Monday, October 28, 2024

செம்பூவே பூவே ...

 செம்பூவே பூவே ...


காதல் பாடல் எழுதுவது என்பது சாதாரண வேலை அல்ல. 


ஆண் பெண் மோகம் உடல் சார்ந்ததுதான். அந்த மோகத்தை கொண்டாட வேண்டும். அதே சமயம் கொஞ்சம் தப்பினாலும் விரசமாகி முகம் சுளிக்க வைத்து விடும். 


இந்தக் கலையின் முன்னோடி நம் தாத்தா வள்ளுவர்தான். தேன் சொட்ட சொட்ட காதலைப் பிழிந்து இன்பத்துப் பால் வடித்துத் தந்திருக்கிறார். ஒரு அப்பாவும் மகளும் ஒன்றாக அமர்ந்து படிக்கலாம். அம்மாவும், மகனும் ஒன்றாக அமர்ந்து படிக்கலாம். விரசம் துளியும் இல்லாமல், அதே சமயம் காதலின், மோகத்தின் அத்தனை இன்பத்தையும் குறளில் வடித்த பேராசான் அவர். 


தமிழ் சினிமா பாடல்களில் எத்தனையோ பாடல்கள் அது போல் உண்டு. 


என்னை மிக மிக கவர்ந்த பாடல் என்றால் சிறைச் சாலையில் வரும், பூவே செம்பூவே என்ற பாடலைச் சொல்வேன். 


காதல் மதி என்ற கவிஞர் எழுதியது. 


பூவிடம் அந்த மேகம் கேட்கிறது, நான் உன் அருகில் வரலாமா என்று. 


அதற்கு அந்த பூ சொல்கிறது, ஒரு துளி மழைத் துளிதான், அது விழுந்த சிப்பியில் விழுந்தால் அது முத்தாக மாறி விடுவது உனக்குத் தெரியாதா என்று கேட்கிறாள். 


நான் மேகம் போல், அவ்வளவு மென்மையாக உன்னை வருடிப் போவேன் என்கிறான் அவன். அவளோ, திருமணத்துக்கு முன் இதெல்லாம் வேண்டாம் என்பதை மென்மையாகச் சொல்கிறாள்.


ஆண்: செம்பூவே பூவே உன் மேகம்
நான் வந்தால் ஒரு வழியுண்டோ
பெண்: சாய்ந்தாடும் சங்கில் துளி
பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

அவள் பேரழகி. வடித்து வைத்த சிலை மாதிரி இருக்கிறாள். அதுவும் மன்மதன் வடித்த சிலை என்றாள் கேட்கவும் வேண்டுமா?  சிலை என்றால் சும்மா இருக்கவில்லை. புருவ வில்லும், கண் என்ற ஈட்டி என்ற படைகளும் கொண்டு நடக்கும் மன்மத சிலை அவள். 

அந்த சிலையை வடித்த மன்மதன் வேறு யாரும் அல்ல, அவளின் காதலன் தான். அவளை அங்கு தொட்டு சில்மிஷம் செய்கிறான். அவள் வெட்கத்தில் நெளிகிறாள். அவன் அவளை அப்படி தொட்டு தொட்டு பேசுவது ஏதோ விரல் என்ற உளி கொண்டு பல்லவன் சிற்பம் செதுக்கிய மாதிரி இருக்கிறது. 

தூரத்தில் இருந்து பார்த்தால், அவன், அவனுடைய விரல்களால் அவள் உடம்பில் மெருகேற்றுவது போல் இருக்கிறது. 

ஆண்: படை கொண்டு நடக்கும்
மன்மதச் சிலையோ ஹோ...
பெண்: மன்னவன் விரல்கள்
பல்லவன் உளியோ ஹோ...

(தொடரும்) 

Sunday, October 27, 2024

காணாத கண்ணும் கண்ணல்ல

 காணாத கண்ணும் கண்ணல்ல 


"பெரியானை பெரும்பற்ற புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே"


என்றார் நாவுக்கரசர். 


நமக்கு அந்த அளவுக்கு பக்தி விரியுமா என்று தெரியவில்லை. 


நம் வாழ்வில், நம் துணை மேல் நாம் வைக்கும் அன்பும் காதலும் கூட அந்த நிலைக்கு நம்மை இட்டுச் செல்ல முடியும். 


பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே



உன்னைக் காணாத கண்ணும் கண் அல்ல

உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல 

நீ சொல்லாத சொல்லும் சொல் அல்ல 

நீ இல்லாமல் நானும் நான் ஆல் 

 

உன்னைப் பார்பதை விட்டு விட்டு எதை எதையோ பார்த்துக் கொண்டிருக்கிறேன். எதைப் பார்த்தாலும் மனதுக்குள் எதுவும் போவது இல்லை. ஏதோ வறுமையாக இருக்கிறது. கண் முன்னால் காட்சிகள் வந்து போகின்றன. எதுவம் மனதை எட்டுவது இல்லை. இந்தக் கண்கள் இருந்தும் ஒன்றையும் பார்ப்பது இல்லை. 


