Poems from Tamil Literature
Saturday, September 13, 2025
கம்ப இராமாயணம் - கொடுந்துயர்க் குளிப்பது -2/2
Friday, September 12, 2025
கம்ப இராமாயணம் - கொடுந்துயர்க் குளிப்பது - 1/2
கம்ப இராமாயணம் - கொடுந்துயர்க் குளிப்பது -1/2
துக்கத்தை எப்படி கையாள்வது ?
எந்த ஒரு உணர்வையும் கையாள்வது என்றால் அதில் பயிற்சி வேண்டும். துக்கம் என்றாலே காத தூரம் ஓடி விடுகிறோம். அதை எப்படியாவது தவிர்க்க எண்ணுகிறோம். இப்படி பயந்து பயந்து ஓடிக் கொண்டே இருந்தால், ஒரு நாள் உண்மையிலேயே ஒரு துன்பம் வந்தால் அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமலேயே போய் விடும். சின்ன துன்பம் வந்தால் கூட தவித்துப் போய் விடுவோம்.
துன்பத்தை கையாளத் தெரிய வேண்டும். அதற்காக எங்கு போய் பயிற்சி எடுப்பது?
எங்கும் போக வேண்டாம். வரும் துன்பங்களை ஏற்றுக் கொண்டு அவற்றை கடந்து போகப் பழக வேண்டும்.
சரி துன்பமே வராவிட்டால் என்ன செய்வது?
அதற்குத்தான் விரதம், தூக்கம் விழிப்பது என்று வைத்து இருந்தார்கள். மாதத்தில் ஒரு நாள் சாப்பிடாமல் இருந்து பார். பசிக்கும். தலை வலிக்கும். சோர்வு வரும். ஆனால், பழகி விடும். அப்புறம், அது ஒரு பெரிய விடயமாகத் தெரியாது. அது போல் ஆண்டில் ஒரு நாள் சிவராத்திரி அன்று தூக்கம் தவிர்த்துப் பார்க்க வேண்டும். கடினம்தான். அவற்றை ஏற்றுப் பழகிக் கொண்டால் பின் நாம் எதிர்பார்க்காமல் பசி தூக்கம் போன்ற துன்பங்கள் வரும் போது அவற்றை எளிதில் நம்மால் சமாளிக்க முடியும்.
நான் பார்த்தவரை, நாம் துக்கம் அனுஷ்டிப்பது என்பதை நாம் சரியாக செய்வதில்லையோ என்ற சந்தேகம் உண்டு. துக்கம் வந்தால் அதை தள்ளிப் போட்டு விடுகிறோம். அதில் பல சடங்குகளைப் புகுத்தி அந்த உணர்வுகளை மழுங்கப் பண்ணி விடுகிறோமோ என்று தோன்றுகிறது. மனம் அந்த சமய சடங்குகளில், அதற்கு வேண்டிய சாமான்கள் வாங்குவது, வீட்டை சுத்தம் செய்வது, சடங்கு செய்யும் ஆட்களை கொண்டு வருவது,சுற்றம்/ நட்பை அழைப்பது, அதில் யாரை அழைக்க வேண்டும், யாரை அழைக்க வேண்டாம் என்ற சச்சரவு வேறு.
இதில் மனம் போனால் துக்கத்தில் எங்கே மனம் போகும்.
அனுபவிக்காமல் விட்ட துக்கம் எங்கோ போய் ஒளிந்து கொள்கிறது. பின், அது வேறு வேறு விதங்களில் வெளிப்படுகிறது.
ஜடாயு இறந்து போகிறார்.
இராமன் துக்கத்தில் புலம்புகிறான். அது தான் சரியான ஒன்று.
ஆனால், இலக்குவன் அதை மறுக்கிறான்.
அவன் என்ன சொன்னான் என்று நாளை சிந்திப்போம்.
Thursday, August 21, 2025
கம்ப இராமாயணம் - மாரீசன் - புலவியினும் வணங்கா முடி
கம்ப இராமாயணம் - மாரீசன் - புலவியினும் வணங்கா முடி
https://interestingtamilpoems.blogspot.com/2025/08/blog-post.html
வில்லன் இல்லை என்றால் கதாநயாகன் இல்லை.
