Friday, May 30, 2025

திருக்குறள் - சினம் எனும் தீ

 திருக்குறள் - சினம் எனும் தீ 



நீங்கள் இருக்கும் ஊரில் சாமான்கள் வைத்து இருக்கும் ஒரு கிடங்கில் தீ பிடித்து விடுகிறது. கிடங்கில் உள்ள பொருள் எல்லாம் எரிந்து சாம்பாலாகி விடுகிறது.


இது போன்ற செய்திகளை கேட்டும் பார்த்தும் இருக்கிறோம். 


போன வருடம் பிடித்த தீயில், இந்த வருடம் பல கோடி மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலானது என்று கேட்டு இருகிறீர்களா. இப்போது தீ பிடித்தால், இப்போதுதான் சேதம் இருக்கும். மாறாக ஒரு வருடம் கழித்து சேதம் வருமா? வராது. 


அது போல 


டெல்லியில் தீ பிடித்தது, அதனால் மும்பையில் உள்ள பொருள்கள் சேதம் ஆனது என்று கேட்டு இருக்கிறோமா? எங்கு தீ பிடிக்கிறதோ, அங்குதான் சேதம் விளையும். 


ஆனால் இந்த சினம் என்ற தீ இருக்கிறதே...


அது, இந்தப் பிறவியில் கோபத்தால் செய்த செயல்களுக்கு, இந்தப் பிறவியில் பின்னாளில் மட்டும் அல்ல இனி வரும் பிறவிகளிலும் தொடர்ந்து வந்து துன்பம் செய்யும். ஐயோ, எனக்கு ஏன் இந்தத் துன்பம் வந்தது என்று வருந்தும் போது நினைத்துக் கொள்ள வேண்டும், எந்தப் பிறவியில் செய்த பாவமோ இன்று வந்து சேர்ந்திருக்கிறது என்று. 


நாம் கோபம் கொண்டால், அதனால் தீமை நமக்கு மட்டும் அல்ல, நம்மைச் சுற்றியுள்ள சுற்றத்தாரையும் சுடும். 


இராவணன், துரியோதனன் போன்றோர் கொண்ட கோபத்தால் அவர்கள் மட்டுமா அழிந்தார்கள்?  அவர்கள் குலமே அழிந்தது. 


பாடல்  



சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்

ஏமப் புணையைச் சுடும்


பொருள் 


சினமென்னும் = சினம் என்று சொல்லப்படும் 


சேர்ந்தாரைக் = அதைக் கொண்டவர்களை 


கொல்லி = கொல்லும் குணமுடைய 


இனம்என்னும் = தன் சுற்றம் என்ற 


ஏமப் = காவல் 


புணையைச் = தெப்பத்தை, மிதப்பை 


சுடும் = எரித்து விடும் 


சேர்ந்தாரைக் கொல்லி = சினம் தன்னைச் சேர்ந்தவர்களை கொல்லும்.


அடடா, இவர் தான் என்னை தோற்றுவித்தார். இந்த வீட்டில் தான் நான் பிறந்தேன் என்று நன்றியெல்லாம் பார்க்காது. எந்த தீக் குச்சி நெருப்பை உண்டாக்குகிறதோ, அந்தக் குச்சியை அது முதலில் எரிக்கும். எந்தப் பந்தம் தீயை உண்டாக்குகிறதோ, அந்தப் பந்தத்தை தீ முதலில் எரித்து சாம்பலாக்கும். அது போல, சினம் எங்கே உண்டாகிறதோ, அந்த இடத்தை அது முதலில் எரிக்கும். 


தன்னைச் சேர்ந்தவர்களைக் கொல்லும்.


"இனம் எனும்":  இனம் என்றால் வேறு சுற்றம் மட்டும் அல்ல. ஒருவனைச் சேர்ந்த கூட்டம், குழு. நட்பு, சுற்றம், அரசன் என்றால் அவனுக்கு கீழே உள்ள குடிகள், ஒரு நிறுவனத் தலைவன் என்றால் அங்கே வேலை செய்பவர்கள். ஒருவனுக்கு சினம் வந்தால், அது அவனை மட்டும் அல்ல, அவனைச் சேர்ந்த கூட்டத்தையே கெடுக்கும். 


சுடும் : இப்போது மட்டும் அல்ல, இனி வரும் பிறவிகளிலும் சுடும். நான் அதிகாரத்தில் இருக்கிறேன். எனக்கு கீழே உள்ளவர்களிடம் நான் கோபித்து என்ன வேண்டுமானாலும் சொல்லுவேன், செய்வேன். என்னை யார் என்ன கேட்க முடியும் என்று நினைக்கலாம். இயற்கை பொறுத்து இருக்கும். வேலை போன பின் வந்து தாக்கும். இல்லை என்றால் அடுத்த பிறவிக்கு வரும். சுடாமல் விடாது. 


