Sunday, May 11, 2025

அபிராமி அந்தாதி - மனக்கவலை

 அபிராமி அந்தாதி - மனக்கவலை 


இன்று யாரைக் கேட்டாலும் மன அழுத்தம், மனச் சோர்வு, மனக் குழப்பம், என்று மனம் சம்பந்தப்பட்ட ஆயிரம் பிரச்சனைகளை கூறுகிறார்கள். பள்ளி செல்லும் சிறுவர் சிறுமியர் கூட Anxiety, Depression, ADHD, Bipolar disorder, என்று அடுக்குகிறார்கள். 




இன்று பல பள்ளி, கல்லூரிகளில் கவுன்சிலிங் என்பது கட்டாயம் என்று ஆகி விட்டது. அந்த அளவுக்கு மன அழுத்தம். 


நூற்றுக் கணக்கில் மருந்து மாத்திரைகள் வந்து விட்டன...Anti-depressant, anti-anxiety

என்று. 


இந்த மனக் கவலையை எப்படி மாற்றுவது ?


இந்த மனக் கவலையெல்லாம் மனதில் படியும் அழுக்குகள். அவற்றை எப்படி சுத்தம் செய்வது ?


அன்பு ஒன்றுதான் வழி. 


அன்பு செய்யுங்கள். 


மனம் அன்பு செய்வதற்கு என்றே உண்டான ஒன்று. 


மனிதர்களை நேசியுங்கள் - கணவன், மனைவி, பிள்ளைகள், உடன் பிறப்புகள், நட்பு, உறவு என்று எல்லோரையும் நேசியுங்கள். 


முடியவில்லையா, நாய் குட்டி, பூனைக் குட்டி என்று அவற்றை நேசியுங்கள். 


அதுவும் முடியவில்லையா, இயற்கையை நேசியுங்கள். 


எல்லாவற்றிற்கும் மேலாக உங்களை நீங்களே நேசிக்கப் பழகுங்கள். உங்கள் மேல் நீங்கள் அன்பு செலுத்தாவிட்டால் வேறு யார் செலுத்தப் போகிறார்கள். 


மனசு முட்ட உங்களைக் காதலியுங்கள். 


பாடல் 



உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு

படைத்தனை; பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே

அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்

துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே.


பொருள் 


உடைத்தனை வஞ்சப் பிறவியை = வஞ்சகமான இந்தப் பிறவியை நீ (அபிராமி) உடைத்தாய். இந்தப் பிறவி நமக்கு எவ்வளவோ நல்லது செய்ய் முடியும். அதை விட்டு விட்டு அது புலன் இன்பங்களின் பின்னால் போகிறது. நமக்கு நல்லது செய்யாமல் வஞ்சனையை செய்கிறது. அபிராமி இந்தப் பிறவி என்ற சங்கிலியை உடைத்தாள். 


உள்ளம் உருகும் அன்பு படைத்தனை = அன்பு என்றால் உள்ளம் உருக வேண்டும். கண்ணில் நீர் வர வேண்டும். 'நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக' என்பார் அருணகிரிநாதர். 'காதாலாகி கசிந்து கண்ணீர் மல்கி" என்பார் மணிவாசகர். 



பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை = உன் திருவடி தாமரைகளை என் தலைமேல் சூடும் பணியை எனக்குக் கொடுத்தாய் 



நெஞ்சத்து அழுக்கை எல்லாம் = என் மனதில் உள்ள அழுக்கை எல்லாம் (கோபம், காமம், பொறாமை போன்ற அழுக்கை)


நின் அருள்புனலால் துடைத்தனை = உன்னுடைய அருள் என்ற வெள்ளத்தால் துடைத்தாய் 


சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே = சுந்தரி, உன்னுடைய அருளை நான் என்னவென்று சொல்லுவேன்.


மன அழுக்கை எல்லாம் துடைத்தால், மனதில் எழும் பிரச்சனைகள் எல்லாம் தீரும். 


அதற்கு என்ன செய்ய வேண்டும்?  

உள்ளம் உருகும் அன்பு வேண்டும். 


அன்பு வேண்டும், அன்பு வேண்டும் என்று அலையாமல், இருக்கிற அன்பை எல்லாம் அள்ளிக் கொடுங்கள். திருப்பி வந்தால் வரட்டும், வராவிட்டாலும் ஒன்றும் பாதகம் இல்லை. 


உங்களிடம்தான் கொட்டிக் கிடக்கிறதே. அன்புக்கா பஞ்சம். 


கொடுப்பதும் சுகம்தான். 