கதாநாயகனின் பெருமை எல்லாம் வில்லனைச் சேர்ந்தது.
இராவணன் சீதையைச் தூக்கிச் செல்லவில்லை என்றால், பதினாலு வருடம் இராமனும், சீதையும் காட்டில் இருந்து விட்டு பின் நாட்டுக்குப் போய் இருப்பார்கள். அதில் இராமனின் பெருமை என்ன இருக்கிறது ? அப்பா காட்டுக்குப் போகச் சொன்னார். போனான். பின் வந்தான் என்று கதை முடிந்து இருக்கும்.
இராமனின் ஆற்றலை காட்ட ஒரு இராவணன் வேண்டும்.
இராமன் தெருவோரம் போகும் ஒரு மெலிந்த ஒருவனை வென்றான் என்றால் அது ஒரு செய்தி கூட இல்லை. கொசுவை அடித்துக் கொல்வது என்ன பெரிய செய்தியா?
இராமனின் பெருமை உயர வேண்டும் என்றால் அவன் இராவணன் என்ற மிகப் பெரிய வீரனை, தவ வலிமை உடையவனை, பேரும் புகழும் கொண்டவனை வென்றான் என்ற சொல்ல வேண்டும்.
இராமன் வென்ற இராவணன் எப்பேற்பட்டவன் என்று கம்பன் விவரித்துக் கொண்டு போகிறான்.
எவ்வளவுக்கு எவ்வளவு இராவணனை தூக்கிப் பேசுகிறானோ, அதை விட ஒரு படி இராமன் புகழ் வரப் போகிறது என்று அர்த்தம். அப்பேற்பட்ட இராவணனை, இராமன் வென்றான் என்று வர வேண்டும்.
"சிவன், திருமால், பிரமன் ஆகிய மூவரும், இராவணனை வெல்ல முடியாது. மும்மூர்திகளாலும் வெல்ல முடியாதவன் என்றால் அவனை வேறு யாரால் வெல்ல முடியும்.
எப்பேற்பட்ட ஆள் ஆனாலும், வீட்டில், படுக்கை அறையில், மனைவியிடம் அல்லது காதலியிடம் இறங்கி வந்தே ஆக வேண்டும். அது தான் கலவியில் இன்பம். அதட்டி, மிரட்டி, இன்பம் அனுபவிக்க முடியுமா?
ஆனால், இராவணன், படுக்கை அறையிலும் வணங்கா முடி உள்ளவனாம். அப்படி என்றால் வேறு எங்கு வணங்கி இருப்பான்? "
பாடல்
புலியின் அதள் உடையானும், பொன்னாடை
புனைந்தானும், பூவினானும்
நலியும் வலத்தார் அல்லர்; தேவரின் இங்கு
யாவர், இனி நாட்டல் ஆவார்?
மெலியும் இடை, தடிக்கும் முலை, வேய் இளந்
தோள், சேயரிக் கண், வென்றி மாதர்
வலிய நெடும் புலவியினும் வணங்காத
மகுட நிரை வயங்க மன்னோ.
பொருள்
புலியின் = புலியின்
அதள் = தோலை
உடையானும் = உடையாகக் கொண்ட சிவனும்
பொன்னாடை = பட்டு , பீதாம்பரம்
புனைந்தானும் = உடுத்திய திருமாலும்
பூவினானும் = தாமரை பூவில் தோன்றிய பிரமனும்
நலியும் = (இராவணனை) வெல்லும்
வலத்தார் அல்லர் = வல்லமை உடையவர்கள் அல்ல
தேவரின் = அப்படி இருக்கும் போது, தேவர்களில்
இங்கு யாவர் = யார் இங்கு
இனி நாட்டல் ஆவார்? = இனி அவனை வெல்லப் போக்கிரார்கள்
மெலியும் இடை = மெலிந்து கொண்டே போகும் இடுப்பு
தடிக்கும் முலை = தடிக்கும் மார்பகங்கள்
வேய் = மூங்கில் போல்
இளந் தோள் = இளமையான தோள்கள்
சேயரிக் கண் = சிவந்த கண்கள்
வென்றி மாதர் = வெற்றி கொள்ளும் பெண்கள்
வலிய நெடும் புலவியினும் = நீண்ட கலவி நேரத்திலும்
வணங்காத = வணங்காத
மகுட நிரை வயங்க மன்னோ = மகுடங்களை கொண்டவன்
படுக்கை அறையில் கூட தலை வணங்காதவன்.
