Thursday, November 13, 2025

ஆசாரக் கோவை - நல்ல ஒழுக்கத்திற்கு அடிப்படைத் தேவை

 ஆசாரக் கோவை - நல்ல ஒழுக்கத்திற்கு அடிப்படைத் தேவை 


https://interestingtamilpoems.blogspot.com/2025/11/blog-post_13.html


ஒழுக்கமாக வாழ வேண்டும். 


ஒழுக்கம் என்றால் என்ன?  எதை ஒழுக்கம் என்று கொள்வது? அந்த ஒழுக்கம் எப்படி வரும்? 


இளைய தலைமுறைக்கு ஒழுக்கம் என்றால் என்ன என்று எப்படிச் சொல்லுவது? பெரியவர்களுக்குத் தெரிந்தால்தானே சொல்ல முடியும். இளையவர்கள் பல கேள்விகள் கேட்பார்கள். எல்லாவற்றிற்கும் தக்க பதில் சொல்ல வேண்டும். அதற்கு ஆழ்ந்த அறிவு வேண்டும். 


எங்கும் தேடி அலைய வேண்டாம். தமிழில் இவற்றை போதிக்க பல நூல்கள் உள்ளன. ஆசாரக் கோவை அதில் ஒரு நூல். 


ஒழுக்கத்திற்கு அடிப்படை என்னென்ன என்று அது கூறுகிறது. 


மொத்தம் எட்டு குணங்களை ஒழுக்கத்தின் அடிப்படை என்று கூறுகிறது. 



அவை என்னென்ன ?


பாடல் 


நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோ

டின்னாத எவ்வுயிர்க்குஞ் செய்யாமை கல்வியோ

டொப்புர வாற்ற வறிதல் அறிவுடைமை

நல்லினத் தாரோடு நட்டல் இவையெட்டும்

சொல்லிய ஆசார வித்து


கொஞ்சம் சீர் பிரிப்போம்


நன்றி அறிதல் பொறை உடைமை இன் சொல்லோடு 

இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை கல்வியோடு 

ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை 

நல்ல இனத்தாரோடு நட்டல் இவை எட்டும் 

சொல்லிய ஆசார வித்து 


பொருள் 


நன்றி அறிதல் = ஒருவர் நமக்கு செய்த உதவியை மறக்காமல் இருத்தல் 


பொறை உடைமை = பொறுமை 


இன் சொல்லோடு = இனிய சொல் பேசுதல் 

 

இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை = மற்ற எந்த உயிர்க்கும் துன்பம் செய்யாமல் இருந்தல் 


கல்வியோடு = கல்வி அறிவு 

 

ஒப்புரவு ஆற்ற அறிதல் = உலகோடு ஒத்துப் போகும் ஆற்றல் 


அறிவுடைமை = அறிவுடைமை 

 

நல்ல இனத்தாரோடு நட்டல் = நல்லவர்களோடு சேர்ந்து இருத்தல் 


இவை எட்டும் = இந்த எட்டு குணங்களும் 

 

சொல்லிய = ஆன்றோர் சொல்லிய 


ஆசார = ஆசாரத்துக்கு  


வித்து = அடிப்படை 


இவை எல்லாம் இருந்தால் ஒழுக்கம் தானே வரும்.


 


Tuesday, November 11, 2025

திருக்குறள் - வெகுளாமை - உள்ளியது எல்லாம் உடன்எய்தும்

 திருக்குறள் - வெகுளாமை - உள்ளியது எல்லாம் உடன்எய்தும் 



கோபம் நல்லது அல்ல. நமக்குப் புரிகிறது. அதை விட்டால் நல்லதுதான். அதுவும் புரிகிறது. எப்படி விடுவது?  


கோபத்தை விட்டு விடு, விட்டு விடு, என்று சொன்னால் போதாது. எப்படி விடுவது என்றும் சொல்ல வேண்டும் அல்லவா.


