திருக்குறள் - சினம் எனும் தீ
நீங்கள் இருக்கும் ஊரில் சாமான்கள் வைத்து இருக்கும் ஒரு கிடங்கில் தீ பிடித்து விடுகிறது. கிடங்கில் உள்ள பொருள் எல்லாம் எரிந்து சாம்பாலாகி விடுகிறது.
இது போன்ற செய்திகளை கேட்டும் பார்த்தும் இருக்கிறோம்.
போன வருடம் பிடித்த தீயில், இந்த வருடம் பல கோடி மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலானது என்று கேட்டு இருகிறீர்களா. இப்போது தீ பிடித்தால், இப்போதுதான் சேதம் இருக்கும். மாறாக ஒரு வருடம் கழித்து சேதம் வருமா? வராது.
அது போல
டெல்லியில் தீ பிடித்தது, அதனால் மும்பையில் உள்ள பொருள்கள் சேதம் ஆனது என்று கேட்டு இருக்கிறோமா? எங்கு தீ பிடிக்கிறதோ, அங்குதான் சேதம் விளையும்.
ஆனால் இந்த சினம் என்ற தீ இருக்கிறதே...
அது, இந்தப் பிறவியில் கோபத்தால் செய்த செயல்களுக்கு, இந்தப் பிறவியில் பின்னாளில் மட்டும் அல்ல இனி வரும் பிறவிகளிலும் தொடர்ந்து வந்து துன்பம் செய்யும். ஐயோ, எனக்கு ஏன் இந்தத் துன்பம் வந்தது என்று வருந்தும் போது நினைத்துக் கொள்ள வேண்டும், எந்தப் பிறவியில் செய்த பாவமோ இன்று வந்து சேர்ந்திருக்கிறது என்று.
நாம் கோபம் கொண்டால், அதனால் தீமை நமக்கு மட்டும் அல்ல, நம்மைச் சுற்றியுள்ள சுற்றத்தாரையும் சுடும்.
இராவணன், துரியோதனன் போன்றோர் கொண்ட கோபத்தால் அவர்கள் மட்டுமா அழிந்தார்கள்? அவர்கள் குலமே அழிந்தது.
பாடல்
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்
பொருள்
சினமென்னும் = சினம் என்று சொல்லப்படும்
சேர்ந்தாரைக் = அதைக் கொண்டவர்களை
கொல்லி = கொல்லும் குணமுடைய
இனம்என்னும் = தன் சுற்றம் என்ற
ஏமப் = காவல்
புணையைச் = தெப்பத்தை, மிதப்பை
சுடும் = எரித்து விடும்
சேர்ந்தாரைக் கொல்லி = சினம் தன்னைச் சேர்ந்தவர்களை கொல்லும்.
அடடா, இவர் தான் என்னை தோற்றுவித்தார். இந்த வீட்டில் தான் நான் பிறந்தேன் என்று நன்றியெல்லாம் பார்க்காது. எந்த தீக் குச்சி நெருப்பை உண்டாக்குகிறதோ, அந்தக் குச்சியை அது முதலில் எரிக்கும். எந்தப் பந்தம் தீயை உண்டாக்குகிறதோ, அந்தப் பந்தத்தை தீ முதலில் எரித்து சாம்பலாக்கும். அது போல, சினம் எங்கே உண்டாகிறதோ, அந்த இடத்தை அது முதலில் எரிக்கும்.
தன்னைச் சேர்ந்தவர்களைக் கொல்லும்.
"இனம் எனும்": இனம் என்றால் வேறு சுற்றம் மட்டும் அல்ல. ஒருவனைச் சேர்ந்த கூட்டம், குழு. நட்பு, சுற்றம், அரசன் என்றால் அவனுக்கு கீழே உள்ள குடிகள், ஒரு நிறுவனத் தலைவன் என்றால் அங்கே வேலை செய்பவர்கள். ஒருவனுக்கு சினம் வந்தால், அது அவனை மட்டும் அல்ல, அவனைச் சேர்ந்த கூட்டத்தையே கெடுக்கும்.
சுடும் : இப்போது மட்டும் அல்ல, இனி வரும் பிறவிகளிலும் சுடும். நான் அதிகாரத்தில் இருக்கிறேன். எனக்கு கீழே உள்ளவர்களிடம் நான் கோபித்து என்ன வேண்டுமானாலும் சொல்லுவேன், செய்வேன். என்னை யார் என்ன கேட்க முடியும் என்று நினைக்கலாம். இயற்கை பொறுத்து இருக்கும். வேலை போன பின் வந்து தாக்கும். இல்லை என்றால் அடுத்த பிறவிக்கு வரும். சுடாமல் விடாது.
இந்தக் குறள் துறவறத்தில் வருகிறது. முற்றும் துறந்த முனிவர்களுக்கு ஏது உறவு? அவர்களுக்கு என்ன இனம் இருக்கும்?
பரிமேலழகர் கூறுகிறார்
துறவிகளுக்கு, அவர்களுக்கு நல்லது சொல்லி முக்திக்கு வழி வகுக்கும் பெரியோர்கள், துறவிகளை பின் பற்றும் சீடர்கள் அல்லது பக்தர்கள் என்ற இனம். அந்த இரண்டையும் ஒரு துறவி கொண்ட சினம் கெடுத்து விடும்.
சினம் என்ற சேர்ந்தாரைக் கொல்லி....சினமே போய் கொல்லாது. அதற்கு என்ன கை காலா இருக்கிறது போய் கொல்வதற்கு? இங்கே சினம் என்றது சினம் கொண்டவரை. சினம் கொண்டவர் தன்னை அழித்துக் கொள்வது மட்டும் அல்ல, தன்னைச் சேர்ந்தவர்களையும் அழிப்பான் என்றவாறு.