Monday, May 5, 2025

திருவாசகம் - அதிசயப் பத்து - பெற்ற பயன்

 திருவாசகம் - அதிசயப் பத்து - பெற்ற பயன்


 


ஒரு குழந்தை வீட்டில் உள்ள ஏதோ ஒரு விலை உயர்ந்த பொருளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும். "...குடுத்திருமா...நல்ல பிள்ளையில்ல .." என்று கெஞ்சி கேட்டாலும் "மாட்டேன் போ..இது என்னுது" என்று அடம் பிடிக்கும். அடித்தும் வாங்க முடியாது. 


என்ன செய்யலாம். கீழே போட்டு உடைத்து விட்டால் பெரிய நட்டம். 


அந்தக் குழந்தையிடம் "...இந்தா உனக்கு பிடிச்ச சாக்கேலேட் .." என்று ஒரு இனிப்பைக் கொடுத்தால் அது அந்த விலை உயர்ந்த பொருளை கீழே போட்டு விட்டு சாக்கலேட்டைப் பற்றிக் கொள்ளும். 


அதற்கு அந்தப் பொருளின் விலை தெரியாது. மதிப்புத் தெரியாது. 


அது போல

நாமும் இந்த வாழ்வில், பெரிய பெரிய விடயங்களை விட்டு விட்டு நமது சாக்கலேட்டின் பின்னால் போய்க் கொண்டிருக்கிறோம். 


கணவன்,மனைவி, பிள்ளைகள், பணம், அதிகாரம், செல்வாக்கு, புகழ், வீடு, வாசல், வங்கிக் கணக்கு, பட்டம், பதவி, ஜாதி, மதம், என்று எத்தனையோ சாக்கேலேட்டுகள். 


சாக்கேலேட்டு இனிப்பாக இருக்கும். சுவையாக இருக்கும். யார் இல்லை என்று சொன்னது. எனவே அதை பிடித்துக் கொண்டிருக்கிறோம். அதை விட்டால் வேறு ஒன்றும் இல்லை என்ற நினைப்பில் அதிலேயே ஆழ்ந்து விடுகிறோம். சிற்சில சமயம் மற்ற நினைப்பு வந்தாலும், மனம் மீண்டும் சாக்கலேட்டின் பின்னே போய் விடுகிறது. 


மணிவாசகர் சொல்கிறார், 


"இந்த உறவுகள், பொருள்கள் எல்லாம் அனுபவிக்கவே இருக்கின்றன. மகிழ்ச்சியாக அனுபவிப்போம் என்று பல பித்தர்கள் சொன்னதைக் கேட்டு நானும் அவற்றின் பின்னால் போனேன். இறைவா, பூவின் நறுமணம் வருகிறது என்றால், பூ எங்கோ இருக்கிறது என்று தானே அர்த்தம். அந்தப் பூவை தேடிக் கண்டு பிடித்தால் அது எவ்வளவு இனிமையாக இருக்கும். அதை விட்டு விட்டு எங்கெங்கோ 


அது ஒரு புறம் இருக்கட்டும்....


தெருவில் நடந்து போகிறோம். ஏதோ ஒரு கடையில் வடை சுடும் வாசம் மூக்கைத் துளைக்கிறது. அடடா, சூடா ஒரு வடை சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று அந்த வாசம் வரும் உணவு விடுதி நோக்கிப் போகிறோம். 


விடுதிக்குப் போய் விடுகிறோம். அங்குள்ள உணவு பரிமாறுபவரிடம், "ஒரு plate வடை" என்று ஆர்டர் செய்கிறோம். வடை வந்து விடுகிறது. நல்ல மொரு மொரு என்று இருக்கிறது. எண்ணெய் லேசாக மின்னுகிறது. ஆவி பறக்கிறது. 


"இறைவா, உன் கருணை, மலரின் வாசம் போல் எங்கும் விரிந்து கிடக்கிறது. அந்த வாசனையை பற்றிக் கொண்டே போனால், மலரைக் காணலாம். அது போல் உன் கருணையை பற்றிக் கொண்டே போனால், உன்னைக் கண்டு விடலாம். அதை விட்டு விட்டு, இந்த உலக இன்பங்களின் பின்னால் போய்க் கொண்டிருக்கும் என்னையும் தடுத்தாட்கொண்டு, உன் அடியவர்களில் என்னையும் சேர்த்துக் கொண்ட அதிசயத்தை என்னவென்று சொல்லுவது " என்று வியக்கிறார் அடிகளார். 



பாடல் 


உற்ற ஆக்கையின் உறு பொருள், நறு மலர் எழுதரு நாற்றம் போல்,

பற்றல் ஆவது ஓர் நிலை இலாப் பரம் பொருள்: அப் பொருள் பாராதே,

பெற்றவா பெற்ற பயன் அது நுகர்ந்திடும் பித்தர் சொல் தெளியாமே,

அத்தன், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!


