Monday, March 18, 2024

கந்தர் அனுபூதி - ஆறாறையும் நீத்து

 கந்தர் அனுபூதி - ஆறாறையும் நீத்து


நம் உடம்பிலே சக்தி ஒடுங்கி இருக்கிறது. அது எங்கே ஒடுங்கி இருக்கிறது என்றால் மலத் துவாரத்துகும், பிறப்பு உறுப்புக்கும் இடையில் உள்ள இடத்தில் ஒடுங்கி கிடக்கிறது என்கிறார்கள். 


அந்த சக்தியை எழுப்பி மேலே கொண்டு வர முடியும். அது ஒவ்வொரு படியாக மேலே ஏறி வரும். அந்த ஒவ்வொரு படியும் ஒரு சக்கரம் என்கிறார்கள். மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆங்க்யா என்ற ஆறு சக்கரங்களின் வழியாக மேலே ஏறி, தலைக்கு மேல் சஹாஸ்ரார் என்ற இடத்தை சென்று அடையும் என்கிறார்கள். 


இந்த சக்தி ஒவ்வொரு இடத்திலும் ஏறி நிற்கும் போது, பல நிகழ்வுகள் ஏற்படும் என்கிறார்கள். 


உதாரணமாக கழுத்தில் வந்து நின்றால் அவர்கள் சொல்வதை உலகம் கேட்டு நடக்கும், என்கிறார்கள். ஏன், சிலர் சொல்வதை உலகம் கேட்கிறது என்றால் காரணம் அவர்களின் சக்தி அங்கே நிற்கிறது. 


இந்த சக்கரங்கள் உண்மையா? அப்படியும் நடக்குமா? மற்ற மதங்களில் இது பற்றி எதுவும் சொல்லவில்லையே என்ற கேள்விகள் நிற்கின்றன. நிறைய ஆராய வேண்டி இருக்கிறது. 


கரங்குவிவார் உண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க


சிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க


என்பார் மணிவாசகர். 


குண்டலினி என்ற அந்த சக்தி இதயத்துக்கு வருவதும், தலைக்கு மேல் வருவதையும் இது குறிப்பதாக சில உரை ஆசிரியர்கள் கூறுகிறார்கள். 


இங்கே, அருணகிரியார் பாடுகிறார் 


"இந்த குண்டலினி சக்தி ஆறு நிலைகளைத் தாண்டி சஹாஸ்ரார் என்ற அந்த நிலைக்கு செல்லும் பேறு எனக்குக் கிடைக்குமா? கோபம் கொண்டு வரும் சூரனை வென்று, தேவர்கள் மனம் குளிரும்படி தேவ லோகத்தை அவர்களுக்கு கொடுத்தவனே "


என்று. 


பாடல்  


ஆறாறையு நீத் ததன் மேனிலையைப் 

பேறாவடி யேன் பெறு மாறுளதோ 

சீறா வரு சூர் சிதைவித் திமையோர் 

கூறா வுலகங் குளிர் வித்தவனே 


சீர் பிரித்த பின் 


ஆறு ஆறையும் நீத்து அதன் மேல் நிலையை  

பெறாத அடியேன் பெறுமாறு உளதோ  

சீறா வரும்  சூர் சிதைவித்து இமையோர்  

கூறா உலகம்  குளிர் வித்தவனே 


பொருள் 


ஆறு = வழி, பாதை 


ஆறையும் = ஆறு நிலைகள் (மூலாதாரம் தொடங்கி ஆங்க்யா வரை) 


நீத்து = விடுத்து 

அதன் மேல் நிலையை  = அதற்கு மேல் உள்ள நிலையான சஹாஸ்ரார் 

 

பெறாத அடியேன் = இது வரை பெறாத அடியேன் 


பெறுமாறு உளதோ = இனி அடையும் வழி உள்ளாதா? 

  

சீறா வரும் = சீறி வரும் 


 சூர்= சூரனை 


சிதைவித்து = வென்று 


இமையோர் =தேவர் 

  

கூறா உலகம் = அவர்களுக்கு அளிக்கப்பட்ட உலகத்தை அவர்களுக்கு அளித்து 


குளிர் வித்தவனே  = அவர்களை குளிர்வித்தவனே 


"கூறா உலகம்" - செய்யா எனும் வாய்பாடு. கூறாக பிளந்து கொடுக்கப்பட்ட உலகம். தேவர்களுக்கு என்று கொடுக்கப்பட்ட தேவலோகத்தை அசுரர்கள் எடுத்துக் கொண்டார்கள். அதை மீட்டு தேவர்கள் மனம் குளிரும்படி செய்தவனே.


"ஆறாறையும்" என்பதை 6 x 6 = 36 என்று கொண்டு, முப்பத்தி ஆறு தத்துவங்களையும் கடந்து மேலே செல்வது என்றும் பொருள் சொல்லுவார்கள். 





1 comment: