Wednesday, November 8, 2023

கம்ப இராமாயணம் - அவையை எப்படி நடத்த வேண்டும் - பாகம் 1

 கம்ப இராமாயணம் - அவையை எப்படி நடத்த வேண்டும் - பாகம் 1 


இதுவரை இராமன் தென் கரையில் நின்று கொண்டிருந்ததை படம் படித்த கம்பன், இப்போது காமிராவை தூகிக் கொண்டு இலங்கைப் போகிறான். அங்கே என்ன நடக்கிறது என்று படம் பிடிக்கிறான். 


ஒரு தேர்ந்த இயக்குனரைப் போல, ஒரு காட்சியை cut பண்ணி வேறு ஒரு காட்சியை கொண்டு வருகிறான். வாசிப்பவர்களுக்கு ஒரு சலிப்பு இருக்காது. 


காமிரா இலங்கை போனாலும், வாசகன் நினைப்பு இராமன் மேலும் இருக்கும். அங்கே என்ன ஆச்சோ என்ற ஒரு எதிர்பார்ப்பும் இருக்கும்.


இலங்கையில், இராவணன் அவையை கூட்டி இருக்கிறான். ஆலோசனை செய்ய.


ஒரு சந்திப்பு (மீட்டிங்) எப்படி நடக்க வேண்டும் என்று கம்பன் காட்டுகிறான். 


மிக மிக ஆச்சரியமான நுணுக்கமான விவரிப்பு. ஒரு அவைக் கூட்டம் எப்படி நடத்த வேண்டும், எப்படி நடந்தது என்று இன்றைய மேலாண்மை (management) யில் கூறுவதற்கு ஒரு படி மேலே போய் காட்டுகிறான். 


இதை எல்லாம் படித்து இருந்தால் நம் பிள்ளைகளும் நாமும் எவ்வளவு அறிவில் சிறந்தவர்களாக சிறு வயதிலேயே ஆகி இருப்போம் என்று எண்ணத் தோன்றுகிறது. 


முதலில், சபையில் ஆலோசனைக்கு தேவை இல்லாத ஆட்களை வெளியே அனுப்புகிறான். 


பாடல் 


'முனைவரும், தேவரும், மற்றும் உற்றுளோர

எனைவரும், தவிர்க!' என ஏய ஆணையான்,

புனை குழல் மகளிரோடு இளைஞர்ப் போக்கினான்-

நினைவுறு காரியம் நிகழ்த்தும் நெஞ்சினான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/1.html



(pl click the above link to continue reading)


'முனைவரும் = முனிவர்களும் 


தேவரும் = தேவர்களும் 


மற்றும் = மேலும் 


உற்றுளோர எனைவரும் = அவர்களைப் போன்ற அனைவரையும் 


, தவிர்க!' = வெளியில் செல்லுங்கள் 


என = என்று 


ஏய ஆணையான் = ஆணையிட்டான் 


புனை குழல் = அழகு செய்யப்பட்ட கூந்தலை கொண்ட 


மகளிரோடு = பெண்களோடு 


 இளைஞர்ப் போக்கினான் = அறிவில் முதிராத இளையவர்களையும் நீக்கினான் 


நினைவுறு காரியம் = மனதில் நினைத்த காரியத்தை 


 நிகழ்த்தும் நெஞ்சினான் = நிகழ்த்திக் காட்டும் மனம் கொண்ட இராவணன் 


தேவர்கள் அரக்கர்களுக்கு எதிரிகள். அவர்களை நீக்கினான். 


முனிவர்கள் - விருப்பு வெறுப்பு இல்லாதவர்கள். அவர்களிடம் அரசாங்க யோசனை கேட்டு பலன் இல்லை. எனவே அவர்களையும் நீக்கினான். 


பெண்கள் - அங்கே பணி செய்யும் பணிப்பெண்கள். பெண்களிடம் இரகசியம் தங்காது என்பது ஒரு பொதுவான சிந்தனை. அதைக் கருத்தில் கொண்டு பெண்களை நீக்கினான். 


இளையவர் - கத்து குட்டிகள் இருப்பார்கள். அவர்களுக்கு யோசனை சொல்லும் அளவுக்கு அறிவு இருக்காது. எனவே அவர்களையும் நீக்கினான். 


தேவை இல்லாதவர்களை எல்லாம் வெளியேற்றிவிட்டான். 


நினைத்ததை முடிப்பவனான இராவணன். நினைத்ததை சாதித்து முடிப்பவர்கள், இப்படித்தான் இருப்பார்கள் என்று கம்பன் பாடம் நடத்துகிறான். 





அடுத்து என்ன செய்தான்?




Tuesday, November 7, 2023

திருக்குறள் - சாவதை விட சிறந்தது

திருக்குறள் - சாவதை விட சிறந்தது 


ஒருவனுக்கு மிகவும் துன்பம் தரக் கூடியது எது என்றால் மரணம் தான். மரணத்தை விட கொடிய துன்பம் எது இருக்க முடியும்? இருக்கின்ற செல்வம், சுற்றம், உறவு, இந்த உலகம், அதி இருந்து கிடைக்கும் அனுபவங்கள் இதை எல்லாம் விடுவது என்றால் எளிதான காரியமா? 