பொருள் 



உற்ற ஆக்கையின் = கிடைத்த இந்த உடம்பின் 


உறு பொருள் = பெரி பொருள், அர்த்தம் 


நறு மலர் = வாசமிகு மலர் 


எழுதரு நாற்றம் போல் = எழுந்து வரும் வாசம் போல 


பற்றல் ஆவது = பற்றிக் கொள்ளக் கூடியது 


ஓர் நிலை  இலாப் = என்று ஒரு நிலை இல்லாத 


 பரம் பொருள்: = உயர்ந்த பொருள் (இறைவன்) 


அப் பொருள் பாராதே = அதைக் கவனிக்காமல் 


பெற்றவா = இந்த உடம்பை பெற்று 


 பெற்ற பயன் = பெற்றதின் பயன் புலன் இன்பங்களை அனுபவிப்பது தான் என்று 


அது நுகர்ந்திடும் = அவற்றை அனுபவிக்கும் 


பித்தர் சொல் = பித்தர்களின் சொல்லைக் கேட்டு 


தெளியாமே, = அறிவு தெளிவு அடையாமல் 


அத்தன் = தலைவன் 


 ஆண்டு = என்னை ஆட்கொண்டு 


தன் அடியரில் = தன்னுடைய அடியவர் கூட்டத்தில் 


 கூட்டிய = சேர்த்துக் கொண்ட 


அதிசயம் கண்டாமே! = அதிசயத்தை என்னவென்று சொல்லுவேன் 


மிகவும் சிக்கலான பாடல். வேறு பொருளும் இருக்கலாம். தேடணும்.


Sunday, April 27, 2025

திருக்குறள் - வெகுளாமை - தீது

திருக்குறள் - வெகுளாமை - தீது 



நமக்கு கீழே உள்ளவர்களிடம் நாம் நம் கோபத்தை எளிதாக காட்ட முடியும். அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. திட்டலாம், அவமானப் படுத்தலாம், அவர்கள் தன்னம்பிக்கை குறையும்படி பேசலாம், அவர்களை பலர் முன்னிலையில் தலை குனியும்படி செய்யலாம்...


ஆனால், அது எல்லாம் நமக்கே தீதாய் முடியும் என்கிறார் வள்ளுவர். 


நம்மை விட வலிமையானவர்களிடம் நாம் நம் கோபத்தைக் காட்டினால், அவர்கள் பதிலுக்கு நமக்குத் தீங்கு செய்ய முடியும். எனவே அது நிச்சயமாக நமக்கு ஒரு தீமையில்தான் போய் முடியும். 


நமக்கு கீழே உள்ளவர்களிடம் நம் கோபத்தைக் காட்டினால் நமக்கு என்ன தீங்கு விளையும்? அவர்கள் நம்மை என்ன செய்து விட முடியும்?


வள்ளுவர் சொல்கிறார், அப்படிப்பட்ட கோபம் இந்தப் பிறவியில் பழியையும், மறு பிறவியில் பாவத்தையும் கொண்டு வருவதால், அது முந்தைய கோபத்தை விட தீமை செய்வது என்கிறார். 


வலிமையானவர்களிடம் கோபத்தைக் காட்டினால், அவன் பதிலுக்கு நம்மை தாக்க முடியும், திட்ட முடியும். அதன் பலன் அங்கேயே தீர்ந்து விடும். ஆனால் மெலியார் மேல் காட்டும் கோபம் இந்தப் பிறவியிலும், மறு பிறவியிலும் தொடரும் என்பதால், அது மிகவும் தீதானது என்கிறார். 


பாடல் 



 செல்லா இடத்துச் சினம்தீது செல்இடத்தும்

இல்லதனின் தீய பிற.


பொருள் 


செல்லா இடத்துச் சினம்தீது = நம் கோபம் செல்லாத இடத்தில் அதைக் காட்டினால் அது நமக்கு தீமையாய் முடியும். 


 செல்இடத்தும் = கோபம் செல்லும் இடத்திலும் 


இல்லதனின் தீய பிற = அதை விட பெரிய தீமை இல்லை என்கிறார்.


பரிமேலழகர் சொல்லாத ஒன்றை நான் என் அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன். 


நம்மை விட கீழே உள்ளவன் என்று நாம் நினைத்து ஒருவன் மேல் நம் கோபத்தை இன்று காட்டி விடலாம். அவனே நாளை நமக்கு மேல் வந்துவிட்டால், நம் கதி?


எத்தனையோ திரைப்படங்களில் பார்க்கிறோம். ஒன்றும் இல்லாதவன் ஏதோ அதிர்ஷ்டம் அடித்து பெரிய பணக்கரனாகவோ, முதலாளியாகவோ, பெரிய அரசியல் செல்வாக்கு உள்ளவனாகவோ ஆகிவிடலாம். அப்போது அவன் நாம் முன்பு செய்தவற்றை நினைத்து நமக்கு ஒன்றுக்கு பத்தாக தீமை செய்ய முற்படலாம். 


