Saturday, February 10, 2024

அறநெறிச்சாரம் - அறநூல்களின் தன்மை

 அறநெறிச்சாரம் - அறநூல்களின் தன்மை 

https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_10.html

எவ்வளவோ புத்தகங்கள் இருக்கின்றன. மேலும் மேலும் வந்து கொண்டே இருக்கின்றன. இதில் எதைப் படிப்பது, எதை விடுவது என்று குழப்பமாக இருக்கும். ஒரு நல்ல புத்தகத்தை எப்படி தேர்ந்து எடுப்பது? 


ஒரு நல்ல அற நூல் எதைச் சொல்லும் என்று பட்டியல் இடுகிறது அறநெறிச்சாரம். 


பாடல்  


மெய்மை பொறையுடைமை மேன்மை தவம் அடக்கம்

செம்மை ஒன்று இன்மை துறவுடைமை - நன்மை

திறம்பா விரதம் தரித்தலோடு இன்ன

அறம் பத்தும் ஆன்ற குணம்


பொருள் 


மெய்மை = உண்மையைப் பற்றி சொல்ல வேண்டும் 


பொறையுடைமை = பொறுமை பற்றி போதிக்க வேண்டும் 


மேன்மை =  பெருமை, புகழ் இவற்றைத் தருவதாக இருக்க வேண்டும் 


தவம் = தவத்திற்கு துணை செய்ய வேண்டும் 


அடக்கம் = புலன் அடக்கம் பற்றி சொல்ல வேண்டும் 


செம்மை = சிறப்பான வாழ்க்கை பற்றி போதிக்க வேண்டும் 


ஒன்று இன்மை = தன்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல் இருப்பதின் பெருமை பேச வேண்டும் 


துறவுடைமை  = துறவின் நன்மைகளைச் சொல்ல வேண்டும் 


நன்மை = நல்லது செய்வதைப் பற்றிச் சொல்ல வேண்டும் 


திறம்பா விரதம் தரித்தலோடு = மாறுபாடு இல்லாத, தவறாத விரதம் மேற் கொள்வதைப் பற்றி விளக்க வேண்டும் 


இன்ன அறம் பத்தும் ஆன்ற குணம் = இந்த பத்து குணங்களும் நல்ல அறத்துக்கு எடுத்துக் காட்டு. 


ஒரு நல்ல புத்தகம் என்றால் இவற்றைப் பற்றி பேச வேண்டும், எடுத்துச் சொல்ல வேண்டும். 


இருக்கின்ற கொஞ்ச நாளை நல்ல புத்தகங்களை வாசிப்பதில் செலவு செய்வோம். 




Wednesday, February 7, 2024

திருக்குறள் - இடம் இல்லை

 திருக்குறள் - இடம் இல்லை 


அருள் இல்லாமல் வாழ்ந்தால் என்ன ஆகும்?  அரசாங்கம் பிடித்து சிறையில் போட்டு விடுமா? அப்படி வாழ வேண்டும் என்பது என்ன சட்டமா? சட்டம் இல்லை என்றால் எதற்கு இவ்வளவு மெனக்கெட வேண்டும்?


அருள் இல்லாமல் வாழ்ந்தால் யாரும் தண்டிக்க மாட்டார்கள். தாரளமாக அப்படி வாழலாம். சிக்கல் என்ன என்றால், வீட்டுலகத்து இன்பம் கிடைக்காது. அதாவது சுவர்க்கம் என்று சொல்கிறோமே, அந்த சொர்கத்தின் அனுபவம் கிடைக்காது. 


சொர்க்கம் என்பது உயர்ந்தபட்ச இன்ப அனுபவம். அது கிடைக்காமல் போய் விடும். 


பாடல் 



அருள்இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இலார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு


பொருள் 


அருள்இல்லார்க்கு = அருள் இல்லாமல் வாழ்பவர்களுக்கு 


அவ்வுலகம் இல்லை= சுவர்க்கம் கிடையாது 


பொருள்இலார்க்கு = பொருள் இல்லாதவர்களுக்கு 


இவ்வுலகம் = இந்த பூ உலகம் 


இல்லாகி யாங்கு = எப்படி இல்லையோ, அது போல. 


பொருள் இல்லாதவர்கள் இந்த உலகில் இருக்கத்தானே செய்கிறார்கள். ஏழைகள் இருக்கிறார்களே. அது எப்படி, பொருள் இல்லாதவற்கு இவ்வுலகம் இல்லை என்று சொல்லலாம்? என்று கேட்டால், அதற்கு பரிமேலழகர் விளக்கம் தருகிறார். 