இந்தக் குறள் துறவறத்தில் வருகிறது. முற்றும் துறந்த முனிவர்களுக்கு ஏது உறவு?  அவர்களுக்கு என்ன இனம் இருக்கும்?


பரிமேலழகர் கூறுகிறார் 


துறவிகளுக்கு, அவர்களுக்கு நல்லது சொல்லி முக்திக்கு வழி வகுக்கும் பெரியோர்கள், துறவிகளை பின் பற்றும் சீடர்கள் அல்லது பக்தர்கள் என்ற இனம். அந்த இரண்டையும் ஒரு துறவி கொண்ட சினம் கெடுத்து விடும். 


சினம் என்ற சேர்ந்தாரைக் கொல்லி....சினமே போய் கொல்லாது. அதற்கு என்ன கை காலா இருக்கிறது போய் கொல்வதற்கு?  இங்கே சினம் என்றது சினம் கொண்டவரை. சினம் கொண்டவர் தன்னை அழித்துக் கொள்வது மட்டும் அல்ல, தன்னைச் சேர்ந்தவர்களையும் அழிப்பான் என்றவாறு. 




Tuesday, May 20, 2025

நாலாயிர திவ்ய பிரபந்தம் - மெய்யே பெற்றோழிந்தேன்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - மெய்யே பெற்றோழிந்தேன் 



நான் சில வயதானவர்களைப் பார்த்து இருக்கிறேன். 


எப்போது பார்த்தாலும், "முடியலை, எப்படா இந்த உலகத்தை விட்டுப் போவோம் என்று இருக்கிறது" என்று சலித்துக் கொள்வார்கள். சொல்லி ஒரு சில மணி நேரம் கூட இருக்காது, "சூடா ஒரு கப் காப்பி கொடேன்" என்று வந்து நிற்பார்கள். 


மூன்று வேளைச் சாப்பட்டில் ஒரு குறை இருக்காது. காப்பி, டீ என்று உள்ளே போய்க் கொண்டிருக்கும். நடு நடுவில் கொஞ்சம் நொறுக்குத் தீனி வேற. கேட்டால் அந்த பெருமாள் என்னை எப்போ கூப்பிடுவான் என்று இருக்கிறேன் என்று சொல்லுவார்கள். 


இந்த உலகை விட்டுப் போக யாருக்கும் மனம் இல்லை. காரணம் வேறு வேறாக இருக்கலாம்...பொண்ணுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சுட்டால், சிவனேன்னு கிளம்பிறலாம் என்று சொல்லுவார்கள். அப்புறம், அவளுக்கு ஒரு பிள்ளை பொறக்கட்டும், பேரனை பார்த்துவிட்டுப் போகிறேன் என்பார்கள், அப்புறம் அது பள்ளிக் கூடம் போகட்டும் என்பார்கள். அப்புறம் "நான் போய்ட்டா அவரை/அவளை யார் பாத்துப்பா" என்று காரணம் சொல்லுவார்கள். 


மொத்தத்தில் போக மனம் இல்லை. 


வெளியே கேட்டால் கோவிந்தா, கிருஷ்ணா, சிவனே, முருகா, என்னை எப்ப கூப்டுக்கப் போற என்று டயலாக். 


இதுதான் உண்மை என்று ஆழ்வாரே சொல்கிறார். 

"எப்பப் பார்த்தாலும் எப்பப் போறது, எப்பப் போறதுன்னு பொய் சொல்லிக் கொண்டு திரிகிறேன். எனக்கு ஒன்றும் போக ஆசையில்லை. உலக இன்பங்களில் நன்றாக திளைத்து அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். ஏதோ உன் கருணை கிடைத்ததால் நல் வழிப் பட்டேன். நீ உன் அருள் கிடைக்க வேண்டும் என்று விதி இருந்தால் அதை யார் தடுக்க முடியும். ஒரு வழியாக உன்னை வந்து அடைந்து விட்டேன். இனிமேல் உன்னை விட்டுப் பிரிய முடியாது. என்னை விட்டு விட்டுப் போய் விடாதே" என்று உருகுகிறார். 


பாடல் 

  


  கையார் சக்கரத்து என் கருமா ணிக்கமே! என்றென்று

        பொய்யே கைம்மை சொல்லிப் புறமேபுற மேஆடி

        மெய்யே பெற்றொழிந்தேன் விதிவாய்க் கின்று காப்பார்ஆர்?

        ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.


பொருள் 


கையார் = கையில் 


சக்கரத்து = சக்கரத்தை கொண்ட 


என் கருமா ணிக்கமே! = என்னுடைய கருமையான மாணிக்கமே 


என்றென்று = என்று போவேன், என்று போவேன், என்று 


 பொய்யே கைம்மை சொல்லிப் = பொய்யாக சொல்லிக் கொண்டு 


புறமேபுற மேஆடி = ஊருக்குள் நன்றாக ஆட்டம் போட்டு (அனுபவித்து) 


மெய்யே பெற்றொழிந்தேன் = கடைசியில் உண்மையனா உன்னை பெற்று விட்டேன் 


விதிவாய்க் கின்று  = விதி வாய்கின்றது. உன் அருளைப் பெற வேண்டும் என்ற விதி இருந்தால் 


காப்பார்ஆர்? = அதை யாரால் தடுக்க மூடியும் 


 ஐயோ! = ஐயோ 


கண்ண பிராஅன்!  = கண்ணபிரானே 


அறையோ! = தாங்க முடியுமா 


 இனிப் போனாலே = இனி நீ என்னை விட்டுப் போய்விட்டால் 


சில சமயம், உண்மையின் தரிசனம் கிடைக்கும். இதுதான் என்று நினைப்போம். நொடியில் கை விட்டுப் போய் விடும்.  இறை தரிசனமும், அருளும் நிரந்தரமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அருள் கிடைத்தாலும், நாம் அதை விட்டு விட்டு உலக வாழ்க்கையில் மூழ்கி அதை மறந்து விடும் வாய்ப்பும் இருக்கிறது. 


மணிவாசகருக்கு இறைவனே நேரில் வந்து அருள் பாலிக்க வந்தார். மணிவாசகர் இறைவனைக் கண்டார். அவர் பின்னால் போகாமல், குதிரை வாங்கப் போய் விட்டார். 


உயர்ந்தவற்றை விட்டு விட்டு அற்ப சுககங்களின் பின்னால் போய் விடுகிறோம். 


நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும், அது வாலைக் குழைத்துக் கொண்டு தெருவுக்குத்தான் போகும் என்பார்கள். 


மணிவாசகர் தன்னை நாய் என்று பல முறை கூறிக் கொள்வார். 


"நாயிற் கிடையாய் கிடந்த அடியேற்கு"


"நம்மையும் ஒரு பொருளாக்கி நாய் சிவிகை ஏற்றுவித்து"


ஆழ்வார் உருகுகிறார். கண்ணா, உன் அருள் கிட்டியது ஏதோ விதிவசம். அதை நான் விட்டு விடாமல் இருக்க நீ தான் அருள் செய்ய வேண்டும். உன் அருள் இல்லை என்றால் நான் மீண்டும் இந்த உலக வாழ்க்கைக்குத் திரும்பி விடுவேன் என்கிறார். 


நமக்காக அவர் சொன்னது. 


எப்போதேனும் உண்மையின் தரிசனம் கிடைப்பின், கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். 


"சிக்கெனப் பிடித்தேன்" என்று பிடித்துக் கொள்ளுங்கள். 

Saturday, May 17, 2025

திருவாசகம் - அதிசயப் பத்து

 திருவாசகம் - அதிசயப் பத்து 




நாம் ஒரு சாலையில் போய்க் கொண்டிருக்கிறோம். அப்போது அங்கே வரும் ஒருவர், "இந்தப் பக்கம் எங்க போறீங்க?" என்று நம்மிடம் விசாரிக்கிறார். 


நாம் "இன்ன இடம் என்று குறிப்பாக இல்லீங்க...சும்மா இப்படியே போய்க் கொண்டிருக்கிறேன்.." என்கிறோம். நமக்கே அந்தப் பதில் ஒரு மாதிரியாக இருக்கிறது. 


அவர்: "என்னங்க இப்படிச் சொல்றீங்க...போகிற இடம் எதுவென்று தெரியாமல் கால் போன போக்கிலே போனால் என்னங்க அர்த்தம்"


நாம்: அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்க. இந்தச் சாலையில் நல்ல நல்ல உணவு விடுதிகள் இருக்கின்றன, சினிமா கொட்டகைகள் இருக்கின்றன, ஐஸ் கிரீம், இன்னிப்பு வகையாறக்கள் நிறைய கிடைக்கும். அங்கங்கே தெருவோரம் வடை, பஜ்ஜி எல்லாம் சுடச் சுட தருவார்கள். இந்த சாலைக்கு என்ன குறை...இதில் போனால் என்ன ...என்று கேட்கிறோம். 