தனிமையில், மோகம் கொண்ட நேரம், ஆண், பெண்ணிடம் அடிமையாவது இயல்பு.
முருகன், வள்ளியிடம் "நீ எனக்கு என்ன ஆணை இடுகிறாயோ அதை செய்வேன் என்று வள்ளியின் பாதங்களை பிடித்துக் கொண்டு கேட்டானாம்".
"பணியா என வள்ளி பதம் பணியும்,
தணியா அதி மோக தயாபரனே"
என்பது அருணகிரி வாக்கு
அவள் காலடியில் பணிந்து நிற்பானாம்.
அதுதான் ஆண்மை. பெண்ணிடம் தோற்க வேண்டும். என் முன்னால் அவன் பணிந்து நிற்கிறான் என்று அவள் பெருமை கொள்ள வேண்டும். அது உயர்வு தாழ்வு அல்ல. அன்பின் வெளிப்பாடு.
இராவணனுக்கு அதெல்லாம் தெரியாது. அங்கும் கூட அவன் வணங்கா முடியன்.
அதுதான் அரக்க குணமோ ?
Thursday, July 31, 2025
நாலாயிர திவ்ய பிரபந்தம் - பசி தீராக் குழந்தை
நாலாயிர திவ்ய பிரபந்தம் - பசி தீராக் குழந்தை
https://interestingtamilpoems.blogspot.com/2025/07/blog-post_31.html
சில வீடுகளில் ஆண் பிள்ளைகள் மிகுந்த பசியோடு இருக்கும். எதை வைத்தாலும் சில நிமிடங்களில் காலி பண்ணி விடுவார்கள். அம்மாக்களுக்கு பிள்ளை நன்றாக சாப்பிடுகிறானே என்று ஒரு மகிழ்ச்சி இருந்தாலும், "ஒண்ணு செஞ்சா ஒரு நாலு நாளைக்கு வைக்க விட மாட்டான்...அது காலி ஆகிற வரையில் அவனுக்கு தூக்கம் வராது" என்றும் அலுத்துக் கொள்வார்கள்.
தோசை செய்து போட்டால் நாலு, அஞ்சு, ஆறு என்று போய்க் கொண்டே இருக்கும். வளரும் பிள்ளைகள். ஓடி ஆடி வந்திருப்பான். என்ன போட்டாலும் பசி எளிதில் அடங்காது.
இந்த உள்ளூரில் இந்த ஆட்டம் பாட்டத்துக்கே இவ்வளவு பசிக்கும் என்றால், உலகையே படைத்து, காத்து அருளும் பெருமாளுக்கு எவ்வளவு பசிக்கும் என்று நினைக்கிறார் பேயாழ்வார்.
"மண்ணை உண்டு, அரக்கியின் முலைப் பால் உண்டு, அதுவும் போதாது என்று ஆயர் பாடியில் உள்ள வீடுகள் எல்லாம் சென்று வெண்ணையை திருடி உண்டான். இப்படி தன் பிள்ளை திருடித் தின்கிறானே என்று போபம் கொண்டு அவனை சின்ன கையிற்றால் யசோதை கட்டிப் போட்டாள்"
என்கிறார்.
பாடல்
மண்ணுண்டும் பேய்ச்சி முலையுண்டு மாற்றாதாய்,
வெண்ணெய் விழுங்க வெகுண்டு,ஆய்ச்சி – கண்ணிக்
கயிற்றினால் கட்டத்தான் கட்டுண் டிருந்தான்,
வயிற்றினோ டாற்றா மகன்.
பொருள்
மண்ணுண்டும் = மண்ணைச் சாப்பிட்டு. இந்த உலகையே உண்டு.