அவ்வுலகு, இவ்வுலகு என்பதெல்லாம் ஆகு பெயர். 


உலகு என்பது உலகில் உள்ள இன்பங்களுக்கு ஆகி வந்தது. 


அதாவது, பொருள் இல்லாதவர்களுக்கு இந்த உலகில் உள்ள இன்பங்கள் கிடைக்காதது போல, அருள் இல்லாதவர்களுக்கு அந்த உலகின் இன்பம் கிடைக்காது. 


சொர்கத்துக்கு ஒரு வேளை போனால் கூட, அங்குள்ள இன்பங்களை அனுபவிக்க முடியாது என்கிறார். 


அருள் இருந்து, பொருள் இல்லாவிட்டால், இந்த உலக இன்பம் கிடைக்காமல் போகலாம். 


பொருள் இருந்து, அருள் இல்லாவிட்டால், அந்த உலக இன்பங்கள் கிடைக்காது. 


                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        `


கம்ப இராமாயணம் - தேவரையும் தெறும் ஆற்றல்

 கம்ப இராமாயணம் -  தேவரையும் தெறும் ஆற்றல்


இலக்குவனால் தண்டிக்கப்பட்ட சூர்பனகையின் புலம்பல் தொடர்கிறது. 


"தேவர்களையும் ஆட்டிப் படைக்கும் இராவணனுக்கும், அவன் தம்பிகளுக்கும் இந்த ஊண் உடம்பைக் கொண்ட மானிடர்களைக் கண்டு வலி குன்றிப் போனதென்ன" என்று புலம்புக்கிறாள். 


பாடல் 


தேனுடைய நறுந் தெரியல்

     தேவரையும் தெறும் ஆற்றல்

தான் உடைய இராவணற்கும், தம்பி

     யர்க்கும், தவிர்ந்ததோ?

ஊனுடைய உடம்பினர் ஆய், எம்

     குலத்தோர்க்கு உணவு ஆய

மானுடவர் மருங்கே புக்கு

     ஒடுங்கினதோ வலி? அம்மா!`


பொருள் 


தேனுடைய = தேன் வடியும் 


நறுந் = நல்ல, அழகிய 


 தெரியல் = பூ மாலை (அணிந்த)  


தேவரையும் = தேவர்களையும் 


 தெறும் ஆற்றல் =  வெற்றி பெறும் வலிமை  


தான் உடைய  = உடைய 


இராவணற்கும் = இராவணனுக்கும் 


தம்பியர்க்கும் = அவனுடைய தம்பியற்கும் 


தவிர்ந்ததோ? = அந்த வலிமை நீங்கிப் போய் விட்டதா? 


ஊனுடைய உடம்பினர் ஆய் = மாமிசத்தை உடைய உடலைக் கொண்ட 


எம் குலத்தோர்க்கு உணவு ஆய = எம் குல அரக்கர்களுக்கு உணவாகும் 


மானுடவர் = மனிதர்கள் 

 

மருங்கே புக்கு = உடலிடம் சென்று 


 ஒடுங்கினதோ வலி? அம்மா! = ஒடுங்கி விட்டதா அந்த வலிமை எல்லாம் 




Monday, February 5, 2024

திருக்குறள் - மறந்து போச்சு.

 திருக்குறள் - மறந்து போச்சு.


உயிர்கள் மேல் அன்பு செய்தால், அவை நம்மிடம் அன்பு செய்யும்.  புரிந்து கொள்ள இது மிக எளிதான ஒன்று. இரண்டு அன்பு கொண்ட நெஞ்சங்களுக்கு இடையே பகை இருக்காது, ஒருவரை ஒருவர் துன்பம் செய்யும் எண்ணம் இருக்காது, எப்போதும் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். 


இது தெரிந்தும் கூட ஏன் மக்கள் உயிர்கள் மேல் அன்பு செலுத்தாமல் வெறுப்பு கொள்கிறார்கள்?


அவன் வேறு மதம், அவன் வேறு இனம், பணக்காரன், ஏழை, படித்தவன், முட்டாள், அழகானவன், அழகு இல்லாதவன் என்று வேறுபாடு கொண்டு, வெறுப்பை வளர்த்துக் கொண்டு ஒருவர் மேல் ஒருவர் பகைமை பாராட்டுவது ஏன்?  


விலங்குகளை வேட்டையாடுகிறார்கள். ஏழைகளை, பாமர மக்களை துன்புறுத்துகிறார்கள், மெலியாரை வலியார் வதைக்கிறார்கள். ஏன் இவ்வாறு நிகழ்கிறது?