யார் அறிவார் ? காலம் , யாரை, எங்கே கொண்டு சேர்க்கும் என்று. அடிக்கின்ற காற்றில் சில குப்பைகள் கோபுரத்தின் மேல் போய் விடலாம். 


எனவே, இன்று நமக்கு கீழே இருக்கிறான் என்று எண்ணி அவனுக்கு தீமை செய்யக் கூடாது. 


அதற்கு பெரிய உதாரணம் இராமன். 


கூனிதானே, வயதான, கூன் விழுந்த கிழவி என்ன செய்து விட முடியும்? 

இராமன் அவள் மேல் கோபப்பட்டு உண்டி வில்லை அடிக்கவில்லை. விளையாட்டாக அடித்தான். அதுவே பின்னாளில் அவனுக்கு எவ்வளவு பெரிய துன்பத்தைக் கொடுத்தது? தெரியாமல் செய்ததற்கே இவ்வளவு பெரிய வேதனை. தெரிந்தே செய்திருந்தால்? 


எனவே, யாரிடத்தும் கோபத்தைக் காட்டக் கூடாது என்பது பெறப்பட்டது. 



Thursday, April 24, 2025

திருவாசகம் - அதிசயப் பத்து - நொடியன சொல் செய்து

 திருவாசகம் - அதிசயப் பத்து - நொடியன சொல் செய்து 


https://interestingtamilpoems.blogspot.com/2025/04/blog-post_24.html



நம்மை இந்தப் பிறவியில் ஆழ்த்தியது யார் ? 


நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு தக்கவாறு நமக்குப் பிறவியை அளிப்பவன் இறைவன். 


இறைவன் நினைத்தால், "சரிப்பா, நாளையில் இருந்து இனி யாருக்கும் ஒரு பிறவியும் கிடையாது. எல்லாருக்கும் முக்தி. இதே வேலையாப் போச்சு உங்களோட. பிறந்து, இறந்து, பாவ புன்னியங்கள் செய்து, இன்ப துன்பங்களை அனுபவித்து, இதையெல்லாம் கணக்கு வைத்துக் கொண்டு...போதும்...இன்றோடு இனி யாருக்கும் எந்த பிறவியும் கிடையாது" என்று இறைவனால் செய்ய முடியுமா ? முடியாதா? 


முடியும்தானே? அவனால் முடியாதது எது?  பின் ஏன் செய்ய மாட்டேன் என்கிறான். எதுக்கு இந்த துன்பம்?  


IPL போட்டி நடக்கிறது. எதுக்கு இத்தனை போட்டி, பாயிண்ட் எல்லாம். எல்லாருக்கும் கோப்பை என்று கொடுத்துவிட்டுப் போகலாம்தானே ? ஆளுக்கு ஒரு கோப்பை.  நம்மால் அது முடியுதானே? பின் ஏன் செய்ய மாட்டேன் என்கிறோம்?  


அது ஒரு லீலை...அனுபவங்கள் ஆன்மாவைப் பக்குவப் படுத்துகின்றன. ஒரு கட்டத்தில் ஆன்மா சலிப்பு அடைந்து, போதும், என்று இறைவனை நாடத் தொடங்குகிறது. 


பொம்மைகளை வைத்து விளையாடும் பிள்ளை, சிறிது நேரத்தில் அவற்றை தூக்கிப் போட்டுவிட்டு, அம்மாவைத் தேடுவது போல. அவளைக் காணோம் என்றால் அழத் தொடங்கி விடும். ஏன், பொம்மைதான் இருக்கிறதே. வைத்துக் கொண்டு விளையாட வேண்டியதுதானே என்றால், அதில் சலிப்பு வந்து விடுகிறது. அம்மா வேண்டும். 


அது போல் ஆன்மாக்கள் இறைவனை தேடும் நிலை வரும். அது வரை பொம்மை விளையாட்டுத்தான். 


மணிவாசகர் சொல்கிறார் 


"இறைவா, நீ என்னை முன்னொரு காலம் உன்னை விட்டு நீக்கி, இந்த உலக வாழ்க்கையில் செலுத்தினாய். பின், நீயே எனக்கு மந்திர உபதேசம் செய்து, ஒரு துன்பமும் இல்லாமல் என்னை இந்தப் பிறவிக் கடலில் இருந்து கை தூக்கி விட்டாய். என் முன் வினைகள் என்னைத் தொடரா வண்ணம் பார்த்துக் கொண்டாய். என்னையும் ஆட்கொண்டு, உன் அடியவர்களில் ஒருவனாக சேர்த்துக் கொண்ட அதிசயத்தை என்னவென்று சொல்லுவது"



பாடல் 


நீக்கி, முன் எனைத் தன்னொடு நிலாவகை; குரம்பையில் புகப் பெய்து;

நோக்கி; நுண்ணிய, நொடியன சொல் செய்து; நுகம் இன்றி விளாக்கைத்து;

தூக்கி; முன் செய்த பொய் அறத் துகள் அறுத்து; எழுதரு சுடர்ச் சோதி

ஆக்கி; ஆண்டு; தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!