எங்கே போனாலும் கண்கள் உன்னைத் தேடுகின்றன. எது அவள் அல்ல, அது அவளாக இருக்குமோ, இல்லையே, அதுவும் அவள் இல்லையே என்று நீ இல்லாத எது ஒன்றையும் கண்கள் பார்க்க மறுக்கின்றன. நீ இல்லை என்றால், அடுத்ததுக்கு தாவி விடுகிறது. 


நீ பேசும் போது ஒவ்வொரு சொல்லும் எவ்வளவு இனிமையாக இருக்கிறது. அதே சொல்லை வேறு யாராவது சொன்னால் அது ஏதோ உயிர் இல்லாத சத்தம் மாதிரி இருக்கிறது. நீ சொன்னால் தான் அது பொருள் உள்ள சொல். மற்றவை எல்லாம் வேறு சப்தம் தான்.


உன்னை பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கும் போதே மனம் வேறு எங்கோ போய் விடுகிறது. சட்டென்று விழித்துக் கொண்டு மீண்டும் உன் நினைவுகளில் கொடி போல படர்கிறது. மனம் முழுவதும் நீ தான். எங்கு சுத்தினாலும் உன்னையே வந்து சேர்ந்து விடுகிறது. தாயின் காலைக் கட்டிக் கொள்ளும் பிள்ளை போல். இந்த மனம் இருப்பதே உன்னை சிந்திக்க மட்டும் தான். உன்னை சிந்திக்காத மனம், மனமே இல்லை. 


யோசித்துப் பார்கிறேன். நீ இல்லை என்றால் நான் எதைப் பார்ப்பேன், எதைக் கேட்பேன், எதை சிந்திப்பேன்?  சிந்திக்கவும், பார்க்கவும், கேட்கவும் ஒன்றும் இல்லை. அப்படிப்பட்ட உலகில் நான் இருந்தால் என்ன, இல்லாவிட்டால்தான் என்ன?


நீ இல்லாமல் நானும் நான் அல்ல. 


நீ இல்லாவிட்டால் நான் இருப்பேன். அது நானாக இல்லை. வேறு ஒரு ஆளாக இருப்பேன். வெளி உலகுக்குக்கு என்று சிரித்துப் பேசி ஒரு இயந்திரம் போல இருப்பேன். அது நானே இல்லை. வேறு எதுவோ. 


என்ன ஒரு பெண் மேல் இவ்வளவு காதலா? 


சிற்றின்பமே பேரின்பத்துக்கு வழி. 


இதுவே புரிபடவில்லை என்றால் அது எங்கே புரியப் போகிறது. 


இரண்டாம் வாய்ப்பாடே தெரியவில்லை என்றால் இருபதாம் வாய்ப்பாடு எப்படி புரியும். 


பக்தியும், கடவுளும், ஆழ்வார்களும், நாயன்மார்களும் இருக்கட்டும். 


வாழ்வை உருகி உருகி நேசிப்போம். உடன் இருப்பவர்களை உள்ளன்போடு நேசிப்போம். 


முதல் படி அது. அதில் காலெடுத்து வைப்போம். 


இறுதிப் படி வரும் ஒரு நாள். 


 

Thursday, October 24, 2024

திருக்குறள் - ஆவது போலக் கெடும்

 திருக்குறள் - ஆவது போலக் கெடும் 


என்னதான் அறம் சொன்னாலும், ஊருக்குள்ள அயோக்கியத்தனம் செய்பவன் எல்லாம் நல்லாத்தான் இருக்கான். ஆள், அம்பு, சேனை, அதிகாரம், புகழ் என்று அனுபவிக்கிறார்கள். உண்மை, நேர்மை, அறம் என்று வாழ்பவர்கள் அப்படி ஒன்றும் பெரிதாக பலன் அடைந்த மாதிரி தெரியவில்லை. 


இதை எல்லாம் பார்க்கும் போது, என்ன பெரிய அறம், நாமும் குறுக்கு வழியில் சென்று நாலு காசு பார்த்தால் என்ன என்ற சலிப்பு யாருக்கும் வரும். 


வள்ளுவர் சொல்கிறார், 


"தீய வழியில் வரும் செல்வம், முதலில் பெரிதாக வளர்வது போல் தோன்றும். ஆனால், பின்னாளில், பெரிய கேட்டினைத் தரும்"


என்று. 


