Wednesday, February 28, 2024

கம்ப இராமாயணம் - முகம் காட்ட வல்லேனோ ?

 கம்ப இராமாயணம் - முகம் காட்ட வல்லேனோ ?

https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_28.html



இயற்கையாகவே பெண்கள் அழகானவர்கள். அவர்கள் அழகாக இருக்க வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துபவர்கள். உடை, ஒப்பனை என்று அனைத்து விதத்திலும் தாங்கள் அழகானவர்கள் என்று காட்டிக் கொள்ள விரும்புவார்கள். அழகுணர்ச்சி அவர்களிடம் இயற்கையிலேயே அமைந்து கிடக்கிறது. 


தங்கள் அழகு மட்டும் அல்ல, அவர்கள் இருக்கும் இடம், வீடு, சமையல் அறை எல்லாமே ஒரு அழகோடு, நேர்த்தியோடு இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். 


ஒரு பெண்ணால் சகிக்க முடியாத ஒன்று அவளின் அழகை இழப்பதுதான். ஆரோக்கியம் குறைந்தால் கூட கொஞ்சம் குறைவாகத்தான் கவலைப்படுவார்கள். அழகு குறைவது பெரிய குறை.

 

சாதாரண நாட்களை விட வீட்டில் ஒரு விசேடம் என்றால் கேட்கவே வேண்டாம். புதுத் துணி, அழகு நிலையத்துக்குப்  போய் தங்களை மேலும் அழகு படுத்திக் கொள்வது, நகைகளை மெருகேற்றிக் கொள்வது, என்று அதிகப்படியான சிரமம் எடுத்துக் கொள்வார்கள். 



நம் வீட்டு பெண்மணிகள் நிலை இது என்றால், சூர்பனகை நிலை எப்படி இருக்கும். 


இராவணனின் அவை எப்படி இருக்கும்?


தேவாதி தேவர்கள் எல்லாம் வந்து அவன் முன் கை கட்டி நிற்பார்கள். தேவ லோகப் பெண்கள் பல்லாண்டு பாடுவார்கள். ஏழேழு உலகமும் அவனை துதித்து நிற்கும். அப்பேற்பட்ட சபையில் அவள் சென்றால் அவளுக்கு எவ்வளவு மதிப்பு இருக்கும். 


ஆனால், இன்று அவள் மூக்கும், காதும், முலையும் அறுபட்டு இருக்கிறாள். இப்படிப்பட்ட நிலையில் அந்த சபைக்கு அவள் போனால் எப்படி இருக்கும்? அவளைப் பார்த்து எல்லோரும் சிரிக்க மாட்டார்களா? அவளால் அங்கு போக முடியுமா? 


பாடல் 



'இந்திரனும், மலர் அயனும்,

     இமையவரும், பணி கேட்ப,

சுந்தரி பல்லாண்டு இசைப்ப, உலகு

     ஏழும் தொழுது ஏத்த,

சந்திரன்போல் தனிக் குடைக்கீழ்

     நீ இருக்கும் சவை நடுவே

வந்து, அடியேன் நாணாது,

     முகம் காட்ட வல்லேனோ?


பொருள் 


'இந்திரனும் = தேவர்களின் தலைவனான இந்திரனும் 


மலர் அயனும் = தாமரை மலர் மேல் இருக்கும் பிரமனும் 


இமையவரும் = கண் இமைக்காத மற்ற தேவர்களும் 


பணி கேட்ப = இராவணன் இட்ட கட்டளையை கேட்டு நடக்க 


சுந்தரி = தேவ லோகப் பெண்கள் 


பல்லாண்டு இசைப்ப= பல்லாண்டு பாடல் பாட 


உலகு ஏழும் = ஏழு உலகும் 


தொழுது ஏத்த = பணிந்து தொழ 


சந்திரன்போல் = நிலவைப் போன்ற வெண்மையான 


தனிக் குடைக்கீழ் = தனிச் சிறப்பு வாய்ந்த குடையின் கீழ் 



நீ = இராவணனாகிய நீ 


இருக்கும் சவை நடுவே = வீற்றிற்கும் சபையின் நடுவே 


வந்து = வந்து 


அடியேன் = சூற்பனகையான நான் 


நாணாது = நாணம் இல்லாமல் 


முகம் காட்ட வல்லேனோ? = முகத்தையாவது காட்ட முடியுமா? (முடியாது) 


அவளால் அந்த அவமானத்தை தாங்க முடியவில்லை. உறுப்பு அறுந்த வலி கூட பெரிதாகத் தெரியவில்லை. தன் அழகு போய் விட்டதே. வெளியே தலை காட்ட முடியாமல் போய் விட்டதே என்று வருந்துகிறாள். 


