Thursday, October 17, 2024

திருக்குறள் - கள்ளாமை - உள்ளத்தால் உள்ளலும் தீதே

 திருக்குறள் - கள்ளாமை - உள்ளத்தால் உள்ளலும் தீதே 


களவு ஏன் நிகழ்கிறது?


மற்றவனிடம் உள்ள பொருள் நம்மிடம் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆசையால் நிகழ்கிறது. அது போல நமக்கு ஒரு கார் இருந்தால் எப்படி இருக்கும், அவனிடம் உள்ளது போல் ஒரு சமீபத்திய கைபேசி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், அவன் மனைவியைப் போல எனக்கும் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை. 


அடுத்த கட்டம், அவனுக்குத் தெரியாமல் அதை அவனிடம் இருந்து எடுத்துக் கொள்ள நினைப்பது. 


கடைசியில், எடுத்துக் கொள்வது. 


உலகியல் சட்டம் முதல் இரண்டை தவறு என்று சொல்லுவது இல்லை. அது மனதில் நிகழ்வது. ஆசைப்படுவதும், கவர்ந்து கொள்ள நினைப்பதும் குற்றம் அல்ல. கவர்ந்தால் குற்றம். 


அறம் என்பது சட்டத்துக்கு மேலானது. 


மற்றவன் பொருளை அவன் அறியாமல் எடுத்துக் கொள்வோம் என்று நினைத்தாலே அது களவுதான் என்கிறார் வள்ளுவர். 


மனதால் நினைப்பது கூடத் தவறு என்கிறார். 


பாடல் 


உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்


\பொருள் 


உள்ளத்தால் = மனதால் 


உள்ளலும் = நினைப்பதும் 


தீதே = தீமையானதே 


பிறன்பொருளைக் = மாற்றான் பொருள்ளை 


கள்ளத்தால் = மற்றவன் அறியா வண்ணம் 


கள்வேம் = கவர்ந்து கொள்வோம்  


எனல்  = என்று நினைத்தல் 



மனதால் நினைப்பதே குற்றம் என்றால், உண்மையிலேயே களவு செய்வது பெரும் குற்றம் என்பது சொல்லாமலேயே புரியும். 


இது துறவறத்தில் வரும் அதிகாரம், குறள். 


துறவிக்கு பிறன் பொருளை நினைப்பதும் தவறு. 


இல்லறத்தில் உள்ளவன் அபப்டி இருக்க முடியாது. 


இல்லறத்தில் உள்ள ஒருவன் ஆசைப்படுவது இயல்பு. நம் மனைவிக்கும் அது போல நல்ல சேலை வாங்கித் தர வேண்டும், நம் பிள்ளைகளும், அது மாதிரி பெரிய பள்ளியில் படிக்க வேண்டும், என்றெல்லாம் நினைத்தால் தான் இல்லறம் சிறக்கும். 


எந்தப் பொருள் மீதும் பற்று இல்லை என்றால், இல்லறம் படுத்து விடும். உன் மேல் எனக்குப் பற்று இல்லை என்று மனைவி கணவனை விட்டு விலகி விடுவாள்.  


இல்லறத்தில் இருப்பவன் ஆசைப்படலாம். ஆனால் அதை களவின் மூலம் அடைய ஆசைப் படக் கூடாது. 


துறவி ஆசையே படக் கூடாது. 


எல்லோருக்கும் ஒரே அறம் சொல்ல முடியாது. 


"உள்ளத்தால் உள்ளலும்". அது மனதால் நினைப்பதும் ? மனதால் தானே நினைக்க முடியும்?  நினைப்பதும் தீதே என்று சொல்லி இருக்கலாமே? எதற்கு உள்ளத்தால் என்று போட வேண்டும்?  பரிமேலழகர் கூறுகிறார், துறவியின் உள்ளம் மற்றவர்கள் உள்ளம் போல் அல்ல. அது சிறப்பானது. அந்த சிறந்த மனத்தால் கள்வேம் என்று நினைக்கக் கூடாது என்றார். 


"எனல்". எனல் என்றால் என்ன என்பதை அறிய சற்று இலக்கணம் படிக்க வேண்டும். 


வியங்கோள் என்று ஒரு இலக்கணக் குறிப்பு உண்டு.  


வியம் என்றால் ஏவுவது, கட்டளை இடுவது என்று பொருள். ஏவலை கொள்வது என்பதால், அது வியம் + கொள் = வியங்கோள் என்ற பெயர் பெற்றது. 