எவ்வளவு வறுமையில் இருந்தாலும், எவ்வளாவு தோல்விகள் வந்தாலும், எவ்வளவு வலி இருந்தாலும், வாழ்க்கை இனிக்கத்தான் செய்கிறது. இவ்வளவு துன்பம் இருக்கிறதே, இருந்து என்ன பலன், உயிரை விடுவோம் என்று எவ்வளவு பேர் நினைப்பார்கள். 


வள்ளுவர் சொல்கிறார், அந்த மரணத்தை விட துன்பம் தரக்கூடியது ஒன்று இருக்கிறது. அது என்ன என்றால், நம்மிடம் ஒருவன் வந்து  ஒரு உதவி கேட்டு அதை நாம் கொடுக்க முடியாமல் இருப்பது. அதைப் போல பெரிய துன்பம் எதுவும் இல்லை. அது மரணத்தை விட கொடிய துன்பம் என்கிறார். 


பாடல் 


சாதலின் இன்னாதது இல்லை இனிததூஉம்

ஈதல் இயையாக் கடை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_7.html


(please click the above link to continue reading)


சாதலின் = இறப்பதைவிட 


இன்னாதது = துன்பம் தருவது 


இல்லை = வேறு எதுவும் இல்லை 


இனிததூஉம் = இனிது + அதுவும் = அது கூட இனியதுதான். எப்போது என்றால் 


ஈதல் = கொடுத்தல், உதவுதல் 


இயையாக் கடை = முடியாத போது 


இராமயணத்தில், கூனி எவ்வளவோ சொல்லி கைகேயின் மனதை மாற்றப் பார்க்கிறாள். கைகேயி மனம் மாறவில்லை. 


கடைசியில் ஒன்று சொல்கிறாள், கைகேயி தலைகீழாக மாறி விடுகிறாள். 


"ஏய் கைகேயி, நாளை இராமன் முடி சூடிக் கொள்ளப் போகிறான். அனைத்து செல்வமும் அவனிடம் போய் விடும். உன்னிடம் யாராவது வறியவர்கள் வந்து உதவி கேட்டால் நீ என்ன செய்வாய்? நீ போய் கோசலையிடம் போய் கையேந்தி நிற்பாயா?  அவளிடம் பொருள் பிச்சை வாங்கி வந்து நீ மற்றவர்களுக்கு உதவுவாயா? ஒருவேளை அவள் தரவில்லை என்றால் என்ன செய்வாய்? கோபிப்பாயா? துக்கத்தால் விம்மி உயிரை விடுவாயா? இல்லை உதவி என்று வந்தவர்களுக்கு உதவி செய்யமாட்டேன் என்று மறுத்து திருப்பி அனுப்பி விடுவாயா?"


என்று கேட்கிறாள். 


'தூண்டும் இன்னலும், வறுமையும், தொடர்தரத் துயரால்

ஈண்டு வந்து உனை இரந்தவர்க்கு, இரு நிதி, அவளை

வேண்டி ஈதியோ? வெள்குதியோ? விம்மல் நோயால்

மாண்டு போதியோ? மறுத்தியோ? எங்ஙனம் வாழ்தி? 


கைகேயி திகைத்துப் போகிறாள். அவளால் அந்த நிலையை சிந்தித்துக் கூட பார்க்க முடியவில்லை. 


என்ன ஆனாலும் சரி, அப்படி ஒரு நிலை எனக்கும் என் மகன் பரதனுக்கும் வரக் கூடாது என்று முடிவு எடுக்கிறாள். பின் நடந்தது உங்களுக்குத் தெரியுமே. 


உதவி செய்ய முடியவில்லை என்றால் சாவது மேல். உயிரை விடுவது இனியது என்று நம்ம்பியது நம் பரம்பரை. 


எந்த நிலையில் இருந்து சிந்தித்து இருக்கிறார்கள் என்று பாருங்கள். 


ஏதோ வள்ளுவர் அறிவுரை சொல்லிவிட்டுப் போகவில்லை. இராமாயணமும் அதையே பேசுகிறது. கர்ணன் மூலம் பாரதமும் அதைப் பேசியது. 


துறவிகளை கொண்டாடியதைப் போல, வள்ளல்களையும் கொண்டாடியது நம் பாரம்பரியம். 


பருந்துக்காக தன் தொடையை அரிந்து கொடுத்தான் சிபிச் சக்கரவர்த்தி என்று இன்றும் கொண்டாடுகிறோம். ஒரு அரசன் நினைத்து இருந்தால் நொடியில் எவ்வளவோ மாமிசம் வாங்கித் தந்திருக்க முடியும். கேட்டவுடன் கொடுக்க வேண்டும். மயிலுக்கு போர்வை தந்தவன், கொடிக்கு தேரைத் தந்தவன் என்று அந்த வள்ளல்களை இன்றும் போற்றுகிறோம். 