ஒரு பெண்ணின் அவல நிலையை கம்பன் அவ்வளவு துல்லியமாக படம் பிடிக்கிறான். 


Saturday, February 24, 2024

திருக்குறள் - தன் உடலை வளர்ப்பதற்கு

 திருக்குறள் - தன் உடலை வளர்ப்பதற்கு 


இந்த உடல் அழியும் தன்மை உடையது. என்ன செய்தாலும், ஒரு நாள் அழிந்தே தீரும். இப்படி அழியும் உடலை பாதுகாக்க வேண்டி இன்னொரு உயிரைக் கொன்று அதன் மாமிசத்தை உண்டால், உயிர்க்  கொலை  செய்த பாவம் வரும். அந்தப் பாவம் பிறவி தோறும் தொடரும். இப்படி ஒரு பிறவியில் அழியும் உடலை வளர்க வேண்டி செய்த பாவம் அழியாமல் நின்று பிறவி தோறும் தொடரும் என்றால், அதைச் செய்யலாமா? 


அப்படி தன் சுய தேவைக்காக இன்னொரு உயிரைக் கொன்று தின்பவன் மனதில் அருள் எங்கே இருக்கும் ? அருள் இல்லாதவன் வீடு பேறு அடைவது எங்கனம்?


பாடல் 


தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்


பொருள் 


தன்ஊன் = தன் உடலில் உள்ள மாமிசத்தைப் 


பெருக்கற்குத் = வளர்ப்பதற்கு 


தான் = ஒருவன் 


பிறிது = பிற உயிரின் 


ஊன்உண்பான் = மாமிசத்தை தின்பான் என்றால் 


எங்ஙனம் ஆளும் அருள் = அவன் எப்படி அருள் வழியில் நிற்க முடியும்? 


இன்றைய நவீன சிந்தனையாளர்கள் "ஆஹா...உயிரைக் கொல்லக் கூடாதா? சரி, அப்படி என்றால் தாவரங்களும் உயிர்கள்தானே, அதை மட்டும் கொல்லலாமா? " என்று வாதிக்கக் கூடும். 


தாவரங்களால் நகர முடியாது. ஒரு மரமோ செடியோ இன விருத்தி செய்ய வேண்டும் என்றால் அதன் விதைகள் நீண்ட தூரம் செல்ல வேண்டும். எல்லா விதையும் ஒரே இடத்தில் விழுந்தால் ஓரிரண்டு முளைக்கலாம். எல்லாம் முளைக்காது.  பின் எப்படி விதைகளைப் பரப்புவது?


உண்மைதான். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளல் பெருமான். அது அருளின் உச்சம். 


வள்ளலார் ஒரு நாள் கடற்கரையில் சென்று கொண்டிருந்தார். அங்கே மீன் பிடிக்கும் வலைகளை காய வைத்து இருந்தார்கள். அதைப் பார்த்து, பதறிப் போய், அதை கொலைக் கருவி என்றார். எத்தனை மீன்களை அது கொல்கிறது. மீன் வலையைப் பார்த்தால் கொலைக் கருவி என்று நமக்குத் தோன்றுமா?


நம் பழைய இலக்கியங்களில் பார்த்தால் தெரியும், முனிவர்கள், கானகத்தில் மரங்கள் உதிர்த்த, காய்ந்த சருகுகளை உண்டு உயிர் வாழ்ந்தார்கள். இலையைக் கூடப் பறிக்கக் கூடாது. அதுவும் ஒரு உயிர் தான் என்பது அவர்கள் எண்ணம். 