இந்த வியங்கோள் பொதுவாக நான்கு விதமான இடங்களில் பயன்படுத்தப்படும். 


வாழ்த்தல், வைதல், வேண்டல், விதித்தல் என்பவை அந்த நான்கும். 


இந்த வியங்கோள் வினைமுற்று (முற்றுப் பெற்ற வினை அல்லது செயல்) விகுதி க அல்லது ய என முடியும். 


வாழ்க

வீழ்க 

வருக

அமர்க 

உண்க 

வாழிய (பல்லாண்டு) 

இது எதிர் மறையில் வரும் போது அல் என்ற விகுதியை பெறும்.


வாரல்  (வராதே)

சேறல்  (சேராதே)


இந்தக் குறளில் "எனல்" என்பது எதிர்மறை வியங்கோள் வினைமுற்று விகுதி. 


அதாவது கள்ளத்தால் கள்வேம் எனல் என்றால் 


களவாணித்தனமாக எடுத்துக் கொள்வோம் என்று பொருள் கொள்ளக் கூடாது. 


எதிர்மறையாக பொருள் கொள்ள வேண்டும். 


கள்ளத்தால் எடுத்துக் கொள்ளக் கூடாது 


என்பது அதன் பொருள். 


இலக்கணம் தெரியாவிட்டால் பொருள் மாறிப் போய்விடும். 


துறவிகள் பிறர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது. 








Tuesday, October 15, 2024

கோவில் மூத்தத் திருபதிக்கம் - புறங்காட்டில் அப்பன் ஆடும் திருவாலங்காடு

 கோவில் மூத்தத் திருபதிக்கம் - புறங்காட்டில் அப்பன் ஆடும் திருவாலங்காடு 



இறைவனை வழிபடும் இடம் எப்படி இருக்க வேண்டும்?


சுத்தமாக, வெளிச்சமாக, பூ, சந்தனம், ஊதுபத்தி, கற்பூரம் போன்ற நறுமணம் வீசும் இடமாக, பார்த்தாலே மனதில் ஒரு பரவசம் வரும்படி இருக்க வேண்டும் அல்லவா?


மாறாக, இருண்டு, கரி பிடித்துப் போய், சாம்பலும், அழுக்கும் நிறைந்து கிடந்தால் பக்தி வருமா?


வர வேண்டும். 


இறைவன் படைப்பில் எல்லாம் ஒன்று என்ற எண்ணம் வர வேண்டும். 


இது சரி, இது தவறு என்று எப்படிச் சொல்ல முடியும். நமக்கு பிடித்தது, பிடிக்காதது என்று சொல்லலாம். அது ஒன்றும் பெரிய விடயம் அல்ல. நமக்குப் பிடித்தது இறைவனுக்குப் பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் இல்லை. 


சிவகோச்சாரியார் படைத்த பூவும், மாலையும், சந்தனமும் இறைவனுக்குப் பிடிக்கவில்லை. கண்ணப்ப நாயனார் படைத்த மாமிசம் பிடித்தது. 


அவன் உள்ளம் யாருக்குத் தெரியும்?


காரைக்கால் அம்மையார், இறைவனை சுடுகாட்டில் நடமாடும் வடிவில் கண்டு வணங்குகிறார். 


"அது ஒரு சுடுகாடு. அங்கங்கே பிணங்கள் எரித்து கொண்டிருக்கின்றன. பிணம் எரியும் போது அவற்றின் சதை உருகும். அது நெய் போல் வழியும். அந்த உருகிய சதையை எடுத்து வாயில் போட்டு தின்னுகின்றன அங்குள்ள பேய்கள். சுடுக்காட்டில் கிடக்கும் மண்டை ஓடுகளை ஒன்றாக சேர்த்துக் கட்டி பூ மாலை போல் போட்டுக் கொள்கின்றன. அப்படி அங்கே உள்ள ஒரு பேய்க்கு ஒரு குழந்தைப் இருக்கிறது. குட்டிப் பேய். அந்த குழந்தைக்கு அதன் தாய் "காளி" என்று பெயரிட்டு இருக்கிறாள். சுடுகாட்டில் பறக்கும் சாம்பல் அதன் உடல் முழுவதும் படிந்து கிடக்கிறது. காளிக்குப் பசிக்கும் போது, தன் முலையின் மேல் பதிந்த சாம்பலை சுத்தம் செய்து தாய்ப் பேய் காளிக்கு உணவு ஊட்டும். அப்படி ஊட்டும் தாய் எங்கோ போய் இருக்கிறாள். வர தாமதமாகிறது. பசியால் அழுத காளி அப்படியே சோர்ந்து உறங்கி விட்டது. அப்படிப்பட்ட பேய்கள் உலாவும் காட்டில் நடனம் புரிபவன் என் அப்பன் சிவ பெருமான்"


என்று இடுகாட்டில் நடம் புரியும் இறைவனை வணங்குகிறாள். 


