான 


கையாளைப் = கைகளை உடைய சீதையைப்  


 பிரிந்த பின்பு= பிரிந்த பின்பு 


தமக்கு இனமாம் = தனக்கு நிகரனா (எது எதற்கு நிகர் என்று பின்னால் பார்ப்போம்)


கொங்கின் பொலிந்த = தேன் நிறைந்து விளங்கும் 


தாமரையின்  = தாமரைப் பூக்கள் 


குழுவும் = கூட்டம் அத்தனையும் 


துயில்வு உற்று = தூங்கி 


இதழ் குவிக்கும் = இதழ் மூடி இருக்கும் 


கங்குல் பொழுதும்= இரவு நேரத்திலும் 


துயிலாத கண்ணன் = தூக்கம் வராத கண்களை உள்ள இராமன் 


கடலைக் கண்ணுற்றான் = கடலை பார்த்தான் 


கண்களுக்கு தாமரையை உவமையாக சொல்வார்கள்.  அதிகாலையில் குவிந்து இருக்கும் தாமரை மலர். தாமரை கூட தூங்குகிறது. இராமனின் கண்கள் தூக்கம் மறந்து பல நாட்கள் ஆகிவிட்டன. 


எந்த ஒரு மன நிலையில் இருந்து யுத்தம் செய்யப் போகிறான் என்று கம்பன் காட்டுகிறான். 


இராமனின் சோகத்தை பாட்டில் வழிய விட இருக்கிறான் கம்பன். 


அவற்றையும் காண்போம். 




Sunday, October 8, 2023

திருக்குறள் - வறுமை என்றால் என்ன?

 திருக்குறள் - வறுமை என்றால் என்ன?


வறுமை என்றால் என்ன?  


சொந்த விமானத்தில் போக முடியாத அளவுக்கு ஏழையாக இருக்கிறேனே என்று யாராவது கவலைப் படுவார்களா? அது வறுமை இல்லை. 


சரி, பத்து படுக்கை அறை உள்ள ஒரு வீடு இல்லையே என்ற வறுமையில் யாராவது வருந்துகிரார்களா?


இல்லை.


வறுமை என்றால் நமக்கு ஒன்று வேண்டும் ஆனால் அதை அடைய முடியவில்லை என்றால் வருவது. 


ஒரு கார் வேண்டும், இரண்டு அல்லது மூன்று படுக்கை அறை கொண்ட வீடு வேண்டும், மூணு வேளை நல்ல உணவு வேண்டும், இதெல்லாம் இல்லை என்றால் வறுமை என்று சொல்லலாம். 


ஒரு பிச்சைகாரன் ஒரு வேளை உணவு கிடைக்காவிட்டால் வறுமை என்பான். 


எனவே, தான் அனுபவிக்க நினைப்பதை அனுபவிக்க முடியாமல் போனால் அது வறுமை. 


இப்படி பார்ப்போம். 


ஒருவனுக்கு ஏராளமான செல்வம் இருக்கிறது. ஊர் பக்கம் பத்து பதினைந்து ஏக்கர் நிலம் இருக்கிறது. வருடா வருடம் நெல் வருகிறது. வீட்டின் பின் புறம் பத்து பசு நிற்கிறது. பாலும், தயிரும் செழிப்பாக இருக்கிறது. 


ஆனால், மருத்துவர் சொல்லி இருக்கிறார் "அரிசியை கையில் எடுத்தால், சர்க்கரை கூடும், அப்புறம் அந்த கையையே எடுக்க வேண்டி வரும்" என்று. 


வீட்டு வேலைகாரர்கள் சோறு, குழம்பு என்று உண்டு மகிழ்வார்கள். முதலாளிக்கு கேப்பை களி தான் உணவு. அதுவும் ஒரு உருண்டைதான். 


யார் வறுமையில் இருக்கிறார்கள் என்று யோசிக்க வேண்டும். 


அனுபவிக்க நினைப்பதை அனுபவிக்க முடியாவிட்டால் அது வறுமை. 


வள்ளுவர் சொல்கிறார், 


ஒரு ஒப்புரவு செய்பவனுக்கு வறுமை எது என்றால், அவன் ஒப்புரவு செய்ய முடியாமல் போவதுதான். 


ஊருக்கு நல்லது செய்ய நினைக்கிறான். ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த வருத்தம் தான் அவனுக்கு வறுமை என்று. 


பாடல் 


நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர

செய்யாது அமைகலா வாறு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_8.html


(please click the above link to continue reading)


நயனுடையான் = நயன் + உடையான் = நல்லது உள்ளவன், நல்லவன், ஒப்புரவு செய்பவன் 


நல்கூர்ந்தான் ஆதல் = ஏழையாக ஆகி விடுதல் 


செயும்நீர = செய்யும் தன்மை, அதாவது ஒப்புரவு செய்யும் தன்மை 


செய்யாது = செய்ய முடியாமல் 


அமைகலா வாறு = அமைந்து விட்டால் 


இரண்டு விடயங்களை நாம் சிந்திக்க வேண்டும்.