பாரதத்தில், அர்ச்சுனன் தவம் மேற்கொள்கிறான். வெறும் சருகை மட்டும் உண்டு தவம் செய்தான் என்பார் வில்லிபுத்துரார். 


பருகு நீர் துறந்து, காற்றும் வெவ் வெயிலும்

                           பாதபங்களின் சினை உதிர்ந்த

சருகுமே ஒழிய, காய் கனி கிழங்கும் தான் இனிது

                                  அருந்துதல் தவிர்ந்தான்

உருகு மா மனத்தை நாம் உவந்து இருத்தற்கு உறைபதி

                                  ஆக்கி, நம்மிடத்தே

செருகினான், உணர்வை; யாவரே, இவன்போல் செய் தவம்

                                  சிறந்தவர்?' என்றான்.



தாவரங்கள் தங்கள் விதைகளை காய்களிலும், கனிகளிலும் புதைத்து வைக்கின்றன. அதை உண்ணும் விலங்குகளும், மனிதர்களும், அந்த விதைகளை அவர்கள் வசிக்கும் இடங்களில் விழச் செய்கிறார்கள். 


உதாரணமாக, சேலத்தில் ஒரு மாமரம் இருக்கிறது. மாம்பழம் இனிமையாக இருப்பதால், அந்த மரத்தின் பழத்தை பறித்து சென்னை , டெல்லி போன்ற இடங்களுக்கு அனுப்புகிறார்கள். அங்கே உள்ள மக்கள் அந்தப் பழத்தை உண்டு, அதன் விதையை குப்பையில் போட்டு விடுகிறார்கள். அது அங்கே முளைக்கும். மாம்பழத்தை மனிதர்கள் உண்பது இல்லை என்று வைத்து விட்டால், சேலத்தில் உள்ள விதை மும்பைக்கும், டெல்லிக்கும் எப்படி போகும். தங்கள் விதைகளை கொண்டு செல்ல விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் தாவரங்கள் தரும் கூலி அந்த காய்களும், கனிகளும். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


தொலைக்காட்சியில் இந்த மாமிச உணவை தயாரிக்கும் தொழிற்சாலைகள் பற்றி நிறைய செய்திப் படங்கள் இருக்கின்றன. அதில், விலங்குகளை எப்படி கொன்று, அதன் மாமிசத்தை எடுத்து டப்பாவில் அடைகிறார்கள் என்று காட்டுவார்கள். 


சிறு சிறு கோழிக் குஞ்சுகளில் இருந்து, பெரிய திமிங்கலம் வரை, கொஞ்சம் கூடஒரு முக சுளிப்பு இல்லமால், மனதில் உறுத்தல் இல்லாமல், கொன்று தள்ளுகிறார்கள். இரத்தம் பீரிட்டு அடிக்கிறது. அதைப் பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப் படுவது இல்லை. அப்படி ஒரு சிறு உறுத்தல் கூட இல்லாமல் உயிர்களை கொல்பவர்கள் மனதில் அருள் எப்படி இருக்கும் என்று வள்ளுவர் கேட்கிறார். 




Friday, February 23, 2024

கந்தர் அநுபூதி - கமழும் கழல்

கந்தர் அநுபூதி - கமழும் கழல் 


கிடைக்கவே கிடைக்காது, கிடைப்பது ரொம்பக் கடினம், என்று நாம் ஒன்றை நினைத்துக் கொண்டிருப்போம். அது நாம் எதிர்பாராத நேரத்தில் கிடைத்து விட்டால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்?  


இது எப்படி நமக்கு கிடைத்தது என்று வியந்து போவோம் அல்லவா?  இது உண்மைதானா, என்ற சந்தேகம் ஒருபுறம் வரும். இன்னொருபுறம் மிகுந்த மகிழ்ச்சி. 


அது போல அருணகிரிநாதர் இருக்கிறார். 


முருகனின் திருவடியில் சரணம் அடையும் பேறு தனக்கு எப்படி கிடைத்தது என்று விளங்காமல் தவிக்கிறார். அதை நான் எப்படிச் சொல்லுவேன் என்று திகைக்கிறார். 


அப்படி என்ன முருகன் திருவடியில் சிறப்பு?


