Thursday, March 20, 2025

திருக்குறள் - விளக்கு

 திருக்குறள் - விளக்கு 


நம் வீடுதான். எது எது எங்க இருக்கும் என்று நமக்கு நன்றாகத் தெரியும். 


ஒரு நாள் சற்று தாமதமாக வீட்டுக்கு வருகிறோம். இரண்டாம் ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு என்று வைத்துக் கொள்வோமே. மின்சாரம் இல்லை. நம் வீடுதானே என்று நம்மால் எளிதாக உள்ளே சென்று காரியங்கள் செய்ய முடியுமா? அங்கும் இங்கும் முட்டிக் கொள்வோம். கட்டில் ஒரு பக்கம் இடிக்கும். நாற்காலி இன்னொரு பக்கம். மேஜை மறுபக்கம். 


கை பேசி விளக்காவது வேண்டும் எது எது எங்கே இருக்கிறது என்று அறிந்து கொள்ள. இடித்துக் கொள்ளாமல் செயல் பட. அடி பட்டுக் கொள்ளாமல் இருக்க. தவறி விழுந்துவிடாமல் இருக்க. 


அது வீட்டுக்கு. 


நம் வாழ்வை நாம் எப்படி நடத்திச் செல்வது ?


எது சரி, எது தவறு என்று எப்படி தெரியும்? யார் நல்லவர், யார் கெட்டவர் என்று எப்படித் தெரியும். 


மனம் பூராவும் அறியாமை என்று இருள் மண்டிக் கிடக்கிறது. இதை வைத்துக் கொண்டு எப்படி வாழ்வை செம்மையாக நடத்துவது ?


இந்த அறியாமை என்ற இருளைப் போக்கி வெளிச்சம் தருவது எது ?


வாய்மை என்ற விளக்கே மிகச் சிறந்த விளக்கு என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு


பொருள் 


எல்லா விளக்கும் = புற இருளை போக்கும் அனைத்து விளக்குகளும் 


விளக்கல்ல = விளக்கு அல்ல 


சான்றோர்க்குப் = சான்றோருக்கு 


பொய்யா விளக்கே விளக்கு = பொய்யாமை என்ற விளக்கே விளக்கு ஆகும். 


மற்ற விளக்குகள் எல்லாம் சூரியன், சந்திரன், தீ, மற்றும் வீட்டில் ஏத்தும் குத்து விளக்கு, அகல் விளக்கு, மின்சார விளக்கு போன்றவை. இவை புற இருளை மட்டுமே போக்கும். எனவே அவை சிறந்தவை அல்ல. 


அக இருளை நீக்கும் வாய்மை என்ற விளக்கே உண்மையான விளக்கு என்று சான்றோர் கொள்வர். 




Wednesday, March 19, 2025

நான்மணிக் கடிகை - எதுக்கு எது வேண்டும் ?

 நான்மணிக் கடிகை - எதுக்கு எது வேண்டும் ? 


கல்யாண வீட்டுக்குப் போக வேண்டும் என்றால் நல்ல துணி உடுத்திப் போக வேண்டும். நன்றாக படிக்க வேண்டும் என்றால் நல்ல புத்தங்கள் வேண்டும். 


இது போல வாழ்வில் எது ஒன்றையும் அடைவதற்கு வேறொன்றின் துணை தேவைப்படுகிறது. 


ஒருவன் இழிவு அடையாமல் இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?  

பேர் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

எப்போதும் கூடவே துணைக்கு ஒன்றும் என்றால் என்ன செய்ய வேண்டும் ?


எல்லோரையும் வெற்றி கொள்ள வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?


நான்மணிக் கடிகை விடை தருகிறது.


பாடல் 


 இன்னாமை வேண்டின் இரவெழுக இந்நிலத்து

மன்னுதல் வேண்டின் இசைநடுக - தன்னொடு

செல்வது வேண்டின் அறஞ்செய்க வெல்வது

வேண்டின் வெகுளி விடல்.