பேய்ச்சி முலையுண்டு = பூதனை என்ற அரக்கியின் முலைப் பாலைக் குடித்து
மாற்றாதாய் = பசி அடங்காமல்
வெண்ணெய் விழுங்க = ஆயர்பாடியில் உள்ள வீடுகளில் வெண்ணையை திருடி உண்டதால்
வெகுண்டு = கோபம் கொண்டு
ஆய்ச்சி = யசோதை
கண்ணிக் கயிற்றினால் = சிறு சிறு கயிறுகள் கொண்டு முடி போட்ட கையிற்றால்
கட்ட = கட்டிப் போட
தான் = அவனே
கட்டுண் டிருந்தான் = கட்டுக்குள் இருந்தான்
வயிற்றினோ டாற்றா மகன் = வயிறு ஒரு போதும் திருப்தி அடையாத மகனான கண்ணபிரான்.
அது என்ன "கண்ணிக் கயிற்றினால்" ?
கயிறு இருந்தால் தானே கட்டிப் போடுவார்கள் என்று ஊரில் உள்ள கயிறை எல்லாம் துண்டு துண்டாய் வெட்டிப் போட்டு விடுவானாம் கண்ணன்.
அவனைக் கட்டிப் போட கயிறு எங்கே என்று தேடி, எதுவும் கிடைக்காமல், இருக்கிற துண்டு துண்டு கயிறுகளை எல்லாம் ஒன்றோடு ஒன்று முடிச்சுப் போட்டு நீண்ட கயிறை உருவாக்கினாள் யசோதை. எனவே "கண்ணிக் கயிறு" க். கண்ணி என்றால் சிறு துண்டு.
உலகையே உண்ட அவனுக்கு இந்த முடிச்சுப் போட்ட கயிறு எம்மாத்திரம்.
இருந்தாலும் கட்டுண்டு கிடந்தான்.
காரணம்,
இறைவனை நமது பலத்தால் பற்ற முடியாது. அது உடல் பலம் என்றாலும் சரி, மூளைப் பலம் என்றாலும் சரி. படித்து, ஆராய்ச்சி பண்ணி கண்டு பிடித்து விடுகிறேன் என்றால் முடியாது. ஆனால், அன்புக்கு அவன் கட்டுப் படுவான். அன்பால் அவனை எளிதாக கட்டி விடலாம். அதுவும், துண்டு துண்டு கயிற்றுக்கு அவன் கட்டுண்டு நிற்பான்.
இரண்டாவது, வினை, இறைவனையும் விடாது. வெண்ணையை திருடி உண்டது குற்றம் தானே. அதற்கு தண்டனை கையிற்றால் கட்டப்பட்டு இருப்பது. ஒரு குறியீடு. ஒரு அடையாளம். வினை யாரையும் விடாது. விளையாட்டாகச் செய்தேன், தெரியாமல் செய்தேன், அதுக்குக் கூட எனக்கு உரிமை இல்லையா என்றெல்லாம் வாதம் பண்ணி பலன் இல்லை.
சிறு பிள்ளையாக இருந்த போது, விளையாட்டாக கூனி முதுகில் களி மண் உருண்டையை அம்பில் சொருகி அவள் முதுகில் அடித்ததன் பலன் நமக்குத் தெரியும்.
எல்லாவற்றையும் விட்டு விடுவோம். பாசுரத்தை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள். எவ்வளவு இனிமையாக இருக்கிறது என்று தெரியும். பொருள் தெரிந்து படிக்கும் போது அதன் இனிமை மேலும் கூடும்.
Thursday, July 10, 2025
திருக்குறள் - நிச்சயமான கேடு
திருக்குறள் - நிச்சயமான கேடு
சிலர், அவர்களின் கெட்ட குணங்களை, ஏதோ பெரிய சாதனை, பெருமை போல் சொல்லிக் கொள்வார்கள்.
உதாரணமாக, "எனக்கு பழியா கோபம் வரும், முணுக்கென்றால் எனக்கு மூக்கு மேலே கோபம் வரும். கோபம் வந்தால் என்ன செய்கிறேன் என்று எனக்கே தெரியாது.."என்றெல்லாம் பெருமையாக பேசிக் கொள்வார்கள்.