ஈந்துவக்கும் இன்பம் அறிந்து வாழ்ந்தவர்கள் நாம். 


இந்தக் குறளோடு, ஈகை என்ற இந்த அதிகாரம் முற்றுப் பெறுகிறது.


அடுத்து....

Monday, November 6, 2023

நாலாயிர திவ்ய பிரபந்தம் - என் நிலையைப் போய் சொல்

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - என் நிலையைப் போய் சொல் 


பெண்கள் மனதை புரிந்து  கொள்வது சாதாரண காரியம் அல்ல. 


அவர்களுக்கு ஒரு பொருளின் மேல் உள்ள ஆசையை விட, அந்தப் பொருளை கணவனோ, காதலனோ தங்களுக்காக கஷ்டப்பட்டு பெற்றுத் தர வேண்டும் என்பதில் ஆசை அதிகம். எனக்காக அவன் அதைச் செய்தான் என்பதில் அவர்கள் மனம் நெகிழும். 


உனக்கு வேண்டியது பொருள்தானே, அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னால் முடியாது. நீ வாங்கிக் கொண்டு வந்து, என்னிடம் தர வேண்டும் என்பது அவர்கள் விருப்பம். 


சில உதாரணங்கள் பார்ப்போம். 


சீதை பொன் மானை விரும்புகிறாள். இலக்குவன் தான் போய் பிடித்துக் கொண்டு வருகிறேன் என்கிறான். யார் கொண்டுவந்தால் என்ன? அவளுக்கு வேண்டியது பொன் மான் தானே. 


இல்லை, அவளுக்கு இராமன் பிடித்துத் தர வேண்டும். 


"நீங்க எனக்கு அதை பிடித்துத் தர மாட்டீங்களா" என்று கொஞ்சுகிறாள். இராமனால் மறுக்க முடியவில்லை. மான் பிடிக்கப் போகிறான். 


"நாயக, நீயே பற்றி நல்கலை போலும்"  என்று கொஞ்சுகிறாள். 


ஆயிடை, அன்னம் அன்னாள், அமுது உகுத்து அனைய செய்ய

வாயிடை மழலை இன்சொல் கிளியினில் குழறி மாழ்கி,‘

நாயக! நீயே பற்றி நல்கலை போலும் ‘என்னாச்

சேய் அரிக் குவளை முத்தம் சிந்துபு, சீறிப் போனாள்.



கணவன் அன்போடு பூ வாங்கிக் கொண்டு வருகிறான். அதை அவள் கையில் கொடுத்தால் எப்படி, "இங்க வா, கொஞ்சம் திரும்பு என்று அவளை தொட்டுத் திருப்பி அவள் தலையில் அவனே பூ வைத்து விட்டால் எப்படி". ஒரு மனைவிக்கு எது பிடிக்கும்?  


ஆண்டாள் சொல்கிறாள் 


"மலரிட்டு நாம் முடியோம்" என்று. நாங்களே எதுக்கு எங்க தலைமேல பூ வச்சுக்கணும். கண்ணன் வந்து வச்சுவிடணும் என்று அவள் ஆசை. 


வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத்துயின்ற பரமன் அடிபாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி

உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


காதலின் ஒரு படி மேலே சென்று....


கண்ணுக்கு நான் மை வைத்துக் கொள்ள மாட்டேன். அவன் வந்து மை தீட்டி விடட்டுமே என்று அவள் இருக்கிறாள். 


அவனுக்கு மை தீட்டி பழக்கம் இல்லை. அவள் கண் இமையை மெல்ல கீழே இறக்கி, கண் மையை தொட்டு அவள் கண்களில் பட்டும் படாமல் மெல்லமாக இடுகிறான். அவ்வளவு நெருக்கம். கையில் நடுக்கம். கண்ணில் பட்டு விடுமோ என்று. அவளின் நெருக்கம், இதயம் பட பட வென்று அடிக்கிறது. 


அனுமன் சீதையை அசோகவனத்தில் பார்க்கிறான். எல்லாம் பேசிய பின், "இன்னும் ஒரு  மாதம் உயிரோடு இருப்பேன். அதுக்குள்ள வந்து இராமன் கூட்டிக் கொண்டு போகா விட்டால், உயிரை விட்டு விடுவேன்" என்று போய் சொல் என்கிறாள். 


இன்னும் ஈண்டு ஒரு   திங்கள் இருப்பல் யான்

நின்னை நோக்கிப் பகர்ந்தது நீதியோய்

பின்னை ஆவி பிடிக்கின்றிலேன் அந்த

மன்னன் ஆணை இதனை மனக்கொள் நீ.


