Tuesday, May 6, 2014

நீதி நூல் - அதிகம் உண்டால் ஆபத்து

நீதி நூல் - அதிகம் உண்டால் ஆபத்து 


அளவுக்கு அதிகமாக உண்பவர்கள் இன்று மட்டும் அல்ல நீதி நூல் எழுதப் பட்ட அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறார்கள்.

அதிகம் உண்டால் என்ன  ஆகும் என்று சொல்கிறது நீதி நூல்.

நீதி என்றால் ஏதோ சட்டம் என்று நினைத்துக் கொள்ள கூடாது. வாழ்க்கைக்குத் தேவையான நல்லவைகளை எடுத்துக் கூறுவது நீதி நூல்.

நெல் வளர நீரும், மிதமான வெப்பமும் தேவை. அதிகமான நிழல், அதிகமான தண்ணீர் இருந்தால் நெல் பயிர் அதிகமாக வேகமாக வளராது. அழுகிப் போகும்.

நோய் வந்தால் மருந்து உண்கிறோம். சீக்கிரம் குணமாக வேண்டும் என்று இருக்கின்ற மருந்தை எல்லாம் ஒரே நாளில் உண்டால் நோய் தீர்க்கும் மருந்தே விஷமாகி நம்மை கொன்றுவிடும்.

அது போல

அளவுக்கு அதிகமாக உண்டால், அது சிலவற்றை அன்போடு கூடவே அழைத்து  வரும். அவை என்ன தெரியுமா ?

- பனி - (சளி, காய்ச்சல் ,இருமல் முதலியன )
- பிணி - அனைத்து விதமான நோய்கள்
- மடமை - முட்டாள் தனம் (அறிவு மழுங்கிப் போகும் )
- மந்தம் - சுறுசுறுப்பின்மை, சோம்பேறித்தனம்
- பழிச் சொல் - வேலை இல்லாமல் , முட்டாளாக இருந்தால் பழிச் சொல் வராமல் பாராட்டா வரும் ?

இவற்றையெல்லாம், இந்த அளவுக்கு அதிகமாக உண்ணும் செயல், ஒரு தூதுவனைப் போல சென்று அன்போடு அழைத்துக் கொண்டு வரும்.

பாடல்

நனிநிழல் புனல்கொள் பைங்கூழ் நாசமா மிகவே யுண்ணும்
இனியமா மருந்து நஞ்சா மின்பமு மிகிற்றுன் பாகும்
பனிபிணி மடமை மந்தம் பழியெலாம் வம்மி னென்னக்
கனிவொடு மழைக்குந் தூதாங் கழியபே ருண்டி மாதோ.

சீர்  பிரித்த பின்

நனி நிழல் புனல் கொள் பைங்கூழ் நாசம் மிகவே உண்ணும் 
இனிய மாமருந்து நஞ்சாம் இன்பம் மிகித்து உண்பாகும் 
பனி பிணி மடமை மந்தம் பழி எல்லாம்  வம்மி னென்னக்
கனிவொடு அழைக்கும் தூதாம்  கழிய பேருண்டி மாதோ.

பொருள்


நனி நிழல் = அதிகமான நிழல்

புனல் = அதிகமான நீர்

கொள் = கொள்ளும்

பைங்கூழ் = நெற் பயிர்

நாசம் = நாசமாகும்

மிகவே உண்ணும் = அதிகமாக உண்டால்

இனிய = இனிமையான

மாமருந்து = சிறந்த நோய் தீர்க்கும் மருந்து

நஞ்சாம் = விஷமாகிவிடும்

இன்பம் மிகித்து = இன்பம் இருக்கிறது என்று அதிகமாக

உண்பாகும் = உண்டால்

பனி = சுரம்

பிணி = நோய்

மடமை = முட்டாள்தனம்

மந்தம் = சோம்பேறித்தனம்

பழி = பழிச் சொல்

எல்லாம் = எல்லவாற்றையும்

வம்மி னென்னக் = தீமைகளை எல்லாம்

கனிவொடு அழைக்கும் = அன்போடு அழைக்கும் 

 தூதாம்  = தூதனாக செயல் படும்

கழிய பேருண்டி மாதோ = அளவுக்கு அதிகமான உணவு

கழி என்றாலே அதிகம் என்று  அர்த்தம்.இதில் பேருண்டி என்று இன்னொரு அடைமொழி.



No comments:

Post a Comment