சில தொழில் அதிபர்கள், நிறுவன மேலாளர்கள் தங்கள் கோபத்தால் அங்கே வேலை செய்யும் ஆட்களை மிரட்டி வேலை வாங்குவார்கள். வேலை நடக்கும். எனவே, அவர்கள் தங்கள் கோபத்தை பெரிய திறமை என்று நினைத்துக் கொள்வார்கள்.
வீட்டில் கூட சில பெண்மணிகள், வீட்டில் வேலை பார்க்கும் பெண்களை அதட்டி, உருட்டி, எதற்கு எடுத்தாலும் கோபித்து, திட்டி, வேலை வாங்குவார்கள். "ஏதோ நான் இருக்கிறேனோ, வேலை எல்லாம் ஒழுங்கா நடக்குதோ....நான் இல்லேனா தெரியும்" என்று அவர்களின் நிர்வாகத் திறமை பற்றி பெருமையாக சொல்லிக் கொள்வார்கள்.
வள்ளுவர் சொல்கிறார்,
"சினத்தை ஏதோ பெரிய திறமை, சிறப்பு என்று நினைத்து செயல்படுபவன், அந்தச் சிறப்பு வெகு நிச்சயமாக இழப்பான் என்பது உறுதி"
என்கிறார்.
பாடல்
சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு
நிலத்துஅறைந்தான் கைபிழையாது அற்று
பொருள்
சினத்தைப் = கோபத்தை
பொருள்என்று = சிறந்த ஒரு குணம் என்று
கொண்டவன் = அதைக் கைக் கொண்டவனின்
கேடு = அந்த சிறந்த குணம் அழிவது என்பது
நிலத்து = தரையை
அறைந்தான் = அறைந்தவன்
கை = கை
பிழையாது அற்று = எப்படி பிழை இல்லாமல் அடிக்குமோ அந்த அளவு உறுதியானது.
கோபம் கொண்டவன் தன் சிறப்பை இழப்பான் என்று சொல்ல வேண்டும்.
உண்மையாவா, நிச்சயமாகவா? எல்லா காலத்திலும் அது நடக்குமா என்று கேட்டால், ஆம் அது சர்வ நிச்சயம் என்று சொல்ல வேண்டும். அதற்கு ஒரு உதாரணம் தேடுகிறார் வள்ளுவர்.
ஒருவன் தரையை ஓங்கி அடித்தால், அவன் குறி தப்புமா? எப்படி அடித்தாலும் கடைசியில் அந்த அடி தரையில் எங்கோ ஒரு இடத்தில் விழத்தானே செய்யும்.
தரையை, கையால் அடித்தேன், கொஞ்சம் குறி தப்பி விட்டது என்று சொல்லவே முடியாது. குறி தப்பி எங்கு போகும்? எங்கு போனாலும், அந்த அடி த தரை மேல் தான் விழும். அந்த அளவு அது நிச்சயம். தப்பவே தப்பாது.
இன்னொரு பொருள், இது பரிமேலழகர் சொல்லாதது.
கோபம் கொண்டு மற்றவர்கள் மேல் சுடு சொற்களையோ அல்லது செயலையோ காட்டி விட்டால், அது அவர்களை பாதிக்கும், என்று கோபம் கொண்டவர் நினைக்கலாம்.
அது தவறு என்கிறார் வள்ளுவர்.
தரையை ஓங்கி அடித்தால் தரைக்கு வலிக்கலாம் அல்லது வலிக்காமல் போகலாம். ஆனால் அடித்தவன் கட்டாயம் வலிக்கும் அல்லவா?
அது போல
மற்றவர் மேல் கோபத்தை செலுத்தினால் அது உன்னையும் பாதிக்கும் என்கிறார்.
கோபம் ஏற ஏற இரத்தக் கொதிப்பு ஏறும், மன அழுத்தம் வரும், எரிச்சல் வந்து மகிழ்ச்சியை குறைக்கும், உறவும், நட்பும் சுருங்கும். "அவன் கிட்ட யார் பேசுவா, சரியான கோவக் காரன் . எதுக்கு எடுத்தாலும் வள்ளு வள்ளுன்னு நாய் மாதிரி குரைப்பான்" என்று மற்றவர்கள் அவனை விட்டு விலகிப் போவார்கள். தனித்து விடப்படுவான். அவனுக்கு கீழே வேலை பார்ப்பவர்கள் அவனை விட்டுப் போய் விடுவார்கள். நாளடைவில் அவனால் சிறப்பாக செயல்பட முடியாது.