அவரே சொல்கிறார் 


"வீடு பேற்றைத் தரும் திருவடி. தேவர்களின் தலை மேல் இருக்கும் திருவடி. வேதத்தில் படிந்து கிடக்கும் திருவடி. வள்ளியைத் தேடி தினைப்புனம் உள்ள காட்டில் பதிந்த திருவடி. இங்கெல்லாம் அவன் திருவடி பட்டு, அவை எல்லாம் மணம் வீசுகிறதாம்."


பாடல் 



சாடும் தனிவேல் முருகன் சரணம் 

சூடும் படிதந்தது சொல்லு மதோ 

வீடும் சுரர்மாமுடி வேதமும் வெங் 

காடும் புனமும் கமழுங் கழலே . 


பொருள் 


சாடும் = போர் புரியும் 

தனி = தனித்துவமான 


வேல் = வேல் 


முருகன் = முருகன் 


சரணம்  = சரண் அடையும்படி 


சூடும் படிதந்தது = அந்தத் திருவடிகளைத் தலையில் சூடிக் கொள்ளத் தந்தது 


சொல்லு மதோ  = எப்படி என்று சொல்ல முடியுமா? 


வீடும் = சுவர்க்கத்திலும் 


சுரர்மாமுடி = தேவர்களின் தலையிலும் 


வேதமும் = வேதத்திலும் 


வெங் காடும் = வெம்மையான காட்டிலும் 


புனமும் = அந்தக் காட்டில் உள்ள திணை புனம் உள்ள இடத்திலும் 


 கமழுங் கழலே = மணம் வீசும் திருவடிகளே 


கம்ப இராமாயணம் - அரியோ, அரனோ, அயனோ ?

கம்ப இராமாயணம் - அரியோ, அரனோ, அயனோ ?


இலக்குவனால் உறுப்புகள் சேதிக்கப்பட்ட சூர்பனகை, தன் தமையான கரனை நினைத்து புலம்புகிறாள். 


"இந்த மானிடர்கள் என்னை இந்த மாதிரி தண்டித்து விட்டார்கள். இதற்கு காரணம் என்னவாக இருக்கும்?  இந்தக் காட்டில் மறைந்து, தவம் செய்யும் முனிவர்களின் தவ வலிமையா? அரக்கர்களின் வலிமை குறைந்து போனதோ? எதிரில் நிற்கும் இவர்கள் பிரமனா, திருமாலா, சிவனா ? அவர்களுக்கு இணையான வலிமை படைத்த கரனே, என் நிலைமை காணாயோ?"


பாடல் 


 'மரன் ஏயும் நெடுங் கானில்

     மறைந்து உறையும் தாபதர்கள்

உரனேயோ? அடல் அரக்கர் ஓய்வேயோ?

     உற்று எதிர்ந்தார்,

"அரனேயோ? அரியேயோ? அயனேயோ?"

     எனும் ஆற்றல்

கரனேயோ! யான் பட்ட

     கையறவு காணாயோ?


பொருள் 


 'மரன் ஏயும் = மரங்கள் அடர்ந்த 


 நெடுங் கானில் = இந்தப் பெரிய கானகத்தில் 


 மறைந்து = மறைந்து 


உறையும் = வாழும் 


தாபதர்கள் = தவம் செய்யும் முனிவர்களின் 


உரனேயோ? = தவ வலிமையா? 


அடல் = சண்டை செய்யும் 


 அரக்கர் = அரக்கர்களின் 


 ஓய்வேயோ? = வலிமை குன்றியதோ ?


உற்று எதிர்ந்தார் = எதிர்த்து நிற்பவர்  


"அரனேயோ? = சிவனோ ?


அரியேயோ?  = திருமாலோ?


அயனேயோ?" = பிரமனோ?


எனும் ஆற்றல் = என்று சொல்லும்படி ஆற்றல் கொண்ட 


கரனேயோ! = கரனே 


யான் பட்ட = நான் பட்ட 


 கையறவு காணாயோ? = துன்பத்தைக் காண மாட்டாயா?