சரி, கோபத்தை விடுவதற்கு வழியும் சொல்லியாகி விட்டது. ஏன் விட வேண்டும்? விட்டால் என்ன பயன். கோபித்து மனைவியை, கணவனை, பிள்ளைகளை, கீழே வேலை செய்யும் ஆட்களை நாலு திட்டு திட்டினால் பயந்து போய் வேலை செய்வார்கள். அதனால் ஒரு பலன் உண்டு. கோபத்தை விட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று அதையும் சொல்ல வேண்டும் அல்லவா?


அந்த இரண்டையும் இந்தக் குறளில் வள்ளுவப் பேராசான் கூறுகிறார். 


பாடல் 



உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்

உள்ளான் வெகுளி எனின்


பொருள் 


உள்ளியது  = மனதில் நினைத்தவை 


எல்லாம் = அனைத்தையும் 


உடன்எய்தும் = ஒன்றாக அடைவான் 


உள்ளத்தால் = மனத்தால் 


உள்ளான் = நினைக்காமல் 


வெகுளி எனின் = கோபத்தை என்றால். 


கொஞ்சம் சொற்களை இடம் மாற்றிப் போட்டால், 


மனதாலும் கோபத்தை ஒருவன் நினைக்காமல் இருந்தால், அவன் விரும்பியது எல்லாம் அவனுக்குக் கிடைக்கும். 


சரி, இதில் எங்கே கோபத்தை விட வழி சொல்லி இருக்கிறது? கோபத்தை விட்டால் வரும் பலன் எங்கே சொல்லி இருக்கிறது. 


ஒருவனுக்கு அவன் நினைத்தது எல்லாம் கிடைக்கும் என்பது பெரிய நன்மைதானே? 


அறம், பொருள் இன்பம், வீடு  என்ற அனைத்தும்  அவனுக்கு ஒருங்கே கிடைக்கும்.


யோசித்துப் பார்ப்போம். 


நேர்மையான வாழ்க்கை - அற வழியில் செல்லும் வாழ்வு. ஒரு பொய் கிடையாது, திருட்டு கிடையாது, சூது வாது கிடையாது...அறம் சார்ந்த வாழ்க்கை. 


என்னவெல்லாம் தேவையோ அவற்றை வாங்க பொருள் 


கணவன், மனைவி, பிள்ளைகள், நட்பு, சுற்றம் என்ற இல்லற சுகம். 


எல்லாவற்றையும் அனுபவித்து பின் வீடு பேறு.


இவை அனைத்தையும் தரும் என்றால் அது நல்லதுதானே?


மனதால் கூட கோபத்தை நினைக்காவிட்டால், இவை எல்லாம் கிடைக்கும் என்கிறார். இதற்கு மேல் கேட்க என்ன இருக்கிறது ?


சரி, எப்படி கோபத்தை விடுவது ?


அதற்கு பரிமேலழகர் வேண்டும். அவர் இல்லாமல் நம்மால் இதை புரிந்து கொள்ள முடியாது. 


"உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின்" என்று குறள் சொல்கிறது. கோபத்தை மனதால் நினைக்காமல்  என்று பொருள். 


பரிமேலழகர் கேட்கிறார், நினைப்பது என்றாலே அது மனதால் நினைப்பது தானே. பின் எதற்கு "உள்ளத்தால் உள்ளான் " எனின் என்று போட்டு இருக்கிறார்.  அதற்கு அவரே பதில் சொல்கிறார்.


இந்தக் குறள் இருப்பது துறவறம் என்ற பிரிவில். 


துறவியின் உள்ளம் அருள் உள்ளம்.  உயிர்கள் மேல் அன்பு கடந்து அருள் செலுத்தும் உள்ளம். அந்த அருள் நிறைந்த உள்ளத்தில் கோபம் வர வழியே இல்லை. கோபம் வருகிறது என்றால் அருள் முழுவதும் இல்லை என்று அர்த்தம். 


எனவே, கோபத்தை விட வேண்டும் என்றால், மனதில் அருள் வேண்டும். 