பாடல் 


விழுது நிணத்தை விழுங்கி யிட்டு, வெண்தலை மாலை விரவப் பூட்டிக்

கழுதுதன் பிள்ளையைக் காளி யென்று பேரிட்டுச் சீருடைத் தாவளர்த்துப்

புழதி துடைத்து, முலைகொ டுத்துப்போயின தாயை வரவு காணா

தழுதுறங் கும்புறங் காட்டில் ஆடும் அப்ப னிடம்திரு ஆலங் கா டே


பொருள் 


விழுது நிணத்தை = நெய் பசை நிரம்பிய மாமிசம், தீயில் வெந்த உடல் 


விழுங்கி யிட்டு = வாயில் போட்டு விழுங்கி 


வெண்தலை = மண்டை ஓடுகளை 


மாலை விரவப் பூட்டிக் = மாலையாக பெரிதாக அணிந்து கொண்டு 


கழுது = பெண் பேய் 


தன் பிள்ளையைக் = அதன் பிள்ளையை 


காளி யென்று = "காளி" என்று 

 

பேரிட்டுச் = பெயர் இட்டு 


சீருடைத் = தன்னுடைய உடையை நீக்கி 


தாவளர்த்துப் = தாவளம் என்றால் உணவு பரிமாறும் இடம். தாய்ப்பால் தர பிள்ளையை எடுத்து 


புழதி துடைத்து = தன் மேல் படிந்து கிடக்கும் புழுதியை துடைத்து 


முலைகொ டுத்துப் = முலை கொடுத்து 


போயின = வெளியே சென்ற 


தாயை  = தாயின் 


வரவு காணா = வரவைக் காணாத 


தழுதுறங் கும் = அழுது உறங்கும் 


புறங் காட்டில் = சுடுகாட்டில் 


ஆடும் = திருநடனம் புரியும் 


அப்ப னிடம் = அப்பன் சிவ பெருமான் இருக்கும் இடம் 


திரு ஆலங் கா டே = திருவாலங்காடு என்ற திருத்தலம். 


மனதில் பக்தி வந்து விட்டால், எல்லாம் சிவமயம்தான். 


நோக்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்து இருப்பவன்.


மனிதனின் ஆட்டம் எல்லாம் அடங்கும் இடம் சுடுகாடு. அங்கே ஆடிக் கொண்டிருக்கிறான் அவன். 


வாழ்க்கையில் பயப்பட ஒன்றும் இல்லை. அது அப்படி ஆகி விடுமோ, இது இப்படி ஆகி விடுமோ, அது நடக்காவிட்டால் எனன் செய்வது, இது நடந்து விட்டால் என்ன செய்வது என்ற பயமே வேண்டாம். 


இடுக்காட்டில், பேய்களுக்கு மத்தியில் அமர்ந்து இருக்கும் காரைக்கால் அம்மையாருக்கு பயம் இல்லை. காரணம், சிவன் அங்கே இருக்கிறான் என்று அவள் நம்பினாள். 


கடவுள் நம்பிக்கை இருந்தால் பயம் ஏன் வருகிறது. கடவுளால் நம் துன்பத்தைப் போக்க முடியாதா? அல்லது போக்க மாட்டான் என்று நினைப்பு இருக்குமோ?


பயம் இருந்தால், இறை நம்பிக்கை இல்லை என்று அர்த்தம். 


அவன் பார்த்துக் கொள்வான் என்றால் பயம் ஏன் வருகிறது?




Thursday, October 10, 2024

திருவிளையாடற் புராணம் - மண் சுமந்த கதை

 திருவிளையாடற் புராணம் - மண் சுமந்த கதை 


மக்களுக்கும், கடவுளுக்கும் உள்ள தொடர்பு எப்படி இருக்க வேண்டும்?


ஏன் அவ்வளவு தூரம் போக வேண்டும்.


கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்?  கணவன் வீட்டை நடத்துபவனாகவும், மனைவி அவனுக்கு உதவி செய்பவளாகவும் இருக்கலாம். இருவரும் சேர்ந்து நடத்தலாம். இருவரும் ஒரு நல்ல நண்பர்கள் போல் இருக்கலாம், மனைவி எல்லாவற்றையும் எடுத்துச் செய்யலாம், கணவன் எனக்கு என்ன என்று பொறுப்பு இல்லாமல் இருக்கலாம். 


இப்படி எத்தனையோ வகைகள் இருக்கின்றன. 


அப்பா மகன் உறவு, அப்பா மகள் உறவு? அம்மா மகன்/மகள் உறவு?  


ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.


அது போல பக்தனுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவை ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதத்தில் அணுகுகின்றன. 


நம் இந்து மதம் அணுகும் முறையே அலாதி. 


நம் கடவுள்கள் மிகுந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். விளையாட்டு புத்தி உள்ளவர்கள். நம்மோடு வந்து விளையாடுவார்கள். அடி வாங்குவார்கள். விறகு சுமப்பார்கள். பெண் வேடம் போட்டு வருவார்கள். காதல் கடிதம் கொண்டு போய் கொடுப்பார்கள். பன்றியாக வருவார்கள். இப்படி பல விதங்களில் நம்மோடு, நம் வீட்டில் ஒரு ஆள் போல் இருப்பார்கள். 


அல்லது அப்படித்தான் நாம் நினைக்கிறோம். 


கடவுள் என்றால் ஏதோ மலை மேல் அமர்ந்து கொண்டு, கடு கடு வென்று, கோபமாக, தவறுகளை கண்டு பிடித்து தண்டனை தரும் ஒரு போலீஸ் மாதிரி இல்லாமல், ரொம்பவும் நட்பாக நாம் சித்தரிக்கிறோம். 


"அலகிலா விளையாட்டு உடையார் அவர்" என்பார் கம்பர். 


எந்நேரமும் விளையாட்டுத்தான். 


கடவுளின் விளையாட்டை லீலை என்கிறோம். 


உலகைப் படைத்த கடவுளே அதை பெரிதாக, சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளவில்லை. நாம் ஏன் வாழ்கையை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது?


ஏன் இவ்வளவு சண்டை, கோபம்,  சச்சரவு, எரிச்சல், பொறாமை...வெற்றி கண்டு களியாட்டம், தோல்வியில் துவண்டு விடுவது...எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்துக் கொண்டு போ என்கிறது நம் சமய இலக்கியம்.


திருவிளையாடல் புராணம் முழுக்க முழுக்க சிவனின் விளையாடல்கள் தான். 


அந்த புராணத்தில் இருந்து சில பாடல்களை பற்றி சிந்திப்போம். 


முதலில் மண் சுமந்த விளையாடல். 


சிந்தித்துப் பாருங்கள், 


இந்த அண்ட சராசரங்களைப் படைத்த இறைவன், கூடை மண் சுமந்து, புட்டு தின்று, அடி வாங்கி...எவ்வளவு இனிமையான விடயம்.


வாருங்கள் கதையோடு, கவிதையையும், அந்தக் கால வாழ்க்கை நடைமுறைகைளையும் சேர்த்து அனுபவிப்போம்.


  

Saturday, September 28, 2024

திருக்குறள் - கள்ளாமை - கள்ளாமை காக்க

 திருக்குறள் - கள்ளாமை - கள்ளாமை காக்க 

https://interestingtamilpoems.blogspot.com/2024/09/blog-post_28.html



முந்தைய அதிகாரம் கூடா ஒழுக்கம். 


அதாவது, தவறான வழியில் உடல் இன்பத்தைப் பெறுவது துறவிகளுக்கு சரியான ஒழுக்க முறை அல்ல என்று கூறியது. 


உடல் இன்பத்தைத் அடுத்து, பொருள் இன்பம் பற்றி கூற இருக்கிறார் அடுத்த அதிகாரமான கள்ளாமை என்ற அதிகாரத்தில். 


பல துறவிகள் ஏன் பொய்யாக வேடம் போடுகிறார்கள்?


நிறைய காணிக்கை, தட்சணை கிடைக்கும், அதன் மூலம் பொருள் இன்பங்களை அனுபவிக்கலாம் என்ற எண்ணத்தில் துறவி, சாமியார் வேடம் போடுகிறார்கள். 