பொருள் 


நீக்கி = உன்னை விட்டு என்னை நீக்கி, விலகச் செய்து 


முன் எனைத்  = முன்பு என்னை 


தன்னொடு =  தன்னோடு 


நிலாவகை = எப்படி பிறை நிலா சிவனை விட்டுப் பிரியாமல் இருக்கிறதோ அது போல 


குரம்பையில் புகப் பெய்து = இந்தப் பிறவி என்ற சுழலில் என்னை விடாமல் அழுத்தி 


நோக்கி = பின் அன்புடன் நோக்கி 


நுண்ணிய = கூர்மையான, நுட்பமான 


நொடியன சொல் = ஒரு நொடியில் சொல்லும் சொல் 


செய்து = எனக்குச் சொல்லி 


நுகம் இன்றி விளாக்கைத்து = நுகம் என்றால் மாட்டுக்குக் கட்டும் நுகந் தடி. அந்த மாதிரி பிணைப்பு எதுவும் இல்லாமல் விவசாயம் செய்வது போல 


தூக்கி = என்னை இந்தப் பிறவிக் கடலில் இருந்து கை தூக்கி விட்டு 


முன் செய்த பொய் அறத் துகள் அறுத்து = முன்பு செய்த வினைகள் தூள் தூளாகும் படி செய்து 


எழுதரு சுடர்ச் சோதி ஆக்கி = மேல் நோக்கி எழுந்து சுடர் விடும் ஜாதியாக்கி 


ஆண்டு = ஆட்கொண்டு 


தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே! = தன்னுடைய அடியவர்களில் சேர்த்துக் கொண்ட அதியசயத்தை கண்டோம். 


ஆன்மாக்கள் இந்தப் பிறவிச் சுழலில் சிக்கிக் கொள்கின்றன. வெளியே வர முடியாமல் தவிக்கின்றன. அவற்றின் மேல் கருணை கொண்டு, அவன் அவற்றிற்கு வீடு பேறு தருகிறான். 


நொடியன சொல் என்றால் ஒரு நொடியில் கூறிய சொல். ஏதோ உபதேசம் என்றால் ஒரு நான்கு ஐந்து நாள் சொல்லுவது அல்ல. ஒரே நொடி. அவ்வளவுதான். 


அருணகிரிக்கு முருகன் சொன்னது போல - "சும்மா இரு". அவ்வளவுதான் உபதேசம். 


இங்கே மணிவாசகருக்கு என்ன சொன்னார் என்று சொல்லவில்லை. உரை செய்தவர்கள் "ஓம்" என்று பிரணவத்தை உபதேசம் செய்தார் என்கிறார்கள். 


அதற்குப் பின், நீண்ட நாள் பூஜை, புனஸ்காரம், என்றெல்லாம் இல்லை. வேறு எதுவும் இல்லை. 


"நுகம் இன்றி விளாக்கைத்து"


ஆன்மீக நூல்களின் தளம் வேறு எங்கோ இருக்கிறது. இவற்றின் உட்பொருள் காண்பது என்பது கடினம். முதலில் மேலோட்டமான பொருள் என்ன என்று தெரிந்து கொள்வோம். பின் உட்பொருளை தேட வேண்டும். 


தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டும். 



Thursday, April 10, 2025

திருக்குறள் - வெகுளாமை

 திருக்குறள் - வெகுளாமை 

https://interestingtamilpoems.blogspot.com/2025/04/blog-post_10.html

வெகுளுதல் என்றால் கோபம் கொள்ளுதல். 


வெகுளாமை என்றால் கோபம் கொள்ளாமல் இருத்தல். 


வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார்?  கோபமே படக் கூடாது என்கிறாரா?  ஒருவன் என்ன தவறு செய்தாலும் கோபமே படக் கூடாதா? இதெல்லாம் நடக்கிற காரியமா?  நடை முறைக்கு ஒத்து வருமா?  என்று கேட்கலாம்.


பரிமேலழகர் சொல்கிறார், "வெகுளாமை என்றால் வெறுமனே கோபப் படாமல் இருத்தல் அல்ல. கோபப் பட தகுந்த காரணம் இருந்தும், கோபப் படாமல் இருத்தல்" என்கிறார். 


சில பேர் காரணமே இல்லமால் எரிந்து விழுவார்கள். 


சிலர்க்கு கோபப்பட்டு பேசுவதே இயல்பாக இருக்கும். சாதரணமாகவே பேசத் தெரியாது. 


ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்.