அனுமன் பார்த்தான். இது என்னடா புது வம்பா இருக்கு. இனி நான் போய் இராமனிடம் சொல்லி, அவன் இங்கு வந்து, சண்டை போட்டு, இராவணனை வென்று....அதெல்லாம் ஒரு மாதத்தில் நடக்கிற காரியமா என்று நினைத்து, 


சீதையிடம் சொல்கிறான்...


ஒரு மாசம் எல்லாம் வேண்டாம். இப்பவே என் தோளில் ஏறிக் கொள். இப்பவே உன்னை கொண்டு போய் இராமனிடம் சேர்பித்து விடுகிறேன்.மத்ததை எல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று. 


'வேறு இனி விளம்ப உளதன்று; விதியால், இப்

பேறு பெற, என்கண் அருள் தந்தருளு; பின் போய்

ஆறு துயர்; அம் சொல் இள வஞ்சி! அடியன் தோள்

ஏறு, கடிது' என்று, தொழுது இன் அடி பணிந்தான். 


"அடியன் தோள் ஏறு கடிது"  என்றான்.


அப்போது சீதை சொல்கிறாள்,


"இந்த இலங்கை மட்டும் அல்ல, இந்த உலகம் அனைத்தையும் என் சொல்லினால் சுடுவேன். அது இராமனின் வில்லுக்கு இழுக்கு என்று செய்யாமல் இருக்கிறேன்" 


அதாவது, என்னால் இந்த சிறையில் இருந்து மீள முடியும். ஆனால், அவன் வந்து சிறை மீட்க வேண்டும். 


அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ?

எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்

சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்

வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்.


திருமங்கை ஆழ்வார், தன்னை ஒரு காதலியாக வரித்துக் கொண்டு, வண்டை பெருமாளிடம் தூது விடுகிறார். 


"மலரில் உன் துணையோடு மதுவை அருந்தும் வண்டே, என் நிலையை அவனுக்குச் சொல்" 


என்று. 


அதாவது, அவனை வரச் சொல் என்று சொல்லவில்லை. அவனை கூட்டிக் கொண்டு வா என்று சொல்லவில்லை. என் நிலையைச் சொல். என் நிலை உணர்ந்து அவனே என்னைத் தேடி வருவான். வர வேண்டும். அப்போதுதான் அவளுக்கு மகிழ்ச்சி. 


பாடல் 


தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே,

பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே,

தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாலி,

ஏவரிவெஞ் சிலையானுக் கென்னிலைமை யுரையாயே.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_57.html


(pl click the above link to continue reading)



தூவிரிய = உன்னுடைய சிறகுகள் விரியும்படி 


மலருழக்கித் = மலர்களை போட்டு உழக்கி எடுத்து 


துணையோடும் = உன்னுடைய துணையோடு (ஜோடி) 


பிரியாதே = பிரியாமல் 


பூவிரிய = பூவின் இதழ்களை விரித்து 


மதுநுகரும் = தேனை உருசிக்கும் 


பொறிவரிய சிறுவண்டே = வரிகளை மேலே கொண்ட வண்டே 


தீவிரிய = தீ மேலே எழுபடி 


மறைவளர்க்கும் = வேதம் ஓதி அவற்றை வளர்க்கும் 


புகழாளர் = சிறந்தவர்கள் 


திருவாலி = (வாழும்) திருவாலி என்ற திருத்தலத்தில் 


ஏவரி = எதிரிகள் அஞ்சும்படி 


வெஞ் சிலையானுக் = கொடிய வில்லை கையில் ஏந்தியவனிடம்


கென்னிலைமை = என்னுடைய நிலையை 


யுரையாயே = சொல்வாயாக 


அவன் வீரன் தான். அவனைப் பார்த்தால் எதிரிகள் நடுங்குவார்கள். ஆனால், என்னிடம் அன்பாக இருப்பான். நீ போய் சொல்லு. அவன் வர்ரானா இல்லையா பாரு என்பது போலச் சொல்கிறாள். 


அவளுக்கு கார் கதவை திறந்து உள்ளே ஏறத் தெரியும். இருந்தும், கணவன் கார் கதவை திறந்து விட்டால், அதில் அவளுக்கு ஒரு பெருமை. 


அவளுக்கு நாற்காலியை இழுத்துப் போட்டு அமரத் தெரியும். இருந்தும், கணவன் அந்த நாற்காலியை அவள் அமர வசதியாக நகர்த்திக் கொடுத்தால், அதில் அவளுக்கு ஒரு மகிழ்ச்சி. 


பெண்ணின் மனம். 



நாலடியார் - புல்லின் மேல் பனி

 நாலடியார் - புல்லின் மேல் பனி 


சிறு வயதில், ஏன் சில பேருக்கு வயதான பின் கூட, சில அறிவற்றவர்களிடம் பழக்கம் இருக்கும். சின்ன வயசில் இருந்தே பழக்கம். நீண்ட நாள் நட்பு, உறவு என்று அறிவு இல்லா மூடர்களோடு சேர்ந்து திரிவார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் பெரிய குறிக்கோள் இருக்காது, நோக்கம் இருக்காது. நாம் நல்லது செய்ய முயற்சி செய்தாலும், ஏதாவது சொல்லி குழப்பி விடுவார்கள். 