துறவு எண்ணம் இல்லாமல், துறவி போல் வேடம் இட்டு பொருள் பெறுவது என்பது களவாணித்தனம் தானே. ஏமாற்றி பொருள் கொள்வது. அது கூடாது என்று இந்த அதிகாரத்தில் கூறுகிறார். 


அதில், முதலாவது குறளில் 


பாடல் 


எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்

கள்ளாமை காக்கதன் நெஞ்சு


பொருள் 


எள்ளாமை = இகழப்படாமை 


வேண்டுவான் = விரும்புபவன் 


என்பான் = என்று சொல்லப்படுபவன் 


எனைத்தொன்றும் = எது ஒன்றையும் 


கள்ளாமை = களவின் மூலம் பெற்றுக்  கொள்ளலாம் என்ற எண்ணம் வராமல் 


காக்க = காத்துக் கொள்ள வேண்டும் 


தன் நெஞ்சு = தன் மனதை 


மேலோட்டமாக பார்த்தால், யாராலும் பழி சொல்லப்படாமல் நல்லவன் என்று பெயர் எடுக்க வேண்டும் என்றால், பிறர் பொருளை தவறான வழியில் எடுத்துக் கொள்ள நினைக்கக் கூடாது என்று அர்த்தம் தோன்றும். 


ஒரு துறவி திருடக் கூடாது என்று சொல்ல வள்ளுவர் வேண்டுமா?  


இதற்கு பரிமேலழகர் அற்புதமான உரை செய்திருக்கிறார். 



சில பேருக்கு இந்த சாமி, கோவில், சொர்க்கம், நரகம் என்பதில் எல்லாம் நம்பிக்கை இருக்காது. 


சாமி என்று ஒன்று இருக்கிறதா?  காமி. எங்க இருக்கு என்று கேட்பார்கள். அது மட்டும் அல்ல, இதெல்லாம் எப்படித்தான் நம்புராங்ஞலோ என்று மற்றவர்களை ஏளனம் செய்வார்கள். 


அவர்களுக்கு எல்லாவற்றிற்கும் நிரூபணம் வேண்டும். பார்த்து, தொட்டு உணர்ந்து, சுவைத்து, கேட்டு அறிந்தால்தான் ஒன்றை ஏற்றுக் கொள்ளவார்கள். இல்லை என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 


நிரூபிக்க முடியாதது எல்லாம் பொய் , பித்தலாட்டம் என்று ஏளனம் செய்வார்கள். 


அப்படி ஏளனம் செய்யாமல், இகழாமல் அவற்றின் மேல் உண்மையிலேயே நம்பிக்கை உள்ளவன் என்று சான்றோரால் ஒருவன் சொல்லப்பட விரும்பினால் என்று "எள்ளாமை வேண்டுவான் என்பான்" என்ற சொற்களுக்கு பரிமேலழகர் உரை செய்கிறார். 


"அவன் நல்லவன். சாத்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை உள்ளவன். இறை நம்பிக்கை உள்ளவன். பாவ புண்ணியங்களுக்கு பயந்தவன்" என்று சொல்லப்பட வேண்டினால் 


"எனைத்தொன்றும் கள்ளாமை காக்க தன் நெஞ்சு"

 


"எனைத்தொன்றும் கள்ளாமை காக்க" என்று சொல்லி நிறுத்தி இருக்கலாம். அது எதற்கு "தன் நெஞ்சு" என்ற தொடரை சேர்த்தார்?


நெஞ்சு, மனம் என்றால் நினைப்பது. பிறர் பொருளை ஏமாற்றி எடுத்துக் கொள்ளலாம் என்று மனதாலும் நினைக்கக் கூடாது என்பதற்காக தன் நெஞ்சு என்ற தொடரைச் சேர்த்தார். 


அது என்ன "எனைத்தொன்றும்" எப்பொருளும் என்று போட்டு இருக்கலாமே?


சில பேர் மற்றவர்களின் எழுத்தை,  அவர்கள் அறியாமல் எடுத்து தங்கள் பெயரில், ஏதோ தாங்களே கண்டு பிடித்ததைப் போல் போட்டுக் கொள்வார்கள். அதுவும் ஒரு வகையில் திருட்டுதான். 


அலுவலகத்தில், முழுமையான திறமையை வெளிப்படுத்தி, முழு நேரமும் வேலை செய்யாமல், டீ குடிக்கப் போவது, அரட்டை அடிப்பது, whatsapp இல் நேரம் செலவிடுவது என்று குறைவான நேரத்தை செலவிட்டு முழு சம்பளம் பெற்றுக் கொல்வதும் ஒரு விதத்தில் திருட்டுத்தான். 