ஒன்று, இவ்வளவு பணம் இருந்து என்ன பலன்? யாருக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அப்படி ஊருக்கு நல்லது செய்து அதனால் வரும் இன்பத்தை அனுபவிக்க முடியவில்லையே என்று வருந்துவானம். இந்த பணம் இருந்தும் ஒன்றுதான், இல்லாததும் ஒன்றுதான். இல்லை என்றால் வறுமை. இருந்தும் ஒன்றும் பலன் இல்லை என்றால், அதுவும் வருமைதானே. 


இரண்டாவாது, ஒப்புரவு செய்தால் வறுமை வந்துவிடுமே என்ற பயந்து, பணத்தை இறுக்க கட்டிப் பிடித்துக் கொண்டால், அந்த பணத்தை நல்ல வழியில் செலவழிக்க முடியாததும் ஒரு விதத்தில் வறுமைதான் என்கிறார்.


எந்த அளவுக்கு சிந்தித்து இருக்கிறார்கள். 


பொது நலம் என்பதின் உச்சம் தொட்டு இருக்கிறார்கள். 


ஏதோ கம்யூனிசம் , சோசியலிசம் என்பதெல்லாம் மேலை நாடுகளின் கண்டு பிடிப்புகள் என்று நாம் நினைக்கிறோம். அல்ல. வள்ளுவப் பெருந்தகை அவற்றைப் பற்றி எல்லாம் என்றோ சிந்தித்து இருக்கிறார். 


இதில் ஆச்சரியம் என்ன என்றால், இந்த பொது நல சிந்தனையை ஒரு அரசாங்கம் செய்ய வேண்டும், சட்டம் போட்டு கொண்டு வர வேண்டும் என்று இல்லாமல், அதை இல்லற தர்மமாக நம்மவர்கள் சிந்தித்து இருக்கிறார்கள். 


கார்ல் மார்க்ஸ், angels எல்லாம் சிந்திக்காத பகுதி. 


தனி  மனித சொத்துரிமை கூடாது என்று சோசியலிசம் கூறுகிறது. அபப்டி என்றால் எதற்காக உழைக்க வேண்டும் என்ற கேள்வி வரும். உழைப்ப கட்டாயமாக்க வேண்டும் என்ற சூழ்நிலை வரும். அதெல்லாம் நடக்காது. 


வள்ளுவர் வழி தனி வழி. நீ நன்றாக உழை. பொருள் சேர். அதை அனுபவி. அதே சமயம் அந்த பொருளால் சமுதாயத்துக்கும் ஏதாவது நன்மை செய் என்கிறார். 


இதை அறமாக நம்மவர்கள் கருதினார்கள். 


அப்படி ஒரு பரம்பரை நம்முடையது. பெருமை கொள்வோம். 





Saturday, October 7, 2023

கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - கடற்கரை சேர்தல் - 2

 கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - கடற்கரை சேர்தல் - 2 


இராமன் வானர சேனைகளோடு இந்தியாவின் தென் கோடிக்கு வந்து விட்டான். இனி கடல்தான் இருக்கிறது. கடலைத் தாண்ட வேண்டும். ஒரு ஆள் தாண்டினால் போதாது. எழுபது வெள்ளம் வானர சேனையை அந்தக் கரைக்கு கொண்டு செல்ல வேண்டும். 


சாதரணமான காரியமா? 


மிகப் பெரிய வேலை. சிக்கலானதும் கூட. 


இராமனின் மனநிலை என்ன. அவன் நாடு பிடிக்க புறப்பட்டவன் அல்ல. மனைவியை பறி கொடுத்து, அந்தக் கவலையில் இருக்கிறான். 


நாமாக இருந்தால் என்ன செய்து இருப்போம். 


தளர்ந்து போய் இருப்போம். ஒரு சின்ன விடயம் கொஞ்சம் மாறிப் போனால் கூட சோர்ந்து விடுகிறோம். "ஆமா, அது கிடக்குது, அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் ...இப்ப அது ரொம்ப முக்கியமா" என்று அலுத்துக் கொள்வோம். 


கவலை ஒரு புறம் இருந்தாலும், செய்ய வேண்டிய வேலை மிகப் பெரியதாக இருந்தாலும், மனம் தளராமல் இராமன் அதை செய்து முடிக்கிறான். 