வள்ளுவர் அதற்கு விடை தருகிறார். அந்த விடையில் நமக்கும் ஒரு வழி இருக்கிறது. 


பாடல் 

 


பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி

அல்லவை செய்துஒழுகு வார்


பொருள் 


பொருள்நீங்கிப் = பொருளை விட்டு நீங்கி 


பொச்சாந்தார் = மறந்து விட்டார் 


என்பர் = என்று கூறுவார்கள் 


அருள்நீங்கி = அருளை விட்டு நீங்கி 


அல்லவை = அது அல்லாத காரியங்களை 


செய்துஒழுகு வார் = செய்து வாழ்பவர்கள். 


என்ன இது பொருள், அருள் னு ஒண்ணும் புரியலையே.


பொருள் நீங்கி என்றால் பொருளை விட்டு நீங்கி என்று அர்த்தம். சரி, அது என்ன பொருள்?  வீடு, வாசல், நிலம், புலம் என்ற பொருளா என்றால் இல்லை. மிக உயர்ந்த பொருள், நிரந்தரமான பொருள், உறுதியான பொருள் எது என்றால் அறம் தான் சிறந்த பொருள். அழியாத பொருள். என்றும் நிலைத்து நிற்கும் பொருள். 


அந்த அறத்தில் இருந்து நீங்கி.


"பொச்சாந்தார் என்பர்". மறந்து விட்டார்கள் என்று சொல்லுவார்கள் பெரியவர்கள். 


மக்கள் ஏன் அற வழியில் நிற்க மாட்டேன் என்கிறார்கள் என்றால், அறம் அல்லாத வழியில் சென்று பட்ட துன்பங்களை மக்கள் மறந்து விடுகிறார்கள். எனவே அறம் அல்லாத வழியில் செல்கிறார்கள் என்கிறார். 


தீயில் விரலை வைக்கிறோம். சுடுகிறது. மீண்டும் வைப்போமா? மாட்டோம் என்றால் ஒரு முறை சுட்டது நினைவில் நிற்கும். 


ஆனால், அறம் தவறி நடந்ததன் மூலம் வந்த துன்பம் மறந்து போய் விடுகிறது. மீண்டும் அதே வழியில் மக்கள் செல்கிறார்கள். 


ஒவ்வொரு முறை துன்பம் வரும் போதும், அந்தத் துன்பம் ஏன் வருகிறது என்று யோசிக்க வேண்டும்.  எங்கோ தவறு செய்திருக்கிறோம் என்று தெரிய வேண்டும். மீண்டும் தவறு செய்யாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.  


இதெல்லாம் பரிமேலழகர் இல்லாவிட்டால் புரிவது கடினம். 


தவறு செய்ய நினைக்கும் போதே, முன் பட்ட துன்பங்கள் நினைவு வந்தால், தவறு செய்வோமா?  




Sunday, February 4, 2024

கம்ப இராமாயணம் - மானிடரைச் சீறுதியோ

கம்ப இராமாயணம் - மானிடரைச் சீறுதியோ 

https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_4.html

இலக்குவனால் தண்டிக்கப்பட்ட சூர்பனகை, தன் அண்ணன் இராவணனை நினைத்துப் புலம்புகிறாள். 


புலம்பலில் கூட இவ்வளவு கவி நயமா என்று வியக்க வைக்கும் கவிதைகள். 


இன்று வரும் திரைப் படங்களில் கதா நாயகனை முதன் முதலில் காட்டும் போது, அவர் காலைக் காட்டுவார்கள், அவர் நடந்து வரும் போது அவர் போட்டிருக்கும் காலணியில் இருந்து தீப் பொறி பறக்கும். 


நாம் ஆகா என்று வியப்போம். 


இதெல்லாம் கம்பன் அன்றே காட்டிவிட்டான். 


இராவணன் நடந்து வந்தால், அவன் கால் உரசி தரையில் இருந்து தீப் பொறி பறக்குமாம். 


இராவணன் இன்னும் காப்பியத்துகுள் வரவில்லை. அதற்கு முன்பே கம்பன் கட்டியம் கூறுகிறான். 


பொடி என்ற ஒரு வாரத்தையை எடுத்துக் கொள்கிறான். 