வீட்டில் கூட கணவன் மனைவி இருவரின் பங்களிப்பும் ஏறக்குறைய சமமாக இருக்க வேண்டும். 


ஆசிரியரிடம் வித்தை கற்றுக் கொண்டு, அவருக்கு உரிய தொகையை கொடுக்காமல் இருப்பதும் களவு என்கிறார் பரிமேலழகர். 


எனவே, "எனைத் தொன்றும்" என்றார். எந்த விதத்திலும் களவு என்ற எண்ணமே வரக் கூடாது. 


எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், இப்படி கொடுப்பதை விட பெறுவது அதிகம் களவு என்று ஆகிவிட்டால், களவு செய்யாமல் இருக்க வேண்டும் என்றால், எப்போதும் நிறைய செய்ய வேண்டும், குறைவாக பெற்றுக் கொள்ள வேண்டும். ஒரு துறவி என்பவன் சேவை மனப்பான்மை உள்ளவனாக இருக்க இது ஒரு சிறந்த வழி. சும்மா மூன்று வேளையும் பிச்சை பெற்று உண்பதால் ஒருவன் துறவி என்று ஆகிவிட முடியாது. 


பொதுவாகவே, துறவிகளுக்கு சொல்லப்படும் அறம் மிகக் கடுமையானதாக இருக்கும். இல்லறத்தில் உள்ளவர்கள் அந்த அளவு கடுமை காட்ட முடியாது. அதற்காக, ரொம்பவும் கீழே போகவும் வேண்டாம். முடிந்த வரை, எங்கெல்லாம் முடியுமோ, எப்போதெல்லாம் முடியுமோ நிறைய கொடுப்போம், குறைவாக எடுத்துக் கொள்வோம். 


ஏன் என்றால், இல்லறம் என்பது, துறவறத்தின் முதல் படி. ஒரு பயிற்சி முகாம். இங்கே பழகினால்தான் அங்கே சிறப்பாக இருக்க முடியும். 



Thursday, September 26, 2024

கம்ப இராமாயணம் - இராமன் என்ற மானிடன் - சந்தேகம்

 கம்ப இராமாயணம் - இராமன் என்ற மானிடன் - சந்தேகம் 



மனிதர்களுக்கு சந்தேகம் வரலாம். எது சரி, எது தவறு என்று குழப்பம் வரலாம். தயக்கம் வரலாம். இறைவனுக்கு வருமா?


மனிதனாக அவதாரம் செய்த இராமன், மனிதனாகவே வாழ்ந்து காட்டுகிறான். 


ஒரு மாணவனாக விஸ்வாமித்திரன் பின் செல்கிறான். வேள்வியைக் காக்க. சின்ன பையன் மாதிரி கேள்விகள் கேட்டுக் கொண்டு செல்கிறான். இறுதியில் தாடகை வந்து நிற்கிறாள். 


விஸ்வாமித்திரன் அவளை கொல் என்று கட்டளை இடுகிறான். 


இராமன் கொள்ளவில்லை. தயங்குகிறான். குழம்புகிறான். 


வசிட்டர் சொல்லித் தந்த பாடம் "மாதரையும், தூதரையும் கொல்லக் கூடாது" என்று. விச்வாமித்ரரோ பெண்ணான தாடகையை கொல் என்கிறார். 


என்ன செய்வது ?


நான் கடவுள் அவதாரம். எனக்கு எல்லாம் தெரியும் என்று முடிவு எடுக்கவில்லை. 


அவள் மேல் அம்பு போடாமல், பெண்ணிடம் எப்படி போர் செய்வது என்று நினைக்கிறான். 


பாடல் 


அண்ணல் முனிவற்கு அது

    கருத்து எனினும், ‘ஆவி

உண் ‘என வடி கணை

    தொடுக்கிலன்; உயிர்க்கே

துண் எனும் வினைத் தொழில்

    தொடங்கி உளள் ஏனும்,

பெண் என மனத்திடை

    பெரும் தகை நினைந்தான்.