அவர்: சரிங்க...போற இடமும் தெரியாது, போற வழியும் சரியில்ல...இத்தனையும் சாப்பிட்டால் உடம்பு என்ன ஆகும்?  அது மட்டும் அல்ல, இந்த சாலையில் பிக் பாக்கெட் அடிப்பவர்கள், ப்ளேடு போடுபவர்கள், அந்த மாதிரி பெண்கள் எல்லாம் இருப்பாங்க...இது சரியான வழி இல்லை...நான் உங்களுக்கு போகும் இடமும் நல்ல வழியும் சொல்லியும் தருகிறேன் என்கிறார். 


நாம்: ஐயா, நல்ல வேளை சரியான சமயத்தில் வந்து எனக்கு நல்ல ஒரு வழியை காட்டினீங்க...ஆமா நீங்க யாரு ?


அவர்: நானா, இந்த ஊர் தான்...எனக்கு எல்லா வழியும் தெரியும்...


அதிசயமாக இல்லை?  கால் போன பாதையில், குறி ஒன்றும் இல்லாமல் திரிந்து கொண்டிருந்த நம்மை தடுத்து, போகும் இடம் காட்டி, போகும் வழியும் காட்டும் ஒருவர் வந்தால் அது எப்படி இருக்கும்?


பாடல் 


இருள் திணிந்து எழுந்திட்டது ஓர் வல்வினைச் சிறு குடில், இது: இத்தைப்

பொருள் எனக் களித்து, அரு நரகத்திடை விழப் புகுகின்றேனை

தெருளும் மும்மதில், நொடி வரை இடிதர, சினப் பதத்தொடு செம் தீ

அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயம் கண்டாமே!


பொருள் 


இருள் திணிந்து = அறியாமை என்ற இருள் நிறைந்து 


எழுந்திட்டது = புறப்பட்டது 


ஓர் வல்வினைச் = வஞ்சனையை செய்யும் வினைகள் 


சிறு குடில், இது: = வாழும் ஒரு சிறு குடில் இது (இந்த உடல்) 


இத்தைப் = இதைப் போய் 


பொருள் எனக் களித்து = ஏதோ பெரிய விஷயம் என்று கருதி 


அரு = கொடுமையான 


நரகத்திடை = நரகத்தில் போய் 


விழப் புகுகின்றேனை = விழ இருந்த என்னை 


தெருளும் = தெளிவாகத் தெரியும் 


மும்மதில் =  = மூன்று சுவர்களைக் கொண்ட அந்த அரக்கர்களின் உலகத்தை 


நொடி வரை = ஒரு நொடியில் 


 இடிதர = இடித்துச் தள்ளி 


சினப் பதத்தொடு = சினம் கொண்டு 


செம் தீ = நெற்றிக் கண் அனலை 


அருளும் = அருள் செய்யும் 


மெய்ந்நெறி = மெய்யே வடிவாகக் கொண்ட ஈசன் 


பொய்ந்நெறி நீக்கிய = என்னுடைய பொய்யான வாழ்க்கை முறைகளை நீக்கிய 


அதிசயம் கண்டாமே! 


அவன் தான் வழி. அவன் தான் இலக்கு.


அதிசயப் பத்து நிறைவு பெற்றது.



Friday, May 16, 2025

திருக்குறள் - வெகுளாமை - பகைவன்

 திருக்குறள் - வெகுளாமை - பகைவன் 

https://interestingtamilpoems.blogspot.com/2025/05/blog-post_16.html



நமக்கு ஒரு எதிரி இருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனை நினைத்தாலே நமக்கு ஒரு எரிச்சல் வருகிறது. கோபம் வருகிறது. நன்றாக சிரித்து, மகிழ்ந்து கொண்டிருப்போம், திடீரென்று அவன் வந்து விட்டால் நம் முகத்தில் உள்ள சந்தோஷம் அனைத்தும் போய் விடும். அவன் நேரில் வர வேண்டும் என்று கூட இல்லை, அவன் நினைப்பு வந்தாலே போதும், நம் சந்தோஷம் வறண்டு விடும். 


அப்படி நமக்கு இருக்கும் எதிரிகளிலேயே பெரிய எதிரி யார் தெரியுமா? 


கோபம். 


கோபம் தான் நமது முதல் எதிரி.


ஏன்?


எதிரி என்ன செய்வான்?  