இந்த அதிகாரம் இருப்பது துறவறவியலில். இது துறவிகளுக்குச் சொல்லப் பட்டது. 


அதானே பார்த்தேன், நமக்கு இல்லை என்று ஒதுக்கி விடக் கூடாது. துறவிக்கு இது கட்டாயம். இல்லறத்தில் இருப்பவர்கள் கடை பிடிக்கக் கூடாது என்று அல்ல. முயற்சி செய்ய வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக அது நோக்கி நகர வேண்டும். 


முதல் குறள் 


யாரிடம் கோபம் கொள்ளலாம், யாரிடம் கோபம் கொள்ளக் கூடாது என்று சொல்கிறார். 


நம்மை விட வலிமை குன்றியவர்கள் நமக்கு ஒரு தீங்கு செய்தாலும், அவர்கள் கோபம் கொள்ளக் கூடாது. நம்மை விட வலிமையானவர்கள் நமக்கு ஒரு தீங்கு செய்தால், அவர்கள் மேல் கோபப் பட்டாலும் ஒன்றும் பலன் இல்லை. எனவே எக்காலத்தும், யார் மீதும் கோபம் கொள்ளக் கூடாது என்கிறார். 


பாடல் 


செல்இடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்இடத்துக்

காக்கின்என் காவாக்கால் என்



பொருள் 


செல்இடத்துக் = ஒருவனுடைய சினம் செல்லும் இடத்து, அதாவது மெலியார் மேல் 


காப்பான் = சினத்தை காப்பவன் 


சினங்காப்பான் = சினத்தை கட்டுப் படுத்துபவன் என்று கூறப் படுவான் 


 அல்இடத்துக் = மற்ற இடத்து (அதாவது வலியார் மேல்) 


காக்கின்என் = கோபத்தை காட்டினால் என்ன 


காவாக்கால் என் = காட்டாவிட்டால் என்ன 


செல்லிடம், அல்லிடம் என்று இரண்டு இடங்களைக் கூறுகிறார். அது இடம் அல்ல. கோபம் செல்லும் மெலியார், கோபம் செல்லாத வலியார் என்று பொருள் கொள்ள வேண்டும். 


தெருவில் ஒரு தீயவன் இருக்கிறான். அவன் நாம் போகும் போது ஏதோ சொல்லி நம்மை கேலி செய்கிறான். அவனிடம் போய் சண்டை போட முடியுமா? அவன் பல முறை சிறை சென்று வந்தவன். அவனிடம் நம் கோபத்தைக் காட்டினால் நமக்குத்தான் மேலும் தீங்கு வரும். 


சரி, கோபப் படாமல், "அவனை மன்னித்து விட்டேன்" என்று பெருந்தன்மையாக சொன்னாலும், அவனுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. அவனை மன்னிப்பது என்பது பெரிய அறச் செயல் அல்ல. நம் உயிருக்கு பயந்து அவனை மன்னிக்கிறோம். அதில் அருள்  இல்லை. 


எனவே, அவனிடம் கோபத்தைக் காட்டினாலும், காட்டாவிட்டாலும் ஒரு பயனும் இல்லை. 


நம்மை விட மெலியவர்கள், வீட்டில் வேலை செய்யும் பெண்கள், வண்டி ஓட்டுபவர், வீட்டு காவலாளி, அலுவலகத்தில் நமக்கு கீழே வேலை செய்பவர்கள் என்று நம்மை விட வலிமை குறைந்தவர்கள் மேல் கோபத்தைக் காட்ட முடியும். அந்த சமயத்தில் கோபத்தைக் காட்டாமல் இருப்பதுவே சிறந்த அறம். 


ஏன் கோபப் படக் கூடாது? பட்டால் என்ன ஆகும்?


மேலும் சிந்திப்போம். 




Monday, April 7, 2025

திருவருட்பா - நடுக்கம்

 திருவருட்பா - நடுக்கம் 



சமீபத்தில் ஒரு நண்பரின் இல்லத்துக்குச் சென்றிருந்தேன். அவருடைய மகன் ஏதோ வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தான். என்னதான் விளையாடுகிறான் என்று பார்த்தேன். 


ஏதோ சேசிங் கேம் போல. பைக்கில் செல்லும் ஒருவன், முன்னால் செல்லும் ஒரு ஆம்புலன்ஸ் கதவைத் திறந்து, அதில் உள்ள ஒரு நோயாளியை வெளியே இழுத்து, பாலத்தின் மேல் இருந்து கீழே தள்ளி விட்டு, பைக்கில் பறக்கிறான். போகிற வழியில் தெருவில் சும்மா போய் கொண்டு இருப்பவர்களை காலால் எட்டி உதைத்து கீழே விழ வைக்கிறான். பைக்கில் செல்லும் மற்றவர்கள் மேல் வண்டியை விட்டு ஏத்துகிறான். 