பாடல் 


களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

ஆவது போலக் கெடும்


பொருள் 


களவினால் = களவின் மூலம் 


ஆகிய ஆக்கம் = உண்டாக்கிய செல்வம் 


அளவிறந்து = அளவில்லாமல் 


ஆவது = பெருகி வருவது  


போலக்  = போலத் தோன்றி 


கெடும் = பின்னாளில் அழியும் 


ஆமா, என்ன பெரிய கெடுதல். எல்லாம் நல்லாத்தான் இருக்கிறார்கள்....


தவறுகள், களவு செய்வதற்கு முன்னால், ஒருவனிடம் ஏதோ கொஞ்சம் பொருள் இருக்கும். மேலும் மேலும் வேண்டும் என்று ஆசைப்பட்டு தவறான வழியில் சென்று பொருள் தேட ஆரம்பித்தால், தவறான வழியில் வந்த செல்வம் மட்டும் அல்ல, முதலில் சேர்த்து வைத்து இருந்த செல்வமும் போய் விடும்.  raid வந்தால், எது எந்த பணம் என்றா பார்ப்பார்கள். எல்லாவற்றையும் கொண்டு போய் விடுவார்கள். 


அது ஒரு கெடுதல். 


தவறான வழியில் போவதன் முன் ஊருக்குள் நல்ல பேர் இல்லாவிட்டாலும், கெட்ட பேர் இருக்காது. தவறான வழியில் பொருள் தேடி, போலீஸ் பிடித்துக் கொண்டு போய் விட்டால், இருக்கும் கொஞ்ச நஞ்சம் மரியாதையும் போய் விடும். செய்பவனின் மரியாதை மட்டும் அல்ல, அவனுடைய பெற்றோர், உடன் பிறப்பு, மனைவி, பிள்ளைகள் அனைவரின் மரியாதையும் போய் விடும். 


அடுத்த கெடுதல். 


தீய வழியில் பொருள் தேட முனையும் போது சில பல பாவங்களை செய்ய நேரிடும். அந்த வழி அறத்தில் இருந்து ஒருவனை விலக்கி பாவ வழியில் செலுத்தும். புண்ணியம் குறைந்து பாவம் கூடும்.


இந்தப் பிறவியில் பழி சுமந்தது போக வரும் பிறவியில் இந்த பாவத்தை அனுபவிக்க துன்பப்பட நேரிடும்.  இந்த வாழ்க்கையையும் கெடுக்கும். இனி வரப் போகும் வாழ்க்கையையும் கெடுக்கும். 


இந்தப் பிறவியில் கார், பெரிய வீடு, என்று சொகுசாக வாழ்ந்தாலும், அடுத்த பிறவியில் என்னவாக பிறப்பானோ, யார் அறிவார். 


ஜென்ம ஜென்மத்துக்கும் துன்பத்தைத் தேடித் தரும் அந்தப் பொருள் தேவையா?  


"அளவிறந்து கெடும்"...அளவில்லாமல் கெடும். எவ்வளவு கெடுதல் என்று சொல்ல முடியாது. அவ்வளவு கெடுதல் வந்து சேரும். 


யோசிக்க வேண்டிய விடயம். 


Wednesday, October 23, 2024

என் கண்கள் இரண்டும் பல்லாண்டு பாடி...

 என் கண்கள் இரண்டும் பல்லாண்டு பாடி...


என்ன எப்ப பார்த்தாலும் அற இலக்கியங்களும், பக்தி இலக்கியங்களும் தானா என்று கேட்பவர்களுக்கு, இன்று ஒரு புதிய முயற்சி. 


தமிழ் திரைப்படப் பாடல்களிலும் மிக மிக இனிமையான, இலக்கிய தரம் உள்ள பாடல்கள் உண்டு. 


பாடல்களின் இசைப் பின்னணி, பாடுபவர்களின் குரல், அந்தப் பாடலுக்கு நடித்தவர்களின் பின்னணி, பாவங்கள், அந்தப் பாடல் எடுக்கப்பட்ட இடம் என்று பல விடயங்கள் குறுக்கிடுவதால், பாடலின் முழு அர்த்தத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை. 


எனக்குப் பிடித்த சில பாடல்களை,  உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவல். 


முதல் பாடல், அந்தமான் காதலி படத்தில், கண்ணதாசன் எழுதிய "நினைவாலே சிலை செய்து" என்ற பாடல். 


நாம் கடையெழு வள்ளல்களைப் பற்றி பேசும் போது, முல்லைக்கு தேர் தந்தான், மயிலுக்கு போர்வை தந்தான் என்றெல்லாம் படிக்கிறோம். அதெல்லாம் என்ன பெரிய கொடை. என் காதலி முல்லைப் பூவுக்காக தன் கூந்தலையே தந்திருக்கிறாள். தேர் என்ன பெரிய தேர், தன் தலையையே கொடுத்தவள் என் காதலி. 