பிள்ளை தவறு செய்து விட்டால், அதன் மேல் உள்ள அன்பால் நாம் குழந்தையை கோபிப்பது இல்லை. அந்த அன்பு விரிந்து விரிந்து அருளாக மாற வேண்டும். அருள் உள்ளத்தில் நிறைந்து இருந்தால் அங்கே கோபம் இருக்க வழி இல்லை. 


ஒளி உள்ள இடத்தில் இருள் எங்கனம் இருக்கும். 


அருளை வளர்த்துக் கொண்டே போனால், கோபம் குறைந்து கொண்டே போகும்.


"ஆருயிர்கெல்லாம் நான் அன்பு செய்ய வேண்டும் " என்று இறைவனை வேண்டுவார் வள்ளல் பெருமான். 


அன்பு பெருக பெருக, அருள் வளரும். 


அருள் வளர, வளர கோபம் தேயும். 


கோபம் தேய தேய மனதில் நினைத்தது எல்லாம் கிடைக்கும். 


எவ்வளவு அழகான, ஆழமான குறள்.





Monday, November 10, 2025

கம்ப இராமாயணம் - உந்தையை உயிர் கொண்டானை

 கம்ப இராமாயணம் - உந்தையை உயிர் கொண்டானை



மனைவியை இழக்கும் துயரம் பெரும் துயரம். என்னதான் அவளிடம் ஆயிரம் குறை இருந்தாலும், அவள் இல்லாத உலகம் ஒரு மிகப் பெரிய வெற்றிடமாக இருக்கும். ஒரு ஆண் மகனை மிகவும் பலவீனமாக்கும் ஒரு விடயம் என்றால் அது அவன் அவனுடைய மனைவியை இழப்பதுதான். 


எந்த பெரிய இழப்பையும் ஒரு ஆணால் தாங்க முடியும். ஆனால், மனைவியின் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பாக இருக்கிறது. 


இராமனை விட மன உறுதி உள்ள ஆடவனை நாம் காட்ட முடியாது. நாடு கிடையாது, காட்டுக்குப் போ என்ற போது கூட கலங்காமல் நின்றவன், சீதையை பிரிந்த பின் தடுமாறுகிறான். அவன் உள்ளம் சோர்ந்து போகிறது. 


ஜாடாயு இறந்து கிடக்கிறார். ஏற்கனவே சீதையைப் பிரிந்த துன்பம். இப்போது தந்தை போன்ற ஜடாயு இழந்த துயரும் சேர்ந்து கொள்கிறது. இராமன் மனம் சோர்ந்து போகிறான். 


இலக்குவன் சொல்கிறான் 


"என்ன இராமா நீ இப்படி பேசுகிறாய்...இவ்வளவு சோர்ந்து, ஒரு சாதாரண மனிதன் போல் பேசுகிறாய்.சீதையை இழந்த துயரம், அதனால் வந்த சோகம், கோபம் எல்லாம் விடு.  நம்ம அப்பா போன்ற ஜடாயுவின் உயிரை எடுத்த அந்த இராவணனை கொல்ல வேண்டும் என்ற சிந்தை இல்லாமல் இது என்ன பேச்சு"


என்கிறான். 


பாடல் 




“எந்தை ஈது இயம்பிற்று என்னை?

    எண்மையன் ஆகி ஏழைச்

சந்த வார் குழலினாளைத்

    துறந்தனை தணிதி யேனும்,

உந்தையை உயிர் கொண்டானை

    உயிர் கொள்ளும் ஊற்றம் இல்லாச்

சிந்தையை ஆகின் நின்று,

    செய்வதென் செய்கை ‘‘ என்றான்


பொருள் 


“எந்தை = என் தந்தை போன்ற இராமனே 


ஈது = இந்த மாதிரி 


இயம்பிற்று என்னை? = என்ன பேசுகிறாய் ?