எனக்கு ஒன்றும் புரியவில்லை. எதுக்காக இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று அவனைக் கேட்டேன். அவனோ, கேம் அங்கிள் ...என்று சொல்லிவிட்டு மேலும் மேலும் சாலையில் என்னவெல்லாம் செய்யக் கூடாதோ அனைத்தையும் செய்து கொண்டிருந்தான். 


அவனுக்கு அதில் ஒரு வருத்தமோ, கவலையோ இல்லை. நோயாளியை பாலத்தின் மேல் இருந்து தள்ளி விடுவது என்ன விளையாட்டோ தெரியவில்லை.


சின்னப் பையன். வீடியோ கேம் விளையாடுகிறான். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்று நினைக்கலாம். 


பெரியவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். இன்று வரும் சினிமா, டிவி சீரியல்கள் போன்றவற்றில் வரும் வன்முறைக்கு அளவே இல்லை. தலையை சீவுவதும், இரத்தம் சொட்ட சொட்ட வெட்டுவதும், வெடி வைப்பதும், கையை காலை முறிப்பதும்....வன்முறை எல்லை மீறி காட்டுகிறார்கள். 


இவற்றையெல்லாம் பார்த்து பார்த்து மக்கள் மனம் மரத்துப் போய் விடும். சாதாரண வன்முறையில் ருசி குறைந்து மேலும் மேலும் வேண்டும் என்று மனம் எதிர்பார்க்கும். 


மனம் மரத்து, இறுகிப் போய் விடும். உயிர்கள் மேல் அன்பு போய் விடும்.  கருணை வற்றும். 


வள்ளல் பெருமான் சொல்கிறார்....


"மீனவர்கள் மீன் வலையும், தூண்டிலும் கொண்டு போவதைப் பார்த்து உள்ளம் நடுங்கினேன்" என்கிறார். 


ஐயோ, இவ்வளவு மீன்கள் மூச்சு விட முடியாமல் மூச்சுத் திணறி துடி துடித்து இறக்குமோ என்று என்று பதறுகிறார். மீனவர்கள் இன்னும் மீனைப் பிடிக்கவில்லை. மீன்கள் சாகவில்லை. சாகுமே, என்று நினைத்து வருந்துகிறார். 


அந்தத் தூண்டிலையும், வலையையும் கொலை கருவிகளாக பார்க்கிறார். 


உயிர்கள் மேல் எவ்வளவு கருணை இருந்தால் ஒரு மனிதன் இவ்வளவு துடிக்க முடியும். 


பாடல் 



துண்ணெனக் கொடியோர் பிற உயிர் கொல்லத்

தொடங்கிய போதெல்லாம் பயந்தேன்

கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்கக்

கண்ட காலத்திலும் பதைத்தேன்

மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி

வகைகளும் கண்ட போதெல்லாம்

எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம்

என் தந்தை நின் திரு உளம் அறியும்.


பொருள் 



துண்ணெனக் = துடித்து எழுந்து 


கொடியோர் = கொடியவர்கள் 


பிற உயிர் கொல்லத் = பிற உயிர்களைத் கொல்லத் 


தொடங்கிய போதெல்லாம் பயந்தேன் = தொடங்கிய போதெல்லாம் பயந்தேன். இவரைக் கொல்ல வில்லை. மற்ற உயிர்களை கொல்வதை அறிந்து இவர் பயப்படுகிறார். 



கண்ணினால் = என்னுடைய கண்களால் 


ஐயோ = ஐயோ 


பிற உயிர் பதைக்கக் = பிற உயிர்கள் பதை பதைக்க துடிப்பதை 

 


கண்ட காலத்திலும் பதைத்தேன் = கண்ட போது பதைத்தேன் 


மண்ணினில் = மண்ணில் (கடற் கரையில்) 


வலையும் = மீன் பிடிக்கும் வலையும் 


தூண்டிலும் = தூண்டிலும் 


 கண்ணி = மீன் பிடிக்கும் கண்ணிகளும் 


வகைகளும் = அது போன்ற கருவிகளையும் 


கண்ட போதெல்லாம் = ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் 


எண்ணி = அவை எப்படி எல்லாம் உயிர்களை வதைக்குமோ என்று எண்ணி 


என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் = என் உள்ளம் நடுங்கிய நடுக்கம் 


என் தந்தை நின் திரு உளம் அறியும் = என் தந்தை போன்றவனே, நீ அறிவாய் 

.

மற்ற உயிர்களுக்கு துன்பம் வருமே, இவர்கள் துன்பம் செய்வார்களே என்று இவர் பதறுகிறார். 


ஜீவ காருண்யத்தின் உச்சம். 