முல்லைக்கு குழல் தந்த பெண்மைக்கு பெண்மை நீ 


குழந்தையை கையில் வைத்து இருந்தால் கை வலிக்கிறது. கீழே இறக்கி விட்டால் மனம் வலிக்கிறது என்பார்கள். 


என் மனைவி குழந்தையை ஒரு கணம் கூட கீழே விட மாட்டாள். எப்போதும் கையிலேயே தூக்கிக் கொண்டு நடப்பாள். அவ்வளவு அன்பு. 


"பிள்ளைக்கு தோள் தந்த அன்னைக்கு அன்னை நீ".


பெண்களின் குரல் இயற்கையிலேயே இனிமையாக இருக்கும். அதுவும் காலையில் எழுந்து, முகம் கழுவி, பொட்டு வச்சு, ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே காப்பி போடுவது, காலை சமையல் செய்வது என்று இருக்கும் போது அந்த குரலின் இனிமை ...ஒரு பூபாள இராகம் மாதிரி வந்து என் காதில் விழுகிறது. அதைக் கேட்ட பின் தான் நான் எழுவேன்....


"அதி காலையில் நான் கேட்பது நீ பாடும் பூபாளம்"


ரொம்ப நேரம் கண் விழித்து வேலை செய்தால் கண்கள் சிவந்து போய் விடும். அயல் நாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் சொல்வார்கள், "red eye flight" என்று. தூங்காமல் பயணம் செய்தால் கண்கள் சிவந்து போய் விடும். 


ஒரு சில மணி நேரத்துக்கே அப்படி என்றால், நாள் கணக்கில், மாதக் கணக்கில், வருடக் கணக்கில் கண் மூடாமல் இருந்தால் எப்படி இருக்கும். 


போன காதலன் வரவில்லை. அவன் வரவை  ஒவ்வொரு நாளும் அவள் எதிர் நோக்கி இருக்கிறாள். எங்கே கண் மூடினால், அந்த நேரத்தில் அவன் வந்து விடுவான், அவன் வரும் போது அவனை பார்க்க முடியாமல் போய் விடுமோ, அந்த நொடியை இழந்து விடுவோமோ என்ற பயத்தில், கண் மூடாமல் அவன் வரும் வழி பார்த்து காத்து இருக்கிறாள். 


அப்படி இருந்ததில் அவளின் கண்கள் சிவந்து போய் விட்டன. எப்படி ? ஏதோ ஒரு ஓரத்தில் அல்ல. முழு கண்ணும் சிவந்து போய் விட்டது. 


"செவ்வானம் ஆனேன் உனைத் தேடித்  தேடி"


கோல மாவில் கோலம் போட்டால் நன்றாக பளிச்சென்று வெள்ளையாக இருக்கும். கண்ணீரில் உள்ள உப்பு காய்ந்து போனாலும், அது வெள்ளையாக காட்சி தரும். அவள் அழுது அழுது, கண்ணீர் கன்னத்தின் வழி ஓடி, காய்ந்து, அந்த உப்பு பொறிந்த கன்னம், அதில் கோலம் போட்ட மாதிரி இருக்கிறதாம். 


"கண்ணீரிலே நான் தீட்டினேன் கன்னத்தில் கோலங்கள்"


கோவில் கட்டும் போது அதில் வைக்க வேண்டிய சிலைகளும் செய்வார்கள். சிலைகள் செய்து முடித்த பின், கோவில் வேலை பாக்கி இருக்கும். சிலை வெளியே, வெயிலில், மழையில் கிடக்கும். அதை யாரும் வணங்குவது இல்லை. அதற்கு ஒரு பூஜை, அபிஷேகம் எல்லாம் கிடையாது. அதே சிலை, கோவிலுக்குள் பிரதிஷ்டை பண்ணிய பின், எல்லோரும் பக்தியோடு வணங்குவார்கள். 


அவளுடைய நினைவையே சிலையாக செய்து வைத்துக் கொண்டு அவன் காத்து இருக்கிறான். அவளோடு பேசியது, விளையாடியது, கட்டிப் பிடித்தது, என்று ஒவ்வொரு நினைவும் ஒரு சிலை போல் தத்ரூபமாக அவன் மனதில் இருக்கிறது. என்ன பலன்? அவள் இல்லாத அவளின் நினைவால் ஒரு பலனும் இல்லை. அவள் வந்து விட்டால், அவளோடு அவற்றை சொல்லி சொல்லி மகிழலாம். 


"நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்,

திருக் கோவிலே ஓடி வா"


நீ தான் கோவில். நீ இருந்தால்தான் என் நினைவுகளுக்கு, ஒரு அர்த்தம் பிறக்கும். 