அவர்களோடு சேர்ந்து நமக்கும் சில கெட்ட பழக்கங்கள் தொற்றிக் கொள்ளும். புகை பிடிப்பது, சூதாடுவது, வெட்டிப் பேச்சு பேசுவது, அரட்டை அடிப்பது போன்ற பழக்கங்கள்.


இதில் இருந்து எப்படி விடுபடுவது?


எப்படி நம் வாழக்கையை சிறப்பாக ஆக்கிக் கொள்வது?


நாலடியார் சொல்கிறது 


"அறியாத சிறுவயதில் அடக்கம் இல்லாதவர்களோடு சேர்ந்து தவறான பாதையில் போனாலும், நல் வழி செல்லும் சான்றோரோடு சேர்ந்துவிட்டால், புல்லின் மேல் உள்ள பனி எப்படி சூரியன் வந்தவுடன் ஆவியாகிப் போகிறதோ, அது போல பழைய கெட்ட பழக்கங்கள் எல்லாம் போய் விடும்" 


என்று. 


பாடல் 


அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி

நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த

நற்சார்வு சாரக்கெடுமே வெயில்முறுகப்

புற்பனிப் பற்றுவிட் டாங்கு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_6.html


(pl click the above link to continue reading)


அறியாப் பருவத்து = அறியாத பருவத்தில் 


அடங்காரோடு = அடக்கம் இல்லாமல் திரிபவர்களோடு 


ஒன்றி = சேர்ந்து இருந்து 


நெறியல்ல = நெரியலாதவற்றை , தவறானவற்றை 


செய்தொழுகி யவ்வும் = செய்து வந்ததும் 


நெறியறிந்த = நல் வழி அறிந்த 


நற்சார்வு  = நல்லவர்களோடு கொண்ட  தொடர்பு 


சாரக்கெடுமே = சேர்ந்திருக்க அந்த பழைய பழக்கங்கள் நம்மை விட்டுப் போய் விடும். எப்படி என்றால் 


வெயில்முறுகப் = வெயில் ஏற ஏற 


புற்பனிப் = புல்லின் மேல் பனி 


பற்று = பிடித்து இருந்த பற்று  


விட் டாங்கு. = விட்டதைப் போல 


புல் ஒன்றும் செய்ய வேண்டாம். சூரியன் வந்தால், பனி தானே விலகிவிடும். அது போல், பெரியவர்கள் நட்பு, தொடர்பு கிடைத்தால், நம் பழைய தீய எண்ணங்கள், பழக்கங்கள் தானே நம்மை விட்டுப் போய் விடும். 


கவனிக்க வேண்டியது என்ன என்றால்:


நம் நல்ல பழக்கங்களும், தீய பழக்கங்களும் நம்மை சேர்த்தவர்களைப் பொறுத்தே அமைகிறது. யாரோடு சேர்கிறோமோ, அவர்களின் குணம் நம்மை சேரும். 


இரண்டாவது, பாடல் "இளம் வயதில்" என்று கூறவில்லை. அறியா பருவத்தில் என்று கூறுகிறது. சிலருக்கு அறியாப் பருவம் என்பது நீண்ட நாள் தொடரும். அவர்கள் கெட்டவர்களோடு தொடர்பில் இருக்கிறார்கள் என்று அவர்கள் அறிய மாட்டார்கள். 


உங்கள் பணத்தை ஒருவன் திருடிக் கொண்டு போகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனோடு தொடர்பில் இருப்பீர்களா?


திருடவில்லை, உங்களை ஏமாற்றி உங்கள் பொருளை ஒருவன் பறித்துக் கொள்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனோடு நட்பில் இருப்பீர்களா?


ஒருவன் உங்கள் நேரத்தை வீணடிக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனை?  நாம் நேரத்தை பெரிதாக நினைப்பது இல்லை. உங்களிடம் தேவையில்லாதவற்றை பேசுபவர்கள், அரட்டை அடிப்பவர்கள், புறம் சொல்லுபவர்கள், என்று உங்கள் நேரத்தை வீணடிப்பவர்கள் உங்கள் வாழ்கையை வீணடிப்பவர்கள்.  அந்த நேரம் இருந்தால் அதை நல்ல வழியில் செலவழிக்க முடியும்.  


அதே சமயம் உங்கள் நேரத்தை பயனுள்ளதாக ஆக்குபவர்கள், அவற்றின் மூலம் உங்களுக்கு பல நன்மைகள் வரும்படி செய்பவர்கள், அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். அவர்கோளோடு இருந்தால், நாளடைவில், முன் சொன்னவர்களின் தொடர்பு தானே கழலும். 


சுற்றி முற்றி பாருங்கள். 