பொருள் 


இன்னாமை வேண்டின் = ஒருவன் பிறரால் இகழப் பட விரும்பினால் 


இரவெழுக = பிச்சை எடுக்க வேண்டும். 


இந்நிலத்து = இந்தப் பூமியில் 


மன்னுதல் வேண்டின் = நிலைத்து நிற்க வேண்டும் என்றால் 


இசைநடுக = புகழ் தரும் வினைகளைச் செய்ய வேண்டும் 


தன்னொடு = எப்போதும் தன்னோடு  கூடவே  


செல்வது வேண்டின் = ஒன்று இருக்க வேண்டும் என்றால்


அறஞ்செய்க = அறம் செய்க 


வெல்வது வேண்டின் = எல்லோரையும் வெல்ல வேண்டும் என்றால் 


வெகுளி விடல் = கோபத்தை விட்டு விட வேண்டும் 


யாரிடமும், எதையும் இலவசமாகப் பெற நினைக்கக் கூடாது. அது இழிவைத் தரும். எனக்கு அந்த உதவி செய், இந்த உதவி செய், என்று நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கேட்டுக் கொண்டிருந்தால், உன்னை ஒரு பிச்சைக்காரன் என்றே அவர்கள் நினைப்பார்கள். 


நல்ல காரியங்களைச் செய்தால் தனக்குப் பின்னும் பேர் நிலைத்து நிற்கும். 


ஒருவன் செய்யும் அறம் அவனோடு எப்போதும் கூடவே இருக்கும். 


கோபம் இல்லாதவன் மற்றவர்களை எளிதில் வென்று விட முடியும். 



Tuesday, March 18, 2025

திருக்குறள் - தூய்மை

 திருக்குறள் - தூய்மை 


ஒவ்வொரு நாளும் வீட்டு வேலை, வெளி வேலை என்று அலைகிறோம். வியர்வை, தூசி, புகை, என்று அசுத்தங்கள் உடல் மேல் படித்து உடம்பு அழுக்கு ஆகிறது. நாற்றம் அடிக்கிறது. உடம்பை சுத்தம் செய்ய வேண்டும் என்றால் குளிக்க வேண்டும். ஒரு நல்ல குளியல் போட்டால் அழுக்கு, வியர்வை எல்லாம் நீங்கி உடம்பு சுத்தமாகிவிடும். 


உடம்பை சுத்தம் செய்துவிடலாம். 


உள்ளத்தை? மனதை? எப்படி சுத்தம் செய்வது?


வள்ளுவர் சொல்கிறார் 


"எப்படி நீர் கொண்டு உடம்பை சுத்தம் செய்கிறோமோ, அது போல மனதை வாய்மையால் சுத்தம் செய்யலாம்" என்று. 


பாடல் 


புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்


பொருள் 


புறந்தூய்மை = மனதுக்கு வெளியே உள்ள தூய்மை, அதாவது உடலின் தூய்மை 


நீரான் அமையும் = நீரில் குளிப்பதால் அமையும் 


அகந்தூய்மை = உள்ளுக்குள் இருக்கும் மனதின் தூய்மை 


வாய்மையால் காணப் படும் = வாய்மையால் அமையும் 


காணப்படும் என்று கூறியதன் காரணம், உறுதியாக, நிச்சயமாக நடக்கும் என்பதால் கட்டாயம் காணப்படும் என்று கூறினார். 


உடலை தூய்மைப் படுத்த நீரின்றி வேறு வழி இல்லை. 


அது போல மனதை தூய்மைப் படுத்த வாய்மை அன்றி வேறு வழி இல்லை. 


சரி, இந்த மனத்தூய்மை என்றால் என்ன?  


பரிமேலழகர் சொல்கிறார் "மனத் தூய்மை என்பது மெய்யுணர்தல்" என்று. 