Thursday, April 3, 2025

திருவாசகம் - மெய்யெனக் கருதி

திருவாசகம் - மெய்யெனக் கருதி 

https://interestingtamilpoems.blogspot.com/2025/04/blog-post_3.html


இன்பம் வேண்டாம் என்று யார் சொல்லுவார்கள். 


இன்பத்தைத் தேடித்தானே இத்தனை அலைச்சலும். 


இன்பம் எங்கே இருக்கிறது?  


பொருள்களில், அனுபவங்களில் இருப்பதாகத் தோன்றுகிறது. 


அது உண்மையா?


உருசியான உணவு. நெய் மணக்கிறது. நாக்கில் எச்சில் ஊறுகிறது. மருத்துவர் சொன்னது ஞாபகம் வருகிறது. அரிசிச் சோறு சாப்பிட்டால் அது தான் கடைசிச் சாப்பாடு என்று.   கை வைக்க மனம் வருமா? 


அருமையான இருக்கை. மெத் மெத்தென்று இருக்கிறது. சாய்ந்து கொள்ளலாம். உட்காரும் இடத்தில் ஒரு கட்டி, அல்லது மூல வியாதி. உட்கார மனம் வருமா? பயம் வரும். 


பொருளில் இல்லை இன்பம். 


அனுபவிக்கும் உடலில் இருக்கிறது. ஒற்றைத் தலை வலி மண்டையைப் பிளக்கும் போது, சுவையான ஐஸ் கிரீம் கொடுத்தால் ருசிக்க மனம் வருமா?


சரி, உடல்தான் ஆதாரம் என்று தெரிகிறது. 


இந்த உடல் எப்படிப்பட்டது?


சொல்லவே வேண்டாம். நீரும் சலமும் ஒழுகிக் கொண்டே இருக்கும் ஒரு ஓட்டைப் பாத்திரம். எந்நேரமும் அழுக்கு சேர்ந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு நாளும் இடுகாட்டுக்கு ஒரு அடி எடுத்து வைத்துக் கொண்டே இருக்கும். 


இந்த உடலுக்கா இந்தப் பாடு?  


வயதானவர்கள், மருத்துவ மனைகளில் இருக்கும் நிலையைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். மூக்கில், வாயில், கையில், காலில் என்று எங்கு பார்த்தாலும் ஏதேதோ வயர்களை சொருகி இருப்பார்கள். கருவிகளோடு ஒரு கருவியாக கிடப்பார்கள். 


மல சலம் போவது கூடத் தெரியாது. 


ஏதோ இந்த உடல் கால காலமாய் நம்மோடு இருக்கப் போவது போலவும், இருக்கின்ற இன்பங்களை எல்லாம் ஒன்று விடாமல் அனுபவித்து விடலாம் என்றும் மனிதன் கணக்குப் போடுகிறான். 


"இந்த உடலை மெய் எனக் கருதி, துன்பக் கடலில் விழுந்து அழுந்துவேனை ஒளி வீசும் என் தந்தையான சிவன் என்னை ஆட்கொண்டு தன் அடியவர் கூட்டத்தில் சேர்த்துக் கொண்ட அதிசயத்தை என்னவென்று சொல்லுவது"


பாடல் 




பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை

இத்தை மெய்யெனக் கருதிநின்றிடர்க் கடற் சுழித்தலைப் படுவேனை

முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி

அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே


பொருள் 


பொத்தை = ஓட்டை. ஒன்பது ஓட்டைகள் 


ஊன் = மாமிசம் நிறைந்த 


சுவர் = மாமிசத்தை சுவர் போல் பூசி 


புழுப் = புழுக்கள் 


பொதிந் து = நிறைந்த 


உளுத்த = உறுதியில்லாத 


அசும் பொழுகிய = அசும் என்ற நின நீர் 


பொய்க்கூரை = பொய்யான கூரை 


இத்தை = இந்த உடலை 


மெய்யெனக் கருதி = உண்மையென்று கருதி 


நின்றிடர்க் = நின்று இடர். அதில் நின்று துன்பக் 


கடற் = கடலில் 


சுழித்தலைப்  = சுழலில் 


படுவேனை = மாட்டிக் கொண்டு தவிக்கும் என்னை 


முத்து = முத்து 


மாமணி = பெரி மணி 


மாணிக்க = மாணிக்கம் 


வயிரத்த = வைரம் 


பவளத்தின் = பவளம் 


முழுச்சோதி = இவற்றின் முழு ஒளியை  கொண்ட சோதி வடிவான 


அத்தன்  =என் தந்தை 


ஆண்டு = என்னை ஆட்கொண்டு 


தன் அடியரிற் = தன் அடியவர் கூட்டத்த்ஹில் 


கூட்டிய = சேர்த்துக் கொண்ட 


அதிசயங் கண்டாமே = அதிசயத்தைக் கண்டு கொண்டோம்