Thursday, February 22, 2024

திருக்குறள் - புலால் மறுத்தல் - ஒரு முன்னோட்டம்

 திருக்குறள் - புலால் மறுத்தல் - ஒரு முன்னோட்டம் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_22.html


மாமிசம் உண்ணலாமா? கூடாதா ? என்ற சர்ச்சை இன்று வரை தொடர்கிறது. இரண்டு பக்கமும் அழுத்தமான காரணங்கள் இருக்கின்றன. 


வள்ளுவர் புலால் உணவை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் அது சரி தவறு என்ற வாதத்துக்குள் போகவில்லை. 


வாழ்வின் நோக்கம் என்ன?  


வீடு பேறு அடைவது. 


அதற்கு வழி என்ன?


இல்லறம் - துறவறம். 


துறவறத்துக்கு இன்றியையாத ஒன்று - அருள். 


பிற உயிர்களை கொன்று தின்றால், மனதில் அருள் இல்லாமல் போகும். அருள் இல்லை என்றால் துறவு இல்லை. துறவு இல்லை என்றால் வீடுபேறு இல்லை. 


எனவே, புலாலை மறுக்கச் சொல்கிறார். 


புலால் உண்பவர்கள் சொல்லும் ஒரு தர்க்கம் இருக்கிறது. 


"...நான் அந்த ஆட்டை மாட்டை கொல்லவில்லை. யாரோ, ஏற்கனவே கொன்று அதன் மாமிசத்தை கடையில் வைத்து இருக்கிறான். நான் வாங்கவிட்டாலும், யாராவது அதை வாங்கி உண்ணத்தான் போகிறார்கள். இல்லை என்றால் குப்பையில் போடப்படும். எனவே, நான் கொல்லவில்லை. எனக்கு எந்த பாவமும் இல்லை..." என்று ஒரு சாரார் வாதம் செய்கிறார்கள். 


மற்றவன் 


"..நான் புலால் உண்பது இல்லை. விலங்குகளை வெட்டி வைக்கிறேன். வேண்டுபவர்கள் வாங்கி உண்கிறார்கள். அவர்கள் உண்பதால்தானே நான் வெட்டி வைக்கிறேன்?  யாருமே வாங்கவில்லை என்றால் நான் ஏன் விலங்குகளை வெட்டப் போகிறான் " 


இரண்டு பக்கமும் இப்படி கூறுவார்கள் என்று அறிந்து பரிமேலழகர் அதை மறுக்கிறார். 


"கொலைப்பாவத்தைப் பின்னும் உளது ஆக்கலின் அதற்குக் காரணம் ஆதலையும் முன்னும் அதனான் வருதலின் அதன் காரியம் ஆதலையும் ஒருங்குடையதாய ஊன் உண்டல் அருளுடையார்க்கு இயைவதன்று. ஆகலின் அதனை விலக்குதற்கு இஃது அருள் உடைமையின் பின் வைக்கப்பட்டது"


அதாவது உண்பதால், கொலை செய்ய வேண்டி இருக்கிறது. எனவே புலால் உண்பது கொலைக்கு காரணமாகிறது. 


கொலை செய்யப்பட்டதால், உண்கிறார்கள். எனவே புலால் உணவு காரியமாகிறது. 


அவ்வாறு காரணம், மற்றும் காரியம் இரண்டுக்கும் எதுவாக இருப்பதால், புலால் உண்பது துறவிகளுக்கு மறுக்கப்பட்டது. 


இனி அதிகாரத்துக்குள் செல்வோம். 



Sunday, February 18, 2024

திருக்குறள் - அருள் இல்லாததன் காரணம்

 திருக்குறள் - அருள் இல்லாததன் காரணம் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_18.html

அருள் இருந்தால் எவ்வளவோ நன்மை என்று தெரிகிறது. இருந்தும் அருள் வர மாட்டேன் என்கிறதே. அது ஏன் இயற்கையாக வர மாட்டேன் என்கிறது? அப்படி வராத அருளை எப்படி வரவைப்பது ?


அருள் வராத இடங்கள் எவை ?