பொருள் 


அண்ணல்  = பெரியவரான 


முனிவற்கு = விஸ்வாமித்ர முனிவருக்கு 


அது = தாடகையை கொல்லும் 


கருத்து எனினும் = எண்ணம் என்றாலும் 


 ‘ஆவி உண்  = உயிரைக் குடி 


‘என -= என்று 


வடி கணை  தொடுக்கிலன்; = வடிவான அம்பை தொடுக்கவில்லை 


உயிர்க்கே = உயிர்கள் எல்லாம் 


துண் எனும் = நடுங்கும் 


வினைத் தொழில் = கொலைத் தொழில் 


தொடங்கி உளள் ஏனும் = தொடங்கி நடத்துபவள் என்றாலும் 


பெண் என  = அவளும் பெண் தானே  என்று 


மனத்திடை = மனத்தில் 


பெரும் தகை = பண்புகளில் உயர்ந்த 


நினைந்தான் = இராமன் நினைத்தான் 


ஒரு அறிவான மாணவனுக்கு வரும் குழப்பம் அவனுக்கும் வருகிறது. அவனும் நம்மைப் போல் தான் என்று காட்டுவதன் நோக்கம், அவனும் உன்னைப் போல உள்ளவன் தானே, உனக்கு உள்ள குழப்பங்கள் அவனுக்கும் இருந்தது தானே, இருந்தும் அவன் எவ்வளவு சிறப்பாக வாழ்ந்தான், அது போல் நீயும் வாழ முடியும், வாழ வேண்டும் என்று சொல்வதர்காக.


விஸ்வாமித்திரன் இராமனுக்கு எடுத்துச் சொல்லி இறுதியில் இராமன் மனம் மாறுகிறான்.


மாறிய பின் என்ன சொன்னான், செய்தான் ? 



Monday, September 23, 2024

திருக்குறள் - உலகம் பழித்தது ஒழித்து விடின்

 திருக்குறள் - உலகம் பழித்தது ஒழித்து விடின் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/09/blog-post_23.html


துறவறம் என்பது வேடத்தைப் பொறுத்து அல்ல. சாமியார் என்றால் ஒரு குறிப்பிட்ட நிறத்தில் உடை அணிய வேண்டும் என்று ஆகி விட்டது. ஒவ்வொரு மதமும் ஒரு நிறத்தை வைத்து இருக்கிறது. 


இந்த புற வேடங்களை வள்ளுவர் கண்டிக்கிறார். 


மொட்டை அடிப்பது, தாடி வளர்ப்பது போன்ற எதுவும் வேண்டாம், எப்போது என்றால் இந்த உலகம் தவறு என்று எதைச் சொல்கிறதோ அதை விட்டு விட்டால்.


பாடல் 


மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்


பொருள் 


மழித்தலும் = தலையில் உள்ள முடியை நீக்குவதும் (மொட்டை போடுவதும்) 


நீட்டலும் = தாடியை நீளமாக வளர்ப்பதும் 


வேண்டா  = தேவை இல்லை 


உலகம் = உலகம் என்றால் நல்லோர், சான்றோர். உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு என்பது தொல்காப்பியம் 


பழித்தது = தவறு என்று சான்றோர் சொன்னவை 


ஒழித்து விடின் = விட்டு விட்டால் 


சாத்திரம், வேதம், ஆகமம், பூஜை, புனஸ்காரம்...எதுவும் தேவை இல்லை. அவற்றை எல்லாம் படிக்கக் கூட வேண்டாம். பெரியவர்கள் எதைச் செய்யக் கூடாது என்று கூறினார்களோ, அவற்றை விட்டு விட்டால் போதும். 


ஒரு சந்தேகம் வரும். 


இந்த தாடி வளர்ப்பது , மொட்டை அடிப்பது எல்லாம் ஆண்களுகுத்தானே பொருந்தும், பெண்களுக்கு பொருந்தாதே என்று. 


இந்து மதத்தில் பெண்கள் துறவிகளாகப் போக அனுமதி இல்லை. அவர்கள் திருமணம் செய்து க்கொண்டு இல்லறத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் விதி. 


மணிமேகலை இருந்தாள், அவள் சமண மதத்தைச் சேர்ந்தவள். 


வள்ளுவர் காலத்திலேயே இந்த மாதிரி மொட்டை அடித்து, தாடி வளர்த்து ஊரை ஏமாற்றும் பேர்வழிகள் இருந்திருக்கிறார்கள். அப்படி என்றால் இப்போது கேட்கவா வேண்டும். 


இதோடு கூடா ஒழுக்கம் என்ற அதிகாரம் முற்றுப் பெறுகிறது. 