எண்மையன் ஆகி = தாழ்வு மனப்பாண்மை கொண்டு 


ஏழைச் = எளிமையான, பேதையான 


சந்த வார் குழலினாளைத் = நீண்ட குழலினை (தலை முடி) கொண்ட சீதையை  


 துறந்தனை = பிரிந்து இருக்கிறாய் 


தணிதி யேனும் = அதனால் வந்த சோகத்தையும், கோபத்தையும் விட்டு 


உந்தையை உயிர் கொண்டானை = உன் தந்தையின் உயிரை எடுத்தவனை 


உயிர் கொள்ளும் = அவன் உயிரை எடுக்கும் 


ஊற்றம் = வலிமை 


இல்லாச் = இல்லாத 


சிந்தையை ஆகின் நின்று = எண்ணங்களைக் கொண்டு நின்று 


செய்வதென் செய்கை ‘‘ = செய்கின்ற இந்த செயல் என்ன 


என்றான் = என்று இலக்குவன் கேட்டான் 


ஆறுதல் சொல்லுவதும் ஒரு கலை தான். 


இராமன் சோகத்தில் இருக்கிறான். அவனுக்கு ஆறுதல் சொல்கிறேன் பேர்வழி என்று இலக்குவனும் அவனைக் கட்டிக் கொண்டு அழுதால் என்ன ஆகும்?  இராமாயணம் அங்கேயே முடிந்து போய் இருக்கும். 


யாராவது சோர்ந்து இருந்தால், அவர்களை தட்டி எழுப்பி, உற்சாகப் படுத்தி அதில் இருந்து மீள வழி செய்ய வேண்டும். ஐயோ பாவம் என்று அவர்களோடு சேர்ந்து உட்கார்ந்து அழுது கொண்டிருந்தால் காரியம் நடக்காது. 


சரி, அது ஒரு புறம் இருக்கட்டும். 


அப்படி இராமன் என்ன சொன்னான் ?

Thursday, October 23, 2025

திருக்குறள் - வெகுளாமை நன்று

 திருக்குறள் - வெகுளாமை நன்று


https://interestingtamilpoems.blogspot.com/2025/10/blog-post.html



சூடான ஒரு பொருள் மீது நம் கை பட்டு விட்டால் எவ்வளவு வலிக்கிறது. தெரியாமல் பட்டு விட்டாலே அந்த வலி. சட்டென்று கையை இழுத்துக் கொள்வோம். அந்த ஒரு சில நொடியே பெரிய வலியைத் தரும். உடனடியான வலி மட்டும் அல்ல, தழும்பு ஏற்பட்டு, நீண்ட நாட்களுக்கு அதை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும். 


அப்படி இருக்க,


யாராவது நமக்கு சூடு போட்டால் அல்லது நெருப்பால் சுட்டால் நமக்கு எப்படி இருக்கும். அப்படி செய்தவர்கள் மேல் எவ்வளவு கோபம் வரும். அவர்களை அடித்து நொறுக்கலாம் போல இருக்கும் அல்லவா? 


அப்படி ஒரு முறை இருமுறை அல்ல, பலமுறை நம்மை நெருப்பால் சுட்டால் அவர்கள் மேல் எவ்வளவு வெறுப்பும், கோபமும் வரும்?


வள்ளுவர் சொல்கிறார், 


அப்படி ஒருவர் நமக்கு பல முறை தீங்கு செய்தாலும், அவர்கள் மேல் கோபம் கொள்ளாமல் இருப்பது நல்லது என்று. 


பாடல் 


இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்

புணரின் வெகுளாமை நன்று


பொருள் 


இணர் = இணையாக வரக் கூடிய, அல்லது கொத்து கொத்தாக வரக் கூடிய, ஒரு பூங்கொத்தை போல வரக் கூடிய  


எரி  = தீ, சூடு 


தோய்வன்ன = மேலே வைத்து சுடுவதைப் போல  


இன்னா செயினும் = நமக்கு ஒருவர் தீமை செய்தாலும் 


புணரின் = கூடுமானால் 


வெகுளாமை நன்று = அவர்கள் மேல் கோபம் கொள்ளாமல் இருப்பது நல்லது 


ஒருதரம் சூடு பட்டாலே துன்பம் பொறுக்க முடியாது. கொத்து கொத்தாக, மறுபடியும், மறுபடியும் சூடு வைப்பது போல துன்பம் செய்தாலும், அவர்கள் மேல் கோபம் கொள்ளாமல் இருக்க முடியுமானால் நல்லது. 