மனம் தூய்மையாக இருந்தால்தான் உண்மையை அறிய முடியும். வாய்மை ஒன்றுதான் அதற்கு வழி. 




Monday, March 17, 2025

 திருவாசகம் - அதிசயப் பத்து - எண்ணி லேன்திரு நாமஅஞ் செழுத்தும்


https://interestingtamilpoems.blogspot.com/2025/03/blog-post_17.html


"நன்றாகப் படிக்காததால் தேர்வில் வெற்றி பெறவில்லை" என்று ஒருவன் கூறினால் நாம் என்ன அறிந்து கொள்கிறோம்?


சரியா படிக்கல, அதனால் வெற்றி பெறவில்லை என்று அறிகிறோம். 


அது மட்டும் அல்ல.


தேர்ச்சி பெறவேண்டும் என்றால் நன்றாக படிக்க வேண்டும் என்ற அர்த்தமும் அதில் அடங்கி இருக்கிறது. 


மணிவாசகர் சொல்கிறார், 


"தனக்காவது சொந்த அறிவு வேண்டும். அது இல்லை என்றால் தெரிந்தவர்களிடம் கேட்க வேண்டும். இந்த பூமியில் பிறந்து என்ன பலனைக் கண்டேன்? ஏதோ பிறந்தேன், வளர்ந்தேன், இறந்தேன், மறுபடி பிறப்பேன் என்று என் வாழ்க்கை இப்படியே போய்க் கொண்டு இருக்கிறது. நல்ல வேளை சிவன் என்ன ஆட்கொண்டு, தன் அடியார் கூட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொண்டான். என்ன ஒரு அதியசம்" என்கிறார். 


பாடல் 


எண்ணி லேன்திரு நாமஅஞ் செழுத்தும்என் ஏழைமை யதனாலே

நண்ணி லேன்கலை ஞானிகள் தம்மொடும் நல்வினை நயவாதே

மண்ணி லேபிறந் திறந்துமண் ணாவதற் கொருப்படு கின்றேனை

அண்ணல் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.


பொருள் 


எண்ணி லேன் = மனதால் நினைத்துக் கூட பார்க்க மாட்டேன் 


திரு நாம = உன் திருநாமமாகிய 


அஞ் செழுத்தும் = அஞ்சு எழுத்தை 


என் ஏழைமை யதனாலே = என்னுடைய அறிவீனத்தினாலே 


நண்ணி லேன் = உடன் சேர மாட்டேன் 


கலை ஞானிகள் தம்மொடும் = வேத ஆகமங்களில் கற்றுயர்ந்த ஞானிகளுடன்  


 நல்வினை நயவாதே = நல்ல செயல்களை செய்யாமல் 


மண்ணி லேபிறந் திறந்து = மண்ணிலே பிறந்து இறந்து 


மண் ணாவதற் = மண்ணோடு மண்ணாகப் போவதற்கு 


கொருப்படு கின்றேனை = முற்படுகின்ற என்னை 


அண்ணல் ஆண்டு = அண்ணலாகிய சிவன் என்னை ஆட்கொண்டு 


தன் அடியரிற் = தன் அடியவர் கூட்டத்தில் 


கூட்டிய = சேர்த்துக் கொண்ட 


அதிசயங் கண்டாமே. = அதிசயத்தைப் பாருங்கள் 


அஞ்செழுத்தை நினைக்க மாட்டேன். 

அடியவர்களோடு சேர மாட்டேன் 

நல்ல காரியங்களை செய்ய மாட்டேன் 




Wednesday, March 12, 2025

திருக்குறள் - பொய்யாமை பொய்யாமை

 திருக்குறள் - பொய்யாமை பொய்யாமை 


பெண் வீட்டில் இருந்து ஒருவர் மாப்பிளையை சந்தித்து அவரைப் பற்றி விசாரிக்கச் சென்றிருந்தார். 