வீட்டு வேலைக்கார்களிடம், நமக்கு கீழே வேலை செய்பவர்கள் மேல், நம்மை விட செல்வத்தின், அறிவில், புகழில், பெருமையில் குறைந்தவர்களிடம் நமக்கு ஒரு ஆணவம், அவர்கள்மேல் ஒரு இளக்காரம், திட்டினால் பதிலுக்கு திட்டமாட்டார்கள் என்று ஒரு தைரியம். சிலர் அது போன்ற எளியவர்களை மனிதர்களாகக் கூட மதிப்பது கிடையாது. அவர்கள் ஏதாவது கேட்டால் முகம் பார்த்து கூட பதில் சொல்ல மாட்டார்கள். 


இந்த கெட்ட பழக்கத்தை எப்படி மாற்றுவது?


வள்ளுவர் சொல்கிறார்,


"உன்னை விட மெலிந்த ஒருவன் மேல் நீ உன் வலிமையை காட்டுவதற்கு முன், உன்னை விட வலிமையான ஒருவன் முன் நீ நிற்பதாய் ஒருமுறை எண்ணிப் பார். உனக்கு எவ்வளவு பயம் இருக்கும், நடுக்கம் இருக்கும். அது உனக்கு பிடித்து இருக்கிறதா?  அது ஒரு வலிதானே ? அந்த வலிதானே உன் முன்னால் இருப்பவனுக்கும் இருக்கும் என்று நினைத்துப் பார். தானாகவே அருள் பிறக்கும் "


என்கிறார். 


பாடல்  


வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியார்மேல் செல்லும் இடத்து


பொருள் 


வலியார்முன் = தன்னை விட வலியவர்கள் முன் 


தன்னை நினைக்க = ஒருவன் தன்னை நினைத்துக் கொள்க 


தான் தன்னின் = ஒருவன் தன்னை விட 


மெலியார்மேல் = மெலிந்தவர்கள் மேல் 


செல்லும் இடத்து = செல்லும் பொழுது 


இந்தக் குறளுக்கு பரிமேலழகர் செய்திருக்கும் நுணுக்கம் மிக அழகானது.


மெலியார் என்று உயர்திணையில் கூறினாலும், அது விலங்குகளையும், ஏனைய உயிர்களையும் சேர்த்தது என்கிறார். 


ஆட்டையும், மாட்டையும், வெட்டும் போது, என்னை விட  பலமான ஒருவன் என்னை இப்படி வெட்டினால் எப்படி இருக்கும் என்று நினைக்க வேண்டும் என்கிறார். 


மேலும்,


"செல்லும் இடத்து" என்றால் என்ன?  


ஒரு போக்குவரத்து துறை அதிகாரி உங்கள் வண்டியை நிறுத்தி, வண்டிக்கு உண்டான certificate களை கேட்கிறார். ஒரு சின்ன பயம் இருக்கும். எல்லாம் சரியா இருக்குமோ, இருக்காதோ என்று சந்தேகம் வரும். எவ்வளவு அபராதம் வருமோ என்ற பயம் வரும். ஆனால், அதே அதிகாரியின் முன் நாம் வண்டியில் இல்லாமல் நடந்து செல்லும் போது அந்தப் பயம் வருமா?  வராது. 


பயம் எப்போது வரும் என்றால், நம்மை விட வலியவன் நமக்கு துன்பம் தருவதற்கு வருகிறான் என்றால், பயம் வரும். அதைத்தான் 'செல்லும் இடத்து" என்றார். நாம் அவனிடம் போகிறோம். அவனால் நமக்கு துன்பம் வரலாம் என்றால் பயப்படுவோம் அல்லவா?  அது போல உன்னிடம் வருபவனை நினைத்துப் பார். என்கிறார். 


தானே அருள் வரும் என்கிறார். 


அப்படியாக அருளுடைமை என்ற அதிகாரம் முற்றுப் பெற்றது. 


அடுத்தது புலால் மறுத்தல் என்ற அதிகாரம். 







Saturday, February 17, 2024

அபிராமி அந்தாதி - என் கண் நீவைத்த பேரளியே

அபிராமி அந்தாதி - என் கண் நீவைத்த பேரளியே

https://interestingtamilpoems.blogspot.com/2024/02/blog-post_17.html

பட்டருக்கு அபிராமியின் மேல் அப்படி ஒரு ஈர்ப்பு. 