இதெல்லாம் நடக்கிற காரியமா?  சொல்வது எளிது என்று நாம் சொல்லலாம். 


வள்ளுவருக்குத் தெரியாதா இது கடினமான காரியம் என்று. 


எனவே தான் "புணரின்" என்ற ஒரு வாத்தையைப் போடுகிறார். 


புணர்தல் - கூடுதல், சேர்தல். 


புணரின் - கூடுமானால் 


அவர்கள் மேல் கோபம் கொள்ளாமல் இருக்க முடியுமானால், அது நல்லது என்கிறார். 


நமக்கு ஒரு முறை துன்பம் செய்தவர்களைக் கூட ' சரி போனால் போகிறது, தெரியாமல் செய்து விட்டார்கள்' என்று மன்னித்து விட்டு விடலாம். கோபம் கொள்ளாமல் கூட இருந்து விடலாம். 


மறுபடியும், மறுபடியும் துன்பம் செய்து கொண்டே இருந்தால், அப்போது கூட கோபம் கொள்ளாமல் இருப்பது நல்லது. 


இராமரும், தர்மரும் தங்களுக்கு பலவித துன்பங்களைச் செய்தவர்கள் மேல் கோபம் கொள்ளவில்லை.


கோபம் எவ்வளவு தீமையானது என்று நாம் இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். 


ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய குறள்.




Saturday, September 13, 2025

கம்ப இராமாயணம் - கொடுந்துயர்க் குளிப்பது -2/2

 

கம்ப இராமாயணம் - கொடுந்துயர்க் குளிப்பது -2/2


இதன் முதல் பகுதியை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம். 



ஜடாயு மாண்ட பின், இராமன் வருந்துகிறான். 

இலக்குவன் சொல்கிறான், 


"தீமை என்று எதுவும் இல்லை. எல்லாம் விதிப்படித்தான் நடக்கும். அதற்கு எதற்கு வருந்த வேண்டும். நடக்க வேண்டியது நடந்தது. இது வருந்தவோ, துக்கப்படவோ வேண்டிய நேரம் அல்ல. அந்த அரக்கர்களை கொன்ற பின் நாம் இந்த துக்கத்தை அனுபவிக்கலாம்"


இப்படித்தான் வாழ்வில் ஒவ்வொரு உணர்சிகளையும் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம். எந்த சந்தோஷம் வந்தாலும், "இல்லை இல்லை, இது என்ன பெரிய விடயம், நான் அதை அடைந்தால் சந்தோஷாம் அடைவேன் " என்று நினைக்கிறோம். அதை அடைந்த பின், வேறு ஒன்று வந்து நிற்கும். ஒரு நாளும் சந்தோஷமாய் இருப்பதே இல்லை. துக்கமும் அப்படியே.  "இது விதி, நான் ஆண், அழக் கூடாது, நானே தளர்ந்து போனால் பிள்ளைகள் பயந்து விடுவார்கள்" என்று ஏதேதோ சொல்லி துக்கத்தையும் தள்ளிப் போட்டு விடுகிறோம். 

இப்படி ஒவ்வொன்றாக தவிர்த்துக் கொண்டே போனால், வாழ்வில் உணர்வுகளுக்கு மதிப்பு இல்லாமல் போய் விடும். ஆங்கிலத்தில் Emotional Intelligence என்று சொல்லுவார்கள். 


இன்பமோ, துன்பமோ அவ்வவற்றை அவ்வப்போது அனுபவிக்க வேண்டும். அப்புறம், அப்புறம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகக் கூடாது. 