உங்கள் சுற்றம் மற்றும் நட்பில், உங்களை நாளும் உயர்த்துபவர்கள் யார், உங்கள் நேரத்தை வீணடிப்பவர்கள் யார் என்று. 


Friday, November 3, 2023

திருக்குறள் - தாமே தமியர் உணல்

திருக்குறள் - தாமே தமியர் உணல் 


மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று எல்லோரும் விரும்புவார்கள். யாருக்கும் ஒன்றும் உதவி செய்யக் கூடாது என்று யார் நினைப்பார்கள்? இருந்தும் பெரும்பாலானோர் உதவி செய்வது இல்லை. 


ஏன்?


கொஞ்சம் சேமிக்க ஆரம்பிக்க உடன், முதலில் ஒரு இலட்சம் சேமிக்க வேண்டும் என்று ஆசை வரும். அதை சேர்த்தவுடன் பத்து இலட்சம், அப்புறம் ஒரு கோடி என்று ஆசை வளர்ந்து கொண்டே போகும். 


இதற்கு இடையில் ஒரு சிறிய வீடு வாங்க வேண்டும், ஒரு கார், என்று செலவும் கூடிக் கொண்டே போகும். குறித்த அளவு சேமிக்க நாள் ஆகும். அதுவரை பணத்தை யாருக்கும் கொடுக்காமல் மேலும் மேலும் சேமிக்க மனம் நினைக்கும். 


வள்ளுவர் சொல்கிறார், 


"ஒருவரிடம் சென்று எனக்கு பொருள் கொடு என்று கேட்பது மிக இழிவானது. துன்பம் தருவது. அதை விட துன்பம் தரும் ஒன்று இருக்கிறது. அது என்ன என்றால் கேட்டவனுக்கு கொடுக்காமல் தாமே தனித்து உண்பது"


பாடல் 


இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய

தாமே தமியர் உணல்


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_3.html

(please click the above link to continue reading)


இரத்தலின் = மற்றவர்களிடம் சென்று தான் வரியன் உதவி கேட்பதை விட 


இன்னாது = இனிமை இல்லாதது, துன்பம் தருவது 


மன்ற = நிச்சயமாக 


நிரப்பிய = அனைத்தையும் 


தாமே = தான் மட்டும் 


தமியர் உணல் = தனியாக உண்பது 


அது எப்படி உதவி செய்ய மாட்டேன் என்று சொல்லுவது தவறாகும்?


எனக்கு உதவி செய்ய வசதி இல்லை,  உதவி செய்ய மனம் இல்லை அதனால் என்ன?  உதவி செய்தே ஆக வேண்டுமா?


வள்ளுவர் சொல்கிறார்,


ஏன் உதவி செய்யமாட்டேன் என்கிறாய்?  ஏதோ ஒரு அளவு சொத்து சேர்க்க வேண்டும் நினைத்துதான் அல்லவா? 


அப்படி நினைக்கும் போது என்ன ஆகும்?


முதலாவது, கஞ்சத்தனம் வந்து விடும். மனைவி மக்கள் ஏதாவது ஆசையாகக் கேட்டால் கூட வாங்கித் தர மனம் வராது.   "எதுக்கு அனவாசிய செலவு"  என்று அவர்கள் ஆசையை மறுக்க வேண்டி வரும்.  அவனுக்கு ஒரு குறித்த அளவு சொத்து சேர்க்க வேண்டும். அது வரை வாழ்க்கையை அனுபவிக்க மாட்டான். சரி, அந்த இலக்கை அடைந்தவுடன் செல்வழிப்பானா என்றால், இல்லை. அடுத்த இலக்கு வந்து விடும். மூன்று படுக்கை அறை உள்ள வீடு வேண்டும், வில்லா வேண்டும், பெரிய கார் வேண்டும் , அதற்கு சேமிக்க வேண்டும் என்று ஆரம்பித்து விடுவான். ஒரு நாளும் சந்தோஷமாக  இருக்க மாட்டான். எனவே, அது "இன்னாது". 


இரண்டாவது, பொருள் இல்லாதவன், உதவி கேட்பது ஒரு முறை. ஒரு சிலரிடம் கேட்பான். யாராவது உதவி செய்து விடுவார்கள்.  பொருள் கிடைத்து விடும். அதன் மூலம் தன் பிரச்சனையை அவன் தீர்த்து, நிம்மதி பெருமூச்சு விடுவான். மகிழக் கூடச் செய்வான். ஆனால், பொருள் சேர்க்க வேண்டும் என்ற முனைப்பில் இருப்பவன் ஒரு காலும் அந்த பொருள் மூலம் வரும் இன்பத்தை அனுபவிக்க மாட்டான். ஒவ்வொரு முறையும் passbook ஐ பார்த்து பார்த்து, இன்னும் சேர்க்க வேண்டும், இன்னும் சேர்க்க வேண்டும் என்று கவலைப் பட்டுக் கொண்டே இருப்பான். ஒருக்காலும் நிம்மதியும், சந்தோஷமும் இருக்காது. எனவே அது "இன்னாது". 