ஊரை விட்டுப் போனவன் இன்னும் வரவில்லை. என்ன ஆனானோ என்று தெரியவில்லை. தெருவில் போகும் அவனைப் போன்ற சாயலில் உள்ள ஆண்களை பார்க்கும் போது அவளுக்கு மனதுக்குள் ஒரு ஆசை, அது அவனாக இருக்கக் கூடாதா என்று. அவள் மனதில், அவன் எப்போதும் நீங்காமல் இடம் பெற்று இருக்கிறான். பார்க்கும் இடம் எல்லாம் அவனாகவே தெரிகிறது. அவள் இருக்கும் வரை அவனும் இருப்பான். 


"என் கண்கள் இரண்டும் பல்லாண்டு பாடி"


அவள் கண்கள் அவன் இருக்கிறான், இருக்கிறான், அங்கே இருக்கிறான், அவனாக இருக்குமோ, இவனாக இருக்குமோ என்று அவன் உயிரோடு இருப்பதாகவே கருதிக் கொண்டு பார்த்து அலைகிறது. 


வாய் தான் பாடும். கண்களும் பாடும். 


கண் மூடி இந்தப் பாடலை ஒரு முறை கேட்டுப் பாருங்கள். 


உள்ளுக்குள் ஏதோ உருகி ஓடுவது  போல் இருக்கும்.  

Monday, October 21, 2024

கம்ப இராமாயணம் - இராமன் என்ற மானிடன் - மகன்

 கம்ப இராமாயணம் - இராமன் என்ற மானிடன் - மகன்  

https://interestingtamilpoems.blogspot.com/2024/10/blog-post_21.html



பல பணக்காரர்கள் வீடுகளில் உள்ள பிள்ளைகள் அங்கு வேலை செய்யும் ஆட்களை எப்படி நடுத்துகிறார்கள் என்று நாம் கண்டும் கேட்டும் இருக்கிறோம். தன் தந்தையின், தாத்தாவின் வயது ஒப்ப வேலையாளை வா போ என்று ஒருமையில் அழைப்பது, திட்டுவது, அவமானப்படுத்துவது என்றெல்லாம் செய்கிறார்கள். காரணம், அந்தப் பிள்ளைகளின் பெற்றோர் பெரிய பணக்காரர்கள், அல்லது அதிகாரத்தில் உள்ளவர்கள் என்பதால். 


வீட்டின் செல்வமும், அதிகாரமும் அந்த இளம் பிஞ்சுகளின் மனதில் ஏறி விடுகிறது. அதை பெற்றோரும் கண்டிப்பது இல்லை. 


இராமனை அழைத்து வரும்படி முதல் அமைச்சனான சுமந்தரனிடம் தசரதன் கூறுகிறான். சுமந்திரனும் இராமன் இருக்கும் இடம் செல்கிறான். 


"அப்பா வரச் சொன்னார் .. ஒரு வேலை இருக்கு...என் கூட வா" என்று சுமந்திரன் இராமனை அழைக்கிறான். என்ன வேலை என்று சொல்லவில்லை.  


"சரி சரி வெளியே காத்து இரு, வர்றேன்" என்று இராமன் சொல்லி இருக்கலாம். சொன்னாலும் யாரும் குறை காணப் போவது இல்லை. 


அல்லது, என்ன வேலை, இப்பவே வரணுமா, நாளைக்கு பாத்துக்க முடியாதா, என்று ஆயிரம் கேள்விகள் கேட்டு இருக்கலாம். 


அல்லது, "ஆமா, இந்த அப்பாவுக்கு ஒரு வேலை இல்லை. சும்மா பொழுது போகலைனா என்னைய கூப்பிட்டு உக்கார வச்சு பழம் கதைகள் பேசி 


அதெல்லாம் இராமன் செய்யவில்லை. 


சுமந்திரன் சொன்னதுதான் தாமதம், "இதோ வர்றேன் என்று உடனே கிளம்பி விட்டான்...மேகம் மிதந்து வருவது போல் வந்தான் " என்கிறான் கம்பன். 


உள்ளே போய் உடை மாற்றி, முகம் கழுவி, தலை கிலை சீவி, கொஞ்சம் அலங்காரம் செய்து கொண்டு வந்திருக்கலாம். அதுக்கெல்லாம் நேரம் இல்லை. அப்பா கூப்பிடுகிறார், சுமந்திரன் வந்திருக்கிறான்  என்றால் எதாவது முக்கியமான வேலையாகத்தான் இருக்கும் என்று உடனே கிளம்பி விட்டான். 


பாடல் 


கண்டு கை தொழுது “ஐய! இக்    கடல் இடைக் கிழவோன்

‘உண்டு ஒர் காரியம், வருக ‘என     உரைத்தனன்“ எனலும்

புண்டரீகக் கண் புரவலன்     பொருக்கென எழுந்து, ஓர்

கொண்டல் போல் அவன் கொடி நெடும்     தேர் மிசைக் கொண்டான்.