நம் முகத்தில் உள்ள சிரிப்பை அழிப்பான். மனதில் உள்ள சந்தோஷத்தை அழிப்பான். 


கோபமும் அதைத்தான் செய்கிறது. 


கோபம் கொண்ட ஒருவரின் முகத்தைப் பார்த்தால் தெரியும். அதில் ஒரு துளி கூட புன்னகை இருக்காது, ஒரு சின்ன சந்தோஷம் கூட இருக்காது. 


பாடல் 


நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற


பொருள் 


நகையும் = சிரிப்பையும் 


உவகையும் = சந்தோஷத்தையும் 


கொல்லும் = நீக்கும் 


சினத்தின் = கோபத்தைவிட 


பகையும்  உளவோ பிற = வேறு ஒரு பகையும் உள்ளதோ ? (இல்லை)


இந்தக் குறள் துறவறத்தில் உள்ளது. 


துறவிக்கு ஏது பகைவன்? அவரோடு யார் போய் சண்டைப் போடப் போகிறார்கள். 


பரிமேலழகர் சொல்கிறார், 


துறவிக்கு வெளிப் பகை இல்லை. உள் பகை உண்டு. வெளிப் பகை என்ன செய்யுமோ, அதையே உள் பகையும் செய்யும் என்கிறார். 


மேலும், நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், துறவி என்றால் கடினமான வாழ்க்கை, சந்தோஷமே இருக்காது, ஒரு வறண்ட வாழ்க்கை, என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருப்போம். 


வள்ளுவர் சொல்கிறார், துறவிகளிடம் நகையும் (சிரிப்பு) உவகையும் எப்போதும் இருக்குமாம். அதை இந்த சினம் கொன்று விடுவதால், அது ஒரு பகை என்கிறார். 


துறவறத்தில் மிகுந்த இன்பம் இருக்கிறது என்று சொல்லமால் சொல்கிறார். 


ஏன் உவகை, என்ன சந்தோஷம்?


இனி பிறவி கிடையாது என்பது எவ்வளவு பெரிய சந்தோஷம்? அதை விட பெரிய நல்ல செய்தி என்ன இருக்க முடியும்?


துறவி ஆகிவிட்டால், பணம் சேர்க்க வேண்டும், அதைப் பாதுக்காக வேண்டும், அதைத் தருபவனிடம் பல்லைக் காட்ட வேண்டும், அதை பிடுங்கிக் கொண்டு போகிறவனிடம் பயப்பட வேண்டும், உறவுகளில், நட்பில் உள்ள சிக்கல்கள் என்று எதுவும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கலாம். ஒரு கவலையும் இல்லை. 


கண்மூடி தியானிக்க வேண்டிய குறள்.



Sunday, May 11, 2025

அபிராமி அந்தாதி - மனக்கவலை

 அபிராமி அந்தாதி - மனக்கவலை 


இன்று யாரைக் கேட்டாலும் மன அழுத்தம், மனச் சோர்வு, மனக் குழப்பம், என்று மனம் சம்பந்தப்பட்ட ஆயிரம் பிரச்சனைகளை கூறுகிறார்கள். பள்ளி செல்லும் சிறுவர் சிறுமியர் கூட Anxiety, Depression, ADHD, Bipolar disorder, என்று அடுக்குகிறார்கள். 




இன்று பல பள்ளி, கல்லூரிகளில் கவுன்சிலிங் என்பது கட்டாயம் என்று ஆகி விட்டது. அந்த அளவுக்கு மன அழுத்தம். 


நூற்றுக் கணக்கில் மருந்து மாத்திரைகள் வந்து விட்டன...Anti-depressant, anti-anxiety

என்று. 


இந்த மனக் கவலையை எப்படி மாற்றுவது ?


இந்த மனக் கவலையெல்லாம் மனதில் படியும் அழுக்குகள். அவற்றை எப்படி சுத்தம் செய்வது ?


அன்பு ஒன்றுதான் வழி. 


அன்பு செய்யுங்கள். 


மனம் அன்பு செய்வதற்கு என்றே உண்டான ஒன்று. 


மனிதர்களை நேசியுங்கள் - கணவன், மனைவி, பிள்ளைகள், உடன் பிறப்புகள், நட்பு, உறவு என்று எல்லோரையும் நேசியுங்கள். 


முடியவில்லையா, நாய் குட்டி, பூனைக் குட்டி என்று அவற்றை நேசியுங்கள். 


அதுவும் முடியவில்லையா, இயற்கையை நேசியுங்கள். 