பாடல் 


என்றலும், இளைய கோ அவ் இராமனை
     இறைஞ்சி, 'யாண்டும்,
வென்றியாய்! விதியின் தன்மை
     பழியல விளைந்தது ஒன்றோ?
நின்று இனி நினைவது என்னே? நெருக்கி
    அவ் அரக்கர் தம்மைக்
கொன்றபின் அன்றோ, வெய்ய கொடுந்
     துயர் குளிப்பது?' என்றான்.

பொருள் 

என்றலும் = இராமனின் துயரச் சொற்களை கேட்ட பின் 

இளைய கோ = இளவல் இலக்குமன் 

அவ் இராமனை இறைஞ்சி = அந்த இராமனை வணங்கி 

 'யாண்டும், = எப்போதும் 

வென்றியாய்! = வெற்றியை உடையவனே 

விதியின் தன்மை = விதியின் தன்மை(யைத் தவிர) 

பழியல விளைந்தது ஒன்றோ? = பழி அல்லது தீமை என்று ஒன்று உண்டா. இல்லை. எல்லாம் விதியின் செயல் 

நின்று இனி நினைவது என்னே?  = அதையே நீண்ட நேரம் சிந்தித்து நடக்கப் போவது என்ன. 

நெருக்கி = மேல் சென்று 

அவ் அரக்கர் தம்மைக் = அந்த அரக்கர்களை 

கொன்றபின் அன்றோ = கொன்ற பின் அல்லவா 

வெய்ய  கொடுந்  துயர் குளிப்பது?' = மிகக் கொடுமையான துயரை நாம் அனுபவிக்க வேண்டும். 

என்றான் = என்று கூறினான் 

இப்ப துக்கப் படாதே. அரக்கர்ளை கொன்ற பின் ஜடாயு இறந்ததற்கு துக்கம் அனுஷ்டிக்கலாம் என்கிறான். 

நடக்கிற காரியமா அது? அப்போது இந்தத் துக்கம் மறந்து விடும். 

சிந்திப்போம். 




Friday, September 12, 2025

கம்ப இராமாயணம் - கொடுந்துயர்க் குளிப்பது - 1/2

 கம்ப இராமாயணம் - கொடுந்துயர்க் குளிப்பது -1/2


துக்கத்தை எப்படி கையாள்வது ?  


எந்த ஒரு உணர்வையும் கையாள்வது என்றால் அதில் பயிற்சி வேண்டும். துக்கம் என்றாலே காத தூரம் ஓடி விடுகிறோம். அதை எப்படியாவது தவிர்க்க எண்ணுகிறோம். இப்படி பயந்து பயந்து ஓடிக் கொண்டே இருந்தால், ஒரு நாள் உண்மையிலேயே ஒரு துன்பம் வந்தால் அதை எப்படி சமாளிப்பது என்று தெரியாமலேயே போய் விடும். சின்ன துன்பம் வந்தால் கூட தவித்துப் போய் விடுவோம். 


துன்பத்தை கையாளத் தெரிய வேண்டும். அதற்காக எங்கு போய் பயிற்சி எடுப்பது?  


எங்கும் போக வேண்டாம். வரும் துன்பங்களை ஏற்றுக் கொண்டு அவற்றை கடந்து போகப் பழக வேண்டும். 


சரி துன்பமே வராவிட்டால் என்ன செய்வது?


அதற்குத்தான் விரதம், தூக்கம் விழிப்பது என்று வைத்து இருந்தார்கள். மாதத்தில் ஒரு நாள் சாப்பிடாமல் இருந்து பார். பசிக்கும். தலை வலிக்கும். சோர்வு வரும். ஆனால், பழகி விடும். அப்புறம், அது ஒரு பெரிய விடயமாகத் தெரியாது. அது போல் ஆண்டில் ஒரு நாள் சிவராத்திரி அன்று தூக்கம் தவிர்த்துப் பார்க்க வேண்டும். கடினம்தான். அவற்றை ஏற்றுப் பழகிக் கொண்டால் பின் நாம் எதிர்பார்க்காமல் பசி தூக்கம் போன்ற துன்பங்கள் வரும் போது அவற்றை எளிதில் நம்மால் சமாளிக்க முடியும். 