பொருள் 


கண்டு = சுமந்திரன், இராமனைக் கண்டு 


கை தொழுது = கை கூப்பி 


“ஐய! = ஐயனே 


இக் = இந்த 

    

கடல் இடைக் = கடல்களுக்கு நடுவில் உள்ள உலகின் 


கிழவோன் = தலைவன் (தயரதன்) 


‘உண்டு ஒர் காரியம், வருக ‘ = ஒரு வேலை இருக்கிறது, வா 


என = என்று 


உரைத்தனன்“ = கூறினான் 


எனலும் = என்று சொன்னவுடன் 


புண்டரீகக் = தாமரை போன்ற 


கண் = கண்களை உடைய 


புரவலன் = காப்பவனான இராமன் 


பொருக்கென = சட்டென்று 


எழுந்து = எழுந்து 


ஓர் = ஒரு 


கொண்டல் = மழை மேகம்  


 போல் = போல 


அவன் = சுமந்தரனின் 


கொடி நெடும் = நீண்ட கொடியை உடைய 


தேர் மிசைக் கொண்டான் = தேர் மேல் ஏறிக் கொண்டான் 


அப்பா மேல் அவ்வளவு மரியாதை. அப்பா வா ன்னு சொன்னா உடனே கிளம்பி வருகிறான் இராமன். 


இன்றுள்ள தலைமுறையை நினைத்துப் பார்த்தால்...


என்ன சொன்னாலும் ஆயிரம் கேள்வி, முடியாது, இப்ப முடியாது, என்னால் முடியாது, வேற வேலை இ இருக்கு, வேற வேலை வெட்டி இல்லையா....என்று ஆயிரம் பதில்கள் வரும். 


இந்தப் பாடல்களையெல்லாம் பிள்ளைகளுக்குச் சொல்லி கொடுக்கணும்.  

Thursday, October 17, 2024

திருக்குறள் - கள்ளாமை - உள்ளத்தால் உள்ளலும் தீதே

 திருக்குறள் - கள்ளாமை - உள்ளத்தால் உள்ளலும் தீதே 


களவு ஏன் நிகழ்கிறது?


மற்றவனிடம் உள்ள பொருள் நம்மிடம் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆசையால் நிகழ்கிறது. அது போல நமக்கு ஒரு கார் இருந்தால் எப்படி இருக்கும், அவனிடம் உள்ளது போல் ஒரு சமீபத்திய கைபேசி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், அவன் மனைவியைப் போல எனக்கும் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை. 


அடுத்த கட்டம், அவனுக்குத் தெரியாமல் அதை அவனிடம் இருந்து எடுத்துக் கொள்ள நினைப்பது. 


கடைசியில், எடுத்துக் கொள்வது. 


உலகியல் சட்டம் முதல் இரண்டை தவறு என்று சொல்லுவது இல்லை. அது மனதில் நிகழ்வது. ஆசைப்படுவதும், கவர்ந்து கொள்ள நினைப்பதும் குற்றம் அல்ல. கவர்ந்தால் குற்றம். 


அறம் என்பது சட்டத்துக்கு மேலானது. 


மற்றவன் பொருளை அவன் அறியாமல் எடுத்துக் கொள்வோம் என்று நினைத்தாலே அது களவுதான் என்கிறார் வள்ளுவர். 


மனதால் நினைப்பது கூடத் தவறு என்கிறார். 


பாடல் 


உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்


\பொருள் 


உள்ளத்தால் = மனதால் 


உள்ளலும் = நினைப்பதும் 


தீதே = தீமையானதே 


பிறன்பொருளைக் = மாற்றான் பொருள்ளை 


கள்ளத்தால் = மற்றவன் அறியா வண்ணம் 


கள்வேம் = கவர்ந்து கொள்வோம்  


எனல்  = என்று நினைத்தல் 



மனதால் நினைப்பதே குற்றம் என்றால், உண்மையிலேயே களவு செய்வது பெரும் குற்றம் என்பது சொல்லாமலேயே புரியும். 


இது துறவறத்தில் வரும் அதிகாரம், குறள். 


துறவிக்கு பிறன் பொருளை நினைப்பதும் தவறு. 


இல்லறத்தில் உள்ளவன் அபப்டி இருக்க முடியாது. 


இல்லறத்தில் உள்ள ஒருவன் ஆசைப்படுவது இயல்பு. நம் மனைவிக்கும் அது போல நல்ல சேலை வாங்கித் தர வேண்டும், நம் பிள்ளைகளும், அது மாதிரி பெரிய பள்ளியில் படிக்க வேண்டும், என்றெல்லாம் நினைத்தால் தான் இல்லறம் சிறக்கும். 


எந்தப் பொருள் மீதும் பற்று இல்லை என்றால், இல்லறம் படுத்து விடும். உன் மேல் எனக்குப் பற்று இல்லை என்று மனைவி கணவனை விட்டு விலகி விடுவாள்.  