அவர் , வருங்கால மாப்பிளையிடம் "உங்களுக்கு இந்த மது, புகை பிடித்தல், இலஞ்சம் வாங்குதல், போன்ற கெட்ட பழக்கங்கள் எதாவது உண்டா" என்று மென்மையாக, நாசுக்காக கேட்டு அறிந்து கொண்டிருந்தார். 


எல்லாவற்றிற்கும் "இல்லை, இல்லை " என்றே பதில் சொல்லிக் கொண்டிருந்தார் அந்த மாப்பிளை. 


கடைசியில், "மனுஷன்னு இருந்தா, ஏதாவது ஒரு குறை இருக்கத்தான் இருக்கும், குறையே இல்லாத மனிதன் உண்டா...உங்களுக்கு என்ன குறை இருக்கிறது " என்று நேரடியாகவே கேட்டுவிட்டார். 


அதற்கு அந்த மாப்பிள்ளை "என்ன அப்பப்ப கொஞ்சம் பொய் சொல்லுவேன்"...என்றாராம். 


அப்படினா, இதுவரை சொன்னவை எல்லாம் உண்மை இல்லை என்று ஆகிவிடும். அதாவது எல்லா கெட்ட பழக்கமும் இருக்கு. ஆனால், இல்லை என்று பொய் சொல்லித் திரிகிறார். 


சிலர் பேர் "நான் பொய்யே பேச மாட்டேன்" என்பார்கள். அதுவே ஒரு பொய்யாக இருக்கும். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


சில பேர் "நான் தீவிர உணவு கட்டுப்பாடோடு இருக்கிறேன்...இருந்தும் என் எடை குறையவே மாட்டேன் என்கிறது" என்பார்கள். 


அவர்கள் உணவு கட்டுப் பாடு எப்படி இருக்கும் என்றால், 


"அலுவலகத்தில் ஏதாவது பார்ட்டி என்றால் எல்லாம், எல்லோருடனும் சேர்ந்து என்ன இருக்கிறதோ அதை சாப்பிட்டுவேன்...மற்ற படி கட்டுப்பாடுதான் "


"தீபாவளி, பொங்கல் என்று ஏதாவது விசேடம் என்றால் அன்று செய்ததை சாப்பிட்டுக் கொள்வேன்...மற்றபடி கட்டுப்பாடுதான்"


"வெளியூருக்குப் பயணம் போகும் போது இந்த கட்டுப்பாடு எல்லாம் முடியாது, என்ன கிடைக்கிறதோ அதை சாப்பிட வேண்டியதுதான்...மற்ற படி தீவிர கட்டுப்பாடுதான்" என்பார்கள். 


உணவு கட்டுப்பாடு இருக்கிறார்கள். அது உண்மை; ஆனால் அதை விடாமல் கடைபிடிப்பது இல்லை. அவ்வப்போது ஏதாவது ஒரு தடை வந்து விடும். மனதுக்குள் நினைப்பது என்னவோ, பெரிய உணவு கட்டுப்பாடு இருப்பது மாதிரி. 


எதைச் செய்தாலும், அதை விடாமல் கடை பிடிக்க வேண்டும். விட்டு விட்டு செய்வது விரதம் ஆகாது. 


வள்ளுவர் சொல்கிறார் 


"பொய் சொல்லாமல் இருந்தாலே போதும். வேறு எந்த அறமும் செய்ய வேண்டாம்" 


என்று. 



பாடல் 


பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று


பொருள் 


பொய்யாமை பொய்யாமை  = பொய்யாமை 


ஆற்றின் = செய்தால், அந்த வழியில் நடந்தால் 


அறம்பிற = பிற அறங்களை 


செய்யாமை செய்யாமை நன்று = செய்யாமல் இருந்தாலும் குற்றம் இல்லை. 


இருக்கிறதே ஏழு வார்த்தை. அதில இரண்டு வார்த்தையை இரண்டு தரம் போடணுமா?  