இப்படி, கோபம், அதைக் கொண்டவனையே அழிக்கும். தரையை அடித்தால் நம் கையே வலிப்பது போல.
ஒருவன் தரையை அடிக்கிறான் என்றால் அது பார்க்க எப்படி இருக்கும்? "சரியான பைத்தியகாரன் போல, தரையை போட்டு அடித்துக் கொண்டிருக்கிறான்" என்று நினைப்போம் அல்லவா.
கோபம் கொண்டு, மற்றவர்கள் எரிந்து விழுந்தாலும் அப்படித்தான் இருக்கும்.
பொருள்
Saturday, July 5, 2025
திருக்கடைக் காப்பு - மனைவியை எப்படி விட்டுச் செல்வது?
திருக்கடைக் காப்பு - மனைவியை எப்படி விட்டுச் செல்வது?
அவளோ பேரழகி. அவனுக்கோ வெளியில் ஆயிரம் வேலை. அவளை எப்படி தனியே விட்டு விட்டுச் செல்வது என்று ஒரே குழப்பம். மேலும், அவள் தன்னுடனேயே இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று நினைக்கிறான்.
அவ்வப்போது அவளை, அவள் புன்னகையை பார்த்துக் கொள்ளலாம்.
அது எப்படி முடியும்?
யோசித்தான், எதுக்கு அவளை தனியே கூட்டிச் செல்ல வேண்டும்? தன் உடலிலேயே ஒரு பாதியை கொடுத்து, அதில் அவளை வைத்து விட்டால் என்ன என்று யோசித்து அப்படியே செய்தான் என்கிறார் திரு ஞான சம்பந்தர்.
பாடல்
காரு லாங்கட லிப்பிகண் முத்தங் கரைப்பெயும்
தேரு லாநெடு வீதிய தார்தெளிச் சேரியீர்
ஏரு லாம்பலிக் கேகிட வைப்பிட மின்றியே
வாரு லாமுலை யாளையொர் பாகத்து வைத்ததே
கொஞ்சம் சீர் பிரிப்போம்
கார் உலாவும் கடல் சிப்பியின் கண் முத்து கரை பெய்யும்
தேர் உலாவும் நெடு வீதியதார் தெளிச் சேரியீர்
ஏர் உலாவும் பலிக்கு ஏகிட வைப்பு இடம் இன்றியே
வார் உலாவும் முலையாளை ஓர் பாகத்து வைத்ததே
பொருள்
கார் = கருமையான (மேகங்கள்)
உலாவும் = உலவும், திரியும்
கடல் = கடலில் உள்ள
சிப்பியின் கண் = சிப்பியில் உள்ள
முத்து = முத்துக்கள்
கரை பெய்யும் = கடற்கரையில் மழை போல் தெறித்து விழும்
தேர் உலாவும் = தேர்கள் ஓடிக் கொண்டிருக்கும்
நெடு = நீண்ட
வீதியதார் = வீதிகளை உடைய
தெளிச் சேரியீர் = திருத் தெளிசேரி என்ற தலத்தில் இருப்பவரே
ஏர் = எழுச்சி, அழகு, பெருமை
உலாவும் = நிறைந்த
பலிக்கு ஏகிட = பிச்சை வாங்கிடப் போகும் போது
வைப்பு இடம் இன்றியே = வைக்க இடம் இன்றி
வார் = மார்புக் கச்சை
உலாவும் = அணிந்த
முலையாளை = மார்பகங்களை உடைய உமை அம்மையை
ஓர் பாகத்து வைத்ததே = உன்னுடைய ஒரு பாகத்தில் வைத்துக் கொண்டாயோ
மனைவியை யாராவது தூக்கிக் கொண்டு போய் விட்டால் என்ன ஆவது என்று பயந்து மனைவியை தன்னுடைய ஒரு பாகத்தில் வைத்துக் கொண்டாயோ என்று நகைச்சுவையாக கேட்கிறார் திரு ஞான சம்பந்தர்.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
சிவன் ஏன் பிச்சை எடுக்கப் போகிறார்?