இல்லறத்தில் இருப்பவன் ஆசைப்படலாம். ஆனால் அதை களவின் மூலம் அடைய ஆசைப் படக் கூடாது. 


துறவி ஆசையே படக் கூடாது. 


எல்லோருக்கும் ஒரே அறம் சொல்ல முடியாது. 


"உள்ளத்தால் உள்ளலும்". அது மனதால் நினைப்பதும் ? மனதால் தானே நினைக்க முடியும்?  நினைப்பதும் தீதே என்று சொல்லி இருக்கலாமே? எதற்கு உள்ளத்தால் என்று போட வேண்டும்?  பரிமேலழகர் கூறுகிறார், துறவியின் உள்ளம் மற்றவர்கள் உள்ளம் போல் அல்ல. அது சிறப்பானது. அந்த சிறந்த மனத்தால் கள்வேம் என்று நினைக்கக் கூடாது என்றார். 


"எனல்". எனல் என்றால் என்ன என்பதை அறிய சற்று இலக்கணம் படிக்க வேண்டும். 


வியங்கோள் என்று ஒரு இலக்கணக் குறிப்பு உண்டு.  


வியம் என்றால் ஏவுவது, கட்டளை இடுவது என்று பொருள். ஏவலை கொள்வது என்பதால், அது வியம் + கொள் = வியங்கோள் என்ற பெயர் பெற்றது. 


இந்த வியங்கோள் பொதுவாக நான்கு விதமான இடங்களில் பயன்படுத்தப்படும். 


வாழ்த்தல், வைதல், வேண்டல், விதித்தல் என்பவை அந்த நான்கும். 


இந்த வியங்கோள் வினைமுற்று (முற்றுப் பெற்ற வினை அல்லது செயல்) விகுதி க அல்லது ய என முடியும். 


வாழ்க

வீழ்க 

வருக

அமர்க 

உண்க 

வாழிய (பல்லாண்டு) 

இது எதிர் மறையில் வரும் போது அல் என்ற விகுதியை பெறும்.


வாரல்  (வராதே)

சேறல்  (சேராதே)


இந்தக் குறளில் "எனல்" என்பது எதிர்மறை வியங்கோள் வினைமுற்று விகுதி. 


அதாவது கள்ளத்தால் கள்வேம் எனல் என்றால் 


களவாணித்தனமாக எடுத்துக் கொள்வோம் என்று பொருள் கொள்ளக் கூடாது. 


எதிர்மறையாக பொருள் கொள்ள வேண்டும். 


கள்ளத்தால் எடுத்துக் கொள்ளக் கூடாது 


என்பது அதன் பொருள். 


இலக்கணம் தெரியாவிட்டால் பொருள் மாறிப் போய்விடும். 


துறவிகள் பிறர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது. 








Tuesday, October 15, 2024

கோவில் மூத்தத் திருபதிக்கம் - புறங்காட்டில் அப்பன் ஆடும் திருவாலங்காடு

 கோவில் மூத்தத் திருபதிக்கம் - புறங்காட்டில் அப்பன் ஆடும் திருவாலங்காடு 



இறைவனை வழிபடும் இடம் எப்படி இருக்க வேண்டும்?


சுத்தமாக, வெளிச்சமாக, பூ, சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம் போன்ற நறுமணம் வீசும் இடமாக, பார்த்தாலே மனதில் ஒரு பரவசம் வரும்படி இருக்க வேண்டும் அல்லவா?


மாறாக, இருண்டு, கரி பிடித்துப் போய், சாம்பலும், அழுக்கும் நிறைந்து கிடந்தால் பக்தி வருமா?


வர வேண்டும். 


இறைவன் படைப்பில் எல்லாம் ஒன்று என்ற எண்ணம் வர வேண்டும். 


இது சரி, இது தவறு என்று எப்படிச் சொல்ல முடியும். நமக்கு பிடித்தது, பிடிக்காதது என்று சொல்லலாம். அது ஒன்றும் பெரிய விடயம் அல்ல. நமக்குப் பிடித்தது இறைவனுக்குப் பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் இல்லை. 


சிவகோச்சாரியார் படைத்த பூவும், மாலையும், சந்தனமும் இறைவனுக்குப் பிடிக்கவில்லை. கண்ணப்ப நாயனார் படைத்த மாமிசம் பிடித்தது. 


அவன் உள்ளம் யாருக்குத் தெரியும்?


காரைக்கால் அம்மையார், இறைவனை சுடுகாட்டில் நடமாடும் வடிவில் கண்டு வணங்குகிறார். 