அவளைத் தவிர வேறு யாரையும் அவருக்குத் தெரியாது. 

மற்றவர்கள் எல்லாம் துச்சம் அவருக்கு. 


அபிராமி, அவளுடைய பக்தர்கள். இதைத் தவிர வேறு ஒன்றும் அவருக்கு வேண்டாம். 


அவர் சொல்கிறார், 


அபிராமி, நீ தான் எனக்குத் தெய்வம். மற்ற தெய்வங்கள் எல்லாம் உனது பரிவாரங்கள் ஆனபடியால், அவர்களை எல்லாம் நான் வணங்க மாட்டேன். அவர்களை எல்லாம் போற்றவும் மாட்டேன். மனதில் வஞ்சகம் உள்ளவர்களோடு சேர மாட்டேன். தன்னுடையது எல்லாம் நீ கொடுத்தது என்று இருக்கும் உன் பக்தர்களோடு வேறு பாடு கொள்ள மாட்டேன். எனக்கு என்ன தெரியும் உன்னைத் தவிர, உன் அருளைத் தவிர"


என்று. 


பாடல் 


 அணங்கே! அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்

வணங்கேன்; ஒருவரை வாழ்த்துகிலேன்; நெஞ்சில் வஞ்சகரோடு

இணங்கேன் எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்

பிணங்கேன்; அறிவொன்றிலேன் எண்கண் நீவைத்த பேரளியே.


பொருள் 


அணங்கே! = தெய்வப் பெண்ணே


அணங்குகள் = மற்ற தேவ லோகப் பெண்கள் எல்லாம் (சரஸ்வதி, இலக்குமி) 


 நின் பரிவாரங்கள் = உன்னுடைய பரிவாரங்கள், உன் பின்னால் வரும் கூடத்தில் ஒருவர்கள் 


ஆகையினால் = ஆனபடியால் 


வணங்கேன் = அவர்களை எல்லாம் நான் வணங்க மாட்டேன் 


ஒருவரை வாழ்த்துகிலேன் = அவர்களில் ஒருவரைக் கூட வாழ்த்தவும் மாட்டேன் 


நெஞ்சில் = மனதில் 


வஞ்சகரோடு = வஞ்சக எண்ணம் உள்ள ஆட்களோடு 


இணங்கேன் = சேர்ந்து இருக்க மாட்டேன் 



 எனது = தன்னுடையது எல்லாம் 


 உனது  = உன்னுடையது 


என்றிருப்பார் = என்று நினைக்கும் 


சிலர் யாவரொடும் = சிலரோடு 


பிணங்கேன் = மாறுபாடு கொள்ள மாட்டேன் 


அறிவொன்றிலேன்  = எனக்கென்று தனியே ஒரு அறிவும் இல்லை 


எண்கண் = என் மேல் 


நீவைத்த = நீ வைத்த 


பேரளியே = பெருங்கருணையே, பெரிய அன்பே, பெரிய கருணையே 


மத்தவங்க எல்லாம் தேவை இல்லை. நீ மட்டும் போதும். உன் அன்பு மட்டும் போதும். நான் ஒன்றும் சிந்திக்கப் போவது இல்லை. அறிவு என்று ஒன்று இருந்தால் அல்லவா சிந்திக்க. 


நீ என் மேல் அன்பு வைத்து இருக்கிறாய். நான் உன் மேல். இதில் அறிவுக்கு என்ன வேலை இடையில். 


அன்பு என்பது ஆராய்வது அல்ல. அனுபவிப்பது. 


எதோ ஒரு சில புத்தகங்களை படித்துவிட்டு,  தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பும் சிலரோடு நான் சேர மாட்டேன். அவனுக எப்படியோ போகட்டும்.


எனக்கு நீ, உனக்கு நான். 


உலகில் மற்ற பெண்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் உனக்கு பக்கத்தில் கூட வர முடியாது. அவர்களைப் பற்றி எல்லாம் எனக்கு ஒரு கவலை இல்லை. 


இந்த அன்பை புரிந்து கொள்ள தனி மனம் வேண்டும். 




.