பொய்யாமை ஆற்றின் அறம் பிற செய்யாமை நன்று 


என்று சொல்லி இருக்கலாமே?


பொய்யாமை, பொய்யாமை என்பதற்கு, பொய்யாமை என்ற அறத்தை பொய்யாக்காமல் விடாமல் கடை பிடிக்க வேண்டும் என்று சில உரை ஆசிரியர்கள் உரை எழுதுகிறார்கள். பரிமேலழகர் "முதலில் வரும் பொய்யாமை உறுதி பற்றியும், இரண்டாவது வரும் பொய்யாமை உறுதியாக அதில் இருப்பதை பற்றியும் வருகிறது என்கிறார். 


அதாவது, எப்போதும் உண்மை பேசுவேன், ஆனால் தவிர்க முடியாத நேரத்தில் பொய்யும் பேசுவேன் என்று சொல்லக் கூடாது. அரிச்சந்திரன் உண்மை பேசிக் கொண்டிருந்தான். கடைசியில் விஸ்வாமித்திரன் "ஒரே ஒரு பொய் சொல்லு, நீ இழந்த நாடு, செல்வம் அனைத்தும் உனக்குத் தருகிறேன்" என்றான். அப்போது கூட பொய் சொல்ல மாட்டேன் என்று உறுதியாக இருந்தான். 


எனவே பொய்யாமையாகிய அறத்தை பொய்யாமல் (தவறாமல்) கடைபிடித்தால் 


மற்ற அறங்களை ஒரு போதும் செய்ய வேண்டாம். அதாவது, பொய்யாமையும் செய்து, மற்ற அறங்களையும் செய்ய வேண்டுமா, என்றால் வேண்டாம், பொய்யாமை ஒன்றே போதும் என்கிறார். 


மேலும், மற்ற அறங்களை எல்லாம் செய்து கொண்டு, நடுநடுவே பொய்யும் சொல்லிக் கொண்டிருந்தால் ஏனைய அறங்களால் பலன் ஒன்றும் இல்லை என்றும் பொருள் சொல்கிறார்கள். 




Tuesday, March 11, 2025

திருவாசகம் - அதிசயப் பத்து - குடி கெடுகின்றேன்

 திருவாசகம் - அதிசயப் பத்து - குடி கெடுகின்றேன் 



நாம் ஒரு தவறான காரியத்தைச் செய்கிறோம் என்றால் அது நம்மை மட்டும் பாதிப்பது இல்லை. நம் குடும்பத்தை, பிள்ளைகளை, அவர்களின் பிள்ளைகளை என்று இனி வரும் தலைமுறையையும் சேர்த்துப் பாதிக்கும். 


அது எப்படி?


ஒருவன் நன்றாக உழைக்காமல், ஏதோ வந்தோம் போனோம் என்று வேலை செய்கிறான். ஏதோ சம்பளம் வருகிறது. காலம் ஓடுகிறது.  பிள்ளைகள் சாதாரண பள்ளிகளில் படிக்கிறார்கள்.  உள்ளூரிலேயே ஏதோ ஒரு கல்லூரியில் படிக்கிறார்கள். அங்கேயே வேலை கிடைக்கிறது. 


அவனே முயன்று அதிக உழைப்பை தந்திருந்தால், அதிகம் சம்பாதித்து இருக்கலாம். பிள்ளைகளை பெரிய சிறந்த பள்ளிகளுக்கு அனுப்பி இருக்கலாம். மேற் படிப்புக்கு அயல் நாட்டிற்கு அனுப்பி உலகிலேயே சிறந்த கல்லூரிகளில் படிக்க வைத்து இருக்கலாம். 


அவனுடைய முயற்சின்மை அவனை மட்டும் அல்ல, அவன் குழந்தைகளையும், பேரக் குழந்தைகளையும் பாதிக்கிறது அல்லவா. 