இவ்வளவு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டு விட்டால், தான் சேர்த்த பொருளை தானும் அனுபவித்து, மற்றவர்களுக்கும் கொடுக்கும் எண்ணம் வரும். 


சிந்தித்துப் பார்ப்போம். 


 




Thursday, November 2, 2023

பழமொழி - சொல்லவே இல்லை

 பழமொழி - சொல்லவே இல்லை 


நம் நெருங்கிய நண்பர்களையோ, உறவினர்களையோ சிறிது இடைவெளிக்குப் பின் சந்திக்க நேர்ந்தால், அவர்கள் சிலவற்றைச் சொல்லுவார்கள். நமக்கு ஆச்சரியமாக இருக்கும். இதெல்லாம் சொல்லவே இல்லையே நம்மிடம் என்று என்று அதிசயப் படுவோம். 


உதாரணமாக, "...அங்க ஒரு வீடு வாங்கினேன்...நல்ல விலைக்கு வந்தது" என்பார்கள். "அடப் பாவி, வீடு வாங்கினதைக் கூட என்னிடம் சொல்லவில்லையே. சொல்லி இருந்தால் நானும் கூட அங்கேயே வாங்கி இருப்பேனே..." என்று உள்ளுக்குள் நினைப்போம். 


அதே போல, பெண்ணுக்கோ, பையனுக்கோ வரன் அமைந்து இருக்கும். வெளியே சொல்லாமல் முடித்து இருப்பார்கள். 


இப்படி ஒவ்வொருவர் வாழ்விலும் பல விடயங்கள் நடக்கும். எல்லாவற்றையும், எல்லோருடமும் சொல்லிக் கொண்டு இருக்கமாட்டார்கள். அவங்களுக்கு எது நல்லதுன்னு படுதோ அதை அவர்கள் செய்வார்கள். எவ்வளவு நெருங்கிய நட்பாக இருந்தாலும் சரி, உறவாக இருந்தாலும் சரி, அப்படித்தான் செய்வார்கள். 


அதற்காக வருத்தப்படக் கூடாது. 


இப்படி வாழ்வின் எதார்த்தங்களை புட்டு புட்டு வைப்பது பழமொழி என்ற நூல்.  


ஒவ்வொரு செய்யுளும் நாலு அடி, அதில் கடைசி அடி, ஒரு பழமொழியாக இருக்கும். சில பழமொழிகள் நாம் கேட்டு இருக்க மாட்டோம். இருந்தாலும் மிக உபயோகமான பாடல்கள். 



பாடல் 


சுற்றத்தார் நட்டார் எனச்சென் றொருவரை

அற்றத்தால் தேறார் அறிவுடையார் - கொற்றப்புள்

ஊர்ந்துலகம் தாவின அண்ணலே யாயினும்

சீர்ந்தது செய்யாதா ரில்.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_2.html


(pl click the above link to continue reading)


சுற்றத்தார் = உறவினர்கள் 


நட்டார் = நண்பர்கள் 


எனச்சென் றொருவரை =  என்று சென்று ஒருவரை 


அற்றத்தால் = மறைத்து செய்யும் காரியங்களைக் கொண்டு


தேறார் = எடை போட மாட்டார் 


அறிவுடையார் = அறிவு உள்ளவர்கள் 


 கொற்றப்புள் = புள் என்றால் பறவை. கொற்றப் புள் என்றால் சிறந்த பறவை, அதாவது கருடன் 


ஊர்ந்துலகம் = மேல் ஏறி உலகம் 


தாவின = தாவி அளந்த 


அண்ணலே யாயினும் = திருமாலே என்றாலும் 


சீர்ந்தது = தனக்கு சிறந்தது என்று நினைப்பதை 


செய்யாதா ரில் = செய்யாதவர்கள் யாரும் இல்லை 


எல்லாவற்றையும் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு இருக்க மாட்டார்கள். அப்படி சொல்லவில்லையே என்று அவர்கள் மேல் வருத்தம் கொள்ளக் கூடாது. அவங்களுக்கு பிடிச்சதை அவங்க செய்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். 


அதுதான் யதார்த்தம். 


அது மட்டும் அல்ல, உங்கள் வாழ்வில் நடக்கும் எல்லாவற்றையும் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும் என்று ஒரு அவசியமும் இல்லை. சொல்லாமல் செய்தால் அவர்கள் இப்படி நினைப்பார்களோ, தவறாக நினைப்பார்களோ, என்றெல்லாம் நினைக்க வேண்டும். உங்களுக்கு நல்லது என்று படுகிறதா, எதைப் பற்றியும் கவலைப் படாமல் செய்யுங்கள். அது தான் உலக வழக்கு. 





Wednesday, November 1, 2023

கம்ப இராமாயணம் - அலை எனும் கை நீட்டி

கம்ப இராமாயணம் - அலை எனும் கை நீட்டி 


வானரப் படைகளோடு தென் கடற்கரையில் இராமன் நிற்கிறான். 