"உருவம் பொடியான (சாம்பலான) மன்மதனை ஒத்து இருக்கும் இந்த மானிடர்களை நீ கோபித்து சீற்றம் கொள்ள மாட்டாயா?  நீ யார்? எவ்வளவு பெரிய ஆள்! இந்த மானிடர்கள் உன் செருப்பில் இருந்து பறக்கும் ஒரு மண் தூசிக்கு சமம் ஆவார்களா?  நீ நடந்து வந்தால் உன் காலடியில் நெருப்பு சிதறுமே. மதம் கொண்ட அட்ட திக்கு யானைகளோடு சண்டை போட்டு, அவற்றின் தந்தங்களை முறித்தவன் அல்லவா நீ. அது மட்டுமா? சிவன் உறையும் அந்த கைலாய மலையையே தூக்க முயன்றவன் அல்லவா நீ. அப்பேற்பட்ட நீ, இந்த மானிடர்களை ஒரு கை பார்க்க மாட்டாயா?" 


என்று சூர்பனகை புலம்புகிறாள். 


பாடல்  



'உருப் பொடியா மன்மதனை

     ஒத்துளரே ஆயினும், உன்

செருப்பு அடியின் பொடி ஒவ்வா

     மானிடரைச் சீறுதியோ?

நெருப்பு அடியில் பொடி சிதற, நிறைந்த

     மதத் திசை யானை

மருப்பு ஒடிய, பொருப்பு இடிய,

     தோள் நிமிர்த்த வலியோனே!


பொருள் 


'உருப் = உருவம் 

பொடியா = பொடியான (சாம்பலான) 

மன்மதனை = மன்மதனை 

ஒத்துளரே ஆயினும் = போல இருந்தாலும் 

உன் = உனது (இராவணனது) 

செருப்பு அடியின் = செருப்பின் கீழ் உள்ள 


பொடி = தூசிக்கு 

ஒவ்வா = இணையாக மாட்டாத


 மானிடரைச் = மனிதர்களைச் (இராம இலக்குவனர்களை) 


 சீறுதியோ? = அவர்கள் மேல் சீற்றம் கொள்ள மாட்டாயா ?


நெருப்பு அடியில் பொடி சிதற = உன் காலடியில் நெருப்பு பொறி பறக்க 


நிறைந்த மதத் = பெரிய மதம் பிடித்த


திசை யானை = அட்ட திக்கு யானைகளின் 


மருப்பு ஒடிய = தந்தம் ஓடிய 


பொருப்பு இடிய = மலை இடிபட 


தோள் நிமிர்த்த = தோள்களை நிமிர்த்து நின்ற 


வலியோனே! = வலிமையாணவனே 



உருப் பொடி

செருப்பு அடியின் பொடி

நெருப்பு அடியில் பொடி

மருப்பு ஒடிய, 

பொருப்பு இடிய,


கம்பனிடம் சொற்கள் கை கட்டி நின்று சேவகம் செய்கின்றன. 


பெரியவர்களின் தரம் தெரியாமல் இருப்பது அரக்கர்களின் குணம். 


முருகனை பாலன் என்று எண்ணி அழிந்தான் சூரன். 


கண்ணனை இடையன் என்று எண்ணி அழிந்தான் கம்சன். 


இராமனை மானிடன் என்று எண்ணி அழிந்தான் இராவணன். 


தரம் தெரியாததால் வந்த அழிவு. 



Friday, February 2, 2024

திருக்குறள் - இதுவே சாட்சி

 திருக்குறள் -  இதுவே சாட்சி 


https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_2.html


மனதில் அருள் இருந்தால் தன் உயிர் அஞ்சும் வினை வராது என்றார் வள்ளுவர். அவர் சொன்னால் போதுமா? நமக்கு ஒரு நிரூபணம் வேண்டாமா?  சொன்னால் அப்படியே ஏற்றுக் கொள்வது என்பது என் மரபில் கிடையாது. எதையும், சான்றுகளோடு, வாத பிரதிவாதம் செய்துதான் ஏற்றுக் கொள்வது நம் மரபு.


வள்ளுவர் சொல்கிறார் 


"மனதில் அருள் உள்ளவர்களுக்கு ஒரு துன்பமும் வராது என்பதற்கு இந்த உலகமே சான்று"  


என்று. 


அது எப்படி இந்த உலகம் சான்றாகும்? குழப்பமாக இருக்கிறதே.


பாடல் 


அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கு

மல்லல்மா ஞாலம் கரி.


பொருள் 


அல்லல் = துன்பம் 


அருளாள்வார்க்கு = மனதில் அருள் உள்ளவர்களுக்கு 


இல்லை  = இல்லை 


வளி வழங்கு = காற்றை வழங்குகின்ற 


மல்லல் = வளம் நிறைந்த 


மா = பெரிய 


ஞாலம் = இந்த உலகே 


கரி = சான்று .