துறவிகளுக்கு காமம் பற்றிய எண்ணங்கள் வரக் கூடாது. அப்படி வந்தால் துறவை துறந்து விட வேண்டும். மாறாக, துறவி வேடத்தில் காமச் செயல்களில் ஈடுபடக் கூடாது என்று கண்டிக்கிறது இந்த அதிகாரம். 


துறவிகள் காமத்தைத் தவிர்க்கச் சொன்னார். 


அதை அடுத்து என்னவாக இருக்கும்?


Friday, September 20, 2024

திரு மந்திரம் - களிம்பு அணுகாத கதிர் ஒளி காட்டி

திரு மந்திரம் - களிம்பு அணுகாத கதிர் ஒளி காட்டி 



நோய் வந்தால் மருத்துவரிடம் செல்கிறோம். அவர் அந்த நோயைப் போக்க மருந்து தருகிறார். நோய் நீங்கி சுகம் பெறுகிறோம். 


அந்த நோய் மீண்டும் வராது என்று சொல்ல முடியுமா? அல்லது, வேறு எந்த நோயுமே இனி வராது என்று எந்த மருத்துவராவது சொல்ல முடியுமா?  


நோய் வரும், குணமாகும், மீண்டும் ஒரு நோய் வரும், அது குணமாகும் என்று போய்க் கொண்டே இருந்தால் என்ன பலன். 


முந்தைய மந்திரத்தில் இறைவன் ஆன்மாக்களை ஒட்டி இருக்கும் களிம்பை (மலங்களை) நீக்கி அருள் புரிந்தான் என்று பார்த்தோம். அந்த குற்றங்கள், மலங்கள், களிம்புகள் மீண்டும் வந்து விட்டால்?


திருமூலர் சொல்கிறார், அவன் குற்றங்களை நீக்கியது மட்டும் அல்ல, அந்தக் குற்றங்கள் மீண்டும் வராமல் தடுப்பான் என்று. 



பாடல் 


களிம்பறுத் தான்எங்கள் கண்ணுதல் நந்தி

களிம்பறுத் தான்அருட் கண்விழிப் பித்துக்

களிம்பணு காத கதிரொளி காட்டிப்

பனிங்கிற் பவழம்3 பதித்தான் பதியே.


பொருள் 


களிம்பறுத் தான் = ஆன்மாக்களை பற்றியுள்ள அழுக்குகளை நீக்கினான்  


எங்கள் = எங்கள் 


கண்ணுதல் = நுதல் என்றால் நெற்றி. நெற்றியில் கண் உள்ள 


நந்தி = சிவனை நந்தி என்று குறிப்பிடுகிறார் திருமூலர் 


களிம்பறுத் தான் = களிம்பை நீக்கிய அவன் 


அருட் கண் = அருள் கண்ணை 


விழிப் பித்துக் = விழிக்கச் செய்து 


களிம்பணு காத = மீண்டும் களிம்பு அணுகாத 


கதிரொளி  காட்டிப் = ஞானமாகிய ஒளியைக் காட்டி 


பனிங்கிற் பவழம் = பளிங்கு போன்ற உள்ளத்தில் பவழம் போன்ற தன் திருவடிகளைப் 


பதித்தான் = பதியச் செய்தான் 


பதியே = தலைவனாகிய அவன்.


நம் கண்களால் உலகைக் காண்கிறோம். 


உலகில் உள்ள எல்லாவற்றையும் காண முடியுமா?


பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளை சாதாரண கண்ணால் பார்க்க முடியாது. அதற்கு நுண்ணோக்கி (microscope ) வேண்டும். 


தூரத்தில் உள்ள பொருள்களைப் பார்க்க தொலை நோக்கி (telescope ) வேண்டும். 


அது போல உண்மையை காண இந்தக் கண்கள் போதாது. அருட் கண்கள் வேண்டும். 


அருள் கொண்டு அறியார் அறியும் தரமோ 


என்பார் அருணகிரிநாதர்.


அருள் இல்லாமல் அறிய முடியாது. அந்த அருள் கண்ணை திறந்து, மலங்களை கழுவி, அது மீண்டும் வரா வண்ணம் தன் திருவடிகளை நம் மனதில் பதித்து அருள் புரிவான் என்பது கருத்து. 


எங்கெல்லாம் திருவடிகள் என்று வருகிறதோ, அங்கெல்லாம் அதை ஞானம் என்று கொள்ளலாம். 


திருவடிகளை மனதில் பதித்தான் என்றால், உண்மையான ஞானத்தை தந்து அருளினான் என்று பொருள் கொள்ள வேண்டும்.