அது போல, 


இறை வழியில் செல்லாமல் கண்ட படி சுத்தித் திரிந்தால், கெடுவது அவன் மட்டும் அல்ல, அவன் குலமே கெடும் என்கிறார் மணிவாசகர். 


இறை வழியில் சென்று உண்மையை உணர்ந்து இருந்தால், அதை தன் பிள்ளைகளுக்குச் சொல்லித் தந்திருப்பான். அவன் அறியாததால் அவன் பிள்ளைகளும் அறியவில்லை. இப்படி பின் வரும் சந்ததிகள் அந்த அறிவை அடையாமலேயே போய் இருக்கும். 


மணிவாசகர் சொல்கிறார் 


"இறைவனை போற்றும் அடியவர்கள் பால் செல்ல மாட்டேன். பூக்களைத் தூவி இறைவனை வழிபடமாட்டேன். மலர் சூடிய பெண்கள் பின்னால் சென்று என் குடியையே நாசம் செய்வேன். அப்படிப்பட்ட என்னை, இரவில், அனலை கையில் ஏந்தி ஆடும் எம் இறைவன், பொன் போல் மின்னும் ஜடா முடி கொண்டவன்,  என்னை ஆட்கொண்டு, தன் அடியவர் கூட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொண்ட அதிசயத்தை என்னவென்று சொல்லுவது "


என்று. 


பாடல் 



பரவுவார் அவர் பாடு சென்று அணைகிலேன்; பல் மலர் பறித்து ஏத்தேன்;

குரவு வார் குழலார் திறத்தே நின்று, குடி கெடுகின்றேனை

இரவு நின்று, எரி ஆடிய எம் இறை, எரி சடை மிளிர்கின்ற

அரவன் ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே.


பொருள் 


பரவுவார் = இறைவன் புகழை பாடுவார், சொல்லுவார் 


அவர் பாடு = அவர்களிடம் 


சென்று அணைகிலேன் = சென்று அவர்களோடு சேர்ந்து இருக்க மாட்டேன் 


பல் மலர் பறித்து = பல விதமான மலர்களைப் பறித்து 


ஏத்தேன் = உன்னை புகழ மாட்டேன் 


குரவு வார் = குரவு என்ற மலர்களை அணிந்த 


குழலார் = நீண்ட குழல் உடைய பெண்கள் 


திறத்தே நின்று = அவர்கள்பால் சென்று, அவர்களோடு இருந்து 


குடி கெடுகின்றேனை = என் குடியோடு கெடுகின்ற என்னை 


இரவு நின்று = நள்ளிரவில் 


எரி ஆடிய = எரியும் சுடுகாட்டில் திருநடனம் புரியும் 


எம் இறை = என்னுடைய இறைவன் 


எரி சடை மிளிர்கின்ற அரவன் = ஒளி வீசும் சடை முடி உடையவனை, பாம்பை அணிகலனாக அணிந்தவனை  


 ஆண்டு = என்னை ஆட்கொண்டு 



தன் அடியரில் கூட்டிய = தன்னுடைய அடியவர்களில் என்னையும் ஒருவனாக சேர்த்துக் கொண்ட 


அதிசயம் கண்டாமே = அதிசயத்தைக் கண்டேன் 


அடியவர்களோடு சேர்ந்து இருப்பது, மலர் தூவி வழிபடுவது - நல்ல நெறி 


பெண்கள் பின்னால் சுற்றுவது = தீ நெறி 


சரி, அப்படி என்றால் பெண்களுக்கு என்று ஒன்றும் சொல்லவில்லையா? பெண்கள் ஆண்கள் பின்னால் சுற்றலாமா? ஏன் எப்போதும் பெண்களையே பற்றி பேசுகிறார்கள். 