நான் பார்த்தவரை, நாம் துக்கம் அனுஷ்டிப்பது என்பதை நாம் சரியாக செய்வதில்லையோ என்ற சந்தேகம் உண்டு. துக்கம் வந்தால் அதை தள்ளிப் போட்டு விடுகிறோம். அதில் பல சடங்குகளைப் புகுத்தி அந்த உணர்வுகளை மழுங்கப் பண்ணி விடுகிறோமோ என்று தோன்றுகிறது. மனம் அந்த சமய சடங்குகளில், அதற்கு வேண்டிய சாமான்கள் வாங்குவது, வீட்டை சுத்தம் செய்வது, சடங்கு செய்யும் ஆட்களை கொண்டு வருவது,சுற்றம்/ நட்பை அழைப்பது, அதில் யாரை அழைக்க வேண்டும், யாரை அழைக்க வேண்டாம் என்ற சச்சரவு வேறு. 


இதில் மனம் போனால் துக்கத்தில் எங்கே மனம் போகும். 


அனுபவிக்காமல் விட்ட துக்கம் எங்கோ போய் ஒளிந்து கொள்கிறது. பின், அது வேறு வேறு விதங்களில் வெளிப்படுகிறது. 


ஜடாயு இறந்து போகிறார். 



இராமன் துக்கத்தில் புலம்புகிறான். அது தான் சரியான ஒன்று. 


ஆனால், இலக்குவன் அதை மறுக்கிறான். 


அவன் என்ன சொன்னான் என்று நாளை சிந்திப்போம். 



Thursday, August 21, 2025

கம்ப இராமாயணம் - மாரீசன் - புலவியினும் வணங்கா முடி

கம்ப இராமாயணம் - மாரீசன் - புலவியினும் வணங்கா முடி 

https://interestingtamilpoems.blogspot.com/2025/08/blog-post.html


வில்லன் இல்லை என்றால் கதாநயாகன் இல்லை. 


கதாநாயகனின் பெருமை எல்லாம் வில்லனைச் சேர்ந்தது. 


இராவணன் சீதையைச் தூக்கிச் செல்லவில்லை என்றால், பதினாலு வருடம் இராமனும், சீதையும் காட்டில் இருந்து விட்டு பின் நாட்டுக்குப் போய் இருப்பார்கள். அதில் இராமனின் பெருமை என்ன இருக்கிறது ? அப்பா காட்டுக்குப் போகச் சொன்னார். போனான். பின் வந்தான் என்று கதை முடிந்து இருக்கும். 


இராமனின் ஆற்றலை காட்ட ஒரு இராவணன் வேண்டும். 


இராமன் தெருவோரம் போகும் ஒரு மெலிந்த ஒருவனை வென்றான் என்றால் அது ஒரு செய்தி கூட இல்லை. கொசுவை அடித்துக் கொல்வது என்ன பெரிய செய்தியா?


இராமனின் பெருமை உயர வேண்டும் என்றால் அவன் இராவணன் என்ற மிகப் பெரிய வீரனை, தவ வலிமை உடையவனை, பேரும் புகழும் கொண்டவனை வென்றான் என்ற சொல்ல  வேண்டும். 


இராமன் வென்ற இராவணன் எப்பேற்பட்டவன் என்று கம்பன் விவரித்துக் கொண்டு போகிறான். 


எவ்வளவுக்கு எவ்வளவு இராவணனை தூக்கிப் பேசுகிறானோ, அதை விட ஒரு படி இராமன் புகழ் வரப் போகிறது என்று அர்த்தம். அப்பேற்பட்ட இராவணனை, இராமன் வென்றான் என்று வர வேண்டும். 