எல்லாவற்றிற்கும் மேலாக உங்களை நீங்களே நேசிக்கப் பழகுங்கள். உங்கள் மேல் நீங்கள் அன்பு செலுத்தாவிட்டால் வேறு யார் செலுத்தப் போகிறார்கள். 


மனசு முட்ட உங்களைக் காதலியுங்கள். 


பாடல் 



உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு

படைத்தனை; பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே

அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்

துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே.


பொருள் 


உடைத்தனை வஞ்சப் பிறவியை = வஞ்சகமான இந்தப் பிறவியை நீ (அபிராமி) உடைத்தாய். இந்தப் பிறவி நமக்கு எவ்வளவோ நல்லது செய்ய் முடியும். அதை விட்டு விட்டு அது புலன் இன்பங்களின் பின்னால் போகிறது. நமக்கு நல்லது செய்யாமல் வஞ்சனையை செய்கிறது. அபிராமி இந்தப் பிறவி என்ற சங்கிலியை உடைத்தாள். 


உள்ளம் உருகும் அன்பு படைத்தனை = அன்பு என்றால் உள்ளம் உருக வேண்டும். கண்ணில் நீர் வர வேண்டும். 'நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உருக' என்பார் அருணகிரிநாதர். 'காதாலாகி கசிந்து கண்ணீர் மல்கி" என்பார் மணிவாசகர். 



பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை = உன் திருவடி தாமரைகளை என் தலைமேல் சூடும் பணியை எனக்குக் கொடுத்தாய் 



நெஞ்சத்து அழுக்கை எல்லாம் = என் மனதில் உள்ள அழுக்கை எல்லாம் (கோபம், காமம், பொறாமை போன்ற அழுக்கை)


நின் அருள்புனலால் துடைத்தனை = உன்னுடைய அருள் என்ற வெள்ளத்தால் துடைத்தாய் 


சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே = சுந்தரி, உன்னுடைய அருளை நான் என்னவென்று சொல்லுவேன்.


மன அழுக்கை எல்லாம் துடைத்தால், மனதில் எழும் பிரச்சனைகள் எல்லாம் தீரும். 


அதற்கு என்ன செய்ய வேண்டும்?  

உள்ளம் உருகும் அன்பு வேண்டும். 


அன்பு வேண்டும், அன்பு வேண்டும் என்று அலையாமல், இருக்கிற அன்பை எல்லாம் அள்ளிக் கொடுங்கள். திருப்பி வந்தால் வரட்டும், வராவிட்டாலும் ஒன்றும் பாதகம் இல்லை. 


உங்களிடம்தான் கொட்டிக் கிடக்கிறதே. அன்புக்கா பஞ்சம். 


கொடுப்பதும் சுகம்தான். 


Monday, May 5, 2025

திருவாசகம் - அதிசயப் பத்து - பெற்ற பயன்

 திருவாசகம் - அதிசயப் பத்து - பெற்ற பயன்


 


ஒரு குழந்தை வீட்டில் உள்ள ஏதோ ஒரு விலை உயர்ந்த பொருளை வைத்து விளையாடிக் கொண்டிருக்கும். "...குடுத்திருமா...நல்ல பிள்ளையில்ல .." என்று கெஞ்சி கேட்டாலும் "மாட்டேன் போ..இது என்னுது" என்று அடம் பிடிக்கும். அடித்தும் வாங்க முடியாது. 


என்ன செய்யலாம். கீழே போட்டு உடைத்து விட்டால் பெரிய நட்டம். 


அந்தக் குழந்தையிடம் "...இந்தா உனக்கு பிடிச்ச சாக்கேலேட் .." என்று ஒரு இனிப்பைக் கொடுத்தால் அது அந்த விலை உயர்ந்த பொருளை கீழே போட்டு விட்டு சாக்கலேட்டைப் பற்றிக் கொள்ளும். 


அதற்கு அந்தப் பொருளின் விலை தெரியாது. மதிப்புத் தெரியாது. 


அது போல

நாமும் இந்த வாழ்வில், பெரிய பெரிய விடயங்களை விட்டு விட்டு நமது சாக்கலேட்டின் பின்னால் போய்க் கொண்டிருக்கிறோம். 


கணவன்,மனைவி, பிள்ளைகள், பணம், அதிகாரம், செல்வாக்கு, புகழ், வீடு, வாசல், வங்கிக் கணக்கு, பட்டம், பதவி, ஜாதி, மதம், என்று எத்தனையோ சாக்கேலேட்டுகள். 