கம்பன் இரசித்து, நிறுத்தி, நிதானமாக கவிதைகளப் படைக்கிறான். 


"சீதை சிறைகியிருக்கிறாள். அவளை மீட்டு அவள் துயரைத் துடைக்க வேண்டும். அப்படி என்றால் இராவணனை கொல்ல வேண்டும். இராவணன் கொல்லப் பட்டால் தேவர்களின் துயரும் தீரும். இப்படி சீதை மற்றும் தேவர்களின் துயர் தீர வில் ஏந்தி வந்து நிற்கும் இராமனை தன் அலை என்ற கைகளால் வா வா என்று அந்தக் கடல் வரவேற்பது போல இருந்ததாம்".


பாடல் 


கொங்கைக் குயிலைத் துயர் நீக்க, இமையோர்க்கு உற்ற குறை முற்ற,

வெங் கைச் சிலையன், தூணியினன், விடாத முனிவின் மேல்செல்லும

கங்கைத் திரு நாடு உடையானைக் கண்டு, நெஞ்சம் களி கூர,

அம் கைத் திரள்கள் எடுத்து ஓடி, ஆர்த்தது ஒத்தது-அணி ஆழி.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post.html


(pl click the above link to continue reading)


கொங்கைக் குயிலைத் = மார்பகங்களை கொண்ட குயில் போன்ற சீதையின் 


துயர் நீக்க = துன்பம் நீங்க 


இமையோர்க்கு = தேவர்கள். தேவர்கள் கண் சிமிட்ட மாட்டார்கள். இமை மூடாது. எனவே, இமையோர் 


உற்ற = உள்ள 


குறை முற்ற = துன்பம் நீங்க 


வெங் கைச் சிலையன் = பயத்தைத் தரும் வில்லை கையில் கொண்டவன்  


தூணியினன் = அம்புகள் நிறைந்த அம்புராத் துணியை கொண்டவன் 


விடாத முனிவின் = நீங்காத கோபம் கொண்டவன் 


மேல்செல்லும = அந்தப் பகைவர்கள் மேல் படை எடுத்துச் செல்லும் 


கங்கைத் திரு நாடு உடையானைக் = கங்கை பாயும் கோசல நாட்டின் தலைவனை 


கண்டு = பார்த்து 


நெஞ்சம் களி கூர = மனம் மகிழ்ந்து 


அம் = அந்த 


கைத் = கை போன்ற 


திரள்கள் = அலையை 


எடுத்து ஓடி = எடுத்துக் கொண்டு ஓடி வந்து 


ஆர்த்தது = பொங்கி வந்ததை 


ஒத்தது = போல 


அணி ஆழி= அழகிய கடல் 


ரொம்ப நாள் கழித்து நமக்கு வேண்டியவர்கள் வந்தால், எப்படி இரண்டு கைகளையும் விரித்து ஓடி சென்று அவர்களை தழுவி வரவேற்போமோ, அது போல இராமனைக் கண்டு மகிழ்ந்து, அலை எனும் கை நீட்டி ஆராவராத்தோடு அந்த கடல் பொங்கி வந்ததது போல இருந்ததாம். 


என்ன ஒரு கற்பனை!


எனக்கு நீண்ட நாளாகவே ஒரு சந்தேகம் உண்டு. 


இராமன் அவதாரம் எடுத்தது இராவணனை அழிக்க. அவன் தவறு செய்தான், தேவர்கள் முறையிட்டார்கள். திருமாலும் ஒத்துக் கொண்டுவிட்டார். 


நேரே சென்று அழிக்க வேண்டியதுதானே. 


கதைப்படி, இராமன் தேவர் துயர் தீர்கவில்லை. தன் மனைவியை சிறைப் பிடித்தவனை கொன்று மனைவியை மீட்டான். 


ஒரு வேளை இராவணன் மனம் மாறி, சீதையை விட்டிருந்தால், இராமன் அவளை கூட்டிக் கொண்டு அயோத்தி வந்திருப்பான். இராவணன் அவன் பாட்டுக்கு அவன் வேலையை பார்த்துக் கொண்டு இருந்திருப்பான். 


அப்படி நடந்திருக்காது என்று  சொல்ல முடியாது. 


பின்னால் ஒருவர் மாத்தி ஒருவர் சொல்கிறார்கள் - வீடணன், இந்திரசித்து, கும்பகர்ணன் - எல்லோரும் சொல்கிறார்கள். சீதையை விட்டு விடு. இராமன் மன்னித்து விடுவான் என்று. நீ சீதையை சிறை விட்டாலும், இராமன் உன்னை கொல்லாமல் விடமாட்டான் என்று யாரும் சொல்லவில்லை. 


பின் அவதார நோக்கம் என்ன ஆயிற்று?  


அவதார நோக்கம் என்பது சீதையை சிறை மீட்பதாக முடிந்து இருக்கும். 


நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்....