ஒரு முறை பிரமனின் ஒரு தலையை கிள்ளி எடுத்து விட்டார். அந்தத் தோஷம், அந்த மண்டையோடு அவர் கையிலியே ஒட்டிக் கொண்டது. அது அவர் கையை விட்டுப் போக வேண்டுமானால், அந்த மண்டை ஓட்டிலே பிச்சை எடுத்து உண்ண வேண்டும். அப்படி செய்து வந்தால், அந்த மண்டை ஓடு அவர் கையை விட்டுப் போகும்.
இது என்ன அபத்தமான கதையாக இருக்கிறதே என்று தோன்றலாம். கதை அபத்தம் தான். அதன் பொருள் என்ன?
ஒரு வினை செய்தால், அதன் பலனை அனுபவித்தே தீர வேண்டும். அது சிவனாகவே இருந்தாலும், செய்த வினை போகாது.
பலர் நினைக்கிறார்கள், ஏதாவது பாவம் செய்தால், அதற்கு பதிலாக ஒரு நல்லது செய்தால் பாவத்தில் இருந்து தப்பி விடலாம் என்று.
முடியாது.
பாவத்தின் பலனை அனுபவிக்க வேண்டும். பின் நல்லது செய்தால், அதன் பலனையும் அனுபவிக்க வேண்டும்.
"அறம் பாவம் எனும் அருங் கையிற்றால் கட்டி" என்பார் மணிவாசகர்.
இரண்டுமே நம்மை பிறவி என்ற பந்தத்தில் கட்டிப் போடும். இரண்டுமே செய்யக் கூடாது.
ஒன்றுக்கு ஒன்று சரியாகி விடாது. இரண்டும் தனித் தனி கணக்கு.
கோவிலுக்குப் போவது, உண்டியலில் காணிக்கை போடுவது, மொட்டை போட்டுக் கொள்வது, விரதம் இருப்பது, அன்ன தானம் செய்வது போன்ற காரியங்களால் செய்த தீவினைகளில் இருந்து தப்பி விடலாம் என்று யாரும் நினைக்கக் கூடாது. அப்படி என்றால் பணம் உள்ளவர்கள் எவ்வளவு தீமை வேண்டுமானாலும் செய்யலாம். பின் நிறைய தான தர்மங்கள் செய்து தப்பித்துக் கொள்ளலாம்.
முடியாது.
சிவனே ஆனாலும், செய்த வினையின் பலனை அனுபவித்தே தீர வேண்டும்.
சிவனுக்கே அந்தக் கதி என்றால், நம் கதி என்ன?
தீவினை செய்யாமல் இருக்க வேண்டும்.
மனதால், வாக்கால், செயலால் தீவினை செய்யக் கூடாது.
என்ன ஒரு அருமையான பாடல்
மேகங்கள் உலவுகின்றதாம்..ஏதோ வாக்கிங் போவது மாதிரி.
தேர்கள் ஓடவில்லை, உலவுகின்றன. சும்மா ஜாலியா அங்கும் இங்கும் சுத்திக் கொண்டிருக்கின்றன.
சிவன் பிச்சை எடுக்கப் போவது கூட ஏதோ பெருமையாக, அழகாகப் போனாராம்.
அம்மை சேலை அணிந்து இருக்கிறாள். காற்றில் அது அங்கும் இங்கும் அலைகிறது. அவள் மார்பின் மேல் அந்த சேலை உலாவுகிரதாம்.
இன்னொரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள். அவ்வளவு இனிமை.
Sunday, June 15, 2025
கம்ப இராமாயணம் - மாரீசன் - தர்மம் போல்
கம்ப இராமாயணம் - மாரீசன் - தர்மம் போல்
இராவணன் அரசவையில் வீற்றிருக்கிறான். அவன் இருக்கும் அந்த மணி மண்டபத்தை வர்ணிக்க வேண்டும்.
கம்பன் என்ன சொல்கிறான் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.
நாம் அறிந்தவரை ஒரு மண்டபத்தை எப்படி எல்லாம் வர்ணிக்கலாம்?