சாக்கேலேட்டு இனிப்பாக இருக்கும். சுவையாக இருக்கும். யார் இல்லை என்று சொன்னது. எனவே அதை பிடித்துக் கொண்டிருக்கிறோம். அதை விட்டால் வேறு ஒன்றும் இல்லை என்ற நினைப்பில் அதிலேயே ஆழ்ந்து விடுகிறோம். சிற்சில சமயம் மற்ற நினைப்பு வந்தாலும், மனம் மீண்டும் சாக்கலேட்டின் பின்னே போய் விடுகிறது. 


மணிவாசகர் சொல்கிறார், 


"இந்த உறவுகள், பொருள்கள் எல்லாம் அனுபவிக்கவே இருக்கின்றன. மகிழ்ச்சியாக அனுபவிப்போம் என்று பல பித்தர்கள் சொன்னதைக் கேட்டு நானும் அவற்றின் பின்னால் போனேன். இறைவா, பூவின் நறுமணம் வருகிறது என்றால், பூ எங்கோ இருக்கிறது என்று தானே அர்த்தம். அந்தப் பூவை தேடிக் கண்டு பிடித்தால் அது எவ்வளவு இனிமையாக இருக்கும். அதை விட்டு விட்டு எங்கெங்கோ 


அது ஒரு புறம் இருக்கட்டும்....


தெருவில் நடந்து போகிறோம். ஏதோ ஒரு கடையில் வடை சுடும் வாசம் மூக்கைத் துளைக்கிறது. அடடா, சூடா ஒரு வடை சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று அந்த வாசம் வரும் உணவு விடுதி நோக்கிப் போகிறோம். 


விடுதிக்குப் போய் விடுகிறோம். அங்குள்ள உணவு பரிமாறுபவரிடம், "ஒரு plate வடை" என்று ஆர்டர் செய்கிறோம். வடை வந்து விடுகிறது. நல்ல மொரு மொரு என்று இருக்கிறது. எண்ணெய் லேசாக மின்னுகிறது. ஆவி பறக்கிறது. 


"இறைவா, உன் கருணை, மலரின் வாசம் போல் எங்கும் விரிந்து கிடக்கிறது. அந்த வாசனையை பற்றிக் கொண்டே போனால், மலரைக் காணலாம். அது போல் உன் கருணையை பற்றிக் கொண்டே போனால், உன்னைக் கண்டு விடலாம். அதை விட்டு விட்டு, இந்த உலக இன்பங்களின் பின்னால் போய்க் கொண்டிருக்கும் என்னையும் தடுத்தாட்கொண்டு, உன் அடியவர்களில் என்னையும் சேர்த்துக் கொண்ட அதிசயத்தை என்னவென்று சொல்லுவது " என்று வியக்கிறார் அடிகளார். 



பாடல் 


உற்ற ஆக்கையின் உறு பொருள், நறு மலர் எழுதரு நாற்றம் போல்,

பற்றல் ஆவது ஓர் நிலை இலாப் பரம் பொருள்: அப் பொருள் பாராதே,

பெற்றவா பெற்ற பயன் அது நுகர்ந்திடும் பித்தர் சொல் தெளியாமே,

அத்தன், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!


பொருள் 



உற்ற ஆக்கையின் = கிடைத்த இந்த உடம்பின் 


உறு பொருள் = பெரி பொருள், அர்த்தம் 


நறு மலர் = வாசமிகு மலர் 


எழுதரு நாற்றம் போல் = எழுந்து வரும் வாசம் போல 


பற்றல் ஆவது = பற்றிக் கொள்ளக் கூடியது 


ஓர் நிலை  இலாப் = என்று ஒரு நிலை இல்லாத 


 பரம் பொருள்: = உயர்ந்த பொருள் (இறைவன்) 


அப் பொருள் பாராதே = அதைக் கவனிக்காமல் 


பெற்றவா = இந்த உடம்பை பெற்று 


 பெற்ற பயன் = பெற்றதின் பயன் புலன் இன்பங்களை அனுபவிப்பது தான் என்று 


அது நுகர்ந்திடும் = அவற்றை அனுபவிக்கும் 


பித்தர் சொல் = பித்தர்களின் சொல்லைக் கேட்டு 


தெளியாமே, = அறிவு தெளிவு அடையாமல் 


அத்தன் = தலைவன் 


 ஆண்டு = என்னை ஆட்கொண்டு 


தன் அடியரில் = தன்னுடைய அடியவர் கூட்டத்தில் 


 கூட்டிய = சேர்த்துக் கொண்ட 


அதிசயம் கண்டாமே! = அதிசயத்தை என்னவென்று சொல்லுவேன் 


மிகவும் சிக்கலான பாடல். வேறு பொருளும் இருக்கலாம். தேடணும்.