பல காரணங்கள் இருக்கலாம். எனக்குத் தெரிந்தவரை, பெண் பின்னால் போவது, அல்லது பெண் சுகம் தேடுவது என்பது ஒரு குறியீடு. அதாவது புலன் இன்பங்களின் பால் போகாமல் இருப்பது. 


வேறு ஏதாவது சொல்லலாமே, ஏன் பெண்களை முன்னிறுத்தி சொல்ல வேண்டும்?


சொல்லலாம். ஆனால் அந்த மாதிரி இன்பங்கள் எல்லோருக்கும் ஆசை இருக்குமா என்று தெரியாது. 


உதாரணமாக, "மது அருந்தி கேடு அடையும் என்னை" என்று சொல்லலாம். அப்படிச் சொன்னால், மது அருந்தாத பலர் இருப்பார்கள். அவர்கள் "மாணிக்க வாசகர் சொல்லுவது நம்மை அல்ல" என்று நினைத்துக் கொள்வார்கள். பெரும்பாலானோருக்கு பொதுவான ஒன்று என்றால் அது ஆணுக்கு பெண் மேல் உள்ள ஈர்ப்பும், பெண்ணுக்கு ஆண் மேல் உள்ள ஈர்ப்பும். 


உண்பது, உறங்குவது, மது, புகை பிடித்தல் போன்றவை பெரிய அளவில் மாறுபாடு இருக்கும். ஆண் பெண் கவர்ச்சி எல்லோருக்கும் உள்ள ஒன்று. 


சரி, அப்படியே வைத்துக் கொண்டாலும், ஏன் ஆணுக்கு பெண் மேல் உள்ள கவர்ச்சியை மட்டும் பேச வேண்டும். பெண்ணுக்கு ஆண் மேல் உள்ள கவர்ச்சி பற்றி பேசக் கூடாதா?


பேசலாம். 


ஆனால், ஒரு வயதுக்குப் பின், இயற்கையிலேயே பெண்ணுக்கு ஆண் மேல் உள்ள ஈர்ப்பு குறைந்து போகிறது. வயதான காலத்தில், ஆன்மீகத்தில் ஈடுபடும் நாட்களில், ஆணின் ஈர்ப்பு, பெண்ணை வெகுவாக பாதிப்பது இல்லை. அது இயற்கையிலேயே அமைந்த ஒன்று. ஆணுக்கு அப்படி இல்லை. இனக் கவர்ச்சி என்பது ஆணுக்கு மிக நீண்ட நாட்கள் இருக்கும். எனவே அது ஒரு தடை. எனவே, அது பற்றி வெகுவாக பேசப் படுகிறது. 


நான் தவறாகக் கூட இருக்கலாம்.  ஒரு சிந்தனை என்ற அளவில் அது பற்றி யோசிக்கலாம். சரி தவறு என்று வாதிக்க அல்ல. 


 

Sunday, March 2, 2025

திருக்குறள் - எல்லா அறமும்

 திருக்குறள் - எல்லா அறமும் 

https://interestingtamilpoems.blogspot.com/2025/03/blog-post.html



நான் அற வழியில் வாழ விரும்புகிறேன். எப்படி வாழ்ந்தால் அது அற வாழ்வு ஆகும் என்று ஒரு பட்டியல் தாருங்கள் என்று கேட்டால் யாராலும் தர முடியாது. இது தான் அறம் என்று வரையறுத்துக் கூற முடியாது. 


சரி, அது போகட்டும்...எது அறம் அல்லாதது என்று ஒரு பட்டியல் தர முடியுமா என்றால் அதுவும் முடியாது. 


பரிமேலழகரைக் கேட்டால், 'மனு முதலான நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழித்தலும் ' என்று கூறுவார். 


அந்த நூல்களின் பட்டியலைப் போட்டு, அதில் விதித்தன எது விலக்கியன எவை என்று கண்டு பிடிக்க ஒரு வாழ்நாள் போதாது. 