"அது ஒரு சுடுகாடு. அங்கங்கே பிணங்கள் எரித்து கொண்டிருக்கின்றன. பிணம் எரியும் போது அவற்றின் சதை உருகும். அது நெய் போல் வழியும். அந்த உருகிய சதையை எடுத்து வாயில் போட்டு தின்னுகின்றன அங்குள்ள பேய்கள். சுடுக்காட்டில் கிடக்கும் மண்டை ஓடுகளை ஒன்றாக சேர்த்துக் கட்டி பூ மாலை போல் போட்டுக் கொள்கின்றன. அப்படி அங்கே உள்ள ஒரு பேய்க்கு ஒரு குழந்தைப் இருக்கிறது. குட்டிப் பேய். அந்த குழந்தைக்கு அதன் தாய் "காளி" என்று பெயரிட்டு இருக்கிறாள். சுடுகாட்டில் பறக்கும் சாம்பல் அதன் உடல் முழுவதும் படிந்து கிடக்கிறது. காளிக்குப் பசிக்கும் போது, தன் முலையின் மேல் பதிந்த சாம்பலை சுத்தம் செய்து தாய்ப் பேய் காளிக்கு உணவு ஊட்டும். அப்படி ஊட்டும் தாய் எங்கோ போய் இருக்கிறாள். வர தாமதமாகிறது. பசியால் அழுத காளி அப்படியே சோர்ந்து உறங்கி விட்டது. அப்படிப்பட்ட பேய்கள் உலாவும் காட்டில் நடனம் புரிபவன் என் அப்பன் சிவ பெருமான்"


என்று இடுகாட்டில் நடம் புரியும் இறைவனை வணங்குகிறாள். 


பாடல் 


விழுது நிணத்தை விழுங்கி யிட்டு, வெண்தலை மாலை விரவப் பூட்டிக்

கழுதுதன் பிள்ளையைக் காளி யென்று பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப்

புழதி துடைத்து, முலைகொ டுத்துப்போயின தாயை வரவு காணா

தழுதுறங் கும்புறங் காட்டில் ஆடும் அப்ப னிடம்திரு ஆலங் கா டே


பொருள் 


விழுது நிணத்தை = நெய் பசை நிரம்பிய மாமிசம், தீயில் வெந்த உடல் 


விழுங்கி யிட்டு = வாயில் போட்டு விழுங்கி 


வெண்தலை = மண்டை ஓடுகளை 


மாலை விரவப் பூட்டிக் = மாலையாக பெரிதாக அணிந்து கொண்டு 


கழுது = பெண் பேய் 


தன் பிள்ளையைக் = அதன் பிள்ளையை 


காளி யென்று = "காளி" என்று 

 

பேரிட்டுச் = பெயர் இட்டு 


சீருடைத் = தன்னுடைய உடையை நீக்கி 


தாவளர்த்துப் = தாவளம் என்றால் உணவு பரிமாறும் இடம். தாய்ப்பால் தர பிள்ளையை எடுத்து 


புழதி துடைத்து = தன் மேல் படிந்து கிடக்கும் புழுதியை துடைத்து 


முலைகொ டுத்துப் = முலை கொடுத்து 


போயின = வெளியே சென்ற 


தாயை  = தாயின் 


வரவு காணா = வரவைக் காணாத 


தழுதுறங் கும் = அழுது உறங்கும் 


புறங் காட்டில் = சுடுகாட்டில் 


ஆடும் = திருநடனம் புரியும் 


அப்ப னிடம் = அப்பன் சிவ பெருமான் இருக்கும் இடம் 


திரு ஆலங் கா டே = திருவாலங்காடு என்ற திருத்தலம். 


மனதில் பக்தி வந்து விட்டால், எல்லாம் சிவமயம்தான். 


நோக்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்து இருப்பவன்.


மனிதனின் ஆட்டம் எல்லாம் அடங்கும் இடம் சுடுகாடு. அங்கே ஆடிக் கொண்டிருக்கிறான் அவன். 


வாழ்க்கையில் பயப்பட ஒன்றும் இல்லை. அது அப்படி ஆகி விடுமோ, இது இப்படி ஆகி விடுமோ, அது நடக்காவிட்டால் எனன் செய்வது, இது நடந்து விட்டால் என்ன செய்வது என்ற பயமே வேண்டாம். 


இடுக்காட்டில், பேய்களுக்கு மத்தியில் அமர்ந்து இருக்கும் காரைக்கால் அம்மையாருக்கு பயம் இல்லை. காரணம், சிவன் அங்கே இருக்கிறான் என்று அவள் நம்பினாள். 


கடவுள் நம்பிக்கை இருந்தால் பயம் ஏன் வருகிறது. கடவுளால் நம் துன்பத்தைப் போக்க முடியாதா? அல்லது போக்க மாட்டான் என்று நினைப்பு இருக்குமோ?


பயம் இருந்தால், இறை நம்பிக்கை இல்லை என்று அர்த்தம். 


அவன் பார்த்துக் கொள்வான் என்றால் பயம் ஏன் வருகிறது?