உலகம் சான்று என்றால், உலகில் உள்ளவர்கள் சான்று. ஊரே பாராட்டுகிறது என்றால் ஊரில் உள்ளவர்கள் பாராட்டுகிறார்கள் என்று அர்த்தம். 


இந்த உலகில் அருள் உள்ளவர்களைப் பார்த்தால் தெரியும், அவர்கள் மனதில் ஒரு சாந்தம், அமைதி, பொறுமை, எல்லாம் இருக்கும். எல்லோரும் அவர்களிடம் சென்று ஆசி பெறுவார்கள், அவர்கள் சொல்வதைக் கேட்பார்கள், அவர்களை வணங்குவார்கள். அவர்களுக்கு ஒரு துன்பமும் இருக்காது. 


அருள் உள்ள மகான்கள், துறவிகளை துன்பம் பற்றாது. 


எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தும் ஒருவனை யார் துன்புறுத்தப் போகிறார்கள்? ஒருவரும் செய்ய மாட்டார்கள் என்பதால், அவர்களுக்கு துன்பம் இல்லை. 





Thursday, February 1, 2024

அறநெறிச்சாரம் - அச்சு இறும் காலத்து

 அறநெறிச்சாரம் - அச்சு இறும் காலத்து 


மிக வயதானவர்களைப் பார்த்தால் தெரியும். படுக்கையில் இருந்து எழுவது கூட அவர்களுக்கு பெரிய வேலையாகத் தெரியும். எழுந்து நாலடி எடுத்து வைப்பதற்குள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கும். மற்றவர்கள் சொல்வது எதுவும் காதில் விழாது. படிப்பு என்பது சுத்தமாக இருக்காது.யார் என்ன சொன்னாலும் மிகச் சீக்கிரம் மறந்து விடும்....பார்க்கவே பரிதாபமாக இருக்கும். 


அந்த நேரத்தில் தேவாரம் படி, திருவாசகம் படி என்றால் நாக்கு குழறும், மனம் நிற்காது, உடல் எல்லாம் சோர்ந்து போய் இருக்கும். 


எப்படா போய்ச் சேருவோம் என்று இருக்கும். 



நமக்கும் அப்படி ஒரு நாள் கட்டாயம் வரும். அதில் இருந்து தப்ப முடியாது. 


நல்ல காரியங்களை பின்னால் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தால், இதுதான் நிகழும். செய்யலாம் என்று நினைக்கும் போது உடல் ஒத்துழைக்காது. 


நாடி, நரம்பு எல்லாம் தளர்ந்த பின், அதை எடுத்து ஒட்டவைத்து ஓடவைத்து விடலாம் என்றால் நடக்காது. 


எனவே, உடல் நல்ல நிலையில் இருக்கும் போதே நல்ல காரியங்களை செய்து விட வேண்டும். 


பாடல் 



அறம் புரிந்து ஆற்றுவ செய்யாது நாளும்

உறங்குதல் காரணம் என்னை - மறந்து ஒருவன்

ஆட்டு விடக்கு ஊர்தி அச்சு இறும் காலத்துக்

கூட்டும் திறம் இன்மையால்


பொருள் 

அறம் புரிந்து  = அறச் செயல்களைச் செய்து 


ஆற்றுவ = செய்ய வேண்டிய நல்ல காரியங்களை ஒழுங்கான முறையில் 


செய்யாது = செய்யாமல் 


நாளும் = ஒவ்வொரு நாளும் 


உறங்குதல் = தள்ளிப் போட்டுக் கொண்டே போவதன் 


காரணம் என்னை  = காரணம் என்ன?


மறந்து  = செய்ய வேண்டிய செயல்களை மறந்து 


ஒருவன் = பிரமன்  


நாட்டு =  படைத்த 


விடக்கு = இறைச்சியால் செய்யப்பட்ட 


ஊர்தி = வண்டி 


அச்சு இறும் காலத்துக் = அச்சு முறிந்து போன காலத்தில் 


கூட்டும் = அதை மீண்டும் சரி செய்யும் 


திறம் இன்மையால் = திறமை இல்லாது இருத்தல் 


வயதாகி உடல் தளர்ந்து விட்டால், பின் என்ன செய்தாலும் அது சரியாகாது. 


நல்ல விடயங்களை இளமையில் படித்தால், அதன் படி நடக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் நன்மை வரும். 


பின்னால் படித்து, தெரிந்து, அதன் படி நடக்கலாம் என்றால் ஒன்றும் நடவாது. 


முதுமை கண்டு அச்சம் வேண்டும்.