இராமன் செய்து முடித்தான் என்று ஒரு வரியில் நாம் சொல்லிவிட்டு மேலே போய் விடுகிறோம். அவன் எந்த அளவு மனத் துயரத்தில் இருந்தான் என்று கம்பன் பின்னால் காட்டுவான். பார்ப்போம்.  


சீதை போன்ற அன்பான மனைவியை பிரிந்து இருப்பது என்பது எவ்வளவு துயரம். அந்த துயரம் ஒரு புறம் இருந்தாலும், எடுத்துக் கொண்ட வேலையை இராமன் சரியாக செய்து முடிக்கிறான். 


அது ஒரு பாடம். 


பாடல் 


ஊழி திரியும் காலத்தும் உலையா நிலைய உயர் கிரியும்,

வாழி வற்றா மறி கடலும், மண்ணும், வட பால் வான் தோய,

பாழித் தெற்கு உள்ளன கிரியும் நிலனும் தாழ, பரந்து எழுந்த

ஏழு-பத்தின் பெரு வெள்ளம் மகர வெள்ளத்து இறுத்ததால்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/2.html


(pl click the above link to continue reading)



ஊழி திரியும் காலத்தும் = ஊழித் தீ பிடித்து எரியும் காலத்திலும் 


 உலையா = மாறாத, சிதையாத 


நிலைய = நிலையான 


உயர் கிரியும் = உயர்ந்த மலையும் (இமய மலை) 


வாழி வற்றா மறி கடலும்= என்றும் வாழும் வற்றாத பெரிய கடலும் (இந்தியப் பெருங் கடல்) 


மண்ணும் = அந்த இரண்டுக்கும் இடையில் உள்ள மண், இந்திய நிலப் பரப்பு 


வட பால் வான் தோய = வடக்குப் பக்கம் உயர்ந்து வானத்தைத் தொட 


பாழித் = பெருமை உள்ள 


தெற்கு உள்ளன கிரியும் = தெற்குப் புறம் உள்ள மலை (விந்திய மலை) 


நிலனும் தாழ = தென் இந்தியாவும் தாழ 


பரந்து எழுந்த = புறப்பட்டு எழுந்த 


ஏழு-பத்தின் = எழுபது 


பெரு வெள்ளம் = வெள்ளம் என்பது இங்கே பெரிய கணக்கில் அடங்காத என்று பொருளில் வந்தது. பெரு வெள்ளம் என்றால் எண்ணில் அடங்கா 


மகர வெள்ளத்து இறுத்ததால் = மீன்கள் நிறைந்த தென் கடற்கரையை அடைந்தது. 


கொஞ்சம் குழப்பமாக இருக்கும். 


பெரிய படை வந்தது என்பதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும். மற்ற புலவர்கள் என்ன சொல்லி இருப்பார்கள் - கடல் போன்ற பெரிய படை, இதுவரை யாரும் காணாத பெரிய படை, அந்த படை நடந்து வந்த தூசி வானைத் தொட்டது என்றெல்லாம் எழுதி இருப்பார்கள். 


கம்பன் அவ்வளவு சாதாரண புலவன் இல்லை. 


அவன் சொல்கிறான் 


"இவ்வளவு பெரிய படை வடக்கில் இருந்து தெற்கில் வந்து விட்டது. எனவே, தெற்கில் பாரம் அதிகம் ஆகி தென் புறம் தாழ்ந்து விட்டது. அதனால் வட புறம் உயர்ந்து விட்டது. இமய மலையும் அது சார்ந்த இடங்களும் மேலே ஏறி வானைத் தொட்டது, விந்திய மலையும் அது சார்ந்த தென் பகுதியும் தாழுந்து விட்டது"


என்று. 


கற்பனை பண்ணிப் பாருங்கள். முழு இந்தியாவை ஒரு சீசா பலகை போல ஆக்கிக் காட்டுகிறான். இந்த பிரமாண்டத்தை நம்மால் சிந்திக்க முடியுமா?  


மனம் விரிய வேண்டும். சின்ன சின்ன விடயங்களை விட்டு விட்டு மனம் இப்படி ஒரு பிரமாண்டத்தை யோசிக்க வேண்டும். இப்படி யோசிக்க யோசிக்க மனம் விரியும். இப்படி பழக பழக எல்லாவற்றிலும் பெரிய இறைவனை உணர முடியும். 


மேலும் சிந்திப்போம். 



Thursday, October 5, 2023

திருக்குறள் - ஒப்புரவிற்கு ஒல்கார்

 திருக்குறள் - ஒப்புரவிற்கு ஒல்கார்


ஒப்புரவு, அதாவது பொதுநலம் என்பது கட்டாயமா? எல்லோரும் செய்ய வேண்டுமா? செல்வம் இருப்பவர்கள், அரசியல் அதிகாரம், செல்வாக்கு உள்ளவர்கள், சமுதாயத்தில் உயர் நிலையில் உள்ளவர்கள் செய்யலாம். அவர்களால் செய்ய முடியும். 