விண் வரை உயர்ந்த மாளிகை, மேகம் வந்து இளைப்பாறிப் போகும் முற்றம், ஒளி வீசும் மண்டபம், இமய மலை போல் உறுதியானது என்றெல்லாம் சொல்லக் கேட்டு இருக்கிறோம்.
கம்பன் சொல்லும் உவமை நாம் கனவிலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத உவமை.
அந்த மண்டபம் தேவ தச்சன், விஸ்வகர்மா உருவாக்கியது.
சரி. அது என்ன பெரிய விடயம்.
அவன் படைக்கும் கடவுளான பபிரமனாலும் முடியாத அளவுக்கு சிறப்பாக படைப்பான்.
ஓ, அப்படியா. பெரிய ஆள் தான்.
அவன் நாம் என்னவெல்லாம் வேண்டும் என்று சொல்கிறோமோ, அது போலத் கட்டித் தருவான்.
சரி, அதில் என்ன சிறப்பு இருக்கிறது.
அவன் நாம் மனதில் நினைப்பதை எல்லாம், வேண்டியதை எல்லாம் தருவான், எப்படி என்றால் அறம் எப்படி ஒருவனுக்கு வேண்டியன எல்லாம் தருமோ, அப்படி.
எங்கிருந்து எங்கே போகிறான் கம்பன். கிடைத்த சின்ன இடைவெளியில் அறத்தின் உயர்வை சொல்லிவிட்டுப் போகிறான்.
அறம் எப்படி வேண்டியன எல்லாம் தருமோ, அது போல் தேவதச்சன் அந்த மண்டபத்தை செய்தான்.
பாடல்
நிலை இலா உலகினிடை நிற்பனவும்
நடப்பனவும் நெறியின் ஈந்த
மலரின் மேல் நான்முகற்கும் வகுப்பு அரிது,
நுனிப்பது ஒரு வரம்பு இல் ஆற்றல்
உலைவு இலா வகை உழந்த தருமம் என,
நினைந்த எலாம் உதவும் தச்சன்
புலன் எலாம் தரெிப்பது, ஒரு புனை மணி
மண்டபம் அதனில் பொலிய, மன்னோ.
பொருள்
நிலை இலா = நிரந்தரம் இல்லாத
உலகினிடை = இந்த உலகில்
நிற்பனவும் = அசையாதனவும்
நடப்பனவும் = அசையும் தன்மை கொண்ட பொருள்களும்
நெறியின் = உயர்ந்த வழியில்
ஈந்த = உருவாக்கிய
மலரின் = திருமாலின் நாபிக் கமலத்தில்
மேல் = இருந்து உருவான, அல்லது இருக்கும்
நான்முகற்கும் = நான்கு முகங்கள் கொண்ட பிரமனுக்கும்
வகுப்பு அரிது = செய்வது கடினம்
நுனிப்பது = நுண்ணிய, நுட்பமான
ஒரு வரம்பு இல் = எல்லையில்லா
ஆற்றல் = திறமை
உலைவு இலா வகை = தீமை இல்லாத வழியில்
உழந்த தருமம் என = செய்த அறத்தைப் போல போல
நினைந்த எலாம் = மனதில் நினைத்ததை எல்லாம்
உதவும் தச்சன் = செய்து தரும் தேவ தச்சன்
புலன் எலாம் = தன் அறிவு அனைத்தையும்
தெரிப்பது = தெரிய, வெளிப்பட
ஒரு = கட்டிய ஒரு
புனை மணி = மணிகள் பதிக்கப் பெற்ற
மண்டபம் = மண்டபம்
அதனில் பொலிய, மன்னோ = அதில் பொலிவுடன் வீற்றிருந்தான்
தருமம் என்கிறான் கம்பன். அதை பிறருக்கு உதவும் தான தர்மம் என்று கொண்டாலும் சரி, செய்யக் கூடிய தருமம், அறம் என்று கொண்டாலும் சரி அர்த்தம் பெரிதாக மாறாது. அறம் சிறப்பு.
அறம், வேண்டியன எல்லாம் தரும் என்ற போதனையை இங்கே வைக்கிறான்.
கிடைக்கும் இடமெல்லாம் அறம் பேசியது நம் இலக்கியங்கள்.