"சிவன்,  திருமால், பிரமன் ஆகிய மூவரும், இராவணனை வெல்ல முடியாது. மும்மூர்திகளாலும் வெல்ல முடியாதவன் என்றால் அவனை வேறு யாரால் வெல்ல முடியும். 


எப்பேற்பட்ட ஆள் ஆனாலும், வீட்டில், படுக்கை அறையில், மனைவியிடம் அல்லது காதலியிடம் இறங்கி வந்தே ஆக வேண்டும். அது தான் கலவியில் இன்பம். அதட்டி, மிரட்டி, இன்பம் அனுபவிக்க முடியுமா? 


ஆனால், இராவணன், படுக்கை அறையிலும் வணங்கா முடி உள்ளவனாம். அப்படி என்றால் வேறு எங்கு வணங்கி இருப்பான்?  "


பாடல் 


புலியின் அதள் உடையானும், பொன்னாடை

     புனைந்தானும், பூவினானும்

நலியும் வலத்தார் அல்லர்; தேவரின் இங்கு

     யாவர், இனி நாட்டல் ஆவார்?

மெலியும் இடை, தடிக்கும் முலை, வேய் இளந்

     தோள், சேயரிக் கண், வென்றி மாதர்

வலிய நெடும் புலவியினும் வணங்காத

     மகுட நிரை வயங்க மன்னோ.


பொருள் 


புலியின் = புலியின் 


அதள் = தோலை 


உடையானும் = உடையாகக் கொண்ட சிவனும் 


பொன்னாடை = பட்டு , பீதாம்பரம் 


புனைந்தானும் = உடுத்திய திருமாலும் 


பூவினானும் = தாமரை பூவில் தோன்றிய பிரமனும் 


நலியும் = (இராவணனை) வெல்லும் 


வலத்தார் அல்லர் = வல்லமை உடையவர்கள் அல்ல 


தேவரின் = அப்படி இருக்கும் போது, தேவர்களில் 


இங்கு யாவர் = யார் இங்கு  


இனி நாட்டல் ஆவார்? = இனி அவனை வெல்லப் போக்கிரார்கள் 


மெலியும் இடை = மெலிந்து கொண்டே போகும் இடுப்பு 


தடிக்கும் முலை = தடிக்கும் மார்பகங்கள் 


வேய் = மூங்கில் போல் 


இளந் தோள் = இளமையான தோள்கள் 


சேயரிக் கண் = சிவந்த கண்கள் 


வென்றி மாதர் = வெற்றி கொள்ளும் பெண்கள் 


வலிய நெடும் புலவியினும் = நீண்ட கலவி நேரத்திலும் 


வணங்காத = வணங்காத 


மகுட நிரை வயங்க மன்னோ = மகுடங்களை கொண்டவன் 


படுக்கை அறையில் கூட தலை வணங்காதவன்.


தனிமையில், மோகம் கொண்ட நேரம், ஆண், பெண்ணிடம் அடிமையாவது இயல்பு. 


முருகன், வள்ளியிடம் "நீ எனக்கு என்ன ஆணை இடுகிறாயோ அதை செய்வேன் என்று வள்ளியின் பாதங்களை பிடித்துக் கொண்டு கேட்டானாம்".


"பணியா என வள்ளி பதம் பணியும், 

தணியா அதி மோக தயாபரனே"


என்பது அருணகிரி வாக்கு 


அவள் காலடியில் பணிந்து நிற்பானாம்.


அதுதான் ஆண்மை.  பெண்ணிடம் தோற்க வேண்டும். என் முன்னால் அவன் பணிந்து நிற்கிறான் என்று அவள் பெருமை கொள்ள வேண்டும். அது உயர்வு தாழ்வு அல்ல. அன்பின் வெளிப்பாடு.


இராவணனுக்கு அதெல்லாம் தெரியாது. அங்கும் கூட அவன் வணங்கா முடியன். 


அதுதான் அரக்க குணமோ ?