Sunday, April 27, 2025

திருக்குறள் - வெகுளாமை - தீது

திருக்குறள் - வெகுளாமை - தீது 



நமக்கு கீழே உள்ளவர்களிடம் நாம் நம் கோபத்தை எளிதாக காட்ட முடியும். அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. திட்டலாம், அவமானப் படுத்தலாம், அவர்கள் தன்னம்பிக்கை குறையும்படி பேசலாம், அவர்களை பலர் முன்னிலையில் தலை குனியும்படி செய்யலாம்...


ஆனால், அது எல்லாம் நமக்கே தீதாய் முடியும் என்கிறார் வள்ளுவர். 


நம்மை விட வலிமையானவர்களிடம் நாம் நம் கோபத்தைக் காட்டினால், அவர்கள் பதிலுக்கு நமக்குத் தீங்கு செய்ய முடியும். எனவே அது நிச்சயமாக நமக்கு ஒரு தீமையில்தான் போய் முடியும். 


நமக்கு கீழே உள்ளவர்களிடம் நம் கோபத்தைக் காட்டினால் நமக்கு என்ன தீங்கு விளையும்? அவர்கள் நம்மை என்ன செய்து விட முடியும்?


வள்ளுவர் சொல்கிறார், அப்படிப்பட்ட கோபம் இந்தப் பிறவியில் பழியையும், மறு பிறவியில் பாவத்தையும் கொண்டு வருவதால், அது முந்தைய கோபத்தை விட தீமை செய்வது என்கிறார். 


வலிமையானவர்களிடம் கோபத்தைக் காட்டினால், அவன் பதிலுக்கு நம்மை தாக்க முடியும், திட்ட முடியும். அதன் பலன் அங்கேயே தீர்ந்து விடும். ஆனால் மெலியார் மேல் காட்டும் கோபம் இந்தப் பிறவியிலும், மறு பிறவியிலும் தொடரும் என்பதால், அது மிகவும் தீதானது என்கிறார். 


பாடல் 



 செல்லா இடத்துச் சினம்தீது செல்இடத்தும்

இல்லதனின் தீய பிற.


பொருள் 


செல்லா இடத்துச் சினம்தீது = நம் கோபம் செல்லாத இடத்தில் அதைக் காட்டினால் அது நமக்கு தீமையாய் முடியும். 


 செல்இடத்தும் = கோபம் செல்லும் இடத்திலும் 


இல்லதனின் தீய பிற = அதை விட பெரிய தீமை இல்லை என்கிறார்.


பரிமேலழகர் சொல்லாத ஒன்றை நான் என் அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன். 


நம்மை விட கீழே உள்ளவன் என்று நாம் நினைத்து ஒருவன் மேல் நம் கோபத்தை இன்று காட்டி விடலாம். அவனே நாளை நமக்கு மேல் வந்துவிட்டால், நம் கதி?


எத்தனையோ திரைப்படங்களில் பார்க்கிறோம். ஒன்றும் இல்லாதவன் ஏதோ அதிர்ஷ்டம் அடித்து பெரிய பணக்கரனாகவோ, முதலாளியாகவோ, பெரிய அரசியல் செல்வாக்கு உள்ளவனாகவோ ஆகிவிடலாம். அப்போது அவன் நாம் முன்பு செய்தவற்றை நினைத்து நமக்கு ஒன்றுக்கு பத்தாக தீமை செய்ய முற்படலாம். 


யார் அறிவார் ? காலம் , யாரை, எங்கே கொண்டு சேர்க்கும் என்று. அடிக்கின்ற காற்றில் சில குப்பைகள் கோபுரத்தின் மேல் போய் விடலாம். 


எனவே, இன்று நமக்கு கீழே இருக்கிறான் என்று எண்ணி அவனுக்கு தீமை செய்யக் கூடாது. 


அதற்கு பெரிய உதாரணம் இராமன். 


கூனிதானே, வயதான, கூன் விழுந்த கிழவி என்ன செய்து விட முடியும்? 

இராமன் அவள் மேல் கோபப்பட்டு உண்டி வில்லை அடிக்கவில்லை. விளையாட்டாக அடித்தான். அதுவே பின்னாளில் அவனுக்கு எவ்வளவு பெரிய துன்பத்தைக் கொடுத்தது? தெரியாமல் செய்ததற்கே இவ்வளவு பெரிய வேதனை. தெரிந்தே செய்திருந்தால்? 


எனவே, யாரிடத்தும் கோபத்தைக் காட்டக் கூடாது என்பது பெறப்பட்டது.