Thursday, May 15, 2014

திருக்கோத்தும்பி - `வா' என்ற வான் கருணை

திருக்கோத்தும்பி - `வா' என்ற வான் கருணை


மகான்களின் வாழ்வில் ஏதோ நிகழ்கிறது. அவர்கள் வாழ்கை அதற்குப்பின் மாறிப் போகிறது.

இறைவன் நேரில் வந்து அருள் செய்ததாக கூறுகிறார்கள். உபதேசம் செய்ததாக, ஆட் கொண்டதாக, அருள் புரிந்ததாக, சொல்கிறார்கள். அருணகிரியார் ஒரு படி மேலே போய்  முருகன் ஜெப மாலை தந்ததாக கூறுகிறார். "செப மாலை தந்த சத் குரு நாதா, திருவாவினன் குடிப் பெருமாளே" என்பார்.

இங்கே மாணிக்க வாசகர்,

கண்ணப்பன் போல் என்னிடம் அன்பு இல்லை. இருந்தும், என்னையும் நீ ஆண்டு கொண்டு எனக்கு ஒரு நல் வழியை காட்டினாய். உன்னுடைய கருணை வான் போல பரந்து விரிந்து அளவற்றது. அப்படிப் பட்ட , திருநீறு அணிந்த சிவனை நீ பாடு, அரச வண்டே

என்கிறார்.

பாடல்

கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின்,
என் அப்பன், என் ஒப்பு இல் என்னையும் ஆட்கொண்டருளி,
வண்ணப் பணித்து, என்னை `வா' என்ற வான் கருணைச்
சுண்ணப் பொன் நீற்றற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!


பொருள் 


கண்ணப்பன் = கண்ணப்பன்

ஒப்பது  = ஒப்பிட்டு பார்க்கும் படி

ஓர் அன்பு = ஒரு உயர்வான அன்பு

இன்மை கண்டபின் = இல்லாமை கண்ட பின்பும்

என் அப்பன் = என் தந்தை போன்றவனும்

என் ஒப்பு இல் = என்னுடைய ஒப்பு இல்லாதவனும்

என்னையும் ஆட்கொண்டருளி = என்னையும் ஆட்கொண்டு அருளி

வண்ணப் பணித்து = எந்த வண்ணம் (வழி) நான் வாழ வேண்டும் என்று என்னைப் பணித்து

என்னை  = என்னை

`வா' என்ற வான் கருணைச் = வா என்று அழைத்து சேர்த்துக் கொண்ட வான் போன்ற கருணை

சுண்ணப் = பொடி  (திரு நீறு )

பொன் = பொன் போன்ற நிறம் உடைய

நீற்றற்கே = நிறம் கொண்டவற்கே

சென்று ஊதாய்; = சென்று பாடுவாய்

கோத்தும்பீ = அரச வண்டே 

No comments:

Post a Comment