சாதாரண மக்களால் செய்ய முடியுமா? நம் வீட்டை பார்க்கவே நமக்கு செல்வம் இல்லை. இதில் எங்கிருந்து ஊருக்கு நல்லது செய்வது என்ற கேள்வி எல்லோர் மனத்திலும் எழும். 


இந்த வாதம் சரி என்று எடுத்துக் கொண்டால், உலகில் யாருமே செய்ய மாட்டார்கள். ஆயிரம் உரூபாய் உள்ளவன், பத்தாயிரம் இருப்பவன் செய்யட்டும், என்னால் முடியாது என்பான் பத்தாயிரம் உள்ளவன், இலட்சம் உள்ளவன் செய்யட்டும், என்னால் முடியாது என்பான். இப்படி போய்க் கொண்டே இருந்தால், உலகில் யாருமே மிஞ்ச மாட்டார்கள். உலகிலேயே மிகப் பெரிய பணக்காரனிடம் கேட்டால், நான் எவ்வளவு வரி கொடுக்கிறேன். அந்த வரி எல்லாம் அரசாங்கம் பொது நன்மைக்குத்தானே செலவழிக்கிறது. அதற்கு மேலும் வேறு நான் என்ன செய்ய வேண்டும் என்று பதில் கேட்பான். 


இதை அறிந்த வள்ளுவர் சொல்கிறார், 


ஒப்புரவு என்பது கடமை இல்லை. சட்டம் இல்லை. யாரும் ஒருவர் மீது திணிக்க முடியாது.. ஆனால், நீயே சுற்றிமுற்றிப் பார். நீ சார்ந்த சமுதாயம் எப்படி இருக்கிறது என்று பார். அதை உயர்த்துவது அந்த சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவர் கடமை என்று உனக்கே புரியும். நீ செய், நான் செய் என்பதிற்கு பதில், எல்லோரும் செய்ய வேண்டும் என்ற இயற்கை அறிவு தானே வரும் உனக்கு. அந்த அறிவில் இருந்து நீ செய்வாய் என்கிறார். 


பாடல் 



இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்

கடனறி காட்சி யவர்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/10/blog-post_5.html

(pl click the above link to continue reading)



இடனில் = இடம் + இல் = இடம் இல்லாத. அதாவது ஒப்புரவு செய்ய இடம் இல்லமால், செல்வம் இல்லாமல் 


பருவத்தும் = இருக்கின்ற காலத்திலும் 


 ஒப்புரவிற்கு = ஒப்புரவு செய்ய 


 ஒல்கார் = தயங்க மாட்டார்கள் 


கடனறி = கடன் (கடமை) + அறி = அது கடமை என்று 


காட்சி யவர் = கண்டு கொண்டவர்கள், அறிந்தவர்கள்


அதாவது, ஒப்புரவு என்பது ஒவ்வொருவரது கடமை. 


பணம் இல்லை என்றால் என்ன? மனம் இருந்தால் போதும். அருகில் உள்ள பள்ளியில் சென்று பிள்ளைகளுக்கு இலவசமாக பாடம் சொல்லித் தரலாம், வருடம் இரண்டு முறையாவது இரத்த தானம் செய்யலாம், தெருவில் நடந்து செல்லும் போது, பெரிய கல் சாலையில் கிடந்தால் அதை ஓரமாக தள்ளிப் விட்டுப் போகலாம், குப்பையை கண்ட இடத்தில் போடாமல், சுத்தமாக வைத்து இருக்கலாம், முடிந்த வரை தண்ணீரை சிக்கனமாக செலவழிக்கலாம்...இதெல்லாம் சமுதாய நன்மை கருதித்தான்.


என்னிடம் பணம் இருக்கிறது என்று 24 மணி நேரமும் குளிர் சாதனத்தை ஓடவிடாமல், குறைத்து செலவழிக்கலாம். 


வீட்டில் ஏதோ விசேடம் என்றால் அருகில் உள்ள அனாதை இல்லம் அல்லது முதியோர் இல்லத்துக்கு ஒரு வேளை உணவை இலவசமாகத் தரலாம். ஒரு இடத்தில் எல்லோரும் இதைச் செய்தால், வருடம் முழுவதும் அந்த பிள்ளைகள் பசியால் வாடாமல் இருக்கும். 


இப்படி ஆயிரம் வழியில் ஒப்புரவு செய்யலாம்.. 



சமுதாய அக்கறை என்பது பணம் மூலம் தானம் செய்வது மட்டும் அல்ல. எவ்வளவோ வழியில் செய்யலாம். செய்ய வேண்டும். அது கடமை என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.