இப்படி சிக்கல் நிறைந்த ஒரு வழிமுறையைச் சொன்னால் அதன் படி எப்படி வாழ முடியும் ?


அது அங்கேயே நிற்கட்டும். 


நீங்கள் புதிதாக ஒரு வேலையை செய்ய ஆரம்பிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்...சைக்கிள் ஓட்டுவது, கார் ஓட்டுவது, இசைக் கருவி வாசிப்பது, உடற் பயிற்சி செய்வது என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். முதலில் ரொம்ப கடினமாக இருக்கும். போகப் போக நாம், அதைப் பற்றிய சிந்தனையே இல்லமால் செய்துவிடுவோம். சைக்கிள் ஓட்டும் சிறுவனைப் பாருங்கள். அவன் எப்படி ஓட்டுவது என்று சிந்திப்பதே இல்லை. இயல்பாக நடக்கும். 


அது போல நம் வாழ்க்கை முறையை ஆக்கிக் கொண்டால்? நம் இயல்பே அற வழியில் வாழ்வது என்று ஆகி விட்டால், ஒவ்வொரு முறையும் அது பற்றி யோசிக்கவே வேண்டாம். 


அதற்கு ஒரு வழி இருக்கா என்றால் இருக்கு, அதுவும் மிக எளிய வழி என்கிறார் வள்ளுவப் பேராசான். 


பாடல் 


பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை

எல்லா அறமும் தரும்.


பொருள் 


பொய்யாமை  = பொய் கூறாமல் இருத்தல் 


அன்ன = அது போன்ற 


புகழ்இல்லை  = புகழைத் தருவது வேறு எதுவும் இல்லை 


எய்யாமை = அறியாமை 


எல்லா அறமும் தரும் = எல்லா அறமும் தரும்.


முதல் பகுதி புரிகிறது. பொய் சொல்லாமல், உண்மை மட்டுமே சொல்லவதைப் போல ஒருவன் நல்ல புகழ் அடைய வேறு ஒரு மார்க்கம் இல்லை. 


புரிகிறது. 


அது என்ன அறியாமை எல்லா அறமும் தரும்?


மிக நுணுக்கமான இடம். 


அதாவது, உண்மை சொல்வது என்ற ஒன்றை மட்டுமே ஒருவன் கடைபிடித்துக் கொண்டு இருந்தால், அவன் அறியாமலேயே அது மற்ற எல்லா அறச் செயல்களின் பலன்களையும் தானே கொண்டு வந்து சேர்க்கும். 


புத்தகம் படிக்க வேண்டாம், தான தர்மம் செய்ய வேண்டாம், பூசனை, பஜனை செய்ய வேண்டாம்...ஒன்றும் செய்ய வேண்டாம். 


உண்மை மட்டுமே பேசுவது என்று வைத்துக் கொண்டால், ஒருவனுக்கு அவன் அறியாமலேயே மற்ற அனைத்து அறங்களின் பலனும் கிடைத்து விடும் என்கிறார். 


அது எப்படி?


உண்மை மட்டுமே சொல்லும் ஒருவனால் ஒரு தவறும் செய்ய முடியாது. ஒரு தவறும் செய்யாவிட்டால் மனம் சுத்தமாக இருக்கும். மனம் சுத்தமானால் சொல்லும், செயலும் சுத்தமாகும். 


மனம், மெய், மொழி சுத்தமானால் வேறு என்ன அறம் செய்ய வேண்டும்?  


மனிதன் செய்யும் பல தவறுகளுக்குக் காரணம், செய்ததை மாத்தி ஏதாவது பொய் சொல்லி சமாளித்துக் கொள்ளலாம் என்ற எண்ணமே. உண்மை மட்டுமே சொல்லுவது என்று வைத்துக் கொண்டால் தவறு செய்ய முடியாது. 


ஒரு நாள். ஒரே ஒரு நாள் முயன்று பாருங்கள். இந்தக் குறளின் ஆழம் புரியும்